Thursday, December 06, 2007

கனவில் வந்த கதைகள் : மாடியில் ஏறிக் குதித்து ...

ந்த ஊர் எனத் தெரியவில்லை, ஒரு கிராமம் போல இருந்தது. அதில் அப்போது நாங்கள் வசித்து வந்த வீடு கொஞ்சம் வித்யாசமானது. பெரிய வீடு. கொஞ்சம் பழைய வீடு. கிராமத்தில் எங்கள் தாத்தவின் வீடு போலவே தோற்றமளித்தது. ஆனால் தாத்தாவின் வீடுபோல் தனி வீடு அல்ல. ஒட்டினாற்போல் பக்கத்திலேயே இன்னும் சில வீடுகள். அதிக வீடுகள் இல்லை, சுமார் நான்கைந்து இருக்கும். எல்லா வீடுகளுக்கும் முன்னால் பொதுவாக, பெரிய காலியான மைதானம் போன்ற வெற்று வெளி். அந்த இடத்தை சுற்றிலும் மதில் சுவர் ஒன்று அமைக்கப்பட்டு, இந்த இடம் எங்களால் மட்டுமே பயன்படுத்தப் பட்டு வந்தது. மதில் சுவரை ஒட்டி, கார்கள் மற்றும் ஏனைய வண்டிகளை நிறுத்துவதற்காக வெள்ளைக் கோடுகள் போட்டு இடம் ஒதுக்கப் பட்டு இருந்தது. (கிராமத்தில் இது எப்படி? இப்படி, சம்பந்தமில்லாதவை கனவில் ஒன்றாக கலக்கும், கனவில், இதைப்பற்றியெல்லாம் கேட்பதில்லை!). திறந்த வெளியில் ஆங்காங்கே ஒரு சில மரங்களும் இருந்தது.

அப்போது நான் அவசரமாக வெளியே கிளம்பிக் கொண்டு இருந்தேன். ஏதோ ஒரு கலை நிகழச்்சியைப் பார்ப்பதற்கு. கூட என் மனைவியும், தந்தையும் வருகிறார்கள். இன்னும் 15 நிமிடங்களில் நிகழ்ச்சி தொடங்குகிறது. நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு இதற்கு முன் சென்றதில்லை. ஆனால், இணைய தளத்தில் பார்த்ததில் நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் வீட்டுக்கு பக்கத்திலேயே இருப்பதாக தெரிந்தது. நடந்தே போய் விடலாமா என முதலில் யோசனை. பின்னால் காரிலேயே செல்வதாக முடிவு செய்தேன். வீட்டுக்கு முன்னால் ஒரு பெரிய வெள்ளை நிற ட்ரக் நிறுத்தப் பட்டு இருந்தது. எதற்காக என்று சரியாகத் தெரியவில்லை. எதற்காகவோ வாடகைக்கு அமர்த்தி இருந்தோம். வீட்டுக்கு வெளியே வந்தவுடன் தான், ட்ரக் வாசலிலேயே நிற்பது கவனத்துக்கு வந்தது. உடனே அதை ஓரமாக நிறுத்த முயன்றேன், இந்த அவசரத்தில் இதுவேறா என்ற சலிப்புடன். அவசர அவசரமாக அதை சிரமத்துடன் நிறுத்தி விட்டு, காரில் எல்லோரும் ஏறினோம். காரை, அது நிறுத்தப் பட்டு இருந்த இடத்திலிருந்து வெளியே எடுத்தேன். திடீரென, கார்களை பார்க் செய்வதற்கு வசதியாக போடப்பட்டு இருந்த வெள்ளைக் கோடுகள் கவனத்தை ஈர்த்தன. ஏனோ தெரியவில்லை, காரை ரிவர்ஸில் எடுத்து, அந்த இரு வெள்ளைக் கோடுகளுக்கு இடையே நிறுத்தி விட்டேன். பின்தான் நிறுத்தக் கூடாது, வெளியே செல்ல வேண்டுமே என்ற நினைவு மனதில் உறைக்க, மீண்டும் காரைக் கிளப்பி, ஒரு வழியாக வேளியே வந்தேன்.

இணையத்தில் அரங்கத்திற்கு செல்லும் வழியை பார்த்து இருந்ததில், வீட்டில் இருந்து வெளியே வந்தபின் இடது பக்கம் திரும்பி, பின்னர் அடுத்த சாலையில் மீண்டும் இடது பக்கம்் திரும்ப வேண்டும் எனச் சொல்லி இருந்தது. வீட்டை விட்டு வெளியே வந்தவுடனே அடுத்த திருப்பம் வந்தது. அதில் இடது பக்கம் திரும்பியதில் அரங்கம் என்று வெளியே எழுதி இருந்ததைப் பார்த்து, காரை அதன் அருகே நிறுத்து விட்டு, வெளியே வந்தேன். அப்போதுதான் கவனிக்கிறேன். இந்த அரங்கமும், நாங்கள் வசிக்கும் வீட்டின் பின் பகுதியில் இருப்பதுதான் என்று. அடடா, இத்தனை நாள் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கத்துடன், வேகமாக நுழைவாயிலைத் தேடி நடக்கிறேன். நுழைவதற்கான வழி எங்கே இருக்கிறது என்பதை தேடிக் கொண்டே விரைவாக நடந்ததில், மற்றவர்கள் கூட வருகிறார்களா என்பதுகூட கவனிக்காமல், இப்படியும் அப்படியும் விரைந்தேன். பின்னர் சிறிதான ஒரு வாயில் தென்பட்டது. இவ்வளவு பெரிய அரங்கத்திற்க்கு இவ்வளவு சின்ன வாயிலா என்ற சந்தேகத்துடன், பின்னால் திரும்பிப் பார்த்தால், கூட வந்தவர்கள் யாருமில்லை. அப்போது, இந்த வாயில் வரை ஏற்கனவே வந்து திரும்பியது போன்ற விந்தையான உணர்வு வந்தது. சரி, அவர்கள் வருவதற்குள், இதற்குள் சென்று இதுதான் சரியான வழியா என்று பார்த்து விட்டு வந்துவிடலாம் என்று உள்ளே செல்லலானேன்.

உள்ளே செல்லச் செல்ல அது, குகைபோல விரிந்தது. ஒருவர் மட்டுமே செல்லக்கூடிய நெடிசலான ஒற்றையடிப் பாதை அது. கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தால் எப்படி, தேடல் விரிந்து கொண்டே செல்கிறதோ அதுபோல பாதை சென்று கொண்டு இருந்தது. சிறிது தூரம் சென்றபின், ஒரு மூலையில் இதற்கு மேல் செல்ல இயலாத இடத்தை அடைந்தேன். அந்த இடத்தில் இருந்து மேலே பார்த்தால், திறந்த வெளியாக மேலிருந்து வெளிச்சம் உள்ளே வந்தது. வெளிச்சம் வரும் திசையில் செல் என உள் மனது உச்சரித்தது. அந்த இடத்தில் பக்கத்துச் சுவர் சுமார் நான்கு அடிகள்தான் இருந்தது. சரி, இதன் மேல் ஏறி அந்த வெளிச்சம் எங்கிருந்து வருகிறது எனப் பார்க்கலாம் என தீர்மானித்தேன். கைகளை சுவரின் மேல் ஊன்றியவாறு, எம்பிக்கொண்டு, அதன்மேல் ஏறி, மேல் பக்கம் வந்தடைந்தேன்.

மேலே ஏறி வந்த பின் அந்த இடம் அந்த வீட்டின் மொட்டைமாடி எனத் தெரிகிறது. மொத்த மாடியும் மொட்டையாக இருக்காமல், அங்கேயும் அறை ஒன்று இருந்தது. அதன் மேல் புறக் கூரை கீற்றுகளால் வேயப்பட்டு இருந்தது. அதன் வாசலில் இரும்புச் சட்டங்களில் ஆன கதவொன்றும் இருந்தது. அதன் வழியே உள்ளே ஏதாவது தெரிகிறதா எனப் பார்க்கலாம் என நினைத்து, அதை நெருங்க, யாரோ அருகில் வரும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தேன்.

அவன் ஒரு இளைஞன். அவன் சட்டையில் ஆங்காங்கே கறுப்பாக அழுக்காகி இருந்ததில், அவன் எதோ வேலையாள் போலத் தோன்றியது. "என்ன சார், இங்க டிக்கட் வாங்க வந்தீங்களா, டிக்கட் எல்லாம் வித்துப் போச்சுங்க, ஹவுஸ் ஃபுல் ஷோவாம், அதோ பாருங்க, டிக்கட் வாங்கினவங்க எல்லாம் உள்ளே இருக்காங்க" எனக் கை காட்டினான். இரும்புச் சட்டங்கள் வழியாக அந்த அந்த கட்டிடத்தின் கீழ் தளம் தெரிந்தது. அங்கே மனிதர்கள் கையில் எதோ காகிதங்களை வைத்துக்கொண்டு, இரும்புக் கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டவர்கள் போலத் தெரிந்தார்கள். அவர்களைப் பார்த்தவுடன், முதலில் தோன்றியது - இந்த இடத்தை விட்டு முதலில் அகல வேண்டும் என்பது தான்.

அப்போதுதான் அப்பா மற்றும் மனைவியின் நினைவு வந்தது. அடடா, அவர்களை விட்டுவிட்டு வந்து இவ்வளவு நேரம் கடந்து விட்டதே, அவர்கள் நமக்காக எங்கெல்லாம் தேடுகிறார்களோ என்ற கவலை அரித்தது. அனேகமாக அந்த குகை போன்ற நுழை வாயில் வரை வந்து அங்கே காத்திருப்பார்கள், முதலில் அந்த இடத்துக்குச் சென்று பார்ப்போம் எனத் தோன்றியது. என்னுடன் பேசிய இளைஞனோ என்னை விட்டு தூரத்தில் எதோ படிகளில் இறங்கிச் செல்லத் துவங்கி விட்டான். நாம் வந்த வழியை விட இந்த இளைஞன் செல்லும் வழி அனேகமாக சரியானதாகத் தான் இருக்கும் என எண்ணி அவனை பின் தொடரலானேன். தொடர்ந்து அந்தப் படிகளில் நானும் இறங்கினேன். சில வளைவுகளுக்குப்பின் ஒரு திறந்த இடத்தை அடைய, அந்த இளைஞனைக் காணோம். அந்த இடமும் தரையிலிருந்து நீண்ட உயரத்தில் இருந்தது. அந்த இடத்தில்் இருந்து சற்று தொலைவில் கூட்டமாக பின்புறம் திரும்பியவாறு கொஞ்சம் நபர்களும் - அதில் அப்பாவும் மனைவியும் கூடத் தெரிந்தார்கள்.

இந்த உயரமான இடத்திலுருந்து கீழே குதித்தால்தான் அந்த இடத்தை சீக்கிரமாக அடைய இயலும் என்று முடிவு செய்தேன். ஆனால் அது எவ்வளவு அபாயகரமானது என்பதை என் மனம் யோசிக்கவே இல்லை. அந்த இடத்திலிருந்து நேராக குதிக்க வேண்டும். கொஞ்சம் பிசகினாலும் பக்கத்திலுள்ள மதில் சுவரிலோ அல்லது கூரான இரும்பு வேலிக் கம்பிகளிலோ விழுந்திடக்கூடும். குதிப்பது என விளிம்புக்கு வந்து, ஒரு காலைத் தூக்கியவுடன் தான் இதெல்லாம் வேறு கண்ணுக்குத் தெரிகிறது. இனிமேல் திரும்பவும் முடியாது. என்ன செய்வது, அதிகம் யோசிக்காமால் குதிப்பதே நல்லது என்று எண்ணி குதித்தும் விட்டேன். நல்லவேளே, அடி ஏதும் படாமல் நல்லபடி கீழே வந்துவிட, படுக்கையில் இருந்து எழுந்தேன்.

கனவு கலைந்து, இது கனவுதானா என பெருமூச்சு விட்டாலும் கனவின் நினைவுகள் அவ்வளவு எளிதாக நினைவினில் இருந்து அகலவில்லை. அவ்வளவு எளிதில் அகலக் கூடியதா இந்தக் கனவு?!

Sunday, November 25, 2007

அறுபடைவீடும் ஆறு சக்கரங்களும்

திருபரங்குன்றம்: மூலவருக்கு இங்கு சுப்ரமணிய சுவாமி என்று நாமம். தேவசேனாதிபதி தேவசேனையை மணந்த தலம். தங்கள் அழுக்குகளை, மூலாதாரத்திற்கு கீழுள்ள சக்கரங்களை மறந்து, இறைவனுடம் இணைவதைக் குறிப்பது, தேவசேனை-திருமுருகன் திருமணம். இந்த தலத்தில் இருக்கும் கற்பக விநாயகனை முதலில் மனத்தில் இருத்தி, அவன் அருள் பெற்று, அறுபடைவீடு தரிசனத்தை துவங்குவோம். மூலாதாரத்தில் அவனுடன் இணைந்து, சரவணபவ எனும் திருநாமம் சொல்லி, மேலான நிலைகளை, சக்கரங்களை அடைவோம்.

திருச்செந்தூர்: மூலாதாரத்தில் துவக்கிய கனல்தனை வளர்த்து அடுத்த சக்கரமான சுவாதிஷ்டானத்தை அடைய, தவ நிலையில் ஜப மாலையுடன் நின்றிடும் மூலவர் பாலசுப்ரமணிய சுவாமியை துதித்திடுவோம். அலைகடல் ஓசை எப்போதும் ஒலித்துக்கொண்டே இருப்பதைப்போல ஓம்கார நாதம் எப்போதும் ஒலித்திக் கொண்டே இருப்பதைக் கவனிப்போம். பதஞ்சலி முனிவர் அருளியபடி ஓம்காரத்தினை ஒலித்திட, ரீங்காரமாய் சுழலாதோ சுவாதிஷ்டானம் திருச்செந்தூரில்.

பழனி - தியான மலை : பழனி மலையில் தண்டாயுதபாணி போகரின் யோகமதில் அருமருந்தாய் ஔஷதமாய் உறைகிறான்.

அவன் ராஜ அலங்காரத்தில் கம்பீரமாகவும், காந்தமாகவும் இருக்கிறான், இழுக்கிறான். ராஜ யோகத்தில் மணிப்பூரத்தில் ஏற்படும் பயத்தினை நீக்கிட, 'யாமிருக்க பயமேன்?" என அபயம் காட்டுகிறான் பழனி மலையில் ஞான பண்டிதன்.

சுவாமிமலை: காவிரிக் கரையில் திருவேரகத்தில் அருளும் சுவாமிநாதன். அருணகிரியார் நாதனை திருப்புகழால் பாடிய அருந்தலம்.
இங்குள்ள கொடிமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது ஏற்றது. சுவாமிநாதனின் உபதேச மந்திரம் ஓம் ச-ர-வ-ண-ப-வ. இம்மந்திரத்தை தொடர்ந்து தியான நிலையில் ஒலிக்க, இதயக் கமலமாம் அனஹதத்தில் ஒளிர்வான் சரவணன். இங்கே மலையாகிய ஞானமதை நொடிப்பொழுதில் அடைந்திட இயலும்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரப் பிரயோகத்தினால், அவரவர் அகத்திலேயே ஆறு சக்கரங்களில் அறுபடை வீடுகளின் தரிசனம் பெறலாம்.

