Tuesday, December 22, 2009

அம்பா, எத்தனை பெயர் உனக்கு!


முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளைப் பார்த்தால், பல கீர்த்தனைகளில் - பல்லவி, அனுபல்லவி, சரணம் - எனப் பல இடங்களில் அம்பாளின் லலிதா சஹஸ்ரநாமாவளிகள் இடம் பெறுவதைப் பார்க்கலாம். அவற்றை இங்கே பட்டியலிடலாமா!

பாடல் : (இராகம்) : அம்பாளின் பெயர்
-----------------------------------------
1) சிவகாமேஸ்வரீம் சிந்தயேஹம்: (கல்யாணி) : சிதக்னிகுண்டஸம்பூதா (சித் எனும் தன்னுள் - அக்னி குண்டத்தில் இருந்து வரும் தீ போல, எப்போதும் எழுந்து கொண்டிருப்பவள் - இதுதான் பாரதி பாடும் அக்னிக்குஞ்சோ!)


2) மாதங்கி ஸ்ரீராஜராஜேஸ்வரி: (ரமாமனோகரி) : ரணதிங்கிணிமேகலா


3) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) மற்றும் நீலோத்பலாம்பிகாயே (கேதாரகௌளை) மற்றும் காசி விசாலாக்ஷி (கமகக்கிரியா): கலிகல்மஷநாசினி
 

4) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : சாம்ராஜ்யதாயினி
 

5) பஞ்சாசத்பீடரூபிணி : (தேவகாந்தாரம்) : பஞ்சாசத்பீடரூபிணி

6) மதுராம்பாயாஸ் தவ தாஸோஹம் : (பேகடா) : மாத்ருகாவர்ணரூபிணி


7) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : பாடலிகுசுமப்பிரியை


8) அவ்யாஜகருணா காமாக்ஷி : (சாலங்கநாடை) : சவ்யாபசவ்யமார்க்கஸ்தாயி




9) திரிபுரசுந்தரி சங்கரி குருகுஹ ஜனனி: (சாமா) : சாமகானப்பிரியகரி


10) ஏகாம்பரேஸ்வர நாயகீம் : (சாமா) : வாஞ்சிதார்த்த ப்ரதாயினி


11) ஸ்ரீமதுராம்பிகையா : (அடணா) : நாமாபாரயணப்பிரியா : (நாமத்தினைப் பாராயணம் பண்ண வேறென்ன வேண்டும்!)

12) பாலாம்பிகாயை நமஸ்தே வர தாயை : (நாட குறிஞ்சி) : ஸ்ரீ ஹரித்ரான்னரசிகாயை


13) நீலோத்பலாம்பிகாயே : (கேதாரகௌளை) : மூலமந்திராத்மிகை 


14) அபயாம்பிகாயை : (யதுகுலகாம்போதி) : குடகுல்பா 


15) ஸ்ரீமாத சிவவாமாங்கே : (பேகடா) : ஸ்ரீமஹாராக்ச்ஜை


16) அம்ப நீலாயதாஷி : (நீலாம்பரி) : புவனேஸ்வரி


17) ஸ்ரீமதுராபுரி : (பிலஹரி) : நடேஸ்வரி

18) காமாஷி காமகோடி பீடவாசினி: (சுமத்யுதி) : காத்யாயினி


19) பரதேவதா ப்ரஹத்குஜாம்பா : (தன்யாசி) : சுவாசினி


20) பர்வதராஜகுமாரி : (ஸ்ரீரஞ்சனி) : கௌளினி




~~~~
லலிதா சஹஸ்ரநாமவளியில், அம்பாளை என்னவெல்லாம் பெயர்களில் பாடிப் பரவசம் கொள்கிறோம்! நாமவளியின் தாக்கத்தில் விளைந்த பாடல், அடியேன் புனைந்தது:

எடுப்பு:
எத்தனை பெயர் உனக்கு - அம்பா,
எத்தனை பெயர் உனக்கு!

தொடுப்பு:
பக்தனும் சாக்தனாய் உனைப்பாட - ஓராயிரம்
பெயர் உனக்கே, சக்தியே!
(எத்தனை பெயர் உனக்கு!)

முடிப்பு:
இரும்பாய் இருந்திட்ட மனத்தையும், அம்பா,
கரும்பு வில்லாய் வளைத்திட்டாய்.
திரையாய் படிந்த வினையெல்லாம்
நுரையாய் பிரிந்திட வழிசெய், சச்சிதானந்தமே!
(எத்தனை பெயர் உனக்கு!)

