Showing posts with label ஆதி சங்கரர். Show all posts
Showing posts with label ஆதி சங்கரர். Show all posts

Tuesday, August 30, 2016

இதயமெனும் கண்ணாடி

தெளிவான தண்ணீரில் தெரியும் பகலவனின் பிம்பத்தினைப்போல,
இதயக் கண்ணாடியில் தெரியக்கூடிய சக்தியானது - 
சகுணப் பிரம்மம். 
ஆனால் இந்தக் கண்ணாடியை துடைத்து சுத்தம் செய்ய வேண்டியுள்ளது!
ஏனெனில் மாசு படிந்த கண்ணாடியில் தெரியும் பிம்பமானது சரியான ஒன்றாக இருப்பதில்லை.
- ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர்.

நம்முடைய புறக் கண்ணாடிகளில் அழுக்கு படிந்தாலும் தெரியும் பிம்பமானது மாறுவதில்லை. என்ன மங்கலாகத் தெரியும், அல்லது சில இடங்களில் தெரியாமல் போகும்.



இதயக் கண்ணாடியில் படிந்த மாசு என்பது - நான்/எனது என்பது போன்ற எண்ணங்கள். இந்த மாசினைத் துடைக்காவிட்டால், இதயக் கண்ணாடியில் - எந்த பரமனின் துகளாக இந்த ஜீவன் இருக்கிறதோ - அந்த பரமனின் சகுண பிம்பத்தினைக் காண இயலாமல் போகிறது. அதற்கு பதிலாக அவித்தையினால்  தன் வயப்படுதலே நிகழ்கிறது. இதனால் தன் செயல்கள் எல்லாம் தன்னாலேயே நடக்கின்றதென நினைக்கின்றோம். உண்மையில் நம்மை ஆட்டுவிக்கும் சக்தியின் கையில் நாம் வெறும் கருவிதான் என்பதனை உணர முடிவதில்லை.

சுஃபி கவிஞர் ரூமியும் சொல்லுவார்:


இந்த மாசானது பிறக்கும்போதே இந்த ஜீவனோடு இணைந்தவிட்ட ஒன்று. சக்தியினால் பிறப்பானது நிகழச் செய்யப்பட்ட சித்து வேலை. இதனால் தான் சக்தி அன்னையை உலகத்தை ஈன்ற அன்னையாகச் சொல்கிறோம். அவள் அந்த மாயையினை ஏற்படுத்தியதனால் உலகில் உழல்கிறோம்.



இந்த கண்ணாடியை என்ன செய்வது?

இந்த கண்ணாடியில் மேல் படிந்த மாசினால் தெரியும் பிம்பமானது - நான், எனது போன்ற எண்ணங்களயே தோற்றுவிக்கிறது. ஆகையால் இந்த கண்ணாடியைப் புறந்தள்ளி வைக்க வேண்டியதாகிறது. மாயையினால் ஏற்படும் பிம்பத்தினை ஒதுக்க வேண்டியதாகிறது. 

விவேகசூடாமணியில் ஆதிசங்கரர் - எவ்வாறு இந்த கண்ணாடியை புறந்தள்ளி வைத்து, ஜீவனானது உண்மையில் பரமனின் பிம்பம் என்பதனைக் கண்டறியும் வழியினை 16 சுலோகங்களில் சொல்கிறார். 

கண்ணாடியை புறந்தள்ளி வைப்பதினை - மனதினைக் கலைப்பது எனவும் சொல்லலாம். ஆழ்நிலை தூக்கத்தில் - கனவுகள் இல்லாத நிலையில் மனமானது கலைக்கப்பட்ட நிலையில் இருப்பதாகச் சொல்லலாம். அந்நிலையில் இருந்து வெளி வரும்போது, மீண்டும் மனமானது செயல்படத் தொடங்குகிறது.

வசிஷ்ட மாமுனி இராமருக்கு சொல்லும் உபதேசத்தில் இருந்து:
ஓ இராமா! உடல், உணர்வு முதலான மனதில் தோற்றுவிக்கப்பட்ட கூற்றுகள் உண்மையானவையல்ல. உண்மையில் ஆன்மாவனது இதுபோன்ற கூற்றுகளால் குறுக்கப்பட்டவையல்லை. மாற்றாக, சுதந்திரமாக எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பது. 

ஆகையால், நான் எனக் கண்ணாடியில் தெரிவதை நீக்கிட, நான் என்பது என் உடல் அல்ல, என் மனம் அல்ல. நான் அறிந்த எதுவுமே அல்ல, ஆனால் எல்லாமுமான நீ, நீ மட்டுமே - என்பதுவே பிறப்பின் இலக்கினை அடைதல் ஆகும்.

Wednesday, December 15, 2010

பக்தியும் ஞானமும் - பகுதி 1

பொதுவாக எல்லோருக்கும் ஞான மார்க்கம் என்பது பக்தி அல்லாத வழி என்கிற ஒரு எண்ணம் இருக்கிறது. ஞான மார்க்கமும் பக்தி மார்க்கமும் முக்தி அடைவதற்கான இரண்டு தனித்தனி வழிகளாக தொன்றுதொட்டு முன் வைக்கப்பட்டவை, என்றாலும், 'முக்தியானது ஞானத்தால் மட்டுமே கிட்டும்' என்பது ஆதி சங்கரரின் முடிபு. அதே சமயம், பலரும் ஞான மார்க்கத்தில் பக்திக்கு இடமில்லை என்கிற தவறான கண்ணோட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அத்வைதத்தில் பக்திக்கு இடம் உண்டு - மிக முக்கியமான பங்குண்டு என்பதையும் உணர வேண்டும். ஆதி சங்கரர் இந்து சமயப்பிரிவுகளான 'சைவம்', 'சாக்தம்', 'வைணவம்', 'கணாபத்யம்', 'கௌமாரம்' மற்றும் 'சௌரம்' ஆகிய ஆறினையும் ஒன்று சேர்த்து சண்மதம் என்று பெயரிட்டு, ஒன்று பட்ட இந்து மதத்திற்கு அடி கோலினார். அதற்குக் காரணமென்ன என்று பார்த்தால், ஞானம் பெறுவதற்கு பக்தியானது முக்கியமான சாதனம் என்பது தெளிவாகும். நாம் எல்லோராலும் எளிதாகப் பயன்படுத்தக் கூடிய கருவி பக்தியாகும்.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம்.(குறள் 249)

ஞானம் என்பது என்ன? ஞானம் என்பது வெற்று கற்பதனால் வரும் அறிவில்லை. அது புதிதாகக் கற்கும் வெளியறிவும் இல்லை. அது தன்னறிவு. தான் உண்மையில் மெய்ப்பொருள் எனத் தெளியும் மெய்யறிவு. பக்தி இல்லாமல் எத்தனை கற்றாலும், அது வெறும் ஏட்டறிவாக இருப்பதனால், படிப்பது மட்டும் பயன் தருவதில்லை. பக்தியில்லாமல் ஞானமில்லை. ஞானமில்லாமல் முக்தியில்லை. பக்தி, ஞானம் - இவ்விரண்டிலும் உயர்வென்றும் தாழ்வென்றும் நிலையில்லை.

ஞானம் பெற பக்தி கருவி என்றால், பக்திக்கு கருவிகள் யாது? பக்தி பண்ண ஒன்பது வழிகள் இருக்கின்றன - இதனை நவவிதபக்தி என்பார்கள் - சிரவணம் முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்) ஒன்பது வழிகளைச் சொல்கிறார்கள். இவற்றில் நமக்குப் பிடித்த 'கீர்த்தனம்' என்கிற வழியில் இந்தத் தொடரில் அவன் பரப்பி வைத்த மூர்த்திகளைப் பாடிப் பணிந்து பக்தி பண்ணும் பாடல்களைப் பார்க்கப் போகிறோம், இந்தத் தொடரில்.
வணங்கும் துறைகள் பலப்பல ஆக்கி மதி விகற்பால்
பிணங்கும் சமயம் பலப்பல ஆக்கி அவை அவைதோறும்
அணங்கும் பலப்பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்
இணங்கு நின்னோரை இல்லாய் நின்கண் வேட்கை எழுவிப்பனே!

- நம்மாழ்வார்
வேதாந்தம் எல்லாவற்றுக்கும் மேலான மிக உயர்ந்த இறை நிலையை 'பிரம்மம்' எனச் சொல்கிறது. ஆனால் அது எப்படி இருக்கும் என எந்தப் படத்திலும் பார்த்ததில்லையே. பின் அதை எப்படிப் பாடுவது. 'சிவன்' என்றால் 'பித்தா, பிறைசூடி' எனலாம். 'திருமால்' என்றால், 'நெடியோனே, வேங்கடவா' எனலாம். பிரம்மம் எப்படி இருக்கும் என கண்டவர் யார், விண்டவர் யார்? யாரிடம் கேட்பது?

வேதாந்தத்தில் 'பிரம்மம்' இரண்டு நிலைகளில் விளக்கப்படுகிறது. முதலாவது, 'நிர்குண பிரம்மம்' - அதாவது, குணங்கள் இல்லாத பிரம்மம் குணங்கள் இல்லாததால் - அது கருப்பா, சிவப்பா என்று சொல்ல முடியாது. ஆனால் அதனில் இல்லாத நிறமில்லை. அது நெட்டையா, குட்டையா எனச் சொல்ல முடியாது. இடத்தாலோ, காலத்தாலோ அல்லது வேறு எந்த வரையுறைக்கு உட்படுத்தப்பட்டு குறிக்கிட இயலாதது. அதை உபநிடதங்கள் - "சத்யம், ஞானம், அனந்தம்" என்றும் "சத், சித், ஆனந்தம்" என்றும் பேசுகின்றன. இந்த நிர்குண பிரம்மத்துடன் மாயை சேரும்போது - அது "சகுண பிரம்மம்" என வழங்கப்படுகிறது - அதாவது குணங்கள் கூடிய பிரம்மம். இந்த நிலையில் சகுண பிரம்மத்தினை - சிவனாகவோ, திருமாலாகவோ அல்லது வேறு ஒரு இஷ்ட தெய்வமாகவோ போற்றிப் பாடிட வழி வகுக்கிறது. நம்மால் போற்ற, ஆடிப்பாடி பக்தி செய்ய ஏதுவானதொரு கருணை பொழியும் வதனமாகத் திகழ்கிறது. மாயையுடன் சேர்ந்ததால் சகுண பிரம்மமாக - வழிபாட்டுக்கு உரியதொரு தெய்வம் என்னும் நிலை பெற்று, நாம் அருள் பெற வழி வகுக்கிறது. மாயையினால் தோற்றுவிக்கப்பட்ட சொரூபம் தான் இந்த தெய்வங்களாக இருக்க, அந்த தெய்வங்களையே போற்றிப் பாடி, வணங்கி, அவர்களது அருளால் ஜீவனாக இருந்தது, தனது உண்மையான நிலையினை உணரச் செய்திட, மெய்ஞானம் பெற ஏதுவாகிறது.

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.

-பெரியபுராணம்.

பெரிய புராணத்தின் இந்த துவக்கச் செய்யுளைப் பார்த்தோமேயானால்:
முதல் வரியில் : ஓதற்கு அரியவன் - அது நிர்குண பிரம்மத்தினை குறிப்பது.
அடுத்த வரியில் : நிலவை அணிந்தவன் - குணங்களைக் கொண்ட சகுண பிரம்மத்தினைக் குறிப்பது.
அதற்கு அடுத்த வரியில் : அலகிலாதவன் - மீண்டும் நிர்குண பிரம்மம்.
இப்படியாக, மாற்றி மாற்றி இவன் இரண்டுமாய் இருப்பவன் என்பதை சுட்டிக் காட்டுகிறார் சேக்கிழார் பெருமான்.

