Showing posts with label தியாகராஜர். Show all posts
Showing posts with label தியாகராஜர். Show all posts

Monday, August 10, 2015

தேனும் பாலும் போலே

இசை கேட்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டி உணர்வது!

சில நாட்களுக்கு முன் புல்லாங்குழல் இசையில் மகராஜா சுவாதி திருநாள் இயற்றிய "தேவ தேவ கலயாமி" என்று தொடங்கும் சமஸ்கிருத பாடலைக் கேட்டுக்கொண்டு இருக்கையில் அதே போல அமைந்த தமிழ்ப் பாடலை கேட்கும் உணர்வு ஏற்பட்டது தற்செயலா அல்லது இயற்கையா?

பாடுபவர் : கே.ஜே.ஜேசுதாஸ்




இரண்டு பாடல்களின் இராகமும் ஒன்றேயாக அமைந்தது அப்பாடல்களின் வடிவமைப்பின் ஒற்றுமையா? அல்லது மாயாமாளவ கௌளை இராக சொரூபமா? இசைக் கருவியில் கேட்டதன் விளைவா? வாய்ப் பாட்டினை விட இசைக் கருவியில் இழைந்தோடும் இசை இன்னும் இனிதா? "உடல் பொருள் ஆனந்தி" நாவலில் ஜாவர் சீதாராமன் இந்த இராகத்தின் உருக்கத்தினை விவரித்ததாக நினைவிருக்கிறது.

வாசிப்பவர்: புல்லாங்குழலில் சஷாங்க் சுப்ரமணியம்



இப்பாடலில் சரணம் முடிந்து பல்லவி தொடங்கும் இடங்களில் கோபால கிருஷ்ண பாரதி இயற்றிய "சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்" என்னும் பாடலை ஒத்து இருப்பது தெரிந்தது.

குறிப்பாக,
தேனும் பாலும் போலே சென்று - தேரடியில் நின்று கொண்டு
சிவலோக நாதனை சேவித்திடுவோம் வாரீர்
என்கிற வரிகள் "தேவ தேவ கலயாமி" பாடலில் இல்லாவிட்டாலும் இருப்பதுபோல உணர முடிந்தது.

பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்



தியாகராகரின் "துளசி தளமுலசே" பாடலை எம்.எஸ் அம்மா பாடிக் கேட்கையில் அதே உணர்வுகள் நீடிப்பது தெரிகிறது.

இதே பாடலைப் போலவே அமைந்த திரைப்பாடல் ஒன்று பட்டினத்தார் படத்தில் இருந்து: (நிலவே நீ இந்த சேதி சொல்லாயோ)

இது போல பல திரைப்பட பாடல்கள் இந்த இராகத்தில் இருந்தாலும் "இராம நாமம் ஒரு வேதமே" பாடலோடு நிறைவு செய்திட
நினைவில் இராமன் அன்றி வேறில்லாமல் நிறைவு பெறுவதே இலக்கு.



Friday, December 21, 2012

ராமா நீ யாரோ, எந்த ஊரோ?

இது என்ன கேள்வி? இராம காதையை அறியாதவர் எவரும் உண்டோ?
இராமன் பிறந்த ஊரையும் அவன் பெற்ற பேரையும் அறியாதவர் எவரும் உண்டோ?

அப்படியும் ஒருவர், யாரிந்த இராமன் என வியந்தால், அதற்காக இராம நாடக கீர்த்தனங்களில் அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடலும் உண்டு:

இராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி

(இவனை) யாரோ என்றெண்ணாமலே நாளும்
இவன் அதிசயங்களை சொல்லப் போமோ (யாரோ)

சூராதி சூரன் ராமனெனும் பேரன்
சுகுணா தீரன் ரவிகுல குமாரன் இவன் (யாரோ)

துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே
துடைத்தானே அவளுடல் மாசை - இன்பப்
பெருக்கமென்ன இவன் பிறக்கவே - உலகெங்கும்
பிறந்தது மங்கள ஓசை

பருத்த வில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ
பார்க்க வேணும் என்னோர் ஆசை - இங்கே
வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை

ரகுகுல திலகனாக இராமன் அயோத்தியில் பிறந்தான். சீதையை மணந்தான். பின் பிரிந்தான். காட்டில் அலைந்தான். வானரப் படையோடு இலங்கைக்குச் சென்று இராவண வதம் செய்து, சீதையை மீட்டான். பின் அயோத்தி மீண்டு ஆண்டான்.

ஆனால் உண்மையில் இராமன் யார்? மானுடனா, தேவர்களில் ஒருவனா, இறைவனா?
இவர்களில் யாரும் இல்லை என்பான் இராவணன்.
அளக்கமுடியாத பாற்கடல் போல் வரங்கள் பெற்றவன் இராவணன். ஆகையால், ஒரு மானிடனால் தன்னை இம்மியளவும் அசைக்க இயலாது என்று நம்பியிருந்தான். மானிடன் ஒருவனால் ஆபத்துக்கள் வரலாம் என்று அவனிடம் மற்றவர்கள் சொன்னபோதும் அதை எடுத்தெறிந்தவன், தான் வரங்கள் பெற்றபோதும் தேவர்களால் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதிலேயே குறிப்பாக இருந்தான்.
போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

 'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
(கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)

இராமன் சிவனும் அல்ல, திருமாலும் அல்ல, நான்முகனாம் பிரம்மாவும் அல்ல.  நான் பெற்ற வரங்களையெல்லாம் அழிக்கின்றான். பெரும் தவம் செய்து பெற்ற வரங்களைப் பெற்றவனோ என்றால், அப்படியும் தெரியவில்லை. இராமன் இவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறான். இப்பாடலில் இராவணனின் சிறிதேனும் சத்வ குணம் வெளிப்படுகிறது. ஆனால் அடுத்த பாடலில், அவனது ரஜோ குணம் வெளிப்பட, எதிரில் இருப்பவன் எவனாக இருந்தால் என்ன, எதிர் நின்றே வெற்றியை முடிப்பேன் என்றான்.

