Saturday, August 30, 2008

அமெரிக்க சுற்றுப்பயணம் போகலமா சிட்டுக்களே?

குழந்தைகளே, அமெரிக்க சுற்றுலா பயணம் போகலாமா?, நீங்களும் வாரீங்களா? உங்களுக்கு அமெரிக்காவில் என்னென்ன இடங்கள் பிடிக்கும்? நியூ யார்க், வாஷிங்டன், ஒர்லாண்டோ, லாஸ் வேகஸ், கலிபோர்னியா டிஸ்னி லேண்ட் இப்படி நிறைய இடங்கள் உங்களுக்குத் தெரியும் இல்லையா? இந்த இடங்களெல்லாம், பெரிய ஊர்கள் அல்லவா? இங்கே இருக்கும் எல்லாமே பெரிசு பெரிசா இருப்பது ஆச்சரியமாக இருக்கு இல்லையா!. ஆனா, இவற்றில் பலவும் செயற்கை அழகு. செயற்கை அழகைக் காட்டிலும் இயற்கை அழகு, இன்னும் இனிமையா இருக்கும். மனதை அப்படியே இளக வைக்கும். இந்தியாவில் இருந்து, சுவாமி விவேகானந்தர் முதன் முறை அமெரிக்கா வந்திருந்தபோது, இங்கே இருக்கிற இயற்கை அழகைப் பார்த்து, அப்படியே பரவசப் பட்டாராம். நீங்களும் விவேகானந்தரைபோல் நாளைக்கு வரவேண்டுமல்லவா, நீங்களும் இந்த இயற்கை அழகை இரசிக்கலாமே!.

சிறுவர், சிறுமியரே, வாங்க, நம் இயற்கைச் சுற்றுலாவைத் துவங்கலாம்.

* அமெரிக்கா மேப் வரைபடத்தைப் பார்த்தவுடன் உங்களுக்கு என்ன உடனே தெரிகிறது?. இரண்டு பக்கமும் இரண்டு பெரிய 'பெருங்கடல்'கள் இருக்குது இல்லையா?. கிழக்குப் பக்கம் அட்லாண்டிக் பெருங்கடலும், மேற்குப்பக்கம், பசுபிக் பெருங்கடலும் இருக்கு இல்லையா? இந்தக் கடல்களும் நிலமும் சேரும் இடத்தில் நிறைய கடற்கரைகள் இருக்கு. (கடல் + கரை = கடற்கரை). கடற்கரையில் என்ன இருக்கும்? நிறைய மணல் இருக்கும், இல்லையா?. அப்புறம் நல்லா காத்து வரும், இல்லையா!


* அடுத்து வரைபடத்தில் நீங்கள் கவனிக்கக் கூடியது, கிழக்குக் கடற்கரையின் கடலில் நீளமாக, நீட்டிக் கொண்டிருக்கும் ஃபோளிரிடா மாகாணம். இங்கே, தாழ்வான சதுப்பு நிலங்களில் நிறைய பறைவைகளைப் பார்க்கலாம். பலவிதமான பறவைகள், பலதூரம் பயணம் செய்து இங்கே வந்திருக்கும். வருடம் முழுதும் இந்தப் பறவைகள், ஒரு இடம் விட்டு ஒரு இடம் என இடம்பெயர்ந்து கொண்டே இருக்கும். அவைகளுக்கு, யாதும் ஊரே, யாவரும் கேளிர். வண்ணப் பறவைகளைக் காணும்போது, மனதில் மகிழ்ச்சி கொள்ள வேண்டும் என்று நம்ம பாரதியார் சொல்லி இருக்காரு இல்லையா! படத்தில் எவர்கிளேட்ஸ் தேசிய பூங்காவில் அழகான வெள்ளை வெளீரென ஒரு கொக்கு இருக்கிறது அல்லவா. இதற்குப் பெயர் - பெரிய வெள்ளை ஹெரான் (The great white heron) என்பது.


* அடுத்து, மேப்பில் கிழக்குப் பக்கதில் நிலத்தின் நடுவே கடல்போல நிறைய நீர் இருக்குதல்லவா? இவை ஐம்பெரும் ஏரிகள் (Great Lakes) எனப்படும்.
இந்த ஐந்து ஏரிகளில் இரண்டில் இருந்து வெளியேரும் ஆறில் இருந்து நயகரா நீர்வீழ்ச்சியே பிறக்கிறதாம். தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் என்று நீங்கள் படிச்சிருப்பீங்க இல்லையா, அதுபோல, இந்த ஐந்தும் பெரியது!


* பிரம்மாண்டமான நயகரா நீர்வீழ்ச்சியைப் பற்றி நாம நிறைய பேரு கேள்விப்பட்டிருக்கோம் இல்லையா. படத்தில் பெரிய படகில், இந்த நீர்வீழ்ச்சிக்கு மிக அருகே சென்று பார்க்கிறார்கள் பாருங்க. இதற்குப் பெயர் 'Maid of the Mist' என்று வைத்திருக்கிறார்கள். Misty-ஆக அந்த இடமே இருக்கு இல்லையா. அதன் பக்கத்திலே போகும்போது, அதன் சாரலில் நாம்ப நனைய, சுகமா இருக்கும் இல்லையா. நம்ப கவிஞர் வைரமுத்து, இந்த இடத்துக்கு வந்து பார்த்தபோது, "இந்த நீர் வீழ்ச்சியில் நீருக்கு இது வீழ்ச்சியல்ல" என்று சொன்னாராம்!.


* அடுத்து, குளிர்காலத்தில் பனியால் நிறைந்து எழில் கொஞ்சும் கொலராடோ ராக்கி மலைத்தொடரின் சிகரங்கள். இங்கே பனிசறுக்கும் சுற்றுலா இடங்கள் நிறைய உண்டு. பனிச்சறுக்குவது மட்டுமல்லாமல், ஸ்னோமொபைல், எனப்படும் பனியில் செல்லும் வாகனத்தில், பனிமலையில் பயணிக்கலாம். டாக் ஸ்லெட்ஜிங் எனப்படும், பனிநாய்களால் கட்டி இழுக்கப்படும் வாகனத்திலும் செல்லலாம். நம்ப பாரதியாரும், 'வெள்ளிப்பனியின் மீதுலாவுவோம்' என்று பாடி இருக்கிறார் இல்லையா!


* அடுத்து மேப்பில், பார்த்தால் உங்களுக்குத் தெரியும், தனியா ஒரு மாநிலம் வடமேற்குப் பக்கமா இருக்கும். அது தான் அலாஸ்கா மாகாணம். இது அமெரிக்காவில் இருக்கும் மாநிலங்களிலேயே பெரிதான மாநிலம். பனி உறைந்த ஏரிகளும், வன விலங்குகளும் இங்கே நிறைய இருக்கு. இங்கே சுற்றுலா பார்க்கப்போகும் மக்கள் நிறைய பேராம். பலர் பெரிய கப்பலில் சென்று பார்ப்பார்கள். இந்த மாநிலம், தனியா இருந்தாலும், அமெரிக்காவோடு ஒன்றிணைந்து, ஒற்றுமையா இருக்கு. அதுபோல நாமளும் ஒண்ணா, ஒற்றுமையா இருக்கக் கத்துக்கணும். பிரிவு, பிரிவு என்று பேசக்கூடாது. அப்படிப் பேசுபவர்களையும், அன்பால், நம்மோடு இணைக்கணும்.


* கலிஃபோர்னியா மற்றும் நெவாடா மாநிலங்களுக்கு நடுவே, தாஹூ ஏரி எனப்படும் பெரிய ஏரி ஒன்று இருக்கிறது. இரம்மியமான இதில் படகுச் சவாரி செய்வது ஒரு இதமான அனுபவம். அடுத்ததாக, இந்த மாநிலத்தின் யோசிமிட்டி அருவியும், அழகான மலைகளும் கண்கவர் காட்சியாக இருக்கும்.


* நமது பட்டியலில் அடுத்து இருப்பது, பிரம்மாண்டமான அகலமும், நீளமும், ஆழமும் நிறைந்த கிராண்ட் கேன்யன் பள்ளத்தாக்கு. இது அரிசோனா மாநிலத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 17 மில்லியன் வருடங்களுக்கு முன்னால், கொலரடா நதியின் அரிப்பால் உருவாகி இருப்பதாக ஆராய்சியாளர்கள் சொல்லும் இவ்விடம், இயற்கையின் விந்தையாக உள்ளது.


* இறுதியாக நம் பட்டியலில் பார்க்கப்போவது, யெல்லோஸ்டோன் மற்றும் கிராண்ட் டெட்டான் தேசிய பூங்கா. பூகம்மம், எரிமலை வெடிப்புகள் போன்ற இயற்கை சீற்றங்களால், பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் புரட்டிப் போடப்பட்ட இந்த நிலப்பகுதி, பல இயற்கை விந்தைகளை தன்னுள்ளே அடக்கியுள்ளது. பெரும் மலைகளும், பச்சை சமவெளியும் அருகேயே பார்க்கலாம். பல வன விலங்குகளில் தஞ்சமாக இருக்கும் இப்பகுதியை தேசிய பூங்காவாக அறிவித்து, பல நூறு வருடங்களாக, இந்தப்பரப்பின் இயற்கைக்கு யாதொரு பாதிப்பும் வராமல் பாதுகாத்து வருகிறார்கள். குழந்தைகளே, நாம் எல்லோரும், நம் இயற்கையை மிகவும் நேசித்துப் பாதுகாக்க வேண்டும்.


அன்புச் சிறார்களே, இந்த ஆன்லைன் இயற்கைச் சுற்றுப்பயணம் உங்களுக்குப் பிடித்திருந்ததா? பல செய்திகளை அறிந்து கொண்டீர்களா, நல்லது. இதுபோல நீங்கள் அறிய வேண்டியவை இன்னும் ஏராளமாக இருக்கு. நீங்களாகவே படித்து அறியலாம். அல்லது, உங்களுக்கு இன்னும் படித்தறியும் வயது வராமல் இருந்தால், உங்கள் அம்மா, அப்பாவையோ அல்லது வீட்டில் இருக்கும் பெரியவரையோ அல்லது உங்கள் அண்ணன் அல்லது அக்காவையோ, படித்துக் காட்டச் சொல்லுங்கள். பொது அறிவுனை ஊட்டும் புத்தகங்கள் நிறைய படிக்க வேண்டும்.

கடைசியாக நாம், நம் சுற்றுப்பயணத்தில் பார்த்த யெல்லோஸ்டோன் பற்றி மேலும் விரிவான கட்டுரையை நான்கு பகுதிகளில் எழுதி இருக்கிறேன். குளிர்காலத்தில் யெல்லோஸ்டோன் எப்படி இருக்கும் என இக்கட்டுரை கூறுகிறது. தவறாமல் அவற்றைப் படிக்க வேண்டும்.
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
இயற்கையை நேசிப்போம், அதில் உறையும் இறையையும் நேசிப்போம்.
என்ன, இன்னொரு நாள் பார்க்கும் வரை, விடைபெறலாமா?. Bye, Bye.

காமெடி திரைக் கதம்பம்

மிஸ்டர் பீன்:


(இங்கே இந்தியாவில் இருந்து இங்கிலாந்தில் குடியேறியவர்களைப் பற்றி என்னவோ சொல்லுகிறார்!)


Nonstop Nonsense: (ஜெர்மன்) (இவற்றின் ஆங்கில ஆக்கம் அந்தக் காலத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வரும்!)