க்தி செய்திட கீர்த்தனம் ஒரு கருவி என்று பார்த்தோம். நமது நீண்ட பாரம்பரியத்தில் பலநூறு அறிஞர்களும், புலவர்களும், கவிஞர்களும் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றி நமக்கு அருமையான பக்தி செய்யும் கருவிகளை செய்து தந்திருக்கிறார்கள். சண்மதம் முன் நிறுத்திய ஆறு இறைகளை மட்டும் எடுத்துக் கொண்டாலே எத்தனை எத்தனை கீர்த்தனைகள்!. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதரை எடுத்துக் கொண்டால் மட்டுமே பட்டியல் பெரிதாய் நீளும். நீங்களே பாருங்களேன், மூர்த்திகள் வகையில் பிரித்த இவரது கீர்த்தனைப் பட்டியலை:

கணபதி : 27
சிவன் : 131
சக்தி : 176
முருகன் : 36
திருமால் : 41 (27 +14)
சூரியன் உட்பட நவகிரகங்கள் : 9
பெரும்பாலும் 'குருகுஹ' என்ற முத்திரையோடு அமைந்த இக்கீர்த்தனைகள் அத்வைத சாரத்தை எடுத்துச் சொல்லுவதோடு, நமது மறைகள், பிரபந்தங்கள் மற்றும் புராண இதிகாசங்களில் சொல்லப்பட்ட கருத்துக்களை இசையோடு சேர்த்து ஊட்டுகின்றன.

இந்த தெய்வங்களைப் போற்றுவதில் உயர்வு தாழ்வு இல்லை. எல்லாத் தெய்வங்களும் ஒன்றாக கருதப்படும். "We can have preferences, but no exclusions." என்பார்கள். தனக்குப் பிடித்த இஷ்ட தெய்வமாக, ஒரு தெய்வத்தை பற்றிக் கொள்ளலாம். கண்ணன் கீதையில், "என்னைப் பற்றிக்கொள். உனக்குத் தேவையான ஞானத்தை நான் தருகிறேன்", சொல்வதை நினைவில் கொண்டு, பக்தி என்னும் கருவி கொண்டு சகுண பிரம்ம உபாசனை செய்து உயர் ஞானம் பெற்று முக்தி என்னும் வீடுபேறினை பெற்று உய்யும் உபாயத்தினை நம் பெரியவர்கள் நமக்கு காட்டிச் சென்றுள்ளார்கள். ஆயினும், பக்தியும் ஞான மார்க்கமும் வெவ்வேறானது, தொடர்பில்லாதது என்கிற ஐயப்பாட்டு பலரிடம் நிலவத்தான் செய்கிறது.

மேலே சொன்ன ஆறு இறைகளையும் எடுத்துக்கொண்டு, முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் வழியாக பக்தி பண்ணிப் பாடிப்போற்றி இந்தத் தொடரில் பயணிக்கப் போகிறோம். ஒவ்வொரு பகுதியிலும் ஒரு இறையை எடுத்துக்கொண்டு, தீக்ஷிதரின் கிருதிகளை முன்னிருத்தி, அதிலிருந்து பக்தி செய்வதற்கான உந்துதலைப் பெற முனைவோம்.

அடுத்த பகுதியில் முமுதற் கடவுள் கணபதியைப் பாடித் துவங்க இருக்கிறோம்...

Sunday, December 06, 2009

மார்கழி : அரங்கர் வரார் பராக் பராக்!

பராக்! பராக்! என்கிற கூக்குரலைக் கேட்டு மக்கள் அனைவரும் அக்குரல் வந்த திசையினில் திரும்பிப் பார்க்கின்றனர்! கட்டியங்காரர்களின் குரல் வந்த திசையில் பார்த்தால், ஆகா, அங்கே, அழகானதொரு பரிமேல் என்ன கம்பீரத்தோடு அமர்ந்திருக்கிறார் அழகர் அரங்க நாதர்! தகிக்கும் தங்கக் குதிரையில், தனக்கே உரிய தோரணையோடு அல்லவா வீற்றிருக்கிறார்! வீதிஉலா இதமாய் இருக்க, காவிரிக் காற்று, அவருக்கு சாமரமாய் வீசுகிறது போலும்!

நாதஸ்வரம் முதலான மங்கள வாத்தியங்கள் முழங்க, அரங்கநாதர் அசைந்தாடி வரும் இந்த அழகான திருவீதி உலாக் காட்சியை, தெற்கு சித்திரை வீதியில் இருந்து, மகான் ஒருவர் கண்டு தரிசித்துக் கொண்டிருக்கிறார். அவர் வேறாருமில்லை, சாட்சாத் தியாகராஜரே. அரங்கனின் திருபவனி வீதி வழி வர, ஒவ்வொரு வீட்டிலும் நின்று உபசாரங்களைப் பெற்றுக்கொண்டும், கற்பூர ஆரத்தியினை வழங்கிக்கொண்டும், நடந்தேறிக் கொண்டிருந்தது அவ்வுலா.

தீவட்டிகளின் ஒளியில், தியாகராஜர், தான் காணும் கண்கொளாக் காட்சியை, தித்திக்கும் இறையனுபவத்தினை, அழகான தோடி இராகக் கீர்த்தனையாய் வடிக்கிறார். அப்பாடலினின் பல்லவி 'ராஜு வெடலெ ஜூதாமு ராரே கஸ்தூரி ரங்க' என்பதாகும். பாடலின் சாகித்ய வரிகளுக்கு இங்கே அணுகவும்.

இப்போ, இந்தப் பாடலை தமிழில் மொழி பெயர்த்துப் பார்க்கலாமா!

பல்லவி:
கஸ்தூரி ரங்கனின் களையான பவனியைக் கண்டு களிப்போமே!

அனுபல்லவி:
திகழும் நவரத்தினங்கள் மின்ன,
திருவரங்க நாதன் பவனி கண்நிறைய,
பரிமேல் அமர்ந்த சுகந்தனை
பாருலக வேந்தரும் சேவிக்க,
(கஸ்தூரி ரங்கனின்..)

சரணம்:
காவிரிக் கரையில் புண்ணியபுரி திருவரங்கமதில்
சீரார்ந்த சித்திரை வீதிதனில் அலங்காரங்களுடன்
அரங்கனின் பவனி அற்புதக் காட்சியன்றோ!
விண்ணுலகத் தேவரும் மலர்த்தூவி வழிபட,
தியாகராஜனும் பாடிப்பரவசம் கொள்ள
(கஸ்தூரி ரங்கனின்...)

கன்னியர்கள் பலரும், தங்களை ஆண்டாளாக பாவித்துக் கொண்டு, அரங்கனை சூழ்ந்து நிற்கிறார்கள். கன்னியர்கள் மட்டுமா, இதர பெண்டிரும், அரங்கனை தங்கள் வீட்டுப்பையனாகவே தரித்துக் கொண்டு, அவனது வீதிஉலாவினை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் தொலைவில் இருந்து மட்டுமே தியாகராஜரால் காண முடிகிறது. கூட்டத்தைத் தாண்டி, அருகில் சென்று சடாரியினையும், துளசி பிரசாதத்தினையும் பெற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை. வருத்தத்துடன், அந்த இடத்திலேயெ நின்றுகொண்டு இருக்க, திடீரென வீதிஉலாவும் நின்று விடுகிறது. வாகனத்தை தூக்குபவர்களாலோ ஒரு அடிகூட மேலும் எடுத்து வைக்க இயலவில்லை. திசைதோஷம் ஏதும் உள்ளதோ என்றெண்ணி, அர்சகர்கள் கோயில் தேவதாசிகளை அழைத்து ஆகம சாஸ்திரங்களில் உள்ளபடி அந்த திசைக்கான நடனத்தினை ஆடச் சொல்கிறார்கள். அதனால் ஒரு மாற்றமும் இல்லை. திடீரென, அர்ச்சகர் ஒருவருக்கு ஆவேசம் ஏற்பட, அவர் தியாகராஜர் இருந்த இடத்தைக் காட்டி, ஸ்ரீரங்கநாதரின் சிறந்த பக்தன் ஒருவன், அருகில் வர இயலாமல் தவிப்பதை எடுத்தியம்ப, மற்றவர்கள் அவரை அருகில் அழைத்து வந்து, அவருக்கு பிரசாதங்களை வழங்கிட, பின்னரே திருபவனி தொடர்ந்ததாம். இச்சம்பவத்தினை 'வினராதா நா மனவி...' என்கிற தேவகாந்தாரி இராகப் பாடலில் தியாகராஜர் குறிப்பிடுவதைக் காணலம். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

இவ்வாறாக, அரங்கநாதன், தன்னை தரிசிக்க திருவையாற்றில் இருந்து தியாகராஜர் வந்திருக்கின்றார் என்பதனை அந்த ராஜவீதியில் குழுமியிருந்த அனைவருக்கும் அறிவித்ததாகக் கொள்ளலாம். அன்று மாலை, சிறப்பு முத்தாங்கி சேவையில் கலந்துகொள்ள, கோயில் அதிகாரிகள், தியாகராஜரை அழைத்துவர, அங்கே தியாகராஜர், சந்நிதியில் பாடிய பாடல், காம்போதி இராகக் கிருதி 'ஓ ரங்கசாயி..', மிகவும் பிரபலமான பாடல். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

ஓ ரங்கசாயி பாடலை, எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடிட, ராகா.காமில் கேட்டிட சுட்டி இங்கே. சபாஷ் சொல்லவைக்கும் சங்கதிகளில் காம்போதியின் அழகை இன்னும் இனிமையாக யாரேனும் தரக்கூடுமோ? ஓ என்ற ஒற்றைச் சொல்தான் எத்தனை விதமான ஸ்வரங்களில் வலம் வருகிறது!



இந்த பாடலை, தமிழிலும் பார்க்கலாமா?

பல்லவி:
ஓ ரங்க விமான சயனா - நான் அழைத்தால்
ஓ என நீயும் வாராயோ?

அனுபல்லவி:

சாரங்கம் தரித்தவனும் உனைக்கண்டு
கைலாயபதி ஆனானோ,
(ஓ ரங்க விமான சயனா...)

சரணம்:
பூலோக வைகுண்டமே திருவரங்கமென
பெருமிதமும் நீயே கொண்டு, ஸ்ரீதேவியுடன்
குலவிக்கொண்டிருந்தால், எம்
குறைகளைக் களைவது எப்போது?

மற்றவர் உயர்வை பொறுக்கா
மானிடரிடை துயர்பல பெற்றநான்
நின்திருஉருவினையும் முத்துமார்பினையும்
காண வந்தேனே, தியாகராஜனின்
இதயமெங்கும் அலங்கரித்தவனே,
(ஓ ரங்க விமான சயனா...)

பின்னர் மேலும் இரண்டு கிருதிகளையும் அவர் இயற்றிட, அவையானவை: சூதாமு ராரே எனும் ஆரபி இராகக் கிருதி மற்றும், கருண ஜூடவய்ய என்கிற சாரங்கா இராகப்பாடல். இந்த ஐந்து பாடல்களையும் சேர்த்து, "ஸ்ரீரங்க பஞ்சரத்தினம்" என்று வழங்குவர்.

இந்த ஸ்ரீரங்க பஞ்சரத்தின கீர்த்தனைகளை கேட்கையில், ஆதி சங்கரர் இயற்றிய ரங்கநாத அஷ்டகம் தனையும் நினைவு கூறாமல இருக்க இயலாது. பாடகர் பலரும் ரங்கநாத அஷ்டகத்தின் ஒரிரண்டு சுலோகங்களை விருத்தமாக பாடிப்பின், ஓ ரங்க சாயி பல்லவியினைத் துவங்குவார். தியகராஜரும் 'ரங்க சாயி' எனச்சொல்வது மட்டுமல்ல. 'காவேரி தீரே, கருணா விலோலே...' போன்ற அஷ்டக வரிகளையும் தியாகராஜரின் சாகித்யத்தோடு ஒப்பு நோக்கலாம்.

ரங்கநாத அஷ்டகத்தில் இருந்து சில சுலோகங்களை இங்கு விருத்தமாகப் பாடக் கேட்கலாம்:
(அருணா சாய்ராம் அவர்கள் பாடிட)

Wednesday, April 29, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்திமூன்று

பா 68:
திக்கிடங் காலமுதற் றேம லென்றுமெத்
திக்குமார்ந் தேக்குளிர்மு றிப்பதா - யெக்களங்கமு
மற்றநித் யானந்த வான்மதீர்த் தத்துதோய்
உற்றவ னார்செய்கை யொன்றின்றி - மற்றவன்
யாவு மறிந்தொணா யெங்குநிறைந் தாரமிர்த
நாவ னெனவே யறி.

பதம் பிரித்து:
திக்கு, இடம், காலம் முதற்றே அமலென்றும்
எத்திக்கும் ஆர்ந்தேக் குளிர் முறிப்பதா(ம்) - எக்களங்கமும்
அற்ற நித்யானந்த ஆன்ம தீர்த்தத்து
தோய்வுற்றவனார் செய்கை ஒன்றின்றி மற்றவன்
யாவும் அறிந்தொணா எங்கு(ம்) நிறைந்த ஆரமிர்தன்
ஆவன் எனவே அறி.


பொருள்:
திசை, இடம், காலம், போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடாத முடியாததும்,
எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் நிறைந்ததுமான,
எதிர்மறையான வெப்பத்தினையும், குளிரையும் கூட அழிப்பதுமான,
களங்கமில்லா, நிலையான, அழிவிலா இன்பத்தை இகத்தில் தருவதுமான, பரம்பொருளை,
எவனொருவன் எல்லா செய்கைகளையும் துறந்து, தன் ஆன்மாவெனும் தீர்தத்தில் மூழ்கித் தோய்கிறானோ,
அவன், எல்லாமும் அறிந்தவனாய், எங்கெங்கும் நிறைந்தவனாய்,
அமிர்தமாய் அழிவில்லாததாய் ஆகிறான்.

