Tuesday, July 31, 2007

ஜாவா புதிர்கள்

புதிர்கள் ஜாவா ப்ரோகிராமிங் மொழியில்! வாங்க, வாங்க, வந்து புதிர்களுக்கான விடைகளை கண்டு பிடிங்க பார்க்கலாம்!

மொத்தம் எட்டு புதிர்கள் உள்ளன.
கீழே உள்ள கூகிள் வீடியோவில் இந்த புதிர்கள் ஒவ்வொன்றாக கேட்கப்படுகிறது. பார்வையாளர்கள் விடைகளை கண்டு பிடிக்கிறார்கள். நீங்களும் முயலுங்களேன்!

Autoboxing போன்ற "ஜாவா JDK 1.5" சம்பந்தப்பட்ட புதிரும் அடங்கும்.

மொத்தம் 1 மணி நேரம் ஆகிறது, இந்த வீடியோ முடிய. நல்ல நகைச்சுவையாகவும் உள்ளதானால், அவ்வளவாக போரடிக்கவில்லை!

Sunday, July 29, 2007

டாடா தொழிற்சாலையும் சந்தர்ப்பவாத அரசியலும்

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளில் டாடாவின் புதிய டைட்டானியம் டை ஆக்ஸைட் தொழிற்சாலை நிறுவும் பணியில் பல்வேறு சர்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதில் உண்மை நிலை என்ன? என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கிறது.



டாடா என்ன சொல்கிறது?
2,500 கோடி செலவில் உருவாகும் இந்த தொழிற்சாலை, 1000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 3000 பேருக்கு ஏனைய வழிகளிலும் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்கிறது.

ஏனைய வழிகளில், மேலும் 3000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது உண்மையானால் நல்லதே!

தொழில் சம்பந்தமான நுட்ப அறிவு தேவைப்படாத வேலைகளுக்கெல்லாம், உள்ளூர் மக்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்வோம் என்கிறது. அதிலும் தொழிற்சாலைக்காக தங்கள் நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்போவதாக சொல்கிறது.

மொத்தம் 10,000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தவிருக்கிறது. அவை தற்போதைய மார்க்கெட் விலையில் நிலத்தை வாங்கிக் கொண்டு, உரிமையாளர்களுக்கு பணம் கிடைக்க வழி வகுக்கிறது என்கிறது. மேலும் குடியிருப்புப் பகுதிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்கிறது.

குடியிருப்பு பாதுக்கப்படும் என்று சிலர் சொல்வது எப்படி என்று தெரியவில்லை.
தற்போதைய மார்கெட் விலை இது போன்ற இடங்களில் குறைவாக இருக்கும். தொழிற்சாலைக்காக வாங்கும் நிலத்திற்காக, டாடா, மார்க்கெட் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை தர முன் வர வேண்டும். குடியிருப்பு பாதிக்கப்படும் பட்சத்தில் மேலும் அந்த ஊரிலேயே தொடர்ந்து வாழ விரும்புபவர்களுக்கு தரமான குடியிருப்பு கட்டித் தரவேண்டும்.

கடல் நீரை சுத்தகரிக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டு அதன் மூலமாக சுத்தகரிககப்படும் நீரை மட்டுமே தொழிற்சாலை பயன்படுத்தும். நிலத்தடி நீர் நிலமை இதனால் முன்னேருமே தவிர பாதிக்கப்படாது என்கிறது.

மேலும், சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு எந்த ஒரு கேடும் ஏற்படாத வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று சொல்கிறது.

இதெல்லாம் நியாயமாகத்தான் தெரிகிறது. ஆனால் எந்த அளவிற்கு இதெல்லாம் உண்மையாக நிறைவேற்றப் படும்?, எந்த அளவிற்கு இது ஆளும் கட்சி மற்றும் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் பணம் ஈட்டும் வழியாக மட்டும் செயல் படப்போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.

அதே சமயத்தில் எதிர் கட்சிகள், இதுதான் கிடைத்தது சந்தர்ப்பம் என்று கண்மூடித் தனமாக எதிர்ப்பது, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் தோல் உரித்துக் காட்டுகிறது.

என்ன குறைகள் இருக்கின்றன என்பதை பட்டியல் இடட்டும். டாடா நிறுவனமும், அரசும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பாடாது என்று எழுத்து மூல உத்தரவாதத்துடனும், தகுந்த பண காப்பீடுடனும், எந்த தரப்பும் சாராத நடுநிலையாளர்களின் கண்காணிப்புடனும் திட்டத்தை செயல் படுத்தினால் என்ன?

