Tuesday, December 22, 2009

அம்பா, எத்தனை பெயர் உனக்கு!


முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளைப் பார்த்தால், பல கீர்த்தனைகளில் - பல்லவி, அனுபல்லவி, சரணம் - எனப் பல இடங்களில் அம்பாளின் லலிதா சஹஸ்ரநாமாவளிகள் இடம் பெறுவதைப் பார்க்கலாம். அவற்றை இங்கே பட்டியலிடலாமா!

பாடல் : (இராகம்) : அம்பாளின் பெயர்
-----------------------------------------
1) சிவகாமேஸ்வரீம் சிந்தயேஹம்: (கல்யாணி) : சிதக்னிகுண்டஸம்பூதா (சித் எனும் தன்னுள் - அக்னி குண்டத்தில் இருந்து வரும் தீ போல, எப்போதும் எழுந்து கொண்டிருப்பவள் - இதுதான் பாரதி பாடும் அக்னிக்குஞ்சோ!)


2) மாதங்கி ஸ்ரீராஜராஜேஸ்வரி: (ரமாமனோகரி) : ரணதிங்கிணிமேகலா


3) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) மற்றும் நீலோத்பலாம்பிகாயே (கேதாரகௌளை) மற்றும் காசி விசாலாக்ஷி (கமகக்கிரியா): கலிகல்மஷநாசினி
 

4) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : சாம்ராஜ்யதாயினி
 

5) பஞ்சாசத்பீடரூபிணி : (தேவகாந்தாரம்) : பஞ்சாசத்பீடரூபிணி

6) மதுராம்பாயாஸ் தவ தாஸோஹம் : (பேகடா) : மாத்ருகாவர்ணரூபிணி


7) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : பாடலிகுசுமப்பிரியை


8) அவ்யாஜகருணா காமாக்ஷி : (சாலங்கநாடை) : சவ்யாபசவ்யமார்க்கஸ்தாயி




9) திரிபுரசுந்தரி சங்கரி குருகுஹ ஜனனி: (சாமா) : சாமகானப்பிரியகரி


10) ஏகாம்பரேஸ்வர நாயகீம் : (சாமா) : வாஞ்சிதார்த்த ப்ரதாயினி


11) ஸ்ரீமதுராம்பிகையா : (அடணா) : நாமாபாரயணப்பிரியா : (நாமத்தினைப் பாராயணம் பண்ண வேறென்ன வேண்டும்!)

12) பாலாம்பிகாயை நமஸ்தே வர தாயை : (நாட குறிஞ்சி) : ஸ்ரீ ஹரித்ரான்னரசிகாயை


13) நீலோத்பலாம்பிகாயே : (கேதாரகௌளை) : மூலமந்திராத்மிகை 


14) அபயாம்பிகாயை : (யதுகுலகாம்போதி) : குடகுல்பா 


15) ஸ்ரீமாத சிவவாமாங்கே : (பேகடா) : ஸ்ரீமஹாராக்ச்ஜை


16) அம்ப நீலாயதாஷி : (நீலாம்பரி) : புவனேஸ்வரி


17) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : நடேஸ்வரி

18) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : காத்யாயினி


19) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) : சுவாசினி


20) பர்வதராஜகுமாரி : (ஸ்ரீரஞ்சனி) : கௌளினி




~~~~
லலிதா சஹஸ்ரநாமவளியில், அம்பாளை என்னவெல்லாம் பெயர்களில் பாடிப் பரவசம் கொள்கிறோம்! நாமவளியின் தாக்கத்தில் விளைந்த பாடல், அடியேன் புனைந்தது:

எடுப்பு:
எத்தனை பெயர் உனக்கு - அம்பா,
எத்தனை பெயர் உனக்கு!

தொடுப்பு:
பக்தனும் சாக்தனாய் உனைப்பாட - ஓராயிரம்
பெயர் உனக்கே, சக்தியே!
(எத்தனை பெயர் உனக்கு!)

முடிப்பு:
இரும்பாய் இருந்திட்ட மனத்தையும், அம்பா,
கரும்பு வில்லாய் வளைத்திட்டாய்.
திரையாய் படிந்த வினையெல்லாம்
நுரையாய் பிரிந்திட வழிசெய், சச்சிதானந்தமே!
(எத்தனை பெயர் உனக்கு!)

~~~~
பிற்சேர்க்கை:

திரு.சுப்புரத்தினம் அவர்கள் பாடலை இசையமைத்துப் பாடியுள்ளார்கள்:



~~~~

லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திர சுலோகங்கள் மொத்தம் 1008. அவற்றில் 108 எண்ணிக்கையை, தமிழ்ப்பொருளுடன் பார்ப்போமா, இங்கே:
~~~~

ஓம் ஸ்ரீமாத்ரே நம;
ஓம் சீர்மிகு அன்னையே போற்றி

ஓமோம் தே(3)வகார்ய-ஸமுத்(4)யதாயை நம:
ஓம் தாருறு தேவர்க்குச் செயல்பட முனைவோளே போற்றி

ஓம் தே(3)வர்ஷிக(3)ண ஸங்கா(4)த ஸ்தூயமானாத்ம வைப(4)வாயை நம:
ஓம் தேவமுனிக் கூட்டங்கள் துதிசெய்யும் சிறப்புடையாளே போற்றி

ஓம் ப(4)க்தஸௌபா(4)க்(3)யதா(3)யின்யை நம:
ஓம் அன்பருக்கு நல்லவெல்லாம் அருள்செய வல்லாளே போற்றி

ஓம் ப(4)க்தி ப்ரியாயை நம:
ஓம் பக்திதனை விரும்புவாளே போற்றி

ஓம் ப(4)யாபஹாயை நம:
ஓம் பயத்தினைப் போக்குவாளே போற்றி

ஓம் ராக(3)மத(2)ன்யை நம:
ஓம் ஆசை தன்னைக் கெடுப்பவளே போற்றி

ஓம் மத(3)நாசின்யை நம:
ஓம் செருக்கெலாம் ஒழிப்பவளே போற்றி

ஓம் மோஹநாசி(H)ன்யை நம:
ஓம் மதிமயக்கம் போக்குவாளே போற்றி

ஓம் மமதாஹந்த்ர்யை நம
ஓம் மமதையை அழிப்பவளே போற்றி

ஓம் பாபநாசி(h)ன்யை நம:
ஓம் பாபங்களை ஒழிப்பவளே போற்றி

ஓம் க்ரோத(4)சமன்யை நம:
ஓம் கோபங்களை அடக்குவாளே போற்றி

ஓம் லோப(4)நாசி(h)ன்யை நம:
ஓம் பேராசை அழிப்பவளே போற்றி

ஓம் ஸம்சயக்(4)ன்யை நம:
ஓம் ஐயங்களைப் போக்குவாளே போற்ற

ஓம் ப(4)வநாசி(h)ன்யை நம:
ஓம் பிறவிகளை நீக்குவாளே போற்றி

ஓம் ம்ருத்யுமத(2)ன்யை நம:
ஓம் மரணத்தைப் போக்குவாளே போற்றி

ஓம் து(3)ர்கா(3)யை நம:
ஓம் துர்கா தேவியே போற்றி

ஓம் து(3):கக(2)ஹந்த்ர்யை நம:
ஓம் அன்பர் துக்கம் துடைப்பவளே போற்றி

ஓம் ஸுக(2)ப்ரதா(3)யை நம:
ஓம் சுகம்பல அருளுபவளே போற்றி

ஓம் து(3)ஷ்டதூ(3)ராயை நம:
ஓம் கெட்டவர்க்கு எட்டாதவளே போற்றி

ஓம் து(3)ராசாரச(h)மன்யை நம:
ஓம் தீயொழுக்கம் அடக்குவாளே போற்றி

ஓம் தோ(3)ஷவர்ஜிதாயை நம:
ஓம் தேரும் குற்றமற்றவளே போற்றி

ஓம் ஸர்வக்ஞாயை நம:
ஓம் எல்லாமும் அறிந்தவளே போற்றி

ஓம் ஸமானாதி(4)கவர்ஜிதாயை நம:
ஓம் ஒப்பாரும் மிக்காரும் ஓரிடத்தும் இல்லாதாளே போற்றி

ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபிண்யை நம:
ஓம் எல்லாமந்திரவடிவாயும் இருப்பவளே போற்றி

ஓம் ஸர்வயந்த்ராத்மிகாயை நம:
ஓம் எல்லா இயந்திரத்துள்ளுற்று ஓங்குவாளே போற்றி

ஓம் ஸர்வதந்த்ர-ரூபாயை நம:
ஓம் எல்லா தந்திரமும் ஆனவளே போற்றி

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாலக்ஷ்மியே போற்றி

ஓம் மஹாபாதக-நாசி(h)ன்யை நம:
ஓம் மாபாதகம் தீர்ப்பாளே போற்றி

ஓம் மஹாத்ரிபுரஸுந்த(3)ர்யை நம:
ஓம் முப்புரம் போற்றும் ஒப்பற்ற பேரழகியே போற்றி

ஓம் சராசர-ஜகந்நாதாயை நம:
ஓம் அசையும் அசையா உலகுகளின் தலைவியே போற்றி

ஓம் பார்வத்யை நம:
ஓம் மலைமகளே போற்றி

ஓம் ஸ்ருஷ்டிகர்த்ர்யை நம:
ஓம் படைப்பின் தொழிற்குரியாளே போற்றி

ஓம் கோ(3)ப்த்ர்யை நம:
ஓம் காக்கும் செயல்புரிவாளே போற்

ஓம் ஸம்ஹாரிண்யை நம:
ஓம் ஒடுக்கும் வினையுடையாளே போற்றி

ஓம் திரோதா(4)னகர்யை நம:
ஓம் மறைத்தலைச் செய்திடுபவளே போற்றி

ஓம் அனுக்(3)ரஹதா(3)யை நம:
ஓம் பேரருள் செய்திடுவாளே போற்றி

ஓம் ஆப்(3)ரஹ்மகீட-ஜனன்யை நம:
ஓம் பிரமன் முதலாகப் புழுக்கள் ஈறாக அனைத்தையும் ஈன்றவளே போற்றி

ஓம் வர்ணாச்(H)ரம-விதா(4)யின்யை நம:
ஓம் வருணாசிரமம் வகுத்தவளே போற்றி

ஓம் நிஜாஜ்ஞாரூப-நிக(3)மாயை நம:
ஓம் தன் ஆணை வடிவுடைய மறைகளைத் தந்தவளே போற்றி

ஓம் புண்யாபுண்ய-ப(2)லப்ரதா(3)யை நம:
ஓம் அறப்பவச் செயல்களில் பயன் தருபவளே போற்ற

ஓம் ராக்ஷஸக்(4)ன்யை நம:
ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி

ஓம் கருணாரஸ-ஸாக(3)ராயை நம:
ஓம் கருணை வெள்ளப் பெருங்கடல் ஆனாளே போற்றி

ஓம் வேத(3)வேத்(4)யாயை நம:
ஓம் அருமறையால் புலப்படுவாளே போற்றி

ஓம் ஸதா(3)சாரப்ரவர்த்திகாயை நம:
ஓம் நன்னெறியதனில் நடத்திட வைப்பாளே போற்றி

ஓம் ஸத்ய:-ப்ரஸாதின்யை நம:
ஓம் உடனருள் புரிபவளே போற்றி

ஓம் சி(h)வங்கர்யை நம:
ஓம் மங்கலம் செய்பவளே போற்றி

ஓம் சி(h)ஷ்டேஷ்டாயை நம:
ஓம் முறைவழி நடப்பவர் திறத்து அன்பு உடையவளே போற்றி

ஓம் சி(h)ஷ்டபூஜிதாயை நம:
ஓம் முறைவழி நடப்போரால் வழிபடப் பெற்றவளே போற்றி

ஓம் காயத்ர்யை நம:
ஓம் காயத்திரியாளே போற்றி

ஓம் நிஸ்ஸீம-மஹிம்னே நம:
ஓம் எல்லையே இல்லாத பெருமைகள் படைத்தவளே போற்றி

ஓம் ஸமஸ்த-ப(4)க்த-ஸுகதா(3)யை நம:
ஓம் அனைத்தான பக்தர்க்கும் நற்சுகங்கள் தந்திடுவாளே போற்றி

ஓம் புண்யலப்(4)யாயை நம:
ஓம் புண்ணியத்தால் உறற்குரியாளே போற்றி

ஓம் ப(3)ந்த(4)மோசன்யை நம:
ஓம் பிறவியாம் கட்டினை அறுப்பவளே போற்றி

ஓம் ஸர்வவ்யாதி(4)ப்ரச(h)மன்யை நம:
ஓம் நோயனைத்தும் அடக்குவாய் போற்ற

ஓம் ஸர்வம்ருத்யு-நிவாரிண்யை நம:
ஓம் மரணமெலாம் தடுப்பவளே போற்றி

ஓம் கலிகல்மஷ-நாசின்யை நம:
ஓம் கலியின் குற்றம் கடிவாய் போற்றி

ஓம் நித்யத்ருப்தாயை நம:
ஓம் யாண்டும் மனநிறைவுடையவளே போற்றி

ஓம் மைத்ர்யாதி(3)-வாஸநாலப்(4)யாயை நம:
ஓம் மைத்திரீ முதலான நினைப்பருபாஸனையால் அடைதற்குரியோய் போற்றி