விளக்கம்:
பரம்பொருளானது காலம், இடம், திசை போன்ற குணங்களால் குறுக்கப்படாமல், எல்லாவற்றையும் தாண்டி எல்லா இடத்திலும், எல்லா திசையிலும் நிறைத்திருக்கிறதாம்.
அப்பரம்பொருளை, தன் ஆன்மாவான 'தீர்த்தத்தில்' - புனித நீரில் மூழ்கி - தன்னைத்தானே, அதில் தோய்த்துக் கொள்கிறானோ, அவன் அந்த பரம்பொருளாகவே, அதன் அழிவிலா நிலையினை அடைகிறானாம்.
புனிதமான எந்த ஒரு இடத்துக்கும் செல்ல வேண்டாமல், தன் இகத்திலேயே பரத்தினைக் காண ஏதுவாகிறது ஞானிக்கு. அது அவனுக்கு நித்யமான ஆனந்தத்தினை நிரந்தரமாய் அடையவும் செய்கிறது.

~~~

இவ்வாறாக ஆத்ம போதம் நிறைவடைந்தது.
பகவான் இரமணரின் திருவருளால், இப்பகுதிகளை இங்கே தர இயன்றது.

உசாத்துணை: சுவாமி நிகிலானந்தரின் ஆத்ம போதம் ஆங்கில உரை.

மேலும், இணையத்தில் கிடைத்த சுவாமி சின்மயானந்தரின் ஆங்கில உரையாக்கம்:

ஆத்ம போதம் - சுவாமி சின்மயானந்தர் உரை ஓம் தத் சத்!

Sunday, April 19, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்திரண்டு

பா 66:

சிரவண மாதிகளாட் றேசுறு ஞான
வெரியினிற் காய்ச்சி யெடுக்கச் - சருவ
மலமும்போய்ச் சீவன் மறுவில்பொன் போனிர்
மலனாகித் தன்னொளிர் வான்.

பதம் பிரித்து:
சிரவணமாதிகளாலே சுறு ஞான
எரியினிற் காய்ச்சி எடுக்கச் - சருவ
மலமும் போய்ச் சீவன் மறுவில் பொன் போல்
நிர்மலன் ஆகித் தன்னொளிர்வான்.

பொருள்:
சிரவணம் முதலான சாதகங்களில் ஆன்ம முதிர்விற்கு உந்தப்படும் சாதகன்,
ஞானமெனும் நெருப்பில் நன்கு காய்ச்சி எடுக்கப்படுவது போலவாம்.
பொன்னை நெருப்பில் காய்ச்சி,
அதில் இருக்கும் பொன் அல்லாத, மற்ற உலோகங்களை அதனில் இருந்து அகற்றி,
தூய்மையான தங்கத்தை எடுப்பது போல,
சிரவணம் முதலான, கேட்டல், பாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு,
தன்னில் இருக்கும் அழுக்கான மலங்களை அகற்றி,
தூய்மையான சச்சிதானந்தாமாய் ஒளிர்வான்.

விளக்கம்:
ஞானமெனும் நெருப்பு : நெருப்பு எப்படி, தூய்மையாய், மாசற்று இருக்கிறதோ அதுபோல, தூய்மையான மெய்ஞானமும், அழுக்கற்று இருக்கும். நெருப்பில் காய்ச்சி, அழுக்கு அகற்றிட, தூய்மையாகும் பொன்போல,
ஜீவனில் அழுக்கு அகற்றி, அதன் தூய்மையான முழுமுதல் நிலைக்கு திரும்பிட ஆவன செய்ய வேண்டும்.
எவ்வாறு?: சிரவணம் (மறைகள் சொல்லும் உன்னத நெறிதனைக் கேட்டறிதல்) முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்)
வழி நெறிகளில் தன்னைத் தான் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வழிநெறிகளில் நன்கு பக்குவப்பட்ட மனதில், அழுக்குகள் அகல, அதுவே அவன் தன்னைத் தானறிந்து ஒளிர்ந்திட ஏதுவாகிறது.

பா 67:
இதயவெளி தோன்றி யிருளையழி ஞான
உதயரவி யான்மா வொளிரு - நிதமுமே
யெல்லாவட் றும்பரவி யெல்லாமுன் தாங்கினிந்
றெல்லா மொளிர்விக்கு மெண்.

பதம் பிரித்து:
இதயவெளி தோன்றி இருளை அழி ஞான
உதய ரவி ஒளிரு(ம்) நிதமுமே
எல்லாவற்றும் பரவி, எல்லாமுன் தாங்கி நின்று
எல்லாம் ஒளிர்விக்கும் எண்.

பொருள்:
இதயவெளியில் இருந்து தோன்றிய, ஞானமானது, அறியாமை என்னும் இருளை அழித்திட, அது அன்றாடம் கிழக்கில் உதிக்கும் சூரியன் இருளை அழித்து, ஒளிர்வது போலவாம். அம்மெய்ஞானம், எல்லாப் பொருளிலும் பரவி, எல்லாப் பொருளையும் நிலைப்பெறச் செய்து, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவை எல்லாவற்றையும் ஒளிர்ந்திடச் செய்திடுவது, என்று எண்ணுக.

Wednesday, March 25, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்தொன்று

பா 64:
எதுவெது காணவுங் கேட்கவு மேயு
மதுபிரம்மத் தன்னிய மாகா - ததுவுமே
தத்துவஞா னத்தினாற் சச்சிதா னந்தமா
மத்துவை தபிரம மாம்.

பதம் பிரித்து:
எதுவெது காணவும் கேட்கவுமேயும்
அது பிரம்மத்தின் அன்னியம் ஆகாததுவுமே,
தத்துவ ஞானத்தினால் சச்சிதானந்தமாம்
அத்துவைத பிரம்ம மாம்.

பொருள்:
நாம் காண்பவையும், கேட்பவையும்,
பிரம்மத்தில் இருந்து வேறானது அல்ல.
மெய்ஞானத்தை அடைந்தவர் பிரம்மத்தை சத் என்றும் சித் என்றும் ஆனந்தம் என்றும்,
பிரித்துச் சொன்னாலும்,
அது 'இரண்டு' என்றில்லாத, அத்வைதமான, பிரம்மமேயாம்.

விளக்கம்:
மெய் ஞானத்தினை அடைந்தவர் எங்கெங்கும் பிரம்மத்தினை அன்றி வேறொன்றும் பார்த்தறியார், கேட்டறியார்.
அந்த முழுநிலையினை அடையாதவருக்கோ, அது பன்மையாகத் தெரிந்தாலும், அவர்களும் பார்ப்பதும், கேட்பதும் எல்லாமுமே, பிரம்மமேயாம்.
தான் யாரெனும் தன்னறிவு தூர்ந்ததும், சச்சிதானந்த மயமான பிரம்மம் தானெனும் மெய்யறிவு மேலிட,
இரண்டிலா பிரம்மமாக இரண்டிலா நிலையினை தம்மிலும் உணர்வர்.

பா 65:
சருவத்துஞ் சார்ந்ததாஞ் சச்சிதா னந்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்
ஞானக்கண் ணில்லாத நண்ணானே காட்சியொளிர்
பானுவையன் தன்போலப் பார்.

பதம் பிரித்து:
சருவத்தும் சார்ந்ததாம் சச்சிதானந்த்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்,
ஞானக்கண் இல்லாதன் நண்ணானே காட்சியொளிர்
பானுவை யந்தன் போலப் பார்.

பொருள்:
பிரம்மம் சச்சிதானந்தமாய், எங்கெங்கும் எல்லாப்பொருளிலும் நிறைந்திருந்தாலும்,
ஞானக் கண் உடையவரால் மட்டுமே, அதை உணர்ந்திட இயலும்.
அந்நிலையை அடையாதவருக்கோ,
கண்ணெதிரே சூரியன் உதித்திருந்தாலும், அதை அறிய இயலாத பார்வை இழந்தவன் போல், ஒளிரும் பிரம்மத்தினை உணர இயலாதவனாய் இருக்கிறான்.

விளக்கம்:
பிரம்மம் எப்போதும், எல்லாவிடத்தும் ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும்,
தமது அகக்கண்ணை மறைக்கும் அறியாமை இருள் அகலாத வரைக்கும்,
அவர்கள், மெய்ஞானப் பார்வைதனை இழந்தவராய்,
ஒளிரும் பிரம்மத்தினைக் காண இயலாதவராய் இருக்கின்றார்.

அவனது பார்வையோ, அவனது சொல்லோ, அல்லது அவனது வேறு எந்த புலனோ அவனுக்குத் துணையில்லை. அவன் செய்யும் தவமோ, அல்லது நற்செயலோ கூட இல்லை. எப்போது, தூய சுடரொளியாம் ஞானம் பெறுகிறானோ, அப்போதுதான் அவன் பரமனைப் பார்க்கிறான். அந்தப் பரமனையே தியானிக்க, அந்தப் பரமனில் இரண்டில்லாமல் ஆகிறான்.
- முண்டக உபநிடதம், III, i, 8

Sunday, March 15, 2009

தமிழில் ஆத்ம போதம் : பகுதி இருபது

பா 62:
ஒளிர்ந்துலக மெல்லானத னுள்வெளிவி யாபித்
தொளிர்ந்திடு மப்பிரம மோர்வா - யொளிரு
நெருப்பினிற் காய்ந்தங்கி நேரொளிரு மந்த
விரும்புண்டை யைப்போல வே.

பதம் பிரித்து:
ஒளிர்ந்து உலகமெல்லான் அதனுள் வெளி வியாபித்து
ஒளிர்ந்திடும் அப்பிரமம் ஓர்வாய் ஒளிரும்
நெருப்பினிற் காய்ந்தங்கினேர் ஒளிரும் மந்த
இரும்புண்டையைப் போலவே.

பொருள்:
ஒளிர்ந்து உலகின் உள்ளே, வெளியே, என எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுமான
பிரம்மம் ஒளிருவது -
மந்தமான ஒரு இரும்பு உருண்டையை, நெருப்பில் காட்டி, பழுக்கக் காய்ச்சிட,
அதன் உள்ளும்,புறமும், எல்லாமும் நெருப்பாகவே ஒளிருவதைப் போலவே ஆகும்.

பா 63:
பிரமம முலகிற் பிறிதாகு மந்தப்
பிரமத் தணுவில் பிறிதாய் - பிரமத்தற்
கன்னிய மேது மவிர்ந்தா லதுமித்தை
யுன்னுக கானநீ ரொத்து.

பதம் பிரித்து:
பிரமம் உலகிற் பிறிதாகும் அந்தப்
பிரமத்தின் அணுவில் பிறிதாய் - பிரம்மத்தற்கு
அன்னியம் ஏதும் அவிர்ந்தால் - அது மித்தையென
உன்னுக கான(ல்) நீர் ஒத்து.

அருஞ்சொற்பதம்:
அவிர்தல் : ஒளிர்தல்
மித்தை : தோற்றமயக்கம்
உன்னல் : நினைத்தல்

பொருள்:
பிரம்மம், உலகத்தில் இருந்து வேறுபட்டதாகும்.
அப்படிப் பிரித்து, 'இன்னொன்றாய்'ப் பார்க்கையில்,
பிரம்மத்தினைத் தவிர இன்னொன்று ஒளிர்ந்தால், அது, பொய்யான, காட்சிப் பிழையாகத் தான் இருக்க வேண்டும்,
பாலைவனத்து கானல் நீர்போல.

விளக்கம்:
அத்வைத வேதாந்தத்தின் முடிபாக இப்பாவினைக் காணலாம்.
ஞானம் பெற்றவன், எல்லாவிடத்திலும், பிரம்மத்தினையே பார்க்கிறான்.
மற்றவர்களுக்கு, வெவ்வேறாகத் தெரிபவை எல்லாம், அவன் பார்வையில் 'ஒன்றே'யாம். அதுவே உண்மையாம்.
அறியாமையினால், வெவ்வேறாகத் தெரிந்தவையும் 'ஒன்றென'த் தெரியுமாம்,
அவ்வறியாமை அகன்றதும்.
அங்கே மெய்ஞானம் மட்டுமே, பிரம்மம் எனத் தெளிவித்து ஒளிர்ந்திடச் செய்யும்.
வறண்ட பாலையில் தொலைவில் தெரியும் நீர்ச்சுனை, உண்மையில் தோற்ற மயக்கம் என்பதுபோல,
இவ்வுலகமே பிரம்மம் எனத் தெரிவதும் காட்சிப்பிழையேயாம்.
இவ்வுண்மையை அறிந்தவர்க்கு, தன்னை அறிதலே தலையாய குறிக்கோளாய் இருக்கும்.
தான் யாரெனும் வினவலை விடுத்து, உலகம் யாதெனச் சென்றாற்பின், அது கானல்நீர் வேட்டை போலத்தான் ஆகும்.

"இரண்டாகத் தெரிவதை இருப்பதாகக் கொண்டாலும், அது மறைந்து போகத் தான். ஏனெனில், இரண்டெனத் தெரிவதெல்லாம் காட்சிப் பிழையே. அத்வைதம் மட்டுமே, உன்னதமான உண்மை."
- கௌடபாதரின் மாண்டூக்ய உபநிடதக் காரிகை I, 17

Monday, February 09, 2009

தமிழில் ஆத்மபோதம் - பகுதி பத்தொன்பது

பா 59:
அதனிடத் துள்ள தகிலமுஞ் செய்கை
யதையடுத் துள்ளதே யாகு - மதனாற்
பரவிடு மெல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு நெய்போல வே.

சீர்களைப் பிரித்தபின்:
அதனிடத்துள் உள்ளது அகிலம் உன் செய்கை
அதை அடுத்து உள்ளதே ஆகும் - அதனாற்
பரவிடும் எல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு(ம்) நெய் போலவே.

