Friday, September 28, 2007

இறைவழி நான்கு

உலகம் யாதும் இந்தியாவைத் தேடி காலம் காலமாய் நாடுவது ஆன்மீகத் தேடலில் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை. உவப்போடு சொல்லிடலாம், உலகத்தில் இறைவழியில் நடந்திடும் இந்தியர்களை பார்த்து உலகமே வியப்படைகிறது என்று.

இப்படி பெருமைகள் பலவும் என்றாலும், பலப்பல சிறுமைகளும் இருக்கத்தான் இருக்கிறது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் தானாக தோன்றிய வழிகளிலும், நம்பிக்கைகளிலும் உண்மைகள் பல இருந்தாலும், வேண்டாத, ஒவ்வாத நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எதை எடுப்பது, எதை விடுப்பது என்ற தேர்வு அவரவர் சுயமாக எடுக்க வேண்டிய முடிவுதான் என்றாலும், இந்திய இறைவழிகள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன என்ற அரிச்சுவடி அனைவரும் அரிய வேண்டிய ஒன்று.

இந்து மதத்தின் நான்கு இறைவழிப் பாதைகள் பற்றி என் கற்றலிலும், கேட்டலிலும் அறிந்தவற்றை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதைப் பற்றியெல்லாம் எழுதி பட்டவர்கள் பலர் இருப்பினும்!

இறைவழியில் முக்கிய நான்கு - சைவம், சக்தி வழிபாடு, வைணவம், ஸ்மார்தம்

சைவம்: சிவன் முழு முதல் கடவுள். அறநெறியும், ஞானமும் பெற சத்குரு துணை நாடுவர். ஆலயம் சென்று தொழுவர். யோக நெறியில் ஆழ்ந்து, தனக்குள்ளே இருக்கும் ஈசனை கண்டுணர்ந்து, அவனோடு ஒன்றர கலப்பதே அவரதம்் நோக்கம்.

சக்தி வழிபாடு (சாக்தம்): சக்தியே முழு முதல் கடவுள். சிலருக்கு அவள் சாந்த ஸ்வரூபி. பலருக்கு அவள் பத்ரகாளி. ஓதுதல், மந்திர தந்திர தாந்ரீகங்கள், சக்கரங்கள் மற்றும் ஏனைய முறைகள் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி வழிபடுவர்.

வைணவம்: திருமாலே முழு முதல் கடவுள். திருமாலின் அவதார புருஷர்களில் முக்கியமாக கண்ண பெருமானையும், இராம பெருமானையும் வணங்குவர். இவர்களிடம் ஆழ்ந்த இறை பக்தியைப் பார்க்கலாம். இறை அடியார்கள், ஆலயங்கள் மற்றும் மறைகள் வைணவத்தின் தூண்கள்.

ஸ்மார்த்தம்: முழு முதல் கடவுளை ஆறு வடிவங்களில் வழிபடுவார் - அவை: கணேசர், சிவன், சக்தி, திருமால், சூரியன் மற்றும் முருகன். பக்தியோடு சேர்ந்த ஞான வழிதனில், யோகம் மற்றும் த்யானம துணை கொண்டு, இறைவனை புரிந்து கொண்டு அவனை அடைதலை வழியாய் மேற்கொள்வர்.

்இப்போ, ஒரு சில பொதுவான விஷயங்களில் இவர்களின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போமா?


இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி:

சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.
சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்.

ஜீவனும், பரமனும் பற்றி:

சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத முக்தி அடையலாம்.
வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.

பயிற்சிகள்:

சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதகங்களை செய்வது.
சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.


மறைகள்:

சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம்.
சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.
வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள்.
ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள்.

பரவியுள்ள பகுதிகள்:

சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் ஸ்ரீலங்கா.
சாக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்கு இந்தியா - வங்காளம் மற்றும் ஒரிசா.
வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.