திருத்தணிகை: குன்றுதோறாடல் என திருமுருகாற்றுப்படையில் அழைக்கப்படும் இந்த தலத்தில் காப்பாற்றும் கடவுளாக ஆதிமுதலே வணங்கப்பட்டவன்.

குளுமையும் அமைதியும் தவழும் இடமாதலால், விசுத சக்ரத்தில் தூய அன்பினைக் கொண்டு முருகனை அடைய ஏற்ற இடம். தன் உணர்வையெல்லாம் மறந்து இறை உணர்வு மட்டுமே இருத்தி, எல்லாவற்றிலும் முருகானாக ஆனந்த பரவசத்தினை அடைய ஏற்ற இடம்.
இந்த தலத்தின் விசேஷம் - கல் வேல் - முருகனின் வேலே முருகனாக ஆதிமுதல் வழிபட்ட இடம். அஞ்ஞானத்தை கூரிய வேலால் பிளந்து உள்ளொளி பெருகிட வழி வகுக்கும்.
பழமுதிர்ச்சோலை: அடுத்ததாக ஆக்ஞை சக்கரத்தில் அவன் அருள் பெருவதற்கு ஏற்ற தலம் பழமுதிர்ச்சோலை.

வீசிய வேல், கார்த்திகேயனின் கையிலேயே திரும்பி வருவதுபோல், எழுப்பிய குண்டலினி சக்தி நம் அஞ்ஞானத்தை அழித்து, ஞானமாக நமக்கு திரும்பித் வருவதைக் குறிக்கும்.

கணபதியின் துணையுடன் வல்வினைகளை வென்று, மேற்சொன்ன ஆறு சக்ரங்களை ஆறு முகன் துணையுடன் அடைந்து, அஞ்ஞானம் என்னும் இருளினை அகற்றி சாதகன் ஒருவன் தன்னைத் தானே தயார் செய்து கொள்கிறான்.

பின் நன்றாக பக்குவப்பட்டபின், இறுதியாக கடைசி சக்ரமான சகஸ்ர சக்ரத்தில், பரமன் சிவனை அண்ட சராசரங்களிலும் நிறைந்திருக்கும் சைதன்யமாக உணர்வதாகும், திரை விலகி, தானும் அந்த பிரம்மமாக இருக்கிறேன் என்கிற உண்மை அறிவினை உணர்வதும் இறுதியாகும்.



உசாத்துணை :
1 )ரத்னா நவரத்னம் (Navaratnam, Ratna.
Karttikeya, the divine child: the Hindu testament of wisdom. Bombay, Bharatiya Vidya Bhavan, 1973.)
2) Himalayan Academy - Hinduism Today Magazine

Friday, November 23, 2007

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா - என்
அகம்அது வீடு கொள்ள வரும்முருகா

வருவது வரட்டும் என உனை நான் பற்றிட
உறுதுணை இருக்குது உன் ஆற்றுப்படை.

அறுபடை வீடுதன் பொருளென்ன பெருமானே?
அருமருந்தாய் யோகியரும் சொல்வதென்னே?

கனல் அது பொறியாகி எழுந்தி(ட்)ட மூலதாரத்தில்
கருவாகி தண்டினில் ஏற்றிடும் திருப்பரங்குன்றமோ

மறைபொருள் உணர்த்திடும் சுவாதிஷ்ட்டானத்தில்
தவநிலையில் நின்றி(ட்)ட திருச்செந்தூரோ

பயம்தனை அகற்றிடும் மணிப்பூரத்தில்
தடைகளை தகர்த்தி(ட்)ட பழநியோ

நேரடியாய் தன்அறிவு தூர்ந்திடும் அனஹதத்தில்
சுழன்றிடும் இதயச் சுடராக சுவாமிமலையோ

இறை அன்புக்கதவை திறந்திடும் விசுத்தியில்
நிறை அன்பினை அருளும் திருத்தணிகையோ

உச்சியில் உறைந்திடுவானை பற்றிட ஆக்ஞைசக்ரத்தில்
நெற்றிக்கண் பற்ற எரியும் பழமுதிர்ச்சோலையோ

அறுபடை வீடுதன் பொருள்தனை அருள்வாயே,
அருமருந்தாம் உனை பற்றிடச் செய்வாயே,

முருகா, முருகா, முருகா, முருகா, முருகா, முருகா.

Tuesday, November 20, 2007

இது எந்த இடம்? (விடை பதிவின் இறுதியில்)

இயற்கையின் அழகே அழகு...



ரம்யமான இந்த நீர் வீழ்ச்சியின் பெயர் என்ன?



எங்கே இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்!






இன்னொரு படமும் சேர்த்திருக்கிறேன்:



படங்களை பெரிதாக பார்க்க, படத்தை அழுத்தவும்.

புதிருக்கான விடை:

ஜோக் அருவி (Jog Falls, கன்னடம்:ಜೋಗ ಜಲಪಾತ ),
கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த அருவி, இது இந்தியாவில் உள்ள பத்து உயரமான அருவிகளில் ஒன்றாகும்.

இது ஷராவதி ஆறிலிருந்து 253 மீட்டர் உயரத்தில் இருந்து விழுகிறது.
அருவியின் அகலம் 1550 அடி.

இந்த அருவியானது கெருசொப்பெ அருவி எனவும் ஜோகதகுன்டி அருவி எனவும் அழைக்கப்படுகிறது. (கெருசொப்பெ வில் இருந்து 18 மைல்)

அருவி நான்காக பிரிந்து வருகையில், நான்கு பெரிய பகுதிகளுக்கு நான்கு பெயர்களும் உண்டு: ராஜா, ராணி, ராக்கெட், ரோரர் (Roarer)

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை சீசன் காலம். சென்று பார்க்க ஏற்ற தருணம்.

பெங்களூரில் இருந்து 379 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மிக அருகே
உள்ள ரயில் நிலையம் - ஷிமோகா. (104 கிலோமீட்டர்)

மேலதிக விவரங்களுக்கு
ஆங்கில விக்கிபீடியா

Sunday, November 18, 2007

'நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?' : நரேந்திரன்

'நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?'
'எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?'


இப்படி எல்லோரிடமும், இறுதியாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடமும் கேட்ட அந்த வங்காளத்துச் சின்னப்பையன், நரேந்திரனைப் (நரேந்திரநாத் தத்தா) பற்றி நமெக்கெல்லாம் நன்றாக தெரியும். விவேகானந்தரான அவர் கதை நமக்கு எப்போதோ சொல்லப்பட்டு விட்டதல்லவா? அது சரி, நரேந்திரனின் பயிற்சிக்கூடம் எப்படி இருந்திருக்கும்? விவேகானந்தர் எப்படி கடவுளை கண்டறிந்தார்? சுவையான சில சம்பவங்கள் மூலமாக பார்ப்போம்.

முதலாவதாக, இராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்கு இந்த ஒரு வழியினைத்தான் பின்பற்ற வேண்டும் என்றெந்த கட்டுப்பாட்டினையும் விதிக்கவில்லை. அவரவர் பின்புலத்திற்கு தகுந்தவாறு தங்கள் வழியினில் தங்கள் இறைஅறிவுத் தேடலில் ஈடுபடலாம். அவ்வாறே நரேந்திரனுக்கும். அதே சமயம், நரேந்திரனின் பயிற்சி முறைகள் பரமஹம்சரால் நேரடியாக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன.

பயிற்சிக்கூடத்தில் சக மாணவர்களுக்குள் பல சமயம் அவர்களுக்குள் வாக்குவாதம் வரும். பல கடவுள்களைப் பற்றியும், பல நம்பிக்கைகளைப் பற்றியும் விவாதங்கள் வளரும். இந்த விவாதங்களில் நரேந்திரனின் பேச்சுத் திறமைகளை தொலைவில் இருந்து ரசிப்பார் ராமகிருஷ்ணர். அப்படி ஒரு சமயத்தில், ராகல் என்னும் சக மாணவரின் காளி பக்தியை நரேந்திரன் கிண்டல் செய்வதைப் பார்த்து, மற்றவகள் இறை நம்பிக்கையை சிதைக்கும் படியாக ஏதும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.

இன்னொரு சமயம், இராமகிருஷ்ணர் விளக்கியிருந்த அத்வைதக் கோட்பாடுகளைப்பற்றி மாணவர்கள் விவாத்தித்து கொண்டிருந்தனர். அப்போது நரேந்திரனோ, 'இது என்ன பிதற்றல், இறைவன் எங்கேயும் இருக்கிறானாம். அருகிலிருந்த ஜாடியைக் காட்டி, இந்த ஜாடியிலும் இருக்கிறானம், அதன் மூடியிலும் இருக்கிறானாம்' - என்று கிண்டலாகச் சொல்லவே, அனைவரும் சிரித்து விட்டனர். இவர்களின் நகைப்புக்கு காரணம் அறிந்து அங்கு வந்த இராமகிருஷ்ணர், நரேந்திரனைத் லேசாக தொட்டுவிட்டு சென்று விட்டார். நரேந்திரனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு நரேந்திரன் பார்ப்பதில் எல்லாம் பரப்பிரமம் தெரிந்ததாம்!. அத்வைதத்தின் சாரம் அப்போதே நரேந்திரனுக்கு காணக்கிடைத்தாலும் முழுஅறிவினைப் பெறுவதற்கு பின்னொரு நாளானது.

ராமகிருஷ்ணரும் தன் மாணவர்களை பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தி வந்தார். ஒருமுறை, ஒரு காரணமே இல்லாமல் நரேந்திரனுடன் சில நாட்களாக பேசவே இல்லை. முகமெடுத்துக்கூட பார்க்காமல் அலட்சியப்படுத்தி வந்தார். சில நாட்கள் கழித்து, அவரே நரேந்திரனிடம், 'உன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறேன். நீயேன் தினமும் இங்கே திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கிறாயே?' என்றார் கோபமாக. நரேனோ, சாந்தமாக, 'உங்கள் மீதுள்ள அன்பினால் உங்களைப் பார்க்க வருகிறேன், நீங்கள் பேசுவதைக் கேட்பதற்காக அல்ல' என்று சொன்னார். நரேனின் பதிலில் மகிழ்ந்த இராமகிருஷ்ணர், 'நல்லது, உன்னை சோதனை செய்யவே இப்படிச் செய்தேன். என் வெளி அணுகுமுறையில் மாற்றத்தினால் நீ மாறுகிறாயா என்று பார்த்தேன். வேறொருவாராய் இருந்தால் இங்கே திரும்பி வந்திருக்கமாட்டார்' என்றார்.

ஒருமுறை நரேந்திரனை அழைத்து, பலவிதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார். நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார். உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ." என்று மறுத்து விட்டார்.

இராமகிருஷ்ணரைப்போல் நரேந்திரனால் உள்ளொளியில் அமைதியாக ஒளிர்ந்திட இயலவில்லை. தனக்கு தியானம் சொல்லித் தரும்படி மன்றாடிட, அதற்கு இராமகிருஷ்ணரோ, "கடவுள் நம் பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். நீ கடவுளைப் பார்க்கவும், பேசவும் முடியும் - என்னுடன் நீ பேசுவதைப் போலவே. அவர் பேசுவதைக் கேட்கவும் அவரைத் தொடுவதை உணரவும் முடியும்." என்றார். தொடர்ந்து, "நீ தெய்வங்களின் உருவங்களில் நம்பிக்கை அற்றவனாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலான ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால், அவனிடம் கேள் - 'இறைவா, நீ யாரென்று நானறியேன். என் மீது கருணை கொண்டு, உன் நிஜ சொருபத்தினை காட்டிடுவாய்' என வேண்டிடு. உன் வேண்டுதல் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில், நிச்சயம் அவன் அதற்கு செவி மடுப்பான்." என்றாரே பார்க்கலாம்.

உசாத்துணை : விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தா

(இன்னமும் வளரலாம்...)

Saturday, November 10, 2007

எங்கிருக்கிறான் இறைவன்?

இறைவன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு முதன் முதலில் சொல்லித்தந்த வரிகள் - இந்த வள்ளலாரின் வைர வரிகள் தான். ஏதோ ஒரு வகுப்பு, எதுவென்று நினைவில்லை - தமிழ் பாடப் புத்தகத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலாக வரும்:


எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்
எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே
எனினும் செவிடர் கேட்பாரோ?

எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறைவனே.

அந்த வயதில், கடவுள் என்றால் படங்களில் பார்த்த சிவனோ, முருகனோ, திருமாலோ, விநாயகனோ - இப்படி இன்னும் பலரின் திருமுகங்கள் தான் நினைவுக்கு வரும். அந்தப் பருவத்தில் - இப்படி யார் ஒருவரின் பெயரும் இல்லாமல், இறைவன் இவன் என்று சொன்ன அந்த வரிகள் என் கவனத்தை கயிற்றால் கட்டி இழுத்தன போலும். எளிதான அந்த வரிகளின் சக்தி இன்றைக்கும் பிரம்மிப்பாகவே இருக்கிறது.

யார் இறைவன் என்றெல்லோரும் தேடி அலைகின்றார். ஓராயிரக்கணக்கில் கதைகள் சொல்லி எப்படியெல்லாமோ அவனைப் பற்றி பலரும் சொல்லி விட்டார். எனினும் அந்த தேடல் தீர்ந்த பாடில்லை. மண்ணில் எத்தனை மூலை முடிக்கிலும் தேடினாலும் அவன் மாயவனாகவே இருக்கிறான். ஏற்கனேவே பலர் தேடிக் கண்டதாகச் சொன்னாலும் ஒவ்வொருவரும் மீண்டும் தானாகவும் தேட வேண்டியிருக்கிறது. மனிதர் தேடும் வேறு எந்த பொருளுக்கும் இப்படி ஒரு தனித்துவமான குணம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்குவது ஒரு குறிப்பிட்ட உருவத்தில் இறைவனைக் குறிக்குவது போலாகாதா? அப்படி குறுக்கப்பட்ட கடவுளும் கடவுளாகுமோ என்று கேட்கலாம். கடவுளே இவ்வுலகம். அனைத்து உருவங்களும் அவர் உருவங்களே. எந்த உருவத்தில் வேண்டுமானாலும் அவரை வழிபடலாம். கீதையில், இறைவன் ஸ்ரீகிருஷ்ண உருவத்தில் அர்ஜூனனுக்கு இவ்வாறு உபதேசம் சொல்கிறார். "இறைவனான என்னிடம் இருந்தே அனைத்தும் தோன்றுகினறன, நிலை பெறுகின்றன, ஒடுங்குகின்றன".