~~~~
பிற்சேர்க்கை:

திரு.சுப்புரத்தினம் அவர்கள் பாடலை இசையமைத்துப் பாடியுள்ளார்கள்:



~~~~

லலிதா சஹஸ்ரநாம ஸ்தோத்திர சுலோகங்கள் மொத்தம் 1008. அவற்றில் 108 எண்ணிக்கையை, தமிழ்ப்பொருளுடன் பார்ப்போமா, இங்கே:
~~~~

ஓம் ஸ்ரீமாத்ரே நம;
ஓம் சீர்மிகு அன்னையே போற்றி

ஓமோம் தே(3)வகார்ய-ஸமுத்(4)யதாயை நம:
ஓம் தாருறு தேவர்க்குச் செயல்பட முனைவோளே போற்றி

ஓம் தே(3)வர்ஷிக(3)ண ஸங்கா(4)த ஸ்தூயமானாத்ம வைப(4)வாயை நம:
ஓம் தேவமுனிக் கூட்டங்கள் துதிசெய்யும் சிறப்புடையாளே போற்றி

ஓம் ப(4)க்தஸௌபா(4)க்(3)யதா(3)யின்யை நம:
ஓம் அன்பருக்கு நல்லவெல்லாம் அருள்செய வல்லாளே போற்றி

ஓம் ப(4)க்தி ப்ரியாயை நம:
ஓம் பக்திதனை விரும்புவாளே போற்றி

ஓம் ப(4)யாபஹாயை நம:
ஓம் பயத்தினைப் போக்குவாளே போற்றி

ஓம் ராக(3)மத(2)ன்யை நம:
ஓம் ஆசை தன்னைக் கெடுப்பவளே போற்றி

ஓம் மத(3)நாசின்யை நம:
ஓம் செருக்கெலாம் ஒழிப்பவளே போற்றி

ஓம் மோஹநாசி(H)ன்யை நம:
ஓம் மதிமயக்கம் போக்குவாளே போற்றி

ஓம் மமதாஹந்த்ர்யை நம
ஓம் மமதையை அழிப்பவளே போற்றி

ஓம் பாபநாசி(h)ன்யை நம:
ஓம் பாபங்களை ஒழிப்பவளே போற்றி

ஓம் க்ரோத(4)சமன்யை நம:
ஓம் கோபங்களை அடக்குவாளே போற்றி

ஓம் லோப(4)நாசி(h)ன்யை நம:
ஓம் பேராசை அழிப்பவளே போற்றி

ஓம் ஸம்சயக்(4)ன்யை நம:
ஓம் ஐயங்களைப் போக்குவாளே போற்ற

ஓம் ப(4)வநாசி(h)ன்யை நம:
ஓம் பிறவிகளை நீக்குவாளே போற்றி

ஓம் ம்ருத்யுமத(2)ன்யை நம:
ஓம் மரணத்தைப் போக்குவாளே போற்றி

ஓம் து(3)ர்கா(3)யை நம:
ஓம் துர்கா தேவியே போற்றி

ஓம் து(3):கக(2)ஹந்த்ர்யை நம:
ஓம் அன்பர் துக்கம் துடைப்பவளே போற்றி

ஓம் ஸுக(2)ப்ரதா(3)யை நம:
ஓம் சுகம்பல அருளுபவளே போற்றி

ஓம் து(3)ஷ்டதூ(3)ராயை நம:
ஓம் கெட்டவர்க்கு எட்டாதவளே போற்றி

ஓம் து(3)ராசாரச(h)மன்யை நம:
ஓம் தீயொழுக்கம் அடக்குவாளே போற்றி

ஓம் தோ(3)ஷவர்ஜிதாயை நம:
ஓம் தேரும் குற்றமற்றவளே போற்றி

ஓம் ஸர்வக்ஞாயை நம:
ஓம் எல்லாமும் அறிந்தவளே போற்றி

ஓம் ஸமானாதி(4)கவர்ஜிதாயை நம:
ஓம் ஒப்பாரும் மிக்காரும் ஓரிடத்தும் இல்லாதாளே போற்றி