ஓம் ஹ்ருதயஸ்தாயை நம:
ஓம் இதயத்தே நிற்பவளே போற்றி

ஓம் தை(3)த்யஹந்த்ர்யை நம:
ஓம் அரக்கரை அழித்திடுவோய் போற்றி

ஓம் கு(3)ருமூர்த்யை நம:
ஓம் குருவின் திருவடிவே போற்றி

ஓம் கோ(3)மாத்ரே நம:
ஓம் காமதேனு வடிவத்தோய் போற்றி

ஓம் கைவல்யபத(3)-தா(3)யின்யை நம:
ஓம் நாற்பதமும் அருள்பவளே போற்றி

ஓம் த்ரிஜக(3)த்(3)-வந்த்(3)யை நம:
ஓம் மூவுலகும் வழிபடத் தக்கவளே போற்றி

ஓம் வாக(3)தீ(4)ச்(h)வர்யை நம:
ஓம் குலவு சொல் தலைவியே போற்றி

ஓம் ஜ்ஞாநதா(3)யை நம:
ஓம் பேரறிவைத் தந்திடுவாய் போற்றி

ஓம் ஸர்வவேதா(3)ந்த- ஸம்வேத்(3)யாயை நம:
ஓம் அனைத்தான மறைமுடிகளால் அறிதற்குரியாளே போற்றி

ஓம் யோக(3)தா(3)யை நம:
ஓம் யோகத்தைத் தருபவளே போற்றி

ஓம் நிர்த்(3)வைதாயை நம:
ஓம் இரண்டற நிற்பவளே போற்றி

ஓம் த்(3)வைதவர்ஜிதாயை நம:
ஓம் இரண்டாம் நிலையினை இயல்பிலே நீக்கினோய் போற்றி

ஓம் அன்னதா(3)யை நம:
ஓம் அன்னமளிப்போய் போற்றி

ஓம் வஸுதா(3)யை நம:
ஓம் பெருங்செல்வம் மிகத்தருவோய் போற்றி

ஓம் பா(4)ஷாரூபாயை நம:
ஓம் மொழிகளின் வடிவமே போற்றி

ஓம் ஸுகாராத்(4)யாயை நம:
ஓம் எளிதாய் வழிபடற்குரியாய் போற்றி

ஓம் ராஜராஜேச்(h)வர்யை நம:
ஓம் அரனைத் தரசாக்கும் மேலான தலைவியே போற்றி

ஓம் ஸாம்ராஜ்யதாயின்யை நம:
ஓம் சக்ரவர்த்தி பதவியை அடியார்க்கு அளிப்பவளே போற்றி

ஓம் ஸர்வார்த்த-தா(3)த்ர்யை நம:
ஓம் அறப்பயன் அனைத்தும் அளித்திட வல்லாய் போற்ற

ஓம் ஸச்சிதா(3)னந்த ரூபிண்யை நம:
ஓம் உண்மை அறிவானந்த வடிவினாய் போற்றி

ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் கலைமகள் வடிவினளே போற்றி

ஓம் த(3)க்ஷிணாமூர்த்தி-ரூபிண்யை நம:
ஓம் தென்முகக் கடவுளாய்த் திகழ்ந்திடும் தேவியே போற்றி

ஓம் ஸநகாதி(3)-ஸமராத்(4)யாயை நம:
ஓம் சனகர் முதலியோர் பூசிக்கும் வடிவினளே போற்றி

ஓம் நாமபாராயணப்ரீதாயை நம:
ஓம் தம்பெயர் ஆயிரம் ஒன்றியே கூறிட உளம் கசிவுறுவளே போற்றி

ஓம் மித்யாஜக(3)த(3)தி(4)ஷ்டானாயை நம:
ஓம் பொய்யான உலகுகளின் மெய்யான இருப்பிடமே போற்றி

ஓம் ஸ்வர்ககா(3)பவர்க(3)தா(3)யை நம:
ஓம் சொர்க்கமும் மோட்சமும் தந்திட வல்லவளே போற்றி

ஓம் பரமந்த்ர-விபே(4)தி(3)ன்யை நம:
ஓம் பகைவர் ஏவிடும் மந்திரம் மாய்ப்பவளே போற்றி

ஓம் ஸர்வாந்தர்யாமிண்யை நம:
ஓம் அனைத்துயிர் உள்ளத்தும் உறைபவளே போற்றி

ஓம் ஜன்மம்ருத்யு-ஜ்ரா தப்த-ஜன-விச்(h)ராந்தி தா(3)யின்யை நம:
ஓம் பிறப்பொடு இறப்பும் மூப்பு முற்று இளைத்தார்க்கு ஓய்வினைத் தந்தவளே போற்றி

ஓம் ஸர்வோபநிஷது(3)த்(3) கு(4)ஷ்டாயை நம:
ஓம் உபநிட நூலெல்லாம் பறைசாற்றும் சிறப்புடையாளே போற்றி

ஓம் லீலாவிக்(3)ரஹ-தா(4)ரிண்யை நம:
ஓம் விளையாட்டாய்ப் பற்பல வடிவுகள் எடுப்போய் போற்றி

ஓம் அஜாயை நம:
ஓம் பிறவியில்லாதவளே போற்றி

ஓம் க்ஷயவிநிர்முக்தாயை நம:
ஓம் முடிவென்பதில்லாதவளே போற்றி

ஓம் க்ஷிப்ரப்ரஸாதி(3)ன்யை நம:
ஓம் விரைவினில் அருள்மிகத் தருபவளே போற்றி

ஓம் ஸம்ஸாரபங்க-நிர்மக்(3)ன ஸமுத்(3)த(4)ரண-பண்டி(4)தாயை நம:
ஓம் சம்சாரச் சேறழுந்தி மூழ்கினாரை மேலேற்றும் திறன் மிக்காள் போற்றி

ஓம் த(4)னதா(4)ன்ய-விவர்தி(4)ன்யை நம:
ஓம் செல்வமொடு தானியங்கள் வளர்த்திடுவாள் போற்றி

ஓம் தத்வமர்த்தஸ்வரூபிண்யை நம:
ஓம் அதுநீ ஆகிய ஐக்கியப் பொருளாய் ஆனவளே போற்றி

ஓம் ஸர்வாபத்(3)-விநிவாரிண்யை நம:
ஓம் அனைத்துத் துயரையும் அடியோடழிப்பவளே போற்றி

ஓம் ஸ்வபா(4)வ-மது(4)ராயை நம:
ஓம் இயல்பினில் இனிமை மிக்கவளே போற்றி

ஓம் ஸதா(3)துஷ்டாயை நம:
ஓம் உவப்புடன் எப்போதும் திகழ்ந்திடும் தன்மையாளே போற்றி

ஓம் த(4)ர்மவர்ததி(4)ன்யை நம:
ஓம் அறம்வளர் செல்வியே போற்றி

ஓம் ஸுவாஸின்யை நம:
ஓம் நாயகனைப் பிரியாதாளே போற்றி

ஓம் ஸுவாஸின்யர்ச்சனப்ரீதாயை நம:
ஓம் சுவாசினிப் பெண்டிர் வழிபாட்டில் மிக மகிழ்பவளே போற்றி

ஓம் வாஞ்சிதார்த்தப்ரதா(3)யின்யை நம:
ஓம் வேண்டிய வேண்டியார்க்கு வேண்டியாங்கு அளிப்பவளெ போற்றி

ஓம் அவ்யாஜ- கருணா மூர்த்தயே நம:
ஓம் எதிர்பார்ப்பு இல்லாத பேரருளின் திருவுருவே போற்றி

ஓம் அஜ்ஞானத்(4)வாந்த-தீ(3)பிகாயை நம:
ஓம் அறியாமை இருளகற்றும் அழகுசுடர் நற்றீபமே போற்றி

ஓம் ஆபா(3)ல-கோ(3)ப-விதி(3)தாயை நம:
ஓம் இளையர் முதல் இடையர் வரை யாவரும் நன்கறிந்தவளே போற்றி

ஓம் ஸர்வானுல்லங்க்(4)ய-சா(h)ஸனாயை நம:
ஓம் மீறுதற்கு இயலாத அணைகள் இடவல்லாளே போற்றி

ஓம் ஓம் லலிதாம்பி(3)காயை நம:
ஓம் அழகுமிகு லலிதாவாம் அப்பிகையாய்த் திகழ்வாளே போற்றி