மேலே கம்பன் எழுதிய பாடலைப் போலவே, தியாகராஜரும் ஒரு பாடல் புனைந்துள்ளார்.

இராகம்: தர்பார்
தாளம் : திரிபுட தாளம்

பல்லவி
எந்துண்டி வெடலிதிவோ
ஏ ஊரோ நே தெலிய, இபுடைன தெலுபவைய ஸ்ரீராமா
அனுபல்லவி
அந்த சந்தமு வேறே நடதலெல்ல த்ரிகுணாதீ
தமையுன்னாதே கானி ஸ்ரீராமா நீவு

(இராமா, நீ எங்கிருந்து வந்தாயோ? உனக்கு எந்த ஊரோ? இப்போதாவது எனக்குத் தெரிவிப்பாயா?
மனதை மயக்கும் அழகான வதனம் இருந்தாலும், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் தெரிகிறாயே -  அப்படிப்பட நீ உண்மையில் யாரோ? எந்த ஊரோ?)

சரணம்
1. சிடுகண்டென பராத சயமுல தகிலிஞ்சே
சிவலோகமு காது
(ஒரு சில பொழுதுக்குள் அபராதங்கள் நேர்ந்துவிடுமோ என்று பயப்படும் சிவலோகத்தைச் சேர்ந்தவரில்லை)

2. வடுரூபைடு பலினி வஞ்சிஞ்சி யணத் ஸூவானி
வைகுண்டமு காது
( வாமனனாக வந்து மகாபலியை ஏமாற்றி அடக்கிய திருமால் வசிக்கும் வைகுண்டமும் உன் இருப்பிடம் இல்லை.)

3. விடவிசன முலாடி சிரமு த்ரும்ப பட்ட
விதிலோகமு காது
(பொய் சொல்லி தலை அறுபட்ட பிரம்மா வசிக்கும் சத்தியலோகமும் உன் இருப்பிடம் இல்லை.)

4. திடவு தர்மமு சத்யமு ம்ருது பாஷலு கலுகு
த்வியரூப த்யாகராஜ நுத நீவு
(திடமும், அறமும், வாய்மையும், இன்சொல்லும் ஆழகானதொரு வடிவத்தில் ராமன் என்ற பெயரில் வந்தது, சரிதானே! தியாகராஜனுக்கு இதை தெரிவிக்க வேண்டுமய்யா!)

இராமா, அபராதம் செய்தவர்களுக்கு மன்னிப்பே அளித்திருக்கிறாய்.
ஏமாற்றுப் பேச்சும் உன்னிடம் காணப்படவில்லை.
சொன்ன சொல் வழுவாமல் நின்றிருக்கின்றாய்.
கபடநாடகமெல்லாம் உனக்குத் தெரியாது.
ஒரு சொல், ஒரு பாணம், ஒரு மனைவி என்பதில் எப்போதும் உறுதியாய் இருக்கிறாய்.

ஆகவே, முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாய், மும்மூர்த்திகளாம் சிவன், திருமால் மற்றும் பிரம்மா ஆகியோர்களுக்கும் மேலான பரம்பொருள் நீ தான். இதுவே உன் தனிப்பெரும் பெருமை.

இப்பாடலை அபிஷேக் ரகுராமன் பாடிட இங்கு கேட்கலாம்:

Tuesday, December 18, 2012

தனுஷ்கோடியில் இராமன்

இராமனின் வில்லானது அவனது ஆயுதம். மானிடனாய் அவதரித்த இராம காதையில் அவனது இலக்கு இராவண வதம். அங்கே அவனுக்கு ஆயுதம் தேவைப்பட்டது. மானிடர் வழிபடும் இராமனுக்கு எதற்கு கோதண்டம்? மாரனின் கரும்பு வில்லுக்கு ஒரு பயனுண்டு. இராமனின் கோதண்ட வில்லிற்கு? அதன் இலக்கு தான் என்ன?

இராமனின் வில் இருக்கிறதே - அதன் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு - அதுதான் "தனுஷ்கோடி" - இராம தனுசின் இரு கோடிகள்.

பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்ரணவ சக்திக்கு ஒப்பிடுகிறார்கள்.   அந்த வில்லின் இலக்கானது பேரின்பம். அந்த வில்லில் நாண் பூட்டி தரிக்கப்படும் அம்புதான் ஜீவன். செலுத்தப்படும் ஜீவனான அம்பு பேரின்பம் எனும் இலக்கை அடைய - கோதண்டம் என்னும் வில்லினை ஆயுதமாக தரித்துள்ளான் இராமபிரான்.

