Tuesday, December 30, 2008

கனவில் வந்த கதைகள் - செய்வது நானா?

ப்போதெல்லாம் நாங்கள் ப்ரான்ஸில் பாரிஸ் நகரத்தில் வசித்து வந்தோம். பாரிஸில் வசிப்பதில் என்ன சிறப்பு என்றால், ஐரோப்பிய நண்பர்கள் பலரும் அந்த வழியாக பயணிப்பதால், தங்கள் பயணத்தின் இடையே, எங்களை வந்து பார்த்த வண்ணம் இருந்தனர். அப்படித்தான் அன்று ஒரு நண்பன், என்னைப் பார்க்க வந்திருந்தான் - கையில் ஒரு ப்ளாஸ்டிக் பையுடன்!

ப்போது, இப்போதைக் காட்டிலும், அறிவியல் முன்னேற்றங்கள் மிகையாய் மிகுந்த காலம். செயற்கைக் கருத்தரிப்பு வேகமாய் வளர்ந்திருந்தது. மக்கள் தொகையும் வெகுவாகக் குறைந்து, செயற்கையாக கருவினை வளர்ப்பதும், அதன் மூலமாக, குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதும், சகஜமாய் இருந்தது. நண்பன் கையில் கொண்டு வந்திருந்த பையில் அப்படியொரு செயற்கை கரு இருந்தது!. அவனுக்கு ஒரு வாரத்திற்கு, பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள இருப்பதினால், அக்கருவினை என்னால் கவனித்துக் கொள்ள இயலுமா எனக் கேட்க வந்திருந்தான்.

ப்படிக் கவனித்துக் கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு அவனே விடை பயின்றான். "தினமும், இரண்டு வேளே, குளிர் சாதனப் பெட்டியில் இருந்து வெளியே எடுத்து, அதைச் சுற்றி தேங்கி இருந்த தண்ணீரை விலக்கி விட்டு, புதிய தண்ணீரில் நிரப்பி, மீண்டும், குளிர் சாதனப் பெட்டியிலேயே வைத்து விட வேண்டும். அவ்வளவுதான்." என்றான் நண்பன். அவ்வளவுதானே என்று மனம் சொன்னாலும், அதை வெளிக்காட்டுவதில் தயக்கம் இருந்தது. "உடனேயே மாற்றி விட வேண்டுமா?, சற்று தாமதமானால், ஆபத்தில்லையே?" என்று கேட்டு வைத்தேன். "நிறைய நேரம் ஆக்கலாகாது. ஒரு முப்பது நொடிக்குள் மாற்றி விட வேண்டும்" என்றான். என் தயக்கம் அவ்வளவாகத் தெளியா விட்டாலும், நண்பனின் வற்புறுத்தலுக்கு இணங்கி, பொறுப்பினை ஏற்றுக் கொள்ளும் படியாகி விட்டது, இறுதியில்.

ரண்டு நாட்களுக்கு, மிகவும் கவனமாக, பக்கத்தில் ஸ்டாப் வாட்ச் எல்லாம் வைத்துக் கொண்டு, பத்து நொடிக்குள் தண்ணீரை மாற்றி விட்டு, மீண்டும் குளிர் சாதனப் பெட்டிக்குள் வைத்து விட்டேன். ஆனால் அதற்கப்புறம், அந்த செயற்கைக் கரு எப்படி இருக்கிறது, எப்படி வளர்கிறது, அன்றாடம் என்னென்ன மாற்றங்கள் அடைகிறது என்பதெல்லாம் கவனிக்கலானேன். எனது அறிவியல் ஆர்வம், என்ன வந்து பிடித்துக்கொள்ள, அதன் பின்னரெல்லாம், தண்ணீரை மாற்ற, முப்பது நொடிகள் வரை கூட ஆகத் தொடங்கியது. கூடவே, அறிவியலின் ஆக்கமும், அதைச் சார்ந்த பெருமையும் வந்து ஒட்டிக் கொண்டது. நான் ஏதோ, ஆராய்சியாளன் போல முதலில் உணர்த் தொடங்கினேன். பின்னால் ஏதோ, நானே ஆக்குபவன் போலவும், இறுமாப்புகள் வந்து ஆக்ரமித்துக் கொண்டன. இப்போதெல்லாம், தண்ணீர் மாற்றுவதையும் ஒரு ஸ்டெயிலாகச் செய்து வருகிறேன் என்றால் பாருங்களேன்.

ப்படியாக ஒரு வாரமும் ஆனது. நண்பனோ திரும்பி வரக் காணோம்! ஆனால், அவனிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இன்னும் ஒரு வாரகாலம், அவனது பயணம் நீடிக்கிறதாம், அடுத்த வாரம் திரும்பி விடுவானாம். எனக்கோ உள்ளூர மகிழ்ச்சி! இன்னொரு வாரம், நமக்கு தண்ணீர் மாற்றும் வேலை, என்பதைவிட, இன்னொரு வாரம், நான் இந்த உயிரை வளர்க்கப் போகிறேன், என்ற எண்ணமே, ஓங்கி இருந்தது. என்னவோ தெரியவில்லை, மற்ற செயல்களைக் காட்டிலும், இச்செயலில் இப்படியொரு தற்பெருமை வந்து ஒட்டிக்கொள்கிறது! இது ஆக்கும் வேலை என்பதாலோ!.

ன்றொருநாள், தண்ணீரை மாற்றுகையில், அந்தப் பையுனுள் ஏதோ அசைந்ததுபோல இருக்க, சற்றே அதிர்ந்து பின் வாங்கினேன். அது நிஜமாகவே அசைந்ததா, அல்லது மனப் பிரமையா என்பதும் சந்தேகம். மெதுவாக, அதன் அருகினில் சென்று, உன்னித்துக் கவனிக்க, அதில் அசைவேதும் இருப்பதாகத் தெரியவில்லை. பின்னர் மிகுந்த கவனத்துடன் தண்ணீரை மாற்றினேன். மீண்டும் குளிர் சாதனப் பெட்டிக்குள் வைப்பதற்குச் செல்லுமுன்தான் கவனித்தேன், கிட்டதட்ட, இரண்டு நிமிடங்கள் கடந்து விட்டதை. அடடா, என்ற நினைப்புடன், இன்னொரு சந்தேகமும் வந்து ஒட்டிக் கொண்டது. குளிர் நீரை மாற்றினேனா, அல்லது, வெது வெதுப்பான நீரை, தவறாக மாற்றி விட்டேனா என்று. தண்ணீரை லேசாக தொட்டுப்பார்க்க, அது சுட்டது, என்னை. அவசரத்தில், ஒரு வேளை, வென்னீர் குழாயில் எடுத்துவிட்டேனோ என்ற சந்தேகம் பிடித்துக்கொள்ள, மீண்டும் தண்ணீரை மாற்றலானேன்.

டுத்த முறை தண்ணீர் மாற்றியபின், ஏதோ ஒரு மாற்றம் அதில் நிகழ்வது போலிருந்தது. திரவமாய் நிறைந்திருந்த அந்தப்பையே, கடினப் பட்டது போலத் தெரிந்தது. அந்தப் பை, வைக்கப்பட்டிருந்த பாத்திரத்தை, சற்றே, அசைத்துப்பார்க்க, அந்தப் பையில் இருந்து, ஏதோ ஊதா நிறத்தில், தண்ணீரில் கலப்பது போல் இருந்தது. நான் என்ன செய்கிறேன் என்பதை என்னாலாயே சரியாய்ச் சொல்ல இயலாதவனாய் அதிர்ந்தேன். அவ்வளவுதான், ஏதோ நிகழ்ந்து விட்டது. ஒரு உயிரைக் கொன்று விட்டேன், என்ற எண்ணம் எழுந்தது. அந்த எண்ணத்தில் பதற்றத்தின் ஆக்ரமிப்பு, வேறேதும் எண்ணத் தோணாமால், ஆக்ரமித்துக் கொண்டது.

யகோ, நண்பன் வந்து கேட்டால், என் செய்வேன்?. யானே கள்வன், யானே அழிவின் காரணம், யானே அழித்தேன். என்னால் ஏதும் ஆக்க இயலுமோ? ஆனால், அழிக்க மட்டும் இயல்கிறதே? இப்படியும் ஒரு பிறவியோ? என் செய்வேன், என்ன செய்தாலும், சரி செய்ய இயலுமோ, அந்தக் கருவை மீண்டும், முன்பிருந்த நிலைக்கே கொண்டு செல்ல இயலுமோ? என ஓயாமல் பிதற்றினேன், அரற்றினேன், ஓலமிட்டேன். அழகாக வளர்ந்த கருவில், ஆலமிட்டது எப்படி? இது அவன் ஜாலமோ? இல்லை என் கோலமோ? ஏதும் அறிந்திலேன் என அழுதேன். ஒருவேளை, நான், எனது செயல் என்கிற அகந்தை வந்து ஆட்கொண்டதோ? எனவெல்லாம் எண்ணிக் கொண்டிருந்தபோது - தொலைபேசியோ மணியடித்திட, அதையும் பொருட்படுத்த இயலவில்லை. ஒரு வேளை, அது நண்பனாய் இருந்தால், என்ன பதில் சொல்வேன்? என்னை நம்பி ஒப்படைத்த செயலை, பொறுப்பில்லாமல், கெடுத்தேனே. தொலைத்தேனே.

ற்றாமையில் நான் அழுது புலம்பிட, அச்சத்தம் கேட்டு, அம்மா அங்கே வந்தார். நடந்ததை அறிந்து கொண்டு ஆறுதல் சொல்லலானார். "அப்பா, ஆக்கலும், அழித்தலும், நம் கரத்தில் இல்லை. எல்லாம் வன் செயல். நாம் வெறும் கருவி மட்டுமே. எய்தவன் அங்கிருக்க, இங்கே அம்பை நொந்து என்ன பயன்?." என்றார். என்ன இருந்தாலும், அத்தண்ணீர் மாற்றும் செயலுடன், அந்த அளவிற்கு நான் ஒன்றியிருக்கக் கூடாது. அதன் மேல், என் விருப்புகளை ஆழ்த்தினேன் அல்லவோ. அதனால்தான் இப்படியானதோ? செயலைச் செய்கையில், எதற்காக, "செய்வது நான், செய்வது நான்" - என்கிற எண்ண ஓட்டங்கள். அம்மா சொல்வது சரிதான், செய்வதெல்லாம் வன் என்றிருக்க, எங்கிருந்து வந்தது நான் என்கிற எண்ணம்? எப்போதும் செயல் நடந்து முடிந்தபின், 'அப்படி நடந்திருக்கக் கூடாது' எனச் சொல்வது எத்தனை எளிதாக இருக்கிறது!. செயலை அழித்து, பொருளின் முந்தைய நிலைக்கு, எப்போதும் கொண்டு செல்ல இயன்றால், எவ்வளவு நன்றாக இருக்கும், கனவுபோல? ஓ, ஒருவேளை இது கனவு தானோ, என்கிற வினவலின் விளைவில், கனவும் கலைந்தது. நல்லவேளை, இது கனவுதான் என்ற பெருமூச்சும் வந்திட, எல்லாமும் இயல்பானது.

Sunday, December 28, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (5)

இத்தொடரின் இறுதிப் பகுதியினை எட்டி விட்டோம். இந்தப் பகுதியில் சென்ற மூன்று நூற்றாண்டுகளில் தமிழிசைப் பாடல்களை இயற்றிய அருந்தமிழ்க் கவிகளின் பாடல்கள் சிலவற்றை திருமதி. சௌம்யா அவர்கள் பாடிக் காட்டுகிறார்.

9. இராம நாடகம்
இயற்றியவர் : அருணாசலக் கவிராயர் (1711-1779)
பாடல் : ஏன் பள்ளி கொண்டீரய்யா, ஸ்ரீரங்கநாதா!
இராகம் : மோகனம்

அருணாசலக் கவிராயரைப் பற்றி ஏற்கனவே இட்ட பதிவினை இங்கே பார்க்கவும்.

10. மாரிமுத்தாப்பிள்ளை (1712 - 1787)
பாடல் : காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே
இராகம் - யதுகுலகாம்போதி

11. முத்துத்தாண்டவர் (1560(?) - 1640(?))
பாடல் : இத்தனை துலாபாரமாய்
இராகம்: தன்யாசி

பாடல்: ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ!
இராகம் : மயாமாளவகௌளை

மாரிமுத்தாப்பிள்ளை மற்றும் முத்துத்தாண்டவர் அவர்கள் இருவரைப் பற்றிய பதிவினை இங்கே பார்க்கவும்.

இவர்கள் மூவரும் - தமிழ் மூவர் என தமிழ் இசை அறிஞர்களால் பெருமைப்படுத்தப் பட்டவர்கள். தமிழில் கிருதி வடிவினை (பல்லவி - அனுபல்லவி - சரணம் என்ற பாடல் வடிவு) அறிமுகப் படுத்தியவர்கள்.

12. கோபால கிருஷ்ண பாரதி (1811 - 1896)
பாடல் : யாருக்குத்தான் தெரியும், அவர் மகிமை
இராகம் : தேவமனோகரி
இவர் இயற்றிய நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் பிரசிதம். ஆழ்ந்த தத்துவப் பொருள் நிறைந்தவை இவரது பாடல்கள். மேலும் இரண்டு நாயன்மார்கள் (நீலகண்ட நாயனார், காரைக்கால் அம்மையார்) சரித்திரங்களையும் படைத்துள்ளார்.

13. அண்ணாமலை ரெட்டியார் (1865-1891)
இவரது காவடிச் சிந்து பாடல்கள் மிகவும் பிரபலம். 'காவடிச் சிந்தின் தந்தை' எனவே இவரை அழைக்கலாம்!. 'சென்னிகுளம்' என்ற இவரது ஊர்ப்பெயரை, இவரது பாடல்களில் காணலாம். இவர், தமது, 26ஆவது, வயதிலேயே இறந்தார் என்பது வருத்தத்திற்குரிய இழப்பாகும்.

இசைத்தமிழின் இனிதானதொரு அங்கம் சிந்து. பாடுவதற்கு எளிதானது. இதில் ஐந்து பகுதிகள் அடங்கும் : பல்லவி, அனுபல்லவி, பின்பு மூன்று கண்ணிகள் கொண்ட சரணம். காவடிச் சிந்து, என்பது, சிந்தில் ஒருவகை. இதில் பல்லவியும், அனுபல்லவியும் இல்லாமல், சரண வரிகள் மட்டுமே.

பாடல் : பூமி மெச்சிடும் (காவடிச்சிந்து)
இப்பாடலின் இருந்து மூன்று கண்ணிகள்:
பூமி மெச்சிடும் அண்ணாமலைக்கோர் துணையானவன்
மயில் வாகனன், ஒரு கானவன் - எனப்
புனத்தைக் காக்கும் வள்ளி
தனத்தைப் பார்க்க மெல்லப் போனவன்.

தென்றலான புலி வந்து கோபமொடு சீறுதே
தடுமாறுதே; இதழ் ஊறுதே - மெத்தத்
தீமையாம் இருளினில்
காமலாகிரியும் மீறுதே.

மார வேளினாலே கோர மனகாம் வாதையே
எனும் தீதையே தீரத் தூதையே! - சொல்லி
வாட்டம் தீர் குகனைக்
கூட்டி வாடியடி கோதையே!

(இப்பாடல் 5:40 இல் தொடங்குகிறது)


14. பாபநாசன் சிவன் (1890 - 1973)
'தமிழ் தியாகராஜர்' எனப் போற்றப் படும் பாபநாசம் சிவன் அவர்கள், நிறைய தமிழ்ப் பாடல்களை, மூம்மூர்த்திகள் போல, தமிழுக்கு இயற்றித் தந்தவர்கள். மூம்மூர்த்திகளின் பாதிப்பால், மற்ற திராவிட மொழிப் பாடல்களே, தென்னிந்திய இசையில் பிரபலமாகி இருந்தது. தமிழிலும் அதைப்போன்ற கீர்த்தனைகளைப் பாடிட முடியும் என்பதை நிரூபித்திக் காட்டியவர். கிருதி, வர்ணம், பதம், ஜவளி என பற்பல இசை வடிவங்களிலும், பற்பல இராகங்களிலும் தமிழில் இசைத்துக் காட்டிய பெருமை இவரைச் சாரும்.