அடி வயிற்றைக் கலக்கும் டொர்னடோக்கள்

டொர்னடோ என்கிற பேரைக் கேள்விப் படாதவருக்கு, நம்ம ஊரில் அதைப்போல வேறொன்றைக் காட்டி - இதைப்போல என விளக்குவதற்கு, ஏதுமில்லாதபடி இருக்கிறது. சுழற்றி இழுக்கும் சூறாவளிப் புயல் காற்று எனச் சொன்னால் அது தோராயமாகத்தான் இருக்கும். வானத்தில் இருந்து தரையை தொட்டுப்பார்க்கும் (இதற்கு 'touchdown' எனப்பெயர்) இதன் நீளம், வானத்தில் இருந்து தரை வரை என்றால், அதன் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான டொர்னடோக்கள் ஏற்படுகின்றன. இவற்றில் சில நொடிகளே நீடிப்பவையும் உண்டு. பெரும் பொருட்சேதங்கள் ஏற்படுத்துவையும் உண்டு. முன் அறிவுப்பு மூலமாக, உயிர்சேதம் மட்டுப்படுத்தப் பட்டாலும், அதன் அபாயம் என்றைக்கும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பூகம்பம், எரிமலை, சுனாமி என இயற்கைச் சீற்றங்கள் பலவும் இருந்தாலும், டொர்னடோக்கள் அவற்றில் இருந்து மாறுபட்டவை. அவை வானத்தில் இருந்து வருவதால், டொர்னடோவின் நகர்வினை யாராலும் முழுமையாக கணக்கிட முடிவதில்லை. இதுவரை நிகழ்ந்தவற்றில் இருந்து கிடைத்த பொதுவான காரணிகளில் இருந்து, டொர்னடோ நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை தோராயமாக மட்டுமே கணிக்க இயல்கிறது. அக்காரணிகள் என்னவென்றால்: தரையின் அருகே இருக்கும் சூடான, அதே சமயத்தில் ஈரப்பதமான காற்று, கிழித்து வீசும் காற்று, உயரம் போகப்போக காற்றின் வீச்சில் தெரியும் திசை மாற்றம் ஆகியவையாகும். இடி மின்னலோடு ஏற்படும் சூறாவளிக் காலங்களில், காற்றும் சுழன்று வீசுவதால், அக்காலங்களில் டொர்னடா நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

அமெரிக்காவில் நிகழும் டொர்னடாக்களில் பெரும்பான்மையானவை, மத்திய அமெரிக்காவில் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் உள்ள காலத்தில் ஏற்படுகின்றன. தெற்கு டகோடா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலம் வரைக்கும் இடைப்பட்ட மாநிலங்களில் தான், இவை அதிகமாக நிகழ்கின்றன. ராக்கி மலைத்தொடர்களில் இருந்து வரும் குளிர்ந்த மற்றும், வரண்ட காற்று, அதே சமயம் தெற்கில் மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து வடக்கே நகரும் சூடான, மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகையில் - எதிர் எதிர் துருவங்கள் சந்தித்தால் என்னவாகும்? மழையும், பனிக்கட்டி மழையையும் பொழிய - இவற்றின் கலவை தான் காலிஃபிளவர் போன்ற தலையுடன் வானத்தை நோக்கி விரியும், டொர்னடோ. டொர்னடோவின் முழு சக்தியையோ, வீச்சையோ வல்லுனர்களால் நேரடியாக அளவிட இயலாததால், அவற்றில் ஏற்படும் பாதிப்புக்களைக் கொண்டே அவற்றை அளவிட வேண்டியுள்ளது. எங்கள் வீட்டுப் பக்கத்தில், டொர்னடோ வருவதற்கு முன்பான ஆலங்கட்டி மழைகளால் மட்டுமே அவர்களின் வீட்டின் கூரைக்கு இழப்புகள் பல ஆயிரம் டாலர்கள். நல்ல வேளை டொர்னடோ தரையைத் தொடவில்லை அன்று. வீட்டின் கூரையின் மேல், படபடவென்று யாரோ கற்களை எறிந்ததுபோல இருக்க, நாங்களோ செய்தி அறிக்கையை கேட்டவாறே, அடுத்த 15 நிமிடங்களுக்கு, குளியலறையில், பாத்ரூம் டப்பில் பதுங்கிக் கொண்டோம்!


டொர்னடோ வரப்போகிறது என்று தெரிந்தால், வீட்டின் அடிமட்டத்திலோ அல்லது வேறு ஒரு பாதுகாப்பான இடத்திலோ, தஞ்சம் அடைய மக்கள் அறிவுருத்தப்படுவார்கள். சராசரியாக, டொர்னடோ உருவாகத் துவங்கிய இடத்தில், அதற்கு கீழே வசிப்பவர்கள், பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்ள இருப்பது 13 நிமிடங்கள் தானம். அதற்குப்பின் டொர்னடோ தரையைப் பதம் பார்க்க வாய்ப்புகள் அதிகம். அதனால், அந்தப்பகுதியை விட்டு பாதுகாப்பான வேறு இடத்துக்குப் பயணிக்ககூட நேரம் இருக்காது. தரையை தொட்டுவிட்டலோ, அங்கு குடியிருப்பு ஏதேனும் இருந்தாலும், அது அநேகமாக, வானத்தில் பறந்திருக்கும். பல இடங்களில், வெளியில் நிறுத்தப்பட்டைருந்த வாகனங்களும், வீட்டின் கூரையும், மேல்தளமும் சிதைந்து சின்னபின்னமாகியுள்ளன.

1996 இல் வெளிவந்த திரைப்படமான 'டிவிஸ்டர்' மிகவும் சுவாரஸ்யமாக டொர்னடோக் கதையைச் சொல்லி இருக்கும். இத்திரைப்படத்திற்குப்பின் டோர்னடோக்களைத் தேடிப்போய் அவற்றைப் புகைப்படம் எடுப்பவர்களும் அதிகமானார்கள். இது உயிருக்கு ஆபத்தான செயல் என்றாலும், அதையும் பணயம் வைத்து, இந்தக் காரியத்தில் இறங்குகிறார்கள். மோசமான தட்பவெட்ப நிலையிலும், பற்கள் கடுகடுக்க, அவர்களின் வாகனங்களை பனிக்கட்டி மழைகள் பதம் பார்க்க, டொர்னடோ தொடருதல் நடைபெருகிறது. சில அஞ்சா நெஞ்சங்கள்(/ளை) டொர்னடோவைக் காட்டுவதற்கு டூர் அழைத்துப்போகும் கைட் போல வேலை செய்வதும் உண்டு. ஆனால் நிச்சயமாக அது நயகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதுபோல எளிதானதாக இருக்காது! :-)

அமெச்சூர் டொர்னடோ வேட்டையாளர்களைப் போலவே, அறிவியல் ஆராய்சியாளர்களும் டொர்னடோக்களைத் தேடிப்போவதுண்டு. நிலையான ராடார் கருவிகளைக் கொண்டு மட்டும் இவற்றை ஆய்வு செய்ய இயலாது. டொர்னடோ நிகழ்ப்போகும் இடத்தில் கொண்டுபோய் டாப்ளர் ராடார் கருவுகளைப் பொருத்துவதால் ஓரளவுக்கு பயனிருக்கிறது. இப்படி ஆராய்சியாளர்கள் தங்களால் இயன்ற அளக்கும் கருவிகளை தயார் செய்து, அங்கு வைத்து விட்டு வந்தால், பல சமயம், இந்த சுழற்காற்றுகள், ஒன்றுமில்லாமல் இற்றுப்போய் விடும். அடுத்த முறை வரை, அவர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

சமீப ஆண்டுகளில் சற்றே முன்னேறியிருக்கும் GPS போன்ற நுட்பங்களும் இந்தப் பணியில் கைகொடுக்கின்றது. டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவற்றுக்கு எவ்வளவு அருகே செல்லமுடியுமோ அவ்வளவு அருகில் சென்று அவற்றைப்பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பது அவசியமாகிறது. இதற்காக, ஆராய்சியாளர்கள், அமெச்சூர் காரார்களையும் உதவிக்கு கொள்கிறார்கள். டொர்னடோ பற்றியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் சின்னச்சின்னக் கருவிகளை, டொர்னடோ வரும் பாதையில் கொண்டுபோய் வைத்துவிட்டு, உடனே அந்த இடத்தைவிட்டு அகன்று விடுவார்கள். அவற்றில் ஒன்றான, 'டின்மேன்' எனப்படும் டொர்னடோக்களை படம் பிடிக்கும் கருவி, பிரபலம். இதன்மூலம், டொர்னடோவைப்பற்றிய தகவல்கள் மற்றும் படங்களை அவை மிக அருகாமையில் வரும் சமயம் பதிவு செய்ய முடிகிறது. இந்த தகவல்களின் உதவியால் வெப்பம், ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் மாறிக்கொண்டே இருக்கும் காற்றின் திசை ஆகியவற்றை மேலும் துல்லியமாக கணிக்க இயல்கிறதாம். தொடரும் ஆராய்ச்சிகள், டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணியைத் தொடருகிறார்கள்.

Friday, August 29, 2008

மகாகவி காட்டும் மரணத்தை வெல்லும் வழி


இடம் : புதுச்சேரி
பாரதியும், குவளைக்கண்ணன் சுவாமிகளும் உரையாடுகிறார்கள்:

பாரதி : கண்ணா, ஆழ்வார்கள் எத்தனை பேர்?
குவளையார் : பன்னிரெண்டு பேர்
பாரதி : ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எத்தனை?
குவளையார் : நாலாயிரம்
பாரதி : அப்படியா, அவர்கள் பன்னிரெண்டு பேர், நாலாயிரம் பாடினார்கள்.
நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!

பாரதியின் மனோதிடத்தை என்னென்று சொல்வது. இப்புவியின் மீதேறி, அதன் நடுவில் ஒரு சிம்மாசனம் வைத்து, அதன் மீது அமர்ந்தவனாயிற்றே. என்ன, அவ்வாறு அவனால் நெடுநேரம் அமர முடிவதில்லை. அவனியிலே மாந்தர் படும் அல்லல் கண்டு ஓடோடி வந்து விடுகிறான். இங்கே, நாலாயிரம் போல், நானொரு ஆறாயிரம் படைப்பேன், நான் ஆறாயிரம் படைத்தால், அந்த ஆழ்வார்கள் படைத்த நாலாயிரம் போல வரும் என நினைத்தானோ!



ஆறாயிரம் பாடுகிறேன் பார் - இப்படிச் சொல்லி முடித்த உடனேயே ஆறாயிரம் பாடும் சங்கற்பத்தினை மேற்கொண்டார். அன்றே பாரதியார் மௌன விரதத்தினைத் துவங்கினார். நாற்பது நாளாக தொடர்ந்தது. எப்போதும் ஏதாவது பாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் பாரதி, மௌனத்தில் இருந்தார்!. மாங்கொட்டைசாமி மற்றும் குள்ளச்சாமி எனுப்படும் சித்தர் - அவரையே பாரதி - தன் மோனகுரு என்கிறார். அதோடு கோவிந்தசாமி மற்றும் யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரின் தாக்கமும் இருந்திருக்கிறது. இவர்கள் மூவரின் நேரடித் சந்திப்புகளும், அரவிந்தரின் அருகாமையும், புதுவையில் பாரதியின் சுதந்திர வேட்கையைத் தணித்து, ஆன்ம தாகத்திற்கு உரமூட்டின.
தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீதேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. (19)
என குள்ளச்சாமியைப் புகழ்கிறார் பாரதி. இதேபோல், கோவிந்தசாமியையும், யாழ்ப்பாணத்து சாமியையும் புகழந்து பாவிசைக்கிறார் இந்தப் பகுதியில்.

மௌனவிரதம் முடித்து, ஆறாயிரம் எழுதத் துவங்குகிறார். ஆனால், அந்தோ, அது அறுபத்தாறோடு நின்றுவிடுகிறது. இதற்கு காரணம் தன் ஆத்ம சக்தியினை வைத்து, விடுதலை பெற்றுத்தருகிறேன் பார், என்கிற வீராவேசமாக புதுவையை விட்டுக் கிளம்பியதாக இருக்கலாம். எனினும் அந்த 66 பாடல்களில் நமக்குத் தரும் அருஞ்செய்திகளில் இருந்து சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

'எனக்கு முன்னே பல சித்தர்கள் இருந்தனர், யானும் வந்தேன் - ஒரு சித்தன் இந்நாட்டில்' என்று தன்னையும் ஒரு சித்தனாக அறிமுகப்படுத்திக் கொண்டு துவங்குகிறார். கடவுள் வாழ்த்தாக, பாராசக்தியைத் துதிக்கிறார். அடுத்ததாக,

மரணத்தை வெல்லும் வழி என்னும் தலைப்பிட்டுச் சொல்கிறார்:
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ? (4)
பொன்னான திருவடிகளே சரணம் எனப் போற்றியபின், அறிவேன் இந்த உண்மையெல்லாம்,
எந்த உண்மையெல்லாம்?
என் முன்னோர்கள் 'எவ்வுயிரும் கடவுள்' என்றதை.

கடவுள் எங்கே இருக்கிறார்? என்கிற தலைப்பிட்டு,
சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்'' லென்று இரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ? (15)
என்கிறார்.
தொடர்ந்து அடுத்தா பாட்டில் தெள்ளத் தெளிவான விளக்கம் சொல்வார்:
...
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே. (16)
அடுத்ததாக அச்சம், ஆசை, கோபம் ஆகியவை அசுர குணங்கள். மரணமில்லா பெருவாழ்விற்கு இவை மூன்றும் விலக்கல் வேண்டும் என்கிறார்.

அடுத்து,
...
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,

வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! (10)

நஞ்சுண்டும் சாகமல் இருப்பது கற்றால், வேறென்ன வேண்டும்?
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறனும் கொண்டு தேம்பாமல், அஞ்சாமல் வாழ்வோம் புவியினிலே.

