Monday, April 28, 2008

இறைவனின் திருவருளைப் பெறாதவர் யார்?

சென்ற பதிவில் ரஞ்சனி&காயத்ரி அவர்கள் பன்னிரெண்டாம் திருமுறையான பெரிய புராணத்தின் வாழ்த்துப் பாடலுடன் விருத்தத்தினைப் பாடத் துவங்குவதை பார்த்தோம்.
தொடர்ந்து, அவர்கள், இன்னொரு பாடலையும் பாடினார்கள்.
அந்தப் பாடல், ஆறாம் திருமுறையான திருநாவுக்கரசர் தேவரத்திலிருந்து ஒரு பாடல்.

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

இறைவனின் திருவருளைப் பெறாதவர் யார்?

'நமசிவாய' எனும் அஞ்செழுத்து திருநாமத்தினை ஒருகாலும் செப்பாதவர்.

தீவண்ணம் உடைய சிவனின் இயல்பை ஒருகாலும் பேசாதவர்.

ஒருகாலும் திருக்கோயிலினை வலம் வாராதவர்.

உண்பதற்குமுன் மலரைப் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதாவர்.

கொடுநோய்கள் தீர வெண்ணீற்றை அணியாதவர்.

இவ்வாறு செய்யாதாரெல்லாம் இறைவனது திருவருளை இழந்தவர் ஆவர்.
இப்படிப்பட்டவருக்கு, தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செய்து,
வரும் பிறப்பிலும் பயனின்றி இறந்து மீண்டும் மீண்டும்
பிறப்பதற்கு அவர் செய்த ஊழ் வினைகளே தொழிலாகி இறக்கின்றார், என்கிறார் திருநாவுக்கரசு நாயன்மார்.
---------------------------------------------------------------
தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கும் திருநீறினையும்,
பிறவிச் சுழலில் சிக்கித் தவிப்பவருக்கும் அபயம் தந்திடும்
நமசிவாய மந்திரத்தின் மாண்பினையும் இவ்வாறாய் எடுத்துரைக்கிறார் அப்பர் பெருமான்.
உம்மையில் தொடர்ந்த வினைகள், இம்மையில் அவன் பாதம் பற்றி அகற்றா வினைகள்,
எல்லாம் சேர்ந்து, மறுமையினைத் தொடர்வதற்கு தொழிலாகவே மாறி விடுகின்றனவாம்.
'ஒருகாலும்' என்ற சொல்லாடலை கவனிக்கவும். ஒருமுறையேனும், மேற்சொன்னவற்றைச்
செய்தாலும், அந்த நற்செயலின் பயனே, நாதனின் அருளைத் தந்திடாதோ.
நற்பயன்களின் தொடர்ச்சியால், வினைப்பயன்கள் வெந்து மடியாதோ.
---------------------------------------------------------------
சென்ற பதிவில் கேட்ட பாடலை இங்கும் கேட்கலாம்: ('உலகெலாம் உணர்ந்து...'தனை தொடர்ந்து கேட்கவும்)

பாடுபவர் : ரஞ்சனி & காயத்ரி
வயலின் : சாருமதி ரகுராமன்
மிருதங்கம் : அருண் பிரகாஷ்
கடம் : குருபிரசாத்
ராகம் : சுத்த தன்யாசி

Ulagellam unarndu....


பி.கு:
விருத்தம் முடிந்தபின், அடுத்த பாடலாக, நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய 'தேறுவதெப்போ நெஞ்சே...' என்ற பாடல் துவங்குகிறது. அந்தப் பாடலை, இன்னொரு சமயம் பார்ப்போம்.

Sunday, April 27, 2008

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்!

பெரிய புராணத்தின் தொடக்கச் செய்யுள் - 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்...'. சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்து, அதிலிருந்து விளைந்த வாழ்த்துப் பாடலைப் பார்ப்போமா?

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

எவ்வுயிர்களாயினும் தம்மறிவால் உணர்வதற்கும் ஓதுவதற்கும் அரியவன்! : அவனை மனத்தால் உணர்வதும், மொழியினால் ஓதுதலால் அடைவதும் அவ்வளவு எளிதானது அல்லவாம்.