பாடல் : கஜவதனா கருணாசதனா
இராகம் : ஸ்ரீரஞ்சனி

எடுப்பு
கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர -
ஸ்ரீ கஜவதனா கருணா சதனா

தொடுப்பு
அஜனமரேந்திரனும் முனிவரும் பணியும்
பங்கஜ சரணா, சரணம் சரணம்!

முடிப்பு
நீயே மூவுலகிற்கு ஆதாரம்
நீயே சிவாகம மந்திர சாரம்
நீயே வாழ்வில் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் சுமுகா, ஓம்கார
கஜவதனா கருணா சதனா!

15. மகாகவி பாரதி (1882 - 1921)
பாடல்: வாழிய செந்தமிழ்

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

(இதைவிடவும் இனிதாக நிறைவு செய்ய இயலுமோ!, அழகாக திருமதி.சௌம்யா அவர்கள் நிறைவு செய்தார், இவ்வாறாக, 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பிட்ட இந்நிகழ்ச்சியை.)
இப்படியொரு அருமையான நிகழ்ச்சியை வழங்குவதற்கான மூல காரணம், அவருக்கு அமைந்த அருமையான குரு - டாக்டர் எஸ்.இராமநாதன் அவர்கள் மற்றும் திருமதி.முக்தா, அவர்களை இங்கே குறிப்பிடுகிறார். குறிப்பாக இராமநாதன் அவர்களின் சிலப்பதிகார இசை ஆராய்ச்சிகள், அவற்றில் இருந்து நாம் அறியக் கிடைக்கும் பண்டைத் தமிழரின் இசை நுணுக்கங்கள்.

Friday, December 26, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (4)

இந்தத் தொடரில், திருமதி. சௌம்யா அவர்கள் 'சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை' என்ற தலைப்பில் தொகுத்து வழங்கிய பாடல்களைப் பார்த்து வருகிறோம். இந்தப் பகுதியில் திருவாசகம் மற்றும் திருப்புகழ்.

6. திருவாசகம்
ஏற்கனவே, சமயக் குரவர் நால்வரில், மூவரைப் பார்த்து விட்டோம். இப்போது நாம் பார்க்கவிருப்பது, நான்காவது நபர் - திருவாசகம் தந்து அன்பர் மனதை உருக்கிய மணிவாசகர்! மணிவாசகரின் காலத்தைப் பற்றி முரணான கருத்துக்கள் இருப்பினும், பொதுவாக அவர், 9 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என கருதப் படுகிறது. சமயக் குரவர் நால்வரின் காலத்தைப் பற்றி மேலும் படிக்க இந்தக் கட்டுரையை நாடவும்.

எட்டாம் திருமுறை
இயற்றியவர் : மணிவாசகர் (மாணிக்கவாசகர்)
இராகம் : மோகனம்

பார்பாடும் பாதாளர்
பாடும்விண்ணோர் தம்பாடும்
ஆர்பாடுஞ் சாரா
வகையருளி ஆண்டுகொண்ட
நேர்பாடல் பாடி
நினைப்பரிய தனிப்பெரியோன்
சீர்பாடல் பாடிநாம்
தெள்ளேணங் கொட்டாமோ.


இத்திருவாசகம் தன்னில், தன்னை ஆட்கொண்டு அருளிய சிவபெருமானின் நேர்மையையும், சிறப்பினையும் நாம் 'தெள்ளேணம்' கொட்டுவோம் என்கிறார் அருள் மணிவாசகர்.
பாடலின் பொருளை இங்கே பார்க்கவும்.
அது என்ன 'தெள்ளேணம்'?
கைகளால் கும்மி அடித்துப் பாடுவோம் அல்லவா, அப்படிப் பாடுவது தான் 'தெள்ளேணம்'.
பண்டைத் தமிழர், குழல் வைத்துப் பாடினர், யாழ் வைத்து பாடினர், பறை முழக்கினர்,
ஏன் எந்த இசை வாத்தியமும் இல்லாமலும், தன் கைகளைத் தட்டியே, இசை எழுப்பினர்!
இவர், கைகள் மட்டுமல்லாமல், காலையும் தட்டுவர். அப்போது, காலில் அணிந்திருந்த கழலும் இசை எழுப்பும்!
இப்படியாக, நமது இசைக்கு, அன்றாட வாழ்வில் நிகழும் நாட்டுப்புறப் பாடலும் வளம் சேர்க்கும்.
~~~~~~~~~~~~~~~~
7. திருப்புகழ்
சந்தங்களின் இமயம் அருளாளர் அருணகிரியின் திருப்புகழில் இருந்து அடுத்த பாடல். இப்பாடலை திருமதி.சௌம்யா அவர்கள், இரண்டு வேகத்திலும் பாடுவது அருமை. சந்தத்திற்கு இசைந்து வருவது போல், எத்தனை எத்தனை அருமையான சொல்லாடல்கள். புதுமையான சொற்களும், பழமையான் சொற்களும், புகுந்து விளையாடும் இவர் பாக்களில்.
தமிழால் திருப்புகழுக்கு பெருமையா, அல்லது, திருப்புகழால் தமிழுக்குப் பெருமையா எனப் பட்டிமன்றமே வைக்கலாம். முன்னது தொடக்கம், பின்னது முடிபு என்பேன் நான். இந்தப் பாடலின் தான் பாருங்களேன், எத்தனை மூன்றெழுத்துச் சொற்கள்! மூன்றெழுத்துல் என் மூச்சிருக்கும்?!

இயற்றியவர் : அருணகிரி நாதர் (பதினைந்தாம் நூற்றாண்டு)
இராகம் : ஹமீர் கல்யாணி
தலம் : பழநி


தமரு மமரு மனையு மினிய
தனமு மரசும் ...... அயலாகத்

தறுகண் மறலி முறுகு கயிறு
தலையை வளைய ...... எறியாதே

கமல விமல மரக தமணி
கனக மருவு ...... மிருபாதங்

கருத அருளி யெனது தனிமை
கழிய அறிவு ...... தரவேணும்

குமர சமர முருக பரம
குலவு பழநி ...... மலையோனே

கொடிய பகடு முடிய முடுகு
குறவர் சிறுமி ...... மணவாளா

அமர ரிடரு மவுண ருடலு
மழிய அமர்செய் ...... தருள்வோனே

அறமு நிறமு மயிலு மயிலு
மழகு முடைய ...... பெருமாளே.


பாடலைக் கேட்டவாறு, பொருளைப் பார்க்கலாமா?
(பாடல் 0:40 இல் தொடங்குகிறது)


அருஞ்சொற்பதம்:
தமர் : சுற்றம்
தறு : கொடுமை, வன்மை
மறலி : காலன் (யமன்)
முறுகு : கடினம்; திண்ணிய
சமர் : போர்
குலவு : ஒளிர்ந்து
பகடு : வலிமையான; ஆண் யானை
முடுகு : விரைந்து
அவுணர் : அசுரர்
அமர் : போர்
அயில் : வேல்

நம் குடும்பமும், உறவினர்களும், நண்பர்களுமாக சேர்ந்து வாழ்கிறோம். ஆக சுற்றத்தோடு வாழ்கிறோம். மேலும், பல பொருள் ஈட்டி, செல்வம் தனைச் சேர்த்து வாழ்கிறோம். மேலும், அவரவர், தமது தகுதிக்கேற்ப, மற்றவரை மேலாண்மை செய்து, ஆட்சியும் செய்து வருகிறோம்.

சுற்றம், செல்வம், ஆட்சி - இந்த மூன்றும், நமக்கு அயலாகப் போவது எப்போது? அதாவது, நம்மை விட்டுப் போவது - கொடுமையான கூற்றுவன், தன் பாசக்கயிற்றைக் கொண்டு, நம் தலைக்குமேல் ஏறிந்து, சுருக்கிடும் பொழுது.

அப்படிக் கூற்றுவன், அந்தக் கடினமான பாசக்கயிறை எறியாமல் இருக்க என்ன செய்ய?
தாமரை போன்று அழகானவனும், மாசற்ற, மரகதமணி மற்றும் தங்கத்தைப் போன்றவனுமான முருகனின் திருவடிகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதற்கான அருளினை, குமரா, நீயே தரவேண்டும். உன்னைப்பிரிந்து வாடும் என் தனிமை அகலும் படியாக அறிவினைத் தர வேண்டும்.

இங்கே கந்தனை நான்கு பெயர்களால் அழைத்து, பாடற்தலத்தினைச் சொல்லுகிறார்:
குமரா, சமரா (போர்வீரா), முருகா, பரமனே,
குலவும் - ஒளிர்ந்து, திகழ்ந்து விளங்கும் பழநிமலை தனில் உறைவோன் - என.

அச்சுறுத்தும் யானையை, (வள்ளிக்காக) உன் செயல் முடிய, விரைந்து வரச் செய்தவனே,
அமரர்(தேவர்) துன்பங்களையும், அசுரர்களின் உடலினையும் (ஆணவத்தினையும்), ஒருசேர அழிந்திடும்படி, போர் செய்து அருள்வோனே,

அறமும், நிறமும், வேலும், மயிலும், அழகும், உடைய கந்த பெருமாளே!
~~~~~~~
8. சித்தர் பாடல்கள்
பாடல் : நாதர் முடி மேலிருக்கும் நல்லபாம்பே
இராகம் : புன்னாகவரளி
இயற்றியவர் : பாம்பாட்டிச் சித்தர்

நாதர்முடி மேல் இருக்கும் நாகப் பாம்பே!
நச்சுப்பையை வைத்திருக்கும் நல்ல பாம்பே!
பாதலத்தில் குடிபுகும் நல்ல பாம்பே!
பாடிப்பாடி நின்று ஆடு பாம்பே!
ஆடு பாம்பே, தெளிந்தாடு பாம்பே!

(அடுத்த பகுதியில் தமிழ் மூவர். அப்பகுதியில் இத்தொடர் நிறையும் என நினைக்கிறேன், பார்க்கலாம்.)

Wednesday, December 24, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (3)

சென்ற பகுதியில் திருமதி.சௌம்யா அவர்கள், தேவாரத் திருமுறைகளில் இருந்து பாடல்களை வழங்குவதைப் பார்த்தோம். As a Sequel, இப்பகுதியில் தமிழ்மறையாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இருந்து பாடல்களை வழங்குகிறார்.


"...பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே"


என்ற சங்ககாலப் பாடலின் வழி வரும் ஆழ்வார் பாசுரங்களின் (பா + சுரம் = பாசுரம் = இசைப்பா!) திரட்டில் இருந்து, இரண்டு பாடல்கள் இசைக்கப் பார்க்க விருக்கிறோம்.
இப்பாடல்களுக்கு இசை அமைத்தது, இந்நிகழ்ச்சியில் வயலின் வாசிக்கும், எம்பார் எஸ்.கண்ணன் அவர்களேயாம்!.

4. திவ்யப் பிரபந்தம்

முதல் பாடல்:
இயற்றியவர் : நம்மாழ்வார்
தலம் : வானமாமலை
இராகம் : கௌளை
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.


நம்மாழ்வாரின் இப்பாசுரம் துதிப்பது நாங்குநேரியில் வீற்றிருக்கும் 'தோத்தாத்ரி நாதன்' எனும் திருநாமம் கொண்ட திருமாலை. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தலத்திற்கு இதர பெயர்கள் வானமாமலை, திருசிரீவரமங்கை ஆகியவை - திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சேற்றுத்தாமரைத் தீர்த்தம். ஆதிசேஷன் இத்தலத்தில் தவமியற்றி, திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றானாம். இத்தலத்தின் சாத்தப்படும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.



அடுத்த பாடல்:
இயற்றியவர் : குலசேகர ஆழ்வார்
இராகம் : தோடி

என்னை வருக வெனக்குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப்
பொய் அச்சம் காட்டிநீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கொருநாள்
வருதியேல் என்சினம் தீர்வன்நானே


இந்தப் பாடலுக்கு நாட்டியமாடிப் பார்க்க வேண்டும். அழகான முக பாவங்களைக் காட்டிட ஏதுவானதொரு பாடல். இயலும், இசையும், நாடகமும் - முத்தமிழும் ஒன்றே சங்கமிக்க, இனியதொரு களனாய் இப்பாடல் அமைந்திருக்கிறது!

பொருளைப் பாருங்களேன்!:
கண்ணா, என்னை ஒரு இடத்திற்கு வருமாறு சொன்னாய்.
நீயோ, அந்த குளிர்ந்த முல்லை மலர் பந்தலில் மறைந்தவாறு,
அங்கே நெடுநேரம் காத்திருந்த வேறோருவரை அணைத்துக் கொண்டிருந்தாய்.
என்னை நீ பார்த்தும், மெல்ல விடுவித்துக் கொண்டாய். உன் பொன்னிற ஆடையைத் தாங்கி, ஏதோ, என்னைக் கண்டு அச்சம் கொண்டு விலகுவது போல், பொய் நாடகமாடுகிறாய்.
என்றேனும் ஒருநாள், நீ என்னருகே வருவாய் அல்லவா, அன்று பார்த்துக்கொள்கிறேன்!
என் சினத்தை அப்போது, தீர்த்துக்கொள்கிறேன்!

நித்திலமான இப்பாடல்களை இங்கே கேட்கலாம்:



ஞானத்தில் முதிர்ந்த பெரியோர்கள் அருளிய அமுதம் மறைகளாம். தமிழ்மறையாய் தீந்தமிழ் சோற்களை, செந்நெல் விதையாய் விதைத்து, விளைந்தது அல்லவோ, இவ்வாழ்வார் பாசுரங்கள்!

5. கம்ப இராமாயணம்
இராகம் : நாட்டை

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.


தமிழிசை வரலாறு, இப்போது பனிரெண்டாம் நூற்றாண்டை அடைந்திருக்கிறது! 'விருத்தத்திற்கு கம்பன்' எனச் சொல்லும் அளவிற்கு, மரபுக் கவிகளின் மகுடமாம், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமகாதை வாழ்த்துப்பாடலை பாடுகிறார். 'உலகம் யாவையும்' எனக் கம்பர் பாடத் துவங்கி, விரிந்து, பரந்து, உயர்ந்தோங்கி நிற்கும் அவரது காவியம் போல், தமிழும், இசையும் ஒருங்கே பற்பல நூற்றாண்டுகளுக்கு பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர்.

(அடுத்த பகுதியில் தமிழிசை வரலாறு தொடர்கிறது...)

Sunday, December 21, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (2)

சென்ற பகுதியில் திருமதி சௌம்யா அவர்கள், சிலப்பதிகாரப் பாடல்களில் கிரகபேத எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து, பாடிக் காட்டியதைக் கேட்டும் பார்த்தும் இரசித்தோம்.

இந்தப் பகுதியில், சங்க காலத்தில் இருந்து, தேவாரப் பதிகங்களின் காலகட்டத்திற்குச் செல்கிறோம். கிட்டத்தட்ட, இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சைவ சமயக் குரவர்களின் தமிழிசைப் பாடல்களை பாடக் கேட்கவிருக்கிறோம்.

3. தேவாரம்
நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே"

(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)
மூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)
இயற்றியவர் : திருஞான சம்பந்தர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்?)
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவொற்றியூர் தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
இராகம் : நவ்ரோஜ்
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)

ஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)
இயற்றியவர் : சுந்தரர்

(விருத்தம்)
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை இங்கேயும், இரண்டாம் பாடலின் பொருளை இங்கேயும் பார்க்கலாம்.



சைவம், ஒரு கண்ணென்றால், வைணவம் இன்னொரு கண்ணல்லவா!
இதுவரை சிவனடியார்களின் இசைத் தொண்டினால் தமிழிசை பெற்ற செல்வங்களைப் பார்த்தோம்.
அடுத்து வைணவப் பெருந்தகைகளான, ஆழ்வார்கள் படைத்திடும் அமுதினை அடுத்த பகுதியில் தொடர்வதினை கேட்டு மகிழ்வோம்!