கோதண்டம் என்பது ப்ரணவம். கோதண்ட தீட்சை அருளும் குருவாய் இராமன் விளங்குகிறான். கோதண்டத்தின் மேல்முனையில் இராம பிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில் இராமனின் "முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை" (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை.  திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் அன்றோ காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.

கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இம்மூனையில் இராமனின் பாதத்தைப் பற்றியாவறு புனித நதி என்னும் பெயர் பெற்றாள் கங்கை என்னும் நங்கை. (ஏனெனில் கங்கை நாரணரின் பாதத்தில் இருந்து தோன்றியது : ஸ்ரீமத் பாகவதம்) இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் "கால் வண்ணம்" என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலேஉன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
(பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!

இப்படியாக ஒரு முனையில் இருந்து மறு முனை வரை, தன்னைச் சரண் அடைய வந்து நின்ற எல்லோரையும் பிறவிப் பயன் என்னும் இலக்கினை அடைவதற்கான ஒரு சாதனமாம் கோதண்டத்தைத் தாங்கிய கோதண்டபாணியாய் திகழ்கிறான். அவனுக்கு கோதண்டம் ஆயுதம், நமக்கோ அது சாதனம். 

தியாகராஜ சுவாமிகளின் தோடி ராகப் பாடலான "கோடி நதுலு தனுஷ்கோடி" என்னும் பாடலில் இந்த சாரத்தினைத் தான் எடுத்தாள்கிறார்.

பல்லவி:
கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக
ஏடிகி திரிகேவே ஓ மனஸா.
அனுபல்லவி:
ஸூடிக ஷ்யாம சுந்தர மூர்த்தினி
மாடிமாடிகி ஜூசே மஹாராஜூலகு.

பல்வேறு (கோடி) புண்ணிய நதிகளும் தனுஷ்கோடியில் இருக்க, புண்ணிய நதியினை தேடிப் போவானேன்? அதுபோல, நீலமேக வண்ணனான இராமன் என்னும் பரமனைத் துதித்தால், அதுவே எல்லாக் கடவுள்களையும் துதித்தது போலவாகும். 

சரணம்:
கங்க நூபுரம் புனனு ஜனிச்செனு
ரங்குனி கனி காவேரி ராஜில்லெனு
பொங்குசு ஸ்ரீரகு நாதுனி ப்ரேமதோ
பொகடே தியாகராஜூ மனவி வினவே.

கங்கை அவன் காலில் தோன்றி புனித நதியானாள். காவிரியோ அரங்கநாதனை தரிசித்து ஒளி விடுகிறாள். அன்பன் தியாகராஜனும் பக்தியுடம் ரகுநாதனைத் துதித்திட இவனது விண்ணப்பத்தினை செவி சாய்த்துக் கேட்டிடவும்!
------------------------------------------------------------
இப்பாடலை இங்கு பாடிக் கேட்கலாம்:

------------------------------------------------------------
உசாத்துணை: டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் (1962-இல் வைதீக தர்ம வர்தினி என்னும் பத்திரிக்கையில் "தியாகோபனிஷத்" என்ற தலைப்பில் வெளிவந்தது. இவற்றை மின்னாக்கம் செய்து பகிர்ந்து கொண்ட திவா சாருக்கு நன்றிகள்.)


Sunday, May 23, 2010

கான ரசிகன் கந்தன்

இசை ரசனை எல்லோருக்கும் உண்டு.
உங்களுக்கும், எனக்கும், ஏன் என்னப்பன் குமரக்கடவுளுக்கும் கூடத்தான்!
குமாரசாமியின் இசை ரசனைக்கு, 'ரசிகசிகாமணி' என்றொடு பட்டம் கொடுத்த பாடல் ஒன்று உள்ளது. நாம் இங்கே பார்க்கவிருக்கும் அப்பாடல் கோடீஸ்வரஐயரால் இயற்றப்பட்டது. இவர் 72 மேளகர்த்தா இராகங்களிலும் பாடல்களைப் புனைந்த பெருமை பெற்றவர். இவரைப் பற்றிய குறிப்புகளை முன்பொருமுறை பார்த்திருக்கிறோம் இங்கே. இப்பாடல், 62வது மேளகர்த்தா இராகமாகிய ரிஷபப்பிரியா இராகத்தில் அமைந்துள்ளது. இவரது மற்ற பாடல்களைப் போலவே, இந்த பாடலிலும் இராக முத்திரையினைக் காணலாம். மேலும் 'கவி குஞ்சரதாசன்' எனப்பாடல் இயற்றியவர் முத்திரையினையும் காணலாம்.

எடுப்பு
கன நய தேசிக கானரசிக சிகாமணி நீயே கந்தா
எனக்கருள் நீயே தினம்

தொடுப்பு
கனிநய சொல்பொருள் கனகம்பீரம்
இனிய சுருதியோடு இயை லய தீர

முடிப்பு
ஸட்ஜ ரிஷபப்பிரிய காந்தார மத்யம
பஞ்சம தைவத நிஷாத வித
சப்தஸ்வர சங்கீத கவி குஞ்சரதாசன்
அனவரதம் தரும் நின்னருள் மய
-----------------------------
* பாடலை M.L.வசந்தகுமாரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
* சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
-----------------------------
"கன, நய, தேசிக" என்பது மூன்று விதமான இராகப் பிரிவுகளைக் குறிப்பதாகும்.
இதுபோன்ற மூன்று விதமான இராகப் பிரிவுகளையும் ரசிக்கும் ரசிகசிகாமணியாம் கந்தன்! கலைமாமணி பட்டத்திற்கு ஏங்கும் கலைஞர்கள் ஒருபுறமிருக்க, கந்தன் மட்டும் இசை விரும்பும் ரசிகனாகவே இருக்கிறான்!!!:-)

ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தினைச் சொல்லும் பாடலிது!

