Friday, May 30, 2008

நற்சிந்தனை: ஆன்மீக அரிச்சுவடி

யாழ்பாணத்து சுவாமிகளும், நந்திநாத சம்பிரதாயத்தின் கைலாச பரம்பரையின் 161ஆவது குருவுமான சிவயோக சுவாமிகளின் பாடல்களான "நற்சிந்தனை" என்கிற தொகுப்புலிருந்து ஒரு பாடல்:

ன்பு சிவமென்ற ஆன்றோர் திருவாக்கை

இன்பமுடன் போற்றியிருப்பது எக்காலம்?

தி அந்தமில்லாத ஆன்மாவை நாமென்ற

சேதி அறிந்து தெரிவிப்பது எக்காலம்?

ம்மையிலும் மறுமையிலும் எம்மைவிட்டு நீங்காத

செம்மலர் தாள்கண்டு சீவிப்பது எக்காலம்?

சன் திருவடியை என்றும் மறவாமல்

வாச மலர்கொண்டு வணங்குவது எக்காலம்?

ருகி யுருகி உணர்விழந்து நின்று

பெருகி வருமமிழ்தைப் பருகுவது எக்காலம்?

ரும் பேருமல்லா ஒருவன் திருவடியை

நீரும் பூவும்போட்டு நெக்குநிற்ப தெக்காலம்?

ல்லா உயிரினும் நில்லாமல் நிற்பவனை

நினைந்து நினைத்துருகி நிற்பதுவு மெக்காலம்?

க னேக னிறைவனடி வாழ்கவெனும்

மோக மறுக்குமொழி கண்டுய்வ தெக்காலம்?

ந்து புலன்வென்ற ஆன்றோர் திருவடிகீழ்

நைந்துருகி நின்று பெறுவதெக்காலம்?

ன்றென் றிருதெய்வம் உண்டென் றிருவென்று

அன்றுசொன்ன பட்டினத்தா ரடிபணிவ தெக்காலம்?

மெனு மெழுத்தினுள்ளே ஒளியதாய் விளங்குகின்ற

சோமசுந் தரத்தின் அடிதொழுவ தெக்காலம்?

Monday, May 26, 2008

தாலாட்டு : கண்ணன் என் கண்மணி

விருத்தம் பாடி பின்னர் தொடர்ந்து கிருதியினைப் பாடுவது நமது இசையில் ஒரு மரபு.
அதன்படி இங்கொரு விருத்தமும், பாடலும் பார்ப்போமா?
விருத்தம் ஒருவரால் இயற்றப்பட்டிருக்க, தொடர்ந்து வரும் உருப்படியோ இன்னொருவரால் இயற்றப்பட்டிருக்கும். இரண்டுக்கும் இடையே பாடகரால் நெய்யப்படும் தொடர்புதான் இருக்கிறதே, அது இயற்கையானது போலவே அமைந்திருப்பின், அது கேட்பவரை வியப்பின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும்!

அப்படிப்பட்ட ஒரு பாடலை இங்கு திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிடக் கேட்கலாம். முதலில் பாடும் விருத்தமானது, திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்டது. இந்த செய்யுள் உட்பட, பாணரின் பத்து செய்யுள்கள் நாலயிர திவ்ய பிரபந்தத்தினில் அடங்கும். "கொண்டல் வண்ணனை, கோவலனை, வெண்ணை உண்ட வாயனை" என கண்ணனை விளித்த பெருந்தகையாளார் இவர்.

கண்ணன் வெண்ணை உண்பான் சரி, ஆனால், அவன் ஏழு உலகங்களையும் உண்டது எப்போது?
ஆகா, பரம்பொருளாய் எங்கெங்கும் நிறைந்திருப்பதைத் தான் அன்று கண்டாளோ அன்னை யசோதை.
எழில் நிறை நீல மேனியனின் வடிவழகு எல்லையில்லாமல் எங்கும் நிறைந்து பரம்பொருளாக நிரவி இருக்கிறது.
இப்போது இந்த ஆலமரத்திலை பாலகன் அழகில் லயித்திட, என் நெஞ்சமெல்லாம் அவன் நீலமேனி அழகும் நிறைந்திட,
ஐயோ, அண்ட சாரசரங்களெல்லாம் அதே கருநீல நிறத்தினில் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திடுதே!,
அம்மம்மா, விண்மீன்களெல்லாம் என்னுள்ளே மின்னிடுதே. இந்த விந்தையை என்னென்று சொல்ல!