Saturday, December 20, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (1)

ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008 நிகழ்ச்சியில், நேற்று, 'சிலப்பதிகாரம் முதல் சிவன்' வரை என்ற தலைப்பில் திருமதி.சௌம்யா அவர்கள் சங்க கால இலக்கியம் முதல் பாபநாசம் சிவன் வரை, தமிழிசை வரலாற்றின் முக்கியமான மைல்கற்களை தொட்டுப் போகும்படியானதொரு தொகுப்பினை தந்திருந்தார்கள்.

வாய்ப்பாட்டு : எஸ். சௌம்யா
வயலின் : எம்பார் எஸ். கண்ணன்
மிருதங்கம் : நெய்வேலி ஆர். நாராயணன்

சௌம்யா அவர்கள் பாடிய பாடல்களும், நிகழ்வில் அவர் சொன்ன முக்கிய குறிப்புகளும்:
1. அகநானூறு பாடல் : ஆடமைக் குயின்ற...
இயற்றியவர் : கபிலர்

ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கின்
கோடை அவ்வளி குழலிசை யாக
பாடுஇன் அருவிப் பனிநீர் இன்னிசைத்
தோடமை முழவின் துதைகுரல் ஆக

2. சிலப்பதிகாரம் : கன்று குணிலாக்... (ஆய்ச்சியர் குரவை)
இயற்றியவர் : இளங்கோ அடிகள்
இராகம் : மோகனம்
கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ;

(மோகனத்தின் சுரஸ்தானங்களை கிரகபேதம் செய்ய வரும் மத்யமாவதி, அதற்கு எடுத்துக்காட்டு போல, சிலம்பின் இன்னொரு பாடலை காட்டினார்.)
இராகம் : மத்யமாவதி
இறுமென் சாயல் நுடங்க நுடங்கி
அறுவை யொளித்தான் வடிவென் கோயாம்
அறுவை யொளித்தான் அயர அயரும்
நறுமென் சாயல் முகமென் கோயாம்;
வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம்
நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும்
வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்;

(மோகன இராகத்திலிருந்து கிரக பேதம் செய்து ஹிந்தோளாம் இராகத்தினை அடைவதை இன்னொரு சிலப்பதிகாரப் பாடலைப் பாடுகிறார்.)
இராகம் : ஹிந்தோளம்
கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள்
மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள்
பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார்
முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்;
மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள்
பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள்
கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார்
குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்;





சிலப்பதிகாரத்தில் அன்றைக்கே, கிரக பேதத்தினை விளக்கிடும் எடுத்துக்காட்டாக, பாடலை இயற்றி இருக்கிறார்கள்! பாடல்களும் இயைபு தரும் பண்களைப் பற்றி நன்கு அறிந்து பாடல்களை இயற்றி இருக்கிறார்கள்! இவையெல்லாம் நமது தமிழிசை எத்தனை உன்னதமான நிலையில் இருந்திருக்க வேண்டும் என்பதனை நினைத்துப் பார்க்க, பெருமையாக இருக்கிறது.

பிற்சேர்க்கை:
கச்சேரியில் - சிலம்பில் இருந்து இன்னும் இரண்டு பாடல்கள் - நேரடி நிகழ்சியில் "வடவரையை மத்தாக்கி" பாடலையும், "மூவலகம் ஈரடியான் பாடலையும்" பாடியுள்ளார்.
வடவரையை மத்தாக்கி (சுத்த சாவேரி - ஹிந்தோளத்தில் இருந்து கிரக பேதம்)
மூவுலகம் ஈரடியான் (சுத்த தன்யாசி - சுத்த சாவேரியில் இருந்து கிரக பேதம்.)
(இவ்விரண்டும் , ஜெயா டி.வி யின் ஒளிபரப்பில் இடம்பெறவில்லையென்பது வருத்தமானதே.)

(அடுத்த பகுதியில் தேவாரப் பாடல்களின் கால கட்டத்தில் தமிழிசை வரலாறு தொடர்வதினைப் பார்க்கலாம்...)

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினேழு

பா 56:

எதுகுறுக்கு மேல்கீழா மெங்குநிறை வாகும்
எதுசச்சித் தின்பிரண் டிலா ததானந்தம்
நித்தமா யொன்றாய் நிகழ்வதெது வாகுமவ்
வத்து பிரம மதி.
(சீர்களைப் பிரித்து:)
எது குறுக்கு மேல் கீழாம் எங்கும் நிறைவாகும்
எது சச்சித் இன்ப இரண்டிலாத ஆனந்தம்
நித்தமாய் ஒன்றாய் நிகழ்வது எதுவாகும் அவ்
வத்து பிரமம் அதி.

பொருள்:
குறுக்கு, மேல், கீழ் என எங்கும் நிறைந்திருக்கும் எப்பொருளோ,
எது சத் எனவும், சித் எனவும், ஆனந்தம் எனவுமான பொருளோ,
எது இரண்டு என்றில்லாமல்,
எது எப்போதும் ஒன்றாகவே இருக்கிறதோ,
எது எப்போதும் ஒளிர்ந்து திகழ்கிறதோ,
அப்படிப்பட்ட பொருளே, பிரம்மம் எனக் கொள்வாய்.

விளக்கம்:
வேதங்கள் யாவும் கூறும் உண்மைப் பொருளாம், தன்னை அறிந்தார் உணர்வதாம்,
பிரம்மம் என்னும் மெய்ப்பொருள் எப்படி இருக்குமாம்?
இவ்வெண்பா சொல்லும்:
பிரம்மம் என்னும் வஸ்து, எல்லாவற்றுக்கும் மேலேயிலிருந்து, எல்லாவற்றுக்கும் கீழ் வரையும், இரண்டுக்கும் இடைப்பட்ட இடமெலாமும், இப்படியாக எல்லா இடமும், நிறைந்திருக்குமாம்.

முன்னே இருப்பதும் பிரம்மம், பின்னே இருப்பதும் பிரம்மம்,
வலப்பக்கம் இருப்பதும் பிரம்மம், இடப்பக்கம் இருப்பதும் பிரம்மம்,
கீழேயும் பிரம்மம், மேலேயும் பிரம்மம்.
இங்கே இருப்பது எல்லாமும் பிரம்மம். பிரம்மம் மட்டுமே.
-முண்டக உபநிடதம்.

அது சத்(களம்), சித் (சாதனம்), ஆனந்தம் (இலக்கு) எனவாய் இருக்கிறது. ஒரு கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால், அதில் ஆடுகளமும் ஆட்டமும் - சத்; எல்லையில்லா பிரபஞ்சத்திலோ எல்லாமே சத்; கிரிக்கெட் ஆட பயன்படும் பந்து, மட்டை, கையுறை போன்றவை சாதனம் - ஆகவே அவை சித். அடைய வேண்டிய வெற்றியானது ஆனந்தம். இந்த மூன்றுமாய் இருக்கிறது பிரம்மம். அதவாது, அடைய வேண்டிய இலக்காகவும், அடைவதற்கான களமாகவும், அடையத் தேவையான சாதனமாகவும் இருக்கிறது.

ஜீவனாய் இருக்கும்வரை இரண்டெனத் தெரிந்தது. பிரம்ம நிலையில் எல்லாமே ஒன்றுதான். ஒன்று என எங்கெங்கும் நிகழ்வாய் திகழ்கிறது.


"அதுவும் (தெரியா பிரம்மம்) நிறைவானது, இதுவும் (தெரிந்த பிரம்மம்) நிறைவானது.
இந்த நிறை (தெரிந்த பிரம்மம்), அந்த நிறையில்(தெரியா பிரம்மம்) இருந்து தான் உருவானது.
இந்த நிறையின் முழுமை, யாதெனத் தெளிந்தபின், அந்த நிறையே இங்கும், எங்கும் நிறைந்தது."
- பிரஹதாரண்யக உபநிடதம்


சுட்டிகள்:
* சச்சிதானந்தம் பற்றி மகாபெரியவர் 'அருள்மொழி அமுதம்' தனில் சொல்வது:
"‘சத் சித் ஆனந்தம்’ என்று நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்."

* திண்ணையில் எஸ்ஸார்ஸி : வேத வன விருட்சம்:
"சத் சித் ஆனந்தம்
பிரம்மத்தை தொடக்கமாய்ப் பேசும்
சத்தும் சித்தும் வேறல்ல
அறிதலுக்கு சாட்சியே சத்
மெய்யை அறிதல்
வலி யினின்று விடுதலை
பிரம்மம் ஆனந்தக் கடல்
சித்தே ஆனந்தம்
சத் சிதா ஆனந்தம்"

Tuesday, December 16, 2008

மார்கழி : எப்படிப் பாடினாரோ!

மது இசை வரலாற்றைத் திருப்பிப் பார்க்கையில், எண்ணற்ற இறையடியாளர்களின் இனிய இசைத் தொண்டினைக் கேட்டுப் பூரிக்கலாம். இன்று, நேற்று என்றில்லாமல், பற்பல நூற்றாண்டுகளாக, தாங்களும் பாடிப் பூரித்ததோடு, இறவாப் பாடல்கள் மூலம் நம்மையும், இசையின் இனிய நாதத்தினை மகிழ்ந்து பருகும் படியாக செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். வரப்போகும் சந்ததிக்கு, இசைச் செல்வத்தினை சேர்த்து வைத்துவிட்டுப் போன நம் மூதாதையர்களுக்கு எத்துணை நன்றி செலுத்தினாலும், அது போதாது.

இந்தப் பகுதியில், இரண்டு பாடல்களைப் பார்க்கப்போகிறோம். ஒன்று அக்காலாத்துப் பாடல், இன்னொன்று இக்காலத்துப் பாடல். முதல் பாடலில், முதற்காலத்தில் இருந்த, மாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம். இரண்டாவது பாடலில், முதற்காலத்திற்கு, அடுத்த காலகட்டத்தில் வந்துதித்த மகாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

இது என்ன பாடலா, அல்லது பட்டியலா? இரண்டும் தாங்க!. இந்தப் பட்டியலில் இடம் பெரும், மகாகவிகளின் பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களைப் பற்றிய பாடலை?. இங்கே, அப்படிப்பட்ட, ஒரு பாடல்... இல்லை, இல்லை, இரண்டு பாடல் பார்க்கப் போகிறோம்! ப்ளாஷ்பேக்-குக்கு ரெடியா?

முதல் பாடல்:
இயற்றியவர்: சுத்தானந்த பாரதி
இராகம் : கர்நாடக தேவகாந்தாரி.

எடுப்பு
எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

தொடுப்பு
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

முடிப்பு
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படிப் பாடினாரோ!)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் அவர்கள் (1897-1990). யோகி சுத்தானந்தர், இவரோ பெரிய கவி. பக்தியாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. புதுவை அரவிந்த ஆசரமத்தில் சுமார் 23 ஆண்டுகள் தங்கி இருக்கையில், யோக நெறிதனை பின்பற்றி, அவற்றில் உச்சங்களை எட்டினாராம். 1914இல், மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, சிலகாலம் அரசியலில் ஆர்வம் செலுத்தினாலும், சிலகாலத்தில் முழுமையாக ஆன்மீகத்தில் ஆழ்ந்திடலானார். அரவிந்த ஆசரமத்தில் சுவாமி சிவானந்தர், இவரை அங்கு சந்தித்து இருக்கிறார்.
சுத்தானந்த பாரதியார் இயற்றிய பாடல்களில் சில:
* அருள் புரிவாய் (ஹம்சத்வனி)
* சகலகலா வாணியே (கேதாரம்)
* தூக்கிய திருவடி (சங்கராபரணம்)
* ஜங்கார சுருதி செய்குவாய் (பூர்விகல்யாணி)

சுத்தானந்த பாரதி, தனக்கு முன் வந்த இறையடியாளர்கள், எப்படியெல்லாம் சிவனைப் பாடிக் கொண்டாடினர். ஆகா, அவற்றில் மயங்கி, அவர்களைப் போலவே எனக்கும் பாட ஆசை வந்ததே என்கிறார். தொடுப்பில் அவர் சொல்லும், நான்கு பேரும் திருமுறைகள் தந்த சமயக் குரவராவர். (அப்பர், சுந்தரர், சம்பந்தர் & மணிவாசகர்.). முடிப்பில், அவர் சொல்லும் நால்வரும், பெரும் ஞானியர். காலத்தை வென்று நிற்பவர்கள். முதலில் மணியான குருவாம் ஆதி சங்கரரில் தொடங்குகிறார். இவர் தமிழில் ஏதும் பாடல் இயற்றாவிட்டாலும், பின்னர் வரப்போகும் அத்வைத பாரம்பரியத்தின் முன்னோடி என்பதால், சுத்தானந்தர், சங்கரரில் துவங்கியிருக்க வேண்டும். அடுத்தது தாயுமானவர். அவரின் கண்ணிகளும், ஆனந்தக் களிப்பும் சொல்லில் அடங்கா சுகம் தருபவை. அருணகிரியாரின் சந்தத்திலோ அழகன் முருகனின் பாதார விந்தமே, தாளம் போடும். அருட்பெரும் ஜோதியார் அருளிய திருவருட்பாக்களோ, நன்னெறிக்கு வித்திடுவதோடு, அருள்நெறியும் தந்திடும். வள்ளலார் என்றவுடன், அடுத்த வார்த்தை, 'கருணை' என்று வந்திருக்கும் பொருத்தத்தினை என்னென்று சொல்வேன்!

ஆலாபனையுடன், இப்பாடலை, சங்கீத கலாநிதி, டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


மெல்லிசையில், பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

அடுத்த பாடல்:
இப்பாடலில், 18 முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிகளை திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் பாடுகிறார். திரு.சேதுராமன் சுப்ரமணியன் - இவர் ஒரு அறிவியல் வல்லுனர். இவரது ப்ளாகர் பக்கத்தினை இங்கு பார்க்கலாம்.

எடுப்பு
எப்படிப் புனைந்தீரோ ராமய்யா!
அப்படி நானெழுத ஆசை கொண்டேன் சிவனே!
(எப்படி..)

தொடுப்பு
கோபால கிருஷ்ணனும் நீலகண்ட சிவனும்
அருணாசலக் கவியும் கண்டறிந்த பொருள் தனையே
(எப்படி..)

முடிப்பு
சுப்ரமண்ய பாரதியும் சுத்தானந்த பாரதியும்
கவிகுஞ்சர பாரதியும் கோடீஸ்வர அய்யரும்
பாசமுடன் எழுதி பரிவுடனே பாடிய
கனித்தமிழ்ச் சொற்களால் இறைவனின் புகழ் பாட
(எப்படி..)


முன்பு கேட்ட 'எப்படிப் பாடினாரோ' பாடலைப் போலவே இந்தப் பாடலையும் இயற்றியுள்ளார். அதே இராகத்தில் பாடிப் பார்க்கவும். இந்தப் பாடலின் எடுப்பிலேயே, தமிழ்த் தியாகராஜர், பாபநாசம் சிவன் (1890-1973) அவர்களை அழைக்கிறார். 'ராமய்யா' என்பது பாபநாசம் சிவன் அவர்களின் இயற்பெயர். சிவனாரின் காலத்திலும், அவருக்கு முற்பட்ட காலத்திலும் அருந்தமிழ் கவிகளை இயற்றிய தமிழிசைக் கவிஞர்களையும் இப்பாடல் குறிப்பிட்டு, அக்கவிகளுக்குப் பெருமை சேர்க்கிறது.

தொடுப்பில் தொடுக்கப்பட்டுள்ளோர்:
கோபால கிருஷ்ண பாரதி (1811-1896) - நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றியவர்.
நீலகண்ட சிவன் (1839-1900)
அருணாசலக் கவியார் (1711-1779) - இராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றியவர்.

