Monday, November 21, 2011

தில்லை விளாகம்

திருவாரூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தில்லைவிளாகம் திருத்தலம். இங்கே அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் தெய்வீகப் பொலிவுடன் திகழும் இராம விக்ரகம் - மிகவும் பிரசித்தம். தில்லைச் சிதம்பரத்தில் நடராஜரோடு சேர்ந்து கோவிந்தராஜருக்கும் சன்னிதி இருப்பதுபோல, இங்கு நடராஜருக்கு சந்நிதி உண்டு. இத்தலத்திற்கு "ஆதி தில்லை" என்றும் பெயருண்டு.

"ராம சரம்" என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் "தில்லை சித்ரகூடம்" என இத்தலம் வழங்கப்படும்.

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் "தில்லை சித்ரகூடம்" இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.

"எம்பார்" கோவிந்த தாசர், இராமனுஜருடைய "திருவடி நிழல்"(இராமனுஜ கோவிந்த தாசர்)  எனப்பெயர் பெற்றவர். "சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை", "மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை"ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.

இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்

பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே

அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை

சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை