Sunday, November 25, 2007

அறுபடைவீடும் ஆறு சக்கரங்களும்

திருபரங்குன்றம்: மூலவருக்கு இங்கு சுப்ரமணிய சுவாமி என்று நாமம். தேவசேனாதிபதி தேவசேனையை மணந்த தலம். தங்கள் அழுக்குகளை, மூலாதாரத்திற்கு கீழுள்ள சக்கரங்களை மறந்து, இறைவனுடம் இணைவதைக் குறிப்பது, தேவசேனை-திருமுருகன் திருமணம். இந்த தலத்தில் இருக்கும் கற்பக விநாயகனை முதலில் மனத்தில் இருத்தி, அவன் அருள் பெற்று, அறுபடைவீடு தரிசனத்தை துவங்குவோம். மூலாதாரத்தில் அவனுடன் இணைந்து, சரவணபவ எனும் திருநாமம் சொல்லி, மேலான நிலைகளை, சக்கரங்களை அடைவோம்.

திருச்செந்தூர்: மூலாதாரத்தில் துவக்கிய கனல்தனை வளர்த்து அடுத்த சக்கரமான சுவாதிஷ்டானத்தை அடைய, தவ நிலையில் ஜப மாலையுடன் நின்றிடும் மூலவர் பாலசுப்ரமணிய சுவாமியை துதித்திடுவோம். அலைகடல் ஓசை எப்போதும் ஒலித்துக்கொண்டே இருப்பதைப்போல ஓம்கார நாதம் எப்போதும் ஒலித்திக் கொண்டே இருப்பதைக் கவனிப்போம். பதஞ்சலி முனிவர் அருளியபடி ஓம்காரத்தினை ஒலித்திட, ரீங்காரமாய் சுழலாதோ சுவாதிஷ்டானம் திருச்செந்தூரில்.

பழனி - தியான மலை : பழனி மலையில் தண்டாயுதபாணி போகரின் யோகமதில் அருமருந்தாய் ஔஷதமாய் உறைகிறான்.

அவன் ராஜ அலங்காரத்தில் கம்பீரமாகவும், காந்தமாகவும் இருக்கிறான், இழுக்கிறான். ராஜ யோகத்தில் மணிப்பூரத்தில் ஏற்படும் பயத்தினை நீக்கிட, 'யாமிருக்க பயமேன்?" என அபயம் காட்டுகிறான் பழனி மலையில் ஞான பண்டிதன்.

சுவாமிமலை: காவிரிக் கரையில் திருவேரகத்தில் அருளும் சுவாமிநாதன். அருணகிரியார் நாதனை திருப்புகழால் பாடிய அருந்தலம்.
இங்குள்ள கொடிமரத்தடியில் அமர்ந்து தியானம் செய்வது ஏற்றது. சுவாமிநாதனின் உபதேச மந்திரம் ஓம் ச-ர-வ-ண-ப-வ. இம்மந்திரத்தை தொடர்ந்து தியான நிலையில் ஒலிக்க, இதயக் கமலமாம் அனஹதத்தில் ஒளிர்வான் சரவணன். இங்கே மலையாகிய ஞானமதை நொடிப்பொழுதில் அடைந்திட இயலும்.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரப் பிரயோகத்தினால், அவரவர் அகத்திலேயே ஆறு சக்கரங்களில் அறுபடை வீடுகளின் தரிசனம் பெறலாம்.

திருத்தணிகை: குன்றுதோறாடல் என திருமுருகாற்றுப்படையில் அழைக்கப்படும் இந்த தலத்தில் காப்பாற்றும் கடவுளாக ஆதிமுதலே வணங்கப்பட்டவன்.

குளுமையும் அமைதியும் தவழும் இடமாதலால், விசுத சக்ரத்தில் தூய அன்பினைக் கொண்டு முருகனை அடைய ஏற்ற இடம். தன் உணர்வையெல்லாம் மறந்து இறை உணர்வு மட்டுமே இருத்தி, எல்லாவற்றிலும் முருகானாக ஆனந்த பரவசத்தினை அடைய ஏற்ற இடம்.
இந்த தலத்தின் விசேஷம் - கல் வேல் - முருகனின் வேலே முருகனாக ஆதிமுதல் வழிபட்ட இடம். அஞ்ஞானத்தை கூரிய வேலால் பிளந்து உள்ளொளி பெருகிட வழி வகுக்கும்.
பழமுதிர்ச்சோலை: அடுத்ததாக ஆக்ஞை சக்கரத்தில் அவன் அருள் பெருவதற்கு ஏற்ற தலம் பழமுதிர்ச்சோலை.