எல்லாம் வல்ல அன்னையே போற்றி!

~~~~
நன்றி:
லலிதா சஹஸ்ரநாமம் தமிழாக்கம் - இணையத்தில் கிடைக்கப்பெற்றது.
முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் - N.பார்த்தசாரதி அவர்கள்

Sunday, December 06, 2009

மார்கழி : அரங்கர் வரார் பராக் பராக்!

பராக்! பராக்! என்கிற கூக்குரலைக் கேட்டு மக்கள் அனைவரும் அக்குரல் வந்த திசையினில் திரும்பிப் பார்க்கின்றனர்! கட்டியங்காரர்களின் குரல் வந்த திசையில் பார்த்தால், ஆகா, அங்கே, அழகானதொரு பரிமேல் என்ன கம்பீரத்தோடு அமர்ந்திருக்கிறார் அழகர் அரங்க நாதர்! தகிக்கும் தங்கக் குதிரையில், தனக்கே உரிய தோரணையோடு அல்லவா வீற்றிருக்கிறார்! வீதிஉலா இதமாய் இருக்க, காவிரிக் காற்று, அவருக்கு சாமரமாய் வீசுகிறது போலும்!

நாதஸ்வரம் முதலான மங்கள வாத்தியங்கள் முழங்க, அரங்கநாதர் அசைந்தாடி வரும் இந்த அழகான திருவீதி உலாக் காட்சியை, தெற்கு சித்திரை வீதியில் இருந்து, மகான் ஒருவர் கண்டு தரிசித்துக் கொண்டிருக்கிறார். அவர் வேறாருமில்லை, சாட்சாத் தியாகராஜரே. அரங்கனின் திருபவனி வீதி வழி வர, ஒவ்வொரு வீட்டிலும் நின்று உபசாரங்களைப் பெற்றுக்கொண்டும், கற்பூர ஆரத்தியினை வழங்கிக்கொண்டும், நடந்தேறிக் கொண்டிருந்தது அவ்வுலா.

தீவட்டிகளின் ஒளியில், தியாகராஜர், தான் காணும் கண்கொளாக் காட்சியை, தித்திக்கும் இறையனுபவத்தினை, அழகான தோடி இராகக் கீர்த்தனையாய் வடிக்கிறார். அப்பாடலினின் பல்லவி 'ராஜு வெடலெ ஜூதாமு ராரே கஸ்தூரி ரங்க' என்பதாகும். பாடலின் சாகித்ய வரிகளுக்கு இங்கே அணுகவும்.

இப்போ, இந்தப் பாடலை தமிழில் மொழி பெயர்த்துப் பார்க்கலாமா!

பல்லவி:
கஸ்தூரி ரங்கனின் களையான பவனியைக் கண்டு களிப்போமே!

அனுபல்லவி:
திகழும் நவரத்தினங்கள் மின்ன,
திருவரங்க நாதன் பவனி கண்நிறைய,
பரிமேல் அமர்ந்த சுகந்தனை
பாருலக வேந்தரும் சேவிக்க,
(கஸ்தூரி ரங்கனின்..)

சரணம்:
காவிரிக் கரையில் புண்ணியபுரி திருவரங்கமதில்
சீரார்ந்த சித்திரை வீதிதனில் அலங்காரங்களுடன்
அரங்கனின் பவனி அற்புதக் காட்சியன்றோ!
விண்ணுலகத் தேவரும் மலர்த்தூவி வழிபட,
தியாகராஜனும் பாடிப்பரவசம் கொள்ள
(கஸ்தூரி ரங்கனின்...)

கன்னியர்கள் பலரும், தங்களை ஆண்டாளாக பாவித்துக் கொண்டு, அரங்கனை சூழ்ந்து நிற்கிறார்கள். கன்னியர்கள் மட்டுமா, இதர பெண்டிரும், அரங்கனை தங்கள் வீட்டுப்பையனாகவே தரித்துக் கொண்டு, அவனது வீதிஉலாவினை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் தொலைவில் இருந்து மட்டுமே தியாகராஜரால் காண முடிகிறது. கூட்டத்தைத் தாண்டி, அருகில் சென்று சடாரியினையும், துளசி பிரசாதத்தினையும் பெற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை. வருத்தத்துடன், அந்த இடத்திலேயெ நின்றுகொண்டு இருக்க, திடீரென வீதிஉலாவும் நின்று விடுகிறது. வாகனத்தை தூக்குபவர்களாலோ ஒரு அடிகூட மேலும் எடுத்து வைக்க இயலவில்லை. திசைதோஷம் ஏதும் உள்ளதோ என்றெண்ணி, அர்சகர்கள் கோயில் தேவதாசிகளை அழைத்து ஆகம சாஸ்திரங்களில் உள்ளபடி அந்த திசைக்கான நடனத்தினை ஆடச் சொல்கிறார்கள். அதனால் ஒரு மாற்றமும் இல்லை. திடீரென, அர்ச்சகர் ஒருவருக்கு ஆவேசம் ஏற்பட, அவர் தியாகராஜர் இருந்த இடத்தைக் காட்டி, ஸ்ரீரங்கநாதரின் சிறந்த பக்தன் ஒருவன், அருகில் வர இயலாமல் தவிப்பதை எடுத்தியம்ப, மற்றவர்கள் அவரை அருகில் அழைத்து வந்து, அவருக்கு பிரசாதங்களை வழங்கிட, பின்னரே திருபவனி தொடர்ந்ததாம். இச்சம்பவத்தினை 'வினராதா நா மனவி...' என்கிற தேவகாந்தாரி இராகப் பாடலில் தியாகராஜர் குறிப்பிடுவதைக் காணலம். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

இவ்வாறாக, அரங்கநாதன், தன்னை தரிசிக்க திருவையாற்றில் இருந்து தியாகராஜர் வந்திருக்கின்றார் என்பதனை அந்த ராஜவீதியில் குழுமியிருந்த அனைவருக்கும் அறிவித்ததாகக் கொள்ளலாம். அன்று மாலை, சிறப்பு முத்தாங்கி சேவையில் கலந்துகொள்ள, கோயில் அதிகாரிகள், தியாகராஜரை அழைத்துவர, அங்கே தியாகராஜர், சந்நிதியில் பாடிய பாடல், காம்போதி இராகக் கிருதி 'ஓ ரங்கசாயி..', மிகவும் பிரபலமான பாடல். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

ஓ ரங்கசாயி பாடலை, எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடிட, ராகா.காமில் கேட்டிட சுட்டி இங்கே. சபாஷ் சொல்லவைக்கும் சங்கதிகளில் காம்போதியின் அழகை இன்னும் இனிமையாக யாரேனும் தரக்கூடுமோ? ஓ என்ற ஒற்றைச் சொல்தான் எத்தனை விதமான ஸ்வரங்களில் வலம் வருகிறது!



இந்த பாடலை, தமிழிலும் பார்க்கலாமா?

பல்லவி:
ஓ ரங்க விமான சயனா - நான் அழைத்தால்
ஓ என நீயும் வாராயோ?

அனுபல்லவி:

சாரங்கம் தரித்தவனும் உனைக்கண்டு
கைலாயபதி ஆனானோ,
(ஓ ரங்க விமான சயனா...)

சரணம்:
பூலோக வைகுண்டமே திருவரங்கமென
பெருமிதமும் நீயே கொண்டு, ஸ்ரீதேவியுடன்
குலவிக்கொண்டிருந்தால், எம்
குறைகளைக் களைவது எப்போது?

மற்றவர் உயர்வை பொறுக்கா
மானிடரிடை துயர்பல பெற்றநான்
நின்திருஉருவினையும் முத்துமார்பினையும்
காண வந்தேனே, தியாகராஜனின்
இதயமெங்கும் அலங்கரித்தவனே,
(ஓ ரங்க விமான சயனா...)

பின்னர் மேலும் இரண்டு கிருதிகளையும் அவர் இயற்றிட, அவையானவை: சூதாமு ராரே எனும் ஆரபி இராகக் கிருதி மற்றும், கருண ஜூடவய்ய என்கிற சாரங்கா இராகப்பாடல். இந்த ஐந்து பாடல்களையும் சேர்த்து, "ஸ்ரீரங்க பஞ்சரத்தினம்" என்று வழங்குவர்.

இந்த ஸ்ரீரங்க பஞ்சரத்தின கீர்த்தனைகளை கேட்கையில், ஆதி சங்கரர் இயற்றிய ரங்கநாத அஷ்டகம் தனையும் நினைவு கூறாமல இருக்க இயலாது. பாடகர் பலரும் ரங்கநாத அஷ்டகத்தின் ஒரிரண்டு சுலோகங்களை விருத்தமாக பாடிப்பின், ஓ ரங்க சாயி பல்லவியினைத் துவங்குவார். தியகராஜரும் 'ரங்க சாயி' எனச்சொல்வது மட்டுமல்ல. 'காவேரி தீரே, கருணா விலோலே...' போன்ற அஷ்டக வரிகளையும் தியாகராஜரின் சாகித்யத்தோடு ஒப்பு நோக்கலாம்.

ரங்கநாத அஷ்டகத்தில் இருந்து சில சுலோகங்களை இங்கு விருத்தமாகப் பாடக் கேட்கலாம்:
(அருணா சாய்ராம் அவர்கள் பாடிட)

Wednesday, October 14, 2009

வெண்பாவிற்குப்பின் ஆசிரியப்பா!

வெண்பா வடிக்கலாம் வாங்க என அழைத்த அகரம் அமுதா, இப்போது, ஆசிரியப்பா அறியலாம் வாங்க என அழைத்திருக்கிறார்!

----
தமிழ்நம்பி அவர்கள் வழங்கும் பாடங்களில் இருந்து எனக்கு விளங்கிய அளவிற்கு தொகுத்துச் சொல்வேன்:

----
வெண்பா இலக்கணத்தினை முன்பு இங்கே பார்த்தோம்.
வெண்பாவிற்கான தளைகள், வெண்டளைகள் அல்லவா?
1) முதலாவது இயற்சீர் வெண்'தளை'கள்:
மாமுன் நிரை, விளமுன் நேர்!
2) அடுத்து வெண்சீர் வெண்டளைகள்:
காய்முன் நேர்!

இதோடு, இன்னபிற தளைகளையும் சேர்க்கலாம் ஆசிரியப்பாவிற்கு:
அவை:
3) இயற்சீர் வெண்டளையை திருப்பிப்போட்டால் என்ன வரும்?
மாமுன் நேர், விளமுன் நிரை!
இவைதான் 'ஆசிரியத்தளை'

4) வெண்சீர் வெண்டளையைத் திருப்பிப்போட்டால் என்ன வரும்?
காய்முன் நிரை!
இதன் பெயர் 'கலித்தளை'

ஆக, இந்த நான்கு வகைத்தளைகள் தட்டாமல் வருவது 'ஆசு'இரியப்பா, ஆசிரியப்பா!
(ஆசு: குற்றம் ; இரி: நீக்குதல் : ஆக, குற்றம் நீக்கிய பா!)

வெண்பாவைப் போலவே, கனிச்சீர் சேராது.
வெண்பாவின் கடைச்சீர் 'நாள், மலர், காசு, பிறப்பு' போன்றதொரு ஒரு வாய்பாட்டில் முடியுமல்லவா?
ஆசிரியப்பாவின் கடைச்சீர் 'ஏ, ஓ, என், ஈ, ஆய், அய்' போன்றவற்றில் முடியும்.

வெண்பாவில் கடைசி அடி மட்டும் முச்சீர் கொண்டும், அதற்கு முந்தைய அடிகள் நான்குசீர் கொண்டும் அமையுமல்லவா?
ஆசிரியப்பாவில், இவ்விதி சற்றே தளர்த்தப்படுகிறது.
முதலடியும், இறுதி அடியும் நான்கு சீர்கள் பெறவேண்டும். குறைந்தது மூன்று அடிகள்.
இடையிடையே, நான்கு சீர்களுக்கும் குறைவாக, முச்சீரோ அல்லது இருசீர் கொண்ட அடிகளோ கூட அமைக்கலாம். இவற்றால், இவை 'வகை' பெறும், அவையாவன:

1. நேரிசை ஆசிரியப்பா : கடைசி அடிக்கு முந்தைய அடி, முச்சீர் பெற்ற அடி
2. இணைக்குறள் ஆசிரியப்பா: இடையிடையே இருசீரோ அல்லது முச்சீரொ பெற்ற அடிகள்
3. நிலைமண்டில ஆசிரியப்பா: எல்லா அடிகளும் நான்கு சீர் பெற்ற அடிகள்
4. அடிமறிமண்டில ஆசிரியப்பா: ஒவ்வொரு அடியும் இறுதியடிபோலவே வருவது.

எதுகை,மோனை:
வெண்பா போலவே, சீர்மோனையும், அடி எதுகையும் - ஆசிரியப்பாவிலும்.
~~~~
பின்குறிப்பு:

அடிகள் அமையப்பெற்ற சீர்களின் எண்ணிக்கையைக் கொண்டு, இவ்வாறு வழங்கப்படும்:

இரண்டு சீர்களைக் கொண்ட அடி : குறளடி
மூன்று சீர்களைக் கொண்ட அடி : சிந்தடி
நான்குசீர்களைக் கொண்ட அடி : அளவடி
ஐந்தடிகளைக் கொண்ட அடி : கழிலடி
ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களைக் கொண்ட அடி : கழிநெடிலடி

~~~~~
இதுதாங்க ஆசிரியப்பாவின் எளிமையான இலக்கணம், என்ன நீங்களும் எழுதத் தயாரா?!
எடுத்துக்காட்டுகளோடு, பாடங்களை படிக்கவும், இதற்கு அடுத்த நிலைகளை அறியவும்,
இங்கே வருக, வருக!

Saturday, September 26, 2009

சரஸ்வதி இராகத்தில் சரஸ்வதி!

நவராத்ரியின் நிறைவுக்கு பக்கத்திலே வந்துட்டோமில்லையா, நவராத்ரி என்றதுமே, நமக்கு சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் தானே உடனுக்கு நினைவுக்கு வருவது!
இந்தப் பதிவில் சரஸ்வதியன்னை பற்றிய பாடல் ஒன்றைப் பார்ப்போம். அதுவும் சரஸ்வதி இராகத்தில்!
ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு ராகதேவதை உண்டெனச் சொல்வார்கள். அந்த இராகத்தை மனஉருகிப் பாடுகையில், அந்த இராகத்தின் இனிமையும், அழகும் மிளிரத் தோன்றிடும் ராகதேவதை, அந்த இராகத்தைக் கேட்போர் அனவரையும் பரவசப் படுத்துவாளாம். இந்தப் பாடலைக் கண்மூடிக் கேட்டுத் இசையமுதில் திளைத்தால், அந்த சரஸ்வதி இராகதேவதை உங்கள் மனக்கண்முன் பிரகாசிப்பாள், என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா!

இராகம் : சரஸ்வதி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இப்பாடலை, திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

எடுப்பு
சரஸ்வதி, தயைநிதி - நீ கதி,
தண்ணருள் தந்தருள்வாய், பாரதி!

தொடுப்பு
கரமலர் மிளிர் மணிமாலையும் வீணையும்
கருணைபொழியும் கடைக்கண்ணழகும் வளர்

(சரஸ்வதி)

முடிப்பு
நின்னருள் ஒளி இல்லையானால்
மன இருள் நீங்குமோ, சகலகலைமாதே!
வெள் அன்ன வாகினி!
வெண் கமலமலர் வளரும் வாணி!
வெள்ளைக்கலையணி, புராணி!

(சரஸ்வதி)