ஓம் ஸர்வமந்த்ரஸ்வரூபிண்யை நம:
ஓம் எல்லாமந்திரவடிவாயும் இருப்பவளே போற்றி

ஓம் ஸர்வயந்த்ராத்மிகாயை நம:
ஓம் எல்லா இயந்திரத்துள்ளுற்று ஓங்குவாளே போற்றி

ஓம் ஸர்வதந்த்ர-ரூபாயை நம:
ஓம் எல்லா தந்திரமும் ஆனவளே போற்றி

ஓம் மஹாலக்ஷ்ம்யை நம:
ஓம் மஹாலக்ஷ்மியே போற்றி

ஓம் மஹாபாதக-நாசி(h)ன்யை நம:
ஓம் மாபாதகம் தீர்ப்பாளே போற்றி

ஓம் மஹாத்ரிபுரஸுந்த(3)ர்யை நம:
ஓம் முப்புரம் போற்றும் ஒப்பற்ற பேரழகியே போற்றி

ஓம் சராசர-ஜகந்நாதாயை நம:
ஓம் அசையும் அசையா உலகுகளின் தலைவியே போற்றி

ஓம் பார்வத்யை நம:
ஓம் மலைமகளே போற்றி

ஓம் ஸ்ருஷ்டிகர்த்ர்யை நம:
ஓம் படைப்பின் தொழிற்குரியாளே போற்றி

ஓம் கோ(3)ப்த்ர்யை நம:
ஓம் காக்கும் செயல்புரிவாளே போற்

ஓம் ஸம்ஹாரிண்யை நம:
ஓம் ஒடுக்கும் வினையுடையாளே போற்றி

ஓம் திரோதா(4)னகர்யை நம:
ஓம் மறைத்தலைச் செய்திடுபவளே போற்றி

ஓம் அனுக்(3)ரஹதா(3)யை நம:
ஓம் பேரருள் செய்திடுவாளே போற்றி

ஓம் ஆப்(3)ரஹ்மகீட-ஜனன்யை நம:
ஓம் பிரமன் முதலாகப் புழுக்கள் ஈறாக அனைத்தையும் ஈன்றவளே போற்றி