அடுத்ததாக 'பொறுமையின் பெருமை' என்கிற பகுதியில் இடம் பெற்றுள்ள நான்கு பாடல்களில் ஒன்று,
தணிகைமலை உறையும் வேலனை பொறுமையின் பெருமையெனச் சொல்கிறார்:

திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற்றிருக்கும் அதன் பொருளைக் கேளீர்!
திருத்தணிகை என்பதிங்கு பொறுமை யின்பேர்.
செந்தமிழ்கண்டீர், பகுதி'தணி'யெனுஞ்சொல்,
பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
'பொறுத்தவரே பூமியினை ஆள்வார்'என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்! (11)
பின்னர் 27ஆம் பாடல் முதல் 36ஆம் பாடல் வரை உபதேசம் எனத்தலைப்பிட்டு பத்து பாடல்கள் எழுதி இருக்கிறார். இவையெல்லாம் சித்தர் பாடல்கள் போல் இருப்பன.
...
வாசியை நீ கும்பகத்தால் வலியக்கட்டி
மண்போல, சுவர்போல வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதிற் பயனில்லை; அனுபவதாற்
பேரின்ப மெய்துவதே ஞான மென்றான் (28)
வாசி : மூச்சு; கும்பகம் : மூச்சை அடக்கியாளும் யோகமுறை
கிணற்றில் ஆழத்தில் பிம்பமாய் ஆதவன் தெரிவதுபோலே, ஈசனை, உன் ஆன்மாவில் சச்சிதானந்தத்தின் பிம்பமதைக் காணத்தெளிவாய். இதைப்பேசிப் பயனில்லை. உன்னால் உன்னில் உணர்ந்தால் மட்டுமே அது ஞானம்.

பாரதி அறுபத்தாறு - முழுமைக்கும் இங்கே பார்க்கவும்.

சுத்த அறிவே சிவம் என்று பறைசாற்றும் பாரதி, எல்லா உயிர்களிலும், எல்லா திடப்பெருள்களிலும் இருப்பது இறைவன் என அறுதியிட்டுக் கூறுகிறார். மேலே பாரதி சொல்லும் அசுர குணங்களை அழித்து அச்சம் ஒழித்து, பொறுமையுடன் அந்த இறைவனை, பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலாவின் வண்ணத்தில் பார்க்கத் தெரிந்தவரே, மரணத்தை வெல்வார் என்பது திண்ணமன்றோ!

மரணத்தை வெல்லும் வழி சொன்ன பாரதி ஏன் மாண்டான் என்போர் சிலர். மாண்டதெல்லாம் மரணமில்லை மதியிலிகாள், மரணத்தை வென்ற பின்னே, மரணம் வருமோ பின்னே? காலனைக் காலால் மிதித்தவனுக்கு ஏது மரணம்? ஸ்தூல உடலில், பரமனைப்பார்த்த பின்னே, இந்த உடலும் ஒரு பொருட்டோ, என அதனைத் துய்த்த பாரதி, அமரன். பாரலுகில் இவனைப்போல் இன்னொருவன் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை.

Thursday, August 28, 2008

ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு...

ழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு அண்ணார்ந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை - அது என்ன? என்பார்கள்.
'தேங்காய்' என்று உடனே பதில் வரும்! பசுமரத்தாணி போல பதிந்து விட்டது இவ்விடுகதை. சிறுவயதில் விடுகதையாய் இந்தக் கேள்வி வரும் போதெல்லாம், அதோடு சேர்ந்து ஆவலும் இருந்ததுண்டு. ஒரு தேங்காயை மண்ணில் நட்டு வைத்தால், அது மரமாய் வளர்ந்தபின் அந்த ஒன்றில் இருந்து தொண்ணூறு தேங்காய் வருமாமே! (இப்போது கேட்டால், தொண்ணூறு என்ன, எல்லாமே பரமன் ஒருவனில் இருந்து வந்ததுதான் என வேதாந்தம் சொல்வேன்!)

காஞ்சிபுரத்தில் சொந்தவீட்டில் வசித்த போது, வீட்டின் இடப்பக்கம் முழுதும் செடிகள் நிறைந்த தோட்டமாய் அம்மா அமைத்திருந்தார்கள். வாழை மரமும், செம்பருத்தி, துளசி, டிசம்பர் பூக்கள், கனகாம்பரம், நந்தியாவட்டை போன்ற செடிகளும் இருக்கும். டிசம்பர் மாதத்தில் ஏராளமாய் பூக்கும் டிசம்பர் பூக்களை பறிப்பதில் ஒரு அலாதி ஆனந்தம் இருக்கும். குட்டி குட்டியாய் பூத்திருக்கும் அந்த பூக்களைப் பறித்துப் பறித்து தட்டில் சேர்க்க, இன்னமும் நிறைய இருக்கே என்ற மகிழ்ச்சியினால்!. அவற்றிலும் விதவிதமான வகைகள் - வெள்ளை, வெளிர் சிவப்பு, ஊதா, நாமம் என பல வகைகளில்!. வீட்டு வாசலில் கொடியாக படந்திருக்கும் நித்திய மல்லியும் அதன் அருகே, சம்பங்கிப் பூவின் கொடியும் படர்ந்திருக்க, சொல்லவே வேண்டாம், நறுமணமே, நான் இங்கே இருக்கிறேன் எனச் சொல்லும்!

தக்காளி,மணத்தக்காளி,சுண்டைக்காய் ஆகிய செடிகளும் இருந்தது. மனத்தக்காளி காய்க்கையில், காய் பச்சை நிறத்திலும், பின்னர் பழுத்தவுடன் திடீரென கறுப்பு நிறத்திலும் மாறி இருப்பது வியப்பைத் தரும். கனிந்த மணத்தக்காளிகளை, உடனே பறித்து வாயில் போட்டுக் கொள்வேன்! மணத்தக்காளிக் கீரைக் கூட்டும் அம்மா செய்து பறிமாற, அமுதாய் இருக்கும். ஆனால் பொதுவாக, காய்களாக இருக்கும்போதே அவற்றைப் பறித்து, மோரில் ஊறவைத்து, பின் வெய்யிலில் காய வைத்து, வற்றலாக்கி விடுவது வழக்கம்.

இந்தச் செடிகளை ஆடுமாடுகள் வந்து மேய்ந்திடாமல் தடுக்க, முதலில் 'ஆடாதோடா' செடிகளை வேலி போல நட்டு வைத்திருந்தார்கள். பின்னாளில் காம்பௌண்ட் சுவர் கட்டும் வரை, இந்த இயற்கையான வேலியே காப்பு! வீட்டில் இருந்து வெளியேறும் நல்ல தண்ணீர் எல்லாம் ஒரு கால்வாய் வழியாக செடிகளுக்குச் செல்லுமாறு வழி அமைத்திருப்பார்கள். சின்னப்பையனாய், அந்தத் தண்ணீர் செல்ல இயலா மற்ற இடங்களுக்கு ஹோஸ் பைப் மூலம் செடிகளுக்கு தண்ணீரை விடுவதும், பூக்களைப் பறித்து வந்து பூஜை அறையின் சுவரில் தலை முன் பக்கமாய் 'சற்றே சரிந்து நிற்கும்' சாமிப்படங்களுக்கு (செம்பருத்திப் பூவினை) வைத்ததும் இன்னும் மறக்கவில்லை!

ஓர் ஆண்டு, அவரை விதைத்து, அது கொடியாய்ப் படர, அதை, மொட்டை மாடியில் இருந்து கீழே வரும் மழைநீர் வடிகால் குழாயில் கட்டி விட, அது கொஞ்சம் கொஞ்சமாய் படர்ந்து, மொட்டை மாடியையே தொட்டு விட்டது. பின்னர் அங்கேயும், துணி உலர்த்தும் கம்பியில் தொடர்ந்து படர்ந்து வளர்ந்தது. பின்னர் அவரை காய்க்கும் பருவத்தில், அவரைக்காய் எக்கச்சக்கமாய் காய்த்துத் தள்ளியது!. வீட்டின் முன்புறத்தில் செடியாய் வைத்த முருங்கையும், சில ஆண்டுகளில் மரமாய் வளர்ந்து சுவையான முருங்கைகளை அள்ளித் தந்தது. முருங்கைக்காய்களைப் பறிக்க நீண்ட குச்சியில் ஆன தொரடு ஒன்றிருக்கும். (கே.ஆர்.எஸ், இந்த தொரடு என்கிற சொல்லைத் தேடியதில் தெரிந்தது - நீங்கதான், இந்த சொல்லைப் பதிந்த முதல் மற்றும் ஒரே பதிவர்!). தொரடின் நுனியில் இருக்கும் கொக்கியை தூக்கிப்பிடித்து, முருங்கையின் காம்புப் பக்கத்தில் இழுத்தால், கிளை முறியாமல், காய் மட்டும் கீழே வந்து விழும்.

----------------------------------------------------------
இவையெல்லாம் சின்னவயதின் நினைத்துப் பார்க்க இனிக்கும் நினைவுகள். இப்போ, அங்கிருந்து ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து அமெரிக்கா வருவோம். அங்கே அத்தனைச் செடிகளைப் பார்த்துவிட்டு, இங்கே?
அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஏதோ கொஞ்சம் கொஞ்சம், வீட்டைச் சுற்றி வளர்த்த பூச்செடிகளை, நீங்களே பாருங்களேன். இவற்றைத் தவிர தொட்டிச்செடியாக, ஸ்டார் மல்லியும், துளசியும், ஆரஞ்சும் உண்டு.

* செம்பருத்தி (மே மாதம் முதல் செம்டம்பர் வரை பூக்கிறது); வெளிர் சிவப்பு (இது தவிர வெள்ளை நிறத்திலும் பூக்கிறது) - பெரினியல் (வசந்த காலத்தில் மீண்டும் துளிர்த்திடும்)


* ரோஜா (மே முதல் அக்டோபர் வரை பூக்கிறது); சிவப்பு - பெரினியல்


* டே லில்லி (ஜூலை மாதம் மட்டும் பூக்கும்) (வெளிர் சிவப்பு மற்றும் வெள்ளை) - பெரினியல் பல்ப்


* ஃபோர்சைத்தியா (மார்ச், ஏப்ரல் மாதம் மட்டும் பூக்கும்) (மஞ்சள்) - பெரினியல்


* கிளாடியோலஸ் (ஜூன், ஜூலை மாதம் மட்டும் பூக்கும்) - பெரினியல் பல்ப்

Wednesday, August 27, 2008

நரேந்திரனின் பயிற்சிக் களம் - 3 : பக்தியா?, ஞானியா?


விவேகானந்தரின் வாழ்க்கைச் சரித்திரம் தனை இந்தத் தொடரில் படித்து வருகிறோம்.
மெய்யன்பர்களே, தொடர்ந்து படிக்கலாமா?

கடந்த பகுதிகள்:
பகுதி 1
பகுதி 2

கிட்டத்தட்ட இப்போது, நரேந்திரன், ஸ்ரீஇராமகிருஷ்ணரின் சிறப்பு சீடன் எனப்பெயர் பெற்றுவிட்டார். சிறப்பானதொரு பயனுக்காக, இராமகிருஷ்ணராலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவனல்லவா!. எல்லா மாணவர்களுக்கும் சமமாக தன் சக்தியினைச் செலவிட்டாலும், எப்போதும் இராமகிருஷ்ணர் நரேந்திரன் மீது ஒரு 'கண்' வைத்திருந்தார். இடர் வரும் போதெல்லாம், இராமகிருஷ்ணரின் உதவியை நாடினார் நரேந்திரன். ஒருமுறை பக்கத்தில் இருந்த ஒரு ஆலையில் இருந்து வந்த சங்கூதும் சப்தம் அடிக்கடி வர, அது தன் கவனத்தை திசை திருப்புவதாகச் சொல்ல, இராமகிருஷ்ணரோ, அந்த சப்தத்தின் மீதே கவனத்தை நிறுத்தச் சொன்னாராம். இன்னொருமுறை, தியானம் செய்யும் போது, தன் உடலை மறக்க கடினப்பட, இராமகிருஷ்ணர் நரேந்திரனின் புருவ மத்தியில் ஒரு விரலை அழுத்தி, அந்த அழுத்தத்தைக் கவனிக்கச்சொல்ல, அந்த செயல்முறை நரேந்திரனுக்கு உதவியாய் இருந்தது.

ஒருமுறை, மற்ற சீடர்களில் சிலர் இறைஇன்பத்தில் ஆட்டம் வந்து ஆடிட, நரேந்திரன், எனக்கு மட்டும் ஏன் இப்படி ஏற்படுவதில்லை என தன் ஆசிரியரிடம் கேட்க, அவர் சொன்னார்: "குழந்தாய், ஒரு பெரிய யானை, சிறிய குளத்தில் இறங்கினால், அதிலுள்ள தண்ணீர் நாலாபக்கமும் தெறித்தோடும். ஆனால் அதே யானை கங்கையில் இறங்கினால், ஆற்றில் சலசலப்பேதும் இல்லை. நீ குறிப்பிட்டவர்கள், அவர்களின் மிகக் குறைந்த அனுபவத்தால் கூத்தாடுகிறார்கள். நீயோ, பெரும் ஆற்றுக்கு ஒப்பானவன்." என்றாராம்.