விருத்தம்:

இயற்றியவர் : திருப்பாணாழ்வார்

ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும்
எழில் நீல மேனி...முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ...
எழில் நீல மேனி அம்மா...
நிறை கொண்டதென்
நெஞ்சினையே...நெஞ்சினையே... நெஞ்சினையே...
கண்ணா...கண்ணா...
தாலேலோ...
தா லே லோ...
தாலேலோ...


இப்படி ஒரு உணர்ச்சி வெள்ளத்தில் நிறைத்திட்ட இந்த பாலகனை, தாலேலோ என தாலாட்டுப் பாடி தூங்கச் செய்யும் பேறினையும் பெறாதா நெஞ்சென்ன நெஞ்சே?

கண்ணே என் கண்மணியே!

(ஒலிப்பதிவில், ஒலி அளவு குறைவாக உள்ளது, கணிணியில் ஒலியினைக் அதிகரித்துக் கேட்கவும்)

இப்போது தொடரும் கிருதி விருத்தத்தோடு, எப்படி அருமையாக இணைகிறது பாருங்கள்!. தமிழ்த் தியாகராஜர் என தமிழ் இசை ரசிகர்களால் போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. குறிஞ்சி ராகம் என்ன அழகாய் பொருந்துகிறது, தாலாட்டுப் பாடல்களுக்கு!

பாடல்:

ராகம்: குறிஞ்சி
தாளம்: திச்ரஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

எடுப்பு
கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய்
மண்ணுலகில் என் வாழ்வு வளம் பெற வந்துதித்த (கண்ணே)

தொடுப்பு
குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக் கிணையாமோ
கொண்ட மன சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே
தாலோ தாலேலோ....

முடிப்பு
தேடாத என் நிதியே திகட்டாத் தெள்ளமுதே
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே
தாலோ தாலேலோ....

Friday, May 23, 2008

ஜோ ஜோ ராமா ஜோ ஜோ!

இராமனுக்கு தாலாட்டுப்பாடும் ஸ்ரீஇராம ஹிருதயம் நிறையும் தியாகராஜர் தாலாட்டுகிறார்!
தன் நெஞ்சம் முழுதும் நிறையும் அன்பின் நிறைவில் தாலாட்டு பாடுகிறார்!
கேட்போமா இந்த இதயம் இனிக்கும் தாலேலோவை!

பல்லவி

ஜோ ஜோ ராமா ஆனந்த
கன ஜோ ஜோ ராமா ராமா
(ஆனந்த வடிவோனே தாலேலோ...)

சரணம்
(1)
ஜோ ஜோ தசரத பால ராமா
(தசரத மைந்தா தாலேலோ...)
ஜோ ஜோ பூஜா லோல ராமா
(நிலமகள் காதலா தாலேலோ...)

(2)
ஜோ ஜோ ரகு குல திலக ராமா
(ரகுகுல திலகனே தாலோலோ...)
ஜோ ஜோ குடில தராலக ராமா
(சுருள் முடியானே தாலேலோ...)

(3)
ஜோ ஜோ நிர்குண ரூப ராமா
(குணங்களுக்கு அப்பாற்பட்டவனே தாலேலோ...)
ஜோ ஜோ சுகுண கலாப ராமா
(எல்லா நற்குணங்களும் நிறைந்தவனே தாலேலோ...)

(4)
ஜோ ஜோ ரவி சசி நயன ராமா
(சூரியனும் சந்திரனும் கண்ணானவனே தாலேலோ...)
ஜோ ஜோ பணி வர ஸயன ராமா
(அரவணையில் சயனித்தருப்பவனே தாலேலோ...)