ஓம் வர்ணாச்(H)ரம-விதா(4)யின்யை நம:
ஓம் வருணாசிரமம் வகுத்தவளே போற்றி

ஓம் நிஜாஜ்ஞாரூப-நிக(3)மாயை நம:
ஓம் தன் ஆணை வடிவுடைய மறைகளைத் தந்தவளே போற்றி

ஓம் புண்யாபுண்ய-ப(2)லப்ரதா(3)யை நம:
ஓம் அறப்பவச் செயல்களில் பயன் தருபவளே போற்ற

ஓம் ராக்ஷஸக்(4)ன்யை நம:
ஓம் அரக்கரை அழிப்பவளே போற்றி

ஓம் கருணாரஸ-ஸாக(3)ராயை நம:
ஓம் கருணை வெள்ளப் பெருங்கடல் ஆனாளே போற்றி

ஓம் வேத(3)வேத்(4)யாயை நம:
ஓம் அருமறையால் புலப்படுவாளே போற்றி

ஓம் ஸதா(3)சாரப்ரவர்த்திகாயை நம:
ஓம் நன்னெறியதனில் நடத்திட வைப்பாளே போற்றி

ஓம் ஸத்ய:-ப்ரஸாதின்யை நம:
ஓம் உடனருள் புரிபவளே போற்றி

ஓம் சி(h)வங்கர்யை நம:
ஓம் மங்கலம் செய்பவளே போற்றி

ஓம் சி(h)ஷ்டேஷ்டாயை நம:
ஓம் முறைவழி நடப்பவர் திறத்து அன்பு உடையவளே போற்றி

ஓம் சி(h)ஷ்டபூஜிதாயை நம:
ஓம் முறைவழி நடப்போரால் வழிபடப் பெற்றவளே போற்றி

ஓம் காயத்ர்யை நம:
ஓம் காயத்திரியாளே போற்றி

ஓம் நிஸ்ஸீம-மஹிம்னே நம:
ஓம் எல்லையே இல்லாத பெருமைகள் படைத்தவளே போற்றி

ஓம் ஸமஸ்த-ப(4)க்த-ஸுகதா(3)யை நம:
ஓம் அனைத்தான பக்தர்க்கும் நற்சுகங்கள் தந்திடுவாளே போற்றி

ஓம் புண்யலப்(4)யாயை நம:
ஓம் புண்ணியத்தால் உறற்குரியாளே போற்றி

ஓம் ப(3)ந்த(4)மோசன்யை நம:
ஓம் பிறவியாம் கட்டினை அறுப்பவளே போற்றி

ஓம் ஸர்வவ்யாதி(4)ப்ரச(h)மன்யை நம:
ஓம் நோயனைத்தும் அடக்குவாய் போற்ற

ஓம் ஸர்வம்ருத்யு-நிவாரிண்யை நம:
ஓம் மரணமெலாம் தடுப்பவளே போற்றி

ஓம் கலிகல்மஷ-நாசின்யை நம:
ஓம் கலியின் குற்றம் கடிவாய் போற்றி

ஓம் நித்யத்ருப்தாயை நம:
ஓம் யாண்டும் மனநிறைவுடையவளே போற்றி

ஓம் மைத்ர்யாதி(3)-வாஸநாலப்(4)யாயை நம:
ஓம் மைத்திரீ முதலான நினைப்பருபாஸனையால் அடைதற்குரியோய் போற்றி

ஓம் ஹ்ருதயஸ்தாயை நம:
ஓம் இதயத்தே நிற்பவளே போற்றி

ஓம் தை(3)த்யஹந்த்ர்யை நம:
ஓம் அரக்கரை அழித்திடுவோய் போற்றி

ஓம் கு(3)ருமூர்த்யை நம:
ஓம் குருவின் திருவடிவே போற்றி

ஓம் கோ(3)மாத்ரே நம:
ஓம் காமதேனு வடிவத்தோய் போற்றி

ஓம் கைவல்யபத(3)-தா(3)யின்யை நம:
ஓம் நாற்பதமும் அருள்பவளே போற்றி

ஓம் த்ரிஜக(3)த்(3)-வந்த்(3)யை நம:
ஓம் மூவுலகும் வழிபடத் தக்கவளே போற்றி

ஓம் வாக(3)தீ(4)ச்(h)வர்யை நம:
ஓம் குலவு சொல் தலைவியே போற்றி

ஓம் ஜ்ஞாநதா(3)யை நம:
ஓம் பேரறிவைத் தந்திடுவாய் போற்றி

ஓம் ஸர்வவேதா(3)ந்த- ஸம்வேத்(3)யாயை நம:
ஓம் அனைத்தான மறைமுடிகளால் அறிதற்குரியாளே போற்றி