அப்படியே அறிவதற்கு அரியவனாய் இருப்பவனாக இருப்பினும், தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினைக் கொண்டவனாய் இருக்கிறானாம்!. (அவன் கருணையே அவனை அடைவதற்கான கருவி!)

பிறைச் சந்திரனையும் கங்கையையும் தன் திருச்சடையில் அணிந்து பல்லுயிர் காக்கும் பண்பைப் பெற்றவனாம்!

அளவிட இயலாத ஒளியினை உடையனாம்!

அரியவன், வேணியன், சோதியன் - இப்படியெல்லாம் பெருமை உடையவன் தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாகவும் இருப்பவன் கூத்தப் பெருமான்.

அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த அவன் திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வோம் என்று அவனெடுத்துக் கொடுத்த அடியினை முடிக்கிறார் சேக்கிழார் பெருமான்.

இப்பாடலில் இறைவனின் இரண்டு நேரெதிர் இயல்புகளைக் கூறுவதைக் கேட்கலாம்.
அறிவதற்கு அரியவனாய் - உருவம் என்று ஒன்று இல்லாதவன் ஆகவும், அதே சமயத்தில் நிலவினையும் நீரினையும் சடைமுடியில் அணிந்தவனாகவும் இருக்கிறான்.

அலகில்(லாத) - அளவிட முடியாத சோதிப் பிழம்பாய் இருக்கிறான். அதே சமயத்தில் - அம்பலத்தில் எப்போதும் ஆடுபவனாகவும் இருக்கிறான்!
---------------------------------------------------------------
இப்போது பாடலை பாடிக் கேட்கலாமா?






--------------------------------------------------------------

இன்ன பிற:
ஜெயமோகன் திண்ணையில் எழுதியது

Saturday, April 26, 2008

கனவில் வந்த கதைகள் : ஆலங்கட்டி மழை

திகாலை...
சுபவேளை...
ஒரு ஓலை வந்தது...
பாட்டொன்று காற்றில் கசிந்து கொண்டிருக்கிறது...
எனக்கெல்லாம், அதிகாலையில் தூக்கத்தில் கனவில் வந்தால்தான் உண்டு!
அட, இன்றைக்கு வந்த கனவினை நினைவிருக்கும் போதே சொல்லி விடுகிறேன்!

ன்றைக்கு ஏகாந்தமானதொரு இடத்தில் இருந்ததாக நினைக்கிறேன். எந்த இடம் என்று சரியாகத் தெரியவில்லை. அப்போதுதான் நன்றாக மழை பெய்து விட்டிருந்தது. கொஞ்சம் வித்யாசமாக ஆலங்கட்டி மழை வேறு. வீட்டைச்சுற்றியும் சின்னஞ்சிறிய கூழாங்கல் அளவிலான பனிக்கட்டிகள். வெளியே வந்து பார்க்கிறேன், வெள்ளை வெளேரென்று, வெள்ளைப்பூக்கள் உலகமாக வீதியெங்கும் இரைந்து கிடக்கின்றன. ஒரு பனிக்கட்டியினை கையில் எடுத்துப் பார்க்கிறேன். மத்தியிலோ வெள்ளை. ஓரங்களில் உருகிக்கொண்டிருக்கும் அந்த பனிக்கட்டி, தன் வெள்ளை நிறத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தது. தன் எல்லைகளை இழப்பதால் அந்த பனிக்கட்டி வருத்தப்படுகிறதா, அல்லது எல்லாமும் ஆன பிரகிருதியுடன் இணைவதில் மகிழ்வடைகிறதா, என வியந்து கொண்டிருந்தேன்.