அடுத்து முடிப்பில், தொடுக்கப்பட்டுள்ளோர்:
சுப்ரமணிய பாரதி (1882, 1921),
சுத்தானந்த பாரதி (1897-1990),
கவிகுஞ்சர பாரதி (1810-1896) மற்றும்
கோடீஸ்வர ஐயர் (1870-1936)

இவர்களும், இன்னும் பற்பல கவிகளும் தந்துள்ள சாகாவரம் பெற்ற பாக்கள் தான் எத்தனை எத்தனை! அத்தனையும் செவிகளில் நிறைத்து மகிழ, உள்ளம் விழையுது. அவற்றைக் கேட்டிட நெஞ்சம் குழையுது!.

Thursday, December 11, 2008

தமிழ்க்கவி யோகியர் மூவர்

தமிழிசை மூவரைப் பற்றிப் பார்த்தோம். தன்னிகரிலா தமிழ்க் கவிஞர்களுள், தவித்திரு யோகியர் மூவரை இவ்விடுகையில் பார்ப்போம். இந்த மூவரும் கிட்டத்தட்ட, ஒருவரோடு ஒருவர் தொடர்புடையவர். நேரடியாக இல்லாவிட்டாலும், ஒவ்வொருவரும், அவருக்கு முன்னால் வந்தவர்களால், ஈர்க்கப்பட்டவர்கள்!
யாரோ, அவர் யாரோ? என்ன பேரோ?

* தாயுமானவர் (1706 - 1744)
* இராமலிங்க வள்ளலார் (1823 - 1874)
* மகாகவி பாரதியார் (1882 - 1921)

இம்மூவரைப் பற்றித்தான் சொல்ல விழைகிறேன்!. திருமூலர், அருணகிரியார், பட்டினத்தார், எனப்பல யோகியரும் சீரார்ந்த இந்நாட்டில், இம்மூவரையும், குறிப்பாகச் சொல்வதற்குக் காரணம், அவர்களது கருத்தில் ஒற்றுமைகளும், ஒருவர் பால் இன்னொருவர் ஈர்க்கப்பட்டதுமே!. விரிவாகப் பார்க்கலாமா?

தாயுமானவரைப் பற்றி நமக்குத் தெரியும். அரசாங்க பதவியில் இருந்தவாறே, யோக வழியில் நடந்தவர். அரசியே, அவருக்கு ஆபத்தாக, மதுரை அரசைத் துறந்து, இராமநாதபுரம் அரசுக்குச் சென்றவர். அங்கும், நாளும் நெடிதாய் தவத்தில் திகழ்ந்தவர். வஞ்சகர்களின் சூழ்ச்சியால், அவர் ஒரு சமயம் தவத்தில் இருக்கையில், அவர் இறந்துவிட்டதாக சொல்லப்பட்டு, அவரது உடலுக்கு தீமூட்டி விடப்பட, தீப்பிடித்து எரியும் உடலோடு, தவம் கலைந்து எழுந்திட, பின்னர், இனியும் இவ்வுடலால் பயனில்லை, இந்நிலையிலேயே, இப்பிறவி முடியட்டும் என்றெண்ணி, முக்தி அடைந்தவர். அரசாங்க அலுவல்களிலும், தவத்தில் ஆழ்ந்த நேரங்களிலும் போக, இதர நேரங்களில், இவர் இனிக்க இனிக்க எழுதி வைத்த அருந்தமிழ் கவிதைகள், வையத்தில் மாந்தரை நன்னெறிக்கு உய்விப்பன. வேதாந்தத்தையும், சித்தாந்தத்தையும் சமரசம் செய்வதை இவரிடம் பார்க்கலாம்.

அருட்பெரும்ஜோதி வள்ளலார், சுத்த சன்மார்கம் மொழிந்தவர். வேதாந்தம், சித்தாந்தம் மட்டுமல்லாமல், ஆறு அந்தங்களுக்கும் சமரசம் செய்தவர். வள்ளலாரின், திருவருட்பா பாடல்களைப் பார்த்தால், தாயுமானவர் விட்ட இடத்திலிருந்து, வள்ளலார் தொடர்ந்து போல இருக்கும். ஒருமுறை அன்பர் ஒருவர், வள்ளலாரிடம், தாங்கள், முற்பிறவியில் தாயுமானவரோ என வினவ, அதற்கு சுவாமிகள் ஒன்றும் சொல்லாமல் இருந்து விட்டார். அந்த அன்பர், தொடர்ந்து, தனது வினாவை வலியுறுத்த, வள்ளலார், 'உம், இருக்கலாம்' என்றாராம்!. இந்த சம்பவம் சுவையானதாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும், வள்ளலாரும், தாயுமானவரைப் போல, சமய சமரசத்தினை வலியுறித்தியவர். 'ஒன்றே குலம், ஒருவனே தேவன்' என முன்மொழிந்தவர். வள்ளலாரே, வாழையடி வாழையென வரும் திருக்கூட்ட மரபினில் தானும் ஒருவன் என்கிறார்.

தாயுமானவர் பாடல்களில் 'ஆகாரபுவனம் - சிதம்பர இரகசியம்' என்றொரு பகுதி உண்டு. அப்பகுதியில் இருந்து:
சன்மார்க்க ஞானமதின் பொருளும் வீறு
சமய சங்கேதப்பொருளும் தான் ஒன்று ஆகப்
பன்மார்க்க நெறியினிலும் கண்டது இல்லை;
பகர்வு அரிய தில்லைமன்றுள் பார்த்தபோது அங்கு
என்மார்க்கம் இருக்குது எல்லாம் வெளியே என்ன
எச்சமயத்தவரும் வந்து இறைஞ்சா நிற்பர்
கல்மார்க்க நெஞ்சம் உள எனக்கும் தானே
கண்டவுடன் ஆனந்தம் காண்டல் ஆகும்.
ஆகாயத் தலமாம் தில்லைச் சிதம்பரத்தில் நடராசன் ஆடும் ஆனந்த நடத்திற்கு 'பொது நடம்' என்றொரு பெயர். அப்பெயர் போலவே, அவன் அரூபமாக சிதம்பர இரகசியத்தை உரைப்பது, அவன் எல்லா சமயங்களுக்கும் பொதுவானவன் - எனச் சன்மார்கம் சொல்லுகிறார். எல்லா சமயங்கள் உரைப்பதும், திருச்சிற்றம்பலத்திலேயே அடங்கி உள்ளது என்கிறார்.

தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில் தில்லைத்
தலத்திடையே திரைதூக்கி தரிசித்தபோது
வேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்
வெளியாகக் காட்டியஎன் மெய் உறவாம் பொருளே
காய்வகை இல்லா உளத்தே கவிந்த நறுங்கனியே
கனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பே
தூய்வகையோர் போற்றமணி மன்றில் நடம்பிரியும்
சோதிநடத்தரசே என் சொல்லும் அணிந்தருளே.(திருவருட்பா - 4133)
என்பார் வள்ளலார். எங்கும் நிறைப் பரவெளியில், ஆகாயத் தலமதில், பொன்னம்பலவன் நிறைந்திருந்தான் என, தான் சிறு வயதிலேயே கண்ட ஆனந்த களிப்பினை, சோதி வடிவானைப் பற்றி அருட்பெரும்சோதியார் போற்றுதல், என்னப் பொருத்தம்!

தாயுமானவர், மற்றும் வள்ளலாரின் தாக்கத்தினை மகாகவி பாரதியிடம் நிறையவே காணலாம். சுதேசமித்திரனில், பாரதி வள்ளலாரைப் போற்றி, 'தமிழ்நாட்டின் புதிய விழிப்புக்கு' ஆதிகர்த்தாவாக வள்ளலார் விளங்குகிறார் என்கிறார். மேலும், 'ஹிந்து தர்மத்தின் புதுக் கிளர்ச்சிக்கு விவேகானந்தர் ஆரம்பம் செய்தார். அவரை தமிழ்நாடு முதலாவது அங்கீகாரம் செய்துகொண்ட பிறகுதான் வங்கம், மஹாராஷ்டிரம் முதலிய ஹிந்து தேசத்து மகாணங்கள் அவருடைய பெருமையை உணர்ந்தன' என்கிறார். 'எம்மதமும் சம்மதம்' எனும் வள்ளலாரின் சமய சமரச கொள்கையினை மகிழ்வுடன் பாரதியும் ஏற்றார். பாரதி, திருவருட்பாக்களையும் நன்கு அறிந்திருந்தார். 'நான் படும் பாடு சிவனே உலகோர் நவிலும் பஞ்சு...' எனத் தொடங்கும் திருவருட்பாவை அடிக்கடி பாடிக்கொண்டிருப்பாராம். 'களக்கமற பொதுநடம்...' எனத்துவங்கும் திருவருட்பாவினை சற்றே மாற்றி அமைத்து, அதில் கர்சன் பிரபுவினை, 'கர்சன் என்ற குரங்கு' என வருமாறு மாற்றி அமைத்திருந்தார்.

'எல்லா உயிரும் இன்புற்று வாழ்க' எனச்சொன்ன வள்ளலார் போலவே, பாரதியும் ஆகாயத்தின் மீதேறி, 'புவியில் துன்பமும், வருமையும் நீங்கி, எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும்' என வேண்டுவார் - 'பேசாப் பொருளைப் பேசத்துணிந்தேன்', எனும் கவியில் பாரதி. 'பாருக்குள்ளே தெய்வம் ஒன்று' என பாரதியும் சமய சமரசம் பாடிடக் காணலாம். 'இகத்தில் பரம்' என்பார் வள்ளலார். 'செத்த பிறகு என்ன சிவலோகம், வைகுந்தம்? இத்தரை மீதினில், இதே நாளில், இப்பொழுதே முக்தியை நாடி சுத்த அறிவு நிலையில் களிப்போம்.' என்று சங்கினை முழங்குவார் பாரதி.

வள்ளலாரின் சமரச சன்மார்க்கத்தின் முடிபு, 'மரணமில்லாப் பெருவாழ்வு'. பாரதியும், இக்கருத்தை, 'பாரதி - அறுபத்தாறு' பகுதியில் உரைப்பதைக் காணலாம். இப்பகுதியினை எழுதுவதற்கு முன்பு, நாற்பது நாள் மௌன விரதத்தினைக் கடைப் பிடித்தாராம், பாரதி. ஓயாது, ஏதாவது, பேசிக் கொண்டும் , பாடிக் கொண்டும் இருக்கும் பாரதி மௌன விரதம் இருந்தாரென்றால், அது அவருக்கு புதுச்சேரியில் ஏற்பட்ட யோகியர் தொடர்பாலாகும். தாயுமானவரின் குருவின் பெயர் 'மௌனகுரு தேசிகர்'. அவர், திருமூலர் வழியில் வந்தவர். இவர்கள் தாக்கம் பாரதிக்கு, புதுவையில் இருக்கும் காலத்தில் வளர்ந்திருந்தது. மேலும், பாரதி, தனது பகவத் கீதை உரையினில், தாயுமானவரை மேற்கோள் காட்டுகிறார். தனது 'ஆனந்தக் களிப்புச் சந்தத்திற்கு' 'தாயுமானவர் ஆனந்தக் களிப்புச் சந்தம்' என்றே பெயர் இடுகிறார் பாரதி. தேமாச் சீரில் முடியும் 'வந்த மாதரம் என்போம்', 'தாயின் மணிக்கொடி பாரீர்' போன்றவை இச்சந்தத்தில் வரும்.

இப்படியாக, பாரதிக்கும், தனக்கு முன் வந்த சித்தர்களின் மேலான ஈர்ப்புகள் தெளிவாகின்றன. பாரதியின் உடல்நிலை மிகவும் மோசமான காலத்தில், மருத்துவர்களையும், அவர்கள் தந்த மருந்துகளையும் துறந்து, கிட்டத்தட்ட, தன் பூவுடலைத் துறக்கும் முடிவினை பாரதி எடுத்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. அதில் தாயுமானவரின் முடிவினையும் ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க இயலவில்லை. தாயுமானவரும், பாரதியும், ஒன்றுபோல கிட்டத்தட்ட 38 வயது வரைதான் வாழ்ந்திருக்கிறார்கள்.! 'முக்தி என்றொரு நிலை சமைத்தாய்' எனப் பரமனைப் பாடிய பாரதிக்கு, அந்நிலையைத் தழுவிடும் நேரமும் வந்திட, அதை இனிதே ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

உசாத்துணை: ஊரன் அடிகள்

Sunday, December 07, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினாறு

சென்ற சில வெண்பாக்களில், ஜீவன் முக்தரைப் பற்றியும், அவர் முக்தி அடைந்த பின், பரமனை முழுதும் அறிந்த நிலையில், அந்த பரமனும், ஜீவனும் வேறில்லா நிலைதனை அடைதலைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து, நாம் பார்க்கப்போகிற சில பாக்களில், பரமனை எட்டிய ஜீவனின் ஆன்மா, பரமன் எப்படிப்பட்டதென அறியும் என்பது சொல்லப்படுகிறது.

பா 54:
எவ்வடை விற்பிறி தேதுமடை தாற்கின்றோ
வெவ்வின்பி னிற்பிறி தின்பின்றோ - வெவ்வறிவு
தன்னிற் பிறிதறிவு தானின்ற மோவது
தன்னைப் பிரமமெனச் சார்.
(சீர்களைப் பிரித்து)
எவ்வடைவில் பிறிது ஏதும் அடைதல் இன்றோ
எவ்வின்பினில் பிறிது இன்ப(ம்) இன்றோ - எவ்வறிவு
தன்னில் பிறிதறிவு தான் இன்றமோ அது
தன்னைப் பிரம்மம் எனச் சார்.

பொருள்:
எதை அடைந்தபின், அடைவதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எவ்வின்பத்தினை அடைந்தால், அதன் பின் அதைத்தவிர வேறொரு இன்பம் என்றில்லையோ,
எவ்வறிவானது, தான் யாரென அறிந்திடும் அறிவினைத் தந்திட, அந்த தன்னறிவு அன்றி வேறேதும் அறிய இல்லை, என்கிற நிலைதனைத் தந்திடுமோ,
அது, வேறொன்றும் இல்லை, அது தான் அன்றி வேறொன்றும் இல்லை,
அது, பிரம்மம் என அவன் சென்றடைவான்.

பா 55:

எதுகாணக் கண்டார் கேதுவுமே யின்றோ
வேதுவான பின்சன்மா மின்றோ - வேதுவறிந்த
பின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ
வானது தான்பிரம மாம்.
(சீர்களைப் பிரித்தபின்)
எதுக்காணக் கண்டார்க் ஏதுவுமே இன்றோ
எதுவானபின் சன்மா இன்றோ - எதுவறிந்த
பின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ
ஆனது தான் பிரம்மமாம்.

பொருள்:
எதைக் கண்டபின், பார்ப்பதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எதை அடைந்தபின், அதன்பின் இன்னொரு பிறப்பு என்பதில்லையோ,
எதை அறிந்தபின், அதன்பின் அறியத் தக்க பொருள் என்று வேறில்லையோ,
அப்படிப்பட்ட பொருள் தான், பிரம்மமாம்.

விளக்கம்:
எல்லோரும் ஏதோ ஒரு பொருளை அடைய, அன்றாடம் ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்கிறோம். ஆனால், எதை அடைந்தாலும், அதனால் அடையும் நிறைவானது தற்காலிகமாகவே இருக்கின்றது. தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடைதலும், நிறைவின்மையும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறவிக்குப் பின் பிறவியிலும், இத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது முற்றுப் பெறுவது எப்போது?
பிரம்மம், என்னும் அந்நிலைதனை அடைந்தால் மட்டுமே, தேடல் நிற்கிறது. அதன் பின், அடைவதற்கு வேறோன்றும் இல்லை என்னும் நிறைவினை தருகின்றது.
பொருள் மட்டும் இன்றி, இன்பத்தையும் தேடி அன்றாடம் அலைகின்றோம். ஆனால், கிட்டும் இன்பமெல்லாம் நிறைவினைத் தருவதில்லை. நிலையான பேரின்பம் மட்டுமே, அடைதலுக்கு வேறொரு இன்பம் தேவையில்லை என்கிற நிறைவினைத் தந்திட இயலுமாம்.
பொருளும், இன்பமும் மட்டுமல்ல, பலவற்றையும் கற்றும், கண்டும், கேட்டும், அறிகிறோம். புலன் வழி கற்கும் அறிவோ, பொருளறிவாகவே இருக்கிறது. பேரின்பம் தரும் பெரும் ஞானத்தினை, புலன்களுக்கு அப்பாற்பட்ட பேரறிவினைத் தருவதில்லை. பெரும்பாலும் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது. (பார்க்க - கபீரின் கனிமொழிகள் : கற்றவர் படும் பாடு.) தான் யாரெனும் தன்னறிவு தந்திடும், உயர் ஞானத்தினை அடைந்திடுதல் மட்டுமே, பேரின்பம் தரும். அதுவே அடைய வேண்டிய எல்லா அறிவுகளிலும் உயர்வான ஞானம்.