13 comments:

  1. Anonymous11:23 PM

    //உலகம் யாதும் இந்தியாவைத் தேடி காலம் காலமாய் நாடுவது ஆன்மீகத் தேடலில் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை. உவப்போடு சொல்லிடலாம், உலகத்தில் இறைவழியில் நடந்திடும் இந்தியர்களை பார்த்து உலகமே வியப்படைகிறது என்று.//

    ஜீவா ஐயா,

    ஆன்மிக யாவாரம் படு சூடாக நடக்குதுன்னு சொல்றேள் சரியா ?

    மிசநெறிகளும்,முல்லாக்களும் இந்தியாவை கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாமா ஐயா?

    ReplyDelete
  2. Anonymous1:16 AM

    Your attempt of putting your views is well made. However, I can't quite entirely agree with sections such as "ஜீவனும், பரமனும் பற்றி", "இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி" etc. See this

    But anyway, keep up the good work!

    ReplyDelete
  3. ஜீவா

    மிக மிக மேலோட்டமான பார்வை தான் என்றாலும் சுருங்கச் சொல்லியுள்ளீர்கள்! இதில் ஸ்மார்த்தம் எப்படிச் சேரும் என்பது விவாதத்துக்கு உரியது!
    அத்வைதம் = ஸ்மார்த்தம்???

    மறைகளில் தேவார திவ்யப் பிரபந்தங்கள் நிச்சயம் உண்டு! பிரபந்தங்கள் தமிழ்நாட்டில் மட்டும் அல்லாது வடநாட்டிலும் ஓரளவுக்கேனும் ஓதப்படுகின்றன.

    //சாக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்கு இந்தியா - வங்காளம் மற்றும் ஒரிசா//

    கேரளத்திலும் கூட!

    ReplyDelete
  4. பாலா:



    //ஆன்மிக யாவாரம் படு சூடாக நடக்குதுன்னு சொல்றேள் சரியா ?//

    வியாபாரத்தில் Win-Win அவசியம் வேண்டும். இந்த விஷயத்தில் 'ஏமாற்றுதலும்' அதிகமாக இருக்கிறது எனபதை மறுக்க முடியாது. அது பற்றி வேறொரு சமயம் விவாதிக்கலாம்!



    //மிசநெறிகளும்,முல்லாக்களும் இந்தியாவை கெடுத்து வைத்திருக்கிறார்கள் என்று சொல்லலாமா ஐயா?//

    அன்பென்ற ஆயுதத்தால் அன்னியனாலும் அன்போடு அணையுங்கள். அது எல்லோருக்கும் பொருந்தும்.

    ReplyDelete
  5. //However, I can't quite entirely agree with sections such as "ஜீவனும், பரமனும் பற்றி"//
    தங்கள் கருத்தை விளக்கிச் சொல்லலாமே?



    சைவம்.ஆர்க் தளத்தில் எந்த பகுதிய சுட்டுகிறீர்கள் எனத் தெரியவில்லை.

    சிவன் அவதாரம் எடுத்திருக்கிறாரா என்ற கேள்விக்கு அவர்களும் 'இல்லை' என்று தானே சொல்கிறார்கள் இங்கே.

    ReplyDelete
  6. ரவி:



    //அத்வைதம் = ஸ்மார்த்தம்???//

    அத்வைதம் என்பது தத்துவம். ஸ்மார்தம் தான் சரியான பெயர்.



    //மறைகளில் தேவார திவ்யப் பிரபந்தங்கள் நிச்சயம் உண்டு!//

    நிச்சயமாக.



    //சாக்தம் கேரளத்திலும் கூட!//


    சேர்க்கைக்கு நன்றி!

    ReplyDelete
  7. Anonymous8:17 PM

    மறுமொழிகளில் இருந்து ஸ்மார்த்தம் மற்றி மக்களுக்கு தெரியவில்லை என்பதாக அறிகிறேன். ஸ்மார்த்தம் பற்றி விவரமாக தனிப் பதிவொன்று போடலாமே?

    ReplyDelete
  8. வாங்க அருந்ததி,
    ஸ்மார்த்தம் பற்றியும் எழுதலாம்!