லங்கட்டிகளில் ஆழ்ந்துபோன என் கவனத்தை இன்னொன்றும் இழுத்தது. அந்த வெள்ளை வீதியில் ஒன்றன்பின் ஒன்றாக வட்ட வடிவத்தில் தடங்கள். ஆலங்கட்டிகளை காயப்படுத்தாமல் நடந்து செல்ல யாரோ பாதை அமைத்தது போல இருந்தது. அதன் அருகே சென்று பார்க்கிறேன். அந்த வட்ட வடிவத் தடத்தில் தண்ணீர் மட்டுமே இருந்தது. பனியெல்லாம் அங்கே உருகி விட்டது போலும். அருகே இருந்த மரத்திலிருந்து ஒரு குச்சியை ஒடித்துக் கொண்டு, அந்த பள்ளத்தில் விட்டுப் பார்க்கிறேன். குச்சி உள்ளே சென்று கொண்டே இருக்கிறது. கிட்டத்தட்ட மூன்றடி ஆழம் இருக்கலாம். இன்னமும் தரை தட்டுப்படவில்லை. இன்னமும் எவ்வளவு ஆழம் இருக்குமோ தெரியவில்லை. இந்த தண்ணீர் நிறைந்த பள்ளத்தினைப் போலவே, தொடர்ந்து வரிசையாக இருந்த பள்ளத்தடங்கள் என் ஆவலை அதிகப்படுத்தியத்தில் வியப்பதற்கில்லை. தொடர் தடங்களாக நிறைந்திருக்கும் இந்தப் பள்ளங்கள் எங்குதான் செல்கிறனவோ என வியந்தேன்.

ந்த தடங்களை தொடர்ந்து செல்வதென முடிவு செய்து நடக்கலானேன். பனிக்கட்டிகளுக்கும், பள்ளத்திற்கும் இடைப்பட்ட இடைவெளியில், காலை அதிகம் ஊன்றி விடாமலும், பட்டும் படாமலும் நடந்தேன். சற்றே நடந்தவுடன், அந்த தடங்கள் முடிவுக்கு வரலாயின - ஒரு குடிசையின் வாசலில். ஆகா, இந்த வீட்டுக்கான பாதை தானா இந்த தடங்கள் என்று எண்ணியவாறு, அந்த வீட்டின் கதவின் மேல் கையை வைக்க தானாக திறந்து கொண்டது. வீட்டினுள் குள்ளமாக ஒருவர் இருந்தார். இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்ற நினைவில், யார் இவர் என்று பார்க்க, உள்ளே நுழைந்தேன். என் வருகையைப் பார்த்து திரும்பிய அவரோ, "என்ன இவ்வளவு நேரம்? உன் கால் பாதங்கள் எல்லாம் பனிக்கட்டிகளால் சுட்டு விட்டதா என்ன?" என்று கேட்டு சிரிக்கலானார்!

வரை இதற்குமுன் பார்த்ததில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன் நான். இதற்குமுன் நாம் பார்த்திராத ஒருவர், நம்மை எதிர்பார்த்திருந்ததுபோல் பேசுகிறாரே என்கிற வியப்பு ஒரு நொடி தோன்றினாலும், அது நெடுநேரம் நீடிக்கவில்லை. அதற்குக் காரணம், அவரது உருவமும் உடையும் - அவைகளே அவரொரு பௌத்த துறவியென சொல்லாமல் சொன்னது. "ஐயா, வெளியே வீதியில் இருந்த தடங்களை தொடர்ந்து வந்தேன். அவை இங்கு வந்து முடிந்தன. தங்கள் வீட்டினுள்ளும் இவை இருக்கின்றவே..." என்றென் வியப்பை அவரிடம் வெளிப்படுத்தினேன். அப்போதுதான் அவர் வீட்டினுள் இருக்கும் அத்தடங்களை கூர்ந்து கவனிக்கலானேன். அந்த தடங்களோ, அந்த வட்ட வடிவத்திலால் ஆன வீட்டின் மையப்புறத்தில் சென்று முடிந்தன. மையத்திலோ இன்னமும் பெரியதாக வட்ட வடிவிலான பள்ளம். என் கண்கள் மையப் பள்ளத்தினை அடைந்ததை தன் பார்வையால் கண்டு கொண்ட அந்த முனி, அதைக்காட்டி "அதோ, அதுவா?, அருகில் சென்று பார்!" என்றார்.