என்னவெல்லாம் இருக்கும்?:
சொல்
பொருள்
சுருதி

எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?
சொல்லிலும் பொருளிலும் - கனிநயம் நிறைந்திருக்க வேண்டும்.
அது கேட்போரை இழுக்கும் வகையில் கம்பீரமாக இருக்க வேண்டும்.
இனிமையான சுருதியினைக் கொண்டிருக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று இயல்பாக கலந்திருக்க வேண்டும்.

சப்த சுரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம் மற்றும் நிஷாதம் - ஆகியவற்றின் சஞ்சாரங்களில் அமையப்பெற்ற இசையென்னும் இனிமை ததும்பும் சங்கமத்தில், குஞ்சரகவி'யின் தாசனாகிய அடியேன் 'குஞ்சரதாசன்', எப்பொழுதும் பாடிப்புகழுவது யாதெனில், குன்று தோறும் வளரும் குமரக் கடவுளின் குன்றா அருள்தனையேயாம்.

"கனிநயம்":
சொல்லும் சொல்லதில் *கனி*யிருத்தி, காய் விலக்கிடுவீர் என்பார் வள்ளுவர்.
கனிவான சொற்புழக்கம் கனியான சொல்லினைத் தரும்.
அக்கனியோடு சேரும் நயம், பூவோடு சேரும் நார் போல. பூவினைத் தாங்கித் திகழச் செய்யும் மறைபொருள் போலே.
நயமெனில் யாது?
நன்மை பயக்கும் யாதும் நயமென இயம்பும் நாலடியார்.
கனிவான சொல்லினை புழங்கும் பாங்கினை கனிநயம் என்போம்.
கனிநயத்தில் அன்பும், அருளும் மிளிரட்டும். அது குமரனருளைப் பாடட்டும்.

--------------------------------------------------
இந்தப் பாடலைப் பார்க்கும்போது, தியாகராஜரின் ஆரபி இராக 'நாதசுதாரசம்' கிருதியும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாதது. அப்பாடலில் அவர் சொல்லுவதாவது:

வேத புராண ஆகம சாஸ்திரங்களுக்கு ஆதாரமான
நாதமே இராமன் என்ற பெயரில் மனித உருவானது.

"சுரங்கள் ஏழும் இராமனின் திருமேனியில் மணிகளாகவும்
இராகம் அவனது கோதண்டமாகவும்
கன, நய, தேசிகம் ஆகிய பிரிவுகள் நாணின் முப்பிரிகளாகவும், ரஜஸ், தமஸ், சத்வம் எனும் முக்குணங்களாகவும்,
கதிகள் அம்புகளாகவும் அமையப்பெற்றுள்ளது"
என்றெலாம் இசையின் அங்கங்களை, தனது மனம் விரும்பும் மகாபுருஷனிடம் கண்டு களிக்கிறார்.
---------------
இப்பாடலை, ராதா ஜெயலக்ஷ்மி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸபோனில் இப்பாடலிசை தவழ்வதை இந்த பாடல் தொகுதியில் இருந்துகேட்கலாம்.

Sunday, December 06, 2009

மார்கழி : அரங்கர் வரார் பராக் பராக்!

பராக்! பராக்! என்கிற கூக்குரலைக் கேட்டு மக்கள் அனைவரும் அக்குரல் வந்த திசையினில் திரும்பிப் பார்க்கின்றனர்! கட்டியங்காரர்களின் குரல் வந்த திசையில் பார்த்தால், ஆகா, அங்கே, அழகானதொரு பரிமேல் என்ன கம்பீரத்தோடு அமர்ந்திருக்கிறார் அழகர் அரங்க நாதர்! தகிக்கும் தங்கக் குதிரையில், தனக்கே உரிய தோரணையோடு அல்லவா வீற்றிருக்கிறார்! வீதிஉலா இதமாய் இருக்க, காவிரிக் காற்று, அவருக்கு சாமரமாய் வீசுகிறது போலும்!

நாதஸ்வரம் முதலான மங்கள வாத்தியங்கள் முழங்க, அரங்கநாதர் அசைந்தாடி வரும் இந்த அழகான திருவீதி உலாக் காட்சியை, தெற்கு சித்திரை வீதியில் இருந்து, மகான் ஒருவர் கண்டு தரிசித்துக் கொண்டிருக்கிறார். அவர் வேறாருமில்லை, சாட்சாத் தியாகராஜரே. அரங்கனின் திருபவனி வீதி வழி வர, ஒவ்வொரு வீட்டிலும் நின்று உபசாரங்களைப் பெற்றுக்கொண்டும், கற்பூர ஆரத்தியினை வழங்கிக்கொண்டும், நடந்தேறிக் கொண்டிருந்தது அவ்வுலா.