(5)
ஜோ ஜோ ம்ருது தர பாஷ ராமா
(இன்மொழியானே தாலேலோ...)
ஜோ ஜோ மஞ்சுள வேஷ ராமா
(இனிய திரு உருவத்தானே தாலேலோ...)

(6)
ஜோ ஜோ த்யாகராஜார்சித ராமா
(தியாகராஜன் அர்சிக்கும் ராமனே தாலேலோ...)
ஜோ ஜோ பக்த ஸமாஜ ராமா ஜோ ஜோ!
(பக்தர்கள் குழுமத்தில் நிறை ராமனே தாலேலோ...)

இராகம் : ரீதி கௌளை (இந்த ராகம் ஞாபகம் இருக்கா, 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' என Dr. பாலமுரளி கிருஷ்ணா பாடுவாரே!, அதே ராகம்.)

அருணா சாய்ராம் அவர்கள் இங்கே பாடியிருப்பதைக் கேட்கலாம்.

Wednesday, May 21, 2008

சுவர்களை உடைத்திட சக்தி தருவாய்!



காண்பதெல்லாம் காட்சிப்பிழையென்றால் - காசினியும்

பொய்யல்லவோ சொல்லடி சிவசக்தி - மாயையென்று

காண்பதெல்லாம் கொண்டால் மாண்டிடாதோ

மன்னுயிரெல்லாம், சொல்லடி சிவசக்தி.


பாரெல்லாம் பரசிவ வெள்ளம் பரவி

யாவையும் உன்னில் மூழ்குதடி, எனினும்

என்னிடம் மறைந்திட்டாய், ஏனடி சிவசக்தி?

எட்டியும் எட்டாமலும் செய்திட்டாய், ஏனடி சிவசக்தி?


காட்சிப் பொருளில் எல்லாம் சாட்சியாய்

ஆட்சியும் செய்யும் சச்சிதா னந்தாமாய்

தோற்றமெல்லாம் நீயிருக்க பிழைவர பிறிதுமோர்

காரணமும் உண்டோ சொல்லடி சிவசக்தி!


வேட்கையும் தணிந்திட வேதனையும் ஓய்ந்திட

வேங்குழல் நாதமாய் நாதன்நாமம் ஓதிட

வாட்டிடும் பிணியெல்லாம் வந்தவழி ஓடாதோ

உனைப்பணிந்திட, அருள் சொல்லடி சிவசக்தி!


பிறப்பெல்லாம் உன்னில் தொடக்கமென இருக்க

இறப்பெல்லாம் உன்னை அடைந்திடவென இருக்க

இடையில் எழுந்த சுவரையெல்லாம் உடைத்திட

சக்தி தந்திடுவதெப்போ, சொல்லடி சிவசக்தி!

Wednesday, May 07, 2008

தேறுவது எப்போ நெஞ்சே?

தமிழிசை தழைத்திட தமிழ்ப்பாடல்களை இயற்றித் தொண்டு செய்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் திரு.நீலகண்ட சிவன் (1839-1900). 2000 க்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார் இவர். தமிழ் மூவர் இயற்றிய பாடல்களை படித்து வளர்ந்த கன்னியாகுமரிக்காரரான இவர், சிவ-பார்வதி தரிசனம் கிடைக்கப் பேறு பெற்றவர். இவருடைய மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாபநாசம் சிவன் அவர்கள்!

நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய "தேறுவதெப்போ நெஞ்சே..." பாடலை இங்கு பார்க்கலாம். நீந்திக் கரை ஏற இயலாத பெருங்கடலென பிறவியினைச் சொல்வார்கள் பெரியோர்கள். பிறந்த முதலே, புலன்கள் சொல்லித்தரும் ஈர்ப்புகளில் நம்மை இழந்து விடுகிறோம். இந்த உலகில் சேர்க்கும் செல்வத்தோடும், சொந்த பந்தங்களுடனும், இன்ன பிற விருப்பங்களுடனும் இருக்கமானதொரு இணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்த இணைப்பில் தவறேதும் இல்லை. ஆனால் அவையெல்லாம் நிலையில்லாதவை என்பதினை நாம் நமது சுயலாபத்திற்காக எளிதாக மறந்து விடுகிறோம். நிலையில்லா உலகில் நிலைப்பதெப்போ? நீந்திக் கரை ஏறுவதெப்போ? எல்லா இணைப்புகளையும் அறிந்திடும் அதே புத்தியில் ஒரு ஓரத்திலாவது, நிலையான நீலகண்டனின் நினைப்பிருந்தாலே போதுமே. அகந்தை அழிந்திட, சித்தினை அறிந்திடும் புத்தியினை நெஞ்சில் வார்க்கும் அவன் கருணையைத் தேடிட, கடைத்தேறாதோ பிறவி?
வேதம் நான்கும் சொல்லிடும் நாதன் நாமமே மெய்ப்பொருளாக இருக்கையில், வேறேன்ன வேண்டும்?