எங்கும், என்றும், எவ்வுயிரும் எல்லாமும் ஆன இறை அவன் பிரதிபலிக்கும் இடங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பரம்பொருளான சைதன்யமோ அளவற்றது. எல்லையில்லாதது. அதே சைதன்யம் என்னும் பேரறிவுதான் (Super Consciousness), மேலே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதா உபதேசத்தில் 'என்னிடம் இருந்து' என்ற சொல்லாக மலருகிறது. அதே சைதன்யம்தான் நம்மையும் 'நான்' எனச் சொல்ல வைக்கிறது. நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நீங்களும் நானும் கூடச் சொல்லலாம். நான் இந்த உடல் அல்ல, நான் இந்த மனம் அல்ல, நான் என் அவையங்கள் அல்ல, நான் புத்தியா, நான் ஒன்றுமில்லாமல் சூன்யமா, பின் நான் யார், என்ற சுய வினவலின் மூலமாக அறிந்து, அந்த அறிவின் மூலமாக நான் அந்த சைதன்யமாகவே இருக்கிறேன் என்று உணர்ந்து சொல்லலாம்.

வேதாத்திரி மகரிஷி அழகான எடுத்துக்காட்டு ஒன்று தருவார். எங்கெங்கும் நிறைந்திருக்கும் பிரம்மத்தினை, ஒரு பெருங்கடலுக்கு ஒப்பாக எடுத்துக் கொண்டு, அதிலிருந்து ஒரு குடுவையில் நீர் முகர்ந்து கொண்டால், அந்த குடுவை நீர்தான் நம் ஜீவன். குடுவை நீர் மீண்டும் கடலில் கலக்கும்வரை, அது வெறும் நீர்தான். கடலில் கலந்த பின்னோ அது கடல். கடலில் எந்தப் பகுதி நீர் இந்தக் குடுவை நீர் எனப்பிரித்தறிய இயலாது.அதுபோலவே ஜீவன் பரமனை அடைந்த பின்னரும்.

சுவாமி தயானந்த சரஸ்வதி கடலின் அலைகளுடன் ஒப்பிடுவார். பெருங்கடலில் சிறிய அலை ஒன்று கரையை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான் அழிந்து விடுவேனே என்ற வருத்ததுடன். "நான் அழியுமுன் என்னை காப்பாற்ற யாருமில்லையா" என ஓலமிடுகிறது. அதைக்கேட்டு அருகில் வந்த பேரலை ஒன்று, சிற்றலையிடம், "வருத்தப்படாதே, கண நேரமே தோன்றி மறையும் அலையல்ல நீ, இந்த பெருங்கடல் நீ என உணர்வாய். உன்னையும், என்னையும், ஏனைய அலைகளையும் படைத்த கடவுள் இந்த கடலே. உன்னில், என்னில் மற்றும் ஏனைய அலைகளிலும் இந்த கடலே நீராக வியாபித்து இருக்கிறது. நீயும் இந்தக் கடலும் வேறல்ல, அனைவரும் இந்தக் கடலில்தான் இறுதியில் ஒடுங்குவோம்." என்று கூறுகிறது.

இறைவனும் நாமும் உண்மையில் அளவற்ற சைதன்யம்தான். சைதன்யமான நம்மிடத்தில்தான் அனைத்துலகமும் இருக்கிறது. அதைப்படைத்த இறைவனும் இருக்கிறான்.

Monday, November 05, 2007

ரமணரிடம் சில கேள்விகள்

முன்பொருமுறை திருமதி பிக்காட் என்கிற ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் ரமணாசரமம் வந்திருந்தார். அங்கு ரமண மகரிஷியை சந்தித்து அவரிடம் உணவு முறைகளை பற்றி சில கேள்விகளை எழுப்பினார். அப்போது நடந்த சுவையான உரையாடல் இங்கே, தமிழில்:

பிக்காட்: ஆன்ம ஞானம் பெற விழையும் சாதகனுக்கு எந்த வகையான உணவினை பரிந்துரைக்கிறீர்கள்?
ரமணர்: சாத்வீக உணவு - அதுவும் குறைந்த அளவில்.
பிக்காட்: சாத்வீக உணவு என்றால் என்ன சொல்ல முடியுமா?
ரமணர்: ரொட்டி, பழம், காய், பால் போன்றவை...
பிக்காட்: வட இந்தியாவில் சிலர் மீன்களை உண்கிறார்களே, அது சரியா?
(இந்த கேள்விக்கு பதிலேதும் இல்லை)
பிக்காட்: ஐரோப்பியர்களான எங்களுக்கு எங்கள் ஒருவித உணவு பழகிவிட்டது. அதை மாற்றினால், உடலும் அதனால் மனமும் சக்தியிழந்து விடுகிறது. உடல் நலம் பேணுவது அவசியம் அல்லவா?
ரமணர்: நிச்சயமாக. உடல் சக்தியிழக்கையில், வைராக்கியம் என்னும் சக்தியை மனம் பெறுகிறதே!
பிக்காட்: ஆனால், நாங்கள் மனவலிமை இழக்கிறோமே?
ரமணர்: மனவலிமை என்று எதைச் சொல்கிறீர்கள்?
பிக்காட்: உலகத்தின் பந்தங்களில் இருந்து விடுபடும் சக்தியினை சொல்கிறேன்.
ரமணர்: உண்ணும் உணவைக் கொண்டே மனம் வளர்கிறது. அதனால் உணவு சாத்வீகமாக இல்லாவிட்டால் அதனால் மனமும் பாதிக்கப்படுகிறது.
பிக்காட்: நிஜமாகவா, அப்படியென்றால், நாங்கள் எப்படி சாத்வீக உணவுக்கு வழக்கப்படுத்திக்குள்ளது.
ரமணர்: ( அருகில் இருக்கும் இவான்ஸ்-வெண்ட்ஸ் என்பவரைக் காட்டி ) நீங்கள் எங்கள் உணவை உண்ணுவதால், ஏதேனும் சங்கடம் இருக்கிறதா?
இவான்ஸ்-வெண்ட்ஸ்: இல்லை, ஏனெனில் அது எனக்கு பழகிவிட்டது.
பிக்காட்: பழக்கம் இல்லாதவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?
ரமணர்: பழக்கம் என்பது சூழ்நிலைக்கேற்ப தன்னை தயார் செய்து கொள்வதுதான். இங்கே மனம் தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. மனம் சில வகையான உணவுகளை சுவையானதாகவும், நல்ல உணவாகவும் நினைத்துக் கொண்டு இருக்கிறது.
பிக்காட்: புலால் உணவுக்காக உயிர்கள் கொல்லப்படுகிறதல்லவா?
ரமணர்: யோகிகளுக்கு அஹிம்சையே தலையாய கொள்கை.
பிக்காட்: செடிகளுக்கும், அதில் காய்க்கும் காய், பழங்களுக்கும் உயிர் இருக்கிறது அல்லவா?
ரமணர்: நீங்கள் உட்கார்ந்திருக்கும் மேடைக்கும்தான் உயிர் இருக்கிறது!
பிக்காட்: நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புலால் அற்ற உணவுக்கு பழகிக் கொள்ளலாமா?
ரமணர்: அதுவே வழி.

கிளிப் பாட்டொன்று கேட்கலையோ...

திருவைப் பணிந்து நித்தம்
செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே!
மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு
விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே!
கவலைப் படலாகுமோ?

துன்ப நினைவுகளும்
சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே!
அன்புக் கழிவில்லை காண்!

ஞாயிற்றை யெண்ணி யென்றும்
நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே!
அழிவின்றி வாழ்வோமடீ!

தூய பெருங்கனலைச்
சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே!
நெருங்கித் துயர் வருமோ?



மாண்டு ராகம் - ஆதி தாளம்
எஸ். சௌம்யா பாடிடக் கேட்கலாம்:

சென்ற வருடம் அக்டோபர் 12இல், சென்னை வானொலி நிலையத்தில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்சியில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல் இது.

வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும் வினைப்பயன் என்று உணர்ந்தவர், எந்த செயலுக்கான விளைவிலும் தன்னை அலைக்கழிக்க விடார். மாறாக செயலின் விளைவை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்வார். இன்பத்தில் திளைத்து தன்னை மறப்பதும் இல்லை. துன்பத்தில் வீழ்ந்து துழல்வதும் இல்லை. சூரியனைப்போல் நடு நிலமையுடன் தன் செயலின் பயன்களைக் கொள்வார், அழிவில்லாமல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்.

வந்த துன்பத்தினை போக்குவதற்கான வழியாக அன்பை பயன்படுத்தச் சொல்லுகிறார். அன்பினால் துன்பம் செய்தவரை அணுகுங்கால் பகை விலகுவதோடு, தாம் கொண்ட துன்பமெல்லாம் அழியும். துயரம் விளைவிக்கும் சோர்வும், பயமும் நம்மிடம் இருந்து ஓட்டம் பிடிக்கும்.

அடுத்ததாக, இனிமேல் துயர் வராமல் இருப்பதற்கான வழியாக, அறிவுச்சுடராக விளங்கும் சுப்ரமணியனை பணிந்திட்டால் போதும், துயர் நெருங்கித்தான் வருமோ என்கிறார். யாமிருக்க பயமேன் என்று சொன்னவல்லவா அவன்!

திருவைப் பணிந்து செம்மையுடன் தினமும் நம் தொழில் செய்வோமடி கிளியே. வருவதெல்லாம் வரட்டும் என்று வருவதை ஏற்றுக்கொண்டு, என்றென்றும் மகிழ்வுற்று இருப்போமடி கிளியே!

Sunday, October 28, 2007

மீண்டும் மீண்டும் கர்மா!

மீண்டும் மீண்டும் கர்மா!

ஆம், மீண்டும் கர்மா பற்றியொரு பதிவு. இப்போது கொஞ்சம் விரிவாக...
பலர் கர்மா என்ற சொல்லையோ அதன் விளக்கத்தையோ புரிந்து கொண்டிருந்தாலும், அன்றாட வாழ்வியலில் அதன் பொருளை உணர்வதில்லை.

தனக்கு மிகவும் நெருங்கிய உறவொன்றை இழந்த நண்பர் ஒருவர் கதறினார் - "எனக்கு மட்டும் இறைவன் ஏன் இப்படி செய்கிறான், நான் என்ன பாவம் செய்துவிட்டேன்..." என்று.

ஆக்கமும், நடத்தலும், நீக்கலும் அவன் செயல்தான் என்றாலும், ஒருவருடைய கர்மாவினை இறைவன் நிர்ணயிப்பதில்லை. ஒருவருக்கு உடலில் புற்று நோய் வந்து உடல் மெலிந்து போகவும், இன்னொருவர் திடகாத்திரமான உடல் கட்டுடன் விளையாட்டு வீரராக புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்றும் எங்கிருந்தோ இறைவன் நிர்ணயிப்பதில்லை. எப்படி அவரவர் செய்யும் உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு அவர் உடற்கட்டு அமைகிறதோ, அதுபோல, உங்கள் ஆத்ம சக்தியினை எந்த அளவிற்கு நீங்கள் பயற்சியில் ஈடுபடுத்துகிறீர்களோ, அதற்கேற்றாற்போல் உங்கள் கர்மாவும் அமையும்.

இன்னமும் சொல்லப்போனால், கர்மாவே உங்களுக்கு ஒரு ஆசானாக ஆக்கிக் கொள்ள முடியும். பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தம் கருமமே கட்டளைக்கல்லெனத் தெளிதலும், எக்கருமம் எந்த விளைவினை ஏற்படுத்தும் என்னும் அனுபவ அறிவும், இருந்தால், அதுவே அவரவர்க்கு கீதா உபதேசம்.

கர்மா என்பது தலைவிதி அல்ல. அது முன்பே நிர்ணயிக்கப்பட்டது அல்ல. மேலே இருந்து கொண்டு எந்த ஒரு கிரகமோ, நட்சத்திரமோ, ஏன் கடவுளே கூட, இந்தா, பிடி, உனக்கு இந்த கர்மா என்று வழங்குவதில்லை. நம் வாழ்வில் நடக்கும் எந்த சம்பவத்தையும் இறைவன் முன்பாகவே தீர்மானிப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால், இறைவன் நமக்கு எந்த சோதனையும் கூட தருவதில்லை.

நம் கர்மாவினை நாமே தீர்மானிப்பதால், என்ன செய்தால் நல்ல கர்மா கிட்டும்? எவ்வாறு கர்மாவினை மேலாண்மை செய்யலாம்?. இதோ, உலகப்பொது மறையில் இருந்து பத்து மேலாண்மை முத்துக்கள்:

1. பதிலடி கொடுக்கத் தேவையில்லை. பதிலடி கொடுப்பதால், புதிய கிளைக் கர்மா உருவாகிட வழி வகுக்கும். அகத்தாய்வு செய்யின், அதற்கு அவசியமே இல்லை என்பதறிவீர்.
மறத்தல் வெகுளியை யார்மட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். (303)


2. நீங்களே பொறுப்பேற்றுக் கொள்ளவும். தீமை விளையும் போது, அதற்கு காரணமானவரை பொறுப்பாக்குவது இயற்கை. ஆனால், நன்மையும் தீமையும் மற்றவரால் வருவதல்ல, அதற்கு அவர் ஒரு கருவி மட்டுமே உணரவும். ஏனெனில்,
நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன் (379)
3.மறப்போம், நன்மை செய்வோம். தனக்கு தீமை செய்தவரின் மேல் சினம் கொண்டால், அந்த சினத்தின் விளைவால், அடி மனது எப்போதும் கனன்று கொண்டே இருக்கும். ஆனால் அதை மறந்து, நன்மை செய்யும்போது, அதுவே நல்ல கர்மாவாக திரும்பும்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். (314)

4. விளைவுகளை யோசிக்கவும். இன்னொருவருக்கு துன்பம் விளைவித்தல் எளிது. அதன் விளைவு தனக்குத்தான் கர்மாவாக வந்து முடியும் என்ற அறிந்தவர், அதனாலாவது, மற்றவர்க்கு துன்பம் தராமல் இருப்பர்.
நோயெல்லாம் நோய் செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். (320)

5. தீவினை வேண்டாம். இன்னொருவரின் துன்பமும், தம் துன்பம் என்று கருதினால், தீவினைகளை தவிர்க்கலாம்.
அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. (315)

6. இறையருள் நாடவும். நீங்கள் தனிமரமாய் உங்கள் கர்மாவினை தூக்கிக் கொண்டு திரிய வேண்டியதில்ல. எல்லா வளமும் அருள காத்திருக்கிறான், எல்லாம் வல்லவன். அவன் அருளை நாடினால், ஏற்கனவே செய்த வல்வினைகளை தகர்த்திடும் மன உறுதியும், தூய செயல் ஆற்றலும் கிட்டும்.
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. (4)

7. ஏற்கனவே இருக்கும் கர்மாவை குறைக்க/தீர்க்க முயலவும். ஒருவர் அறவழிகளில் தொடர்ந்து நடந்து வந்தால், ஏற்கனவே செய்த தீவினைகளால் வரப்போகும் துன்பமும் குறைந்து விடும்.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். (33)

8. அறவழியில் நடந்து நல்ல கர்மாவினை சேர்க்கவும். ஏனெனில்,
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். (38)
9. எந்த சமயத்திலும் யாரையும் இழிவு செய்ய வேண்டாம். ஏனெனில்,
எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. (317)


10. அகத்தேடல் எனும் அருந்தவத்தில் ஈடுபடவும்.
அகம் ஒளிரும் நிலை பெற்றிட, உள்ளார்ந்து, உள் மனதில் இறைவனின் பிம்பத்தினை தேடுவர். அவர் நற்சிந்தனையுடன் செயல்பட்டு தமது கர்மா முழுதும் தீர்த்திட, பிறவிப் பெருங்கடலை கடந்திட அருள் பெறுவர்.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோக்கிற் பவர்க்கு. (267)

மொத்தத்தில் நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம், நல்லதே நடக்கும்.