    ReplyDelete
  9. ஷண்மதங்களைப் பற்றி சொல்வது போல ஆரம்பித்து, பின் ஸ்மார்த்தத்திற்குள் அதனை இணைத்துவிட்டீர்கள்...ஏனப்படி?. இதற்கு ஏதேனும் முக்கிய காரணம் உள்ளதா?.

    மேலும், நீங்கள் சொல்வதுபடி ஸ்மார்த்தன் அத்வைதி என்பது இருவேறு என்பதாக தொனிக்கிறது....எனக்குத் தெரிந்தவரையில் எல்லா ஸ்மார்த்தனும் அத்வைதியே.

    ஸ்மார்த்தன் சாக்தனாகவோ, இல்லை சைவனாகவோ ஆக முடியாதா?

    ReplyDelete
  10. Anonymous1:36 AM

    >>சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை
    ஒத்துக்கொள்கிறேன் - பிறந்ததில்லை என்பதை. ஆனால் அவதாரங்கள் பலவகைப்பட்டவை - ஆவேச அவதாரம், அம்ச அவதாரம் என்று இப்படி. இதில்
    சிவபெருமான் நிச்சயம் அவதாரம் எடுத்திருப்பதாகவே புராணங்கள் சொல்கின்றன.

    >> வைணவம்: திருமால் பத்து அவதாரங்களில் மண்ணில் பிறந்திருக்கிறார்.
    பிறந்திருக்கிறார் - என்பது சற்றே திரிபாக படுகிறது. (திருவிக்ரமாவதாரம் பிறக்கவில்லை - தோன்றியது)

    >> சைவம்: ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம்.
    சைவம்.ஆர்க் தளத்தில் சைவம் பலவகைப்பட்டது என்பதை சுட்டிக்காட்டவே சொன்னேன். சைவம் அத்வைதத்தை சொல்லவில்லை. சைவமும் வைஷ்ணவத்தில் த்வதமும் கிட்டத்தட்ட ஒத்து வரும்.
    அதாவது பரமாத்மாவும் ஜீவனும் ஒன்றல்ல. சைவத்தில், மூஞ்சப்புல்லை சொல்வார்கள் - ஒரு குழல்போல மூஞ்சப்புல் இருக்குமாம் - அதுபோல இறைவனை ஜீவன் அடைந்தாலும் ஒன்றாகாது. ஜீவனுக்கு மலங்கள்
    உண்டு - பரமன் அமலன் - அதனால் இரண்டும் ஒன்றாகாது என்பது தத்துவம்.

    >> ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.
    அத்வைதம் இதற்கு ஒருபடி மேலே போய் சகுண தெய்வங்களே ஞானம் பெற்றால்தான் நிர்குணத்தை உணரமுடியும் என்று சொல்கிறது. ப்ரம்மத்துடன்
    அவித்யை சேர்ந்தால் மனிதன் - மாயை சேர்ந்தால் ஈஸ்வரன் என்று பிரிக்கிறார்கள்.

    >> வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
    சரணாகதி என்பதில்கூட தன் முயற்சி தன் முயற்சி தேவையில்லை என்று பல வாதங்கள் உண்டு.