தீவட்டிகளின் ஒளியில், தியாகராஜர், தான் காணும் கண்கொளாக் காட்சியை, தித்திக்கும் இறையனுபவத்தினை, அழகான தோடி இராகக் கீர்த்தனையாய் வடிக்கிறார். அப்பாடலினின் பல்லவி 'ராஜு வெடலெ ஜூதாமு ராரே கஸ்தூரி ரங்க' என்பதாகும். பாடலின் சாகித்ய வரிகளுக்கு இங்கே அணுகவும்.

இப்போ, இந்தப் பாடலை தமிழில் மொழி பெயர்த்துப் பார்க்கலாமா!

பல்லவி:
கஸ்தூரி ரங்கனின் களையான பவனியைக் கண்டு களிப்போமே!

அனுபல்லவி:
திகழும் நவரத்தினங்கள் மின்ன,
திருவரங்க நாதன் பவனி கண்நிறைய,
பரிமேல் அமர்ந்த சுகந்தனை
பாருலக வேந்தரும் சேவிக்க,
(கஸ்தூரி ரங்கனின்..)

சரணம்:
காவிரிக் கரையில் புண்ணியபுரி திருவரங்கமதில்
சீரார்ந்த சித்திரை வீதிதனில் அலங்காரங்களுடன்
அரங்கனின் பவனி அற்புதக் காட்சியன்றோ!
விண்ணுலகத் தேவரும் மலர்த்தூவி வழிபட,
தியாகராஜனும் பாடிப்பரவசம் கொள்ள
(கஸ்தூரி ரங்கனின்...)

கன்னியர்கள் பலரும், தங்களை ஆண்டாளாக பாவித்துக் கொண்டு, அரங்கனை சூழ்ந்து நிற்கிறார்கள். கன்னியர்கள் மட்டுமா, இதர பெண்டிரும், அரங்கனை தங்கள் வீட்டுப்பையனாகவே தரித்துக் கொண்டு, அவனது வீதிஉலாவினை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். இவற்றையெல்லாம் தொலைவில் இருந்து மட்டுமே தியாகராஜரால் காண முடிகிறது. கூட்டத்தைத் தாண்டி, அருகில் சென்று சடாரியினையும், துளசி பிரசாதத்தினையும் பெற்றுக்கொள்ள அவரால் இயலவில்லை. வருத்தத்துடன், அந்த இடத்திலேயெ நின்றுகொண்டு இருக்க, திடீரென வீதிஉலாவும் நின்று விடுகிறது. வாகனத்தை தூக்குபவர்களாலோ ஒரு அடிகூட மேலும் எடுத்து வைக்க இயலவில்லை. திசைதோஷம் ஏதும் உள்ளதோ என்றெண்ணி, அர்சகர்கள் கோயில் தேவதாசிகளை அழைத்து ஆகம சாஸ்திரங்களில் உள்ளபடி அந்த திசைக்கான நடனத்தினை ஆடச் சொல்கிறார்கள். அதனால் ஒரு மாற்றமும் இல்லை. திடீரென, அர்ச்சகர் ஒருவருக்கு ஆவேசம் ஏற்பட, அவர் தியாகராஜர் இருந்த இடத்தைக் காட்டி, ஸ்ரீரங்கநாதரின் சிறந்த பக்தன் ஒருவன், அருகில் வர இயலாமல் தவிப்பதை எடுத்தியம்ப, மற்றவர்கள் அவரை அருகில் அழைத்து வந்து, அவருக்கு பிரசாதங்களை வழங்கிட, பின்னரே திருபவனி தொடர்ந்ததாம். இச்சம்பவத்தினை 'வினராதா நா மனவி...' என்கிற தேவகாந்தாரி இராகப் பாடலில் தியாகராஜர் குறிப்பிடுவதைக் காணலம். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

இவ்வாறாக, அரங்கநாதன், தன்னை தரிசிக்க திருவையாற்றில் இருந்து தியாகராஜர் வந்திருக்கின்றார் என்பதனை அந்த ராஜவீதியில் குழுமியிருந்த அனைவருக்கும் அறிவித்ததாகக் கொள்ளலாம். அன்று மாலை, சிறப்பு முத்தாங்கி சேவையில் கலந்துகொள்ள, கோயில் அதிகாரிகள், தியாகராஜரை அழைத்துவர, அங்கே தியாகராஜர், சந்நிதியில் பாடிய பாடல், காம்போதி இராகக் கிருதி 'ஓ ரங்கசாயி..', மிகவும் பிரபலமான பாடல். பாடலின் சாகித்ய வரிகளை இங்கே பார்க்கவும்.

ஓ ரங்கசாயி பாடலை, எம்.எஸ்.அம்மா அவர்கள் பாடிட, ராகா.காமில் கேட்டிட சுட்டி இங்கே. சபாஷ் சொல்லவைக்கும் சங்கதிகளில் காம்போதியின் அழகை இன்னும் இனிமையாக யாரேனும் தரக்கூடுமோ? ஓ என்ற ஒற்றைச் சொல்தான் எத்தனை விதமான ஸ்வரங்களில் வலம் வருகிறது!



இந்த பாடலை, தமிழிலும் பார்க்கலாமா?

பல்லவி:
ஓ ரங்க விமான சயனா - நான் அழைத்தால்
ஓ என நீயும் வாராயோ?