இதில் இறைவனின் பங்கென்ன என்று கேட்டால், இறைவனை வேண்டி நிற்பதனால், கர்மாவில் குறுகிட்டு அதை குறைப்பதிலோ, அல்லது தற்காலிகமாக தள்ளிப்போடவோ அவனால் இயலும். சரி, நல்ல கர்மாவையே ஒருவர் பெரிதும் சம்பாதித்து வைத்திருக்கிறார் என்றால், அவருக்கு இறைவனின் துணை தேவையில்லையா என்று கேட்கலாம். அப்படிப்பட்ட ஒருவருக்கு, இறைவன் இன்னொன்றாக இருக்காது. அவர் ஆன்மீகவாதியாக இருப்பாரென்றால் தான் நடக்கும் அவன் வழியே அற வழி என்பார். எங்கெங்கும் நிறைந்தவன் இறைவன் என்று எல்லாவற்றிலும் இறைவனைப் பார்ப்பார் அவர். ஆன்மீகத் தேடலில் அடிஅடியாய் எடுத்து வைத்து, தம் ஆத்ம சக்தியினை வளர்த்துக் கொண்டவருக்கு, மொத்த கர்மாவும் எளிதில் தீர்ந்திடும். மறுபிறவி இல்லா நிலையும் வாய்க்கப் பெற்றிடும்.

ஜோதிடமும் கர்மாவினால் இப்படி நாம் நடக்கலாம் என்பதை, கோள் மற்றும் நட்சத்திர அமைப்புகளின் உதவியுடன் கணித்துச் சொல்வதுதான். "கோள் என்ன செய்யும், கொடுங்கூற்று என்ன செய்யும், ஈசன் அவன் அருள் இருக்கையிலே?".

மேற்கோள்:
1. கர்மா - குவை இந்து ஆதினம்
2. கர்மா - "இன்றைய இந்து" இதழ்
3. திருக்குறள் - Weaver's wisdom

Tuesday, October 23, 2007

இந்து இறை நம்பிக்கை ஒன்பது

இந்து சமய நம்பிக்கைகள் எல்லாவற்றையும் பட்டியலிட்டு மாளாது என்றாலும், பொதுவான மற்றும் முக்கியமான ஒன்பது நம்பிக்கைகள் இங்கு பட்டியலிடப் பட்டுள்ளது.

1. எங்கெங்கும் நிறைந்திருக்கும், எல்லாம் வல்ல இறைவன் ஒருவனே.

2. வேதங்களிலும் ஏனைய மறைகளிலும், ஆகமங்களிலும் இறை உண்மை உறைக்கப்பட்டிருக்கிறது.

3. அண்ட சராசரங்களும், அதிலுள்ள எல்லாமும் 'ஆக்கம் - வாழ்வு - இறப்பு' என்னும் முடிவில்லா சுழலில் தொடர்கின்றன.

4. ஒவ்வொருவரும் அவரது எண்ணம், சொல், செயல் மூலமாக தமது கர்மாவினை செதுக்கும் சிற்பியாக செயல்படுகின்றனர்.

5. இறப்பிற்குப்பின் ஒவ்வொரு ஆத்மாவும் மறுபிறப்பு எடுத்து பிறவிச்சுழலில் தொடரும். ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.

6. உருவ வழிபாடு, சடங்குகள், பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் மூலமாக தங்கள் கண்ணுக்கு தெரியாத உலகங்களில் இருக்கும் இறைஅம்சங்களுடன் தொடர்பு கொள்வதாக நம்புகிறார்கள்.

7. சத்குரு ஒருவரின் வழிநடத்தும் துணையுடன் நல்லொழுக்கம், நன்நடத்தை, யாத்திரை, சுய-வினவல், தியானம் மற்றும் இறைவனுக்கு தன்னை முழுதும் அர்பணித்தல் போன்றவற்றால் எங்கும் நிறைந்த பிரம்மமான இறைவனை அறியலாம்.

8. எல்லா உயிர்களும் புனிதமானவை, அன்பு செலுத்தப்பட வேண்டியவை. எந்த உயிருக்கும் மனதாலோ, செயலாலோ தீங்கு விளைவிக்காமல் அஹிம்சைப் பாதையில் நடக்க வேண்டுமென்பதும் இந்துக்களின் நம்பிக்கை.

9. இந்து சமயத்தினைப் போலவே, மற்ற சமயங்களிலும் இறைவனை அடைவதற்கான உண்மையான வழிகளும் உண்டு.

Sunday, October 14, 2007

கர்மா, மறுபிறவி

இந்து சமயத்தில் கர்மா என்ற சொல்லுக்கு செயல் என்பது பொதுவான பொருள். ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை ஏற்படும் என்பது உலகப் பொது வழக்கு. அந்த வழக்கு போலவே, இந்து சமயத்திலும் ஒவ்வொருவரின் செயல் வினைக்கும் அதற்கேற்றால்போல் பலன் கிட்டும் என்பதை குறிப்பதற்கு 'கர்மா' சென்ற சொல் பயன் படுத்தப்படுகிறது.

ஒருவன் எப்படி நடக்கிறானோ, அவனும் அது போலவேயாகிறான்
- யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.5


கர்மா என்பது ஒருவருக்கு விதிக்கப்பட்ட தலைவிதி அல்ல. அது அவரவர் வினைப்பயன் ஆகும். அவரவர் கர்மா அவரவர் செய்யும் செயலில்தான் இருக்கிறது. நல்ல செயல்களை செய்தால் அதன் பயன் நன்மை தரும். மாறாக தீவினையோ, துன்பம் தரும் என்பது வேதவாக்கு. ஒருவரின் அனைத்து செயல்களின் பயன்கள், அவரவர் முற்பிறவிச் செயல்பாடுகள் உட்பட, அவரது கர்மாவினை தீர்மானிக்கின்றது.

தமிழ் இலக்கியத்தில் இது ஊழ் அல்லது ஊழ்வினை என்று குறிப்பிடப்படுகிறது. திருவள்ளுவர் 'ஊழ்' (ஊழிற் பெரு வலி யாவுள?) என்ற சொல்லையே பயன்படுத்துகிறார். இளங்கோவோ 'ஊழ்வினை' என்ற சொல்லை கையாள்கிறார்.


இந்து சமயத்தின் முக்கியமான நம்பிக்கைகளில் ஒன்று மறுபிறவி.


ஒருவரின் இறப்பிற்குப்பின், அவரது ஆத்மா முன்பிறவிகளின் மொத்த கர்மாவின் பதிவுகளுடன் அடுத்த உலகுக்குச் செல்கிறது. அங்கு தன் கர்மாவுக்கான பயன்களை அறுவடை செய்தபின், இந்த உலகுக்கு திரும்புகிறது. எப்படி கர்ம வினைகள் ஒருவருடைய செயலின் தேர்வின் அடிப்படையில் அமைகிறதோ, அதுபோலவே, அதனாலேயே, மறுபிறவியும் அவரவர் தேர்ந்தெடுப்பதுதான்
- யஜீர் வேதம், பிரகதாரண்ய உபநிடதம் 4.4.6

மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான பிறவிச்சுழலின் ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.

ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை மோட்சம் அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.

குறிப்பு: இப்பகுதிகள் தமிழ் விக்கிபீடியாவில் இருந்து மீள்விக்கப்பட்டது.

Saturday, September 29, 2007

ஸ்மார்த்தம் - ஒரு அறிமுகம்

சென்ற பதிவில் அருந்ததி என்பவர் ஸ்மார்த்தம் பற்றி விரிவாக எழுதும்படி கேட்டிருந்தார். மேலும் விக்கிபீடியாவிற்கும் கட்டுரை ஒன்று தேவைப்படுகிறது. ஆகவே, இதோ இங்கே எனக்கு தெரிந்தவற்றை கோர்த்து விடுகிறேன்.

ஸ்மார்த்தம் என்பது பழங்காலம் தொட்டே இருந்து வரும் இறைவழிதான் என்றாலும், ஆதி சங்கரர் தான் சீர்தூக்கி ஒரு புதுமுகத்தைக் கொடுத்தார். தனித்தனியாய் அவரவர்க்கு உகந்த இஷ்ட தேவதைகளை வணங்கிக் கொண்டு தனித்தனிப் பிரிவாய் கிடந்தவர்களை அழைத்து, இதோ உங்களுக்கெல்லாம் பொதுவானதொரு ஷண்மதம் என அதற்கான முறைகளை சீர்படுத்தினார். இதன் படி சிவன், சக்தி, திருமால், கணேசர், சூரியன் மற்றும் முருகன்் என்ற அறுவரையும் முழுமுதல் கடவுளாக வணங்கலாம். பொதுவாக இந்த முறையினை பின்பற்றுவர்களுக்கு ஸ்மார்த்தர் என்று இந்நாளில் வழங்கப்படுவாதால், இந்த வழிமுறையை 'ஸ்மார்த்தம்' என்றே வழங்கலாம். இந்த வழியில்் எல்லா வழிகளையும் ஏற்றுக் கொள்ளும், இலகுவான வளைந்து கொடுக்கும் தன்மையை ஏற்படுகிறது. இன்று இந்து மதம் என்று நாமெல்லாம் பொதுவாக சொல்லும் ஒரு பொது முகம் உருவாகுவதற்கு இந்த வழிதான் தான் வித்து.

தத்துவப்படி ஸ்மார்த்தர்களுக்கு ஆதி சங்கரரின் அத்வைதம் தான் அடித்தளம். அதாவது இறைவன் ஈஸ்வரனும், நம் ஜீவனும் உண்மையில் முழுதிலும் பிரம்மமே. மாயையினால் சிக்குண்டதால், ஈஸ்வரன் வேறு ஜீவன் வேறு என்பதாகத் தெரிகிறது. உயர் ஞானம் கிட்டுமாயின், இந்த வேறுபாடு தெளிந்திடும்.

முக்தி அடைவதற்கு ஒரே பாதை ஞான யோகம்தான் என்பது பெரும்பாலான ஸ்மார்த்தர்களின் நம்பிக்கை. அறிவின் தேடலாலும், குண்டலினி அல்லாத யோக முறையினாலும். குருவின் ஆசியுடன் தொடங்கப்படும் இந்த யோக நெறியில் த்யானிப்பவர், தன்னையே ப்ரம்மமாக நினைவில் நிறுத்தி, மாயையின் தளையில் இருந்து விடுபட முயல்வார். இவர்களின் தீர்கமான, முடிவான இலக்கானது, நானும் அந்த ப்ரம்மமாக இருக்கிறேன் என்று உணர்வதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் எதெல்லாம் அஞ்ஞானம் (அவித்யயை) என்பதை உணர்ந்து தோற்ற மயக்கத்திலிருந்து விடுபட வேண்டும்.

முக்தி அடைதலுக்கு வெறும் மந்திரங்களை ஓதுவதாலாலோ, உயிர் பலி கொடுப்பதாலோ அல்லது தன்னையே வருத்தி நூறு உபவாச நோன்புகள் இருப்பதாலோ அடைந்து விட முடியாது. மறைகளை படித்து உணர்வதும், ப்ரம்மத்தின் பிம்பத்தினை தன்னுள் கண்டுணர்வதும், த்யானத்தினாலும் அஞ்ஞானம் அகன்றிட வழி வகுக்கும்.

ஞானம் அடைதலுக்கு ஞான யோகமே வழி என்றாலும் அந்த சித்தி கிட்டுவதற்கு மூன்று முன்பாதைகளையும் சொல்கிறார்கள். அவையாவன: பக்தி யோகம், கர்ம யோகம் மற்றும் ராஜ யோகம்.


ஸ்மார்த்தர்களின் அன்றாட செயல்பாடுகள்:

1. ஸ்நானம்

2. சந்தியாவந்தனம்

3. ஜபம்

4. பூஜை

5. உபாசனை

6. அக்னிஹோத்ரம் அல்லது அக்னிகிரையம்

இவை தவிர அமாவாசை தர்பணம் மற்றும் ஸ்ரார்தம் செய்வதும் இவர்கள் வழக்கம்.

இவர்கள் வழி செல்லும் மறைகள்:

வேதங்கள், அவற்றின் உபநிஷதங்கள், ஸ்மிருதி, புராணங்கள் மற்றும் இதிகாசங்கள்

மேலும் விவரம் அறிய இந்த தளங்களைப் பார்க்கவும்:

* ஆதி சங்கரர் - அத்வைதம்
* அத்வைத வேதாந்தம்
* சிருங்கேரி சாரதா பீடம்
* சங்கர சம்பிரதாயம்
* இந்து மதத்தின் நான்கு பிரிவுகள்
* ஸ்மார்தர்களின் ஷண்மதம்
* ஸ்மார்த்தம்

Friday, September 28, 2007

இறைவழி நான்கு

உலகம் யாதும் இந்தியாவைத் தேடி காலம் காலமாய் நாடுவது ஆன்மீகத் தேடலில் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை. உவப்போடு சொல்லிடலாம், உலகத்தில் இறைவழியில் நடந்திடும் இந்தியர்களை பார்த்து உலகமே வியப்படைகிறது என்று.

இப்படி பெருமைகள் பலவும் என்றாலும், பலப்பல சிறுமைகளும் இருக்கத்தான் இருக்கிறது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் தானாக தோன்றிய வழிகளிலும், நம்பிக்கைகளிலும் உண்மைகள் பல இருந்தாலும், வேண்டாத, ஒவ்வாத நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எதை எடுப்பது, எதை விடுப்பது என்ற தேர்வு அவரவர் சுயமாக எடுக்க வேண்டிய முடிவுதான் என்றாலும், இந்திய இறைவழிகள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன என்ற அரிச்சுவடி அனைவரும் அரிய வேண்டிய ஒன்று.

இந்து மதத்தின் நான்கு இறைவழிப் பாதைகள் பற்றி என் கற்றலிலும், கேட்டலிலும் அறிந்தவற்றை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதைப் பற்றியெல்லாம் எழுதி பட்டவர்கள் பலர் இருப்பினும்!

இறைவழியில் முக்கிய நான்கு - சைவம், சக்தி வழிபாடு, வைணவம், ஸ்மார்தம்

சைவம்: சிவன் முழு முதல் கடவுள். அறநெறியும், ஞானமும் பெற சத்குரு துணை நாடுவர். ஆலயம் சென்று தொழுவர். யோக நெறியில் ஆழ்ந்து, தனக்குள்ளே இருக்கும் ஈசனை கண்டுணர்ந்து, அவனோடு ஒன்றர கலப்பதே அவரதம்் நோக்கம்.

