Wednesday, January 18, 2006

2005 - டாப் டென் - தமிழ் திரைப்பட பாடல்கள்

2005 இல் வெளிவந்த படங்களில் எனக்கு பிடித்த பத்து பாடல்கள்
-----------------------------------------------------------------------------------
பாடல்களைக் கேட்க, பாடல் தலைப்பின் சுட்டியை கிளிக் செய்யவும். சுட்டிகளின் மூலம் - MusicIndiaOnline.com

1. காற்றில் வரும் கீதமே (ஹரிஹரன், ஷ்ரேயா கோஷல், சாதனா சர்கம், பவதாரிணி) (ஒருநாள் ஒரு கனவு - இளையராஜா)
இனிமையாக இழைந்தோடும் இனியதொரு கீதம். தோராயமான தமிழ் உச்சரிப்புடன் பாடி வந்த ஷ்ரேயா கோஷலுக்கு தமிழ் திரை இசையில் மிகப்பெரும் வாய்ப்பு. அருமையாக பயன்படுத்திக்கோண்டு நன்றாகபாடி இருக்கிறார். இந்த பாடலுக்கும் 'ஜனனி ஜனனி, நிற்பதுவே நடப்பதுவே, நான் என்பது நீ அல்லவோ' போன்ற பாடல்களுக்கும் ஒற்றுமை, இசையமைப்பாளர் இளையராஜா என்பது மட்டுமல்ல, இந்த பாடலும் கல்யாணி ராகம் தான் என்பதும் கூட!. என்றென்றும் நினைவிலும் தொடரும்!. படத்தின் இசைத்தட்டில் இந்த பாடலின் இசையமைப்பு பற்றி இளையராஜாவும், பாடலாசிரியர் வாலியும் விவாதிப்பதுபோல் சேர்த்திருப்பதும் கேட்பதற்கு சுவையாக உள்ளது.

2. கண்ட நாள் முதலாய் (சுபிக்க்ஷா) (கண்ட நாள் முதல் - யுவன் சங்கர் ராஜா)
மதுவந்தியில் கர்நாடக சங்கீதப் பாடல் - அலைபாயுதே பாடலில் ஏ.ஆர்.ரஹ்மான் பயன் படுத்திக்கொண்டதுபோல், யுவன் இந்த பாடலுக்கு technobeat இல் மெருகேற்றி இருக்கிறார். முதல் இடையீட்டில் (interlude) வரும் புல்லாங்குழல், இரண்டாவது இடையீட்டில் வரும் சேக்ஸோபோன் மனதில் வசந்தம் வரச்செய்கிறது. பாடகர் சுபிக்க்ஷா புதுவரவு போலும்?. ஒரு சில இடங்களில், வேறு பெரிய பாடகர் இன்னமும் நன்றாக பாடியிருக்கலாமே என்று சொல்லச்சொன்னாலும், பாடல் இனிமையாக உள்ளது.

3. சுட்டும் விழிச்சுடரே (ஸ்ரீராம் பார்த்தசாரதி, பாம்பே ஜெயஸ்ரீ) (கஜினி - ஹேரிஸ் ஜெயராஜ்)
பாடலின் தொடக்கத்தில் என்ன இப்படித் தொடங்குகிறது என நினைக்கவைத்தாலும், முதல் இடையீட்டிற்கு பின்னால், வேகம் பிடிக்க, மனதுக்கும் பிடிக்கிறது. அதற்கப்பறம் என்ன, ஹம் செய்ய சொல்கிறது மனது. ஸ்ரீராம் பார்த்தசாரதியா என வியக்க வைத்த பாடல். ஸ்ரீராமின் குரல் பல்லவியைக்காட்டிலும் சரணங்களில் மாறுதலாகவும் இனிமையாகவும் இருக்கிறது!. இந்த பாடலிலும் சேக்ஸோபோன் இழைந்தோடுகிறது!

4. அன்பு அலைபாயுதே (உன்னி கிருஷ்ணன், ரேஷ்மி, கார்த்திக்) (ப்ரியசகி - பரத்வாஜ் )
படத்தில் டைட்டில் பாடலாக வந்தாலும், பரத்வாஜின் ஏற்கனவே வந்த 'டட்டடா' ட்யூன் இந்த பாடலிலும் வந்தாலும், பாடல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. முடிவில், வேறென்ன வேண்டும்?
'இன்பத்தை கருவாக்கி
இரு கண்ணை மகனாக்கி
பதினாறும் எனக்கருளினாய்,
இறைவா,உனக்கென்ன நான் செய்வேன்?
உயிரன்றி வேறில்லை, உன் பாதம் சமர்ப்பிக்கவே' என்ற வரிகளும் நன்றாக இருந்தன.