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது

வேதநான் கினும் மெய்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயமே.

(மூன்றாம் திருமுறை - திருஞான சம்பந்தர் தேவாரம்).

இப்போது திரு.நீலகண்ட சிவனின் பாடலைப் பார்ப்போம்:
------------------------------------------------------------------------------------------
இராகம் : கமாஸ்
தாளம் : ஆதி

எடுப்பு
தேறுவதெப்போ நெஞ்சே தெளிந்து கரை
ஏறுவதெப்போ நெஞ்சே

தொடுப்பு
கூறும் வேதத்தின் உண்மை குறியாமலே அஞ்ஞான
காரிருளில் கவிழ்ந்து கலங்கி மயங்கி நின்றால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

முடிப்பு
மண்ணே பொருளே யெந்தன் மனைவி மக்களேசொந்த
கண்ணே நீங்களே அல்லால் கதியில்லை என்றிருந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

உடலை நிலையென் றெண்ணி உலகவாழ்விதை நம்பி
மடமை பெருக நின்று வனமிருகம் போல் அலைந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

அண்டம் அளந்த மாலும்அயனும் அளவா நீல
கண்டம் கருணைதேடும் கருத்துணராராகில் ஜன்மம்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

சங்கீத கலாநிதி திருமதி. டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட, இந்தப் பாடலை கேட்கலாம்:

தேறுவதெப்போ நேஞ்சே?

-------------------------------------------------------------------
நீலகண்ட சிவன் இயற்றிய பாடல்களில் இதர புகழ் பெற்ற பாடல்கள்:
சம்போ மகாதேவா,
உமைக்குரிய திருமைந்தா,
ஆனந்த நடம் ஆடுவார் தில்லை

Sunday, May 04, 2008

பண்டரிபுரம் போகாதீங்க, பூதமிருக்கு அங்கே!


பக்திமான் சந்த் துக்காராமின் இந்த அபங்கம், வஞ்சகப் புகழ்ச்சியில் கண்ணனைப் பாடுகிறது.

விட்டல் உறையும் பண்டரிபுரம் போக வேண்டாம், போக வேண்டாம் என்று சொல்வார்கள்.

ஆம், அங்கே செல்ல வேண்டாம், தயவு செய்து செல்ல வேண்டாம்.

அங்கே பெரியதொரு பூதம் இருக்கிறது.

பண்டரிபுரம் சென்றவர்கள் திரும்பியதே இல்லை. அந்த பூதம் அவர்களை அப்படியே சாப்பிட்டு விடுகிறதாம்!.


துக்காராம், இதையெல்லாம் கேட்பவரா என்ன, அவரது கிருஷ்ண ப்ரேமைதான் அளவிடற்கரியதே!

துக்காராம், துணிந்து பண்டரிபுரம் சென்றார்.

எல்லோரும் பயந்தது போலவே, துக்காராமும் திரும்பவில்லை.

ஆனால், என்ன, துக்காராம் இந்த நிலையில்லா உலகுக்கு திரும்பிடவில்லை.

பாண்டுரங்கன் பதமெனும் உயர்நிலையை அடைந்தபின்,

இந்த உலகும் ஒரு பொருட்டோ?