சக்தி வழிபாடு (சாக்தம்): சக்தியே முழு முதல் கடவுள். சிலருக்கு அவள் சாந்த ஸ்வரூபி. பலருக்கு அவள் பத்ரகாளி. ஓதுதல், மந்திர தந்திர தாந்ரீகங்கள், சக்கரங்கள் மற்றும் ஏனைய முறைகள் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி வழிபடுவர்.

வைணவம்: திருமாலே முழு முதல் கடவுள். திருமாலின் அவதார புருஷர்களில் முக்கியமாக கண்ண பெருமானையும், இராம பெருமானையும் வணங்குவர். இவர்களிடம் ஆழ்ந்த இறை பக்தியைப் பார்க்கலாம். இறை அடியார்கள், ஆலயங்கள் மற்றும் மறைகள் வைணவத்தின் தூண்கள்.

ஸ்மார்த்தம்: முழு முதல் கடவுளை ஆறு வடிவங்களில் வழிபடுவார் - அவை: கணேசர், சிவன், சக்தி, திருமால், சூரியன் மற்றும் முருகன். பக்தியோடு சேர்ந்த ஞான வழிதனில், யோகம் மற்றும் த்யானம துணை கொண்டு, இறைவனை புரிந்து கொண்டு அவனை அடைதலை வழியாய் மேற்கொள்வர்.

்இப்போ, ஒரு சில பொதுவான விஷயங்களில் இவர்களின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போமா?


இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி:

சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.
சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.

ஜீவனும், பரமனும் பற்றி:

சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத முக்தி அடையலாம்.
வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.

பயிற்சிகள்:

சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதகங்களை செய்வது.
சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.


மறைகள்:

சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம்.
சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.
வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள்.
ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள்.

பரவியுள்ள பகுதிகள்:

சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் ஸ்ரீலங்கா.
சாக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்கு இந்தியா - வங்காளம் மற்றும் ஒரிசா.
வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.

Tuesday, September 25, 2007

யாரிந்த நடராஜன்?

எந்த நடராஜனைப் பற்றி இந்த பதிவென்று பார்க்க இந்தப் பதிவின் பக்கம் வருகை தந்த வாசகருக்கு என் வாசக சொல்வதென்ன? எத்தனையோ நடராஜன் இங்கே இருந்தாலும் எல்லா நடராஜனுக்கும் ஆதியாய் ஆதி சிவன்் - ஆனந்த தாண்டவன் - தில்லையின் கூத்தன் - தென்னவர் தலைவன் பற்றித் தான்!

இடது பாதம் தூக்கி ஆடும் நடராஜ சிலை வடிவத்தை பார்த்திரார் வெகு சிலரே இருப்பர். அவ்வளவு பிரபலாமான குறியீடு. சோழர் காலத்தில் வெண்கலத்தில் ஆன நடராஜ சிலைகள் பெருமளவு உருவாக்கப்பட்டன என வரலாறு சொல்வதைப் படித்திருப்போம். நடராஜ சிலை முழுதும் குறியீடுகளாக நிறைந்திருப்பதை பார்க்கலாம்.

அந்தக் குறியீடுகளில் சிலவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

ஒற்றைக் காலில் நின்றாடும் போதும் நடராஜனின் தலை சமநிலையில் நேரக நிற்கிறது.

ஆடுவது தாண்டவமானாலும் சிற்சபை வாசனின் முகமோ சாந்த ஸ்வரூபம்.



இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். இந்த கோலத்திலும்் உமையும் தன்னில் பாதி என்கிறானோ?

முக்கண்ணனின் நெற்றியில், புருவங்களுக்கு மத்தியில், நெருப்பாய் எரியும் மூன்றாவது கண். முக்காலத்தையும் கடந்த ஞானத்தை குறிக்கிறது.



பொன்னம்பலவனின் ஆனந்த தாண்டவத்தில் பல திசைகளிலும் பறக்கிறது அவன் கேசம். கேசத்தில்் ஒரு சீராக முடிச்சுகளைக் காணலாம். அந்த கேச முடிச்சுகளில் கீழே உள்ளவற்றையும் பார்க்கலாம்!

அவற்றில்:

சேஷநாகம் - கால சுயற்சியையும்
கபாலம் - இவன் ருத்ரன் என்பதையும்
கங்கை - அவன் வற்றா அருளையும்
ஐந்தாம் நாள் பிறைச்சந்திரன் - அழிப்பது மட்டுமல்ல, ஆக்கத்திற்கும் இவனே கர்த்தா என்பதையும்
குறிக்கின்றன.


பின் இடது கரத்தில் அக்னி, சிவன் - சம்ஹார மூர்த்தி என்பதை காட்டுகிறது. நமசிவாய என்னும் பஞ்சாக்ஷர மந்திரத்தின் (ஐந்தெழுத்து மந்திரம்) முதல் எழுத்தான 'ந' வைக் குறிக்கிறது இந்தக் கரம்.

ஊன்றி நிற்கும் அவனது வலது கால்களோ, 'ம' என்ற எழுத்தை குறிக்கிறது. மேலும் வலது கால், திரோதண சக்தியை காட்டுகிறது. இந்த சக்தியால் தான் மனிதர் உயர் ஞானத்தை தேடலினால் அனுபவ அறிவாக பெறுகிறார்.


வலது காலின் கீழே இருப்பது 'அபஸ்மாரன்' எனும் அசுரன் - ஆணவத்தினால் மனித மனம் கொள்ளும் இருளைக் குறிக்கிறான். அவனோ நடராஜன் தூக்கிய இடது காலைப் பார்த்து இருக்கிறான் தஞ்சம் வேண்டி.


தூக்கிய இடது கால், ஆணவம் மற்றும் மாயை ஆகியவற்றின் பிடியில் இருந்து விடுபட்டு ஆண்டவனின் அனுக்கிரஹத்தினை அடைந்திட வழி வகை செய்யும்.

முன் இடது கரமோ, பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'வா' வை குறிக்கிறது.


இந்தக் கரம் யானையின் துதிக்கைபோல் இருக்க, தூக்கிய இடது காலைப் பாரும் - அங்குதான் மாயை அகற்றி அருள் தரும் அனுக்கிரக சக்தி இருக்கிறதென கைகாட்டி சொல்கிறது.

பின் வலது கரம், பஞ்சாக்ஷர மந்தரத்தின் அடுத்த எழுத்தான 'சி' யை குறிக்கிறது. அந்தக் கையில்தான் உடுக்கை (டமரு) என்னும் ஒலி எழுப்பும் இசைக் கருவி. இந்த உடுக்கையின் ஒலியில் இருந்துதான் ப்ரணவ நாதம் தோன்றியது என்பார்கள்.


அடுத்தாக, ஆடல் வல்லானினின் முன் வலது கரமோ, அபயம் அளித்து, 'அஞ்சாதே' என்று அருளும் காட்சி, பஞ்சாக்ஷர மந்திரத்தின் கடைசி எழுத்தான 'ய' வை காட்டுகிறது. ஆடல் வல்லான் நமக்கெல்லாம் அபயம் தர வல்லான்! ஆக்கமும், காத்தலும் அவன் வழி வகுத்தலே! எத்தனைப் பிறவி வருமோ என்று பதறுவார், எம் ஐயன், அல்லல் எனும் மாசறுத்து ஆட்கொளும் தெய்வமாம், தில்லை நகர் வாழ், அதிபதி ஜனகாதி துதிபதி சிவகாமி அன்பில் உறையும் நடனபதியின் வலது கரத்தை பார்த்தால் போதாதோ?

நடராஜனின் திருஉடலில் நாகம் ஒன்று தரித்திருப்பதைப் பார்க்கலாம்.

இந்த நாகம் - சாதரணமாய் சுருண்டு இருக்கும், யோகத்தினால் எழுப்பினால் உச்சி வரை மேலெழும்பிடும் குண்டலினி சக்தியைக் குறிக்கிறது. அவன் இடையை சுற்றி இருக்கும் புலித்தோல், இயற்கையின் சக்தியை காட்டுகிறது. அதற்கு சற்று மேலே கட்டியிருக்கும் இடைத்துணியோ அவன் ஆடலில், இடது பக்கமாய் பறந்து கொண்டிருக்கிறது!

பொன்னம்பலம் தன்னில் நின்றாடும் நடன சபேசனை சுற்றி இருக்கும் நெருப்பு வட்டம், அவன் ஞானவெளியில் தாண்டவாமடுவதை காட்டுகிறது. ஒவ்வொரு தீஜ்வாலையிலும் மூன்று சிறிய ஜ்வாலைகளைக் காணலாம். அதன் மேலே 'மகாகாலம்'. அது, காலத்தின், தொடக்கம், நடப்பு மற்றும் முடிவு தனைக் குறித்திடும். நடராஜராஜன் நின்றாடும் 'இரட்டைத் தாமரை' பீடத்தின் பெயர் 'மஹாம்புஜ பீடம்'. இந்த பீடத்திலிருந்துதான் அண்ட சராசரமும் விரிவடைகிறது என்கிறார்கள்!



அவனே ஆண்டவன். எல்லாப் பொருளிலும் அரூபமாய் மறைந்திருப்பவன். எல்லாப் பொருளுக்கும் மெய்ப்பொருளாய் இருப்பவன். அவன் ஆக்கத்தினை கூர்ந்து நோக்கியவாறு, எல்லா ஆக்கத்திலும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறான். அவனே எங்கும் தூய உயர் ஞானமாய் இருக்கிறான்.
- யஜூர் வேதம், ஸ்வேதஸ்வதார உபநிஷதம்
ஆதியாய் நடுவு மாகி அளவிலா அளவும் ஆகிச்
சோதியா யுணர்வு மாகித் தோன்றிய பொருளு மாகிப்
பேதியா ஏக மாகிப் பெண்ணுமாய் ஆணு மாகிப்
போதியா நிற்குந் தில்லைப் பொதுநடம் போற்றி போற்றி.
- பன்னிரெண்டாம் திருமுறை

Friday, September 21, 2007

ரோஜா மணம்


சென்ற வெண்பா முயற்சியைத் தொடர்ந்து அடுத்த முயற்சி:

இந்த முறையும் தலைப்பும் ஊக்கமும் வாஞ்சிநாதன் அவர்களிடம் இருந்தே:
ரோஜாப்பூ மல்லிகை ஆன கதை

ரோஜாவை மல்லிகை என்றழைத்தால் மாறிடுமா

ரோஜாவின் வாசனை? வாசனையும் நாதன்

தருவித்த போது மலர்கொண்ட நாமத்

தினாலல்ல பூவின் மணம்!

Monday, September 17, 2007

தட்டாமல் தங்கும் தளை?

"இயன்றவறை இனிய தமிழில்" பதிவில் வாஞ்சிநாதன் ஒரு தலைப்பைக் கொடுத்து வெண்பா வடிக்கச் சொன்னர். இதுவரை மரபில் பாட்டெழுதி பரிச்சயம் இல்லை. சரி இப்போதாவது முயன்று பார்ப்போமே, என்று முயன்றேன்:

பா எழுத கொடுக்கப்பட்ட கருத்து இதுதான்:

If it were possible to heal sorrow by weeping and to raise the dead with tears, gold were less prized than grief.

இந்த கருத்தை தமிழில் தர வேண்டும் - பாவாக.

முதலில் நான்கு வரிகள் வருமாறு மேற்சொன்ன கருத்தை கவிதை வடிவில் எழுதிக் கொண்டேன். அடுத்ததாக சீர்களை சீராக வேண்டும். தளைகள் தட்டாமல் தட்டிக் கொடுக்க வேண்டும்.

இதற்காக தெரிய வேண்டிய இலக்கணம் எல்லாம் இவ்வளவேதான்:

1. காய் முன் நேர்

2. விளம் முன் நேர்

3. மா முன் நிரை

4. ஓரசை / நான்கு அசை சீர்கள் கூடாது

5. கனி வேண்டாம்

6. கடைசி சீர் - நாள், மலர், காசு, பிறப்பு ஆகிய வாய்ப்பாடுகளில் ஒன்றில் முடிய வேண்டும்.


ஆகா, இவ்வளவுதானா இலக்கணம் என்று தளைகள் தட்டாமல் பார்த்துக் கொண்டதில், விளைந்த பா:

புலம்பி அழுதால் மறைந்திடும் அன்பர்
திரும்பி வருவாரோ? கேளுமய்யா சுத்தசிவம்
அந்தோ வருகின் அழுகையும் விற்காதோ
ஆயிரம் பொன்னின் விலை.

மேற்சொன்ன பதிவுக்கு சென்றால் உங்களுக்கே தெரியும், எத்தனை பேர் எத்தனை வடிவாக, எத்தனை சரளமாக பா வடித்திருக்கிறார்கள் என்று. அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஏதோ முதல் முறை முயன்றதற்கு தேவலாம் என்று நினைத்திருந்தேன்.

பதிவாசிரியர் வாஞ்சிநாதன், பாவைப் பார்த்து விட்டு தன் மறுமொழியை பகிர்ந்தார்:


ஜீவா வெங்கட்ராமன், உங்களுடைய பா " அழுகையும் விற்காதோ ஆயிரம் பொன்னின் விலை" என்று முடிவது அழுத்தமாக இருக்கிறது (equivalent to a thousand golden exit lines!) ஆனாலும் எதுகையில் கவனம் தேவை. "அந்தோ" என்ற குறில்+ மெய் தொடக்கத்திற்கு எதுகை இல்லாவிட்டாலும் வேறாதாவது "குறில்+ மெய்" கொண்டு ஈற்றடியைத் தொடங்கினால்தான் பாவின் ஏற்றம் இறக்கம் சரியாக இருக்கும்
வெண்டளை தவறாமல் வருகிறதால் நீங்கள் தேர்ந்தவர் என்று தெரிகிறது.



தளையில் வெண்டளை என்றால் என்ன, பாவில் இதுவென்ன ஆசிரியப்பாவா, இவையெல்லாம் அடியேன் அறியேன்! ஆனால், முதல் முயற்சியில் தேர்ச்சி பெற்றாயிற்று, இனி அடுத்த அடி எடுத்து வைக்க வேண்டியதுதான்!


பின்னர் என் அப்பாவிடம் இந்த கவிதையை காட்டியதில் அவர் சொன்னது:


தொடங்குதல் எப்பொழுதுமே மங்கலமாயிருப்பது மரபு.
அதனால் தான் அந்தக்காலத்தில் அத்தனை புலவர்களும் கடவுள் வாழ்த்துக்குப் பிறகு எந்தக் காவியத்தையும் படைத்தார்கள்.
காவியம் என்று மட்டும் இல்லை, எந்த புது முயற்சியும் அப்படித்தான்.
அதனால் வேறு ஏதாவது வாழ்த்துக் கவிதை எழுதிவிட்டு, கவிதை எழுதத் தொடரலாம். இதற்கு முன் ஏதாவது எழுதியிருந்தால் சரி.