அனுபல்லவி:

சாரங்கம் தரித்தவனும் உனைக்கண்டு
கைலாயபதி ஆனானோ,
(ஓ ரங்க விமான சயனா...)

சரணம்:
பூலோக வைகுண்டமே திருவரங்கமென
பெருமிதமும் நீயே கொண்டு, ஸ்ரீதேவியுடன்
குலவிக்கொண்டிருந்தால், எம்
குறைகளைக் களைவது எப்போது?

மற்றவர் உயர்வை பொறுக்கா
மானிடரிடை துயர்பல பெற்றநான்
நின்திருஉருவினையும் முத்துமார்பினையும்
காண வந்தேனே, தியாகராஜனின்
இதயமெங்கும் அலங்கரித்தவனே,
(ஓ ரங்க விமான சயனா...)

பின்னர் மேலும் இரண்டு கிருதிகளையும் அவர் இயற்றிட, அவையானவை: சூதாமு ராரே எனும் ஆரபி இராகக் கிருதி மற்றும், கருண ஜூடவய்ய என்கிற சாரங்கா இராகப்பாடல். இந்த ஐந்து பாடல்களையும் சேர்த்து, "ஸ்ரீரங்க பஞ்சரத்தினம்" என்று வழங்குவர்.

இந்த ஸ்ரீரங்க பஞ்சரத்தின கீர்த்தனைகளை கேட்கையில், ஆதி சங்கரர் இயற்றிய ரங்கநாத அஷ்டகம் தனையும் நினைவு கூறாமல இருக்க இயலாது. பாடகர் பலரும் ரங்கநாத அஷ்டகத்தின் ஒரிரண்டு சுலோகங்களை விருத்தமாக பாடிப்பின், ஓ ரங்க சாயி பல்லவியினைத் துவங்குவார். தியகராஜரும் 'ரங்க சாயி' எனச்சொல்வது மட்டுமல்ல. 'காவேரி தீரே, கருணா விலோலே...' போன்ற அஷ்டக வரிகளையும் தியாகராஜரின் சாகித்யத்தோடு ஒப்பு நோக்கலாம்.

ரங்கநாத அஷ்டகத்தில் இருந்து சில சுலோகங்களை இங்கு விருத்தமாகப் பாடக் கேட்கலாம்:
(அருணா சாய்ராம் அவர்கள் பாடிட)

Sunday, May 24, 2009

இராம நாமம்

ஸ்ரீராமஜெயம்!


சிறப்புகள் எல்லாம் சிறப்புற, சிறப்புகளின் மகுடமாய் சீர் பெற்று ஓங்கும் நாமம் இராம நாமம்.

இந்த இராம நாமத்தின் சிறப்புகளை இப்படியாக ஒரு வரியில் சொல்லி முடித்துவிட முடியாது. அதுக்குத்தான் இந்த பதிவு!

தியாகராஜ சுவாமிகள் முதல் பதிவர் திரு.ரமேஷ் சதாசிவம் வரை பலரும் இரசித்துப் பருகிய நாமம் இராம நாமம்.

சதாசிவ பிரம்மேந்திரரும், பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்களும் பாடித் துதித்த இராம நாமம்.

இப்படி எத்தனையோ மகான்கள், பாடிப் பேரின்பம் பெற்ற நாமம் இராம நாமம்.



இராகம் : ஜன சம்மோதினி

எடுப்பு
இராம நாமம் நல்ல நாமம்
நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும்
இராம நாமம் நல்ல நாமம்

தொடுப்பு
தாமரைக்கண்ணனை தன்னிசையால் தினம்
தவத்திரு நாதயோகி தியாகராஜர் கண்ட
இராம நாமம் நல்ல நாமம்

முடிப்பு
ஜனன மரண பயம் தீர்க்கும் இராம நாமம்
ஜனகாதி முனிவர்கள் ஜபித்திடும் நாமம்
மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம்
மாதா பிதா குருவை மதித்த மன்னன்
இராம நாமம் நல்ல நாமம்

இராமன் பரமன். அவன் நாமத்தை தியானித்தல் என்பது சகலகோடி தேவதைகளையும், தெய்வங்களையும் தியானிப்பது ஆகும். இராமன் கையில் இருக்கும் கோதண்டமே ப்ரணவம். அதன் இலக்கே, பரமானந்த பேரின்ப நிலை. அவனது சாரங்கத்தில் தரித்து ஏவப்படும் அம்பெனும் பாணமே, ஜீவன். ஜீவன், இராமானந்த நிலையினை அடைய வழி வகுக்கும் சாதனமாய், விளங்குகிறது இராமனின் வில்! அது போலவே இராம நாமமும், அப்பேரின்பத்தினை அடைய வழி வகுக்கும் சாதனம்!

தியாகராஜரின் தோடி இராகப் பாடல் ஒன்றுண்டு. 'கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக...' எனத் துவங்கும் அப்பாடலில், தியாகப் பிரம்மம் சொல்லுகிறார்: 'நீலமேக ஷ்யாமளன் ஆன சுந்திர மூர்த்தியான இராமனை தியானம் செய்து, இதயக் கமலத்தில், காணப்பெற்றவர்கள், பாக்கியசாலிகள். அவர்கள் மகாராஜாவைப் போன்றாவர்கள்' என்று.