அப்படிப்பட்ட பிரம்மத்தினைக் கண்டபின், காண்பதற்கு வேறொன்றுமில்லை. எல்லாமே ஒன்றாதக் தெரிவதால். தானும், அண்ட சராசரங்களும், அகில உலகமும், எல்லாமும், ஒன்றாகவே இருப்பதால், அந்த அனுபூதி நிலையில், வேறொன்று எனக் காண்பதற்கு இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மமாகவே மாறிய பின், பிறப்புச்சுழலும் அறுகிறது. மீண்டும் அல்லல் தரும் பிறப்பு என்னும் நிலை இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தினை அடைந்த பின், அடைவதற்கு உகந்த பொருள் என்று ஏதுமில்லை.

Friday, December 05, 2008

கண்ணன் காட்டும் கர்மயோகம்

நம்ம திவாய்யா பதிவில், கண்ணன் காட்டும் கர்ம வழி என்கிற தலைப்பில், கீதை மூன்றாம் அத்தியாய சுலோகங்களைச் சொல்லி, கர்ம யோகம் பற்றி விளக்கமா சொல்லியிருந்தார். அதன் முடிவில், அதைப்படித்ததில், நமக்குப் புரிந்ததை எழுதித் தரச் சொல்லி இருந்தார். இதோ அது:

செயலா, துறவா? செயல்களைத் துறந்து, தியானித்து,
சச்சிதானந்த சொரூபத்தினைக் காண விழைவது ஞான வழி.

செயல்களைத் துறவாமல், ஞானத்திற்கு தயார் செய்து கொள்வது கர்ம வழி.
(தயார் செய்தாப் போதும், ஞானம், பச்சக்குன்னு வந்து பற்றிக்கும்!)
செயல்களை செய்யும்போதோ, நம் விருப்பு வெறுப்புகளென்னும் வண்ணக் கண்ணாடிகளால்,
இவ்வுலகத்தை பார்க்க நேரிடுகிறது. இவ்விருப்பு, வெறுப்புகள் தான்
ஞானத்தினை அடைவதில் பெரும் தடைக் கற்கள் என்பதனால், அவை விலக்க வேண்டியவை.

விருப்பு, வெறுப்புகளில் இருந்து விடுபடுவது எப்படி?
செயலில் எப்படிப்பட்ட பலன் ஏற்படினும், அதை ஒரே மனநிலையுடன் எதிர்கொள்வதால்.
இந்த சமச்சீரான மனநிலைக்குப் பக்குவப்படுத்துவது தான் கர்ம யோகம்.

கர்ம யோகம்:
செயலைச் செய். ஆனால், எப்படிப்பட்ட பலன் ஏற்பட்டாலும், அதை இறைவனின் பிரசாதமாக,
நன்றியுடன் ஏற்றுக்கொள்வது கர்மயோகம். மனதை அமைதியுறச் செய்து, ஞானத்தை ஏற்றுக் கொள்வதற்கு, அது தயார் செய்திடும்.

செய்ய வேண்டிய செயலை துறப்பதால் துறிவியாக முடியாது. துறவு என்னும் நிலை தானாகக் கனிய வேண்டும். செய்யும் தொழிலே தெய்வம், செய்வன திருந்தச் செய்ய, அதுவே யாகம்.

எல்லாம், இயற்கையால், முக்குணங்களின் தூண்டுதலால், நடப்பவை.
ஆகவே, தன்னால் நடந்தது என்ற ஆணவத்தினை அழித்தொழி.

எல்லாமும் என்னால் எனவே அகந்தையே
இல்லாமல் சும்மா இருக்கவே - எல்லாம்
உலகினில் தானாய் நடந்திட கர்மமும்
செய்வாய் மனமே நிதம்.

இராஜச குணத்தால், தூண்டப்படும் ஆசையானது, சித்தம், மனம், புத்தி
- இவைதனை மூடி மறைத்து, உயர் ஞானம் வந்தடையும் வழி தனை மறிக்கும்.

உடலை விட, புலன்களும், புலன்களை விட மனமும், மனத்தை விட புத்தியும், புத்தியை விட ஆன்மாவும் உயர்ந்தது. ஆகவே, அந்த ஆன்மாவை அறிவதே குறிக்கோள்.

அந்த உயரிய குறிக்கோளை அடைய, ஆசையை ஒழித்து, பலன்களில் மேல் பற்று வைக்காமல்,
பிரசாதமாக பலன்களை ஏற்று, பகவானைப் போற்று.

பிரசாதம் என்றே பலனை நினைத்தால்
வருமோ இடரும்? கருமம் புரிகையில்,
நானெனத் தெரிவதை நீக்கி சரணமலர்
தானடை சிக்கெனத் தான்.

Monday, December 01, 2008

ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவம் 2008

இந்த வருடம் ஜெயா டி.வி யில் மார்கழி மகா உற்சவம் நிகழ்ச்சியில் இடம் பெறப் போகும் கச்சேரிகளின் நிகழ்ச்சிப் பட்டியல்:

டிசம்பர் 1 : கதரி கோபால்நாத் - சேக்ஸ்
டிசம்பர் 2 : வி.சங்கரநாரயணன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 3 : எஸ். சௌம்யா - வாய்ப்பாட்டு
டிசம்பர் 4 : ரஞ்சனி & காயத்ரி - வாய்ப்பாட்டு
டிசம்பர் 5 : சஞ்சய் சுப்ரமணியம் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 6 : சுதா ரகுநாதன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 7 : அருணா சாய்ராம் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 8 : நெய்வேலி சந்தானகோபாலன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 9 : விஜய் சிவா - வாய்ப்பாட்டு
டிசம்பர் 10: ஓ.எஸ். அருண் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 11: நித்யஸ்ரீ மஹாதேவன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 12: கணேஷ் & குமரேஷ் - வயலின்
டிசம்பர் 13: உன்னி கிருஷ்ணன் - வாய்ப்பாட்டு
டிசம்பர் 14: டி.எம். கிருஷ்ணா - வாய்ப்பாட்டு
டிசம்பர் 15: விசாகா ஹரி - வாய்ப்பாட்டு

இந்நிகழ்சிகள் நடைபெறும் அரங்கம் :
குமரராஜா முத்தைய்யா அரங்கம்,
செட்டிநாடு வித்யாசரமம்,
ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-28.
(நிகழ்சிகள் மாலை 5 மணிக்கு துவக்கம்)
ஜெயா டி.வியில் இந்நிகழ்சிகள் டிசம்பர் 15க்கு மேல் ஒளிபரப்பாகும்.
மேலும் விவரங்களுக்கு : மேக்ஸிமா மீடியா - தொலைபேசி # : 23723336

Tuesday, November 25, 2008

மார்கழி ராகம்!

இசையின் இனிமையை இரசிக்க இன்னுமொரு மார்கழி
கார்த்திகை விரதங்களால் மார்கழியில் பயன்!
கார்த்திகை மழைக்குப்பின் மார்கழியிலேயே நாற்று!
மார்கழியின் வருகைக்கு கார்த்திகை வகுத்தவழி.
மார்கழிப் பனியினில் மனதிற்கு இளஞ்சூடு!
காலைமுதல் கார்மேகக் கண்ணனின் குழல் நாதம்,
கசிந்து இசைந்து வர, குழைந்திடும் உள்ளம்.
ஊனுருகி உள்ளம் உன்னத இசையினை இரசித்திட
தேனான நாதத்தில் திளைத்திட, கிடைக்காதோ பேறு.

Sunday, November 23, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினைந்து

பா 53:

உபாதிநா சத்த லுறுவான் முனிவ
னுபாதியில் விஷ்ணுவி னுள்ளே - யபேதமே
தோயத்திற் றோயமும் தூவிண்ணி லேவிண்ணும்
தீயிற்றீ யும்போலத் தேர்.

(சீர்களைப் பிரித்த பின்:)
உபாதி நாசத்தல் உறுவான் முனிவன்
உபாதியில் விஷ்ணுவின் உள்ளே ஏய - பேதமே
தோயத்தில் தோயமும் தூவிண்ணிலே விண்ணும்
தீயிற் தீயும்போலத் தேர்.

பொருள்:
தான் உண்மையில் யாரென தெரியாமற் செய்யும் உபாதிகளை அழித்து ஒழித்தவன், உபாதி இல்லாத, எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், விஷ்ணுவின் உள்ளே சென்று, அதுவாகவே ஆவான். அவனுக்கும், பரமனுக்கும் வேறுபாடு ஏதும் இருக்காது - தண்ணீரில் தண்ணீர் போலவும், தூய விண்ணில் விண் போலவும், நெருப்பில் நெருப்பு போலவும், தான் இரண்டற இருப்பதை அறிந்து தெளிந்தான்.

விளக்கம்:
தன் முந்தைய வினைகள் களையப்பட்டவன், உபாதிகளையெல்லாம் இழந்து, இறுதியான நிலையினை அடையுங்கால், எல்லாமும் ஆன பரமனும், தன் ஆன்மாவும், இரண்டு என்றில்லாமல், ஒன்றாக இருப்பதை அறிவான்.

ஒரு பானை நிறைய இருந்த தண்ணீர் இருக்கையில், அந்தப் பானை உடைந்து, அதன் நீர், ஒரு பெரிய நீர்நிலையில் கலந்து விட, அந்த நீர்நிலையில் இருக்கும் தண்ணீரில், எந்தத் தண்ணீர் பானையில் இருந்த வந்த தண்ணீர், எனப் பிரித்தறிய இயலாததுபோல, பரமனில், ஜீவனின் ஆன்மா, இரண்டற இருப்பதை அறிவான்.

ஒன்றுமில்லாத பானை, ஒன்று உடைந்து போக, பானைக்குள் இருந்த பரப்பிற்கும், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பர வெளிக்கும், இடையே பிரிவேதும் இல்லை.

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு, அணைந்து போக, எங்கே போனது நெருப்பு?. அணைந்த நெருப்பும், எல்லாமுமான பரமனில் கரைந்தது போல.

முக்தி என்றால் என்ன?
மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, அல்லலோ அல்லல் படும் நிலைகளில் இருந்து, சுதந்தரம் பெறும் நிலையே முக்தி என்பதாகும். பொதுவாக இரண்டு வகையில், குறிப்பிடுகிறார்கள்: ஜீவன் முக்தி - அதாவது, மனிதர் உடலில் உயிர் இருக்கும் போதே, அடையும் முக்தி நிலை. விதேக முக்தி - உடலை விடுத்தபின், அடையும் முக்தி நிலை. ஜீவன் முக்தர், உடலோடு இருப்பதனால், இன்னும் அவருக்கு, தன் ஆன்மாவும், பரமனும், இரண்டாகத் தெரியும் நிலையில் இருப்பார். ஆனால், அது உண்மையல்ல என்பதையும் அவர் அறிவார். உண்மையான இறுதி நிலை, ஒன்றான நிலை, என்பதை அவர் நன்கு அறிந்திருப்பதால், மனக் கலக்கங்கள் இல்லை. என்றாலும், அவர் பரமனின் நிலையான நிலையை அறிந்திருந்தாலும், தன் உடலைத் துறக்கும் வரையிலும், அவர் பரமனாகவே மாறுதல் நிகழாது. (உடலோடு, சேர்ந்து, மறைதல் என்னும் நிலையும் சொல்லப்படுகிறது. இந்நிலை, வேதாந்தத்தைக் காட்டிலும் சித்தாந்தத்தில் வலியுறுத்தப் படுகிறது.)

உபநிடதங்களில் இருந்து குறிப்புகள்:
"அவன் எப்போது, எல்லா தளைகளில் (கர்ம வினைகள்) இருந்து விடுபடுகிறானோ, அக்காலம் வரை, தாமதமாகின்றது. அதன் பின், அவன் முழுமை அடைகிறான்."
சாந்தோக்ய உபநிடதம் VI. xiv, 2

"அவனுக்கு, இறுதியில், எல்லா மாயைகளும், அவற்றால் ஏற்படும் எல்லா குறைபாடுகளும் முற்றுப்பெறுகின்றன."
ஸ்வேதஸ்வதார உபநிடதம் 1.10

"எப்படி, நதிகளெல்லாம், கடலினில் கலந்திடுகையில், தம், நாம, உருவங்களை இழக்கின்றதோ, அது போல, தன்னறிவு பெற்றவன், பரமனை அடைகையில், தன் நாம, உருவங்களை இழக்கிறான்."
முண்டக உபநிடதம் III. ii.8


இப்போது, இரண்டு பகுதிகளுக்கு முன்னால், கே.ஆர்.எஸ் எழுப்பிய வினாக்களை, திரும்பிப் பார்க்கலாமா?

1. இந்த நிலையில் அவர்கள் வினைகள் அனைத்தும் ஓய்ந்திருக்குமா? சஞ்சித/பிராரப்தங்கள் முடிந்து விட்டிருக்குமா?
ஜீவன் முக்தருக்கு, முழுமையாக எல்லா வினைகளும் முடிந்திருக்காவிட்டாலும், உபாதிகளால் குறைபாடுகள் இல்லை. அவற்றால், தான் இரண்டாகத் தெரிவதை நன்கறிந்திருப்பார்.

2. உலகியலின் இயற்கைத் தேவைகளை (உண்பது/உறங்குவது) கடந்து விட்டிருப்பார்களா?
ஜீவன் முக்தருக்கு, உண்பது, உறங்குவது போன்ற உபாதிகள் முழுமையாக முடிவடையாவிட்டாலும், அவற்றால், யாதொரு குறைபாடும் இல்லை.

3. ஜீவன் முக்தியில் இருப்பவர், விதேஹ முக்தி எப்படி எப்போது பெறுவார் என்பது எப்படி தீர்மானிக்கப்படும்? ஜீவன் முக்தரே தீர்மானித்துக் கொள்வரா?
எல்லா கர்ம வினைகளும் முடிந்த பின்னால், எல்லா உபதிகளையும் இழந்து, தானும், பரமனும் வேறல்ல என்பது தெளிந்து, அந்த பரமனை அடைவார்.

Monday, November 17, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதிநான்கு

சென்ற பகுதியில் மறுமொழிகளால் நிறைத்தருளிய கண்ணபிரான் இரவிசங்கருக்கு வந்தனங்கள் பலப்பல. ஜீவன் முக்தரைப் பற்றி அறிந்திட, அவர் எழுப்பிய வினாக்கள், ஆத்ம போதத்தில், அடுத்து வரும் செய்யுள்களுக்கு, முன்னோடியாய் அமைந்திருக்கின்றன என்றால், வியப்பும் மேலிடுகிறது. இப்போது பார்க்கப்போகிற இரண்டு பாக்களுமே, ஜீவன் முக்தரைப் பற்றியவைதான்!

இந்தப்பாடல், ஜீவன் முக்தன் ஒருவன், எப்படி உலகத்தில் வாழ்வான் எனச் சொல்கிறது:
பா 51:
அனித்தவெளி யின்பிச்சை யற்றானா யான்மா
தானின்பித் திருத்தி தன்னையுற் - றனிசமுன்
தன்னொளி யாற்குடம் தன்னுள் விளக்கெனத்
தன்னுள்ளே தானொளிர்வன் றான்.
(சீர்களைப் பிரித்தபின்:)
அனித்தவெளியில் இன்ப இச்சை அற்றனாய் ஆன்மா
தான் இன்பித்தில் இருத்தி தன்னையுற்ற நிஜமுன்
தன்னொளியால் குடம் தன்னுள் விளக்கெனத்
தன்னுள்ளே தான் ஒளிர்வன் தான்.