சரி, நாமும் கடவுள் வாழ்த்துப் பா எழுதாலாம் என துவங்க, எல்லா வெற்றிகளுக்கும் துவக்கமாய் இருக்கும் மூலதார முதல்வன், விநாயகனை முன்னிறுத்தி, இதோ என் அடுத்த முயற்சி:

சக்திமகன் வேழமுகன் என்றும் அருளிடுவாய்

முக்திதரும் நீள்பாதை ஒன்றில் நடந்திட

நீதருவாய் ஆனைமுகா தங்கத் தமிழ்தனில்

தட்டாமல் தங்கும் தளை.


நீங்களும் வெண்பா எழுத முயலலாமே?

தமிழ் மன்ற மையத்தில் வெண்பா எழுதவது பற்றி கட்டுரை ஒன்றும் இங்கே படிக்கலாம்!

சந்த நயத்துடன் புதுக் கவிதை எழுதவும், மரபிலக்கணம் தெரிந்திருந்தால் பெரிதும் துணை புரியும்.

"கவிதை எழுதப் பழகலாம் வாங்க" பதிவைப் படித்தாயிற்றா?

Friday, September 14, 2007

இலக்கியத்தில் ஆனைமுகன் துதி




இலக்கியத்தில் ஆனைமுகனை, வினைகள் அகற்றும் விக்னேஸ்வரனை துதித்து போற்றியவர் பலர்!
பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் கொடுத்து, அதற்கு பதிலாக சங்கத் தமிழ் மூன்று மட்டும் போதும் எனக் கேட்டு கணபதியுடன் 'வணிகம்' செய்த ஔவையைப் பற்றி நமக்கெல்லாம் நன்கு தெரியும். ஏனைய பலரும் கணேசனை துதித்து செய்யுள்களை இயற்றி உள்ளனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உங்களுக்காக இங்கே:


திருமந்திரம் - திருமூலர்


ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை

இந்து இளம்பிறை போலும் எயிற்றினை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்்தினை

புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.



திருக்கடைக்காப்பு - திருஞான சம்பந்தர்


பிடியதனுருவுமை கௌமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்

கடி கணபதிவர அருளினன் முகுகொடை

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.


இரட்டை மணி மாலை - கபிலர்


திருவாக்கும் செய்கருமமும் கைகூட்டும் செஞ்சொல்

பொருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால், வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை.



விநாயகர் அகவல் - நக்கீரர்


வெண்ணீ றணியும் விமலன் புதலவர்

பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே

அரிதிரு மருகா அறுமுகன் துணைவா

கரிமுக வாரணக் கணபதி சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

பெருவயிற் றோனே பொற்றாள் சரணம்

கண்ணே மணியே கதியே சரணம்

விண்ணே யொளி வேந்தே சரணம்


பெருந்தேவனார்

ஓதவினை அகலும்; ஓங்கு புகழ் பெருகும்

காதற் பொருள் அனைத்தும் கைகூடும் - சீதப்

பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும்

தனிக் கோட்டு வாரணத்தின் தாள்!


நம்பி ஆண்டார் நம்பி

என்னை நினைத்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்

தன்னை நினையத் தருகின்றான் - புன்னை

விரசு மகிழ் சோலை, வியன் நாரையூர் முக்கண்

விரசு மகிழ் அத்தி முகத்தான்.


குமர குருபரர்

சீர்கொண்ட காசிநகர் சேர்துண்டி ராஜனெனும்

பேர்கொண்ட வைங்கரற்குப் பேசுபுகழ்த் - தார்கோண்ட

நற்றிருப்பாட் டீரைந்த்தும் ஞாலமிசைத் தொண்டரெலாங்

கற்றிருப்பார் மேலாங் கதி.


கந்தபுராணம்

மண்ணுலகத்தினிற் பிறவிமாசற

எண்ணிய பொருள் எல்லாம் எளிதின் முற்றுறக்

கண்ணுதல் உடையோர் களிற்றுமாமுகப்

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.

திருஅருட்பா - இராமலிங்க அடிகளார்

முன்னவனே யானைமுகத்தவனே முத்தி் நலம்

சொன்னவனே தூய்மைச் சுகத்தவனே - மன்னவனே

சிற்பரனே, ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே

தற்பரனே நின் தாள் சரண்.


திருப்பல்லாண்டு - சேந்தனார்

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி

விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்

மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த

பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.


உமாபதி சிவச்சாரியர்

வானுலகும் மண்ணுலகும் வாழ் மறைவாழப்

பான்மை தருசெய்ய தமிழ் பார்மிசை விளங்க

ஞானமத, ஐங்கர மூன்றுவிழி, நால்வாய்

ஆனைமுகனை பரவி அஞ்சலி செய்கிற்போம்

Sunday, August 19, 2007

நிழற்படமா, ஒளிப் படமா?



ஒளிச்சேர்க்கையில்

வளர்ந்த இலைகள்

இப்போது இங்கே

ஒளியால் மிளிர

ஒளி பிடிப்பானில்

ஒரு நிமிடத்திற்குள்

'பிடித்ததை' பிடித்ததில்

நிழற்படமா, ஒளிப் படமா?



நிழலும் ஒளியும்

வெவ்வேறானாலும்

ஒன்றோடு ஒன்று

தொடர்பானதல்லவோ?

ஒளியில்லாமல் நிழலேது?



வெற்றியும் தோல்வியும்

உயர்வும் தாழ்வும்

மேன்மையும் சிறுமையும் கூட

நிழலும் ஒளியும் போலத்தான் -

இதை உணராத மனிதர்பால்தான்

எத்தனை மயக்கங்கள்?

Tuesday, August 14, 2007

ஆடுவோமே, பள்ளுப் பாடுவோமே!

ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே
ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று!



ஆம், ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!

இந்த இனிய சுதந்திர தினத்தில் பாரதியின் பாடல்களில் மலர்ந்த -


ஒரு இனிய இசை நிகழ்ச்சி - மலரும் நினைவுகளாக மலரட்டும்.



மா-நிலத்தில் நம் பெருமை உயரட்டும்!



MahakaviBharathiSp...


விடுதலை வேள்வியில் இன்னுயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலியாக

பெற்ற சுதந்திரத்தை பேணிக் காப்போம்!



அனைவருக்கும் இனிய விடுதலை நாள் வாழ்த்துக்கள்!

வாஷிங்டன் கவர்னரிடம் இருந்து சுதந்திர தின வாழ்த்துக்கள்!

வாஷிங்டன் மாநில கவர்னர் கிரிஸ்டின் ஓ. கிகோரி - இடம் இருந்து இந்திய சுதந்திர தின வாழ்த்துக்கள்!


மேலும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி 'இந்தியா தினம்' என அறிவிக்கப்பட்டுள்ளது!

(படத்தை பெரிதாக பார்க்க படத்தின் மீது க்ளிக் செய்யவும்.)

Monday, August 13, 2007

கச்சி வரதா, கருணைபொழிவாய்!





பாலாழியில் படுத்துறங்கும் பரமா, பாமர தயாளா,


அர்சவதாரம் போதும், அரச்சனை செய்யும் எனக்கருள்வாய்!


முக்குறும்பு நீங்கிட, முக்தி பெற்றிட அருள்வாய்!


என் பிணிகள் நீக்கிடும் குருவாய் நீ வருவாய்!


கடல் நிற வண்ணா, கொள்வாய் என்மேல் கடலளவு கருணை!


கார்மேக வண்ணா, பொழிவாய் என்மேல் மழைபோல் அருளை!


முக்தி தரும் நகர்களில் முக்கியமாய் கச்சிதனில் அருளும் வரதா,


விசிறி ஏந்தி நிற்கும் கச்சி நம்பி போற்றும் அத்திகிரி வரதா,


வாராதோ உனக்கென்மேல் கருணை,


அடைந்தேன் உன் தாள் தனில் சரணே!

Friday, August 10, 2007

அணுசக்தி ஒப்பந்தம் - பின்னால் யாரோ யார் யாரோ?

முழு வீச்சாக இந்தியாவும் அமெரிக்காவும் 123 ஒப்பந்தம் எனும் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளன. பல்வேறு பின்னடைவுகள் ஏற்பட்டாலும், இரு நாடுகளும் ஒன்றுக் கொன்று தங்கள் தரப்பு நியாயங்களை முன் நிறுத்தி தங்கள் நலனில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதில் கவனம் செலுத்தியதை பார்க்க முடிந்தது. இப்படிப்பட்ட முக்கியமான ஒப்பந்தம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது!



இந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாக இரு தரப்பிலும் இதற்கான முக்கிய பணியில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்று பார்ப்போமா?

இந்திய தரப்பு

எம்.கே.நாராயணன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

இந்த ஒப்பந்தத்தில் முக்கியமான முடிவுகளை எடுத்தவர். வாஷிங்டனில் நடந்த நாரயணன்-ஹேட்லி சந்திப்பில் இந்திய தரப்பின் கவலைகளை அமெரிக்கா செவி கொடுக்கத் தொடங்கியது என்பதால், அதற்கான பெருமை எம்.கே.நாராயணனைச் சேரும்!

ரோனென் சென், அமெரிக்காவுக்கான இந்திய தூதர்

துதராக அனைத்து சந்திப்புகளையும் ஒருங்கிணைக்கும் முக்கியமான பொறுப்பை ஏற்றவர்.

ஷ்யாம் சரண், பிரதமரின் சிறப்பு தூதர்
கடைசி கட்டம் வரை, முக்கிய முடிவுகளுக்கு ஆலோசகராக செயல்பட்டார். NSG யின் உறுப்பினர் நாடுகளை சந்தித்து அவர்களுக்கு இந்திய தரப்பினை விளக்கியவர்.

அனில் ககோட்கர், அணுசக்தித் துறை தலைவர்

இவருடைய சம்மதம் இல்லாமல் எந்த அணுசக்தி ஒப்பந்தமும் நிறைவேறாது என்ற நிலையில், எப்போதுமே, இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றத்தில் ஒரு சந்தேகக் கண்ணுடனே செயல்பட்டார். இதனாலேயே பல சந்தேகங்கள் எழுத்து பூர்வமாக நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன.

சிவ சங்கர் மேனன், வெளியுறவுத் துறை செயலர்

கடைசி நிலையில்தான் இவர் சேர்ந்து கொண்டார். அணுசக்தித் துறையில் பணிபுரிந்தவர் என்பதால், விஞ்ஞானிகளுக்கும் ஓரளவுக்கு நம்பிக்கை ஏற்படக் காரணமாய் இருந்தது. அணுசக்தி துறைத்தலைவர் அனில் ககோட்கருக்கு ஒப்பந்தத்தின் அனைத்து அம்சங்களையும் விரிவாக விளக்கினார்.

எஸ். ஜெய்சங்கர், தற்போது சிங்கபூருக்கான இந்திய தூதர்
ஒப்பந்தத்தின் எழுத்து பூர்வ வடிவத்திற்கு இவரும், இவருடைய அணியுமே பொறுப்பு. சின்ன சின்ன சந்தேகங்கள், சின்ன சின்ன நெருடல்களானாலும், அவற்றையெல்லாம் நேராக்கியவர். இவருடைய நேர்மையான அணுகுமுறைகள் அமெரிக்க தரப்பில் இவருக்கு பெரியதொரு நன்மதிப்பை ஏற்படுத்தியது.


அமெரிக்க தரப்பு

காண்டலீசா ரைஸ், Secretary of State

ரைஸ் அதிகமாக நேரடியான ஈடுபாட்டில் இறங்காவிட்டாலும், தனக்கு கீழுள்ளவர்கள் சரியாக பணிகளில் ஈடுபடுத்தி, ஒப்பந்தம் நிறைவேறும்படி பார்த்துக்கொண்டார்.

ஸ்டீபன் ஹேட்லீ, NSA
முக்கிய சந்திப்புகளுக்கு தலைமை தாங்கிய இவர், இந்தியாவின் கவலைகளை எடுத்துக்கொண்டு State Department க்கு எடுத்துச் செல்லும் கடினமான பணியை மேற்கொண்டார்.

நிக்கலோஸ் பர்ன்ஸ், Political Affairs, Department of State
ஒப்பந்தம் நிறைவேருவதில் தொய்வு ஏதும் ஏற்படாமல் தொடர்ந்து பார்த்துக் கொண்டு அமெரிக்க தரப்பினையும் முடுக்கி விட்டுக் கொண்டிருந்தார்.

நிச்சர்ட் ஸ்டார்ட்போர்ட், அணுசக்தித் துறை, Department of State
இந்திய தரப்பில் இருந்து எந்தக் கேள்வி வந்தாலும், அதற்கான பதிலுடன் தயாராக இருந்தார். ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நடப்பும் பயனுள்ளதாக நிறைவேரும் படி பார்த்துக் கொண்டார்.

டேவிட் முல்போர்ட், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்
தூதரக இரண்டு தரப்புக்கும் இடையே பாலமாக திகழ்ந்த இவர், தேவைப்பட்ட நேரத்தில் புஷ் மற்றும் மன்மோகன் சிங் இருவரையும் தொலைபேசியில் பேச வைத்து, ஒப்பந்தத்திற்கான அரசியல் தலையீடுகளை பார்த்துக் கொண்டார்.

ஆஷ்லி டெல்ஸ், Carnegie Endowment of International Peace
எஸ்.ஜெய்சங்கர் இவருடைய நிறுவனத்திற்கு வந்து, இந்தியாவின் தரப்பை விரிவுரையாய் கொடுத்த பின், அதன் சாரத்தை State Department க்கு எடுத்துச் சொன்னவர்.

ஜியோபெரி பயட், முன்னாள் அமெரிக்க தூதரக பணியாளர்
ஒப்பந்தம் நிறைவேறுவதற்கு இரண்டு நாள் முன் வரை, இந்திய தூதரகத்தில் செயல்பட்ட இவர், இந்திய தரப்பை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்வதில் பெரும் பங்கு வகித்தவர்.

Thursday, August 09, 2007

பொற்காலமும் போறாத காலமும்

பொற்காலம் என்று ஆளை அடுக்கி வைத்து அடுக்கடுக்காய் செல்லி விட்டால் போதுமா? அழுத்திச் சொன்னாலும், அரையாத மாவு, உதவாது தோசைக்கு!

உருப்படியாய் ஒரு தொழிற்சாலையை கொண்டு வருவதற்குள் எதிர்கட்சி கேள்வி கேட்டால், மக்களிடமே கருத்து கேட்பதென்ன? அப்புறம் எதற்கு அரசு?

மேற்கு வங்கத்தையும், கேரளாவையும் எதற்கிங்கு எடுத்துக்காட்ட? சொந்த சரக்கு ஏதும் இல்லையா?

மன்னராட்சி படங்களுக்கு திரைக்கதை எழுதிய பழைய ஞாபகம் வந்து விட்டதா? அடுத்த வாரிசு அமைக்க?

அத்தனை வழக்குகள் இட்டாலும் அதெல்லாம் வெறும் கண்துடைப்புதானா? ஆட்சியில் இருந்தாலும் அவரை ஒன்றும் செய்ய முடியாதா?

பொற்காலமா, போறாத காலமா?

Wednesday, August 08, 2007

கணக்கு...பிணக்கு?