~~~
வெள்ளை ஆடையைத் தரித்தவளே,
வெள்ளைத்தாமரை மலரதில் அமர்பவளே,
எம் இதயக் கமலத்தில் ஒளிர்வாயே, தாயே!
வெள்ளை அன்னமதை வாகனமாய்க் கொண்டவளே,
நின் அருள் இன்றி, மன இருள் நீங்குமோ? ஞானசொரூபமானவளே, எம் அஞ்ஞானம் நீங்கிட அருள்வாய்!
நல்வாக்கிற்கு அதிபதியே, கூத்தனூரில் கொலுவீற்றிருக்கும் நாயகியே, நின் தாள் சரண்.
~~~
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
- சகலகலாவல்லி மாலை

Wednesday, September 23, 2009

திருமகள் பெருமை

வராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் திருமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கலைவாணிக்கும் அர்பணிப்பது வழக்கும். சென்ற பதிவில் சக்தி பற்றியதொரு பாடலைப் பார்த்தோம். இந்த பதிவில், திருமகள் பெருமைகளில், அடியேன் அறிந்த வெகு சிலவற்றைப் பார்க்கலாமா?. அதுசரி, அதுவேன் இப்படியொரு தலைப்பு? திருமால் பெருமைன்னு சிவாஜி நடிச்ச படம் வந்துருக்கே அதுமாதிரியான்னு கேக்கறீங்களா? திருமால் பெருமை எல்லாருக்கும் தெரிந்தது. திருமகள் பெருமை?. இந்த உரையாடலைக் கேளுங்க...

அவர் செல்வத்துக்கு அதிபதி, அவரை வணங்கினால் செல்வம் செழிப்பு கிடைக்கும் - இதுதான் நாம் எல்லோரும் பொதுவா நினைப்பது இல்லையா? சரி, அவ்வளவுதானா?

அட, ஆமாங்க, ஆங், எங்க ஊரில் அஷ்டலஷ்மி கோவில் இருக்குல்லே. தனலஷ்மி, தான்யலஷ்மி - இப்படிப் பலவித செல்வங்களை அருள்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேனே...


சரிதான். அஷ்டலஷ்மி என்பது இலக்குமித்தாயாரின் எட்டு வடிவங்கள் - ஆதிலஷ்மி, தனலஷ்மி, தான்யலஷ்மி, கஜலஷ்மி, சந்தானலஷ்மி, வீரலஷ்மி, விஜயலஷ்மி, வித்யாலஷ்மி என்பவைதான் இந்த எட்டு அம்சங்களாக்கும்.

ஓ, இவங்களும் வீரத்தையும், விஜயத்தையும் தருவாங்களா, நான் அது பார்வதி அன்னைதான்னு நினைச்சேன்!

:-) டொய்ங்...கல்வியா, செல்வமா, வீரமா...சரஸ்வதி சபதம் படம் நல்லா நினைவிலே இருக்கு போல!
இலக்குமி என்று நாம பொதுவா சொல்லறவங்களுக்கு, பலவித சிறப்பு அம்சங்கள் இருக்கு. அந்த ஒவ்வொரு அம்சத்தையும் தனிதனியா பெருமைப்படுத்தத்தான், இதுபோன்ற சிறப்புப் பெயர்கள். மற்றபடி, எல்லாருமே ஒருவர் தான்!
இன்னும் இருக்கு. பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் துணைவி இலக்குமித்தாய். திருமாலுக்கே 'திருமகள் கேள்வன்' (திருமகள் நாயகன்) என்றொரு பெயருண்டு. வைணவ ஆச்சார்ய பரம்பரையில், முதன்மையான ஆச்சாரியர் திருமால் என்றால், அதற்கு அடுத்த இடம் திருமகளுக்கேயாம்.

ஆகா, அப்படியா, குருவின் இடத்தில் திருமகளை வைத்துப் போற்றுவதற்கு ஆழ்ந்த காரணம் இருக்கணும் இல்லையா!

இலக்குமியின் மூன்று அம்சங்களாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி அப்படியும் சொல்லிக் கேட்டிருக்கோம் இல்லையா.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி வழியே காணக் கிடைத்தது:

உடன் அமர் காதல் மகளிர்
திருமகள், மண்மகள், ஆயர்
மடமகள் என்றிவர் மூவர்.
ஆளும் உலகமும் மூன்றே.
உடன் அவை ஒக்க விழுங்கி
ஆலிலை சேர்ந்தவன் எம்மான்...


இவங்க மூணுபேரும் மூணு உலகத்தை ஆள்பவர்களாம் - முறையே விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று.
நம்ப கண்ணபெருமான் இருக்காரு இல்லையா, அவர் மண்ணைத்தின்றபின் வாயைத்திறந்து காட்ட, அதில் இம்மூவலகமும் தெரிந்திட, இந்த மூன்று பேரையும் ஒன்று சேர்த்து விழுங்கியவனாம். அதாவது, அவன், எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவனாய் இருக்கிறான். மாமகள் மூவரையும் கொண்ட மாரமணனாய் இருக்கிறானாம்.

அடுத்தது, இந்த முதல் திருவந்தாதிப் பாடலைப் பார்ப்போம்:

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்?

என்னது, திருமகள்தான் மற்ற இரண்டு பேரைக்காட்டிலும் உயர்வு என்பதுபோல வருகிறதே?

நம்ம குறைகளை கேட்டு, அவற்றை திருமாலிடம் இயம்பி, நிவர்த்தி செய்வதற்காக ஒருவர் மட்டுமில்லை, மூவர் இருக்கிறார் என்கிறார் பொய்கையாழ்வார்! அவற்றில் இருவர் - பூதேவியும், நீளாதேவியும், விஷ்ணுவின் சக்தி.
விஷ்ணுவின் சக்தி யார்? இலக்குமி. ஆகையில் மகாலஷ்மியின் அம்சமாகவே - திருமகளின் அம்சமாகவே அவர்களும் இருக்கிறார்கள்.

திருமகளோ, எப்போதும் மாலவன் மார்பிலேயே வாசம் செய்கிறாள்; பெருமாளைப் பிரிந்ததே கிடையாது. எல்லாவிடத்திலும், விஷ்ணுவாக நிறைந்தபோதும், அதிலெல்லாம் நிறைந்திருக்கிறாள்.
பெருமாளை 'சொல்லின் பொருள்' என்றால்,
திருமகளைச் 'சொல்' எனலாம்.
திருமகளை 'அறச்செயல்' என்றால்,
அதனால் விளையும் நன்மையினைத் திருமால் எனலாம்.
எல்லா உயிர்களிலும் ஆணாகத் திருமாலும், பெண்ணாகத் திருமகளும் வாசம் செய்து,
எல்லா ஜனனங்களுக்கும் ஜகத்காரணமாய்த் திகழ்கிறார்கள்!

Sunday, September 20, 2009

திருவான்மியூர் வளர் திரிபுரசுந்தரி

மீபத்தில் சென்னை சென்றபோது திருவான்மியூர் சென்று திரிபுரசுந்தரி அன்னையை தரிசிக்க இயன்றது. அன்று ஆடிவெள்ளியாதலால், அன்னையின் தங்கரத பவனியும் காணக் கிட்டியது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நாண்மலர் தூவி வலம்செயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூர் ஈசனையும், அம்பிகையையும் பற்றி வாரம் ஒரு ஆலயம் நடராஜ் அவர்கள் வழங்கும் பாட்காஸ்டின் சுட்டி இங்கே.


பெரியசாமித் தூரன் அவர்கள், திருவான்மியூர் வளர் தேனார் மொழி வல்லி, என தாயார் திரிபுரசுந்தரி அன்னையைப் பாடும் சுத்த சாவேரி இராகப் பாடலை இங்கு பார்க்கலாம். பாடலில், காமதேனு, தன் சாபம் தீர, வணங்கிய தலம் என்கிற குறிப்பும் உள்ளது.

மக்கு உடலில் பிணி ஏற்பட, நாம் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவரும் மருந்து தருகிறார். பிணியும் மறைகிறது. சில சமயம் மீண்டும் மீண்டும் வருகிறது. நிரந்தரமாக பிணி தீராதா என்பது நமது கோரிக்கை. நிரந்தரமாக மட்டுமல்ல, தீர்க்க இயலாத பிணிகளையும் தீர்க்கும் மருந்தொன்று இருக்கிறதாம். கோபாலகிருஷ்ண பாரதியும் 'பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது - பேரின்பம் அங்குள்ளே' என்பார். பிணிகளை தீர்ப்பது மட்டுமல்ல, பேரின்பம் தர வல்லதுமாம், அம்(மா)மருந்து.

சரி, அப்படிப்பட்ட மருந்தினைத் தரவல்ல மருத்துவர் யார்? பெரியசாமித் தூரனார் இப்பாடலில் அந்த மருத்துவர் வேறாரும் இல்லை - அம்பிகையேதான், "பிணியெலாம் தீர்க்கும் மருந்துடையாள்" என்கிறார்! அது என்ன மருந்து என்றால், "சதாசிவம்" என்னும் மருந்தாம். தாயே, திரிபுரசுந்தரி, சிவஞானம் எனும் மாமருந்தினைத் தருவாய், பிணிகளைக் களைவாய் என வேண்டிக் கொள்வோம்.

இராகம்: சுத்தசாவேரி
இயற்றியவர்: பெரியசாமித் தூரன்

பல்லவி:
தாயே திரிபுரசுந்தரி - உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி
தாளிணை மறவேன், சரணம்!

அனுபல்லவி:
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வல்லி - ஜகமெல்லாம் படைத்த

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

சரணம்
காமதேனு வணங்கும் கருணாரூபிணி
கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவபரமெனும்
தனிமருந்துடையாய்
பிணியெலாம் களைவாய்

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

~~~~
பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கு கேட்கலாம்:

Wednesday, September 16, 2009

பூவகத்துள் நின்ற பொற்கொடி!

தாபரத்து உள்நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழிபடுவாரில்லை
மாபரத்து உண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே.
- திருமந்திரம் 1717


தானென அறிந்தோ இலையோ எனினும்
தன்னொளிர்ந்திடுமே தானேத் தானேயென்று
யாரறிவார் இதனை? யாருரை செய்வார்?
பாரிருள் போக்கிடப் பல்லாண்டு பாடிடுமே.

தனக்குள் நின்றாட எண்ணம் இல்லை
தடுமாறிடும் மனதிலும் நிலையே இல்லை
அலையாய் கரையும் மனது அகத்தில்
நிலையாய் நிலைப்பது எங்கே?

தானெனத்தான் அமர்ந்து, தன்னொளியைக் கூர்ந்திடத்
தாமரை இதயம் ஒளிர்ந்திடக் காணாயோ?
தானெனத்தான் அறிந்தது, தடாகமதில் மலர்ந்த
தாமரையும், எல்லாமுமே சிவமேயென அறியாயோ?

இன்பமும் மகிழ்வும் இனிமையும் ஆனந்தமும்
கொண்டபோதெல்லாம் ஒளிர்வதும் அதுதான் !
துன்பமும் அழுக்கும் சோர்வும் துயரமும்
கொண்டபோதெல்லாம் தோன்றாததும் அதுதான் !
என்ன வேண்டும் எனவறிந்த மனமே,
என்ன வேண்டும் இவ்விரண்டில்?
இன்பம் வேண்ட, வேண்டாயோ ஒளியைப்பே
ரின்பம் வேண்ட, நாடாயோ சிவமதை.

பூவகத்துள் நின்ற அன்னையவள் அன்பானவள்;
அவள்பெயர் பொற்கொடியாம், பொன்னென மிளிரும்
சிவஞானமதை ஈன்றிடும் அருட்கொடையாள்! - தானதைச்
சிவமனெத் தெளிந்திடச் செய்வாளே.

துன்பம் நேர்கையில் மின்னும் நவரத்தினமாய்
அன்னையவள் இதயக்கமலத்தின் மின்னுவதை நினைந்திட
எண்ணமதில் ஏறாது துயர், வாடாது பயிர்!
திண்ணமெனக் கொள்வாய் மனமே.

மூளை எலும்புகள் நாடிநரம்பெலாம் புகுந்து
மூச்சில் இடைபிங்கலை சுழிமுனையெல்லாம் நிறைந்திட
எப்போதும் இதயக்கமலம் ஒளிர்வதை உணர்வாய்;
எப்போதும் அதனைக்கவனித்து இருப்பாய்.

Sunday, July 12, 2009

"சக்தி" என்று தமிழ்க்கவிதை பாடி...

சக்தி என்பது யாதென்றேன்; சக்தி என்பாய் என்றாய்!
சக்தி சக்தி யென்றேன்; புதுசக்தி பிறக்குது.
பக்தியுடன் வேண்டிநிற்க பயமனைத்தும் விலகுது.
முக்தி நலம் பெற்றிடவே முனைப்பும் முளைவிடுது.
ரக்தியும் கூடுது; ராஜயோகம் பெருகுது.

(சக்தி என்பது யாதென்றேன்...)
திக்கெங்கும் தேடி திசையெங்கும் ஓடி
அஃதென்றே அறிந்திட, சக்தியுனை நாடி
சந்ததம் பணிந்து சரணம் அடைந்து
முந்தும் முழுமுதல் மூலம் கணபதி
பிந்திடாமல் பிழறாமல் இருத்திட,
வினைகளை வேரறுத்திட,
வேலவன் துணையுடன் விரைவில்
அச்சமதை அகற்றி உச்சிதனை அடைய,
மெச்சும் சக்தி சிவமதை அடைய,
சிவமும் சக்தியும் இணைந்து
சிவசக்தி யாகுமாமே.

(சக்தி என்பது யாதென்றேன்...)
பாரடா, பராசக்தி, எனச் சொன்னான் பாரதி!
பாரினில் ஈதடா, அன்னை அவளே, சிவனின் சக்தி!
எல்லாமுமாய் இருப்பவளாம் சக்தி!
நல்லதெல்லாம் தருபவளாம் சக்தி!
பவத்தினை மாய்த்திடும் சக்தி! - யோக
தவத்தினை புரிந்திடச் சக்தி!
உள்ளத்தொளிரும் விளக்காம் சக்தி!
ஊக்கம் தந்திடும் ஒளியாம் சக்தி!
ஓம் சக்தி, ஒம் சக்தி, ஓம்!



முண்டாசுக் கவிஞனின் தாக்கத்தில் விளைந்தது, மேற்சொன்ன கவிதை.
தாக்கத்தின் மூலம் ஈதே:

எடுப்பு:
தேடியுனைச் சரணடைந்தேன், தேச முத்திமாரி!
கேடதனை நீக்கிடுவாய் கேட்டவரம் தருவாய்.

தொடுப்பு:

பாடியுனைச் சரணடைந்தேன், பாசமெல்லாம் களைவாய்;
கோடிநலஞ் செய்திடுவாய், குறைகளெல்லாம் தீர்ப்பாய்!

எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி.
ஒப்பியுனதேவல் செய்வேன் உனதருளால் வாழ்வேன்!

முடிப்பு:
சக்தியென்று நேரமெல்லாந் தமிழ்க் கவிதை பாடி
பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்தும் தீரும்.

ஆதாரம் சக்தியென்றே அருமறைகள் கூறும்;
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்!

துன்பமே இயற்கையெனும் சொல்லை மறந்திடுவோம்;
இன்பமே வேண்டி நிற்போம்; யாவுமவள் தருவாள்.