பொருள்:
தன்னின் வெளியே இருக்கும் உலகத்தின் பால் ஏற்படக்கூடிய இச்சை அல்லது விருப்பம் தீர்ந்திருக்க,
அவ்விச்சைகளெல்லாம், இப்போது தன் ஆன்மாவின் மேல் அன்பாய் மாறியிருக்க,
அந்த 'தான்'(ஆன்மா) தரும் அணையா ஒளியால்,
குடத்தினுள் வைத்த விளக்குபோல, அவன், அவ்வான்மாவால் ஒளிர்வான்.

விளக்கம்:
பரமனின் ஒரு பகுதியாக ஒளிரும், விகாரமேற்படா ஆன்மா, எப்போதும் ஒவ்வொருவர் உள்ளும் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஜீவன் எப்போதுமே, தன்னின் வெளியிலேயே தான் கவனம் செலுத்தி வருவதால், தன் அக ஒளியை தானே கவனிக்க இயலுவதில்லை. ஜீவன் முக்தன், தன் உபாதிகளை எல்லாம் இழந்து வருவதனால், அவனால், வெளி உலகத்தின் ஈடுபாடுகளை புறக்கணித்து, தன் அகவொளியினை உணர இயல்கிறது.
வெளி இன்பங்களில் சிதறடிக்கும் உபாதிகளை இழந்தவன், தன் ஆன்மாவின் பெருமையைப் போற்றும் அன்பில் திளைத்திட,
அவனின் அகங்காரமிலாத மனதில், ஒளிர்ந்திடும் ஒளியினை உணர, அந்த ஒளியாகவே மாறிட, அம்மனதும் விழைகிறது.
எப்படி, கண்ணாடிக் குடத்தினுள், ஒளிதரும் விளக்கினை வைத்துவிட்டு, வெளியில் இருந்து பார்த்தால், அக்குடமே, ஒளியுடன் திகழ்கிறதோ, அதுபோல, அந்த ஜீவனும் ஒளிர்வான்.

கீதையில் கண்ணனும் உரைப்பான்: (2.55):
பார்த்தா, எப்போதும் தன்னுடைய மனதில் எழும் ஆசைகளைத் இழந்து, தனக்குள் மகிழ்ச்சியுடன் ஒருவன் இருப்பானேயானால், அவன் நிலையான ஞானம் அடைந்தவன் எனக் கூறப்படுவான்.

பா 52:
உபாதியுற் றானேனு மொட்டாவிண் போலவ்
உபாதித்தரு மங்களொ டொட்டா - னுபாதியில்லான்
முற்றறிவ னெனுமுனி மூடனென வாயுபோற்
பற்றறச் சஞ்சரிப் பான்.
(சீர்களைப் பிரித்த பின்:)
உபாதியுற்றா னேனும் ஒட்டா விண் போல
உபாதி தரும் அங்களோடு ஒட்டான் - உபாதியில்லான்
முற்றறிவன் எனும் முனி, மூடன் என வாயுபோல்
பற்று அறச் சஞ்சரிப் பான்.

பொருள்:
உபாதிகளைக் கொண்டவனாய் இருப்பினும், ஜீவன் முக்தன், விண்ணைப்போல, அந்த உபாதிகள் தரும் குறைபாடுகளோடு, ஒட்டாமல் இருப்பான். அவைகளால், அவனுக்கு மாறுதல்கள் ஏதும் ஏற்படா. உபாதிகள் முற்றிலும் அறும் வரை, வாயுபோல இப்பூவுலகில் ஒட்டாமல் சஞ்சரித்துக் கொண்டு இருப்பான்.

விளக்கம்:
உபாதி : எவையெல்லாம், நான், எனது, என்று ஜீவனை, நினைக்க வைக்கிறதோ, அவையெல்லாம் உபாதிகளாம். அதாவது இந்த உடல், அதன் அவையங்கள், நம் எண்ணம், நம் மனம், இவையும், இன்ன பிறவற்றின் விளைவால், ஆவதெல்லாமே, என்னால் எனக் கொள்கிறோம். நம்மோடு பிறந்த இவ் உபாதிகளை ஒவ்வொன்றாக இழக்க வேண்டும். எல்லா உபாதியையும் கழட்டி விட்ட பின், உபாதி இல்லா ஆன்மா - அது தான் தூய்மையான சச்சிதானந்த நிலையாகும்.

ஜீவன் முக்தனுக்கு, இன்னும் உபாதிகள் முழுமையாக முடிவடையவில்லை. அவற்றுக்கு அவன் பார்வையாளனாக இருப்பினும், அவைகளோடு, தாமரை இலைத் தண்ணீர் போல, ஒட்டாமல் அவன் இருப்பான். உபாதிகளால் ஜீவனில் ஏற்படும் குறைபாடுகளான, மறு பிறப்பு, நிலையிலாமை, இறப்பு போன்றவை ஜீவன் முக்தனுக்கு இல்லை.

விண்ணைப்போல : பொதுவாக வானம், வெளிர் நீல நிறத்தில் தெரிகிறது. சில நேரம், கருமைத் தூசிகளாலோ, அல்லது கரும் மேகங்களாலோ, கருமையாகவும் தெரிகிறது. ஆனால், ஆகாயத்திற்கு, இதனால், பாதிப்போ, அல்லது மாற்றமோ, இல்லையே. விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையே இருக்கும் பார்வையில் தான் பிழை. விண்ணுக்கேதும் குறை இல்லை. அதுபோல, ஜீவன் முக்தர், உண்ணுவது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், அதனால், அவர்களுக்கேதும் குறைவில்லை.

மூடன்: ஜீவன் முக்தர், யார் என்ன சொன்னாலும், போற்றினாலும் சரி, தூற்றினாலும் சரி, அவர், யாதொரு மாறுதலும் அதனால் அடையாமல், அமைதியாக அதைக் கேட்டுக்கொள்வார் - கிட்டத்தட்ட மூடன் போல. எல்லாவற்றில் அவர் பிரம்மத்தினையே பார்ப்பதால், தனக்காக, ஏதையும் செய்ய இயலார்.

மேலும்:
ஜீவன் முக்தனுக்கு, பிராப்த கர்ம வினைகள், இன்னமும் இருந்திடலாம் என்றும், இவ்வினைகள் முழுவதும் முடியும் வரை, நிலையான, இறுதியான முக்தி அடைய இயலாது என்றும் சிலர் கருதுகிறார்கள். இன்னும் சிலரோ, ஜீவன் முக்தி என்னும் நிலையே, இறுதியான நிலை. இந்நிலையிலேயே, எல்லா வினைகளும் அற்று இருப்பார்கள் என்கிறார்கள். இப்படி ஏதும், பொதுமைப்படுத்தாமல், ஒவ்வொரு ஞானிக்கும், ஒவ்வொரு விதமாக, இறைவனின் திரு உளத்திற்கு ஏற்றால் போல் அவ்வாறு அமைந்தது எனக் கொள்ளவே வேண்டும். எதுவாக இருப்பினும், உபாதிகளை இழந்து, எல்லாமும் ஆன பரமனை அடைந்து, துவங்கிய இடத்தை, மீண்டும் அடைவதுதான் ஜீவனின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அடுத்த பகுதியில், ஜீவன் முக்தன் பூவுலகை அகலும் இறுதியான நிலையினையும், அவன் பரமனை அடைவதைப் பற்றியும், ஆத்ம போதம் செல்லுவதைப் பார்ப்போம்.

Friday, November 14, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதிமூன்று

பா 49:
சீவன் முக்தன் வித்வான் தேருவதன் முன் தன்னை
மேவும் உபாதிகுணம் விட்டுடனே - மேவுவான்
தன்னுரு சச்சித் இன்பத் தாங்கிடும் வண்டினுருத்
தன்னையுறல் போலத் தறி.

சீவன் முக்தன், அவன் ஆன்மஞானி ஆவதற்கு முன்னம் இருந்த உபாதிகளை கைவிட்ட உடனேயே, சச்சிதானந்த நிலை தனை அடைவான். வண்டு தன், புழு போன்ற உருவத்தினை விட்டு, பூச்சி வடிவத்தை அடைவதைப்போல.

ஜீவன் முக்தர் - என அழைக்கப்படுபவர், முக்தி என்னும் நிலையினை அடைந்த பின்னரும், உலக நன்மை பொருட்டு, தம் பூவுடலை துறக்காமல் இருப்பராவர். எனினும், அவருக்கு, அவருடைய ஞானத்தினால், அவர் சச்சிதானந்த சொருபீயாக இருப்பதினால், அவரே பிரம்மமாகவும் இருப்பவர். அவருக்கு முந்தைய உபாதிகள் ஏதும் அப்போது இல்லை. அதாவது, அவர் அந்நிலையை எட்டுமுன், அவருக்கு இருந்த, உடல், புலன் உணர்வுகள், மனம், போன்ற உபாதிகள் இல்லை.
எப்படி தங்கள் புழு போன்ற தோற்றத்தில் இருந்து, பறக்கும் பூச்சி போன்ற தோற்றத்திற்கு மாறிட, தங்கள் தோற்றத்தை, வண்டு போன்ற பூச்சிகள் இழக்கின்றனவோ, அதைப்போல.

பா 50:
மோகக் கடல் கடந்து மூளாசை கோபமுதல்
ஆகும் அரக்கர் அறக்கொன்று - யோகி
அமைதியொடு கூடியான் அவ்வின்பத்
தமைந்து ஒளிர்வானென்றே அறி.

மோகமெனும் கடலினைக் கடந்து, ஆசை, கோபம் எனும் அரக்கர்களைக் கொன்றபின், யோகியானவன், அமைதி என்னும் சாந்த நிலையினை அடைந்து, அது தரும் பேரின்ப நிலையில் ஒளிர்வான்.

மோகம், ஆசை, கோபம் என்னும் மூன்று அரக்கரையும் வெல்லுதல் யோகியின் முதற்செயலாகும். அவ்வாறு வென்றவன், எளிதாக, தான் யாரென்று அறியாமற் மறைக்கும் மாயைதனை வெல்வான். அறியாமை அகன்றால், பின் இனியெல்லாம் ஞானமே அல்லவோ. அங்கு, அமைதியைத் தழுவிதல் என்பது, "சும்மா இரு சொல்லற", என்பதைச் சொல்லுகிறதோ! அந்நிலையில், நான் யார் என வினவிட, அவ்வினவலின் தோன்றலின் ஆதாரத்தினை ஆராய்ந்திட, கிட்டாதோ யாதும்!.

(கடல் கடந்து, அரக்கரைக் கொன்று, பிரிந்த மனைவியொடு சேர்ந்து, ஒளிர்ந்தான் இராமனும்!.)

இந்தத் தொடரில், இரமண மகரிஷி அவர்கள், வெண்பாக்களாய் வடித்த, ஆத்மபோதம் தனைப் பார்த்து வருகிறோம். அடியேனுக்குப் புரிந்த வரையில், செய்யுட்களைப் பிரித்துப் பொருள் தேடி வருகிறேன். பிழைகளைச் சுட்டினால், திருத்திட ஏதுவாய் இருக்கும். இதுவரை வந்த பகுதிகளை இங்கே காணலாம்.

Sunday, November 09, 2008

எல்லாம் கண்ணனுக்கே!

கண்ணனைப் பாடுவதென்றாலே, எப்போதுமே சொல்லிலடங்கா சுகம். கண்ணன் உருவம் என்றதுமே, நமக்கு பற்பலத் தோன்றும். ஒன்றா, இரண்டா, நொடியில் சொல்லி முடிக்க. ஓராயிரம் வேண்டுமே!. எதைச்சொல்ல, எதை விட!
காற்பாத விரலை வாயிலே சுவைக்கும் ஆலிலைக் கண்ணன் முதல், பார்த்தசாரதியாய், கர்மயோகம் உரைக்கும் கண்ணன் வரை, அவன் புரிந்த விந்தைகள்தான் எத்தனை, எத்தனை!. அவ்விந்தைகளில் மயங்கி, அவன் நினைவன்றி வேறொன்றும் அறியா கோபியர் போல், அவன் நினைவில் திளைத்திடும் சாதகம் போல் வேறொன்றோ, சொல் மனமே!.

இங்கே, பாபநாசம் சிவன் அவர்கள், மிக எளிதாக, கண்ணனைப் பாடுகிறார் பாருங்கள். கண்ணன் பாடலுக்கு, கர்ணரஞ்சனி இராகம்!

இராகம் : கர்ணரஞ்சனி
இயற்றியவர்: பாநாசம் சிவன்

எடுப்பு
தீன சரண்யனே, தேவகி பாலனே,
திருவருள் புரிவானே!

தொடுப்பு
கானவிலோலனே, கௌஸ்துப மாலனே,
கனகாம்பரதர வனமாலாதரனே,

முடிப்பு
சியாமள ரூபனே, சரசிஜ நேத்ரனே,
சகலபுவன பரிபாலனே சீலனே,
மாமணி வண்ணனே, மரகதக் கண்ணனே
மங்கையர் மனங்கவர் மாயனே, ஆயனே,
(தீன சரண்யனே, தேவகி பாலனே,
திருவருள் புரிவானே.)

இப்பாடலை திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ பாடிட இங்கு கேட்கலாம்.

தீன சரண்யனே தேவகி பாலனே...

இம்முறை, பாடலுக்கு விளக்கம் சொல்லும் இன்பத்தை, உங்களிடமே விட்டுவிடுகிறேன்!. வாருங்கள் அன்பர்களே!. பாடல் வரிகளுக்கு, தங்கள் விளக்கம் வேண்டும். குறிப்பாக - கானவிலோலன், கௌஸ்துப மாலன், கனகாம்பரதர வனமாலாதரன், சியாமள ரூபன், சரசிஜ நேத்ரன், இப்படியெல்லாம், சிவனார் புகழ்வதென் பொருளென்னவோ!. ஒருவரிப் பொருள்தான் என்றில்லை, கதையாக இருந்தாலும் சொல்லலாம்!

எல்லாமுமே கண்ணனுக்கே போய்ச் சேரட்டும்.

Friday, November 07, 2008

இறையருள் - கேள்வி பதில்

இறைவன் உருவம் கொண்டவனா, உருவம் அற்றவனா?
உருவத்தில் பார்ப்பவர்களுக்கு, உருவம் கொண்டவன், உருவத்தையும் தாண்டி, அனைத்திலும் பார்ப்பவர்களுக்கு, உருவமற்றவன். தியாகராஜர் சொல்லுவது போல், உண்டு என்பவர்களுக்கு அவன் உண்டு. இல்லை என்பவர்களுக்கு அவன் இல்லை. ஏனெனில், அவர்களால் கண்டு கொள்ள இயல வில்லை.

அதெப்படி இரண்டாகவும் இருக்க முடியும்?
ஏனெனில் இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான். அவன் இல்லாத இடம் இல்லை. இரண்டு என்று மட்டும் இல்லாமல். எல்லாமுமாக. ஒன்றே எல்லாமுமாக. திறக்கமுடியாத பூட்டு என்பது இல்லையே. சரியான சாவியை கண்டுபிடிக்க முடியாதவர் மட்டுமே உண்டு. எங்கும் இறைவன் இருக்க, அவனைத் தேடி எங்கும் அலைவார் உண்டு. தங்கும் அருள் கிட்ட, மிஞ்சும் அன்பு வேண்டும். அதற்கு அவனிடம் தஞ்சம் கொள்வதே வழி.

இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான், என்றால், ஏன் சில இடத்தில் இன்பங்கள், சில இடத்தில் துன்பங்கள்?
இறைவன் எங்கும் நிறைந்திருந்திருந்தாலும், நாம் இறைவனை விட்டு, பிரிந்தல்லவோ இருக்கிறோம். இறைவனோடு இரண்டற கலக்காதவரை, துன்பம் இருக்கத்தான் செய்யும்.