நம்மில் கணக்கு - பிணக்கு என்பாருக்கு
இதோ இன்னும் கொஞ்சம் ஆமணக்கு!



இந்த காட்சிப் படத்தில் அதன் விரிவுரையாளர், சதாரண பெருக்கல் கணக்கையும், வகுத்தல் கணக்கையும் எப்படி எல்லாம் வேறு வகையான முறைகளில் சமீபத்திய அமெரிக்க கணித பாட புத்தகங்களில் கற்றுத் தருகிறார்கள் என்பதை விளக்குகிறார். இந்த முறைகளை விடுத்து எல்லோருக்கும் தெரிந்த எளிய முறையை பின்பற்ற வேண்டும் என்றும் கோருகிறார்!

மேலும் சிங்கப்பூர் கணித புத்தகங்கள் எளிமையாகவும், மலிவாகவும் இருப்பதால், அவற்றைக் கூட மாற்றக பயன்படுத்தலாம் என்கிறார்!

Monday, August 06, 2007

அஷ்டபதி - ஓங்கி வளர் முராரி புகழ்!

ஓங்கி வளர் முராரி புகழ்!
குஞ்ச வனம் திரிபவன் எழில்!

அசுரன் மதுவை வதம் செய்த மாதவா,
கருணைக் கடலே, கேசவா
உனக்கென் வணக்கங்கள்!

ரச நடனம் ரசிக்கும் இறையே,
லீலைகள் உன்னிடம்,
மாயைகள் என்னிடம்...

கோபியர் கொஞ்சும் ரமணா,
சாந்த சொரூபியே மதுசூதனா,
உன்னைக்காண அடியவர்
ஒருசில அடிகள் வைத்தாலும்
கருணையுடன் தரிசனம் தருவாயே!

என்றும் இளம் வதனம் கொண்டவா,
சந்திர மலர் முகம் கொண்ட
கோபியர் இதயம் கவர் நாதா,
கோவர்தன மலை தூக்கிய இறைவா,
பிருந்தாவனம் எங்கும் உன் குழலிசை -
எங்கெங்கும் எம் பரம்பொருளின் நிறை.

ராதையின் நாயகன், கம்சனையோ வதைத்தவன்,
நின் பாதத்தில் சரணடைகிறேன்,
தஞ்சம் கிடைக்காதோ அந்த பாத
விரல் நகக் கண்களில்?
உன் பட்டாடை போல்
என்னை சுத்தம் செய்யும் ஜனார்தனா,
உன் பாதமலர் சரணம்.

மேலெழுதிய வரிகளின் மூலம் ஜெயதேவரின் 'அஷ்டபதி' யில் ஒன்றாகும்.
சமஸ்கிருதத்தில் அவருடைய கீத கோவிந்தம், கோகுலக் கண்ணன் கோபால கிருஷ்ணன் புகழ் பாடும் உன்னத காவியம்.

'ஏஹி முராரே குஞ்ச பிஹாரே' என்று தொடங்கும் இந்த பாடலை பாம்பே ஜெயஸ்ரீயின் மனம் உருக்கும் குரலில் கேட்டு மகிழலாம் இங்கே.

B._Jayasree_-_Saal...


முன்பே பார்த்த அஷ்டபதி - 'சந்தன சர்சித நீல களேபர...'

Saturday, August 04, 2007

ஜாவா நோட்ஸ்

ஜாவா கற்பவர் மற்றும் பயனர்களுக்காக - இந்த நோட்ஸ். ஜாவா என்பது விலாசமான - மிக அதிக பரப்பளவுப் பகுதி. ஜாவாவில் நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வோ, அல்லது தொலைபேசித் தேர்வோ எழுதுபவர் - ஜாவாவின் அனைத்துப் பகுதிகளையும் ஒருமுறையாவது புரட்டிப் பார்க்க வேண்டியது அவசியமாகிறது. அவர்களின் பயனுக்காக நான் சேமித்து வைத்த ஜாவா நோட்ஸை இங்கு தருகிறேன்.
இது ஆங்காங்கே, அந்தந்த தலைப்புகளுக்கான அம்புக்குறியாகவே பயன்படுத்தவே. அந்த அம்புக்குறிகளைக் கொண்டு, நீங்கள் ஏற்கனேவே கற்றவற்றையோ அல்லது அனுபவத்தில் கண்டவற்றையோ நினைவு படுத்திக் கொள்ளவும்!. அல்லது புதிதான பகுதியாகவோ இருப்பின், ஆர்வம் இருப்பின், கூகிளில் தேடிப்பார்க்கவும். அல்லது மறுமொழியில் விசாரிக்கவும். இயன்றவரை விளக்குகிறேன்.

J2EE Tier ---> Web Tier, Business Tier

J2EE Components ---> Application client, Applets (Client)
Sevlet, JSP (Web)
EJB (Business)

J2EE Container services
• The J2EE security model
• The J2EE transaction model
• JNDI lookup to access naming and directory services.
• The J2EE remote connectivity model.


Web Modules
----------------
WEB-INF/ under the document root contains:
web.xml -> the web application deployment descriptor
Tag library descriptor files
classes
tas
libs

JAXP : Java API for XML Processing:
--------------------------------------------
provides SAX and DOM API,
Also included are XSLT (Extensible Stylesheet Language Transformation) API for transforming to xml or other file formats.


Java Design Patterns :
--> Creational, Structural or Behavioral
-->Class or Object


Common Design Patterns
--------------------------
Observer Pattern
Decorator Pattern : Composition
Factory Pattern
Singleton Pattern
Command Pattern
Facade Pattern
Template Method Pattern
Iterator and Composite Pattern
State Pattern
Proxy Pattern


Model View Controller is a compound pattern consisting of Observer, Strategy and Composite patterns.


Why would you prefer code reuse via composition over inheritance? Both the approaches make use of polymorphism and gives code reuse (in different ways) to achieve the same results but:


Answer:The advantage of class inheritance is that it is done statically at compile-time and is easy to use. The disadvantage of class inheritance is that because it is static, implementation inherited from a parent class cannot be changed at run-time. In object composition, functionality is acquired dynamically at run-time by objects collecting references to other
objects. The advantage of this approach is that implementations can be replaced at run-time. This is possible because objects are accessed only through their interfaces, so one object can be replaced with another just as long as they have the same type.

Another problem with class inheritance is that the subclass becomes dependent on the parent class implementation. This makes it harder to reuse the subclass, especially if part of the inherited implementation is no longer desirable and hence can break encapsulation. Also a change to a superclass can not only ripple down the inheritance hierarchy to subclasses, but can also ripple out to code that uses just the subclasses making the design fragile by tightly couplinthe subclasses with the super class. But it is easier to change the interface/implementation of the composed class.


Encapsulation – refers to keeping all the related members (variables and methods) together in an object. Specifying member variables as private can hide the variables and methods. Objects should hide their inner workings from the outside view. Good encapsulation improves code modularity by preventing objects interacting with each other in an unexpected way, which in turn makes future development and refactoring efforts easy.

Exception throwing:
------------------------
Throw an exception early and catch an exception late but do not sweep an exception under the carpet by catching it and not doing anything with it. This will hide problems and it will be hard to debug and fix.

இரட்டை ரோஜா



பச்சை வெளிதனில்
பகலவன் அருளினில்
அச்சம் இல்லாமல்
நித்தம் மலரும்
ரோஜா மலரும்

என்னைப் பார்த்து சொன்னது
அருளின்றி மலராது அகம்
அதனாலே நீசெய் தவம்
உன் அறிவே சிவம்
அதை நீநாடு தினம், என்று!

ஆன்றோர் வாக்கின் துணையில்
அம்புலி புனை பெருமான்
என்னுள்ளே என்னுள்ளே
எங்கிருக்கிறான் எனத்தேடி
எங்கும் இருக்கிறான்
என அறியும் நாள் எந்நாளோ?

Friday, August 03, 2007

நல்ல API எழுதுவது எப்படி?

நல்ல ப்ரோக்ராம் எழுதுவது எப்படி என்பதை ஒரு விளக்கப்படமாக கூகிள் விடியோவில் கேட்க/பார்க்க கிடைக்கிறது.

கேட்டுப் பயனடையுங்கள்!

ப்ரோக்ராம் எழுதுவது எப்படி பல நிலைகளைக் கடந்து இப்போது இன்றைய நிலையை அடைந்திருக்கிறது என்பதை இந்த காட்சிப் படத்தில் உணரலாம்!

ப்ரோக்ராம் என்பது ஒரு Service என்பதாக பார்க்கப்படும் நிலையில் அதன் பயன்பாட்டார்களுக்கானதாக, எளிமையாக எழுதப் பட வேண்டிய அவசியம் இன்றைய நிலையில் மிகுதியாக இருக்கிறது!

இதோ, நல்ல API எழுதுவது எப்படி?

Thursday, August 02, 2007

விப்ரோ அட்லாண்டாவுக்கு வாராங்களாமே?

இரண்டு பேரோ, அல்லது ஒரு குழுவோ ஒரு தலைப்பைப் பற்றி விவாதிக்கும் போது, அதில் கலந்து கொள்ளாமல், எட்ட நின்று வேடிக்கைப் பார்ப்பதிலும் ஒரு தனி சுவை இருக்கத்தான் செய்கிறது. அதிலும் அவர்களுக்குள் முட்டிக்கொண்டால், கேட்கவே வேண்டாம். ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு அல்லவா கொண்டாட்டம்!, நாமும் பல சமயம், பின்னூட்டங்களை (பதிவைக் காட்டிலும்) மிக சுவாரஸ்யமாக படிக்கிறோமோ தவிர, நாமாக முன் வந்து பின்னூட்டம் இடுவது எப்போதாவதுதான். ஏதோமொக்கைப் பதிவுகளாக இருக்கும் பட்சத்தில், கொஞ்சம் தாராளம்! :-)

தலைப்பு என்னவோ இருக்கேன்னு பார்க்கறீங்களா, மேட்டருக்கு வரேன்!

இன்றைக்கு அட்லாண்டா ஜாவா பயனர் மின்மடல் குழுமத்தில் ஒரு புது மடல் வந்திருந்தது - "விப்ரோ அட்லாண்டாவுக்கு வாராங்க" என்ற தலைப்பில்!. ப்ரெயின் என்ற பெயர் கொண்ட அவர், இந்தியாவில் இருந்து, விப்ரோ ஜாவா ப்ரோக்ராமர்களை இங்கே கொண்டு வந்தால், தங்கள் வேலைக்கு உலை என்ற ரீதியில் எழுதி, தாங்கள் மகாண Congress உறுப்பினருக்கு மின்மடலில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பதாகவும், மற்ற உறுப்பினர்களும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றும் வலியுருத்தி இருந்தார்.

அவரது மடலுக்கு முதல் பதில் - எதிர்பாகவே வந்தது. (இதுவே நம்ம ஊராக இருந்தால் அடுத்த நிமிடமே ஆயிரம் பேர் கும்மி அடிச்சி இருப்பாங்க!)
இருக்கட்டும், டீன் என்ற பெயர் கொண்ட அவரோ, "ப்ரெயின், உலகச் சந்தையில் உங்களால் போட்டியிட முடியாவிட்டால் ஒதுங்கி வேறு வேலை பார்க்கலாமே" என்று சொல்லி விட்டு, "எதனால் எதிர்க்க வேண்டும் என்று ஒரு காரணம் சொல்லாமே" என்று கேட்டிருந்தார்.

ப்ரெயின் தன் பதிலில்: "காரணம் பல உண்டு - எனினும் அவற்றில் பெரிதானது - திடீரென அட்லாண்டாவில் நூற்றுக்கணக்கான ஜாவா ப்ரோக்ராமர்கள் வந்திறங்கினால் - வேலைகளெல்லாம் அவர்களுக்கு போய் விடும்"

இதற்கு டீன் பதில் சொல்வதற்கு முன்னால், ஜான் என்பவர் முந்திக் கொண்டு சொல்கிறார்: "உங்கள் பயம் தேவையற்றது. அவர்கள் அதிகமாக இங்கு வந்தால் - நம் ஊரில் ஜாவா வில் நிறைய வேலைகள் முடிவடையும், அதே போல் புதிய வேலைத் தேவைகளும் பல மடங்கு நம்மைத் தேடி வரும். அதனால் எல்லோருக்குமே நல்லதுதான். அவர்களுக்கு கிடைக்கும் அதிக வருமானம் போல நமக்கும் கிடைக்கும்" என்றாரே பார்க்கலாம்!. தொடர்ந்து டீன் அடுத்த மடலில் "சரியாக சொன்னீர்கள்!. அவர்கள் அதிகமாக வருமானம் ஈட்டுவதற்கு ஏற்றாற்போல் அதிக வேலைகளும் செய்கிறார்கள்" என்றார்!.

இவர்கள் இப்படிச் சொன்னதுதான் போதும் - இந்த மூன்று மடல்களைத் தொடர்ந்து, வெள்ளமாக தொடர்ந்து மடல்கள் பலரிடம் இருந்த்தும்! அவற்றில் சுவராஸ்யமான சிலவற்றில் இருந்து: (யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்! ;-))

வாசு(அ)வசு என்ற இந்தியர்: "நான் இந்தியன் என்றாலும், இங்கேயே தங்கி விட்டேன். இது போன்று H1-இல் வருபவர்களுக்கு குறைந்த சம்பளமே தரப்படுகிறது. அவர்களுக்கு தரப்படும் சம்பளம், இங்குள்ள அமெரிக்கர்களுக்கு தந்தால், அதை வைத்து வாழ்க்கையை ஓட்ட முடியாது. அதானால், அவர்களை வைத்துக் கொண்டே காலம் தள்ளி விடுவார்கள் - நமக்கெல்லாம் ஒன்றும் மிஞ்சாது. ஆதாலால், இதனை எதிர்க்கவேண்டும்" என்ற ரீதியில் Same-side Goal போட்டார். அல்லது அந்தப் பக்கம் சென்று விட்டார்!

அலெக்ஸ்: "வாசு/வசு, நீங்கள் சொல்வது புரிகிறது. எனக்குத் தெரிந்த இந்திய நண்பர்களும் இப்படித்தான். அவர்கள் குடும்பம் இங்கே இல்லாததால், அவர்களால் நிறைய சேமிக்க முடிகிறது. அவர்கள் ஒன்றாக சேர்ந்து தங்கிக் கொண்டு பணத்தை மிச்சம் செய்கிறார்கள். மேலும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனங்களோ, அவர்களுக்கு சேர வேண்டியதில் கணிசமானதை பிடுங்கிக் கொள்கிறார்கள்."

ஸ்காட்: நாம் அவர்களை வரவேற்கிறோமோ, இல்லையோ, அவர்கள் வரத்தான் போகிறார்கள். நம்மைக் காட்டிலும் குறைந்த சம்பளத்திற்கு அதிக வேலை செய்பவர்கள், உலகத்தின் பல பகுதிகளில் இருக்கத்தான் செய்கிறார்கள். நம் அரசாங்கத்தை பின்வாங்கச் சொல்வதோ, தடுக்கச் சொல்வதோ - சிறுபிள்ளைத் தனமாகத்தான் உள்ளது."