மற்றொருமுறை, அதிகப்படியான இறையருள் தந்த ஊக்கத்தினால், சற்றே பயந்துவிட்டார் நரேந்திரன். அதைப்பார்த்த இராமகிருஷ்ணர், அவரிடம் வந்து, 'இறைவன் இனிப்பான கடல் போன்றவன். நீ அதில் மூழ்குவதற்கு அஞ்சுவானேன்?
ஒரு கோப்பையில் இனிப்பான ரசம் ஒன்று நிறைந்திருக்கிறது. அந்தப்பக்கம் மிகவும் பசியான தேனீ ஒன்று வருகிறது. அந்த தேனீயாக இருந்தால் நீ என் செய்வாய்?' என்று வினவினார். நரேந்திரனோ, 'நானாக இருந்தால் அந்த கோப்பையின் விளிம்பில் கவனமாக உட்கார்ந்து கொண்டு, மெதுவாக அந்த இரசத்தைப் பருகப்பார்ப்பேன். இல்லாவிடின், அந்த இரசத்தில் தவறி விழுந்து மூழ்கி விட்டால், உயிரல்லவோ போகும்?' என்றாராம். இராமகிருஷ்ணரோ, 'நல்லது, ஆனால் நாம் இங்கே இரசமாக பார்ப்பது - பேரின்பம் தரும் சச்சிதானந்தக் கடல். இங்கே இறப்பென்பதே இல்லை. யாராவது இறை அன்பைப்போய் அதிகம் எனச் சொல்ல இயலுமா? எவ்வளவானாலும், அது அதிகமில்லை. நீ அந்தக் கடலில் ஆழத்திற்கு செல்ல வேண்டும்' என்றாராம்.

பின்னொருநாள், ஆசரமத்தில் மாணவர்கள் அனைவரும் இறைவனின் இயல்பைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர். இறைவன் அவதாரமெடுத்து உண்மையா அல்லது இறைவன் எப்போதும் உருவமற்றவனா - இப்படியெல்லாம் விவாதங்கள். இவற்றில் நரேந்திரனும் உண்டு. நரேந்திரனோ, தனது கூரிய சொல் ஆற்றலால் அந்த விவாதத்தை பிரித்து மேய்ந்து, எல்லோரையும் வாயடைத்துப் போகும்படி செய்து விட்டு, அந்த வெற்றியில் பெருமிதம் கொண்டார். அவர்களின் விவாதத்தை இரசித்து வந்த இராமகிருஷ்ணர், அது முடிந்ததும், ஒரு பாட்டும் பாடினார். அதன் வரிகள்:

எப்படியெல்லாம் யோசிக்கிறாய் மனமே
எம்பெருமானை அறிய,
எப்படியெல்லாம் யோசிக்கிறாய் மனமே?

இருட்டறையில் அடைத்த பித்து
பிதற்றுவதுபோல் அல்லவோ நீ?

அன்பால் மட்டுமே அடையத்தக்கவன் அவன்,
அன்பிலாமல் அவனை அளக்கத்தான் இயலுமோ?

உறுதியால் மட்டுமே அவனை அடைய இயலும்,
மறுப்பினால் ஒருபோதும் இயலாது.

வேதமோ, தந்திரமோ மேலும் ஆறு தரிசனமோ
ஒன்றும் உதவாது என அறிவாய்.

இதன் பொருளை உணர்ந்த நரேந்திரன், அறிவால் மட்டும் இறைவனை அளவிட, அவனை அறிந்திட முடியாது என உணர்ந்தார்.

உண்மையில், விவேகானந்தரின் இதயத்தில் பெரும் இறை அன்பு நிறைந்திருந்தது. அதை அவர், அவ்வளவாக எல்லோருக்கும் வெளிப்படுத்தியதுதான் இல்லை. ஒருமுறை இராமகிருஷ்ணர், நரேந்திரனின் கண்களைக் காட்டி, 'இறை பக்தனுக்கு மட்டுமே இப்படி இளகிய பார்வை இருக்கும். ஞானியின் கண்களோ வரண்டு இருக்கும்.' என்றாராம்.
பல ஆண்டுகளுக்குப் பின், விவேகானந்தர், தன்னையும் தன் குருவின் மெய்ஞான நிலைப்பாட்டினையும் ஒப்பிட்டு இவ்வாறு சொன்னாராம் : "என் குருவோ உள்ளே பெரும் ஞானி; ஆனால் வெளியே மற்றவர் பார்வைக்கு பக்திமான். நானோ உள்ளே பக்தியாளன்; வெளியில் உங்கள் கண்களுக்கு ஞானியாகத் தெரிகிறேன்." என்றாராம். அதாவது, இராமகிருஷ்ணரின் மிகப்பெரும் ஞானமெல்லாம், மிக மெல்லிய பக்தி எனும் திரையால் மூடப்பட்டிருந்தது என்றும் தன் பக்தியெல்லாம் தன்னுள்ளேயே இருப்பதை மற்றவர் அதிகம் அறியார், ஆனால், தான் செய்யும் பிரசங்கங்களினால், தான் ஞானிபோல தோன்றிடச் செய்கிறது என்கிற பொருளில்.

(நாம் இந்த புத்தகத்தை தொடர்ந்து படிக்க இருக்கிறோம், நீங்களும் தொடர்ந்து வரவும்.)

உசாத்துணை : சுவாமி விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தர்.

Tuesday, August 26, 2008

தமிழ் மூவரில் ஒருவர், அருணாசலக் கவிராயர்

மிழ் மூவர் என்று நம் இசை அறிஞர்களால் போற்றப்படும் மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் அவர்களைப் பற்றி இந்த இடுகையில் பார்க்கப்போகிறோம். தமிழில் கீர்த்தனைகள் உருவாக்கிய முன்னோடிகளான இம்மூவரில், மற்ற இருவரான முத்துத்தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை பற்றி ஏற்கனேவே முன்பொரு இடுகையில் பார்த்தோம்.

அருணாசலக் கவிராயர் (1711-1779) தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பெற்றவர். இவரது ஆக்கங்களில் முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது, 'இராம நாடகக் கீர்த்தனம்' எனப்படும் இசைக் காவியம். இராமயணத்தில் வரும் முக்கிய நிகழ்சிகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை கீர்த்தனைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இப்பாடல்களை இவர் இயற்றியும், தன் உதவியாளர்களைக் கொண்டு அவற்றுக்கு இசை அமைத்தும், இவற்றை மக்களிடையே பரப்பினார். நடனம் மற்றும் நாட்டிய நாடகங்களிலும், கச்சேரிகளிலும் இன்றளவும் இப்பாடல்களைப் பாடக் கேட்கலாம். கம்பரைப்போலவே, இவரும் தனது இராம நாடகக் கீர்த்தனையை திருவரங்கக் கோயிலில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அரங்கேற்றத்தின் போது பாடியதுதான் புகழ்பெற்ற 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாடல். 'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' போன்ற புகழ் பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிராயர்.

முன்னொரு முறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகை இட்டபோது, தஞ்சைப்படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, அருணாசலக் கவியாரை அழைத்து சிப்பாய்களுக்கு முன்னால் பாடச் சொன்னார்களாம். அவரும் 'அனுமன் விஜயம்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, 'அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?' என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
'அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?'
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
"ராமசாமியின் தூதன் நானடா ராவணா!", என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், 'பாய்ந்தானே அனுமான்', என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.

சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சிர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன இவர் இயற்றிய இதர நூல்கள்.

இவரது பாடல்களில் என் மனதைக் கவர்ந்தவை:
  • ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
    இராகம் : மோகனம், தாளம் : ஆதி
    பாடுபவர் : சுதா ரகுநாதன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே
    இராகம் : பைரவி, தாளம் : ஆதி
    பாடுபவர் : எம்.எஸ்.சுப்புலஷ்மி
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை, இராகவா
    இராகம் : வசந்தா, தாளம் : ஆதி
    பாடுபவர் : சௌம்யா
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே
    இராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி
    பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • எப்படி மனம் துணிந்ததோ என் சுவாமி
    இராகம் : ஹூசைனி, தாளம் : கண்ட சாபு
    பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

    பாடலை இங்கு கேட்கலாம்:
    Eppadi Manam .mp3


பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக 'நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்' அல்லது 'பவமான சுதடு படு பாதார விந்த முலகு' பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:

எடுப்பு / பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

தொடுப்பு / அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

முடிப்பு
(சஹானா சரணம்)
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

அரசியல் துப்புரவு தேவை இப்போது.

ந்தியாவிலும், ஏன் உலகெங்குமே மக்களாட்சி என்ற பெயரால் அரசியல்வாதிகள் பெரும்பாலும் சுரண்டல் சுண்டெலிகளாய் கொழுத்துப் பெருத்து, வாக்களித்த மக்களின் வாயில் வாய்க்கரிசி மட்டுமே போட்ட வண்ணம் இருப்பது நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர, அரசியல்வாதிகளின் சுயநல ஆட்சிதான் இங்கே அரங்கேறிக் கொண்டிருக்கிறது. பொதுஜன வாக்காளன், வாக்கிடுவதோடு தன் வாக்குரிமையை பயன்படுத்திய மனநிறைவில், அடுத்த தேர்தல் வரை தன் உரிமைகள் அனைத்தையும் இழந்து விடுகிறான். ஆட்சிக்கு வந்தோர் வைத்ததே சட்டம், தைத்ததே திட்டம், தந்ததே பட்டம். இதற்கிடையில், வாக்காளனுக்கு அரசியல் கசந்துவிடக் கூடாதே என்பதற்காக, ஆயிரமாயிரம் திரை மறைவு நாடகங்கள், கேளிக்கை கூத்தாட்டங்கள்.

ஒரு நாட்டின் முன்னேற்றத்தில் அரசியல் அமைப்பு பெரிதும் அங்கம் வகிக்கிறது. அரசாங்கம் நல்ல திட்டங்களை செயல்படுத்தினால்தானே, நாடு முன்னேறும். திட்டங்களா, இவர்களுக்கு தங்கள் நாற்காலியை தக்க வைப்பதற்கும், தங்கள் கல்லாப்பெட்டியை நிரப்புவதற்குமே நேரம் சரியாய் இருக்கும்போது, திட்டங்கள் தீட்டுவதெப்போது? அரசியல் கட்சிகளின் அமைப்பு எப்படி இருக்குமோ, அப்படித்தான் அந்த அரசியல் கட்சிகளின் ஆட்சியும் இருக்கும். ஒரே கட்சிக்குள்ளேயே, ஆயிரம் கோட்சிப்பூசல்கள், அடிதடி உதைகள்.

அரசியல் அமைப்புகள் இப்படி உடைந்து போயிருக்கையில் என்ன செய்தால் இவற்றை சீரமைக்கலாம் என யோசித்தபோது எனக்குத் தோன்றிய சில சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். இவற்றில், ஒருசில குறைபாடுகள் இருக்கலாம். ஆனால் இவற்றில் ஏற்படக்கூடிய நன்மைகளை கணக்கிடும் போது, குறைபாடுகளை விட நன்மைகள், அதுவும் நமக்கு இன்றைய நிலையில் மிகவும் தேவையானவை அதிகமாக கிடைக்கும் என நினைக்கிறேன்.

1) முதலில் ஆயிரத்தெட்டு கட்சிகள் இருக்கும் இந்த நிலையை மாற்றி அமைக்க வேண்டும். இரண்டுக்கு மேல் வேண்டாம் கட்சிகள். வலது சாரிகள் அனைவரும் ஒரு கட்சியிலும், இடது சாரிகள் ஒரு கட்சியிலும் இணையட்டும். வலது சாரிகளும், இடது சாரிகளும் போட்டியிட்டு ஆட்சி அமைக்கட்டும்.
* இதனால் என்னவாகும்? நாளடைவில், அரசியலில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கை குறைவாகும்.
* எண்ணிக்கை குறைந்தால் என்னவாகும்? போட்டியும், பூசலும் குறையும். ஒன்றாக உழைப்பார்கள்.
* தேர்தலுக்குப்பின் எந்த ஒரு கட்சிக்கும் அருதிப் பெரும்பான்மை கிடைக்காமல், ஒரு பெரிய பட்டியலாய் கட்சிகள் கூட்டணி அமைத்து, அவர்களுக்குள் ஒன்றுக்கும் ஒப்புக்கொள்ளாமல் நடக்கும் குழப்பங்கள் குறையும்.
* வலது - இடது என எதிர் எதிர் சித்தாந்தங்களைக் கொண்ட அரசியல் கட்சிகள் அரியணையை பிடிப்பதற்காக தேர்தலுக்குப் பின் கூட்டணி கொள்ளும் சந்தர்ப்பவாதம் தவிர்க்கப்படும்.