ப்ரணவம் == பரப்பிரம்மத்தின் சக்தி == கோதண்டம் == இராம நாமம்!
~~~
அடுத்து வருவது:
இராகம் : தேஷ்
இயற்றியவர்: தஞ்சை சங்கரய்யர்

எடுப்பு:
இராம நாமமே துதி மனமே!
க்ஷேமம் உறவே, நீ தினமே,
சீதாராம நாமமே துதி மனமே!

தொடுப்பு:

பூமியை, பொன்னை, பூவையரையும், நீ,
பூஜித்து பின் புண்ணாகாமலே
சீதாராம நாமமே துதி மனமே!

முடிப்பு:

சோதனைகள் பல, வாதனைகள் யாவும்,
நாதனை நினைந்திடில் நாடுமோ?
சீதாராம நாமமே துதி மனமே!
~~~
மூன்றாவதாக, புரந்திரதாசரின் 'ராமா ராமா' பாடலை, திருமதி.MLV அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

Friday, May 23, 2008

ஜோ ஜோ ராமா ஜோ ஜோ!

இராமனுக்கு தாலாட்டுப்பாடும் ஸ்ரீஇராம ஹிருதயம் நிறையும் தியாகராஜர் தாலாட்டுகிறார்!
தன் நெஞ்சம் முழுதும் நிறையும் அன்பின் நிறைவில் தாலாட்டு பாடுகிறார்!
கேட்போமா இந்த இதயம் இனிக்கும் தாலேலோவை!

பல்லவி

ஜோ ஜோ ராமா ஆனந்த
கன ஜோ ஜோ ராமா ராமா
(ஆனந்த வடிவோனே தாலேலோ...)

சரணம்
(1)
ஜோ ஜோ தசரத பால ராமா
(தசரத மைந்தா தாலேலோ...)
ஜோ ஜோ பூஜா லோல ராமா
(நிலமகள் காதலா தாலேலோ...)

(2)
ஜோ ஜோ ரகு குல திலக ராமா
(ரகுகுல திலகனே தாலோலோ...)
ஜோ ஜோ குடில தராலக ராமா
(சுருள் முடியானே தாலேலோ...)

(3)
ஜோ ஜோ நிர்குண ரூப ராமா
(குணங்களுக்கு அப்பாற்பட்டவனே தாலேலோ...)
ஜோ ஜோ சுகுண கலாப ராமா
(எல்லா நற்குணங்களும் நிறைந்தவனே தாலேலோ...)

(4)
ஜோ ஜோ ரவி சசி நயன ராமா
(சூரியனும் சந்திரனும் கண்ணானவனே தாலேலோ...)
ஜோ ஜோ பணி வர ஸயன ராமா
(அரவணையில் சயனித்தருப்பவனே தாலேலோ...)

(5)
ஜோ ஜோ ம்ருது தர பாஷ ராமா
(இன்மொழியானே தாலேலோ...)
ஜோ ஜோ மஞ்சுள வேஷ ராமா
(இனிய திரு உருவத்தானே தாலேலோ...)

(6)
ஜோ ஜோ த்யாகராஜார்சித ராமா
(தியாகராஜன் அர்சிக்கும் ராமனே தாலேலோ...)
ஜோ ஜோ பக்த ஸமாஜ ராமா ஜோ ஜோ!
(பக்தர்கள் குழுமத்தில் நிறை ராமனே தாலேலோ...)

இராகம் : ரீதி கௌளை (இந்த ராகம் ஞாபகம் இருக்கா, 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' என Dr. பாலமுரளி கிருஷ்ணா பாடுவாரே!, அதே ராகம்.)

அருணா சாய்ராம் அவர்கள் இங்கே பாடியிருப்பதைக் கேட்கலாம்.

Monday, April 14, 2008

என்ன பிறப்பிதுவோ இராமா? : தியாகராஜர்

'ஏடி ஜன்மமீதி..' என்று தொடங்கும் தியாகராஜ கிருதியின் பொருள்:

என்னப் பிறப்பிதுவோ இராமா?
என்னப் பிறப்பிதுவோ?
எப்போதும் உன்னை அணுகிப்பேசிட இயலாத
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

கோடி மாரனும் ஒன்றுசேர்ந்த
அழகையும் விஞ்சிய அழகா, இராமா -
உன்னை அணுகிப்பேசிட இயலாத
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

பால் வடியும் முகமும், மணிமுத்து மார்பும்
கண்ணெல்லாம் நிறைந்தும்
மனம் நிறைவெய்யாமல்
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

இசையில் திளைப்பவனும்,
இன்னொருவர் மனதை புரிந்து
புரிந்துகொள்பவனும் ஆன இராமனை
மகிழ்ந்தணைத்து மனநிறைவுகொள்ளா
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா,
தியாகராஜரால் போற்றப்பட்டவனே,
விரைவில் உன்னை காணத்
துடிக்குதென் இதயம் - திணரும்
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