எத்தனை க்காலம் தான் இந்தப் பகுதி மக்கள் விளைச்சலற்றுப் போன நிலங்களிலும் விவசாயம் செய்வதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்? நம்மிடம் மனித வளம் ஏராளம். அதை மாற்றுவோம் தொழில் வளமாய்!

Wednesday, July 25, 2007

அமெரிக்காவில் இருந்து... இந்திய செய்திகள்

இந்தியா வேண்டுமென்றே உறுதி செய்யப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பல மடங்காக ஏற்றிச் சொல்கிறதாம் - சொல்கிறார் லலித் தாண்டோனா, டெல்லி AIIMS இல் பயின்ற இவர், தற்போது சிட்னியில் பணிபுரிகிறார்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்களில் விரிசல்கள் ஏற்பட்டாலும், திரும்பத் திரும்ப அமெரிக்க வலுக்கட்டயமாக இந்தியாவிற்கு உதவிட வருவதின் பிண்ணணியில் இருப்பவர்களில் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் GE, Boeing ஆகியவும் அடங்குமாம்!

அமெரிக்கா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முயன்ற கோதுமையை தரமற்றது என்று சொல்லி இந்தியா சொல்லிவிட்டதால் கொதித்துப் போயிருக்கும் அமெரிக்கா, இந்தியாவின் தர நிர்ணயம் ஈடுகட்ட இயலாதது என்று பொருமுகிறதாம். அமெரிக்க கோதுமையை வாங்கியிருந்த்தால் இந்தியா 65-85 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தி இருக்கலாம் என்கிறதாம்!

அமெரிக்க செனட்டில் பன்மத நல்லிணக்க குழுவின் சார்பாக ஒரு ஹிந்து கோவிலைச் சேர்ந்த ஒருவருக்கு, சமீபத்தில் அன்றைய பிராத்தனைகளை தொடங்கும்போது சின்னதான ஒரு பகுதி ஒதுக்கப்பட்டதாம். ஆனால், எதிர்பாராதது, பார்வையாளர்களின் மூவரின் கூக்குரல் - "நாங்கள் கிருஸ்துவர்கள் மட்டுமல்ல, தேச பக்தர்கள்". அவர்களை காவலர்கள் கைது செய்து அங்கிருந்து அகற்றிய பின் பிராத்தனைகள் தொடர்ந்ததாம்.


Tuesday, July 17, 2007

முள் குச்சியும் மெய் உச்சியும்!

'நிஷ்காம கர்மா' என்ற சொல்லை பயன்படுத்தக் கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி என்றால் என்று பார்ப்போம். கர்மம் என்றால் செயல், 'நிஷ்காம கர்மம்' என்றால், 'ஆசைகளிலும் விளைவுகளிலும் எதிர்பார்ப்புகளிலும்' மனதை விட்டுவிடாத செயல் என்று சொல்லலாம். பகவத் கீதையின் முக்கிய சாரமான 'கர்ம யோகம்' தான் 'நிஷ்காம கர்மம்'.

இப்படிச் செய்தால் இன்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆசையிலும் மட்டுமே மனதை செலுத்தினால், செய்யும் செயலில் கவனம் இருக்காது. செய்யும் செயலில் கவனம் இல்லா விட்டால், செயலில் நிறைவு கிட்டாது.

செயலின் விளைவு எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். அதற்காக, என்ன ஏற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது பொருளில்லை. நான், எனது, என்னால் தான் இந்த வெற்றி என்ற அகந்தை, என்னால் தான் இந்த தோல்வி என்கிற தாழ்வு மனப்பான்மையோ ஏற்படாமல் இருக்க வேண்டும்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்
.


என்ற குறளை இங்கே குறிப்பிடுவது இங்கே சரியாக இருக்கும்.
இன்பமோ துன்பமோ, எது வரினும் எல்லாம் எம்பெருமானின் பிரசாதம் என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்.

ஒரு சம்பவத்தின் மூலமாக, ரமண மகரிஷி இதனை அழகாக விளக்குகிறார்:

முன்பொரு சமயம், ரங்காச்சாரி என்ற பெயர் கொண்ட தெலுங்கு பண்டிதர் ஒருவர் ரமண மகரிஷியிடம் 'நிஷ்காம்ய கர்மம்' பற்றி கேட்டார். ரமணரிடம் இருந்து பதிலே இல்லை. சிறிது நேரத்திற்கு பின்னால், ஒரு குன்றின் மேல் ஏறி நடக்கலானார். கேள்வி கேட்ட பண்டிதரும் இன்னும் சிலரும், ரமணரை தொடர்ந்து நடக்கலானர்.