2) அடுத்ததாக, அரசியலுக்கு வருபவர்கள் குறைந்தபட்சம் சில அரசியல் தேர்வுகளை எழுதி அவற்றில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமென்றால், திருக்குறள் முதலான நீதி நெறி நூல்களை கற்றுத் தேற வேண்டும். கற்க, பின் நிற்க அதற்குத் தக: தேர்ச்சி பெற்றபின் (மருத்துவர்கள் முதலில் house surgeon ஆக internship இல் இருப்பதுபோல்), நடைமுறை பயிற்சிக்காக குறைந்தது ஐந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு, இவர்கள் தூய, எளிய பொதுநலச் சேவை வாழ்க்கையை வாழ்ந்து காட்ட வேண்டும். அதன் பின்னரே, இவர்கள் அரசியலில் எந்தப் பதவிக்கும் வரத் தகுதியானவர்கள். இந்த முறை மட்டும், வெற்றிகரமாக நடைமுறைப் படுத்தப் பட்டால், தேர்தலையே தவிர்த்துவிட்டு, தேர்வு ஒன்றே போதும் என்னும் அடுத்தகட்ட நிலைக்குப் பயணிக்கலாம், அல்லது தேர்வு பெற்றவர்கள் அதிகமாக இருக்கும் பட்சத்தில் மட்டும், அவர்களுக்குள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படலாம்.

3) சமீபத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.என். அகர்வால் மற்றும் ஜி.எஸ். சாங்வி ஆகியோர் 'இந்த நாட்டை கடவுளாலும் காப்பாற்ற இயலாது' என மனம் வெதும்பிச் சொன்னார்கள். எதனால்? அரசு குடியிருப்புகளைச் சட்டவிரோதமாக ஆக்கிரமித்திருக்கும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய சட்டத்திருத்தம் கொண்டு வர அரசு மறுத்து விட்டதால். இதுதான் இன்றைக்கு இருக்கின்ற நீதிமன்ற அதிகாரம். இது மாற வேண்டும். நமது நீதித் துறை மிகவும் வலுப்பட வேண்டும். சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும். தவறிழைப்போர்களுக்கான தண்டணைகள் கடுமையாக்கப் பட வேண்டும். உதாரணத்திற்கு, குற்றம் நீருபிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவருக்கு நேரடியாக குற்றம் இழைத்தவர், பாதிப்புக்கு ஏற்றதுபோல, ஒரு பெரிய அபராதத் தொகையை நஷ்ட ஈடாகத் தர வேண்டும். குற்றத்தை ஒப்புக்கொண்டு, பொதுமன்னிப்பு கேட்பவருக்கு, கவுன்சலிங் பெற்றுக்கொள்ள கட்டாயமாக அனுப்பப்பட வேண்டும். இதற்காக, அரசு சாரா (NGO) கவுன்சலிங் துறை ஒன்றி அமைக்கப்பட வேண்டும். கூடுதலாக அவர் மீண்டும் அரசியல் போன்ற பொதுநல வாழ்க்கையில் ஈடுபட வேண்டுமானால், மீண்டும் பொதுநலச் சேவையில் சில ஆண்டுகளுக்கு தன்னலமற்ற தொண்டாற்றி, தன் களங்கத்தை முதலில் துடைத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டு மக்களுக்கு, அரசு மற்றும் அரசியலில் இருக்கும் சார்பு பெரிதளவும் குறைக்கப்பட வேண்டும். முடிந்த வரை, ஒவ்வொரு துறையும், அரசியல் தலையீடின்றி நேரடியாக மக்களுக்குப் பயன்பட வேண்டும். எங்கே அரசாங்கத்தின் ஈடுபாடு அவசியம் தேவைப்படுகிறதோ, அங்கு மட்டுமே அது தன் கவனத்தை செலுத்த வேண்டும். அரசியல் தூய்மையோடு, நாட்டை முன்னேற்ற சீரிய திட்டங்களை தீட்டிட முனைந்தால், நாம் நாடு விரைவில் தன்னிறைவை எட்டி, சமுதாய வளம் மேம்பட்டு நிற்கும். அதற்காக, அரசியல் துப்புரவு தேவை இப்போது.

Monday, August 25, 2008

நம் சமயம் - நோக்கமென்ன?

சமயத்தின் நோக்கம் மனிதனை சமைப்பது - மனிதனைப் பக்குவப்படுத்துவது - இப்படிச் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறோம்.

நோக்கம் நிறைவேறி இருக்கிறதா?
நிறைவேறிக் கொண்டிருக்கிறதா?
அல்லது இனிதான் நிறைவேறுமா?

இந்த அறிவியல், தொழில் நுட்ப உலகில் சமயத்தால் எதையும் சமைக்க முடியுமா என்ன?

இந்த எல்லா கேள்விகளுக்கும் எளியதொரு நிகழ்ச்சியை மேற்கோள் காட்டுகிறேன். சில நாட்களுக்குமுன் இங்கே வானொலியில் காதில் கேட்ட கதைதான் இது:

அமெரிக்காவில் பெரும்பாலானோர் அன்றாடம் காய்ச்சிகள். நன்றாக உழைத்து பணம் சம்பாதிப்பது, அவற்றை நன்றாக அனுபவித்து செலவழிப்பது, இதுவே அவர்களின் தாரக மந்திரம். சேமிப்பது வெகு குறைவான பணமே. அப்படிப்பட்ட ஒருவர், வானொலியில் நடக்கும் ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளரை தொலைபேசியில் அழைத்து தன்னைப்பற்றிய செய்தியை அவரே சொல்கிறார்:

"எனக்கு இரண்டு குழந்தைகள். அன்றைக்கு குடும்பமாக சர்ச்சுக்குப் போயிருந்தோம். அன்றைக்கு சிறப்பாக ஒவ்வொருவரும் ஒரு சிறப்பு பிரார்த்தனை செய்து கொள்வதாக நானும், என் மனைவியும், மற்ற குடும்ப நண்பர்களும் பேசிக்கொண்டோம். இதை குழந்தைகளும் கேட்டு அவர்களும் ப்ரார்த்தனை செய்து கொண்டார்கள் போலும். ப்ரார்த்தனை முடிந்தவுடன், நான் குழந்தைகளிடம் ஆவலுடன் கேட்டேன், அவர்களின் ப்ரார்த்தனை என்னவென்று. அதற்கு அவர்கள் சொன்னார்கள் - 'நம் மாமா அவர்களுக்கு சீக்கிரம் வேலை கிடைத்து அவரது துயர்கள் எல்லாம் தீர வேண்டும்' என்று. அவர்கள் சொல்வது உண்மைதான். அவரோ சென்ற சில மாதங்களாக வேலை இழந்து, பல கடன்கள் கழுத்தை நெறிக்க, படும் துன்பங்களை சொல்லி மாளாது. அவரின் குழந்தைகள் பாதி நேரம் எங்கள் வீட்டில் தான் தற்காலிக தஞ்சம். இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு, இப்படி இன்னொருவர் துன்பம் தீர வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டிருக்கிறதே, மிக்க நன்றி இறைவா, என ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கும் அதே வேளையில், இன்னொரு உண்மையும் என்னை இடித்து உறைக்கத் துவங்கியது. எங்கள் குடும்பத்தைப் பற்றியான பயம் தான் அது. எங்களுக்கும் கிட்டத்தட்ட 36,000 டாலர்கள் வீட்டுக் கடன்கள் இருக்கின்றன. நாங்கள் கணவன் மனைவி இருவரும் சம்பாதிப்பதால், ஏதோ கடனின் வட்டியையாவது அடைக்க முடிகிறது. இதுவே ஒருவராவது, வேலை இழக்கும் படி நேர்ந்தால், என்னவாகும் என நினைத்துப் பார்த்தேன். என் குழந்தைகள் முகத்தையும் ஒருமுறை பார்த்தேன். உடனே முடிவுக்கு வந்தேன். இந்தக் கடன்களையெல்லாம் எப்படியாவது அடைத்துவிடுவது என்று. வீட்டுக்கு வந்தவுடன், மனைவியுடன் கலந்து பேசி, இதற்கான திட்டத்தை தயார் செய்தோம். இருவரும் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் கூடுதலாக வேலை செய்வதாக முடிவு செய்தோம். வீண் செலவுகளையும் குறைத்துக் கொண்டோம். மாதத்திற்கு 2,000 டாலர்கள் என சேமிக்க, சென்ற 18 மாதங்களில் சேமித்ததை நேற்றுதான் வங்கியில் செலுத்தி, எல்லா கடன்களையும் அடைத்து விட்டோம். இன்றில் இருந்து நாங்கள் Debt Free!."
என்ற மகிழ்ச்சியான கூதுகலத்துடன் சொல்லி முடித்தார் அவர்.

இந்த கதைச்செய்தியில், ப்ரார்த்தனை, குழந்தைகளிடம் ஆன்மிகம் போன்ற அருஞ்செய்திகள் இருந்தாலும், நான் முக்கியமாக குறிப்பிட விரும்புவது வேறு ஒன்றை. இந்தச் சம்பவம் நடந்த இடமான சர்ச் வளாகத்தை. சர்ச் என்னும் 'ஆலயம்' எப்படிப் பட்ட இடம்? எல்லோரும் ஒருவர் மத்தியில் ஒருவர் கூடி தங்கள் துயர் தீர இறைவனை வேண்டும் இடம். 'வேண்டுதல்' எப்போது நடக்கும். ஒருவர் மனமுருக நடக்கும். இந்த சம்பவக் கதையில், அந்த குழந்தைகள் அந்த சர்ச்சில், அந்த சூழ்நிலையில், இதைச் சுட்டிக் காட்டாமல், வீட்டீலேயோ, மற்ற இடத்திலேயோ விளையாட்டாக சொல்லி இருந்திருந்தால், அந்த நபர் அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து, பாடுபட்டுக் கடனை அடைத்திருப்பாரா என்பது சந்தேகத்திற்கு உரியதே. அப்படிப் பார்க்கையில் சர்ச் என்னும் நிறுவனமும், அது சார்ந்த சமயமும் சமுதாய முன்னேற்றத்திற்கு எவ்வளவு துணை புரிகிறது என்பதனை உணர இயலும்.

சமயத்தின் பங்கு ஒருபுறம் இருக்கட்டும். அதை நமக்கு சாதகமாக நாம் பயன்படுத்திக் கொண்டால் தானே அதன் பயன் நமக்குத் தெரியும். ஒரு மாம்பழம் காய்வாட்டாக இருக்கிறது. அது இன்னமும் நன்றாக பழுக்கட்டுமே எனக் காத்திருக்கிறோம். மாம்பழம் மிகவும் கனிந்து அழுகி விடுவதற்கு முன் தக்க சமயத்தில் உண்டால்தானே சுவைக்க முடியும். அதுபோலத்தான், சமயத்தில் இருந்து நாம் சமைவதற்கு தேவையானவற்றை தேவையான சமயத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது அழுகிய பழம், என மாம்பழத்தைக் குறை சொல்வதில் பயனென்ன? சமயத்தில் இருக்கும் எல்லா விஷயங்களும் எல்லாருக்கும் பயன் தராமல் போகலாம். ஒருவருக்கு பயன் தருவது, இன்னொருவருக்கு உதவாமல் போகலாம். அதனால், சமயத்தை குறை சொல்வதை விடுத்து, பயன் பெறப் பார்ப்பதே நல்லது.

எப்படிப்பட்ட பயனைப் பெற நாம் முயல வேண்டும்? தம்மை சமைக்கத் தக்க பயனைப் பெற முயல வேண்டும். அவரது அகத்தினை, அகத்தினில் நிறையும் மனத்தினை இசை போல உருக்கி கனிந்திடச்செய்ய வேண்டும். அவ்வாறு மனதில் தூய உருக்கத்தில் ஏற்படும் உணர்வினையே திருமூலர் 'அன்பு' என்கிறார். அந்த அன்பே சிவம் என்கிறார். அன்பும் சிவமும் இரண்டல்ல என்கிறார், ஏனெனில் அந்த அன்பே, சிவமதைக் காண விசுதத்தில் வித்திடுகிறது. இந்த இறை அன்பு ஏற்பட, மனதளவில் பலவாறு பண் பட வேண்டும். அவரவர் மனமுதிர்ச்சிக்கு ஏற்றாற்போல, பல காலமும் ஆகலாம், சில நாட்களும் ஆகலாம். அதுவரை, அகமுருகி, அவன் தாள் பணிவதே அகத்தால் செய்ய வல்லது.

வெண்பா வகுப்பால் விளைந்த என் பாக்கள்:

பதிவர் அகரம்.அமுதா அவர்களின் வெண்பா எழுதலாம் வாங்க! பதிவைப் பார்த்தவுடன்,
ஆகா, குரங்கேற்றுக் கொள்ளாத கொம்புண்டோ? என விரைந்தேற்றுக் கொண்டேன்.
இடுகை இடுகையாய் வரிசையாய் வகுப்பெடுக்க,
வெண்பா மரபினை இங்கே சொல்லித்தருகிறார்.
இடுகைகளின் பின்னூட்டங்களில் அவர் தந்த வினா விளக்கங்களுக்கும்,
தளை தட்டியபோதெல்லாம் திருத்தியமைக்கும் நன்றிகள் சொல்லி,
இவ்விடுகைகளை ஓரளவுக்கு படித்ததில் பெற்ற ஊக்கத்தில் விளைந்த ஆக்கங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

அல்லும் பகலும் அகத்தில் தியானிக்க
நில்லுமா தாரம் அதனில் நிலைக்க
வெல்லும் இடரதை ஆனை முகத்தான்
இலங்காய் துலக்கத் துவங்கு.