மையப் பள்ளத்தின் அருகே சென்று அதன் அருகில் மண்டியிட்டு சாய்வாக அமர்ந்தேன். துறவியும் அருகில் வரலானார். வீட்டின் வெளியே இருந்த பள்ளங்களைப்போல் இதில் நீரில்லை. ஒருவேளை மழைதான் அவற்றை நிரப்பி இருந்தது போலும். பள்ளத்தில் சதுரப் பட்டையான கற்கள் கறுப்பிலும் வெள்ளையிலும் ஆங்காங்கே இருந்தன. கூர்ந்து கவனித்தால், அந்த சதுரப் பட்டையில் ஒரு பக்கம் வெள்ளையாகவும், இன்னொரு பக்கம் கறுப்பு நிறத்திலும் இருப்பது தெரிந்தது. சில கற்கள் வெள்ளைப்பக்கமாகவும், மற்றவை கறுப்புப் பக்கமாகவும் வெளியே தெரிந்தன. "இந்தக் கற்கள் எதைக் குறிக்கின்றன, சொல் பார்க்கலாம்!" என்றார் துறவி என்னிடம். சமயத்திற்கு ஏற்ப எதாவது சொல்லி வைக்கலாம், என்றவாறு நானும் பதிலளிக்கலானேன். "வெள்ளை மனதில் கர்ம வினைகள் கறுப்பு நிறத்தில்" என்று.

ன்னைப் புன்னகையுடம் ஒரு பார்வை பார்த்துவிட்டு, தன் கையில் குச்சி ஒன்றை அவர் எடுத்துக் கொண்டார். பள்ளத்தில் கீழே குச்சியை நீட்டி, கறுப்புப் பக்கத்தினைக் காட்டியவாறு இருந்து பட்டைக் கற்களை ஒவ்வொன்றாக திருப்பி, வெள்ளைப்பக்கம் தெரியும்படி செய்யதாவாறு, என்னிடம் கேட்டார், "இப்போது?" என்று. "கர்ம வினைகள் களையப் படுகின்றனவோ!?" என்று அவரிடம் திருப்பிக் கேட்டேன். அதற்கும் அவரிடம் புன்னகை மட்டுமே விடையாய் கிடைத்தது. கடைசிக் கல்லினை திருப்பிட முயலும்போது அவரது குச்சி அந்தப் பள்ளத்திலேயே விழுந்து விட்டது. உடனே நான், பள்ளத்தின் கீழிறங்கி அதை எடுக்க எத்தனிக்கலானேன். என்னை தடுத்து நிறுத்திய அவரோ, "வேண்டாம், பள்ளத்தில் அடியில் கனல் நெருப்பு நீறுபூத்தவாறு இருக்கு. கீழே இறங்கினால், உன் கால் பாதங்கள் சுட்டுச் சுண்ணாம்பாகி விடும்" என்று.

ன்னைக் கேட்காமலேயே என் கண்கள் விரிந்தன, அவர் சொன்னதைக் கேட்டு. அவரோ, குனிந்து தன் கைகளை பள்ளத்தில் நீட்டினார். முதலில் அவருக்கு குச்சியோ எட்டவில்லை. ஆனால் அவரது கைகள் தானாக நீண்டிட, குச்சியை கையில் இலாகவமாக எடுத்துக் கொண்டார். பின்னர் கடைசி கல்லையும் அதன் வெள்ளைப் பக்கமாக திருப்பி விட்டுவிட்டு என்னைப் பார்த்து புன்னகைத்தார்!. கடைசி கல்லும் திரும்பியவுடன், அந்தக் கடைசிப் புன்னகையில் எல்லா கற்களும் முழுதும் வெள்ளையாக தெரிந்தன. அண்ட கோடி சராசரங்களெல்லாம் ஒன்றாய் சமைந்திருப்பது போல், அந்தப் பள்ளம் முழுதும் வெள்ளையாக, எங்கும் நிறைந்த ஆனந்த வெளிச்ச வெள்ளத்தில் மூழ்கலானேன், கனவு கலையும் வரை...!

Monday, April 14, 2008

என்ன பிறப்பிதுவோ இராமா? : தியாகராஜர்

'ஏடி ஜன்மமீதி..' என்று தொடங்கும் தியாகராஜ கிருதியின் பொருள்:

என்னப் பிறப்பிதுவோ இராமா?
என்னப் பிறப்பிதுவோ?
எப்போதும் உன்னை அணுகிப்பேசிட இயலாத
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

கோடி மாரனும் ஒன்றுசேர்ந்த
அழகையும் விஞ்சிய அழகா, இராமா -
உன்னை அணுகிப்பேசிட இயலாத
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

பால் வடியும் முகமும், மணிமுத்து மார்பும்
கண்ணெல்லாம் நிறைந்தும்
மனம் நிறைவெய்யாமல்
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