-----------------------------------------------------

பாடல் : பண்டரிசே பூத மோடே
மொழி : மராத்தி
ராகம் : சந்ரகௌன்ஸ்
பாடுபவர் : ரஞ்சனி, காயத்ரி

பண்டரி சே பூத மோடே

ஆல்யா கேல்யா தடபி வாடே

பஹூ கேதலிச ராணா

பகஹே வேடே ஹோய மானா


தீதே சவுனகா கோணி

கேலே நஹி ஆலே பரதோணி

துக்கா பண்டரி சே கேலா

புண்ஹ ஜன்ம நஹி ஆலா




----------------------------
தொடர்புடைய சுட்டிகள்:
துக்காரம்.காம்
ரஞ்சனி-காயத்ரி.காம்
விட்டல விட்டல: தி.ரா.ச அவர்களின் பதிவு

Thursday, May 01, 2008

மாதர்பிறை கண்ணியானை : கண்டறியாதன கண்டேன்!

திருக்கைலாயத்தை தேடிச்சென்ற திருநாவுக்கரசர், பூலோக கைலாயமென பெரியவர் ஒருவர் குறிப்பிட திருவையாறு தலத்தை அடைகிறார். அங்கே அவர் தான் கண்ட காட்சியாக பாடுகிறார்:

இதோ, வீதியில் செல்லும் அவர்கள் அழகான பிறைமதியை தன் தலையணியாக அணிந்த சிவபெருமான் மற்றும் உமாதேவியை பாடிச் செல்கிறார்கள். அவர்கள் புதியதாக பறிக்கப்பட்ட பூவோடு நீரையும் எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் போகிறார்கள்.

அவர்கள் பின்னாலேயே போனால் நானும் கோயிலைச் சென்றடைவேனே.

கால்கள் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு தலத்தை அடைந்தேனே. (திருக்கயிலாயம் செல்ல எடுத்துக்கொண்ட முயற்சியினால் என் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சுவடே இல்லாமல் மறைந்து போனதுவே, திருவையாற்றினை அடைந்ததுமே!)

அங்கே ஆண்யானையும், பெண்யானையும் ஜோடியாக காதல் களிப்புடன் வரக் கண்டு,
அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைக் கண்டு தரிசித்தேன். (அன்பே சிவம்!)

இதுவரை கண்டு அறியாத காட்சிகளை (திருப்பாதம், சிவானந்தம்) எல்லாம் கண்டேன் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.

(இந்தப் பாடலில் யானைகள் ஜோடியாக வருவதைக் குறிக்கும் அவர், இந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விலங்கு அல்லது பறவை தன் துணையுடம் வருவதாக குறிக்கிறார்.)
--------------------------------------------------
பதிகத்தின் முதல் பாடல்: (நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம் பதிகம் 3)

மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

---------------------------------------------------------------------
மாதர்பிறை - அழகியபிறை
கண்ணி - நெற்றி/தலையில் சூடும் அணிகலன்
போதொடு நீர் - வழிபாட்டிற்குரிய நீர்
பிடி - பெண் யானை; களிறு - ஆண் யானை
---------------------------------------------------------------------
இந்தப் பாடலை பொன்னியின் செல்வனில், சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர் பாடிக்காட்டுவதாக வரும். சேந்தன் அமுதன் பாடி முடித்தபின், அருகிலிருந்த குந்தவை, செம்பியன் மாதேவியிடம், இந்தப் பதிகம் பிறந்த வரலாற்றைக் கேட்பார். அந்த முதிய பிராட்டி சொன்ன வரலாற்றை, கல்கியின் வரிகளில் இங்கே அப்படியே தருகிறேன். நீங்கள் மெய்மறந்து கேட்டிட:

அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு பெரியவர் அங்கே தோன்றி, "அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச் செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்" என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர் திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும் சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன; பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். "இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை" என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "கண்டறியாதன கண்டேன்!" என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்.

---------------------------------------------------------------
பாடல் : மாதர்பிறை கண்ணியானை

இயற்றிவர் : திருநாவுக்கரசு நாயன்மார்

தலம் : திருவையாறு

இராகம்: செஞ்சுருட்டி

பாடுபவர் : விஜய் சிவா