ஓம் யோக(3)தா(3)யை நம:
ஓம் யோகத்தைத் தருபவளே போற்றி

ஓம் நிர்த்(3)வைதாயை நம:
ஓம் இரண்டற நிற்பவளே போற்றி

ஓம் த்(3)வைதவர்ஜிதாயை நம:
ஓம் இரண்டாம் நிலையினை இயல்பிலே நீக்கினோய் போற்றி

ஓம் அன்னதா(3)யை நம:
ஓம் அன்னமளிப்போய் போற்றி

ஓம் வஸுதா(3)யை நம:
ஓம் பெருங்செல்வம் மிகத்தருவோய் போற்றி

ஓம் பா(4)ஷாரூபாயை நம:
ஓம் மொழிகளின் வடிவமே போற்றி

ஓம் ஸுகாராத்(4)யாயை நம:
ஓம் எளிதாய் வழிபடற்குரியாய் போற்றி

ஓம் ராஜராஜேச்(h)வர்யை நம:
ஓம் அரனைத் தரசாக்கும் மேலான தலைவியே போற்றி

ஓம் ஸாம்ராஜ்யதாயின்யை நம:
ஓம் சக்ரவர்த்தி பதவியை அடியார்க்கு அளிப்பவளே போற்றி

ஓம் ஸர்வார்த்த-தா(3)த்ர்யை நம:
ஓம் அறப்பயன் அனைத்தும் அளித்திட வல்லாய் போற்ற

ஓம் ஸச்சிதா(3)னந்த ரூபிண்யை நம:
ஓம் உண்மை அறிவானந்த வடிவினாய் போற்றி

ஓம் ஸரஸ்வத்யை நம:
ஓம் கலைமகள் வடிவினளே போற்றி

ஓம் த(3)க்ஷிணாமூர்த்தி-ரூபிண்யை நம:
ஓம் தென்முகக் கடவுளாய்த் திகழ்ந்திடும் தேவியே போற்றி

ஓம் ஸநகாதி(3)-ஸமராத்(4)யாயை நம:
ஓம் சனகர் முதலியோர் பூசிக்கும் வடிவினளே போற்றி

ஓம் நாமபாராயணப்ரீதாயை நம:
ஓம் தம்பெயர் ஆயிரம் ஒன்றியே கூறிட உளம் கசிவுறுவளே போற்றி

ஓம் மித்யாஜக(3)த(3)தி(4)ஷ்டானாயை நம:
ஓம் பொய்யான உலகுகளின் மெய்யான இருப்பிடமே போற்றி

ஓம் ஸ்வர்ககா(3)பவர்க(3)தா(3)யை நம:
ஓம் சொர்க்கமும் மோட்சமும் தந்திட வல்லவளே போற்றி

ஓம் பரமந்த்ர-விபே(4)தி(3)ன்யை நம:
ஓம் பகைவர் ஏவிடும் மந்திரம் மாய்ப்பவளே போற்றி

ஓம் ஸர்வாந்தர்யாமிண்யை நம:
ஓம் அனைத்துயிர் உள்ளத்தும் உறைபவளே போற்றி

ஓம் ஜன்மம்ருத்யு-ஜ்ரா தப்த-ஜன-விச்(h)ராந்தி தா(3)யின்யை நம:
ஓம் பிறப்பொடு இறப்பும் மூப்பு முற்று இளைத்தார்க்கு ஓய்வினைத் தந்தவளே போற்றி

ஓம் ஸர்வோபநிஷது(3)த்(3) கு(4)ஷ்டாயை நம:
ஓம் உபநிட நூலெல்லாம் பறைசாற்றும் சிறப்புடையாளே போற்றி

ஓம் லீலாவிக்(3)ரஹ-தா(4)ரிண்யை நம:
ஓம் விளையாட்டாய்ப் பற்பல வடிவுகள் எடுப்போய் போற்றி

ஓம் அஜாயை நம:
ஓம் பிறவியில்லாதவளே போற்றி

ஓம் க்ஷயவிநிர்முக்தாயை நம:
ஓம் முடிவென்பதில்லாதவளே போற்றி

ஓம் க்ஷிப்ரப்ரஸாதி(3)ன்யை நம:
ஓம் விரைவினில் அருள்மிகத் தருபவளே போற்றி

ஓம் ஸம்ஸாரபங்க-நிர்மக்(3)ன ஸமுத்(3)த(4)ரண-பண்டி(4)தாயை நம:
ஓம் சம்சாரச் சேறழுந்தி மூழ்கினாரை மேலேற்றும் திறன் மிக்காள் போற்றி