அப்படியானால், மண்ணுலகில் இன்பம் இல்லையா?
மண்ணுலகிலும் இன்பம் உண்டு. இந்த உடல் உயிரை சுமக்கையிலும் இன்பம் உண்டு. விண்ணுலகுக்கு சென்று சொர்கத்தனை அடைந்தால்தான் இன்பம் என்றில்லை. விண்ணுலகத்தை விண்ணில் காணாமல், தன்னில் காண்பவரும் உண்டு. அப்படிப்பட்டவர்கள், 'இகத்தில் பரம்' என்பார்கள். பரமனை தங்கள் அகத்தில் கண்ட அவர்களின், உடலுக்கும் சிதைவில்லை. அவர்கள் முக்தி அடைந்தாகும், உடலோடே மறைவார்கள். இராமலிங்க வள்ளலார் சுவாமிகள் போல.

இறைவனை அறிவது எப்படி?
இறையருள் பெறுவதன் மூலம்.

இறையருளினைப் பெறுவது எப்படி?
By Awareness. மனதை திறந்து வைப்பதன் மூலம், மனதில் அன்பு தூர்ந்திட, அருள் தானாகக் கிடைக்கும்.

மனதை திறந்து வைப்பது என்றால் என்ன?
ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்வோம். தினமும் காலையில் உங்களுக்கு வாக்கிங் செல்வது பழக்கம். இன்றைக்கு நீங்கள் நடந்து செல்லும் பொழுது, அந்தப் பக்கத்தில் இருந்து, இன்னொருவரும் நடந்து வர, ஒரு ஹலோ சொல்கிறீர்கள். அவரும், புன்னகைத்து, ஹலோ சொல்கிறார். ஆனால் அது, அந்த ஹலோவுடன் நின்று விடுகிறது. அடுத்த நாள், மீண்டும் அவரை பார்க்கிறீர். இப்போது, அது ஹலோவைத் தாண்டி, விசாரிப்பில் தொடர்கிறது. இன்னொரு நாள், விசாரிப்பு நீள்கிறது. இப்படியே போகப்போக, அவருடனான நட்பு, பல்கிப் பெருகுகிறது. இப்போதெல்லாம், வாக்கிங் கிளம்ப, செருப்பை மாட்டிக் கொள்ளும்போதே, அவரைப்பற்றிய நினைப்பும், கூடவே வந்து ஒட்டிக் கொள்கிறது. இதெல்லாம் எப்படி நடந்தேறியது? திறந்து வைத்த மனதால்.

மனதை திறந்து வைத்தால், இறையருள் எப்படிக் கிடைக்கும்?
மேலே சொன்ன உதாரணத்தில், மனது திறந்து வைக்கப்படாமல் இருந்திருந்தால், என்னவாகியிருக்கும்?. நம்மைச் சுற்றியே நாமே எழுப்பிக்கொள்ளும் ஈகோ சுவர்கள், நான், எனது, நானே பெரியவன், போன்ற தற்பெருமை நினைவுகள் வந்து மனதை ஆக்ரமித்துக் கொள்ளத் தொடங்க, அந்த புதிய நண்பர் ஹலோ சொன்னாலும், சற்றே முகம் கடுகடுக்க, அங்கேயே முறிந்தது தொடர்பு. இதை, வேதாந்தம், அகங்காரம் - எனச் சொல்லும். இறையருள் எப்போதுமே இருந்து வந்தாலும், இந்த அகங்காரம் இருக்கும் வரை, மனதுக்கு, அதனால் ஒரு பயனும் கிட்டுவதில்லை. ஆனால், மனதை திறந்து வைத்தாலோ, அகங்காரத்தின் ஆளுமை குறையக் குறைய, இறை அருளானது அன்பாக இதயத்தில் மலர்கிறது. அந்த அன்பே, இறைவனை அடைந்திட வழி வகுக்கிறது. இந்த எளிய வழியைத் தான் பக்தி யோகம், ஞான யோகம் என்றும், கர்ம யோகம் என்றும் பலவாறு சொல்லி வைத்தனர் பெரியோர்கள். உண்மையில் எல்லாமே ஒன்றுதான். இறைவன் யாரெனவே அறியாமல், இறைவனிடம் அன்பு செலுத்த இயலுமா? அல்லது, அன்பு செலுத்தாமல், இறைவனை அறியத்தான் இயலுமா? நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும், அன்பானது வியாபித்து இருக்க, அதுவே கர்மம். இவை எல்லாவற்றுக்கும் துவக்கப் புள்ளியாக, மனதினை தூய்மைப் படுத்துதல் என்னும் யோகம் ஆதாரமாய் அமைகிறது. மனதில் அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என நான்கும் களைந்து, மனத்துக்கண் மாசிலனாய் சாதகம் செய்திட, அவ்வறமே அகத்தைக் காக்கும், பின் ஜகத்தைக் காக்கும்.

இறைவன், இறைவன் என்று பிதற்றுகிறார்களே, இறைவனைக் காணாமலேயே பிதற்ற இவர்களென்ன பித்தர்களா?
ஆம், பித்தர்களே. இறைவனின் மீது பித்துப் பிடித்த பித்தர்களே. இவர்கள் இறைவனையும், 'பித்தன்' என்பார்கள்!. அறிமுகம், நட்பாகி, நட்பு, உறவாகி, உறவு, உற்ற துணையாகி வழிநடத்த, அந்த இறை அன்பு, அவனில் மேல் ஏற்படும் பித்தே, பின் எல்லாமுமாகி, எல்லாவற்றையும் வழிநடத்த, வழிவகுக்கும்.

மெய்யியலில் என் புரிதல்களை பிதற்றியிருக்கிறேன், பொறுமையுடன் படித்தமைக்கு நன்றிகள்!

Sunday, November 02, 2008

மறுபடியும் கருவடையும் குழியில் தள்ள வேண்டாம்!

கோபாலகிருஷ்ண பாரதியின், நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் மிகவும் புகழ் பெற்றவை. நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை ஒரு தொடராகவே தந்திட நெடுநாளாகவே விருப்பம் இருப்பினும், அப்பெரிய சாதகத்திற்கு தயார் செய்து கொள்ளவே இன்னும் பல காலம் செல்ல வேண்டியிருப்பதால், அவற்றை பின்னர் தருகிறேன். அவற்றைத் தவிர, தனிப்பாடல்களையும், கோபாலகிருஷ்ண பாரதி இயற்றி இருக்கிறார்.
அவற்றில் ஒன்றான 'திருவடி சரணம்' பாடலை இங்கு பார்க்கப்போகிறோம்.

கோபால கிருஷ்ண பாரதியின் அனைத்து பாடல்களுக்குமான வரிகளை இங்கு காணலாம்.

இந்தப் பாடல், எனக்கு மிகவும் பிடித்த பாடல். குறிஞ்சி எனும் பாடல் தொகுப்பில் நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடி முதலில் கேட்டது. முசிரி சுப்ரமணிய ஐயர், எம்.எஸ் அம்மா, மதுரை மணி ஐயர் போன்றோரின் கச்சேரிகளில் இடம்பெற்ற பாடல். வயலின் வாசிக்க கற்றுக்கொள்ளும் போது, வர்ணத்தினை தொடும் பொழுதே, இந்தக் கீர்த்தனையை சொல்லிக் கொடுக்கும் படி எனது ஆசிரியரிடம் கேட்டிட, அவரும் என் ஆர்வத்திற்கு அணை போடாமல், சொல்லிக் கொடுக்க முயன்றார். ஆனால், என்னிடம் போதிய பயிற்சி இன்மையால், அனுபல்லவியிலேயே நின்றுவிட்டது! (இந்தப் பாடல் அனுபல்லவியில் தொடங்கி, அதற்கு அப்புறம் பல்லவியில் தொடர்வது வழக்கம்)

இராகமோ, காம்போதி. 28ஆவது மேளம் ஹரிகாம்போதியின் ஜன்யம். இங்கு நிஷாதம், ககாலி நிஷாதம் (நி2). ஆகையால், சதுஸ்ருதி த்வைதம்(த2) ஸ்வரஸ்தானத்திற்கும், ககாலி நிஷாதம் ஸ்வரஸ்தானத்திற்கும் இடைவெளி அதிகம்.
ஆரோகணத்தில், நிஷாதம் இல்லை, ஆனால் அவரோகணத்தில் உண்டு. ஆகவே பத (ப-ஸ்த), நித (நி-நித) சஞ்சாரங்களில் நிறைந்திருக்கும் கமகங்கள் இசைக்கு செழுமை சேர்ப்பவை.

மா - கா - பா - தா - ஸ்அ ; - ஸ் ரீகா | ரிஸ்ஸ்த - ரீஸ்நீ - தா - பா ; தா ||
ம - று - ப - டி - யும் - கருவ | டையும் - கு.ழி - யில் - தள்.ளி ||

பா - தா - ஸ்அ - ஸ்நி - தா - பம - பா ; | தா ; ; பா - ; ; ப நி தா ||
வ - ரு - த்த - ப - டு - த்த - வேண் - | டா - ம் . . . . என்.னை ||

நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இந்த சுட்டியில் கேட்கலாம்.

பல்லவி
திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்,
தேவாதி தேவா நின் (திருவடி சரணம்...)

அனுபல்லவி
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம் - என்னை
மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி
வருத்தப்படுத்த வேண்டாம்
பொன்னம்பலவா நின் (திருவடி சரணம்...)

சரணம்
எடுத்த ஜனனம் கணக்கெடுக்கத் தொலையாது
இரங்கி மகிழ்ந்து தேவரீர்
வேணுமென்று கொடுத்த மானிட ஜன்மம்
வீணாகி போகுதென்
குறை தீர்த்த பாடுமில்லையே!!

அடுத்து வந்த என்னை தள்ளலாகாது
அரஹரவென்று சொன்னாலும் போதாதோ!!
தடுத்து வந்தருள சமயம் கோபாலக்ருஷ்ணன்
சந்ததம் பணிந்து புகழ்ந்து போற்றும் (திருவடி சரணம்...)

(அடுத்து வருதல் : இடையறாது, தொடர்ந்து வருதல்)
பொன்னம்பலம் தன்னில் பொதுநடம் ஆடும் சபேசனே, உன் திருவடி சரணம் என்றிங்கு நான் நம்பி வந்தேன்.
என்னை இதற்கு மேல், மீண்டும் மீண்டும் கருவடையும் கருங்குழியில் தள்ளி, வருத்தப்படுத்த வேண்டாம், ஐயா.
இப்பிறப்புக்கு மேல், இனி ஒரு பிறப்பில்லை எனும் பேறினைத் தாரும் ஐயா. அதற்காகவே, உங்கள் திருவடியே சரணம், என நான் நம்பி வந்தேன்.

புல்லாகி, பூண்டாகி, இன்னும் என்னவெல்லாம் என கணக்கெழுத முடியாத அளவிற்கு பிறப்பெல்லாம் பிறந்திளைத்தேன். தேவரீர், உம்மை இறைஞ்சிக் கேட்டு, இம்மானிட ஜன்மம் தனைப் பெற்றேன்.
அரிதாய் கிடைத்த இம்மானிடப் பிறப்பு நாளொரு வண்ணம், வீணாகி அல்லவோ போகின்றது.
எனினும், ஐயா, என் குறை இம்மியளவும், தீர்வதாகத் தெரியவில்லையே.
பிறந்த பிறப்பறுக்கும் பெம்மானே, என் பிறவிச் சுழலைதனை உடைத்திடுவாயே.

உன்னை இடையறாது, தொடர்ந்து வந்திடும், என்னை நீ ஒதுக்கித் தள்ளலாகாது.
உன்னை அரஹர வென சொன்னாலே, போதுமல்லவா.
சொல்கிறேன் நானும், அரகர, ஹரஹர, அரஹர.
ஜெய ஜெய சங்கர, ஹரஹர சங்கர.
ஐயா, என்னை தடுத்தாட்கொள்ள, நீயும் வந்தருள நற்சமயம் ஈதய்யா.
கோபாலகிருஷ்ணன், உன்னை எப்போதும்,
புகழ்ந்து, பணிந்து, போற்றி, திருவடி சரணம் என,
உன் திருவடிகளில், உன் திருவருளுக்காக இறைஞ்சிப் பணிகிறேன் ஐயா.

திருமந்திரம்:
அரகர என்ன அரியதொன்றில்லை
அரகர என்ன அறிகிலர் மாந்தர்
அரகர என்ன அமரரும் ஆவர்
அரகர என்ன அறும் பிறப்பன்றோ.
(அரகர எனச்சொல்ல, அடைய அரிதானது ஏதுமில்லை. எனினும், அதைச்சொல்ல அறியாரே. அரகர எனச் சொல்ல, அமரராய் ஆவாரே, ஏனெனில், பிறப்பறுக்கும், பெரும் துயர் முடிக்கும், அருஞ்சொல் தானே அரகர.)

Wednesday, October 29, 2008

இறைவன் எங்கே தன்னை வெளிப்படுத்துகிறான்?

நரேந்திரனின் பயிற்சிக் களம் - நான்காவது பகுதியினை எட்டியிருக்கிறோம், மெய்யன்பர்களே. சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றை தொடர்ந்து படிக்கலாமா.
கடந்த பகுதிகளின் சுட்டிகள்:
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
----------------------------------
நரேந்திரனின் கூர்மையான மனது, இராமகிருஷ்ணரின் அறிவுரைகளில் இருந்த மிக நுண்ணிய செய்திகளையும் ஆழ்ந்து கவனித்து, அவற்றின் சாரத்தினை தன்னுள் வாங்கிக் கொண்டது.
ஒருநாள், இராமகிருஷ்ணர், வைணவத்தின் மூன்று முக்கிய கூறுகளாக - "இறைநாம அன்பு, இறையடியார் தொண்டு, எல்லா உயிர்களுடத்திலும் அன்பு" என குறிப்பிட்டார். மேலும், அதோடு சேர்த்து, எல்லா உயிர்களுக்குமான தொண்டு எனவும் குறிப்பிட்டார். அன்பு - தொண்டு; இதில் இருந்த வேறுபாட்டை மற்ற மாணவர்களால், அவ்வளவு எளிதாக உணர இயலவில்லை. நரேந்திரனோ, இளம் மாணவர்களை பின்னர் அழைத்து, அவர்களிடம், 'நம் குரு, என்ன அழகாக, அத்வைதத்தின் பற்றற்ற நெறியினையும், த்வைதத்தின் அன்பு நெறியையும், ஒரு சேர இணைத்து விட்டார் பாருங்கள்' என்று சொல்லி விளக்கினார்:
"அத்வைதமும், த்வைதமும் - ஒன்றுக்கு ஒன்று முரணானதே அல்ல. த்வைதம் உரைப்பவன், தன் மனதை கல்லாக்கிக் கொள்ள வேண்டியதில்லை, உலகை விட்டு ஒதுங்க வேண்டியதில்லை. பிரம்மம் எல்லாவிடத்திலும் இருப்பதால், அத்வைதம் உரைப்பவன், எல்லோரிடமும் அன்பு செலுத்தி, தொண்டும் ஆற்றிடத்தானே வேண்டும். எல்லோரிடத்திலும், அன்பு செலுத்த, அவர்களிடத்தில் இருக்கும் இறையைப் பார்த்தால் இயலுமல்லவா.", என்றதுடன் தொடர்ந்து நரேன் சொல்கிறார்:
"இறைவன் விருப்பம் அதுவானால், ஒருநாள், இந்த பேருண்மையை, இந்த உலகம் முழுமைக்கும் பறை சாற்றுவேன். அதனை எல்லோருக்கும் பொதுவான உடமையாக்குவேன்."
சில ஆண்டுகளுக்குப் பின் இதே கருத்தினை கவிதை ஒன்றிலும் வெளிப்படுத்துவார் - அதன் இறுதி வரிகளில் இருந்து:
இறைவன் எங்கே தன்னை வெளிப்படுத்துகிறான்?:
எவன் ஒருவன், இயல்பாக எல்லா உயிர்களிலும் ,
அன்பினை வெளிப்படுத்துகிறானோ, அவனிடத்தில்!
அவனே இறைவனின் உண்மையான தொண்டன்.