ஜஸ்டின்: இந்தியாவிலும் இப்போது விலைவாசி கிடுகிடுவென உயரத் துவங்கி விட்டது. ஒவ்வொரு நாளும் இந்தியாவுடன் வர்த்தகம் செய்வதற்கான விலையும் உயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இப்போதே, இந்தியாவை அடுத்து மற்ற நாடுகளில் எங்கு ஆட்களைப் பிடிக்கலாம் என்று பார்க்கிறார்கள். உலகச் சந்தை நம் தலைக்கு மேல், நாம் அதனை புறந்தள்ள முடியாது!"

பர் சட்டர்: விப்ரோவிற்கு அக்சென்சர், யுனிசிஸ், ஐ.பி.எம் போன்ற பெரிய நிறுவனங்களுடன் தான் போட்டி. நம்மைப்போல சிறிய நிறுவனங்கள் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை!

மார்டி: விப்ரோ அட்லாண்டா வருவதை தடை செய்தால், அவர்கள் வேறு ஊருக்கு செல்லப் போகிறார்கள், அதனால் நமக்கு கொஞ்சம் நஞ்சம் கிடைக்கக்கூடிய வேலையும் கிடைக்காமல் போய்விடும். ஜாவா டெவலப்பாராக இருப்பது எதிர்காலத்திற்கு நல்லதாகப் படவில்லை. விரைவில் நாம் புதிய தொழில்நுட்பங்களைக் கண்டு பிடிக்க வேண்டும், கற்றுக் கொள்ள வேண்டும், அப்போதுதான் பிழைக்க முடியும்!

டீன்: "உலகம் தட்டையானது" என்ற இந்த கட்டுரையை படித்துப் பாருங்கள். விப்ரோ இங்கு வருகிறதா, அல்லது கலிஃபோர்நியா விற்கு செல்கிறதா என்பது ஒரு பொருட்டல்ல. நாம் தான் அவர்களுடன் போட்டி போட்டு எப்படி வெல்வது என்ற கலையை கற்றுக் கொள்ள வேண்டும்.

பில்: ஆமாம் நண்பர்களே, தயாராகுங்கள்.
1) உங்கள் துறையில் சிறந்த விற்பன்னர் ஆக வேண்டும். பல ஓபன் சோர்ஸ் மென்பொருட்களை அறிந்திருப்பதோடு, அவற்றை ஒருங்கிணைக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
2) AJAX போன்ற Web 2.0 தொழில்நுட்பம் கற்றுக் கொள்ளவும்.
3) உங்கள் காலில் நிற்க கற்றுக் கொள்ளவும் - நீங்கள் பணி புரியும் நிறுவனத்திற்கு அப்பால் அல்ல.
4) பொதுவாக - ஒரு தொழிலுக்கு, என்ன மென்பொருள் தீர்வு என்பதை அதிகமாக தெரிந்து கொள்ளவும், தொழில்நுட்பம் மட்டும் போதாது.
5) இந்தியாவுக்கு (அல்லது சீனா அல்லது ரஷ்யா) எப்படி வேலைகளை அனுப்பி சாதித்துக் கொள்ளலாம் என்பதில் விரிவுரியாளரவது எப்படி என்று கூட பார்க்கலாம் :-) ஆனால், அது எனக்கு சரிப்படாது!

கீத்: அடப்பாவிகளா, H-1 மற்றும் L-1 நபர்கள் இங்கு வருவதால் என்ன பாதிப்பு என்று உங்களுக்கு புரியவே இல்லையே? இந்தியாவின் 'NASCOM' என்ற அமைப்பு சொல்கிறது - நாம் அங்கிருந்து ஒரு மில்லியன் மென்பொருளாளர்கள் இங்கு வருவதை தடை செய்கிறோமாம்! ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள், இங்கு ஏற்கனவே இருப்பவர்களின் எண்ணிக்கை 600,000!

(பதில் மடல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன, முடியவில்லை!)

Tuesday, July 31, 2007

ஜாவா புதிர்கள்

புதிர்கள் ஜாவா ப்ரோகிராமிங் மொழியில்! வாங்க, வாங்க, வந்து புதிர்களுக்கான விடைகளை கண்டு பிடிங்க பார்க்கலாம்!

மொத்தம் எட்டு புதிர்கள் உள்ளன.
கீழே உள்ள கூகிள் வீடியோவில் இந்த புதிர்கள் ஒவ்வொன்றாக கேட்கப்படுகிறது. பார்வையாளர்கள் விடைகளை கண்டு பிடிக்கிறார்கள். நீங்களும் முயலுங்களேன்!

Autoboxing போன்ற "ஜாவா JDK 1.5" சம்பந்தப்பட்ட புதிரும் அடங்கும்.

மொத்தம் 1 மணி நேரம் ஆகிறது, இந்த வீடியோ முடிய. நல்ல நகைச்சுவையாகவும் உள்ளதானால், அவ்வளவாக போரடிக்கவில்லை!

Sunday, July 29, 2007

டாடா தொழிற்சாலையும் சந்தர்ப்பவாத அரசியலும்

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட பகுதிகளில் டாடாவின் புதிய டைட்டானியம் டை ஆக்ஸைட் தொழிற்சாலை நிறுவும் பணியில் பல்வேறு சர்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன.
இதில் உண்மை நிலை என்ன? என்ற கேள்வி எல்லார் மனதிலும் இருக்கிறது.



டாடா என்ன சொல்கிறது?
2,500 கோடி செலவில் உருவாகும் இந்த தொழிற்சாலை, 1000 பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 3000 பேருக்கு ஏனைய வழிகளிலும் வேலைவாய்ப்பும் கிடைக்கும் என்கிறது.

ஏனைய வழிகளில், மேலும் 3000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது உண்மையானால் நல்லதே!

தொழில் சம்பந்தமான நுட்ப அறிவு தேவைப்படாத வேலைகளுக்கெல்லாம், உள்ளூர் மக்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்வோம் என்கிறது. அதிலும் தொழிற்சாலைக்காக தங்கள் நிலத்தைக் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை தரப்போவதாக சொல்கிறது.

மொத்தம் 10,000 ஏக்கர் நிலம் கையகப் படுத்தவிருக்கிறது. அவை தற்போதைய மார்க்கெட் விலையில் நிலத்தை வாங்கிக் கொண்டு, உரிமையாளர்களுக்கு பணம் கிடைக்க வழி வகுக்கிறது என்கிறது. மேலும் குடியிருப்புப் பகுதிகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்கிறது.

குடியிருப்பு பாதுக்கப்படும் என்று சிலர் சொல்வது எப்படி என்று தெரியவில்லை.
தற்போதைய மார்கெட் விலை இது போன்ற இடங்களில் குறைவாக இருக்கும். தொழிற்சாலைக்காக வாங்கும் நிலத்திற்காக, டாடா, மார்க்கெட் விலையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு விலை தர முன் வர வேண்டும். குடியிருப்பு பாதிக்கப்படும் பட்சத்தில் மேலும் அந்த ஊரிலேயே தொடர்ந்து வாழ விரும்புபவர்களுக்கு தரமான குடியிருப்பு கட்டித் தரவேண்டும்.

கடல் நீரை சுத்தகரிக்கும் ஆலை ஒன்று நிறுவப்பட்டு அதன் மூலமாக சுத்தகரிககப்படும் நீரை மட்டுமே தொழிற்சாலை பயன்படுத்தும். நிலத்தடி நீர் நிலமை இதனால் முன்னேருமே தவிர பாதிக்கப்படாது என்கிறது.

மேலும், சுற்றுப்புற சூழ்நிலைகளுக்கு எந்த ஒரு கேடும் ஏற்படாத வண்ணம் முயற்சிகள் மேற்கொள்ளப் படும் என்று சொல்கிறது.

இதெல்லாம் நியாயமாகத்தான் தெரிகிறது. ஆனால் எந்த அளவிற்கு இதெல்லாம் உண்மையாக நிறைவேற்றப் படும்?, எந்த அளவிற்கு இது ஆளும் கட்சி மற்றும் ஆளும் கட்சியை சார்ந்தவர்களுக்கு மட்டும் பணம் ஈட்டும் வழியாக மட்டும் செயல் படப்போகிறது என்பது போகப் போகத்தான் தெரியும்.

அதே சமயத்தில் எதிர் கட்சிகள், இதுதான் கிடைத்தது சந்தர்ப்பம் என்று கண்மூடித் தனமாக எதிர்ப்பது, அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலைத்தான் தோல் உரித்துக் காட்டுகிறது.

என்ன குறைகள் இருக்கின்றன என்பதை பட்டியல் இடட்டும். டாடா நிறுவனமும், அரசும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்பாடாது என்று எழுத்து மூல உத்தரவாதத்துடனும், தகுந்த பண காப்பீடுடனும், எந்த தரப்பும் சாராத நடுநிலையாளர்களின் கண்காணிப்புடனும் திட்டத்தை செயல் படுத்தினால் என்ன?

எத்தனை க்காலம் தான் இந்தப் பகுதி மக்கள் விளைச்சலற்றுப் போன நிலங்களிலும் விவசாயம் செய்வதாக நம்பிக் கொண்டிருப்பார்கள்? நம்மிடம் மனித வளம் ஏராளம். அதை மாற்றுவோம் தொழில் வளமாய்!

Wednesday, July 25, 2007

அமெரிக்காவில் இருந்து... இந்திய செய்திகள்

இந்தியா வேண்டுமென்றே உறுதி செய்யப்பட்ட எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை பல மடங்காக ஏற்றிச் சொல்கிறதாம் - சொல்கிறார் லலித் தாண்டோனா, டெல்லி AIIMS இல் பயின்ற இவர், தற்போது சிட்னியில் பணிபுரிகிறார்.

அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தங்களில் விரிசல்கள் ஏற்பட்டாலும், திரும்பத் திரும்ப அமெரிக்க வலுக்கட்டயமாக இந்தியாவிற்கு உதவிட வருவதின் பிண்ணணியில் இருப்பவர்களில் அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில் நிறுவனங்கள் GE, Boeing ஆகியவும் அடங்குமாம்!

அமெரிக்கா இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய முயன்ற கோதுமையை தரமற்றது என்று சொல்லி இந்தியா சொல்லிவிட்டதால் கொதித்துப் போயிருக்கும் அமெரிக்கா, இந்தியாவின் தர நிர்ணயம் ஈடுகட்ட இயலாதது என்று பொருமுகிறதாம். அமெரிக்க கோதுமையை வாங்கியிருந்த்தால் இந்தியா 65-85 மில்லியன் டாலர்களை மிச்சப்படுத்தி இருக்கலாம் என்கிறதாம்!

அமெரிக்க செனட்டில் பன்மத நல்லிணக்க குழுவின் சார்பாக ஒரு ஹிந்து கோவிலைச் சேர்ந்த ஒருவருக்கு, சமீபத்தில் அன்றைய பிராத்தனைகளை தொடங்கும்போது சின்னதான ஒரு பகுதி ஒதுக்கப்பட்டதாம். ஆனால், எதிர்பாராதது, பார்வையாளர்களின் மூவரின் கூக்குரல் - "நாங்கள் கிருஸ்துவர்கள் மட்டுமல்ல, தேச பக்தர்கள்". அவர்களை காவலர்கள் கைது செய்து அங்கிருந்து அகற்றிய பின் பிராத்தனைகள் தொடர்ந்ததாம்.


Tuesday, July 17, 2007

முள் குச்சியும் மெய் உச்சியும்!

'நிஷ்காம கர்மா' என்ற சொல்லை பயன்படுத்தக் கேள்வி பட்டிருப்பீர்கள். அப்படி என்றால் என்று பார்ப்போம். கர்மம் என்றால் செயல், 'நிஷ்காம கர்மம்' என்றால், 'ஆசைகளிலும் விளைவுகளிலும் எதிர்பார்ப்புகளிலும்' மனதை விட்டுவிடாத செயல் என்று சொல்லலாம். பகவத் கீதையின் முக்கிய சாரமான 'கர்ம யோகம்' தான் 'நிஷ்காம கர்மம்'.

இப்படிச் செய்தால் இன்ன கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பிலும் ஆசையிலும் மட்டுமே மனதை செலுத்தினால், செய்யும் செயலில் கவனம் இருக்காது. செய்யும் செயலில் கவனம் இல்லா விட்டால், செயலில் நிறைவு கிட்டாது.

செயலின் விளைவு எப்படி இருந்தாலும் அதனை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் இருக்க வேண்டும். அதற்காக, என்ன ஏற்பட்டாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்பது பொருளில்லை. நான், எனது, என்னால் தான் இந்த வெற்றி என்ற அகந்தை, என்னால் தான் இந்த தோல்வி என்கிற தாழ்வு மனப்பான்மையோ ஏற்படாமல் இருக்க வேண்டும்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்
.


என்ற குறளை இங்கே குறிப்பிடுவது இங்கே சரியாக இருக்கும்.
இன்பமோ துன்பமோ, எது வரினும் எல்லாம் எம்பெருமானின் பிரசாதம் என ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்.

ஒரு சம்பவத்தின் மூலமாக, ரமண மகரிஷி இதனை அழகாக விளக்குகிறார்:

முன்பொரு சமயம், ரங்காச்சாரி என்ற பெயர் கொண்ட தெலுங்கு பண்டிதர் ஒருவர் ரமண மகரிஷியிடம் 'நிஷ்காம்ய கர்மம்' பற்றி கேட்டார். ரமணரிடம் இருந்து பதிலே இல்லை. சிறிது நேரத்திற்கு பின்னால், ஒரு குன்றின் மேல் ஏறி நடக்கலானார். கேள்வி கேட்ட பண்டிதரும் இன்னும் சிலரும், ரமணரை தொடர்ந்து நடக்கலானர்.

கீழே தரையில் இருந்த ஒரு முட்கள் நிறைந்த குச்சியை கையில் எடுத்தார் ரமணர். பின்னர் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு மெதுவாக, அந்த குச்சியில் இருந்த முட்களை நீக்கலானார்!. அந்த குச்சியின் முடிச்சுகளை நேராக்கினார். பின்னர் ஒரு தடினமான இலையைக் கொண்டு, அந்த குச்சியை வழவழப்பானதாக மாற்றினார். சுற்றி இருந்தவர்கள் இவர் என்ன செய்கிறார் என்று வியந்து கொண்டு இருந்தார்கள்!

சற்று நேரத்தில் பக்கத்தில் ஆடுகளை மேய்த்துக்கொண்டு ஒரு சிறுவன் அந்தப் பக்கம் வர எல்லோரும் ஒதுங்கி ஆடுகளுக்கு வழி விட்டனர். அந்த சிறுவன் கையில் குச்சி இல்லாமல், ஆடுகளை வழிப்படுத்த சிரமப்பட்டுக் கொண்டு இருந்தான்! இதைப் பார்த்த உடனே ரமணர், தன் கையில் இருந்த புதுக் குச்சியை, அந்த சிறுவனுக்கு கொடுத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தார் ரமணர்!.

கேள்வி வினவிய பண்டிதரோ, ஆகா, என் கேள்விக்கு விடை கிடைத்துவிட்டது என்றார்!