நல்லூர் முருகனை நாளும் வணங்கிட
வல்வினை யாவையும் ஓடிடும் நில்லாமல்
நல்வினை யாவையும் நாளும் பெருகிடும்
நில்வாய் மனமே நிலை.

புள்ளி மயிலேறி அள்ளி யருள்தரும்
வள்ளிக் கணவன் வசீகரனைக் கொள்ளியெனக்
கொள்ளத்தான் காண்பேனோ பூத்திருக்கும் தாமரையில்
உள்ளிருள் நீக்கும் ஒளி.

அணுவிலும் யாவிலும் ஆழ்ந்து அகண்டிடும்
நுண்ணிய அறிவே சிவமெனும் எண்ணமதில்
தன்னை உணர்ந்திடும் தன்னறி வாம்-அவ்
வணுவாற்றல் வேண்டும் அறி.

நிலையில் மனிதர் நிலைத்து வளர்ந்து
உலையில் உணவை சமைத்து இலையில்
விழுந்திட, ஏனோ மறந்தார் எனினும்
உழவின்றி உய்யா துலகு.

அஞ்சி அவதியுற வேண்டா அவனியில்
விஞ்சி அமைதியே மிஞ்சிட தஞ்சமிலா
தன்னிறைவு தந்திடும் ஒப்பம் இதனில்
அணுவாற்றால் வேண்டும் அறி.

உயிர்நாடி யானதிந்த மின்சக்தி கொண்டு
பயிர்கட்டி ஓங்கி வளமும் உயர்ந்திட
நுண்ணணுவை ஆனைகட்டிப் போரடித்து ஆள
அணுவாற்றால் வேண்டும் அறி.

வரும்மொழி யெல்லாம் வளம்தரும் வாழை
தரும்பயன் போலத்தான் - பன்மொழிக் கலையாவும்
எம்மொழியில் சேர்த்திடபின் மெல்லத்தான் சாகும்
எனும்பேதை அச்சம் தவிர்.

துணிந்திட துச்சம்; தடைகள் தவிடு;
தணிந்திடும் தாகம்; பருகிட இன்பம்;
அணிந்திட ஆக்கம்; எனவே நாளும்
இனிய தமிழ்செய்வீர் ஈங்கு.

இதுவரை முயற்சித்தவை இவ்வளவு தாங்க. முதன் முதலில் முயற்சிக்க துவங்கிய போது, அரை மணி நேரம் முதல், முக்கால் மணி நேரம் வரையானது, ஒரு வெண்பா எழுதுவதற்கு. போகப்போக பயிற்சிக்குப் பின், ஐந்து முதல் பதினைந்து நிமிடங்களில் எழுத இயலுகிறது. இத்தனைக்கும் வெண்பா இலக்கியங்களை புரட்டிடவில்லை.

வெண்பாவில் சொல்லப்போகும் கருத்து, என்ன வரிகளில் சொல்லப்போகிறோம் என்பது சில சமயம் முன்பாகவே மனதில் தோன்றி விடுகிறது. சில சமயம், ஒரு பகுதி மட்டும் கிடைக்கும். கிடைக்கும் வரிகளை முதலில் நான்கு அடிகளில் எழுதிக் கொள்வேன். பின் சீர் பிரிப்பேன். இவ்வாறு சீர் பிரிக்கும்போது, தளை தட்டினால், சீர்களை மாற்றி அமைப்பேன். சீர்களை மாற்றி அமைக்க இரண்டு உத்திகள். ஒன்று, சொல்லையே மாற்றி அமைத்தல். இன்னொன்று, சொல்லை சற்றே மாற்றி அமைத்தல். உதாரணம் : 'உணர' என்ற சீரை, 'உணர்ந்திட' என்று மாற்றினால், மாச்சீரில் இருந்து, விளச்சீருக்கு மாறுகிறது!. 'மனதை' என்ற சீரை, 'மனத்தினை' என்று மாற்றினால், மாச்சீரில் இருந்து, விளச்சீருக்கு மாறுகிறது!.

அடுத்தாக, அடிகளை மாற்றி அமைக்கலாம். எத்தனையாவது அடி, எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் இருப்பதால், அதற்கு இசைந்து வரும் விதத்திற்கு ஏற்ப அடிகளை மாற்றி அமைக்கலாம். இவையெல்லாம் துவங்குபவர்களுக்கு மட்டும். ஓரளவு பயிற்சி பெற்றபின், இயல்பாக, ஒரு சீர் முடித்தபின், அது மாச்சீரா, அடுத்த சீரை நிரையசையில் துவங்கு. அல்லது, அது காய்ச்சீர் அல்லது, விளச்சீரா, அடுத்த சீரை, நேரசையில் துவங்கு - என்பதுபோல உள்ளுணர்வு சொல்ல, நேரடியாகவே வெண்பா எழுதலாம்.

ஒவ்வொரு சொல்லுக்கும் பல மாற்றுச் சொற்கள் தெரிந்தால் நலமெனப் படுகிறது. எங்கு தளை தட்டுகிறதோ, அங்கு அந்த சொல்லை எடுத்துவிட்டு அதற்கு இணையான மாற்றுச் சொல்லினைக் கொள்ளலாம். மேலும், எதுகை மோனை பளிச்சிட, அதற்கேற்ப சொல் கிடைத்துவிட்டால், வேறென்ன வேண்டும்?. சொற்களைத் தேடிக் கண்டுபிடிக்க இந்தச் சொல் அகராதி பயன்படுகிறது. முன்பொருமுறை இலவசக்கொத்தனார், ஒவ்வொரு சொல்லுக்குமான மாற்றுச்சொற்களின் பட்டியல் தரும் அகராதியை குறிப்பிட்டிருந்தார். அதைப்பற்றிய விவரம் ஏதும் இருந்தால், அறிந்தவர்கள் தரவும்.

மரபுக் கவிதைகள் எழுதுவது வசப்பட்டு விட்டால், அடுத்து என்ன, தன்னன்ன தன்னன்ன தான, தனனான்ன என்று இசைத்து வரும், சந்தக் கவிகளைப் படைக்கலாம்!

என்ன நீங்க எப்போ வெண்பா எழுத துவங்கப்போறீங்க? ஆசிரியர் அமுதா காத்திருக்கிறார்!
துவங்க விரும்புபவர்கள், இந்த இடுகையிலும் உங்கள் சந்தேகங்களைத் தெரிவிக்கலாம்.

வெண்பா எழுத வசப்பெற்றவர்கள், பின்னூட்டத்தில் உங்கள் ஆக்கத்தையும் தரலாமே!

தலையங்கம் : ஹலோ ஹலோ சுகமா?

ஹலோ ஹலோ சுகமா?, ஆமா நீங்க நலமா?

அன்பார்ந்த தமிழ் நெஞ்சங்களே, உங்கள் நலத்தை நாடியே வந்தேன் நானும், சொல்வீர் நலமாய் நன்றேயென என்றும்.

இந்த நட்சத்திர வாரத்தில் *என் வாசகத்தில்* வரும் இடுகைகளை தமிழ்மணம் தன் முன் பக்கத்தில் நிலை நிறுத்தப்போகிறதால் தானுங்க இந்த சிறப்புத் தலையங்கம்!

முன்னிறுத்தும் தமிழ்மணத்திற்கு நன்றிகள்!

மூன்று நாட்களுக்கு முன்னால்தான் இந்த அறிவிப்பு வந்ததால், தயார் செய்து கொள்ள நேரம் அதிகமில்லை. (நாமளும் டிஸ்கி போட்டாச்சு இல்லை!)
ஆதனால் நீண்ட அல்லது ஆழ்ந்து அலசும் பதிவுகள் தர இயலுமா தெரியவில்லை. (இல்லாவிட்டால் மட்டும்... என்றொரு குரல் கேட்கிறது!)
அதனால் என்ன, உங்களுக்குத்தான் இவ்வலையின் முகவரி தெரியுமே, இவ்வாரம் இலாவிடினும் இன்னொருநாள் இருக்கிறதே!. (இன்னொரு நாளுக்கு அப்புறம் இன்னொருநாளும் இருக்கிறதே...)
இவ்வாரம், அவ்வப்போது தோன்றியதை எழுதப்போகிறேன். (தோன்றாததை?)
எப்போதும் போல வாசகராகிய உங்கள் ஆதரவை எதிர்பார்த்து. (ஆஹா!)
இசை, இலக்கியம், அரசியல், அமெரிக்க அனுபவங்கள் போன்றவற்றை தொட்டுப்போகலாம் எனவிருக்கிறேன். (அப்போ மீதியெல்லாம் அடுத்த வாரம்...?)
இந்த வாரம் வளரப்போவது புல்லா, செடியா தெரியவில்லை. எனினும் தாங்களும் வந்து தண்ணீர் விடவும்!

மூன்று ஆண்டுகளாக இந்த தமிழ்ப் பதிவுகளை பதித்து வந்தாலும், பதிவுலக குழுக்களுக்கு எப்போதும் அன்னியனே. அன்றாடம் பதிவர்களின் திறமையைக் கண்டு ஆழும் வியப்பிலிருந்தே இன்னமும் மீளவில்லை. அதே சமயம், சிறு சிறு முயற்சிகளாய், பதிவர்கள் செய்யும் பயனுள்ள பதிவுகள், நாளையை நல்லதொரு பாதையில் இட்டுச் செல்லும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. பத்திரிக்கை உலகத்தையும், பதிவர் உலகம் வியப்பில் ஆழ்த்தி நின்று, திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது. வியாபார உலகில் ஆழ்ந்துபோன அவர்களும், பதிவர்களின் ஆக்கபூர்வமான படைப்புகளைப் பார்த்துக் கற்றுக் கொண்டால் சரி.

ஐந்து ஆண்டுகளாக நம் நாட்டில், கணிணி மென்பொருள் துறையில் ஏற்பட்டுள்ள வேலை வாய்ப்புகளாலும், அதனால் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தாலும், எதோ ஒட்டுமொத்தமாய், நம் நாடே மேலான தரத்திற்கு உயர்ந்து விட்டதாக, நம்மிடம் ஒரு பரவலான எண்ணத்தினைப் பார்க்க முடிந்தது. ஆனால் உண்மையான நிலை என்ன? ஒலிம்பிக் பந்தய முடிவுகளே அதனை பறை சாற்றுகிறது. நமது அண்டை நாடான சீனா அத்தனை பதக்கங்களை அள்ளிக் குவிக்கையில் நம்மால் மூன்றே முடிந்தது. என்றாலும், மூன்று பதக்கங்களை வென்று இந்திய விளையாட்டிற்கு புத்துயிர் ஊட்டியிருக்கும் நமது அணியினருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

பனிரெண்டு ஆண்டுகளில் - 2020 ஆம் ஆண்டு வந்து விடும். கனவுகளுடன் நல்ல திட்டங்கள் தீட்டப்பட்டு, இந்தியாவை எல்லா துறையிலும் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக பார்க்க வேண்டும். வல்லரசாக கோலோச்ச வேண்டிய அவசியமில்லை. நல்லரசாய் நாட்டு மக்கள் மன நிறைவு பெற்று வாழும் நாள் வரை, அந்த முன்னேற்றத்திற்காக எழுதிக் கொண்டே இருப்போம்.

வாழிய பாரத மணித்திருநாடு!
ஜெய் ஹிந்த்!

Wednesday, August 20, 2008

வள்ளலார் வழங்கும் இனிப்புக் கட்டி!

ரணி உய்ய அருட்பெரும்ஜோதியின் தனிப்பெரும் கருணையில் செய்ததொரு இனிப்பொன்று இருக்கு!

அது, இப்போதுதான் இளஞ்சூட்டில், இதமாக செய்திருக்கு!

நாவில் வைத்ததும் நற்சுவையில் இளகிடுமாம்,

சுவைக்க வாரும், மெய்யன்பர்களே!

சுருதி சேர்த்து இசைக்க வாரும், இசையன்பர்களே!
சங்கீத கலாநிதி திரு.மதுரை மணி ஐயர் அவர்களின் குரலில்:
தனித்தனி முக்கனி


எண்சீர் ஆசிரிய விருத்தம்:

தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்

சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே

தனித்தநறுந் தேன்பெய்து பசும்பாலும் தெங்கின்

தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி

இனித்தநறு நெய்அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி

எடுத்தசுவைக் கட்டியினும் இனிதிடுந்தெள் ளமுதே

அனித்தமறத் திருப்பொதுவில் விளங்குநடத் தரசே!