இராமகிருஷ்ணர், கிட்டத்தட்ட மீண்டும் ஒருமுறை, இந்து மதத்தின் அடிப்படைகளை நரேந்திரனுக்கு கற்றுத்தந்தார் எனச் சொல்லலாம். நரேன், தனது அன்னையின் மடியில் கற்ற அரிச்சுவடிகளெல்லாம், அவரது கல்லூரி வாசத்தில் கரைபுரண்டிருக்க, இராமகிருஷ்ணரின் ஈடுபாட்டிற்குப்பின், இந்து மதம், வெறும் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் கொண்டது அல்ல, என உணர்ந்தார். அது ஒரு உள்ளார்ந்த அனுபவம், ஆழ்ந்தது, உள்ளடக்கியது, எல்லார் நம்பிக்கைகளையும் மதிப்பது என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காண்பதே அதன் உயர்ந்த குறிக்கோள் எனவும் உணர்ந்தார்.

மதம் என்பது ஒரு இலட்சியப்பாதை என்றும், அது ஜாதி, மற்றும் இனம் போன்ற வேறுபாடுகளைக் கடக்க வேண்டும், காலம், இடம் போன்ற கட்டுப்பாடுகளை உடைக்க வேண்டும் என்றும் கற்றார். ஒருவர், குறியீடுகள் மூலமாக, தனது இஷ்ட தெய்வத்தை வணங்குதல் மூலமாக, எல்லாமுமாய் இருக்கிற பரம்பொருளை இறுதியில் எட்டிட முடியும் என்பதையும் கற்றார். இராமகிருஷ்ணர், தானே, ஒரு எடுத்துக்காட்டாய், நரேந்திரனுக்கு, எப்படி ஒரு மனிதன், தன் உயரிய உன்னத இலக்கினை எட்டிட இயலும் - என்பதனைக் காட்டினார்.

ஒருநாள் ஆனந்த நிலையில், இராமகிருஷ்ணர், அன்பர்களிடம் இவ்வாறு சொல்கிறார்: "பல்வேறு கருத்துக்களும், பல்வேறு வழிமுறைகளும் இருக்கத்தான் செய்கிறது. அவை எல்லாவற்றையும் நானும் கண்டிருக்கிறேன். இவை எல்லாம் எனக்குப் பிடிப்பதும் இல்லை. வெவ்வேறு நம்பிக்கை கொண்ட அன்பர்கள் தங்களுக்குள்ளே, வாக்குவாதமும், வீண் சண்டையும், செய்கின்றனர். ஒன்றை உங்களுக்கு நான் சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் என் மக்கள். இங்கே அன்னியர் யாரும் இல்லை. முழுமையில் நான், இறையையே பார்க்கிறேன். அம்முழுமையின் பகுதியாய், நான் இருப்பதையும் பார்க்கிறேன். அவனே அரசன். அடியேன் அவன் வேலையாள். மேலும், சில சமயம், நான் அவனாகவும், அவன் நானாகவும் காண்கிறேன்."

நரேந்திரனை ஒப்பிடுகையில் இராமகிருஷ்ணர், "நான் பல அன்பர்கள் இங்கு வருவதைப் பார்க்கிறேன். சிலரைப் பார்க்கும் போது, பத்து இதழ் தாமரை போல் தோன்றும். இன்னும் சிலரை பார்க்கும்போது, நூறு இதழ் தாமரை போல் தோன்றும். ஆனால், நரேந்திரனோ, எல்லா தாமரைகளிலும், ஆயிரம் இதழ் தாமரை. மற்றவர்கள் பானை அல்லது கூஜா போன்றவர்கள், என்றால், நரேந்திரனோ பெரிய தண்ணீர் தொட்டி. மற்றவர்களோ, குளம் அல்லது குட்டை என்றால், நரேந்திரனோ, பெரிய நீர்தேக்கத்தைப் போன்றவன். நரேந்திரன், கூட்டங்களில் என் அருகாமையில் இருக்கும்போது, பெரும் சக்தியை உணர்கிறேன்." என்பார்.

தக்ஷினேஸ்வர் வனத்தின் மரங்களடியில் தியானம் மேற்கொண்டார், நரேன். இதே இடத்தில் தான் முன்பு இராமகிருஷ்ணரும், தியானம் போன்ற ஆன்ம பயிற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இவ்விடத்தில் தொடர்ந்து, தியான பயிற்சிகளை மேற்கொள்ள, அவரது குண்டலினி சக்தி எழுப்பபெற்றார் என்றும், மேலும் சில ஆன்மீக தரிசனங்களைப் பெற்றார் எனவும் சொல்லப்படுகிறது. ஒருமுறை, கிரிஷ் என்னும் சக தொண்டரோடு சேர்ந்து, தியானம் செய்ய அங்கு சென்றார். அன்று அந்த இடத்தில், நிறைய கொசுக்களாக இருந்தது. கிரிஷ் அவர்களால், கொசுகளின் தொந்தரவில் இருந்து, மனதை ஒருநிலைப்படுத்துவது சிறிது கடினமாக இருந்தது. அதே சமயத்தில், அருகில் இருந்த விவேகானந்தரை கவனித்தால், அவரோ, உடனேயே, ஆழ்ந்த தியானத்தில் சென்றிருந்தார் - அவரது உடல் முழுவதும் கொசுக்கள் போர்வையாய் மூடி மொய்த்துக் கொண்டிருப்பினும்!

ஒரு சில நாட்களில், நரேந்திரனுக்கு, தன் இலக்கினை அடையும் தாகம் வெகுவாக உயர்ந்திருந்தது. ஒரு நாள் இரவு முழுதும், கொல்கத்தா கோசிப்பூர் தோட்ட வீட்டினை ஓயாமல் சுற்றி வந்தவாறு, இராம நாமத்தினை உச்சரித்துக் கொண்டிருந்தார். விடியற்காலையில், இராமகிருஷ்ணர், நரேனின் குரலைக் கேட்டு, உள்ளே அழைத்து, 'குழந்தாய், ஏன் இப்படியெல்லாம் செய்கிறாய், பொறுமை இழப்பதால், என்ன பயன்?.' என்று கேட்கலானார். ஒரு நிமிடம் தாமதித்து விட்டு, இப்படியும் சொன்னார் : " நீ இப்போது செய்வதை, நான் 12 வருடங்களுக்கு செய்து வந்தேன். என் தலையில் அப்போது, பெருத்த புயல் வீசியது போலிருந்தது. ஒரு நாள் இரவில் என்ன இயலும்?' என்றார்.

இப்படிச் சொன்னாலும், இராமகிருஷ்ணருக்கு உள்ளூர, விவேகானந்தரின் ஈடுபாட்டில் மகிழ்ச்சியே. தனக்குப்பின் தன் சீடர்களை, நரேந்திரனே தலமையேற்று, வழிநடத்த வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. அதை வெளிப்படுத்தவும் தயங்கியதில்லை. "அவர்களை உன்னுடைய கவனிப்பில் விட்டுப்போகிறேன். அவர்களிடம், ஆழ்ந்த அன்பு செலுத்தி, அவர்கள் ஆன்ம நெறியில், என் இறப்புக்குப்பின்னரும் நடந்திட பார்த்துக்கொள்" என்றார் நரேந்திரனிடம். இளம் சீடர்களிடம், நரேந்திரனை தங்கள் தலைவராகக் கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். மேலும், ஒருநாள், இராமகிருஷ்ணர், அவராகவே, இளம் சீடர்களுக்கு, துறவறத்தினை தொடங்கி வைக்க, பின்னாளில் விவேகானந்தரால் தொடங்கப்பட இருக்கும் இராமகிருஷ்ண மடத்திற்கு, அன்று அவரே பிள்ளையார் சுழியும் இட்டார்.

Friday, October 24, 2008

இயல் இசையில் : திருப்புகழ்

இராகம் : ஹூசைனி
தலம் : திருச்செந்தூர்

தன தனன தனன தந்தத் தனதான

இயல் இசையில் உசித வஞ்சிக் கயர்வாகி

இரவுபகல் மனது சிந்தித் துழலாதே

உயர்கருணை புரியும் இன்பக் கடல்மூழ்கி

உனை எனதுள் அறியும் அன்பைத் தருவாயே


மயில் தகர்கலிடையர் அந்தத் தினைக் காவல்

வனஜகுற மகளை வந்தித் தணைவோனே
கயிலை மலை யனைய செந்திற் பதிவாழ்வே

கரிமுகவன் இளைய கந்தப் பெருமாளே.

-----------------------------------
தகர் : ஆடு - முருகனின் மூன்று (மயில், ஆடு, யானை) வாகனங்களுள் ஒன்று; மூன்றையும் வாகனங்களாக கொண்டதற்கு பொருள் மூன்று மலங்களையும் (ஆணவம், மாயை, கன்மம்) அடக்கி ஆளுதலைக் குறித்தலாம்.
வனஜ : தாமரை/திருமகள் (வனஜம் - தாமரை ; தாமரையில் வீற்றிருப்பவள் திருமகள்- ஆகுபெயர்) (பூவெனப் படுவது பொறிவாழ் பூவே)
---------------------------
இந்த திருப்புகழ் பாடலை திரு.ஜேசுதாஸ் பாடிட இங்கு கேட்கலாம்: (PopUp விண்டோவில்)
(பிற்சேர்க்கை : இங்கு ஜேசுதாஸ் பாடுவது, ஹிந்தோளம் போல இருக்கிறது)
[play]
இந்தச் சுட்டியில் இருந்து உங்கள் கணிணிக்கு இறக்கிக் கொள்ளலாம்:


---------------------------

அருணகிரியார் சொல்கிறார்:
யலிசையில் சிறந்து விளங்கும் பெண்டிரின் நினைவில், இரவு பகலெல்லாம், வேறொரு நினைவும் இல்லாமல் அலைந்தேனே. அப்படிப்பட்ட எனக்கும், நீயும் கருணை புரிந்தாயே கந்தா. உன் கருணைக்கு நிலையான பாத்திரமாக நான் என் செய்வேன்?. அந்த நிலையான, உண்மையான, பேரின்பம் தரும் கருணைக்கடலில், நான் மூழ்கிடுவேன். அவ்வாறு மூழ்கிடுகையில், அப்பா முருகா, உன்னை, எந்தன் இதயத்தில், அறியும் அன்பைத் தருவாயே.
அன்பு, அன்பு - என்பார் எல்லோரும். இறையை அறிய அன்பு இருக்க வேண்டுமாம். இதயம் முழுதும் நிரம்பி வழியும் அன்பு வேண்டுமாம். முருகைய்யா, அந்த அன்பினை நீயே எனக்குத் தருவாய். உன்னை அறியும் அன்பை, எனக்கு நீயே தருவாய். அதற்காக, உன் நினைவிலே மூழ்குகிறேன். உன்னைப் பாடுகிறேன். நீயன்றி வேறொன்றும் அறியா நிலையில், உன் கருணை என்னும் சாகரத்தில் மூழ்குகிறேன்.
யில்களும், ஆடுகளும் நிறை மலைப்புறத்தில் தினைகள் விளையும் வேடர் நிலைத்தினை காவல் காக்கும், குறத்தி மகளாம் வள்ளி, இலக்குமிபோலவே அழகாக இருக்கிறாள். தாயைப்போலவே பிள்ளை! அவளுக்கு வணக்கம் செலுத்தி (கொடியிடையாள் வள்ளி - கொடிபோல் சுற்றிக் கொண்டிருக்கக் கூடிய வள்ளி எனும் குண்டலினி), அவளை உன்பால் அணைத்தவனே (மூலாதாரத்தில் இருந்து மேலெழுப்பி, உன் நிலைக்கு உயர்த்தியவனே)
கயிலைமலைபோல் புகழ்பெற்று நிற்கும் புனித செந்தில் மாநகர் வாழ் பதியே, வேலா,
கரிமுகத்தான் கணபதிக்கு இளையவனே, கந்தப் பெருமானே.

Wednesday, October 15, 2008

துணை நீயே, குமரா, துணை நீயே!

இந்த இடுகையில் நாம பார்க்கப்போகிற பாடல், டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களால் பாடப்பட்டு பிரபலமான பாடல். அவரது சொந்த சாகித்யம் எனச் சொல்லப்படுகிறது(...?!).

அன்பர் ஒருவர், இந்தப் பாடலை இங்கு தரும்படி கேட்டிருந்தார். அவர் கேட்டபின்புதான், அவர் உதவியால் இந்த பாடலை அறிந்து கொண்டேன். ஆகையால், அவருக்கு முதற்கண் நன்றிகள்.

இராகம் : சாருகேசி
தாளம் : ஆதி

எடுப்பு
துணை நீயே, என்றும் துணை நீயே குமரா - என்
வினை தீர்த்தருள்வாயே முருகா.

தொடுப்பு
பார்தனில் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்தனையே
கார்முகில் வண்ணன் மருகோனே, கந்தனே, கருணைக் கடலே.

முடிப்பு
கன்னித்தமிழ் கண்ட ஆண்டவனே, தணிகையில் மணக்கோலம் கொண்டவனே
துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ?

பாடல் வரிகள் அழகாக இருக்கிறதல்லவா!
இப்போ பாடலை, பாலமுரளி சார் பாடிக் கேட்கலாம்:
துணை நீயே : இங்கே கேட்கலாம் : [play]
(Pop-Up window needs to be opened)

இராமா வர்மா அவர்கள் பாடிட யூ-ட்யூபில் இங்கு கேட்கலாம்.

பாலமுரளி சாரின் நடை அப்படியே பாடலில் தொனிக்கிறது. மெதுவாக பாடிடும் நடையை, இப்பாடலை வேகமாகப் பாடினால், எப்படி இருக்கும் என வியக்க வைத்தாலும், இந்நடையும் நன்றாகத் தான் இருக்கிறது. இப்போ, வரிகளைப் பார்ப்போம்.

துணை நீயே குமரா, வினை தீர்ப்பாய் முருகா - என அட்டகாசமானதொரு எடுப்பு!

தொடுப்பில் - பார்தனில் என்ற இடத்தில் - அவர் பாடுவதைக் கேட்டால், சில சமயம் - 'பார்த்தனின்' என்று பாடுவது போல் இருக்கிறது.
அதனால், சற்றே வரிகளை இப்படியாக மாற்றிப் பார்க்கிறேன்!:
பார்த்தனின் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்த
கார்முகில் வண்ணன் மருகோன் கந்தனே, கருணைக் கடலே.
ஏனெனில், விந்தைகள் புரிந்தது கண்ணனுக்கே மிகவும் பொருந்துவதால். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

முடிப்பில் - துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ? என்ற வரிகளுக்கு என்ன பொருள்? முரளி (குழலின்) கானத்தில் எப்போது முருகன் தன்னை மறந்தார்? நமக்குத் தெரியாமல் ஏதேனும் புராணம் இருக்குமோ. இருந்தாலும் இருக்கும், நம்ம ஊரில் புரணாக்கதைகளுக்குத் தான் பஞ்சமே இல்லையே!
அப்படி ஏதும் இல்லையென்றால், இப்படி இருக்குமோ?. 'முரளி' என்று, பாலமுரளியான தன்னைச் சொல்கிறாரோ?. ஏனெனில் 'முரளி' என்பது இவருடைய முத்திரை போல இருக்கிறது. அப்படியென்றால், இவரோட இசையைக் கேட்டு, கந்தன் தன்னை மறந்து விட்டான் என்கிறாரோ?
அல்லது தன்னடக்கமாக இப்படிச் சொல்கிறாரோ?:
குமரா, உன்னை இதுநாள் வரை கானங்களால் துதித்து வந்தேன். என் துன்பங்களும் அதனால் மறைந்து வந்தன... ஆனால் இன்று, என்ன ஆயிற்று உனக்கு?
என் கானத்தில் தான் ஒருவேளே நீ மயங்கி விட்டாயோ?
கானத்தில் மயங்கி, என் குறைகளை தீர்ப்பதையெல்லாம் மறந்துவிட்டாயோ?
இருப்பினும், என்றும் துணை நீயே, குமரா.

நீங்க என்ன நினைக்கறீங்க?