நம்பினார் கெடுவதில்லை; நான்கு மறைத் தீர்ப்பு;
அம்பிகையைச் சரண் புகுந்தால் அதிக வரம் பெறலாம்!

~~~~~~~~~~~
இராகம்: சிந்து பைரவி

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

இங்கும்:

Monday, June 15, 2009

Humility - தமிழில் என்னங்க?

Humility - ஆங்கிலத்தில் அழகானதொரு சொல்!

தமிழில் எப்படிச் சொல்வது?

அகராதியைப் புரட்டிப் பார்த்தால், அது சொல்வது:

தாழ்வு
பணிவு/பவ்யம்/தலைவணக்கம்
செருக்கின்மை

இவற்றைக் காட்டிலும், எனக்குப் பிடித்தது : விநயம்!

அட, விநயம், என்ன அழகான சொல்!

"வித்தைக்கு அழகு விநயம்" என்பார்கள்.

பல கற்று அறிந்து இருந்தாலும், அதனால் தலைக்கனம் இல்லாமல் இருப்பது விநயம்.
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
என்பார் வள்ளுவப் பெருந்தகை.

ஆனால், பல சமயம் இதனை தாழ்வு மனப்பான்மை/கோழைத்தனம் எனச் சிலர் குழப்பிக் கொள்வதும் உண்டு.

எப்படி இதனில் வேற்றுமை அறிவது?
விநயம் உண்டெனில், அங்கு தாழ்வில்லை. ஒருவர் தன் பெருமையை விட்டுவிடுவதில்லை. ஆனால், அப்பெருமை தரும் கர்வமோ, அகங்காரமோ அவரிடம் இருப்பதில்லை. மாற்றாக, அவரிடம் தன்நம்பிக்கை சுடர் விடும்.
நிறைய சாதித்தவர் பெற்றிருக்கும் நிறைவு, அவரது விநயத்தினால் வெளிப்படும்.

இருவரிடையே வாக்குவாதம் ஏற்படும்போது, கோபத்தினால் ஏற்படும் இறுமாப்பு, அவர்களின் வாக்குவாதத்தினையே வளர்க்கிறது. பெரும்பாலும், இதனால், வேறுப்பும், வேதனையுமே மிஞ்சுகிறது. அதற்கு பதிலாக, அவர்கள் விநயத்துடம் அணுகினால், அங்கே நன்மையே பயக்கும்.

எந்த அளவிற்கு அன்பு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு, அவர்களிடம் விநயம் அதிகமாக வெளிப்படும். ஏனெனில், அகங்காரம் குறைய, ஈகோவின் வெளிப்பாடுகள் குறைய, விநயம் அங்கே அதிகம்.

நமது சமுதாயத்தில், மற்றவர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்களான பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது தலைவர்கள் போன்றவர்கள், விநயத்தோடு செயல்படுவது அவசியம். ஏனெனில், சமுதாயத்தில் இவர்களின் பணி, இறைவனின் பணிக்கு ஒப்பானது. தங்களுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்தும் அதே சமயம், அவர்கள் விநயத்தின் அவசியத்தினை அறிந்திருப்பார்களா? உண்மையான அன்பிருந்தால், அறிந்திருப்பார்கள். அன்பு, இறைவனின் பணிக்கு ஒப்பானதொரு செயலினை ஆற்றிடும் பொறுப்பினை அவர்களுக்குத் தந்திடும். அன்பு வார்த்திடும் விநயமானது மனிதனை இறைவனுக்கு ஒப்பானதொரு நிலைக்கு கொண்டு செல்லக் கூடியது.

இறைவனுக்கு ஒப்பானதொரு நிலைக்கு மட்டுமல்ல, இறைவனை உணரவும், இறைவனை அடையவும், வழி வகுக்கிறது.

நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த வமுதனே யமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகி னோக்கிநீ யருள்செய் வாயே.
- திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை.

"நாயினும் கீழ்ப்பட்ட அடியேனை நல்ல நெறியைக் காண்பித்து அடிமையாகக் கொண்டுள்ளாய். நீயும் அடியேன் உள்ளத்தில் அமுதத்தைப் போல வந்து தங்கி விட்டாய்."
என நாவுக்கரசர் நவில்வது இவ் விநயத்தினால்தான்.

Sunday, May 24, 2009

இராம நாமம்

ஸ்ரீராமஜெயம்!


சிறப்புகள் எல்லாம் சிறப்புற, சிறப்புகளின் மகுடமாய் சீர் பெற்று ஓங்கும் நாமம் இராம நாமம்.

இந்த இராம நாமத்தின் சிறப்புகளை இப்படியாக ஒரு வரியில் சொல்லி முடித்துவிட முடியாது. அதுக்குத்தான் இந்த பதிவு!

தியாகராஜ சுவாமிகள் முதல் பதிவர் திரு.ரமேஷ் சதாசிவம் வரை பலரும் இரசித்துப் பருகிய நாமம் இராம நாமம்.

சதாசிவ பிரம்மேந்திரரும், பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்களும் பாடித் துதித்த இராம நாமம்.

இப்படி எத்தனையோ மகான்கள், பாடிப் பேரின்பம் பெற்ற நாமம் இராம நாமம்.



இராகம் : ஜன சம்மோதினி

எடுப்பு
இராம நாமம் நல்ல நாமம்
நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும்
இராம நாமம் நல்ல நாமம்

தொடுப்பு
தாமரைக்கண்ணனை தன்னிசையால் தினம்
தவத்திரு நாதயோகி தியாகராஜர் கண்ட
இராம நாமம் நல்ல நாமம்

முடிப்பு
ஜனன மரண பயம் தீர்க்கும் இராம நாமம்
ஜனகாதி முனிவர்கள் ஜபித்திடும் நாமம்
மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம்
மாதா பிதா குருவை மதித்த மன்னன்
இராம நாமம் நல்ல நாமம்

இராமன் பரமன். அவன் நாமத்தை தியானித்தல் என்பது சகலகோடி தேவதைகளையும், தெய்வங்களையும் தியானிப்பது ஆகும். இராமன் கையில் இருக்கும் கோதண்டமே ப்ரணவம். அதன் இலக்கே, பரமானந்த பேரின்ப நிலை. அவனது சாரங்கத்தில் தரித்து ஏவப்படும் அம்பெனும் பாணமே, ஜீவன். ஜீவன், இராமானந்த நிலையினை அடைய வழி வகுக்கும் சாதனமாய், விளங்குகிறது இராமனின் வில்! அது போலவே இராம நாமமும், அப்பேரின்பத்தினை அடைய வழி வகுக்கும் சாதனம்!

தியாகராஜரின் தோடி இராகப் பாடல் ஒன்றுண்டு. 'கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக...' எனத் துவங்கும் அப்பாடலில், தியாகப் பிரம்மம் சொல்லுகிறார்: 'நீலமேக ஷ்யாமளன் ஆன சுந்திர மூர்த்தியான இராமனை தியானம் செய்து, இதயக் கமலத்தில், காணப்பெற்றவர்கள், பாக்கியசாலிகள். அவர்கள் மகாராஜாவைப் போன்றாவர்கள்' என்று.

ப்ரணவம் == பரப்பிரம்மத்தின் சக்தி == கோதண்டம் == இராம நாமம்!
~~~
அடுத்து வருவது:
இராகம் : தேஷ்
இயற்றியவர்: தஞ்சை சங்கரய்யர்

எடுப்பு:
இராம நாமமே துதி மனமே!
க்ஷேமம் உறவே, நீ தினமே,
சீதாராம நாமமே துதி மனமே!

தொடுப்பு:

பூமியை, பொன்னை, பூவையரையும், நீ,
பூஜித்து பின் புண்ணாகாமலே
சீதாராம நாமமே துதி மனமே!

முடிப்பு:

சோதனைகள் பல, வாதனைகள் யாவும்,
நாதனை நினைந்திடில் நாடுமோ?
சீதாராம நாமமே துதி மனமே!
~~~
மூன்றாவதாக, புரந்திரதாசரின் 'ராமா ராமா' பாடலை, திருமதி.MLV அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

Saturday, May 09, 2009

நரேந்திரனின் பயிற்சிக் களம் - நிறைவுப் பகுதி

இங்கு, விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றினைப் படித்து வருகிறோம் அல்லவா? இடையில் நீண்ட இடைவெளியாகி விட்டது. குரு, இராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்மார்த்த சீடன் நரேந்திரனின் பயிற்சிக்களம் எப்படி இருந்தது, என்பதை சென்ற நான்கு பகுதிகளில் பார்த்தோம். இங்கு, இறுதிப்பகுதியினை பார்ப்போம்.

கடந்த பகுதிகளுக்கான சுட்டிகள் இங்கே:
பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4

இராமகிருஷ்ணருக்கு நோய்வாய்ப்பட்டிருந்த காலகட்டத்தில், அவருக்கான பணிவிடைகளை நரேந்திரன் செய்துவந்திட, இராமகிருஷ்ணரின் ஆன்ம பலத்தினை நரேன் நன்கு அறிந்திட, அதுவே வழிவகுத்தது. இராமகிருஷ்ணரால், அவரது உடலில் ஏற்பட்டிருந்த நோயின் தீவிரத்திலும், அவரது உடலை விட்டு விலகி நிற்க இயன்றதைக் காண நரேந்திரனுக்கு வியப்பு மேலிட்டது. இராமகிருஷ்ணரின் உடலில் நோயினால் வலி ஏற்பட்டாலும், அவரது ஆன்ம பலத்தின் ஈடால், அவ்வலியைத் தாண்டியும் ஆனந்தக் களிப்பில் மிதந்திட இயன்றது. இரமணரும் இப்படித்தான் என்பது, ஜீவன் முக்தர்களுக்கான இலக்கணம் என்பது போல இருக்குது அல்லவா!

ஒருநாள், இராமகிருஷ்ணரைப் பார்க்க வந்திருந்த பண்டிதர் ஒருவர் ஒரு யோசனை சொன்னார். இராமகிருஷ்ணர் மட்டும், அவரது தொண்டையில் தியானத்தால், அவரது நோய் குணமாகி விடும் என்று. இராமகிருஷ்ணரோ, கடவுளில் இருந்து என் நினைவை அகற்றி, இந்தத் தொண்டையில் தியானிப்பதா, என்று மறுத்து விட்டார்.
ஆனால், நரேந்திரனோ விடாது,
'நீங்கள் காளி அன்னையிடம், இந்த நோயினைப் பற்றி வேண்ட வேண்டும்' என்று திரும்பத் திரும்ப வற்புறுத்திட,
'சரி, அவ்வாறே செய்கிறேன்' என்றார்.
சிறிது நேரத்திற்குப் பின் சோகமான குரலில் சொன்னார்.
'என் தொண்டை ரணமாகி, என்னால், உணவேதும் விழுங்க இயலவில்லை' என அன்னையிடம் இதுபற்றிக் கேட்டேன்.
அதற்கு அன்னையோ, 'உனக்குத்தான் அத்தனை சீடர்கள் இருக்கிறார்களே?, அவர்களின் அத்தனை வாயிருந்துமா, உனக்குப் போதவில்லை' என்றாள்.
'வெட்கித் தலைகுனிந்தேன், வேறேதும் பேச இயலேன்' என்றார்!.
இதைக் காண நரேந்திரனுக்கு, இராமகிருஷ்ணர், இந்த நிலையிலும், எப்படி இறை எங்கும், எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறது, என்பதனை நடைமுறைப் படுத்துகிறார் என்பது புலனாயிற்று. மேலும், அந்த உண்மையான ஞானம் ஏற்பட்டால்தான், வலிகளில் இருந்தும், தனிமனித துன்பங்களில் இருந்தும் மீள இயலும் என்பது, தெளிவாயிற்று.

நரேந்திரனுக்கு அவ்வப்போது, ஆன்ம சக்தியும் வெளிப்பாடுகளும், காணற்கரிய காட்சிகளும் கிட்டி வந்தன. இவற்றால், நாளடைவில், அவருக்கு, அலுப்பும் ஏற்படலானது. அத்வைத வேதாந்தம் சொல்லும் உன்னதமான அனுபூதி நிலையான நிர்விகல்பசமாதி நிலையினை எட்டிடும் ஆவலில் அவர் மனது ஏங்கியது. பெயர், உருவ வேறுபாடுகள் மறைந்து, தனி மனித ஆன்மாவும், அண்ட சராசரங்களும், அதுனுள்ள அத்தனையும் இரண்டென்றிலா பிரம்ம சொரூபத்தினை அடைந்திடும் நிலைக்காக அவர் மனம் ஏங்கியது. நரேந்திரன் இந்த ஆவலை தன் குருவிடம் வெளிப்படுத்திட, இராமகிருஷ்ணரோ மௌனம் காத்தார்! இருப்பினும், நரேன் ஏங்கிய அந்த அனுபவம் ஒருநாள் மாலையில் ஏற்படத்தான் செய்தது.

ஒருநாள், விவேகானந்தர், எப்போதும்போல தியானத்தில் அமர்ந்திருக்க, திடீரென, அவரின் தலையின் பின்புறம், விளக்கு ஒன்று எரிந்து கொண்டு இருப்பதுபோல அவருக்குத் தோன்றியதாம். அந்த விளக்கில் இருந்து வெளிச்சம் அதிகமாகிக் கொண்டே இருக்க, இறுதியில் பெரிதாய் வெடித்து முடிந்ததாம். அந்த வெளிச்சத்தில் மயங்கி விழுந்து விட்டார். சிறிது நேரத்திற்குப்பின் சுய உணர்வு மீண்டு வெளியே வந்து, அங்கிருந்த சக மாணவரிடம்,
'கோபால், என் உடல் எங்கே, என் உடல் எங்கே?' என்று வினவினார்.
கோபாலோ, 'ஏன் நரேன், அங்கே தான் இருக்கிறது. உங்களால் உணர முடிய வில்லையோ?' என்று மறுமொழி சொல்லி விட்டு, எங்கே நரேந்திரன் இறந்திவிடப்போகிறாரோ என்ற அச்சத்தில் இராமகிருஷ்ணரிடம் முறையிடச் சென்றார். அங்கே இரமகிருஷ்ணரோ, அமைதியுடன், நடந்தது எல்லாவற்றையும் அறிந்தவராக புன்னகைத்தவாறு சொன்னார்:
'நரேந்திரன் அந்த நிலையிலேயே கொஞ்ச நேரம் இருக்கட்டும், நெடுநாள் ஏக்கத்தின் விளைவை அவ்வளவு சீக்கிரம் கலைக்க வேண்டாம்!' என்றாரே பார்க்கலாம்!.
சிறிது நேரத்திற்குப் பின், சாதாரண நிலைக்குத் திரும்பிய நரேன், விவரிக்கமுடியா அமைதியிலும், நிறைவிலும் மூழ்கியவாறு இருந்தார்.
பின்னர், இராமகிருஷ்ணரின் அறையில் நுழைந்திட்ட நரேனிடம், குரு சொன்னார்: 'இப்போது, அன்னை, உனக்கு எல்லாவற்றையும் காட்டி விட்டாள். ஆனால், இந்த 'அறிதல்', பெட்டி ஒன்றில் வைத்து பூட்டப்பட்ட நகை போல. அதன் சாவியோ என்னிடம். இப்பூவுலகில், நீ வந்த நோக்கம் நிறைவு பெற்றபின், அப்பெட்டியினைத் திறக்கப்பெற்று, சற்றுமுன், நீ அறிந்தவற்றை நிரந்தரமாய் அறிவாய்.' என்றார்!
இதுபோன்ற சமாதி உணர்வு, உடலில் சொல்லொணொ துயரங்களைத் தரக்கூடியது. அவதார புருஷர்களால் மட்டுமே, இவற்றைத் தாங்கிக் கொள்ளும் சக்தி பெற்றிருப்பார்கள். மேலும், இராமகிருஷ்ணர், நரேனிடம், அவர் உண்ணும் உணவில் மிகுந்த கவனம் செலுத்தி, மிகவும் தூய்மையான உணவையே உண்ணும்படி அறிவுறுத்தினார்.

பின்னர் மற்ற ஆசரம மாணவர்களிடம், 'நரேந்திரன் தன் பூவுடலை அவனாக விட்டு முக்தி அடைவான். அவன் தன் சுய சொருபத்தினை உணர்ந்தபின், இப்பூவுலகில் நில்லான். வெகு விரைவில், தனது ஞானம் மற்றும் ஆன்ம சக்தியால், இந்த உலகத்தையே உலுக்கிடுவான். பிரம்ம ஞானத்தினை, நரேனிடம் இருந்து, மாயை எனும் திரை கொண்டு, மறைத்து வைக்கும்படியாக, அன்னையிடம் வேண்டிக் கொண்டுள்ளேன். அவன் ஆற்ற வேண்டிய பணிகள் நிறைய உள்ளது. ஆனால், அவனை மறைக்கும் அந்த திரையோ, மிகவும் மெல்லியதாகத் தெரிகிறது. எந்நேரமும், அது கிழிந்து போகக்கூடும்' என்றார்!

பரமஹம்சரின் உடல்நிலை வெறும் எலும்பு தோல் போர்த்திய உடலாக நாளுக்கு நாள் தேய்ந்து வந்தது. அவரோ உடலில் மிச்சமிருந்த சக்தியினை, தன் மாணவர்களின் பயிற்சிக்காக செலவிடலானார். இப்போதெல்லாம், நரேந்திரனைப் பற்றிய கவலைகள் குறைந்திருந்தன, நரேனுக்கு காளியன்னையின் பரிபூரண நல்லாசிகள் கிடைத்து விட்டமையால்.
பின்னொரு நாளில் விவேகானந்தர் இவ்வாறு சொன்னார்: 'அவர், என்னை அன்னையிடம் ஒப்படைத்த நாள் முதலாய் - ஒரு ஆறு மாதத்திற்கு அவரால் உடல் சக்தியினை நீட்டிக்க இயன்றது. ஆனால், அதற்குமுன், இரண்டு வருடங்களுக்கு அவர், சிரமப்பட்டார்' என்று.

குருவின் கடைசி மூச்சுக்கு சிலகாலம் முன்னால், சீடன் நரேனை தன் படுக்கைக்கு அருகே அழைத்தார். நரேனை முழுதுமாய் ஒருமுறை பார்த்துவிட்டு, ஆழ்ந்த தியானத்தில் அமர்ந்து விட்டார். நரேனின் உடலில் மின்சாரம் பாய்ந்ததுபோல சூட்சுமசக்தி பாய்வதை உணர்ந்தவாறு, அவர் மூர்ச்சையாகி விட்டார். சற்றுநேரம் சென்ற பின், நரேன் இயல்பு நிலைக்கு திரும்பிட, அங்கே இராமகிருஷ்ணர் அழுது கொண்டிருக்கக் கண்டார்.
அவர் நரேனிடம், 'அன்பா, இப்போது என்னிடம் இருந்த எல்லாவற்றையும் உனக்குத் தந்து விட்டேன். இப்போது, நான் ஒன்றுமில்லா பக்கிரி போலத்தான். இந்த சக்தியெல்லாம் கொண்டு நீ அரியனவெல்லாம் சாதித்திடுவாய். அதுவரை, நீ புறப்பட்ட இடத்திற்கு திரும்பிடாமல் செயலாற்றுவாய்.' என்றார்.
கடைசி இரண்டு நாட்களுக்கு முன்னால், குருவின் படுக்கைக்கு அருகே அமர்ந்திருந்த நரேந்திரனக்கு, திடீரென ஒரு எண்ணம் ஏற்பட்டது. 'தம் குரு உண்மையிலேயே அவதார புருஷரோ?' என்பதுதான் அது. 'ஒருவேளே, குரு தானகவே அதனை ஒப்புக்கொண்டால்தான் என் மனம் தெளிவடையும்' என நரேன் தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டவாறு, இராமகிருஷ்ணரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க, மெதுவாக, அவரின் உதடுகள் அசைந்து, தெளிவான குரல் கேட்டது:
'என் அன்பு நரேன், இன்னுமா உன் மனம் ஒப்பவில்லை?. யார், முன் பிறப்புகளில் இராமனாகவும், கிருஷ்ணனாகவும், பிறந்தானோ, அவனேதான் இந்த உடலில், இராமகிருஷ்ணனாக இருக்கிறேன்.' என்று அவருடைய திருவாயினாலேயே மலர்ந்தருளினார்.

1886 ஆம் வருடம், ஆகஸ்ட் 15 இல், அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்திருந்தது. அன்று நள்ளிரவுக்குப்பின், சில நிமிடங்களுக்கு, சிறிது சீரான நிலை ஏற்பட, நரேந்திரனை, தன்னருகே அழைத்து, இறுதி அறிவுரைகளைச் சொல்லிவிட்டு, 16ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கு, காளியன்னையின் பெயரை மூன்று முறை உச்சரித்துவிட்டு, இறுதியான சமாதி நிலைக்குள் நுழைந்தார். அதன்பின் அவரது மனம் பூவுலகிற்கு திரும்பிடவில்லை. பின்னர், கங்கை நதிக்கரையில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. ஒரு வாரத்திற்குப்பின், விவேகானந்தர், வழக்கம்போல் சக ஆசரம மாணவருடன், தோட்டத்தில் நடந்து கொண்டிருக்கையில், வெளிச்சமான ஒரு உருவம் தென்பட்டது. சந்தேகமில்லாமல், அது இராமகிருஷ்ணரின் உருவம் தான். ஆனால், நரேன், ஒருவேளை தான் எப்பொதும் குருவின் நினைவில் இருப்பதால் ஏற்பட்ட மனபிரம்மையோ என்கிற எண்ணத்தில் அமைதியாய் இருந்தார். ஆனால், அவரது சகாவோ, 'அங்கே பார், நரேன், அங்கே பார்!' என வியப்பில் அந்த உருவத்தினைக் காட்டிட, அது இராமகிருஷ்ணரின் உருவம்தான் என்பது உறுதியானது.
~~~
இராமகிருஷ்ணரிடம் 'இறைவனை எனக்கு காட்ட முடியுமா? என்று கேட்டவாறு, அவரது பயிற்சிக்களத்தில் நுழைந்த நரேந்திரநாத் தத்தா, எப்படி தமது குருவின் ஆத்மார்த்த சீடனாகி, அவர் மூலமாக காளியன்னையின் அருளைப் பெற்று, எல்லாம் வல்ல இறைவன், எப்படி எல்லாமுமாய், எல்லா நம்பிக்கைகளிலும் நிறைந்திருக்கிறான் என்பதினை நேரடியாகக் கண்டறிந்து கொண்டார் என்பதனை, கடந்த ஐந்து பகுதிகளில் பார்த்தோம்.
உசாத்துணை: (Swami) Vivekananda - A Biography. By Swami Nikhilananda.
~~~
குரு இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு வணக்கங்கள்!
~~~
இராமகிருஷ்ண ஆரத்தி பகுதி 1:

இராமகிருஷ்ண ஆரத்தி பகுதி 2:

விவேகானந்தர் இயற்றிய இந்த ஆரத்தி பாடலின் வரிகளும், பொருளும்:

Wednesday, April 29, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்திமூன்று

பா 68:
திக்கிடங் காலமுதற் றேம லென்றுமெத்
திக்குமார்ந் தேக்குளிர்மு றிப்பதா - யெக்களங்கமு
மற்றநித் யானந்த வான்மதீர்த் தத்துதோய்
உற்றவ னார்செய்கை யொன்றின்றி - மற்றவன்
யாவு மறிந்தொணா யெங்குநிறைந் தாரமிர்த
நாவ னெனவே யறி.

பதம் பிரித்து:
திக்கு, இடம், காலம் முதற்றே அமலென்றும்
எத்திக்கும் ஆர்ந்தேக் குளிர் முறிப்பதா(ம்) - எக்களங்கமும்
அற்ற நித்யானந்த ஆன்ம தீர்த்தத்து
தோய்வுற்றவனார் செய்கை ஒன்றின்றி மற்றவன்
யாவும் அறிந்தொணா எங்கு(ம்) நிறைந்த ஆரமிர்தன்
ஆவன் எனவே அறி.


பொருள்:
திசை, இடம், காலம், போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடாத முடியாததும்,
எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் நிறைந்ததுமான,
எதிர்மறையான வெப்பத்தினையும், குளிரையும் கூட அழிப்பதுமான,
களங்கமில்லா, நிலையான, அழிவிலா இன்பத்தை இகத்தில் தருவதுமான, பரம்பொருளை,
எவனொருவன் எல்லா செய்கைகளையும் துறந்து, தன் ஆன்மாவெனும் தீர்தத்தில் மூழ்கித் தோய்கிறானோ,
அவன், எல்லாமும் அறிந்தவனாய், எங்கெங்கும் நிறைந்தவனாய்,
அமிர்தமாய் அழிவில்லாததாய் ஆகிறான்.