பொருள்:
பிரம்மம் - அதனுள், அகிலமும், அதளுள் அடங்கும் அனைத்துப் பொருள்களும் அடங்கும்.
அகிலத்தில் நிகழும் அனைத்து செயல்களும், அதனைத் தொடர்ந்தே நிகழ்கின்றன.
மூலமான பரம்பொருளில் இருந்துதான் மற்ற எல்லாமும் பரவுகின்றன.
பாலில் நெய் போல் பரம்பொருளும் எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும், எல்லா செயலிலும் விரவி இருக்கிறது.

விளக்கம்:
எல்லாப் பொருளிலும் பிரம்மம் எனும் பரம்பொருளே நிறைந்து இருக்கிறது.
எல்லாப் பொருளிலும் இருக்கும் நித்யமான, சாசுவதமான ஒரே பொருள் பிரம்மம் மட்டுமே.
எல்லா செயலிலும் - கேட்டல், பார்த்தல், நுகர்தல், தொடுதல், சுவைத்தல் - என எல்லா செயல்களும் நிகழ மூலக் காரணமாய், பரம்பொருளே அவர்களில் சைத்தன்யமாக திகழ்கிறான்.
பாலைக் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் நெய் போல, எல்லாப் பொருட்களின் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளைக் கடைந்தெடுத்தால், கிடைத்திடும் பொருள் தான் பரம்பொருள்!

இப்படியாக, பரம்பொருளின் பேரின்பம் "இவை" எல்லாவற்றாலும் மறைக்கப்படுள்ளது, அவையாவன:

பா 60:
பருமையு னுண்மையுற் பத்தி வினாசங்
குருகலு நீட்சியுங் கூடத் - துருவங்
குணங்குல நாமமுங் கொள்ளாம லுள்ள
துணர்க பிரம்மமென் றுற்று.

சீர்களைப் பிரித்த பின்:
பருமையு(ம்) நுண்மை உற்பத்தி, வினாசம்,
குருகல், நீட்சியும் கூடத்து - உருவம்,
குணம், குலம், நாமமும் கொள்ளாமல் உள்ளது
உணர்க பிரம்மம் என்று உற்று.

பொருள்:
அளக்கக்கூடிய பொருளின் பருமனும்,
அளக்கவும் அரிதான பொருளின் நுண்மையும்,
உற்பத்தி ஆகுபவையும்,
அவற்றில் அவ்வப்போது அழிந்து போகுபவையும்,
சிறுத்துப் போதலும், பெரிதாகலும் -
இப்படியாக எல்லா வகையான உயிரும் பொருளுமாக இருந்தாலும், அவற்றில்,
உருவம், குணம், குலம், பெயர் போன்ற வேறுபாடுகளைக் கொள்ளாமல்,
ஒன்றென, இருப்பதுவே பிரம்மம் என உணர்ந்து கொள், உற்று நோக்கி.

விளக்கம்:
இவ்வாறாக, வெவ்வேறெனத் தெரிவதில் எல்லாம் மறைந்து இருப்பது பரம்பொருள். மறையோதி மனம் திறந்திட, மறைபொருள் புலப்பட, அறியாமை எனும் இருள் அகன்றிட, இவ்வேறுபாடுகள் களைந்திட, உன்னுள்ளே எழும் சுய வினவலின் விளைவாக, இவ்வேறுபாடுகள் அற்றதே பரம்பொருள் என உணர்வாய்.

பா 61:
எதனொளியி னாலொளிரு மேயிரவி யாதி
யேதனை யவையொளிர்க்க வெலா - தெதனாலே
யிந்தவுல கெலா மிலகு மதுதானே
யந்தப் பிரம மறி.

சீர்களைப் பிரித்தபின்:
எதன் ஒளியினால் ஒளிருமே இரவியாதியே
அதனை அவை ஒளிர்க்க இலா - எதனாலே
இந்த உலகெலாம் இலகும் அதுதானே
அந்தப் பிரமம் அறி.

(இலகும் - விளங்கிடும்)

பொருள்:
சூரியன் முதலான விண்மீன்களும், பரம்பொருளால் ஒளிர்கின்றன. ஆனால், அவை தமக்கே ஒளியினைத் தந்திட இயலா. எந்த ஒரு பொருளால், இவ்வுலகமெல்லாம், விளங்கித் திகழ்கிறதோ, அப்பொருள்தான் பிரம்மம் என அறிந்திடுவாய்.

விளக்கம்:
வானத்தில், தானாக ஒளிர்விடும் பொருட்கள் உண்டு. அவற்றின் ஒளியினைப் பிரதிபலிக்கும் பொருட்களும் உண்டு.
இவற்றில், எதுவாகிலும் சரி, அவற்றின் ஒளியின் மூலத்தின் மூலம், பரம்பொருளேயாம்.
தமது ஒளியாலேயே தம்மைத் தாமே, ஒளிர்க்க (தத்தம் அறியாமை அகன்றிடச் செய்திட) இயலாத பொருட்கள் இவை. அவற்றின் அறியாமை அகன்று, ஒளியுடன் திகழ, பரம்பொருளின் ஒளி தேவைப்படுகிறது.
அந்த பரம்பொருளின் ஒளியால் தானே, இந்த உலகமும், அண்ட சராசரங்களும், விளங்கித் திகழ்கிறது!

இருட்டில் ஒரு பொருள் இருக்கிறது. என்ன பொருள் என கண்டுகொள்ள இயலவில்லை. அதன்மீது ஒரு கைவிளக்கின் வெளிச்சத்தை செலுத்திப் பார்க்கிறோம், எந்த பொருள் எனத் தெரிய.
தபால்காரன் கொண்டுவந்து தந்த பெட்டிக்குள் இருக்கும் பொருள் என்னவென்று தெரியவில்லை, அதைப் பிரித்துப் பார்க்கும் வரை. பிரித்தபின் அதுவென்ன என விளங்குகிறது.
ஏற்கனவே தெரிந்த பொருளாக இருந்தாலும், தெரியாமல் இருந்தது, இப்போது தெரிந்ததாகிறது.
இப்படியாக, தெரியாமல் இருந்த ஒவ்வொன்றும் தெரியத் துவங்குகிறது, அதைப் பற்றிய அறியாமை அகன்றதும்.
ஆக, அறியாமை அகல, தெரியாப் பொருளைப் பற்றிய அறிவு சேர்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக.
இதற்கு எங்கே முடிவு?
எப்போது, இன்னும் மேலுமாக, அறிவதற்கு மேலும் ஏதுமில்லை என்ற நிலை எப்போது ஏற்படும்?
அந்த பரம்பொருள் இன்னவென்று அறிந்த பேரறிவினை எட்டிய நிலையில் மட்டுமே.
அதனால், அவ்வறிவிற்குப் 'பேரறிவு' எனப்பெயர். இவ்வறிவிற்கு மேல், அறியவேண்டியது ஏதுமில்லா முக்தி நிலை.

பாரதியும் சொல்லுவான்,
பல்லாயிரம் வேதங்கள் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனல் கேளீரோ!

Saturday, December 20, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினேழு

பா 56:

எதுகுறுக்கு மேல்கீழா மெங்குநிறை வாகும்
எதுசச்சித் தின்பிரண் டிலா ததானந்தம்
நித்தமா யொன்றாய் நிகழ்வதெது வாகுமவ்
வத்து பிரம மதி.
(சீர்களைப் பிரித்து:)
எது குறுக்கு மேல் கீழாம் எங்கும் நிறைவாகும்
எது சச்சித் இன்ப இரண்டிலாத ஆனந்தம்
நித்தமாய் ஒன்றாய் நிகழ்வது எதுவாகும் அவ்
வத்து பிரமம் அதி.

பொருள்:
குறுக்கு, மேல், கீழ் என எங்கும் நிறைந்திருக்கும் எப்பொருளோ,
எது சத் எனவும், சித் எனவும், ஆனந்தம் எனவுமான பொருளோ,
எது இரண்டு என்றில்லாமல்,
எது எப்போதும் ஒன்றாகவே இருக்கிறதோ,
எது எப்போதும் ஒளிர்ந்து திகழ்கிறதோ,
அப்படிப்பட்ட பொருளே, பிரம்மம் எனக் கொள்வாய்.

விளக்கம்:
வேதங்கள் யாவும் கூறும் உண்மைப் பொருளாம், தன்னை அறிந்தார் உணர்வதாம்,
பிரம்மம் என்னும் மெய்ப்பொருள் எப்படி இருக்குமாம்?
இவ்வெண்பா சொல்லும்:
பிரம்மம் என்னும் வஸ்து, எல்லாவற்றுக்கும் மேலேயிலிருந்து, எல்லாவற்றுக்கும் கீழ் வரையும், இரண்டுக்கும் இடைப்பட்ட இடமெலாமும், இப்படியாக எல்லா இடமும், நிறைந்திருக்குமாம்.

முன்னே இருப்பதும் பிரம்மம், பின்னே இருப்பதும் பிரம்மம்,
வலப்பக்கம் இருப்பதும் பிரம்மம், இடப்பக்கம் இருப்பதும் பிரம்மம்,
கீழேயும் பிரம்மம், மேலேயும் பிரம்மம்.
இங்கே இருப்பது எல்லாமும் பிரம்மம். பிரம்மம் மட்டுமே.
-முண்டக உபநிடதம்.

அது சத்(களம்), சித் (சாதனம்), ஆனந்தம் (இலக்கு) எனவாய் இருக்கிறது. ஒரு கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால், அதில் ஆடுகளமும் ஆட்டமும் - சத்; எல்லையில்லா பிரபஞ்சத்திலோ எல்லாமே சத்; கிரிக்கெட் ஆட பயன்படும் பந்து, மட்டை, கையுறை போன்றவை சாதனம் - ஆகவே அவை சித். அடைய வேண்டிய வெற்றியானது ஆனந்தம். இந்த மூன்றுமாய் இருக்கிறது பிரம்மம். அதவாது, அடைய வேண்டிய இலக்காகவும், அடைவதற்கான களமாகவும், அடையத் தேவையான சாதனமாகவும் இருக்கிறது.

ஜீவனாய் இருக்கும்வரை இரண்டெனத் தெரிந்தது. பிரம்ம நிலையில் எல்லாமே ஒன்றுதான். ஒன்று என எங்கெங்கும் நிகழ்வாய் திகழ்கிறது.


"அதுவும் (தெரியா பிரம்மம்) நிறைவானது, இதுவும் (தெரிந்த பிரம்மம்) நிறைவானது.
இந்த நிறை (தெரிந்த பிரம்மம்), அந்த நிறையில்(தெரியா பிரம்மம்) இருந்து தான் உருவானது.
இந்த நிறையின் முழுமை, யாதெனத் தெளிந்தபின், அந்த நிறையே இங்கும், எங்கும் நிறைந்தது."
- பிரஹதாரண்யக உபநிடதம்


சுட்டிகள்:
* சச்சிதானந்தம் பற்றி மகாபெரியவர் 'அருள்மொழி அமுதம்' தனில் சொல்வது:
"‘சத் சித் ஆனந்தம்’ என்று நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்."

* திண்ணையில் எஸ்ஸார்ஸி : வேத வன விருட்சம்:
"சத் சித் ஆனந்தம்
பிரம்மத்தை தொடக்கமாய்ப் பேசும்
சத்தும் சித்தும் வேறல்ல
அறிதலுக்கு சாட்சியே சத்
மெய்யை அறிதல்
வலி யினின்று விடுதலை
பிரம்மம் ஆனந்தக் கடல்
சித்தே ஆனந்தம்
சத் சிதா ஆனந்தம்"

Sunday, December 07, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினாறு

சென்ற சில வெண்பாக்களில், ஜீவன் முக்தரைப் பற்றியும், அவர் முக்தி அடைந்த பின், பரமனை முழுதும் அறிந்த நிலையில், அந்த பரமனும், ஜீவனும் வேறில்லா நிலைதனை அடைதலைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து, நாம் பார்க்கப்போகிற சில பாக்களில், பரமனை எட்டிய ஜீவனின் ஆன்மா, பரமன் எப்படிப்பட்டதென அறியும் என்பது சொல்லப்படுகிறது.

பா 54:
எவ்வடை விற்பிறி தேதுமடை தாற்கின்றோ
வெவ்வின்பி னிற்பிறி தின்பின்றோ - வெவ்வறிவு
தன்னிற் பிறிதறிவு தானின்ற மோவது
தன்னைப் பிரமமெனச் சார்.
(சீர்களைப் பிரித்து)
எவ்வடைவில் பிறிது ஏதும் அடைதல் இன்றோ
எவ்வின்பினில் பிறிது இன்ப(ம்) இன்றோ - எவ்வறிவு
தன்னில் பிறிதறிவு தான் இன்றமோ அது
தன்னைப் பிரம்மம் எனச் சார்.

பொருள்:
எதை அடைந்தபின், அடைவதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எவ்வின்பத்தினை அடைந்தால், அதன் பின் அதைத்தவிர வேறொரு இன்பம் என்றில்லையோ,
எவ்வறிவானது, தான் யாரென அறிந்திடும் அறிவினைத் தந்திட, அந்த தன்னறிவு அன்றி வேறேதும் அறிய இல்லை, என்கிற நிலைதனைத் தந்திடுமோ,
அது, வேறொன்றும் இல்லை, அது தான் அன்றி வேறொன்றும் இல்லை,
அது, பிரம்மம் என அவன் சென்றடைவான்.

பா 55:

எதுகாணக் கண்டார் கேதுவுமே யின்றோ
வேதுவான பின்சன்மா மின்றோ - வேதுவறிந்த
பின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ
வானது தான்பிரம மாம்.
(சீர்களைப் பிரித்தபின்)
எதுக்காணக் கண்டார்க் ஏதுவுமே இன்றோ
எதுவானபின் சன்மா இன்றோ - எதுவறிந்த
பின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ
ஆனது தான் பிரம்மமாம்.

பொருள்:
எதைக் கண்டபின், பார்ப்பதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எதை அடைந்தபின், அதன்பின் இன்னொரு பிறப்பு என்பதில்லையோ,
எதை அறிந்தபின், அதன்பின் அறியத் தக்க பொருள் என்று வேறில்லையோ,
அப்படிப்பட்ட பொருள் தான், பிரம்மமாம்.

விளக்கம்:
எல்லோரும் ஏதோ ஒரு பொருளை அடைய, அன்றாடம் ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்கிறோம். ஆனால், எதை அடைந்தாலும், அதனால் அடையும் நிறைவானது தற்காலிகமாகவே இருக்கின்றது. தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடைதலும், நிறைவின்மையும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறவிக்குப் பின் பிறவியிலும், இத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது முற்றுப் பெறுவது எப்போது?
பிரம்மம், என்னும் அந்நிலைதனை அடைந்தால் மட்டுமே, தேடல் நிற்கிறது. அதன் பின், அடைவதற்கு வேறோன்றும் இல்லை என்னும் நிறைவினை தருகின்றது.
பொருள் மட்டும் இன்றி, இன்பத்தையும் தேடி அன்றாடம் அலைகின்றோம். ஆனால், கிட்டும் இன்பமெல்லாம் நிறைவினைத் தருவதில்லை. நிலையான பேரின்பம் மட்டுமே, அடைதலுக்கு வேறொரு இன்பம் தேவையில்லை என்கிற நிறைவினைத் தந்திட இயலுமாம்.
பொருளும், இன்பமும் மட்டுமல்ல, பலவற்றையும் கற்றும், கண்டும், கேட்டும், அறிகிறோம். புலன் வழி கற்கும் அறிவோ, பொருளறிவாகவே இருக்கிறது. பேரின்பம் தரும் பெரும் ஞானத்தினை, புலன்களுக்கு அப்பாற்பட்ட பேரறிவினைத் தருவதில்லை. பெரும்பாலும் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது. (பார்க்க - கபீரின் கனிமொழிகள் : கற்றவர் படும் பாடு.) தான் யாரெனும் தன்னறிவு தந்திடும், உயர் ஞானத்தினை அடைந்திடுதல் மட்டுமே, பேரின்பம் தரும். அதுவே அடைய வேண்டிய எல்லா அறிவுகளிலும் உயர்வான ஞானம்.

அப்படிப்பட்ட பிரம்மத்தினைக் கண்டபின், காண்பதற்கு வேறொன்றுமில்லை. எல்லாமே ஒன்றாதக் தெரிவதால். தானும், அண்ட சராசரங்களும், அகில உலகமும், எல்லாமும், ஒன்றாகவே இருப்பதால், அந்த அனுபூதி நிலையில், வேறொன்று எனக் காண்பதற்கு இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மமாகவே மாறிய பின், பிறப்புச்சுழலும் அறுகிறது. மீண்டும் அல்லல் தரும் பிறப்பு என்னும் நிலை இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தினை அடைந்த பின், அடைவதற்கு உகந்த பொருள் என்று ஏதுமில்லை.

Sunday, November 23, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினைந்து

பா 53:

உபாதிநா சத்த லுறுவான் முனிவ
னுபாதியில் விஷ்ணுவி னுள்ளே - யபேதமே
தோயத்திற் றோயமும் தூவிண்ணி லேவிண்ணும்
தீயிற்றீ யும்போலத் தேர்.

(சீர்களைப் பிரித்த பின்:)
உபாதி நாசத்தல் உறுவான் முனிவன்
உபாதியில் விஷ்ணுவின் உள்ளே ஏய - பேதமே
தோயத்தில் தோயமும் தூவிண்ணிலே விண்ணும்
தீயிற் தீயும்போலத் தேர்.

பொருள்:
தான் உண்மையில் யாரென தெரியாமற் செய்யும் உபாதிகளை அழித்து ஒழித்தவன், உபாதி இல்லாத, எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், விஷ்ணுவின் உள்ளே சென்று, அதுவாகவே ஆவான். அவனுக்கும், பரமனுக்கும் வேறுபாடு ஏதும் இருக்காது - தண்ணீரில் தண்ணீர் போலவும், தூய விண்ணில் விண் போலவும், நெருப்பில் நெருப்பு போலவும், தான் இரண்டற இருப்பதை அறிந்து தெளிந்தான்.

விளக்கம்:
தன் முந்தைய வினைகள் களையப்பட்டவன், உபாதிகளையெல்லாம் இழந்து, இறுதியான நிலையினை அடையுங்கால், எல்லாமும் ஆன பரமனும், தன் ஆன்மாவும், இரண்டு என்றில்லாமல், ஒன்றாக இருப்பதை அறிவான்.

ஒரு பானை நிறைய இருந்த தண்ணீர் இருக்கையில், அந்தப் பானை உடைந்து, அதன் நீர், ஒரு பெரிய நீர்நிலையில் கலந்து விட, அந்த நீர்நிலையில் இருக்கும் தண்ணீரில், எந்தத் தண்ணீர் பானையில் இருந்த வந்த தண்ணீர், எனப் பிரித்தறிய இயலாததுபோல, பரமனில், ஜீவனின் ஆன்மா, இரண்டற இருப்பதை அறிவான்.

ஒன்றுமில்லாத பானை, ஒன்று உடைந்து போக, பானைக்குள் இருந்த பரப்பிற்கும், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பர வெளிக்கும், இடையே பிரிவேதும் இல்லை.

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு, அணைந்து போக, எங்கே போனது நெருப்பு?. அணைந்த நெருப்பும், எல்லாமுமான பரமனில் கரைந்தது போல.

முக்தி என்றால் என்ன?
மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, அல்லலோ அல்லல் படும் நிலைகளில் இருந்து, சுதந்தரம் பெறும் நிலையே முக்தி என்பதாகும். பொதுவாக இரண்டு வகையில், குறிப்பிடுகிறார்கள்: ஜீவன் முக்தி - அதாவது, மனிதர் உடலில் உயிர் இருக்கும் போதே, அடையும் முக்தி நிலை. விதேக முக்தி - உடலை விடுத்தபின், அடையும் முக்தி நிலை. ஜீவன் முக்தர், உடலோடு இருப்பதனால், இன்னும் அவருக்கு, தன் ஆன்மாவும், பரமனும், இரண்டாகத் தெரியும் நிலையில் இருப்பார். ஆனால், அது உண்மையல்ல என்பதையும் அவர் அறிவார். உண்மையான இறுதி நிலை, ஒன்றான நிலை, என்பதை அவர் நன்கு அறிந்திருப்பதால், மனக் கலக்கங்கள் இல்லை. என்றாலும், அவர் பரமனின் நிலையான நிலையை அறிந்திருந்தாலும், தன் உடலைத் துறக்கும் வரையிலும், அவர் பரமனாகவே மாறுதல் நிகழாது. (உடலோடு, சேர்ந்து, மறைதல் என்னும் நிலையும் சொல்லப்படுகிறது. இந்நிலை, வேதாந்தத்தைக் காட்டிலும் சித்தாந்தத்தில் வலியுறுத்தப் படுகிறது.)

உபநிடதங்களில் இருந்து குறிப்புகள்:
"அவன் எப்போது, எல்லா தளைகளில் (கர்ம வினைகள்) இருந்து விடுபடுகிறானோ, அக்காலம் வரை, தாமதமாகின்றது. அதன் பின், அவன் முழுமை அடைகிறான்."
சாந்தோக்ய உபநிடதம் VI. xiv, 2

"அவனுக்கு, இறுதியில், எல்லா மாயைகளும், அவற்றால் ஏற்படும் எல்லா குறைபாடுகளும் முற்றுப்பெறுகின்றன."
ஸ்வேதஸ்வதார உபநிடதம் 1.10

"எப்படி, நதிகளெல்லாம், கடலினில் கலந்திடுகையில், தம், நாம, உருவங்களை இழக்கின்றதோ, அது போல, தன்னறிவு பெற்றவன், பரமனை அடைகையில், தன் நாம, உருவங்களை இழக்கிறான்."
முண்டக உபநிடதம் III. ii.8


இப்போது, இரண்டு பகுதிகளுக்கு முன்னால், கே.ஆர்.எஸ் எழுப்பிய வினாக்களை, திரும்பிப் பார்க்கலாமா?

1. இந்த நிலையில் அவர்கள் வினைகள் அனைத்தும் ஓய்ந்திருக்குமா? சஞ்சித/பிராரப்தங்கள் முடிந்து விட்டிருக்குமா?
ஜீவன் முக்தருக்கு, முழுமையாக எல்லா வினைகளும் முடிந்திருக்காவிட்டாலும், உபாதிகளால் குறைபாடுகள் இல்லை. அவற்றால், தான் இரண்டாகத் தெரிவதை நன்கறிந்திருப்பார்.

2. உலகியலின் இயற்கைத் தேவைகளை (உண்பது/உறங்குவது) கடந்து விட்டிருப்பார்களா?
ஜீவன் முக்தருக்கு, உண்பது, உறங்குவது போன்ற உபாதிகள் முழுமையாக முடிவடையாவிட்டாலும், அவற்றால், யாதொரு குறைபாடும் இல்லை.

3. ஜீவன் முக்தியில் இருப்பவர், விதேஹ முக்தி எப்படி எப்போது பெறுவார் என்பது எப்படி தீர்மானிக்கப்படும்? ஜீவன் முக்தரே தீர்மானித்துக் கொள்வரா?
எல்லா கர்ம வினைகளும் முடிந்த பின்னால், எல்லா உபதிகளையும் இழந்து, தானும், பரமனும் வேறல்ல என்பது தெளிந்து, அந்த பரமனை அடைவார்.

Monday, November 17, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதிநான்கு

சென்ற பகுதியில் மறுமொழிகளால் நிறைத்தருளிய கண்ணபிரான் இரவிசங்கருக்கு வந்தனங்கள் பலப்பல. ஜீவன் முக்தரைப் பற்றி அறிந்திட, அவர் எழுப்பிய வினாக்கள், ஆத்ம போதத்தில், அடுத்து வரும் செய்யுள்களுக்கு, முன்னோடியாய் அமைந்திருக்கின்றன என்றால், வியப்பும் மேலிடுகிறது. இப்போது பார்க்கப்போகிற இரண்டு பாக்களுமே, ஜீவன் முக்தரைப் பற்றியவைதான்!

இந்தப்பாடல், ஜீவன் முக்தன் ஒருவன், எப்படி உலகத்தில் வாழ்வான் எனச் சொல்கிறது:
பா 51:
அனித்தவெளி யின்பிச்சை யற்றானா யான்மா
தானின்பித் திருத்தி தன்னையுற் - றனிசமுன்
தன்னொளி யாற்குடம் தன்னுள் விளக்கெனத்
தன்னுள்ளே தானொளிர்வன் றான்.
(சீர்களைப் பிரித்தபின்:)
அனித்தவெளியில் இன்ப இச்சை அற்றனாய் ஆன்மா
தான் இன்பித்தில் இருத்தி தன்னையுற்ற நிஜமுன்
தன்னொளியால் குடம் தன்னுள் விளக்கெனத்
தன்னுள்ளே தான் ஒளிர்வன் தான்.

பொருள்:
தன்னின் வெளியே இருக்கும் உலகத்தின் பால் ஏற்படக்கூடிய இச்சை அல்லது விருப்பம் தீர்ந்திருக்க,
அவ்விச்சைகளெல்லாம், இப்போது தன் ஆன்மாவின் மேல் அன்பாய் மாறியிருக்க,
அந்த 'தான்'(ஆன்மா) தரும் அணையா ஒளியால்,
குடத்தினுள் வைத்த விளக்குபோல, அவன், அவ்வான்மாவால் ஒளிர்வான்.

விளக்கம்:
பரமனின் ஒரு பகுதியாக ஒளிரும், விகாரமேற்படா ஆன்மா, எப்போதும் ஒவ்வொருவர் உள்ளும் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஜீவன் எப்போதுமே, தன்னின் வெளியிலேயே தான் கவனம் செலுத்தி வருவதால், தன் அக ஒளியை தானே கவனிக்க இயலுவதில்லை. ஜீவன் முக்தன், தன் உபாதிகளை எல்லாம் இழந்து வருவதனால், அவனால், வெளி உலகத்தின் ஈடுபாடுகளை புறக்கணித்து, தன் அகவொளியினை உணர இயல்கிறது.