ஓம் த(4)னதா(4)ன்ய-விவர்தி(4)ன்யை நம:
ஓம் செல்வமொடு தானியங்கள் வளர்த்திடுவாள் போற்றி

ஓம் தத்வமர்த்தஸ்வரூபிண்யை நம:
ஓம் அதுநீ ஆகிய ஐக்கியப் பொருளாய் ஆனவளே போற்றி

ஓம் ஸர்வாபத்(3)-விநிவாரிண்யை நம:
ஓம் அனைத்துத் துயரையும் அடியோடழிப்பவளே போற்றி

ஓம் ஸ்வபா(4)வ-மது(4)ராயை நம:
ஓம் இயல்பினில் இனிமை மிக்கவளே போற்றி

ஓம் ஸதா(3)துஷ்டாயை நம:
ஓம் உவப்புடன் எப்போதும் திகழ்ந்திடும் தன்மையாளே போற்றி

ஓம் த(4)ர்மவர்ததி(4)ன்யை நம:
ஓம் அறம்வளர் செல்வியே போற்றி

ஓம் ஸுவாஸின்யை நம:
ஓம் நாயகனைப் பிரியாதாளே போற்றி

ஓம் ஸுவாஸின்யர்ச்சனப்ரீதாயை நம:
ஓம் சுவாசினிப் பெண்டிர் வழிபாட்டில் மிக மகிழ்பவளே போற்றி

ஓம் வாஞ்சிதார்த்தப்ரதா(3)யின்யை நம:
ஓம் வேண்டிய வேண்டியார்க்கு வேண்டியாங்கு அளிப்பவளெ போற்றி

ஓம் அவ்யாஜ- கருணா மூர்த்தயே நம:
ஓம் எதிர்பார்ப்பு இல்லாத பேரருளின் திருவுருவே போற்றி

ஓம் அஜ்ஞானத்(4)வாந்த-தீ(3)பிகாயை நம:
ஓம் அறியாமை இருளகற்றும் அழகுசுடர் நற்றீபமே போற்றி

ஓம் ஆபா(3)ல-கோ(3)ப-விதி(3)தாயை நம:
ஓம் இளையர் முதல் இடையர் வரை யாவரும் நன்கறிந்தவளே போற்றி

ஓம் ஸர்வானுல்லங்க்(4)ய-சா(h)ஸனாயை நம:
ஓம் மீறுதற்கு இயலாத அணைகள் இடவல்லாளே போற்றி

ஓம் ஓம் லலிதாம்பி(3)காயை நம:
ஓம் அழகுமிகு லலிதாவாம் அப்பிகையாய்த் திகழ்வாளே போற்றி