விளக்கம்:
பரம்பொருளானது காலம், இடம், திசை போன்ற குணங்களால் குறுக்கப்படாமல், எல்லாவற்றையும் தாண்டி எல்லா இடத்திலும், எல்லா திசையிலும் நிறைத்திருக்கிறதாம்.
அப்பரம்பொருளை, தன் ஆன்மாவான 'தீர்த்தத்தில்' - புனித நீரில் மூழ்கி - தன்னைத்தானே, அதில் தோய்த்துக் கொள்கிறானோ, அவன் அந்த பரம்பொருளாகவே, அதன் அழிவிலா நிலையினை அடைகிறானாம்.
புனிதமான எந்த ஒரு இடத்துக்கும் செல்ல வேண்டாமல், தன் இகத்திலேயே பரத்தினைக் காண ஏதுவாகிறது ஞானிக்கு. அது அவனுக்கு நித்யமான ஆனந்தத்தினை நிரந்தரமாய் அடையவும் செய்கிறது.

~~~

இவ்வாறாக ஆத்ம போதம் நிறைவடைந்தது.
பகவான் இரமணரின் திருவருளால், இப்பகுதிகளை இங்கே தர இயன்றது.

உசாத்துணை: சுவாமி நிகிலானந்தரின் ஆத்ம போதம் ஆங்கில உரை.

மேலும், இணையத்தில் கிடைத்த சுவாமி சின்மயானந்தரின் ஆங்கில உரையாக்கம்:

ஆத்ம போதம் - சுவாமி சின்மயானந்தர் உரை ஓம் தத் சத்!

Sunday, April 19, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்திரண்டு

பா 66:

சிரவண மாதிகளாட் றேசுறு ஞான
வெரியினிற் காய்ச்சி யெடுக்கச் - சருவ
மலமும்போய்ச் சீவன் மறுவில்பொன் போனிர்
மலனாகித் தன்னொளிர் வான்.

பதம் பிரித்து:
சிரவணமாதிகளாலே சுறு ஞான
எரியினிற் காய்ச்சி எடுக்கச் - சருவ
மலமும் போய்ச் சீவன் மறுவில் பொன் போல்
நிர்மலன் ஆகித் தன்னொளிர்வான்.

பொருள்:
சிரவணம் முதலான சாதகங்களில் ஆன்ம முதிர்விற்கு உந்தப்படும் சாதகன்,
ஞானமெனும் நெருப்பில் நன்கு காய்ச்சி எடுக்கப்படுவது போலவாம்.
பொன்னை நெருப்பில் காய்ச்சி,
அதில் இருக்கும் பொன் அல்லாத, மற்ற உலோகங்களை அதனில் இருந்து அகற்றி,
தூய்மையான தங்கத்தை எடுப்பது போல,
சிரவணம் முதலான, கேட்டல், பாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு,
தன்னில் இருக்கும் அழுக்கான மலங்களை அகற்றி,
தூய்மையான சச்சிதானந்தாமாய் ஒளிர்வான்.

விளக்கம்:
ஞானமெனும் நெருப்பு : நெருப்பு எப்படி, தூய்மையாய், மாசற்று இருக்கிறதோ அதுபோல, தூய்மையான மெய்ஞானமும், அழுக்கற்று இருக்கும். நெருப்பில் காய்ச்சி, அழுக்கு அகற்றிட, தூய்மையாகும் பொன்போல,
ஜீவனில் அழுக்கு அகற்றி, அதன் தூய்மையான முழுமுதல் நிலைக்கு திரும்பிட ஆவன செய்ய வேண்டும்.
எவ்வாறு?: சிரவணம் (மறைகள் சொல்லும் உன்னத நெறிதனைக் கேட்டறிதல்) முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்)
வழி நெறிகளில் தன்னைத் தான் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வழிநெறிகளில் நன்கு பக்குவப்பட்ட மனதில், அழுக்குகள் அகல, அதுவே அவன் தன்னைத் தானறிந்து ஒளிர்ந்திட ஏதுவாகிறது.

பா 67:
இதயவெளி தோன்றி யிருளையழி ஞான
உதயரவி யான்மா வொளிரு - நிதமுமே
யெல்லாவட் றும்பரவி யெல்லாமுன் தாங்கினிந்
றெல்லா மொளிர்விக்கு மெண்.

பதம் பிரித்து:
இதயவெளி தோன்றி இருளை அழி ஞான
உதய ரவி ஒளிரு(ம்) நிதமுமே
எல்லாவற்றும் பரவி, எல்லாமுன் தாங்கி நின்று
எல்லாம் ஒளிர்விக்கும் எண்.

பொருள்:
இதயவெளியில் இருந்து தோன்றிய, ஞானமானது, அறியாமை என்னும் இருளை அழித்திட, அது அன்றாடம் கிழக்கில் உதிக்கும் சூரியன் இருளை அழித்து, ஒளிர்வது போலவாம். அம்மெய்ஞானம், எல்லாப் பொருளிலும் பரவி, எல்லாப் பொருளையும் நிலைப்பெறச் செய்து, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவை எல்லாவற்றையும் ஒளிர்ந்திடச் செய்திடுவது, என்று எண்ணுக.

Wednesday, March 25, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்தொன்று

பா 64:
எதுவெது காணவுங் கேட்கவு மேயு
மதுபிரம்மத் தன்னிய மாகா - ததுவுமே
தத்துவஞா னத்தினாற் சச்சிதா னந்தமா
மத்துவை தபிரம மாம்.

பதம் பிரித்து:
எதுவெது காணவும் கேட்கவுமேயும்
அது பிரம்மத்தின் அன்னியம் ஆகாததுவுமே,
தத்துவ ஞானத்தினால் சச்சிதானந்தமாம்
அத்துவைத பிரம்ம மாம்.

பொருள்:
நாம் காண்பவையும், கேட்பவையும்,
பிரம்மத்தில் இருந்து வேறானது அல்ல.
மெய்ஞானத்தை அடைந்தவர் பிரம்மத்தை சத் என்றும் சித் என்றும் ஆனந்தம் என்றும்,
பிரித்துச் சொன்னாலும்,
அது 'இரண்டு' என்றில்லாத, அத்வைதமான, பிரம்மமேயாம்.

விளக்கம்:
மெய் ஞானத்தினை அடைந்தவர் எங்கெங்கும் பிரம்மத்தினை அன்றி வேறொன்றும் பார்த்தறியார், கேட்டறியார்.
அந்த முழுநிலையினை அடையாதவருக்கோ, அது பன்மையாகத் தெரிந்தாலும், அவர்களும் பார்ப்பதும், கேட்பதும் எல்லாமுமே, பிரம்மமேயாம்.
தான் யாரெனும் தன்னறிவு தூர்ந்ததும், சச்சிதானந்த மயமான பிரம்மம் தானெனும் மெய்யறிவு மேலிட,
இரண்டிலா பிரம்மமாக இரண்டிலா நிலையினை தம்மிலும் உணர்வர்.

பா 65:
சருவத்துஞ் சார்ந்ததாஞ் சச்சிதா னந்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்
ஞானக்கண் ணில்லாத நண்ணானே காட்சியொளிர்
பானுவையன் தன்போலப் பார்.

பதம் பிரித்து:
சருவத்தும் சார்ந்ததாம் சச்சிதானந்த்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்,
ஞானக்கண் இல்லாதன் நண்ணானே காட்சியொளிர்
பானுவை யந்தன் போலப் பார்.

பொருள்:
பிரம்மம் சச்சிதானந்தமாய், எங்கெங்கும் எல்லாப்பொருளிலும் நிறைந்திருந்தாலும்,
ஞானக் கண் உடையவரால் மட்டுமே, அதை உணர்ந்திட இயலும்.
அந்நிலையை அடையாதவருக்கோ,
கண்ணெதிரே சூரியன் உதித்திருந்தாலும், அதை அறிய இயலாத பார்வை இழந்தவன் போல், ஒளிரும் பிரம்மத்தினை உணர இயலாதவனாய் இருக்கிறான்.

விளக்கம்:
பிரம்மம் எப்போதும், எல்லாவிடத்தும் ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும்,
தமது அகக்கண்ணை மறைக்கும் அறியாமை இருள் அகலாத வரைக்கும்,
அவர்கள், மெய்ஞானப் பார்வைதனை இழந்தவராய்,
ஒளிரும் பிரம்மத்தினைக் காண இயலாதவராய் இருக்கின்றார்.

அவனது பார்வையோ, அவனது சொல்லோ, அல்லது அவனது வேறு எந்த புலனோ அவனுக்குத் துணையில்லை. அவன் செய்யும் தவமோ, அல்லது நற்செயலோ கூட இல்லை. எப்போது, தூய சுடரொளியாம் ஞானம் பெறுகிறானோ, அப்போதுதான் அவன் பரமனைப் பார்க்கிறான். அந்தப் பரமனையே தியானிக்க, அந்தப் பரமனில் இரண்டில்லாமல் ஆகிறான்.
- முண்டக உபநிடதம், III, i, 8

Sunday, March 15, 2009

தமிழில் ஆத்ம போதம் : பகுதி இருபது

பா 62:
ஒளிர்ந்துலக மெல்லானத னுள்வெளிவி யாபித்
தொளிர்ந்திடு மப்பிரம மோர்வா - யொளிரு
நெருப்பினிற் காய்ந்தங்கி நேரொளிரு மந்த
விரும்புண்டை யைப்போல வே.

பதம் பிரித்து:
ஒளிர்ந்து உலகமெல்லான் அதனுள் வெளி வியாபித்து
ஒளிர்ந்திடும் அப்பிரமம் ஓர்வாய் ஒளிரும்
நெருப்பினிற் காய்ந்தங்கினேர் ஒளிரும் மந்த
இரும்புண்டையைப் போலவே.

பொருள்:
ஒளிர்ந்து உலகின் உள்ளே, வெளியே, என எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுமான
பிரம்மம் ஒளிருவது -
மந்தமான ஒரு இரும்பு உருண்டையை, நெருப்பில் காட்டி, பழுக்கக் காய்ச்சிட,
அதன் உள்ளும்,புறமும், எல்லாமும் நெருப்பாகவே ஒளிருவதைப் போலவே ஆகும்.

பா 63:
பிரமம முலகிற் பிறிதாகு மந்தப்
பிரமத் தணுவில் பிறிதாய் - பிரமத்தற்
கன்னிய மேது மவிர்ந்தா லதுமித்தை
யுன்னுக கானநீ ரொத்து.

பதம் பிரித்து:
பிரமம் உலகிற் பிறிதாகும் அந்தப்
பிரமத்தின் அணுவில் பிறிதாய் - பிரம்மத்தற்கு
அன்னியம் ஏதும் அவிர்ந்தால் - அது மித்தையென
உன்னுக கான(ல்) நீர் ஒத்து.

அருஞ்சொற்பதம்:
அவிர்தல் : ஒளிர்தல்
மித்தை : தோற்றமயக்கம்
உன்னல் : நினைத்தல்

பொருள்:
பிரம்மம், உலகத்தில் இருந்து வேறுபட்டதாகும்.
அப்படிப் பிரித்து, 'இன்னொன்றாய்'ப் பார்க்கையில்,
பிரம்மத்தினைத் தவிர இன்னொன்று ஒளிர்ந்தால், அது, பொய்யான, காட்சிப் பிழையாகத் தான் இருக்க வேண்டும்,
பாலைவனத்து கானல் நீர்போல.

விளக்கம்:
அத்வைத வேதாந்தத்தின் முடிபாக இப்பாவினைக் காணலாம்.
ஞானம் பெற்றவன், எல்லாவிடத்திலும், பிரம்மத்தினையே பார்க்கிறான்.
மற்றவர்களுக்கு, வெவ்வேறாகத் தெரிபவை எல்லாம், அவன் பார்வையில் 'ஒன்றே'யாம். அதுவே உண்மையாம்.
அறியாமையினால், வெவ்வேறாகத் தெரிந்தவையும் 'ஒன்றென'த் தெரியுமாம்,
அவ்வறியாமை அகன்றதும்.
அங்கே மெய்ஞானம் மட்டுமே, பிரம்மம் எனத் தெளிவித்து ஒளிர்ந்திடச் செய்யும்.
வறண்ட பாலையில் தொலைவில் தெரியும் நீர்ச்சுனை, உண்மையில் தோற்ற மயக்கம் என்பதுபோல,
இவ்வுலகமே பிரம்மம் எனத் தெரிவதும் காட்சிப்பிழையேயாம்.
இவ்வுண்மையை அறிந்தவர்க்கு, தன்னை அறிதலே தலையாய குறிக்கோளாய் இருக்கும்.
தான் யாரெனும் வினவலை விடுத்து, உலகம் யாதெனச் சென்றாற்பின், அது கானல்நீர் வேட்டை போலத்தான் ஆகும்.

"இரண்டாகத் தெரிவதை இருப்பதாகக் கொண்டாலும், அது மறைந்து போகத் தான். ஏனெனில், இரண்டெனத் தெரிவதெல்லாம் காட்சிப் பிழையே. அத்வைதம் மட்டுமே, உன்னதமான உண்மை."
- கௌடபாதரின் மாண்டூக்ய உபநிடதக் காரிகை I, 17

Sunday, February 15, 2009

வானத்தில் ஒரு மாடு : ரிஷபம்

தானென்று சொல்லி தனக்கு ஒப்பிலா
வானதன் வன்னமது காண்!

தான், நான், எனக்கு... - என்னும் கூற்றுகளில் சிக்கிட, தனக்கு ஒப்பிலா வானம் போல், எங்கும் நிறைந்திருக்கும் இறையையும் கண்டு கொள்ள இயலுவதில்லை. வானத்தில் எப்போதும் விண்மீன்கள் ஒளிர்ந்து கொண்டிருப்பினும், அவை யாவையென கண்டும் காணமல் இருப்பது போல. ஒப்பிலாதவனின் ஒருதுளியாய் இருப்பினும், அவனின் பூரண ஒளியினைக் காண்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. இருப்பினும், அவன்/அது எவ்வாறெல்லாம் சமைந்திருக்கிறான்/றது என்பதை ஒவ்வொன்றாக ஆராய்ந்து அறியலாம் அல்லவா!

எங்கெங்கும் நிறையும் இறை, எத்தனை எத்தனை விந்தைகளில் சமைகிறான்!
அவற்றில் சில துளிகளை இங்கே படங்களில் பார்த்து பரம் வசப் படலாமா?

வானத்தில் தெரியும் விண்மீன் கூட்டங்களுக்கு பலவாறான உருவங்களைக் கொடுத்து, அவற்றைப் பற்பல பெயர்களில் வழங்குவது நமக்குத் தெரிந்ததுதான் அல்லவா. இங்கே 'ரிஷபம்' என்னும் மாடு வடிவிலான விண்மீன் தொகுதியினைப் பார்ப்போமா!

Stellarium எனும் மென்பொருள் மூலமாக கீழே இருக்கும் படங்கள், பிப்ரவரி மூன்றாம் தேதி எடுத்தவை. இவற்றில் சந்திரன், ரிஷப விண்மீன் தொகுதியினுள் இருப்பதைக் காணலாம்.

ரிஷபம்





மேலே இருக்கும் இரண்டு படங்களும் இந்த ரிஷப நட்சத்திரத் தொகுதியினைக் தொகுத்துக் காட்டுதல்லவா.
இத் தொகுதியில், அந்த மாட்டின் வலது கண் பக்கத்தில், பெரிதாய்த் தெரியும் நட்சத்திரம் தான் ரோகிணி. இதற்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் Aldebaran (87 Alpha Tauri). நமக்கு, 65 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ரோகிணி, சூரியனை விட 40 மடங்கு பெரியது, 125 மடங்கு ஒளி மிகுந்தது.
அடுத்த படத்தில், ரோகிணி பற்றிய தகவல்களையும், அதன் அருகே உள்ள நட்சத்திரங்களையும் பற்றி விவரமாகக் காணலாம். படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்.