வெளி இன்பங்களில் சிதறடிக்கும் உபாதிகளை இழந்தவன், தன் ஆன்மாவின் பெருமையைப் போற்றும் அன்பில் திளைத்திட,
அவனின் அகங்காரமிலாத மனதில், ஒளிர்ந்திடும் ஒளியினை உணர, அந்த ஒளியாகவே மாறிட, அம்மனதும் விழைகிறது.
எப்படி, கண்ணாடிக் குடத்தினுள், ஒளிதரும் விளக்கினை வைத்துவிட்டு, வெளியில் இருந்து பார்த்தால், அக்குடமே, ஒளியுடன் திகழ்கிறதோ, அதுபோல, அந்த ஜீவனும் ஒளிர்வான்.

கீதையில் கண்ணனும் உரைப்பான்: (2.55):
பார்த்தா, எப்போதும் தன்னுடைய மனதில் எழும் ஆசைகளைத் இழந்து, தனக்குள் மகிழ்ச்சியுடன் ஒருவன் இருப்பானேயானால், அவன் நிலையான ஞானம் அடைந்தவன் எனக் கூறப்படுவான்.

பா 52:
உபாதியுற் றானேனு மொட்டாவிண் போலவ்
உபாதித்தரு மங்களொ டொட்டா - னுபாதியில்லான்
முற்றறிவ னெனுமுனி மூடனென வாயுபோற்
பற்றறச் சஞ்சரிப் பான்.
(சீர்களைப் பிரித்த பின்:)
உபாதியுற்றா னேனும் ஒட்டா விண் போல
உபாதி தரும் அங்களோடு ஒட்டான் - உபாதியில்லான்
முற்றறிவன் எனும் முனி, மூடன் என வாயுபோல்
பற்று அறச் சஞ்சரிப் பான்.

பொருள்:
உபாதிகளைக் கொண்டவனாய் இருப்பினும், ஜீவன் முக்தன், விண்ணைப்போல, அந்த உபாதிகள் தரும் குறைபாடுகளோடு, ஒட்டாமல் இருப்பான். அவைகளால், அவனுக்கு மாறுதல்கள் ஏதும் ஏற்படா. உபாதிகள் முற்றிலும் அறும் வரை, வாயுபோல இப்பூவுலகில் ஒட்டாமல் சஞ்சரித்துக் கொண்டு இருப்பான்.

விளக்கம்:
உபாதி : எவையெல்லாம், நான், எனது, என்று ஜீவனை, நினைக்க வைக்கிறதோ, அவையெல்லாம் உபாதிகளாம். அதாவது இந்த உடல், அதன் அவையங்கள், நம் எண்ணம், நம் மனம், இவையும், இன்ன பிறவற்றின் விளைவால், ஆவதெல்லாமே, என்னால் எனக் கொள்கிறோம். நம்மோடு பிறந்த இவ் உபாதிகளை ஒவ்வொன்றாக இழக்க வேண்டும். எல்லா உபாதியையும் கழட்டி விட்ட பின், உபாதி இல்லா ஆன்மா - அது தான் தூய்மையான சச்சிதானந்த நிலையாகும்.

ஜீவன் முக்தனுக்கு, இன்னும் உபாதிகள் முழுமையாக முடிவடையவில்லை. அவற்றுக்கு அவன் பார்வையாளனாக இருப்பினும், அவைகளோடு, தாமரை இலைத் தண்ணீர் போல, ஒட்டாமல் அவன் இருப்பான். உபாதிகளால் ஜீவனில் ஏற்படும் குறைபாடுகளான, மறு பிறப்பு, நிலையிலாமை, இறப்பு போன்றவை ஜீவன் முக்தனுக்கு இல்லை.

விண்ணைப்போல : பொதுவாக வானம், வெளிர் நீல நிறத்தில் தெரிகிறது. சில நேரம், கருமைத் தூசிகளாலோ, அல்லது கரும் மேகங்களாலோ, கருமையாகவும் தெரிகிறது. ஆனால், ஆகாயத்திற்கு, இதனால், பாதிப்போ, அல்லது மாற்றமோ, இல்லையே. விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையே இருக்கும் பார்வையில் தான் பிழை. விண்ணுக்கேதும் குறை இல்லை. அதுபோல, ஜீவன் முக்தர், உண்ணுவது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், அதனால், அவர்களுக்கேதும் குறைவில்லை.

மூடன்: ஜீவன் முக்தர், யார் என்ன சொன்னாலும், போற்றினாலும் சரி, தூற்றினாலும் சரி, அவர், யாதொரு மாறுதலும் அதனால் அடையாமல், அமைதியாக அதைக் கேட்டுக்கொள்வார் - கிட்டத்தட்ட மூடன் போல. எல்லாவற்றில் அவர் பிரம்மத்தினையே பார்ப்பதால், தனக்காக, ஏதையும் செய்ய இயலார்.

மேலும்:
ஜீவன் முக்தனுக்கு, பிராப்த கர்ம வினைகள், இன்னமும் இருந்திடலாம் என்றும், இவ்வினைகள் முழுவதும் முடியும் வரை, நிலையான, இறுதியான முக்தி அடைய இயலாது என்றும் சிலர் கருதுகிறார்கள். இன்னும் சிலரோ, ஜீவன் முக்தி என்னும் நிலையே, இறுதியான நிலை. இந்நிலையிலேயே, எல்லா வினைகளும் அற்று இருப்பார்கள் என்கிறார்கள். இப்படி ஏதும், பொதுமைப்படுத்தாமல், ஒவ்வொரு ஞானிக்கும், ஒவ்வொரு விதமாக, இறைவனின் திரு உளத்திற்கு ஏற்றால் போல் அவ்வாறு அமைந்தது எனக் கொள்ளவே வேண்டும். எதுவாக இருப்பினும், உபாதிகளை இழந்து, எல்லாமும் ஆன பரமனை அடைந்து, துவங்கிய இடத்தை, மீண்டும் அடைவதுதான் ஜீவனின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அடுத்த பகுதியில், ஜீவன் முக்தன் பூவுலகை அகலும் இறுதியான நிலையினையும், அவன் பரமனை அடைவதைப் பற்றியும், ஆத்ம போதம் செல்லுவதைப் பார்ப்போம்.

Friday, November 14, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதிமூன்று

பா 49:
சீவன் முக்தன் வித்வான் தேருவதன் முன் தன்னை
மேவும் உபாதிகுணம் விட்டுடனே - மேவுவான்
தன்னுரு சச்சித் இன்பத் தாங்கிடும் வண்டினுருத்
தன்னையுறல் போலத் தறி.

சீவன் முக்தன், அவன் ஆன்மஞானி ஆவதற்கு முன்னம் இருந்த உபாதிகளை கைவிட்ட உடனேயே, சச்சிதானந்த நிலை தனை அடைவான். வண்டு தன், புழு போன்ற உருவத்தினை விட்டு, பூச்சி வடிவத்தை அடைவதைப்போல.

ஜீவன் முக்தர் - என அழைக்கப்படுபவர், முக்தி என்னும் நிலையினை அடைந்த பின்னரும், உலக நன்மை பொருட்டு, தம் பூவுடலை துறக்காமல் இருப்பராவர். எனினும், அவருக்கு, அவருடைய ஞானத்தினால், அவர் சச்சிதானந்த சொருபீயாக இருப்பதினால், அவரே பிரம்மமாகவும் இருப்பவர். அவருக்கு முந்தைய உபாதிகள் ஏதும் அப்போது இல்லை. அதாவது, அவர் அந்நிலையை எட்டுமுன், அவருக்கு இருந்த, உடல், புலன் உணர்வுகள், மனம், போன்ற உபாதிகள் இல்லை.
எப்படி தங்கள் புழு போன்ற தோற்றத்தில் இருந்து, பறக்கும் பூச்சி போன்ற தோற்றத்திற்கு மாறிட, தங்கள் தோற்றத்தை, வண்டு போன்ற பூச்சிகள் இழக்கின்றனவோ, அதைப்போல.

பா 50:
மோகக் கடல் கடந்து மூளாசை கோபமுதல்
ஆகும் அரக்கர் அறக்கொன்று - யோகி
அமைதியொடு கூடியான் அவ்வின்பத்
தமைந்து ஒளிர்வானென்றே அறி.

மோகமெனும் கடலினைக் கடந்து, ஆசை, கோபம் எனும் அரக்கர்களைக் கொன்றபின், யோகியானவன், அமைதி என்னும் சாந்த நிலையினை அடைந்து, அது தரும் பேரின்ப நிலையில் ஒளிர்வான்.

மோகம், ஆசை, கோபம் என்னும் மூன்று அரக்கரையும் வெல்லுதல் யோகியின் முதற்செயலாகும். அவ்வாறு வென்றவன், எளிதாக, தான் யாரென்று அறியாமற் மறைக்கும் மாயைதனை வெல்வான். அறியாமை அகன்றால், பின் இனியெல்லாம் ஞானமே அல்லவோ. அங்கு, அமைதியைத் தழுவிதல் என்பது, "சும்மா இரு சொல்லற", என்பதைச் சொல்லுகிறதோ! அந்நிலையில், நான் யார் என வினவிட, அவ்வினவலின் தோன்றலின் ஆதாரத்தினை ஆராய்ந்திட, கிட்டாதோ யாதும்!.

(கடல் கடந்து, அரக்கரைக் கொன்று, பிரிந்த மனைவியொடு சேர்ந்து, ஒளிர்ந்தான் இராமனும்!.)

இந்தத் தொடரில், இரமண மகரிஷி அவர்கள், வெண்பாக்களாய் வடித்த, ஆத்மபோதம் தனைப் பார்த்து வருகிறோம். அடியேனுக்குப் புரிந்த வரையில், செய்யுட்களைப் பிரித்துப் பொருள் தேடி வருகிறேன். பிழைகளைச் சுட்டினால், திருத்திட ஏதுவாய் இருக்கும். இதுவரை வந்த பகுதிகளை இங்கே காணலாம்.

Tuesday, January 15, 2008

ஆத்ம போதம் - பகுதி மூன்று - நேதி நேதி

பா 28:

விளக்கின் உருவை விளக்கிட வேறு
விளக்கை விரும்பா விதம்போல் - விளங்கு
மறிவுருவாம் ஆன்மா வறிந்திடத் தன்னைப்
பிறித்தறிவு வேண்டாப் பெறாது.

விளக்கம்:

அங்கே அழகான விளக்கொன்று சுடர் விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.
இருண்ட வீட்டுக்கு நல்ல ஒளியை அளித்துக் கொண்டிருக்கிறது.
அந்த விளக்கு எவ்வளவு பிரகாசமாக ஒளிர்கிறது என்பதனை - அந்த விளக்கைப் போன்ற "இன்னொரு" விளக்கைக் கொண்டு விளக்க முடியாது. இந்த விளக்கைப் பற்றி விளக்க இன்னொன்று தேவையில்லை.

அதுபோல,
பேரறிவின் உருவாய் சுடர் விடும் ஆன்மாவினை யாதென்று விளக்க, இன்னொரு பொருள் ஏதும் தேவைப்படாது.

ஏன் அப்படி? ஏனென்றால், இந்த ஆன்மாவாகிய விளக்கு தானாக சுடர் விடுகிறது. அதன் ஒளிக்கு அதுவே காரணம். அது பேரானந்தம் தரும் உண்மையான ஞான சொரூபம். ஆதலால், ஆன்மா தான் யாரென்று விளங்கிக்கொள்ள இன்னொன்று தேவையில்லை.

அந்த ஆன்மா, இன்னொருவரின் உதவியில்லாமால் தானாக தன் நிஜ சொரூபத்தினை உணர்ந்திட இயலும் என்றால், குருவின் உபதேசமெல்லாம் எதற்கு எனவும் கேட்கலாம். சுடர்விளக்கானாலும் தூண்டுகோல் தேவை அல்லவா?
குருவின் உபதேசமோ அல்லது மறைகள் மூலமாக கற்று அறியும் எந்த அறிவும் தூண்டுகோலாகத்தான் அமையும். சரி, அப்படியென்றால், அந்த ஆன்மா, தான் யார் என்ற உண்மையை அறிந்திட என்ன செய்ய வேண்டும் என்று கேட்கலாம். அதை அடுத்த பா சொல்கிறது.

பா 29:

நேதிநேதி வாக்கினா நீக்கி உபாதியெலா
மீதியாஞ் சீவான்மா மீதிலா - வாதியா
மப்புறம் ஆன்மாக்களின் ஐக்கியமா வாக்கியங்கள்
செப்புவ தொர்ந்து தெளி


இது இல்லை, இதுவும் இல்லை, இதுவும் இல்லை (நேதி நேதி - பிரஹதாரண்யக உபநிடதம்) என்று ஒவ்வொன்றாக ஆன்மாவின் உண்மையான உருவம் இல்லை என்று கழித்துக்கட்டி, இதுவரை சேர்த்துவந்த உபாதியெல்லாம் ஒவ்வொன்றாக கழித்துக்கட்டி, கடைசியில் மிஞ்சி இருப்பது என்ன? சுயத்தில் மீதி இருப்பது என்னவென்றால் - எல்லாவற்றுக்கும் மேலானதான சச்சிதானந்தம் - அதுவே எல்லா ஜீவன்களிலும் ஒன்றாக இருப்பதாகும்.

இவ்வாறு ஆன்மாவின் உண்மையான, நிலையான, மாறுதலற்ற தன்மையை உணர்ந்து கொள்வதுதான், தன்னை யார் என உணர்ந்து கொள்வதாகும். இந்த உண்மையை ஆன்மா அறிந்து கொள்வதுதான் அனைத்து துன்பங்களிலும் இருந்து விடுதலை பெறுவற்கான ஒரே வழி.

உபாதி: உபாதி என்ற சொல்லுக்கு - ஆன்மாவின் மாயைத் தோற்ற மயக்க நிலை என்று சொல்லலாம். அதாவது இந்த உடல், அதன் அவையங்கள், நம் எண்ணம், நம் மனம், இவையும், இன்ன பிறவற்றையும் 'நான்' என தவறாக அடையாளம் கண்டுகொள்கிறோம். இதுபோன்ற ஒவ்வொரு நிலைப்பாடுக்கும் ஆன பெயர் 'உபாதி' என வழங்கப்படுகிறது. உபாதி ஒவ்வொன்றாக இழக்க வேண்டும். எல்லா உபாதியையும் கழட்டி விட்ட பின், உபாதி இல்லா ஆன்மா - அது தான் தூய்மையான சச்சிதானந்த நிலையாகும்.