எல்லாம் வல்ல அன்னையே போற்றி!

~~~~
நன்றி:
லலிதா சஹஸ்ரநாமம் தமிழாக்கம் - இணையத்தில் கிடைக்கப்பெற்றது.
முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகள் - N.பார்த்தசாரதி அவர்கள்

Sunday, December 06, 2009

மார்கழி : அரங்கர் வரார் பராக் பராக்!

பராக்! பராக்! என்கிற கூக்குரலைக் கேட்டு மக்கள் அனைவரும் அக்குரல் வந்த திசையினில் திரும்பிப் பார்க்கின்றனர்! கட்டியங்காரர்களின் குரல் வந்த திசையில் பார்த்தால், ஆகா, அங்கே, அழகானதொரு பரிமேல் என்ன கம்பீரத்தோடு அமர்ந்திருக்கிறார் அழகர் அரங்க நாதர்! தகிக்கும் தங்கக் குதிரையில், தனக்கே உரிய தோரணையோடு அல்லவா வீற்றிருக்கிறார்! வீதிஉலா இதமாய் இருக்க, காவிரிக் காற்று, அவருக்கு சாமரமாய் வீசுகிறது போலும்!

நாதஸ்வரம் முதலான மங்கள வாத்தியங்கள் முழங்க, அரங்கநாதர் அசைந்தாடி வரும் இந்த அழகான திருவீதி உலாக் காட்சியை, தெற்கு சித்திரை வீதியில் இருந்து, மகான் ஒருவர் கண்டு தரிசித்துக் கொண்டிருக்கிறார். அவர் வேறாருமில்லை, சாட்சாத் தியாகராஜரே. அரங்கனின் திருபவனி வீதி வழி வர, ஒவ்வொரு வீட்டிலும் நின்று உபசாரங்களைப் பெற்றுக்கொண்டும், கற்பூர ஆரத்தியினை வழங்கிக்கொண்டும், நடந்தேறிக் கொண்டிருந்தது அவ்வுலா.

தீவட்டிகளின் ஒளியில், தியாகராஜர், தான் காணும் கண்கொளாக் காட்சியை, தித்திக்கும் இறையனுபவத்தினை, அழகான தோடி இராகக் கீர்த்தனையாய் வடிக்கிறார். அப்பாடலினின் பல்லவி 'ராஜு வெடலெ ஜூதாமு ராரே கஸ்தூரி ரங்க' என்பதாகும். பாடலின் சாகித்ய வரிகளுக்கு இங்கே அணுகவும்.

இப்போ, இந்தப் பாடலை தமிழில் மொழி பெயர்த்துப் பார்க்கலாமா!

பல்லவி:
கஸ்தூரி ரங்கனின் களையான பவனியைக் கண்டு களிப்போமே!

அனுபல்லவி:
திகழும் நவரத்தினங்கள் மின்ன,
திருவரங்க நாதன் பவனி கண்நிறைய,
பரிமேல் அமர்ந்த சுகந்தனை
பாருலக வேந்தரும் சேவிக்க,
(கஸ்தூரி ரங்கனின்..)

சரணம்:
காவிரிக் கரையில் புண்ணியபுரி திருவரங்கமதில்
சீரார்ந்த சித்திரை வீதிதனில் அலங்காரங்களுடன்
அரங்கனின் பவனி அற்புதக் காட்சியன்றோ!
விண்ணுலகத் தேவரும் மலர்த்தூவி வழிபட,
தியாகராஜனும் பாடிப்பரவசம் கொள்ள
(கஸ்தூரி ரங்கனின்...)

கன்னியர்கள் பலரும், தங்களை ஆண்டாளாக பாவித்துக் கொண்டு, அரங்கனை சூழ்ந்து நிற்கிறார்கள். கன்னியர்கள் மட்டுமா, இதர பெண்டிரும், அரங்கனை தங்கள் வீட்டுப்பையனாகவே தரித்துக் கொண்டு, அவனது வீதிஉலாவினை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் தொலைவில் இருந்து மட்டுமே தியாகராஜரால் காண முடிகிறது. கூட்டத்தைத் தாண்டி, அருகில் சென்று சடாரியினையும், துளசி பிரசாதத்தினையும் பெற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை. வருத்தத்துடன், அந்த இடத்திலேயெ நின்றுகொண்டு இருக்க, திடீரென வீதிஉலாவும் நின்று விடுகிறது. வாகனத்தை தூக்குபவர்களாலோ ஒரு அடிகூட மேலும் எடுத்து வைக்க இயலவில்லை. திசைதோஷம் ஏதும் உள்ளதோ என்றெண்ணி, அர்சகர்கள் கோயில் தேவதாசிகளை