இசையில் திளைப்பவனும்,
இன்னொருவர் மனதை புரிந்து
புரிந்துகொள்பவனும் ஆன இராமனை
மகிழ்ந்தணைத்து மனநிறைவுகொள்ளா
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா,
தியாகராஜரால் போற்றப்பட்டவனே,
விரைவில் உன்னை காணத்
துடிக்குதென் இதயம் - திணரும்
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

-------------------------------------

இராகம் : வராளி

தாளம் : மிஸ்ரசாபு

இயற்றியவர் : தியாகராஜர்

பாடுபவர் : திருமதி. விசாகா ஹரி

-------------------------------------

பல்லவி:
ஏடி ஜன்மமிதி ஹா ஓ ராம
ஏடி ஜன்மமு-இதி ஹா ஓ ராம

அனுபல்லவி:
ஏடி ஜன்மமிதி எந்துகு ௧கலிகெனு
எந்தனி ௨ஸைரிந்து ஹா ஓ ராம (ஏடி)
ஏடி ஜன்மமு-இதி எந்துகு கலிகெனு எந்தனி ஸைரிந்து ஹா ஓ ராம (ஏடி)

சரணம்:
ஸாதி லேனி மார கோடி லாவண்யுனி
மாடி மாடிகி ஜூசி மாடலாடனி தநக்(ஏடி)

ஸாரெகு முத்யால ஹாரயுரமு பாலு
காரு மோமுனு கந்நுலார ஜூடனி தநக்(ஏடி)

இங்கிதமெரிகின ஸங்கீத லோலுனி
பொங்குசு தநிவார கௌகிலிஞ்சனி தநக்(ஏடி)

ஸாகர சயநுனி த்யாகராஜ நுதுனி
வேகமே ஜூடக ௪வேகெனு ஹ்ருதயமு (ஏடி)

திரு. இராமநாத கிருஷ்ணன் அவர்கள் குரலில் இங்கு கேட்கலாம்.

------------------------------------------------
மேலும்:
பக்தியாளர் திரு.சுப்புரத்தினம் ஐயா தமிழ்ப்பாடல் வரிகளுக்கு மெட்டமைத்து, பாட்டாகத் தந்துள்ளார்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்:

Monday, April 07, 2008

எப்போது ஓடுவதை நிறுத்தப் போகிறோம்? & காகிதத்தில் மேகம்

என்ன நடக்கிறது, என்னைச் சுற்றி இருப்பவை என்னவையாய் இருக்கிறது?

எப்போதும் பார்த்துக்கொண்டே இருக்கும் அந்த நீல வானம், ஒளிர் விடும் ஆதவன், அழகான நீர்நிலை அல்லது இனிமையான சோலைவனம் - இப்படியாக நாம் இரசிக்கும் நல்ல விஷயங்களையெல்லாம் - இவற்றை அருகே சென்று தொட்டுப் பார்க்க இயலுமானால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அதற்கு எவ்வளவு தூரம் செல்ல வேண்டும்? எவ்வளவு ஓட வேண்டும்?

மனிதன் வாழ்வதே சந்தோஷத்திற்காகத்தான். அந்த சந்தோஷம், இப்போது, இங்கேயே கிடைக்கக் கூடியது. எங்கேயும் தேடிப் போக வேண்டாம். எவ்வளவு தூரமும் ஓட வேண்டாம். இங்கேயே, இப்போதே, இந்தச் செயல் செய்யும்போதே கிடைக்கக் கூடியது.
ஜென் துறவி திச் நாட் ஹான் சொல்லுவதைக் கேளுங்க:



ஒரு காகித்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள், அதில் உங்களுக்கு என்ன தெரிகிறது?

மேகங்கள் தெரிகிறதா? ஆம், திச் நாட் ஹான் அவர்களுக்கோ, மேகங்கள் தெரிகிறதாம், அவரே சொல்கிறார் பாருங்கள்:

நீங்கள் கவிஞராய் இருக்கக்கூடின்,
மேகக்கூட்டங்கள் உலவிக்கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள் -
இந்தக் காகித் தாளினில்.
மேகங்கள் இல்லாமல், மழை இல்லை.
மழை இல்லாமல், மரங்கள் இல்லை.
மரங்கள் இல்லாமல், நம்மிடம் காகிதம் இருப்பதில்லை.
ஆகவே, இதோ மேகம் இங்கே இருக்கிறது.
மேகமும், காகித்தாளும், ஒன்றுக்கொன்று மிக அருகே...
மரத்திற்கு சூரிய வெளிச்சம் தேவை - அது மரமாய் இருக்க.
இந்தக் காகிதத்தாளை உற்று நோக்கினால்,
அதில் மேகமும்,
சூரிய வெளிச்சமும் மட்டுமல்ல,
ல்லாமும் இருப்பதும் தெரிந்திடும்.