5. இளமை என்பது கனவின் (கார்த்திக் ராஜா) (ரைட்டா தப்பா - கார்த்திக் ராஜா)
சோகப்பாடலானாலூம், உருக்கத்தில் நெஞ்சை உருக்குகிறது. அதுவும் பாடலில் வேகம் அதிகரிக்க, மனதிற்கு இதமாக இருக்கிறது. கார்த்திக் ராஜாவிற்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்காவிட்டாலும், இந்த பட ஆல்பம் நன்றாக செய்திருக்கிறார். இதே ஆல்பத்தில், இன்னொரு பாடலும் (யாரிடம் சொல்வேன்...) கேட்பதற்கு நன்றாக இருகிறது.

6. உன்னைச் சரண் (கல்யாணி,ப்ராணா) (தவமாய் தவமிருந்து - சபேஷ்-முரளி)
பியானொ வாசிப்புடன் துவங்கி, பின்னர் பல்லவி மெதுவாய் வாசிக்கப்பட்டு, பின்னர் பாடல் துவங்குகிறது. இடையீடுகளில் இசைக்கருவிகளின் இனிமை செவிகளில் தேன். கனமான படத்தில், இதமானதொரு பாடல். மெலடியும், ரிதமும் அழகாய் இணைகிறது.

7. காலை அரும்பி (கல்யாணி, ஸ்ரீநிவாஸ்) (கனா கண்டேன் - வித்யாசாகர்)
வித்யாசாகரின் மெலடிகள் எப்போதுமே கேட்பதற்கு இனிமையானவை. முதல் இடையீட்டில் வரும் புல்லாங்குழல் மற்றும் வயலின் பாடலில் இனிமை சேர்க்கின்றன. ஸ்ரீநிவாஸ், கல்யாணி -இன் குரல் புல்லாங்குழலோடு போட்டி போடும் அளவிற்கு இனிமையாக இருகிறது.

8. பூ பூத்தது யாரதை (சோனு நிகம், சாதனா சர்கம்)(மும்பை எக்ஸ்பிரஸ் -இளையராஜா)
இனிமையான பாடல். சில இடங்களில் உச்சரிப்புகள் அன்னியமாய் தெரிந்தாலும், சோனு நிகம், சாதனா சர்கம் நன்றாகவே பாடி இருக்கிறார்கள். பாடலில் பயன்படுத்தியுள்ள இசைக்கருவிகள் (டிரம்ம்பட், ட்ரம்ஸ், ஸேக்ஸோபோன்) ஜாஸ் இசையை கேட்கும் உணர்வை ஏற்படுத்துகின்றன. இந்த பாடலில் மட்டுமல்லாமல், ஆல்பத்தின் மற்ற பாடல்களிலும் இதைக் காணலாம். இதனாலேயே, இளையராஜாவின் வித்யாசமான ஆல்பம் இதுவென சொல்லலாம்.

9. ஐயங்காரு வீட்டு அழகே (ஹரிஹரன், ஹரிணி) (அன்னியன் - ஹேரிஸ் ஜெயராஜ்)
சிறந்த சூப்பர் டூப்பர் பாடல் எனலாம் இந்த பாடலை. பஞ்ச ரத்ன கீர்த்தனைகளில் ஒன்றான 'ஜகத்தா' வில் தொடங்கி பின்னர் பல்லவி தொடங்குகிறது. இரு பாடகர்களும் சர்வ சாதாரணமாக பாடி அசத்தி இருக்கிறார்கள். ஹரிஹரன், 'ஐயங்காரு...' என இழுக்கும் இடங்கள் பிடித்திருந்தன. நாட்டை ராகத்தில் அமைந்திருக்கிறது இந்த பாடல். (இருவர் படத்தின் 'நறுமுகையே' பாடலிலும் நாட்டையைப் பார்க்கலாம்)

10. கேக்கலையோ கேக்கலையோ (மஞ்சரி, டிப்பு) (கஸ்தூரி மான் - இளையராஜா)
'கேக்கலையோ' என்று துவங்கும் இடம் வித்யாசமாக இருக்கிறது. எளிதாக, கேட்டவுடன் ஹம் செய்ய வைக்கும் பாடல்.