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே.

- இராமலிங்க வள்ளலார்

இப்படி யெல்லாம் எடுத்துச் சேர்த்துச் சேர்த்துச் செய்த இனிப்பைக் காட்டிலும் பன்மடங்கில் பெரிதாய் இனித்திடும் இனிப்பாய், பேரின்பப் பெரும்பேறாய் விளைந்திருக்கு, எங்கும் நிறைந்திருக்கு, எல்லாமுமாய் தெரிந்தும் தெரியாமல் மறைந்தும் நிறைந்திருக்கு. இப்பெரும் விந்தையை வள்ளல் வள்ளலாரைப்போல் உரை செய்தார் வெகு சிலரே. இவ்வுரையில் இவர் சொல்லும், தெள்ளமுதை, ஈசன் எனப்படும் பேரமுதை, அவனைப் பருகி இன்புற்று உரை செய்ததை, யாம் கேட்பதே என்ன இன்பம்! இதற்கனவே எம் யாக்கை இம்மை பெற்றதுவோ?

தெள்ளமுதே... தெள்....அமுதே... திகட்டா பேரமுதே...
சிற்சபையாம் பொற்சபையில் உலகம் உய்ய பொதுவில் நடம் ஆடும் பொன்னம்பலனே,
என் மயக்கம் அகல, உன் அடி மலரில் என் சொல்லாம், இக்கவியை அணியாய் அணிவித்தே அலங்காரம் செய்து பார்க்கின்றேனே, ஈதே பேரின்பம் தரும் இனிப்புக் கட்டி!

---------------------------------------------
இப்போ ஒரு கூடுதல் இனிப்புக் கட்டியும் கிட்டியிருக்கு!
நம்ம கே.ஆர்.எஸ் அவர்கள் பாட்டின் வரிகளுக்கு வரி வரியாய், விளக்கம் உரைத்திருக்கிறார்:

தனித்தனி முக்கனி பிழிந்து
=அதாச்சும் முக்கனிச் சாறையும் பிழிந்து, உடனே ஒன்னாச் சேத்துறக் கூடாதாம்!

வடித்தொன்றாக் கூட்டிச்
=தனித்தனியாக வடிக்கணும்! வடித்த பின் தான் ஒன்னாச் சேக்கணும்!

மாம்பழத்தில் நார் மிதக்கும், பலாவில் பிசின், இதோடு வாழையை எப்படிக் கலப்பது? நார் ஒட்டிக்கிட்டா உண்ணும் போது நல்லா இருக்காது! உறுத்தும்! அதனால் தனித்தனியா வடித்து, வடிகட்டி, பின்னர் மூனுத்தையும் கூட்டணும்! அதே போல முக்குணங்களையும் தனித்தனியா வடித்துத் தான் இறையருள் கூட்டணும்! ராஜசத்தோடு சத்வம் சேர்த்தால் போரில் வெல்ல முடியாது! அதான் தனித்தனி வடித்தல்!

சருக்கரையும் கற்கண்டின் பொடியுமிகக் கலந்தே
=நாட்டுச் சர்க்கரை, வெல்லம் காய்ச்சும் போது எடுப்பது! கற்கண்டு பொடி = தூள் சர்க்கரை

தனித்த நறுந் தேன் பெய்து பசும்பாலும் தெங்கின்
=தனித்த தேன்=கொம்பத் தேன்=இது இனிப்பு மட்டுமல்ல! ருசியின்மை நீக்கும் மருந்தும் கூட, அதோடு கறந்த பசும்பால், தேங்காய்ப்பால்...

தனிப்பாலுஞ் சேர்த்தொருதீம் பருப்பிடியும் விரவி
=தேங்காய்ப் பால்-ன்ன உடனே அம்மா ஞாபகம் வந்திருச்சி! அம்மா சுடும் அப்பம்/தேங்காய்ப் பால்
பருப்பிடி=இடித்த பாசிப்பருப்பு

இனித்தநறு நெய் அளைந்தே இளஞ்சூட்டின் இறக்கி
=இவை எல்லாம் சேர்த்துக் காய்ச்சி, நெய் அளையணும்! சொல்லைக் கவனிங்க! அளையணும்! ஊத்தக் கூடாது!
தீய விடாமல் இளஞ்சூட்டில் இறக்கினால் தான் ஆறின பின் கெட்டிப்படும்! (மைசூர்பா புகழ் ஷைலஜா அக்கா கிட்ட எதுக்கு இளஞ்சூடு-ன்னு மேல் விளக்கம் கேளுங்க!)

எடுத்த சுவைக் கட்டியினும்
இனிதிடும் தெள் ளமுதே
= இப்படி எல்லாம் பார்த்துப் பார்த்து செஞ்ச இனிப்பை, கொஞ்சம் பிசகினாலும் சுவை மாறி, கடினப்பட்டுப் போகும் இனிப்பை..போல் இல்லாமல்

எளியோர்க்கு எளியனாய், அடைய எளியனாய், செய்ய எளிதாய் இருக்கிறான்! இருந்தாலும் அதை விட இனிப்பாயும் இருக்கிறான் இறைவன்!

அனித்தம் அறத் திருப் பொதுவில் விளங்கு நடத் தரசே!
=என் நிலையில்லாப் பிறவிச் சுழலை அறுப்பதற்கு என்றே பொதுவில் நடமிடும் அம்பலவாணப் பெருமான்!

அடிமலர்க்கென் சொல்லணியாம் அலங்கலணிந் தருளே
=அவன் ஆடும் குஞ்சிதபாதத்துக்கு, திருவடி மலருக்கே, மலர் சூட்டுகிறேன்! சொல்லால் புனைந்த அலங்கல் மாலையை அணிந்து, அநித்யமான பிறவி நீக்கி அருளே!

அருட்பெருஞ் ஜோதி!
தனிப்பெருங் கருணை!
திருச்சிற்றம்பலம்!
ஹரி ஓம்!

-------------------------------

Sunday, August 17, 2008

தஞ்சம் என்றாலே : ஆபோகி வர்ணம்

மிழ் தியாகராஜர் எனப்போற்றப்படும் திரு. பாபநாசம் சிவன் அவர்களின் ஆபோகி இராக வர்ணம் தனை இங்கே பார்க்கப்போகிறோம்.

வர்ணம் : இதனை கச்சேரியின் துவக்கத்தில் பாடுவது வழக்கம். வர்ணத்தில் பல்லவி, அனுபல்லவியினைத் தொடர்ந்து முக்தாயி ஸ்வரங்கள் இருக்கும். அதைத் தொடர்ந்து சரணம் இரண்டு அல்லது மூன்று கால அளவில் வாசிக்கப்படும். இவற்றுடன் சிட்டாயி ஸ்வரங்களும் இருக்கும். சரணத்தில் ஒரே ஒரு வரி தான் இருக்கும். அதனையே வெவ்வேறு கால அளவிலும் வாசிக்க வேண்டும். இசைக் கலைஞருக்கு, அது நல்லதொரு பயிற்சியினைத் தருவதற்காக வர்ணத்துடன் கச்சேரியினைத் துவங்குவதை வழக்கமாக கொண்டார்கள் போலும்.

இந்தப் பாடலில் வரிகளின் வர்ணங்களும் மிகப் பொலிவு. நீங்களே பாருங்களேன், வார்த்தைகள் வர்ண ஜாலங்கள் புரிகின்றன:

இராகம்: ஆபோகி
தாளம் : ஆதி

பல்லவி
தஞ்சம் என்றாலே
நெஞ்சம் அருள் சுரந்தே வலிய
தண்முகில் போல வந்து
அஞ்சேல் என்று உவந்தருளும் அய்யா,

அனுபல்லவி
வஞ்சம் கொண்டோர்போல
வன்மம் கொண்டே
மிகமனம் வருந்தும் என்மேல்
அருள் சிறிதும் இன்றி
மறந்த விந்தை என்னென்பேன் அய்யா?

முக்தாயி ஸ்வரம்

தா ஸ் ஸ் த ம கா ம
க ம க ரீ க ம க ரீ ஸ் ரீ த ஸ் ரீ
......

(தஞ்சம்...)

சரணம்

உயர் மாதவர்பணி கபாலி,
ஆள மனமும் உண்டோ
இலையோ சொல்?

(தஞ்சம்...)

திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கே கேட்கலாம்.

90 களில் இறுதியில் நான் பணியில் சேர்ந்தபின் மும்பையில் ஆடியோ கேசட் கடைக்கு தேடிப்போய் வாங்கிக் கேட்ட ஒலித்தொகுப்பான 'குறிஞ்சி' யில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்று இது. இந்த தொகுப்பில் இடம் பெற்றிருந்த அத்தனை பாடல்களும் அற்புதமான நித்தலங்கள். நித்யஸ்ரீ அவர்களின் குரலோ கேட்பவர் நெஞ்சை கொள்ளை கொள்ளும் இனிமை நிறைந்தது. இதற்குப்பின் எத்தனையோ பாடல்களைக் கேட்டிருந்தாலும், அப்போது முதன் முதலில் கேட்டதின் நினைவுகள் என்றும் பசுமையாய் நிறைந்துள்ளது!. அதை மீண்டும் நினைவு படுத்துகையிலும் இனிமை!. இந்நாள் வரை இனித்திடும் இசை ரசனைக்கு இப்பாடல் தொகுப்பு ஒர் அடித்தளமாய் அமைந்தது என்பேன்!.

தொடர்புடைய முந்தைய இடுகை : ஆபோகியில் அகமுருகி

Wednesday, August 13, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினொன்று

இரமண மகரிஷி வெண்பாக்களாய் வடித்து வைத்த ஆத்மபோதம்:
முன்னுரை இங்கே.
இதுவரை நாம் பார்த்த பகுதிகள் இங்கே.

நெடுநாள் கழித்து, ஆத்மபோதம் படிப்பதை தொடரலாமா?

பா 45:
பிரம்மத்திற் சீவன் பிராந்தியாற் கட்டை
புருடன்போற் கற்பிதன் பொய்யாம் - உருவத்தின்
தத்துவம் யாதென்று தானுணரின் அவ்வுருவம்
வத்துவா காது மதி.
(வத்து - வஸ்து)

இந்த ஜீவனை எல்லா செயல்களுக்கும் மூலமான பிரம்மம் என இறுமாப்பு கொண்டு, 'நான்', 'எனது', என்ற பொய்யான மயக்கத்தில் ஜீவனை பிரம்மமாகக் கொள்வது, வைகறையில் தொலைவில் தெரியும் கட்டை மரத்தைப் பார்த்து அங்கு யாரோ ஒரு மனிதன்தான் இருக்கிறான் என்பதான பொய்யான தோற்ற மயக்கத்தில் ஏமாறுவது போன்றதாகும். இந்த ஜீவன் இருக்கும் வரை அது பிரம்மமாகாது. பிரம்மமானது, வெளியில் இருந்து பார்த்துக்கொண்டே இருக்கும் பார்வையாளன். பார்வையாளனும், பார்க்கப்படும் பொருளும் வெவ்வேறாக இருந்தால்தானே அதனால் கவனிக்க இயலும்?. ஆன்மாவானது, உருவத்தின் உண்மையான முழுமையான தத்துவம் யாதென்று உணர்ந்தால், அது யாதொரு உருவமும் கொண்டிருக்காது என அறிவாய்.
ஜீவனின் இயற்கையானது, அறியாமல் இருக்கும் ஆன்மாவாகும். அந்த ஆன்மா, 'தத்வமஸி (அதுவே நான்)' போன்ற மகாவாக்கியங்களை ஓதுவதன் மூலமாக பிரம்மத்தினை அறிந்துணர, அதன் அறியாமையும், அது கொண்டிருக்கும் ஜீவன் என்னும் உருவமும் அழிந்திடும்.

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை 31.7 (திருக்கடவூர் வீரட்டம்)
மாயத்தை யறிய மாட்டேன் மையல்கொண் மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தா னினைய மாட்டே னீதனேன் நீசனே னான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீ ரட்ட னீரே.

காயத்தைக் கழிக்காமல் மாயத்தை, பொய்ப்பொருள் தரும் மையலை, வெல்ல இயலாமல், மெய்ப்பொருளை நேயத்தோடு தேடி அறிய இயலாமல் இருக்கின்றேனே!

அடுத்த வெண்பாவில், அந்த பிரம்ம ஞானம் என்ன செய்ய வல்லது என்பதைச் சொல்லுகிறார்:

பா 46:
தத்வசொரூப அனுபூதி ஆற்றான் உதி
உத்தம க்யானம் உடனேயாம் மித்தைய்யா
நானெனதெனக் க்யான நசிப்புக்குன் திக்பிரமை
பானு உதயத்தெனவே பார்.