கீழே தரையில் இருந்த ஒரு முட்கள் நிறைந்த குச்சியை கையில் எடுத்தார் ரமணர். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு மெதுவாக, அந்த குச்சியில் இருந்த முட்களை நீக்கலானார்!. அந்த குச்சியின் முடிச்சுகளை நேராக்கினார். பின்னர் ஒரு தடினமான இலையைக் கொண்டு, அந்த குச்சியை வழவழப்பானதாக மாற்றினார். சுற்றி இருந்தவர்கள் இவர் என்ன செய்கிறார் என்று வியந்து கொண்டு இருந்தார்கள்!

சற்று நேரத்தில் பக்கத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஒரு சிறுவன் அந்தப் பக்கம் வர எல்லோரும் ஒதுங்கி ஆடுகளுக்கு வழி விட்டனர். அந்த சிறுவன் கையில் குச்சி இல்லாமல், ஆடுகளை வழிப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டு இருந்தான்! இதைப் பார்த்த உடனே ரமணர், தன் கையில் இருந்த புதுக் குச்சியை, அந்த சிறுவனுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ரமணர்!.

கேள்வி வினவிய பண்டிதரோ, ஆகா, என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்றார்!

புகைப்பட போட்டிக்கு

புகைப்பட போட்டிக்கு:

தலைப்பு: இயற்கை

முதல்:
வரண்ட நிலத்தில், கரு மலைகள், அதற்கு நடுவே கார்நீல நதி - கொலராடோ நதி!
இங்கேயும் நதியின் அளவு குறைந்து விட்டது போலும்!


அடுத்து:
இலை உதிர்ந்த மரமும், இலை உதிரா மரமும் - வானத்தை அண்ணார்ந்து பார்த்தவாறு:
நிலவோ கைக்கெட்டும் தூரத்தில்தான்!

Sunday, July 15, 2007

குரு வந்தனம்

தூய நற்குரு துணை அருளை நாடு நெஞ்சமே!
குரு மலரடிய தேடு நெஞ்சமே!

தேடிடும் கலை அன்பொடு
தெளிவித்த என் ஈசன்
பாடும் என் நாவில் இசையாய்
படிபவர் என் குருநாதார்

பூவென யான் மலரவும்
போற்ற மணம் தந்தவர்
திரியென இருந்த மதி
தீபமாய் ஒளிர வைத்தார்
விதையென தளிராய் இருந்தேன்
விதைத்திட தளிர்த்தேன் மலர்ந்தேன்
ஆதாரம் குருவே பணிந்தேன்
அனைத்தும் உனக்கு அர்பணித்தேன்

தூய நற்குரு துணை அருளை நாடு நெஞ்சமே!
குரு மலரடிய தேடு நெஞ்சமே - பாவன குரு...!

---------------------------------------
இந்த பாடலை KJ யேசுதாஸ் பாடிட இங்கே கேட்கலாம்

ராகம் : ஹம்சாநந்தி

கூடவே, குரு பெருமை பற்றி கபீரன்பன் தன் பதிவில் என்ன சொல்கிறார் பார்ப்போமா?

சுட்டுங்கள் இங்கே:

Saturday, July 14, 2007

தரமான பதிவுகள் எங்கே?

பதிவுகள் பல ரகம், பதிவுகளில் பல தரம்!

பதிவர்களின் பல ரகம், பதிவர்களின் பல தரம்!



சூடான பதிவாகி பலர் படிக்கும் பதிவாக பிரபல பாதிவாகிடும் பதிவுகள் எப்படி இருக்கின்றன? தரம் எப்படி என்றால், சொல்லிக்கொள்ளும் படியாக இல்லை.

கவனத்தை திசை திருப்ப, பலரையும் தம் பதிவுக்கு வரவழைக்க, பதிவர்கள் பலவற்றையும் எழுதிவதில், நிறைய மோசமான பதிவுகளாகத் தான் இருக்கின்றன.

இப்படிப்பட்ட மோசமான பதிவுகளுக்கு காரணம் யார்?

நாம், நாமேதான்!

நல்ல தரமான பதிவுகள் இல்லாமைதான்!