முதல் இரண்டு படங்களில், மாட்டின் வயிற்றுப் பக்கத்தில், சந்திரனுக்குப் பக்கத்தில், புள்ளி புள்ளியாக சில நட்சத்திரங்கள் தெரிகிறதல்லவா. அவற்றை அருகில் சென்று பார்ப்போம், அடுத்த படத்தில்:



அட, ஆறு நட்சத்திரங்கள் எளிதாகத் தெரியுது!. இவை தான் கார்த்திகை நட்சத்திரம்(ங்கள்!). இவற்றோடு அங்கிருக்கும் ஏழாவது நட்சத்திரத்தினையும் சேர்த்து ஆங்கிலத்தில், இவற்றின் தொகுதியை Pleiadas என வழங்குவர். கிரேக்கக் கதைகளில், இவற்றை, 'Seven sisters'(Alcyone, Electra, Maia, Merope, Taygete, Celaeno மற்றும் Asterope) என்பர். ஆறேழு மட்டுமல்ல, இருநூறுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இங்கே கொட்டிக் கிடக்கு. கீழே இருக்கும் படத்தில் பாருங்கள், நட்சத்திரப் படலமாகத் தெரியும் இவை:

ஜப்பானியர்கள், இந்நட்சத்திரத் தொகுதியினை 'Subaru' எனவும், ஈரானியர்கள் 'Soraya' எனவும் பெயரிட்டனர்!.

அடுத்து நாம பார்க்கப்போகிறது ஒரு நெபுலா.(Nebula). இது ஒரு நடசத்திரத் துகள் படலம். தூசிபோல, ஒரே நட்சத்திரத் துகள்களாப் படிந்து இருப்பது. இந்த ரிஷப தொகுதிக்குள்ளே, மாட்டின் முதல் கொம்புக்கு அருகே (முதல் படத்தில் சதுரக் கட்டத்தினுள் இருப்பது), இதுபோல ஒன்றைப் பார்க்கலாம்.



அடுத்த படத்தில், இதே நெபுலாவினை, நமது தொலைநோக்கியை உற்று நோக்கச் செய்து, பக்கத்தில் போய் பார்க்கலாமா?
வாவ்!


இதற்குப் பெயர் Crab Nebula. நமக்கு 6,500 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. 1054ஆம் வருடம், இந்த நெபுலா ரொம்ப பிரகாசமாக இருந்ததாம், பகலிலேயே தெரிகிற அளவிற்கு!. பெரிய நட்சத்திரங்கள் வெடித்துப் போகும்போது, அதன் மீதமே, இதுபோன்ற படலங்கள். இந்த நெபுலாவுக்கு நடுவிலே, pulsar எனும், அந்த வெடித்துப்போன நட்சத்திரத்தின் கரு, இன்னமும் விட்டு விட்டு எரிந்துகொண்டே இருக்கிறதாம்!

Monday, February 09, 2009

தமிழில் ஆத்மபோதம் - பகுதி பத்தொன்பது

பா 59:
அதனிடத் துள்ள தகிலமுஞ் செய்கை
யதையடுத் துள்ளதே யாகு - மதனாற்
பரவிடு மெல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு நெய்போல வே.

சீர்களைப் பிரித்தபின்:
அதனிடத்துள் உள்ளது அகிலம் உன் செய்கை
அதை அடுத்து உள்ளதே ஆகும் - அதனாற்
பரவிடும் எல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு(ம்) நெய் போலவே.

பொருள்:
பிரம்மம் - அதனுள், அகிலமும், அதளுள் அடங்கும் அனைத்துப் பொருள்களும் அடங்கும்.
அகிலத்தில் நிகழும் அனைத்து செயல்களும், அதனைத் தொடர்ந்தே நிகழ்கின்றன.
மூலமான பரம்பொருளில் இருந்துதான் மற்ற எல்லாமும் பரவுகின்றன.
பாலில் நெய் போல் பரம்பொருளும் எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும், எல்லா செயலிலும் விரவி இருக்கிறது.

விளக்கம்:
எல்லாப் பொருளிலும் பிரம்மம் எனும் பரம்பொருளே நிறைந்து இருக்கிறது.
எல்லாப் பொருளிலும் இருக்கும் நித்யமான, சாசுவதமான ஒரே பொருள் பிரம்மம் மட்டுமே.
எல்லா செயலிலும் - கேட்டல், பார்த்தல், நுகர்தல், தொடுதல், சுவைத்தல் - என எல்லா செயல்களும் நிகழ மூலக் காரணமாய், பரம்பொருளே அவர்களில் சைத்தன்யமாக திகழ்கிறான்.
பாலைக் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் நெய் போல, எல்லாப் பொருட்களின் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளைக் கடைந்தெடுத்தால், கிடைத்திடும் பொருள் தான் பரம்பொருள்!

இப்படியாக, பரம்பொருளின் பேரின்பம் "இவை" எல்லாவற்றாலும் மறைக்கப்படுள்ளது, அவையாவன:

பா 60:
பருமையு னுண்மையுற் பத்தி வினாசங்
குருகலு நீட்சியுங் கூடத் - துருவங்
குணங்குல நாமமுங் கொள்ளாம லுள்ள
துணர்க பிரம்மமென் றுற்று.

சீர்களைப் பிரித்த பின்:
பருமையு(ம்) நுண்மை உற்பத்தி, வினாசம்,
குருகல், நீட்சியும் கூடத்து - உருவம்,
குணம், குலம், நாமமும் கொள்ளாமல் உள்ளது
உணர்க பிரம்மம் என்று உற்று.

பொருள்:
அளக்கக்கூடிய பொருளின் பருமனும்,
அளக்கவும் அரிதான பொருளின் நுண்மையும்,
உற்பத்தி ஆகுபவையும்,
அவற்றில் அவ்வப்போது அழிந்து போகுபவையும்,
சிறுத்துப் போதலும், பெரிதாகலும் -
இப்படியாக எல்லா வகையான உயிரும் பொருளுமாக இருந்தாலும், அவற்றில்,
உருவம், குணம், குலம், பெயர் போன்ற வேறுபாடுகளைக் கொள்ளாமல்,
ஒன்றென, இருப்பதுவே பிரம்மம் என உணர்ந்து கொள், உற்று நோக்கி.

விளக்கம்:
இவ்வாறாக, வெவ்வேறெனத் தெரிவதில் எல்லாம் மறைந்து இருப்பது பரம்பொருள். மறையோதி மனம் திறந்திட, மறைபொருள் புலப்பட, அறியாமை எனும் இருள் அகன்றிட, இவ்வேறுபாடுகள் களைந்திட, உன்னுள்ளே எழும் சுய வினவலின் விளைவாக, இவ்வேறுபாடுகள் அற்றதே பரம்பொருள் என உணர்வாய்.

பா 61:
எதனொளியி னாலொளிரு மேயிரவி யாதி
யேதனை யவையொளிர்க்க வெலா - தெதனாலே
யிந்தவுல கெலா மிலகு மதுதானே
யந்தப் பிரம மறி.

சீர்களைப் பிரித்தபின்:
எதன் ஒளியினால் ஒளிருமே இரவியாதியே
அதனை அவை ஒளிர்க்க இலா - எதனாலே
இந்த உலகெலாம் இலகும் அதுதானே
அந்தப் பிரமம் அறி.

(இலகும் - விளங்கிடும்)

பொருள்:
சூரியன் முதலான விண்மீன்களும், பரம்பொருளால் ஒளிர்கின்றன. ஆனால், அவை தமக்கே ஒளியினைத் தந்திட இயலா. எந்த ஒரு பொருளால், இவ்வுலகமெல்லாம், விளங்கித் திகழ்கிறதோ, அப்பொருள்தான் பிரம்மம் என அறிந்திடுவாய்.

விளக்கம்:
வானத்தில், தானாக ஒளிர்விடும் பொருட்கள் உண்டு. அவற்றின் ஒளியினைப் பிரதிபலிக்கும் பொருட்களும் உண்டு.
இவற்றில், எதுவாகிலும் சரி, அவற்றின் ஒளியின் மூலத்தின் மூலம், பரம்பொருளேயாம்.
தமது ஒளியாலேயே தம்மைத் தாமே, ஒளிர்க்க (தத்தம் அறியாமை அகன்றிடச் செய்திட) இயலாத பொருட்கள் இவை. அவற்றின் அறியாமை அகன்று, ஒளியுடன் திகழ, பரம்பொருளின் ஒளி தேவைப்படுகிறது.
அந்த பரம்பொருளின் ஒளியால் தானே, இந்த உலகமும், அண்ட சராசரங்களும், விளங்கித் திகழ்கிறது!

இருட்டில் ஒரு பொருள் இருக்கிறது. என்ன பொருள் என கண்டுகொள்ள இயலவில்லை. அதன்மீது ஒரு கைவிளக்கின் வெளிச்சத்தை செலுத்திப் பார்க்கிறோம், எந்த பொருள் எனத் தெரிய.
தபால்காரன் கொண்டுவந்து தந்த பெட்டிக்குள் இருக்கும் பொருள் என்னவென்று தெரியவில்லை, அதைப் பிரித்துப் பார்க்கும் வரை. பிரித்தபின் அதுவென்ன என விளங்குகிறது.
ஏற்கனவே தெரிந்த பொருளாக இருந்தாலும், தெரியாமல் இருந்தது, இப்போது தெரிந்ததாகிறது.
இப்படியாக, தெரியாமல் இருந்த ஒவ்வொன்றும் தெரியத் துவங்குகிறது, அதைப் பற்றிய அறியாமை அகன்றதும்.
ஆக, அறியாமை அகல, தெரியாப் பொருளைப் பற்றிய அறிவு சேர்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக.
இதற்கு எங்கே முடிவு?
எப்போது, இன்னும் மேலுமாக, அறிவதற்கு மேலும் ஏதுமில்லை என்ற நிலை எப்போது ஏற்படும்?
அந்த பரம்பொருள் இன்னவென்று அறிந்த பேரறிவினை எட்டிய நிலையில் மட்டுமே.
அதனால், அவ்வறிவிற்குப் 'பேரறிவு' எனப்பெயர். இவ்வறிவிற்கு மேல், அறியவேண்டியது ஏதுமில்லா முக்தி நிலை.

பாரதியும் சொல்லுவான்,
பல்லாயிரம் வேதங்கள் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனல் கேளீரோ!

Thursday, February 05, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினெட்டு

இந்தத் தொடரை சின்ன இடைவேளைக்கு அப்புறம் தொடருகிறோம். இதுவரை வந்த பகுதிகளை இங்கே பார்க்கவும்.
முதல் முறையா வந்திருக்கீங்கன்னா, ஆத்ம போதம் என்றால் என்ன, யார் எழுதியது என்கிற விவரங்களை இத்தொடரின் முதல் பகுதியில் இங்கு பார்க்கவும்.

பா 57:
எதழிவில் லாத தெதையன்றென் றன்றென்றே
வேத முடிவு விளக்கடும் - யாதொன்
றகண்டவின் பாகி யமருமது தானே
திகழும் பிரமன் தெளி.

சீர்களைப் பிரித்து:
எது அழிவில்லாதது, எதை அன்றென்று அன்றென்றே
வேத முடிவு விளக்கிடும் - யாதொன்று
அகண்ட இன்பாகி யமரும் அதுதானே
திகழும் பிரமன் தெளி.

பொருள்:
எது எப்போதும் அழிவில்லாததாய், நித்யமாய் இருக்கிறதோ,
எதை வேதங்களேல்லாம், 'இது அதுவல்ல, இது அதுவல்ல, இது அதுவல்ல,....' என அலசி, ஆராய்ந்து, முடிவாக விளக்குகிறதோ,
எந்த ஒரு பொருள், பேரின்பப் பெருவெள்ளமாய் எல்லா இடத்திலும் நிறைக்கிறதோ,
அந்தப் பொருள் தான்,
ஒளி விட்டுத் திகழும் பரப்பிரம்மம்; தெளிவாய்.

விளக்கம்:
அழிவில்லாமல், சிதைவில்லாமல், எப்போதும் முழுமையாய் இருக்கின்றதாம் பிரம்மம். அதைத் தவிர, வேறொன்று என்றில்லை என, எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும் அது இருக்கின்றது. அந்த பிரம்மத்தின் கண்களில் 'வேற்றுமை' என்பதே இல்லை. அதை விட்டு இன்னொரு பொருள் இருந்தால் தானே, வேற்றுமை பாராட்ட இயலும்?
அப்படியாக, வேறொன்று என்றில்லாமல், ஒன்றே ஒன்றாய் இருக்கிறது பிரம்மம்.

இது அதுவல்ல: 'நேதி, நேதி' - எது பிரம்மம் என்கிற கேள்விக்கு, வேதங்கள், அவற்றின் உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் போன்ற மறைகள், ஒவ்வொரு பொருளாக எடுத்துக்கொண்டு, இதுவல்ல பிரம்மம், இதுவல்ல பிரம்மம், என்று பிரம்மம் பற்றி அடையும் முடிவினைக் கொண்டு நாம் விளங்கிக் கொள்ளலாம்.

"அடுத்து, பிரம்மம் யாதெனச் சொல்ல, அது இதுவல்ல, இதுவல்ல."
- பிரஹதாரண்யக உபநிடதம் II, iii, 6

நேதி நேதி-யைப் பற்றி முன்பொரு ஆத்மபோதச் செய்யுளிலும் பார்த்தோமல்லவா. அதன் சுட்டி இங்கே.

தெளிவாய்: பிரம்மம் 'இன்னொரு பொருள்' என்றல்ல. தானே அப்பரம்பொருள் எனத் தெளிவாய்.
அப்படியானல், தான் தானாக இருந்துகொண்டு அப்பரம்பொருளின் பேரின்பத்தில் எத்தனை அளவு துய்க்க இயலும்? அடுத்த பா சொல்கிறது:

பா 58:
அகண்ட சுகமய வான்மாவி லற்ப
சுகத்தை யடுத்தே சுரராய்த் - திகழும்
பிரம்மாதி யேனோர் பிறங்குவரின் புற்றுத்
தராதர மாகத் தரி.

சீர்களைப் பிரித்து:
அகண்ட சுகமய ஆன்மாவில் அற்ப
சுகத்தை அடுத்தே சுரராய்த் திகழும்
பிரம்மாதி யேனோர் பிறங்குவர் இன்புற்றுத்
தராதரம் ஆகத் தரி.
(பிறங்குவர்: உயர்வடைவர்/சிறப்படைவர்;
அடுத்தே: பின் தொடர்ந்தே;
தரி: கொள்)
பொருள்:
எங்கும் அகண்டு பரவியிருக்கும், பேரின்பத்தின் சிறிய பகுதியான சுகத்தையே
பிரம்மன் போன்ற சுரர்கள் (தேவர்கள்) சுவைத்திட,
அதற்கேற்றாற்போல், அவர்கள் ஒளிவிட்டுத் திகழ்வார்கள்.
விளக்கம்:
எல்லாவற்றிலும் மேலான பிரம்மம் எங்கும் வியாபித்து இருக்க, அப்பெரிய பொருளின் சிறிய துகள் போலத்தான் - பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் ஆவர். படைப்புத் தொழிலையே நடத்தி வந்தாலும், பிரம்மனும், பரப்பிரம்மம் எனும் பெரும் பனிக்கட்டியின் சிறு நுனி போலவே ஆவர்.
"இதுவே உயர்ந்த இலக்கு, இதுவே உன்னத வெற்றி. இதுவே உயர்ந்த உலகம். இதுவே பேரின்பம். மற்ற எல்லா உயிர்களும், இதனில் சிறு துகள்களாக, அப்பேரின்பத்தில் இருந்து சிறு துளியையே பெருகிறார்கள்."
- பிரகதாரண்யக உபநிடதம், IV, iii, 32.