ஆற்றான் - வலிமையில்லாதவன்
பானு - சூரியன்

இந்த செயல் உடனுக்குடன் நிகழ்வது.
ஆன்ம வலிமையில்லாதவனுக்கு தன்னறிவை, அனுபூதியை, எட்டிடும் போது,
தான் யார்? என்கிற பேரறிவை அடைந்த உடனேயே, 'நான்', 'எனது' என்கிற எண்ணங்களெல்லாம் நசிந்து நொடிந்து போகும். எப்படி சூரியன் உதித்தவுடன், எந்த திசை எந்தப்பக்கம் என்னும் குழப்பம் விலகிடுமோ அதைப்போல.

நான், எனது எனும் எண்ணங்கள் ஜீவனில் தோன்றுவது இயற்கையானது. அதுபோல, திசைக் குழப்பமோ, மரத்தை மனிதனாகக் கொள்வதோ, கயிறை அரவமாகக் கொள்வதோ - இவையெல்லாமே, ஜீவனில் தோன்றும் இயற்கையான குழப்பங்கள். இவையெல்லாம், ஆதவன் எழுந்தவுடம் விலகிடும் இருள் போல, சச்சிதானந்த பேரறிவு ஜீவனில் விளைந்திட்ட உடனேயே விலகிடுமாம்.

Friday, August 08, 2008

அம்புஜம் கிருஷ்ணா : குருவாயூரப்பனே அப்பன்

மக்கு மிக சமீப காலத்தில் நல்ல தமிழிசைப் பாடல்களை வழங்கிய பெருமை பெற்றவர் திருமதி. அம்புஜம் கிருஷ்ணா (1917 -1989) அவர்களாவர். அவரது பாடல் ஒன்றை இங்கே கேட்கப்போகிறோம். அதற்கு முன்னால் அவரைப்பற்றி சில வரிகள் வாசிப்போமா?

1951 இல் இவர் திருவையாறு வந்து சென்றபின் ஏற்பட்ட மாற்றத்தின் பின் பாடல்கள் பலவற்றை இயற்றினார் எனச் சொல்லப்படுகிறது. இவரது முதல் பாடலான 'உன்னை அல்லால் உற்ற துணை வேறுண்டோ...', தேவி மீனாட்சி அம்மனைப் பாடுகிறது. தமிழில் மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், சமஸ்கிருதம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இயற்கையாக பாடல்களை இயற்றி இருக்கிறார். இவர் அறுநூறுக்கும் மேலான பாடல்களையும் இயற்றி இருந்தாலும், அவற்றுக்கான உரிமையைக் கொண்டாடாத எளியவர். பாடல்களுக்கான இராகங்களை அமைத்தாலும், அவை தன் சிறிய இசை ஞானத்தால் அமைக்கப்பட்டவை எனச்சொல்லி, அவற்றை வாசிக்கும் இசை கலைஞரின் விருப்பதிற்கேற்ப அமைத்துக்கொள்ளலாம் எனச் சொன்னவர். கண்ணன் பாடல்களை பெரிதும் இயற்றிய இவர் கணவரின் பெயரும் 'கிருஷ்ணா' என அமைந்தது என்ன பொருத்தம்!.

இவர் இயற்றிய பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவை:
மனநிலை அறியேனடி மனங்கவர் - பாக்யஸ்ரீ
ஓடோடி வந்தேன் கண்ணா - தர்மவதி
என்ன சொல்லி அழைத்தால் - கானடா
பொழுது மிகவாச்சுதே - ரேவதி
காண்பதெப்போது - பிலஹரி
குருவாயூரப்பனே அப்பன் - ரீதிகௌளை

இந்த இடுகையில் 'குருவாயூரப்பனே அப்பன்' பாடலை திரு.உன்னி கிருஷ்ணன் பாடிடக் கேட்கலாம்: (ரீதிகௌளையில் அருமையான ஆலாபனை முடிந்தபின் பாடலைக் கேட்கலாம்)
(இப்பாடல் சென்ற வருடம் அகஸ்டா,ஜார்ஜியாவில் நடைபெற்றக் கச்சேரியல் பாடியது: நன்றி திரு.மஞ்சுநாத்)

குருவாயூரப்பனே அப்பன்



எடுப்பு
குருவாயூரப்பனே அப்பன்
ஸ்ரீ கிருஷ்ணன்
குருவாயூரப்பனே அப்பன்

தொடுப்பு
நாராயணா என நாவாற அழைப்போர்க்கு
வருமிடர் தவிர்த்து வாஞ்சையுடன் காக்கும்
(குருவாயூரப்பனே அப்பன்)

முடிப்பு
விழிகட்கு அமுதூட்டும் எழில் திருமேனி
தழுவக் கரம் துடிக்கும் பாலத் திருவுருவம்
முழுமதி முகம் திகழ் அருள்விழிச் சுடர்கள்
அழைக்கும் அன்பர்க்கு அருளும் அடிமலர் இணையும்

முன்னம் யசோதை மைந்தனாய் வந்தவன்
இன்று நமக்கிரங்கி இங்கு(/எங்கும்) எழுந்தருளி
பாலனாய் யுவனாய்ப் பாலிக்கும் தெய்வமாய்
பரவச நிலைகாட்டும் பரம புருஷன்

(குருவாயூரப்பனே அப்பன்)

* திருமதி. பாம்பே ஜெயஸ்ரீ பாடிட இங்கு கேட்கலாம்.
* திருமதி. சௌம்யா பாடிட இங்கு கேட்கலாம்.
* இந்த பாடலுக்கான ஸ்வரக் குறிப்புகளை இந்த PDF மென் இதழில் பார்க்கலாம் - நன்றி திரு. சிவ்குமார்
* அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் இயற்றிய பாடல்களின் பட்டியல் இங்கே. - நன்றி திரு. லக்ஷ்மணன்
* அம்புஜம் கிருஷ்ணா அவர்களின் நிழற்படம் - நன்றி தி ஹிந்து நாளிதழ் தளம்

Sunday, August 03, 2008

ஸ்ரீராம இருதயம்

சென்ற பகுதிகளில், சக்திக்கு சிவன் தந்த விளக்கமும், அந்த விளக்கத்தின் உள்ளே சிவன் மேற்கோள் காட்டிய சம்பவத்தினில், அனுமனுக்கு சீதை தந்த விளக்கமும் பார்த்தோம். அவற்றிலெல்லாம், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பிரம்மமாகவே இராமனின் உண்மை உருவம் இருப்பதாகப் பார்த்தோம். நம் அறியாமையினால்தான் இராமனை அவன் மாயா சக்தியில் இருந்து பிரித்தறிய இயலாமல் இருப்பதால் நம்மால் அவனை பரப்பிரம்மமாக உணர இயலவில்லை என்பதையும் பார்த்தோம்.

தொடர்ந்து சக்திக்கு சிவன் இராமனைப்பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறார். அதில் அனுமனுக்கு சீதை இராமனின் உண்மை உருவத்தினை விளக்கியதைத் தொடர்ந்து, சீதை அருகிலேயே இருந்த இராமனும் தொடர்ந்து அனுமனுக்கு உயர்ஞான உபதேசம் செய்யலானார்!.

இராமரின் உரை: அன்பின் அனுமனே, இப்போது உனக்கு நான் ஆத்மா, அனாத்மா மற்றும் பரமாத்மா பற்றியான உண்மையை சொல்லப்போகிறேன்:

ஒரு விளக்கத்திற்காக, ஆகாசத்தை எடுத்துக் கொள்வோம். அதை மூன்றாக பிரித்துக் கொள்வோம். முதலில் எங்கெங்கும் வியாபித்திருக்கும் வானம். அடுத்தாக, அந்த வானத்தின் ஒரு பகுதியாக, மண்ணில் நீர்நிலைகளின் பிம்பமாகத் தெரியும் வானம். இறுதியாக, ஒரு பானையிலோ அல்லது குடத்திலோ நிரப்பியிருக்கும் நீரில் பிம்பமாகத் தெரியும் வானம்.

இந்த ஆகாசப் பிரிவுகளைப்போலவே, சுத்த சைத்தன்யமும்(சைத்தன்யம் : உயர் ஞானமாய் விளைந்திருக்கும் பிரம்மம் - Consciousness) மூன்று பகுதிகளாகச் சொல்லலாம். முதலில் எங்கெங்கும் நிறைந்திருக்கும் சுத்த சைத்தன்யம். அடுத்ததாக புத்தியினால் தெரியும் சைத்தன்யம். மூன்றாவதாக, ஜீவனின் புத்தியில் பிம்பமாகத் தெரியும் சைத்தன்யம்.

எங்கெங்கும் வியாபித்திருக்கும் சுத்த சைத்தன்யம், எங்கெங்கும் விரிந்திருக்கும் ஆகாசத்தைப் போன்றது. அடுத்ததாக புத்தியில் தெரியும் சைத்தன்யம், ஒரு நீர் நிலையில் பரப்பளவிற்குள் அதன் எல்லைகளுக்கு உட்பட்டது. அடுத்ததாக, ஒரு சிறிய குடத்தில், அந்த நீர் நிலையில் இருந்து முகந்து வைக்க, அது தனிப்பட்ட ஆன்மாவிற்கு ஒப்பாகும். ஆக அந்த குடத்தில் பிம்பமாகத் தெரியும் வானம், அந்த குடத்தின் எல்லைகளுக்கு உட்பட்டது.

இப்போது, ஆன்மஞானம் முழுமையாக அடையாதவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்றால், புத்தியில் அல்லது ஜீவனில் பிம்பமாகத் தெரியும் சைத்தன்யத்தினை உண்மையானதாகக் கொள்வதுதான். அதாவது, தங்கள் அக உறுப்புகளால் செய்யும் செயலின் விளைவுகளுக்கு தாங்களே மூலம் என நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் ஒரு கருவி தான் என அறியார். அப்படித் தவறாக கொள்ளும் ஆத்மா, ஜீவனே ஆன்மாவின் மூலம் எனக் கொள்கிறது. அதானால்தான் அது ஜீவாத்மாவாகவே இருக்கிறது. அவர்களுடைய புத்தியானது, சித்தில் சேமித்திருக்கும் அனுபவங்களின் மூலமாக மட்டுமே முடிவு எடுத்ததினால் ஏற்படும் விளைவு இது. தத்வமஸி (அதுவே நீ) என்னும் மகாவாக்கியத்தினை கேட்டிட, ஓதிட, தியானித்திட, பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமையை உணரலாம். எல்லைகளால் சிறைப்பட்ட ஜீவனையும், அதன் புத்தியையும் மாயை என உணர, தானே எல்லாம் என்னும் அகங்கார மடமையும் அழிவதைக் காணலாம்.

தொடர்ந்து இராமர் சொல்கிறார்: என்னுடைய பக்தன் எவனொருவன், இந்த பேருண்மையை புரிந்து கொள்கிறானோ, அவனே என் நிலையை அடைவதற்கு தகுதியானவன். வெறுமனே, இந்த உண்மையைத் தேடி, மறைகளை மட்டும் கற்று அலசியும், என்னிடம் பக்தி இல்லாமல் இருக்கிறவன், என்னைப் பற்றி அறிய இயலாதவனாய் இருக்கிறான். அவனால் நூறு பிறவி எடுத்தாலும் பக்தி இல்லாமல் முக்தியை எட்ட இயலாது.

இப்படியாக இராமர் அனுமனிடம் சொல்லி முடித்தார்: "எந்த ஒரு தீவினையும் அண்டாதவனே, "ஸ்ரீராம இருதயம்" என்னும், என் உண்மை நிலையை உரைக்கும் இவ்வுரையை நானே உனக்கு நேரடியாக வழங்கிடும் பேறு பெற்றாய். இதனால் பெறும் பேரறிவானது, இந்திர லோகம் ஆளும் பேறினைக் காட்டிலும் பன்மடங்கு பெரியது.

அதானால் தான் தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
"பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா, அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!"
என்றாரோ!

அத்யாத்ம இராமாயணத்தில் மேற்கூறிய ஸ்ரீராம இருதயம் எனப்படும், அனுமனுக்கு இராமர் அளித்திட்ட உரையை, பரமசிவன், பார்வதி தேவிக்கு உரைத்திட்டு சொல்கிறார்: "இந்த சுலோகங்களை இராம பக்தியோடு படிப்பவரும் கேட்பவரும் நிச்சயம் முக்தி அடைவர். பெரும் துயர் தரும் தீவினையாவும் கூட இவற்றைப் படிப்பவரிடம் இருந்து பறந்தோடிப் போகும். அவர்கள் பெரும் யோகியரும் பெருந்தவத்தால் அடையக் கடினமான பெரும் பேறினையெல்லாம் அடைவார்கள்".

உசாத்துணை:
* அத்யாத்ம இராமயணம் : சுவாமி தபஸ்யானந்தர் அவர்களின் ஆங்கில உரை.
* ஆதித்ய ஹ்ருதயமும் ஸ்ரீராம ஹ்ருதயமும் - பகுதி 2 : திரு. ச.நாகராஜன்.