நல்ல தரமான பதிவுகள் கிடைக்கும்போது, அவற்றை கொள்ள வாசகர் வட்டம் காத்திருக்கிறது. அதே சமயம், அவை இல்லாதபோது, கிடைப்பதைப் படிப்போம் என்ற வகையில், மோசமான பதிவுகளையும் படிக்கும் நிலைக்கு தள்ளப் படுகின்றனர் வாசகர்.

பதிவர்களே, பதிவர் என்ற நிலையிலிருந்து எழுத்தாளர் என்கிற நிலைக்கு உயர முயலுங்கள்!

பொறுப்புள்ள எழுத்தாளர் என்கிற நிலைக்கு உயர நல்ல தரமான பதிவுகளை தாருங்கள்!

களைகள் ஆங்காங்கே இருப்பது இயல்பு. களைகளை களைவது என்பது ஒருபக்கம் இருக்கட்டும். முதலில் நாம் நல்ல பயிரை வளர்ப்போம்!

Thursday, July 05, 2007

மனம் - அதன் நான்கு செயல்பாடுகள்

மனம் ஒரு குரங்கு என்று பாட்டொன்று உண்டு!

மனம் என்பது எங்கும் இல்லை, அது வெறும் கற்பனை என்பாரும் உண்டு!

மனதின் செயல்பாடுகளை நான்கு விதமாக பிரிக்கிறது வேதாந்தம். அவையானது:

1. அடி மனம் (மனஸ்) - உணரும் கருவி

2. சித்தம் - அனுபவ சேமிப்புக் கிடங்கு

3. அகங்காரம் - ஈகோ

4. புத்தி - அறியும் அறிவு, நிர்ணயம் மற்றும் முடிவு செய்தல்

கொஞ்சம் விளக்கமாக பார்ப்போமா?

அடி மனம் (மனஸ்):

வெளி உலக நிகழ்வுகளை இந்த மனஸ் வழியாகத் தான் மனதை சென்றடைகிறது. நமது உடல் அவையங்களுக்கு ஒரு மேற்பாற்வையாளர் போல இந்த மனஸ். புத்தி எடுக்கும் செயல்பாட்டு முடிவுகளை நமது அவையங்களுக்கு கொண்டு சென்று, அந்தந்த அவையங்களுக்கு இன்னென்ன செயல்பாடு என்று சொல்லுவதும் இந்த பகுதிதான்.

சித்தம்:

நம் அனுவங்களையும் அவற்றின் பாடங்களையும் சேமித்து வைக்கும் பகுதிதான் சித்தம். மனஸ் இந்த சேமிப்புக் கிடங்கின் அனுபவங்கள் பல சமயம் புத்தியை வழி நடத்துகிறது. புத்தியானது உயர் ஞானம் பெற்றிராவிட்டால், சித்தம் என்னும் இந்த அனுபவக் கிடங்கில் வெளிவரும் ஏதோ இரு நினைவலையில் உதவியுடன் மட்டுமே தான் செய்யவேண்டியதை முடிவு செய்ய வேண்டி வரும். அப்படிப்பட்ட முடிவு ஒரு சாதரண முடிவாகவே இருக்கும்.

அகங்காரம்:

நான், எனது என்பது போன்ற அகங்கார ஈகோ உணர்வுகளின் பிறப்பிடம் இந்தப் பகுதி. நான் தனித்துவமானவன், என் செயல்களுக்கெல்லாம் நானே மூலாதாரம் என நினைக்கச் செய்கிறது. சித்தம் பகுதியில் சேமித்த நினைவுகளில் தனக்கு வேண்டிய ஒரு நினைவைக் கொண்டு, மனஸை தவறான முடிவுகளில் கொண்டு செல்கிறது.

புத்தி:

இதுவே உயரிய அறிவென்னும் தன்னறிவை எட்டுவதற்கான வழியின் வாசற்படி. உயர் ஞானத்தின் உதவியுடன் இந்த புத்தி, சரியான முடிவு எடுக்கும் பட்சத்தில் அதன் ஆணைகளை, மனஸானது மேற்கொள்ளும். ஆனால், புத்தியானது, மாசு பட்டிருந்தால், சரியான முடிவுகளை எடுக்க இயலாது. இதனாலேயே, உயர் ஞானம் அடைய விரும்புவோரின் தலையான பணியானது, புத்தியை தூய்மைப்படுத்தல் ஆகும்.