சச்சிதானந்தம்: சத் + சித் + ஆனந்தம் :
சத்: சகலத்திலும் நிறைந்திருக்கும் பரமன் அல்லது பிரம்மம்.
சித்: சைத்தன்யம் - பேரறிவு - மெய்ஞானம்.
ஆனந்தம்: பேரின்ப பெருங்களிப்புத் தரும் ஆனந்தம்.

ஜீவனில் சத்தானது, சித் என்னும் மெய்ஞானம் தனை மறைத்திடும் உபாதியெல்லாம் இழந்தபின் சித்தம் தெளிகிறது. தெளிந்த ஜீவனில், பரமனின் உண்மை பேரின்ப ஆனந்த நிலையினை அடைவதே சச்சிதானந்த நிலை ஆகும்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Saturday, September 29, 2007

ஸ்மார்த்தம் - ஒரு அறிமுகம்

சென்ற பதிவில் அருந்ததி என்பவர் ஸ்மார்த்தம் பற்றி விரிவாக எழுதும்படி கேட்டிருந்தார். மேலும் விக்கிபீடியாவிற்கும் கட்டுரை ஒன்று தேவைப்படுகிறது. ஆகவே, இதோ இங்கே எனக்கு தெரிந்தவற்றை கோர்த்து விடுகிறேன்.

ஸ்மார்த்தம் என்பது பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும், ஆதி சங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார். தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்து, இதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷண்மதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார். இதன் படி சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன்் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம். பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால், இந்த வழிமுறையை 'ஸ்மார்த்தம்' என்றே வழங்கலாம். இந்த வழியில்் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும், இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறது. இன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து.

தத்துவப்படி ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம். அதாவது இறைவன் ஈஸ்வரனும், நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்மமே. மாயையினால் சிக்குண்டதால், ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறது. உயர் ஞானம் கிட்டுமாயின், இந்த வேறுபாடு தெளிந்திடும்.

முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞான யோகம்தான் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. அறிவின் தேடலாலும், குண்டலினி அல்லாத யோக முறையினாலும். குருவின் ஆசியுடன் தொடங்கப்படும் இந்த யோக நெறியில் த்யானிப்பவர், தன்னையே ப்ரம்மமாக நினைவில் நிறுத்தி, மாயையின் தளையில் இருந்து விடுபட முயல்வார். இவர்களின் தீர்கமான, முடிவான இலக்கானது, நானும் அந்த ப்ரம்மமாக இருக்கிறேன் என்று உணர்வதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் எதெல்லாம் அஞ்ஞானம் (அவித்யயை) என்பதை உணர்ந்து தோற்ற மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

முக்தி அடைதலுக்கு வெறும் மந்திரங்களை ஓதுவதாலாலோ, உயிர் பலி கொடுப்பதாலோ அல்லது தன்னையே வருத்தி நூறு உபவாச நோன்புகள் இருப்பதாலோ அடைந்து விட முடியாது. மறைகளை படித்து உணர்வதும், ப்ரம்மத்தின் பிம்பத்தினை தன்னுள் கண்டுணர்வதும், த்யானத்தினாலும் அஞ்ஞானம் அகன்றிட வழி வகுக்கும்.

ஞானம் அடைதலுக்கு ஞான யோகமே வழி என்றாலும் அந்த சித்தி கிட்டுவதற்கு மூன்று முன்பாதைகளையும் சொல்கிறார்கள். அவையாவன: பக்தி யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம்.


ஸ்மார்த்தர்களின் அன்றாட செயல்பாடுகள்:

1. ஸ்நானம்

2. சந்தியாவந்தனம்

3. ஜபம்

4. பூஜை

5. உபாசனை

6. அக்னிஹோத்ரம் அல்லது அக்னிகிரையம்

இவை தவிர அமாவாசை தர்பணம் மற்றும் ஸ்ரார்தம் செய்வதும் இவர்கள் வழக்கம்.

இவர்கள் வழி செல்லும் மறைகள்:

வேதங்கள், அவற்றின் உபநிஷதங்கள், ஸ்மிருதி, புராணங்கள் மற்றும் இதிகாசங்கள்

மேலும் விவரம் அறிய இந்த தளங்களைப் பார்க்கவும்:

* ஆதி சங்கரர் - அத்வைதம்
* அத்வைத வேதாந்தம்
* சிருங்கேரி சாரதா பீடம்
* சங்கர சம்பிரதாயம்
* இந்து மதத்தின் நான்கு பிரிவுகள்
* ஸ்மார்தர்களின் ஷண்மதம்
* ஸ்மார்த்தம்

Tuesday, December 12, 2006

தமிழில் ஆதிசங்கரரின் ஆத்மபோதம்

ஆதி சங்கரரின் சமஸ்கிருத நூல்களில் ஒன்று ஆத்ம போதம்.

இந்நூலை ரமண மகரிஷி தமிழில் வெண்பாக்களாக வழங்கியுள்ளார். இதனை மொழி பெயர்ப்பு என்று சொல்ல முடியாது, ஏனெனில்... இந்நூல் உருவான கதையை நீங்களே கேளுங்களேன்:

ஒருநாள் ரமணருக்கு தபாலில் இரண்டு புத்தகங்கள் வந்திருந்தன. ஒன்று சமஸ்கிருத மூல ஆத்ம போதம். மற்றொன்று ஆத்ம போதத்தின் தமிழ் மொழி பெயர்ப்பு. சமஸ்கிருதம் சற்றே தெரிந்த ஒரு இஸ்லாமிய தமிழ் அறிஞர்தான் மொழி பெயர்த்திருந்தார்!

ரமணர் அந்த புத்தகங்களை பார்த்துவிட்டு நூலகத்தில் வைக்கச்சொல்லி விட்டார். பின்னர் ஒருநாள் திடீரென தனது உதவியாளரை அழைத்து சமஸ்கிருத மூல ஆத்ம போதம் நூலைக் கொண்டு வரச் சொல்லி, அதை கொஞ்சம் படித்துப் பார்த்தார்.

பின்னர் முதல் இரண்டு சுலோகங்களை வெண்பாக்களாய் எழுதி, அன்பர் ஒருவரிடம் காட்டினார். அவர் அந்த வெண்பாக்களை படித்து விட்டு, மீதமுள்ள 66 சுலோகங்களயும் வெண்பாக்களாக ரமணர் அருளினால் நன்றாக இருக்குமே என்று தன் ஆவலை வெளிப்படித்தினார். அதற்கு ரமணர் 'ஆமாம், ஆமாம், எதற்கு இதெல்லாம்?' என்று மட்டுமே சொன்னார்.

பின்னர் இரண்டு நாள் கழித்து இன்னமும் சில சுலோகங்களையும் பாக்களாக எழுதி இருந்தார் ரமணர். "எழுதாமல் அமைதியாய் இருக்கலாம் என்றால் இயலவில்லை. ஒன்றுக்கு பின்னால் இன்னொன்று - என தானே ஒவ்வொரு வெண்பாவாக வெளியே வந்து என் முன் நிற்பது போல இருக்கிறது" என்றாராம்!. இப்படியாக, சில தினங்களில் முழு நூலின் 68 சுலோகங்களையும் 68 வெண்பாக்களாக எழுதி முடித்தார்.

இப்படித்தான் தமிழில் பாக்களாய் மலர்ந்தது ஆத்ம போதம். ரமணர் தானாகவே எழிதிய புத்தகங்கள் மிகக் குறைவு. அவரவது உள் உந்துதலால் நமக்காக மலர்ந்தது, நமக்கான அருளல்லவோ!

நூலில் இருந்து சில பாக்களும், அதன் விரிவுரைகளும்:

பா 18.

உடல்கருவி உள்ளம் ஓதும்புத்தி மாயை

விடவேறாவட்றின் விருத்தி - யுடனே

எவைக்குமே சாட்சியாம், என்றும் ஆன்மாவை

அவைக்கரசன் போல அறி.

உன் ஆன்மா என்பதாவது - உன் உடலல்ல. உன் அவையங்களும் அல்ல. உன் உள்ளமும் மனதும் கூட அல்ல. உன் அறிவும் அல்ல. பின் என்ன அது?

மேற்கூறிய எல்லாவற்றின் செயல்களையும் கவனித்துக் கொண்டு இருப்பது தான் ஆன்மா - அரசவையில் நடக்கும் ஒவ்வொரு செயலையும் கண்காணித்துக் கொண்டு இருக்கும் அரசன் போல.

அவைக்கு அரசன் போல, அவையங்களுக்கு அதிபதி ஆன்மா.

ஆனால் ஆன்மா வேறு, அவையங்கள் வேறு.

அவையில் மந்திரிகளும், ஏனைய ஆலோசகர்களும் இருந்தாலும், அரசன் மட்டும் ஒருவன். அவன் போல் அவையில் யாரும் இல்லை.

அது போல் ஆன்மா. ஆன்மா போல் நம்மிடம் மற்றொன்று இல்லை.



பா 19.

கருவிகள் இன்றொழில் காண்தவ விவேகி

கருத்தாண்போன்று ஆன்மாவைக் காண்பான் - துரிதமாய்

ஓடுமே கண்கண்டு உணர்வில் சந்திரனே

ஓடுகிறான் என்பதை யொத்து.

வானில் மேகங்களுக்கு நடுவே ஒளிந்து மறைந்து துரிதமாக சந்திரன் ஓடுவது போல தோற்றம் அளித்தாலும், வேகமாக ஓடுவது மேகங்களே. ஆனால் இதை அறியாத குழந்தைப் பருவத்தினர் சந்திரன் தான் விளையாட்டு காட்டுவதாக நினைப்பர்.

அதுபோல மனதில் தோன்றும் எண்ணங்களும், உடலின் அவையங்களால் உணரப்படும் உணர்வுகளும் ஆன்மாவின் செயல்கள் என்று நினைப்பர், மாயையினால்.



பா 20:

ஞானஒளி ஆன்மாவை எண்ணி உடல்பொறிகண்

மனதாம் புத்திஇவை எண்ணுதமக் - காணாதொழில்

ஆற்றிடும் ஆதித்த னொளியான் மாக்கதொழில்

ஆற்றுவது போற்றிலும் அறி.

உடல், காணும் கருவியாம் கண், மனம், புத்தி ஆகியவை ஆன்மாவின் ஞான ஒளிதனைப் பெற்று தத்தம் செயல்களை நடத்துகின்றன.

இது எதுபோல என்றால் - ஆதித்தன் பகலில் ஒளிரும் போழுது, அதன் ஓளியின் கீழ் மனிதன் செயல்களைச் செய்வது போலவாகுமாம்.

உடலுக்கும் அதன் அவையங்களுக்கும், புத்திக்கும் ஆன்மாவின் ஞான ஒளி குறையக் குறைய, செயல்கள் தீதில் முடியும். இதனால் ஆதவனாம் ஆன்மாவிற்கு ஏதும் பாதகம் இல்லை. செயல்களின் விளைவை உடல்தான் பெறுகிறது.



பா 21:

தேகம் பொறிகடிகாழ் குணங்கள் வினைகள்

ஆகுமிவை தூய சச்சிதானமாவில் - மோகத்தாற்

கற்பிப்பார் சுத்த வானத்தின் நீலமுதற்

கற்பித்தால் போலக் கருது.

தேகம், அதன் அவையங்கள், அவற்றில் ஒளிரும் குணங்கள், செயல்களின் விளைவுகள் - இவை யாவுமே ஆன்மாவினால் என்று நினைப்பர். இது வானமானது நீல நிறத்திலானதொரு பொருள் என்று எண்ணுவதைப் போலாகும்.

வானம் நீலமாக தெரிந்தாலும் நீலம் வானத்தின் குணமல்ல. பூமியில் இருந்து நாம் பார்க்கும்போது சூரியனின் ஒளிக்கற்றைகள் நீல நிறத்தில் பிரிதலினால் வானம் நீலமாய் தெரிகிறது. நம் எந்த ஒரு குணமும் ஆன்மாவின் குணமல்ல.

(பி.கு: வெண்பாக்கள் சீர்களாக அல்லாமல் பிரித்து தரப்பட்டுள்ளது. பிரித்தலினால் பொருளில் ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும், நன்றி!)