    >> ஸ்மார்தம்: பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம். இவையெல்லாம் உயர் ஞானத்தினை அடைந்திட வழிகள்.
    ஸ்மார்த்தம் என்பது அத்வைதம் என்று கொண்டே பதில் சொல்கிறேன் - ஸ்மார்த்தம் இவை எவற்றையும் ஆதரிப்பதில்லை. ஞானயோகம் ஒன்றே அவர்களுக்கு. சில வருடங்களுக்கு
    முன் காஞ்சி பரமாச்சாரியரை (அவர் அத்வைதம் - சைவரல்லர்) சந்தித்து திருப்பாவை திருவெம்பாவை மடத்தில் ஓதுவது உண்டா என்று கேட்டார்களாம் - இங்கே ஒருபாவையும்
    கிடையாது - என்று பதில் சொன்னாராம். அத்வைதம் பக்தி, உடல்வழி ஹடயோகம், இவற்றை ஆதரிக்கவில்லை. அவர்கள் சொல்வது ஞானயோகம் மட்டுமே. Of course, நீங்கள்
    ஆதிசங்கரர் அருளிய பக்தி ஸ்லோகங்களை ஆதாரமாக காட்டக்கூடும் - ஆனால் ப்ரம்ம சூத்ர பாஷ்யம் எழுதி அத்வைதத்தை நிறுவிய சங்கரர் வேறு - ஸ்லோகங்கள் எழுதிய சங்கரர்
    வேறு என்று ஒரு வாதம் உண்டு - அதை நான் நம்புகிறேன்.

    >> வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள
    ஏன் வைணவத்தில் புராணங்கள் கிடையாதா? விஷ்ணுபுராணம் பதினெட்டு புராணங்களில் ஒன்றாயிற்றே!

    >> ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி புராணங்கள், இதிகாசங்கள்.
    ஸ்ம்ருதி என்பது வேறு / புராணம் வேறு - கமா மிஸ் ஆகிவிட்டது என்றே நினைக்கிறேன்.

    நேரமின்மையால் ஆதாரத்துக்கு லிங்குகள் காட்ட முடியாமைக்கு வருந்துகிறேன்.
    நீங்கள் சண்டையிடுகிறேன் என்று தவறாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    ReplyDelete
  11. வாங்க மதுரையம்பதி!



    ஸ்மார்த்தம் என்று நாம் இப்போது சொல்வது ஷண்மதம்தானே, அதனால் தான் இந்த இணைப்பு.இது பற்றி விரிவாக பதிவொன்று எழுத இருக்கிறேன்.



    ஸ்மார்த்தன் அத்வைதியே. அதில் மாற்றில்லை.

    ஸ்மார்த்தம் ஒரு வழிமுறைதான். ஒரு வழிமுறையிலேயே இருக்க வேண்டியதில்லை.

    த்யாகராஜரும் ஸ்மார்த்தர்தான். அவரிடம் 'அத்வைதமா, த்வைதமா'? என்று கேட்டபோது - அதற்கான பதிலை அவரவர் தேர்வுக்கு விட்டு விடுகிறார். அவரின் கீர்த்தனைகள் எல்லா பிரிவினரையும் மனமுருக்கும் விதமாய் அமைத்திருப்பதையும் பார்க்கலாம்.

    ReplyDelete
  12. ஸ்ரீகாந்த்:

    //நீங்கள் சண்டையிடுகிறேன் என்று தவறாக எடுத்துக்கொள்ளாமல் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.//

    நிச்சயமாக அப்படி எடுத்துக் கொள்ளவில்லை.

    மேலும் நீங்கள் சொல்லும் எதுவும் எதிர்மறையாய் படவில்லை!



    இப்போது உங்கள் மறுமொழிக்களுக்கு பதில் மொழி:


    //திருமால் பிறந்திருக்கிறார் - என்பது சற்றே திரிபாக படுகிறது. //

    சுருக்கமாகவும், பொதுவானதாகவே இருக்கவே அப்படி சொனனேன்். பத்து அவதாரங்களுக்கும் அதிகாமகவும் என்று சொல்லாமே என்று கூட வாதம் செய்யலாம்!



    //சைவமும் வைஷ்ணவத்தில் த்வதமும் கிட்டத்தட்ட ஒத்து வரும்.//
    'கிட்டத்தட்ட' என்பதில் சரியே!



    //ஏன் வைணவத்தில் புராணங்கள் கிடையாதா?//
    புராணங்களும் உண்டு.

    ReplyDelete
  13. விளக்கங்கள் தேவைப்படும் இடத்தில் சற்றே மாற்றி அமைத்திருக்கிறேன்.

    உங்களுடைய மறுமொழிக்கு நன்றி!

    ReplyDelete