Thursday, April 03, 2008

உனை எப்படி நான் மறப்பேன்? : இதயக் கமலத்தில்...

சென்ற பதிவில் என்னை மறவாமல் இருக்க வேண்டும் என தியாகராஜர் இறைவனிடம் மன்றாடுவதை பைரவி ராகக் கீர்த்தனையில் பார்த்தோம் அல்லவா?

இந்தப் பதிவில் எப்படி மறப்பேன் ஐயா என்கிற உருப்படியினைப் பார்ப்போம். அழகு தமிழில் நிறைவான பாடல்கள் பல படைத்துள்ள கடலூர் எம்.சுப்ரமணியன் அவர்கள் இந்தப் பாடலை எழுதியுள்ளார். அவரது தமிழிசைத் தொண்டு போற்றுதலுக்கு உரியது. 'பாடலீசன்' என்பது அவரது முத்திரை என நினைக்கிறேன். அவருடைய இன்னொரு பாடல் மிகப் பிரபலமானது - இராகமாலிகையில் அமைந்தது - நீங்களே சொல்லுங்களேன்.

இந்தப் பாடலைக் கேட்குமுன் சிறியதொரு முகவுரை: இதயக் கமலத்தில், அனஹதத்தில், தூய அன்பாக மலர்ந்திடும் முருகனை எப்படி மறக்க இயலும்? சந்தோக்ய உபநிடதம் அத்தியாயம் எட்டில் (1.3) சொல்லப்பட்டுள்ளதை இங்கே நினைவு கூறுகிறேன்: "இந்த இதயக் கமலத்தில் தான் எல்லாமும் இருக்கிறது. சொர்கமும், பூமியும் இங்கேதான் இருக்கிறது. ஆகாசமும், நெருப்பும், காற்றும், சூரியனும், சந்திரனும், சுடர் விடும் விண்மீன்களும் இங்கேதான் இருக்கின்றன."
இப்படி எல்லாமுமாய் இருக்கும் தூய சச்சிதானந்தம், தூய அன்பில் துலங்கிடும். துலங்கித் துலங்கி துளிர் விடும். துளிர் துளிர் விட, தூர்ந்து வளரும். தூர்ந்து வளர வளர, துரியம் அதை அடைந்திட பாதை தனைக் காட்டிடும்.
இதயக் கமலத்தில் அன்பே வடிவாய், ஆனந்தப் புன்னகையுடன், அருந்தவப் புதல்வனாய், பழனியப்பனாய், அவன் அருள் வேண்டி, இந்தப் பாடலை படித்திடுவோம்:

எடுப்பு:
இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா? - முருகா - என்
இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா?

தொடுப்பு:
பதமலரை தினம் இசை என்னும் மலராலே
பாடிப் பணிந்தேனய்யா - பழனியப்பனே...

முடிப்பு:
பட்டம் பதவி என்ற புகழறியேன் - நான்
பட்டம் பதவி என்ற புகழறியேன்... கந்தக்
கோட்டமே சதமென்று நம்பி வந்தேன்
கஷ்டமே வந்தாலும்... முருகா...
கஷ்டமே வந்தாலும், கை தூக்கி விடுவாயே
கண்கண்ட தெய்வமே - பாடலீசன் குமரா...

என் இதயக் கோயிலில் வசித்திடும் உன்னையே
எப்படி மறப்பேன் ஐயா, முருகா...

----------------------------------
இராகம்: சூத்ரதாரி (நடபைரவி ஜன்யம்) (ஸ ரி2 ம ப த1 ஸ் - ஸ் த1 ப ம ரி2 ஸ)
தாளம்: ஆதி
இயற்றியவர்: கடலூர் எம்.சுப்ரமணியம்
பாடுபவர்: நித்யஸ்ரீ மஹாதேவன்

இதயக் கோயிலில் வசித்திடும்


[play]