அழைத்து ஆகம சாஸ்திரங்களில் உள்ளபடி அந்த திசைக்கான நடனத்தினை ஆடச் சொல்கிறார்கள். அதனால் ஒரு மாற்றமும் இல்லை. திடீரென, அர்ச்சகர் ஒருவருக்கு ஆவேசம் ஏற்பட, அவர் தியாகராஜர் இருந்த இடத்தைக் காட்டி, ஸ்ரீரங்கநாதரின் சிறந்த பக்தன் ஒருவன், அருகில் வர இயலாமல் தவிப்பதை எடுத்தியம்ப, மற்றவர்கள் அவரை அருகில் அழைத்து வந்து, அவருக்கு பிரசாதங்களை வழங்கிட, பின்னரே திருபவனி தொடர்ந்ததாம். இச்சம்பவத்தினை 'வினராதா நா மனவி...' என்கிற தேவகாந்தாரி இராகப் பாடலில் தியாகராஜர் குறிப்பிடுவதைக் காணலம். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

இவ்வாறாக, அரங்கநாதன், தன்னை தரிசிக்க திருவையாற்றில் இருந்து தியாகராஜர் வந்திருக்கின்றார் என்பதனை அந்த ராஜவீதியில் குழுமியிருந்த அனைவருக்கும் அறிவித்ததாகக் கொள்ளலாம். அன்று மாலை, சிறப்பு முத்தாங்கி சேவையில் கலந்துகொள்ள, கோயில் அதிகாரிகள், தியாகராஜரை அழைத்துவர, அங்கே தியாகராஜர், சந்நிதியில் பாடிய பாடல், காம்போதி இராகக் கிருதி 'ஓ ரங்கசாயி..', மிகவும் பிரபலமான பாடல். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

ஓ ரங்கசாயி பாடலை, எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடிட, ராகா.காமில் கேட்டிட சுட்டி இங்கே. சபாஷ் சொல்லவைக்கும் சங்கதிகளில் காம்போதியின் அழகை இன்னும் இனிமையாக யாரேனும் தரக்கூடுமோ? ஓ என்ற ஒற்றைச் சொல்தான் எத்தனை விதமான ஸ்வரங்களில் வலம் வருகிறது!



இந்த பாடலை, தமிழிலும் பார்க்கலாமா?

பல்லவி:
ஓ ரங்க விமான சயனா - நான் அழைத்தால்
ஓ என நீயும் வாராயோ?

அனுபல்லவி:

சாரங்கம் தரித்தவனும் உனைக்கண்டு
கைலாயபதி ஆனானோ,
(ஓ ரங்க விமான சயனா...)

சரணம்:
பூலோக வைகுண்டமே திருவரங்கமென
பெருமிதமும் நீயே கொண்டு, ஸ்ரீதேவியுடன்
குலவிக்கொண்டிருந்தால், எம்
குறைகளைக் களைவது எப்போது?

மற்றவர் உயர்வை பொறுக்கா
மானிடரிடை துயர்பல பெற்றநான்
நின்திருஉருவினையும் முத்துமார்பினையும்
காண வந்தேனே, தியாகராஜனின்
இதயமெங்கும் அலங்கரித்தவனே,
(ஓ ரங்க விமான சயனா...)

பின்னர் மேலும் இரண்டு கிருதிகளையும் அவர் இயற்றிட, அவையானவை: சூதாமு ராரே எனும் ஆரபி இராகக் கிருதி மற்றும், கருண ஜூடவய்ய என்கிற சாரங்கா இராகப்பாடல். இந்த ஐந்து பாடல்களையும் சேர்த்து, "ஸ்ரீரங்க பஞ்சரத்தினம்" என்று வழங்குவர்.

இந்த ஸ்ரீரங்க பஞ்சரத்தின கீர்த்தனைகளை கேட்கையில், ஆதி சங்கரர் இயற்றிய ரங்கநாத அஷ்டகம் தனையும் நினைவு கூறாமல இருக்க இயலாது. பாடகர் பலரும் ரங்கநாத அஷ்டகத்தின் ஒரிரண்டு சுலோகங்களை விருத்தமாக பாடிப்பின், ஓ ரங்க சாயி பல்லவியினைத் துவங்குவார். தியகராஜரும் 'ரங்க சாயி' எனச்சொல்வது மட்டுமல்ல. 'காவேரி தீரே, கருணா விலோலே...' போன்ற அஷ்டக வரிகளையும் தியாகராஜரின் சாகித்யத்தோடு ஒப்பு நோக்கலாம்.

ரங்கநாத அஷ்டகத்தில் இருந்து சில சுலோகங்களை இங்கு விருத்தமாகப் பாடக் கேட்கலாம்:
(அருணா சாய்ராம் அவர்கள் பாடிட)