-------------------------------------

இராகம் : வராளி

தாளம் : மிஸ்ரசாபு

இயற்றியவர் : தியாகராஜர்

பாடுபவர் : திருமதி. விசாகா ஹரி

-------------------------------------

பல்லவி:
ஏடி ஜன்மமிதி ஹா ஓ ராம
ஏடி ஜன்மமு-இதி ஹா ஓ ராம

அனுபல்லவி:
ஏடி ஜன்மமிதி எந்துகு ௧கலிகெனு
எந்தனி ௨ஸைரிந்து ஹா ஓ ராம (ஏடி)
ஏடி ஜன்மமு-இதி எந்துகு கலிகெனு எந்தனி ஸைரிந்து ஹா ஓ ராம (ஏடி)

சரணம்:
ஸாதி லேனி மார கோடி லாவண்யுனி
மாடி மாடிகி ஜூசி மாடலாடனி தநக்(ஏடி)

ஸாரெகு முத்யால ஹாரயுரமு பாலு
காரு மோமுனு கந்நுலார ஜூடனி தநக்(ஏடி)

இங்கிதமெரிகின ஸங்கீத லோலுனி
பொங்குசு தநிவார கௌகிலிஞ்சனி தநக்(ஏடி)

ஸாகர சயநுனி த்யாகராஜ நுதுனி
வேகமே ஜூடக ௪வேகெனு ஹ்ருதயமு (ஏடி)

திரு. இராமநாத கிருஷ்ணன் அவர்கள் குரலில் இங்கு கேட்கலாம்.

------------------------------------------------
மேலும்:
பக்தியாளர் திரு.சுப்புரத்தினம் ஐயா தமிழ்ப்பாடல் வரிகளுக்கு மெட்டமைத்து, பாட்டாகத் தந்துள்ளார்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்:

Wednesday, March 26, 2008

சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே! : தியாகராஜர்

சேவை செய்யும் என்னை மறந்துவிடாதே!

ஸ்ரீ தாயார் துணைவா, ஸ்ரீ தியாகராஜரால் போற்றப்பட்டவனே!

உன்னை உபசரிக்க பலர் இருப்பதால்
உன் அருள் வேண்டி
உன் புகழை பாடிக் கொண்டிருக்கும்
என்னை மறந்துவிடாதே!

உன் வாயிலிலே நிலையாக வாயு மைந்தன் உள்ளான் என்றாலும்,

உன் தம்பியர் உன்னுடன் சேர்ந்துள்ளனர் என்றாலும்,

உன் ஏகாந்தத்திற்காக ஜானகிதேவி காத்திருக்கிறார் என்றாலும்,

ஸ்ரீ தாயார் துணைவா, தியாகராஜரால் போற்றப்படுபவனே,

உன்னை உபசரிக்க இப்படியெல்லாம் பலர் இருந்தாலும் என்னை மறந்துவிடாதே!

-----------------------------------------------------------------------
இராகம்: பைரவி
தாளம்: ரூபகம்
இயற்றிவர்: தியாகராஜர்
மொழி: தெலுங்கு

பல்லவி
உபசாரமு ஜேஸேவா ருன்னாரனி மரவகுரா

அனுபல்லவி
க்ருப காவலெனனி நே நீ
கீர்தினி பல்குசுனுண்டக (உபசாரமு...)

சரணம்
வாகிடனே பதிலமுக வாதாத்மஜுடுன்னாடனி
ஸ்ரீகருலகு நீ தம்முலு சேரியுன்னாரனி
ஏகாந்தமுனனு ஜானகி யேர்படியுன்னதனி
ஸ்ரீகாந்த பருலேலனி ஸ்ரீதியாகராஜ வினுத (உபசாரமு...)

------------------------------------------------------------------
வயலினில் பைரவி ஆலாபனை:
upacharamu-violin-...


பத்மஸ்ரீ கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் செவி இனிக்கும் அமுதக் குரலில்:
upacharamu-kjj.mp3



சஞ்சய் சுப்ரமணியம் பாடிட இங்கு கேட்கலாம்.

இந்தப் பாடலின் பைரவி ஆலாபனையை நாதஸ்வர வாசிப்பில் இங்கு கேட்டு நாத மழையினில் நனையலாம்.

Sunday, January 07, 2007

உண்டு என்போருக்கு உண்டு

உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?

உள்ளதை உள்ளபடி காட்டிடும் கண்ணாடி போன்ற
கன்னங்களுடைய உன் மேனியைக் காண
வாடிடும் என் அருகினில் இன்னும் வராதது ஏனோ?

உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?

உறக்கம் துறந்து, யாழினை மீட்டி,
தூய உள்ளத்தினில் சுத்த ஸ்வரத்துடனும்,
வேளை தவறாமல் பஜனை செய்யும்
உன் தொண்டர்களை நாளும் காப்பாற்றும்
தயையுள்ளம் பெற்றவன் நீயன்றோ?
தியாகராஜனால் போற்றப் பெற்றவனே!

உண்டு என்போருக்கு உண்டு என்று முழங்கிடும்
பெரியவர்களின் மொழிகள் பொய்த்திடுமோ?



இது சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவாரான தியாகராஜர் என்னும் ஏழையின் கீர்த்தனம் - கத்தனு வாரிகி.

அவரிடம் பொருள் ஏதும் இருந்ததில்லை, ஆனால் இராமனை போற்றிப் பாடாத நாளில்லை.

அவரன்பு இராமனை தூக்கிப்போட்டதில் அவர் கதறியது காவிரி அறியாததில்லை.

அந்த காவிரி பாயும் தமிழகம் மட்டும் மறந்ததேனோ?