வீசிய வேல், கார்த்திகேயனின் கையிலேயே திரும்பி வருவதுபோல், எழுப்பிய குண்டலினி சக்தி நம் அஞ்ஞானத்தை அழித்து, ஞானமாக நமக்கு திரும்பித் வருவதைக் குறிக்கும்.

கணபதியின் துணையுடன் வல்வினைகளை வென்று, மேற்சொன்ன ஆறு சக்ரங்களை ஆறு முகன் துணையுடன் அடைந்து, அஞ்ஞானம் என்னும் இருளினை அகற்றி சாதகன் ஒருவன் தன்னைத் தானே தயார் செய்து கொள்கிறான்.

பின் நன்றாக பக்குவப்பட்டபின், இறுதியாக கடைசி சக்ரமான சகஸ்ர சக்ரத்தில், பரமன் சிவனை அண்ட சராசரங்களிலும் நிறைந்திருக்கும் சைதன்யமாக உணர்வதாகும், திரை விலகி, தானும் அந்த பிரம்மமாக இருக்கிறேன் என்கிற உண்மை அறிவினை உணர்வதும் இறுதியாகும்.



உசாத்துணை :
1 )ரத்னா நவரத்னம் (Navaratnam, Ratna.
Karttikeya, the divine child: the Hindu testament of wisdom. Bombay, Bharatiya Vidya Bhavan, 1973.)
2) Himalayan Academy - Hinduism Today Magazine

Friday, November 23, 2007

அறுபடை வீடு கொண்ட திருமுருகா

அறுபடை வீடு கொண்ட திருமுருகா - என்
அகம்அது வீடு கொள்ள வரும்முருகா

வருவது வரட்டும் என உனை நான் பற்றிட
உறுதுணை இருக்குது உன் ஆற்றுப்படை.

அறுபடை வீடுதன் பொருளென்ன பெருமானே?
அருமருந்தாய் யோகியரும் சொல்வதென்னே?

கனல் அது பொறியாகி எழுந்தி(ட்)ட மூலதாரத்தில்
கருவாகி தண்டினில் ஏற்றிடும் திருப்பரங்குன்றமோ

மறைபொருள் உணர்த்திடும் சுவாதிஷ்ட்டானத்தில்
தவநிலையில் நின்றி(ட்)ட திருச்செந்தூரோ

பயம்தனை அகற்றிடும் மணிப்பூரத்தில்
தடைகளை தகர்த்தி(ட்)ட பழநியோ

நேரடியாய் தன்அறிவு தூர்ந்திடும் அனஹதத்தில்
சுழன்றிடும் இதயச் சுடராக சுவாமிமலையோ

இறை அன்புக்கதவை திறந்திடும் விசுத்தியில்
நிறை அன்பினை அருளும் திருத்தணிகையோ

உச்சியில் உறைந்திடுவானை பற்றிட ஆக்ஞைசக்ரத்தில்
நெற்றிக்கண் பற்ற எரியும் பழமுதிர்ச்சோலையோ

அறுபடை வீடுதன் பொருள்தனை அருள்வாயே,
அருமருந்தாம் உனை பற்றிடச் செய்வாயே,

முருகா, முருகா, முருகா, முருகா, முருகா, முருகா.

Tuesday, November 20, 2007

இது எந்த இடம்? (விடை பதிவின் இறுதியில்)

இயற்கையின் அழகே அழகு...



ரம்யமான இந்த நீர் வீழ்ச்சியின் பெயர் என்ன?



எங்கே இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்!






இன்னொரு படமும் சேர்த்திருக்கிறேன்:



படங்களை பெரிதாக பார்க்க, படத்தை அழுத்தவும்.

புதிருக்கான விடை:

ஜோக் அருவி (Jog Falls, கன்னடம்:ಜೋಗ ಜಲಪಾತ ),
கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த அருவி, இது இந்தியாவில் உள்ள பத்து உயரமான அருவிகளில் ஒன்றாகும்.

இது ஷராவதி ஆறிலிருந்து 253 மீட்டர் உயரத்தில் இருந்து விழுகிறது.
அருவியின் அகலம் 1550 அடி.

இந்த அருவியானது கெருசொப்பெ அருவி எனவும் ஜோகதகுன்டி அருவி எனவும் அழைக்கப்படுகிறது. (கெருசொப்பெ வில் இருந்து 18 மைல்)

அருவி நான்காக பிரிந்து வருகையில், நான்கு பெரிய பகுதிகளுக்கு நான்கு பெயர்களும் உண்டு: ராஜா, ராணி, ராக்கெட், ரோரர் (Roarer)

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை சீசன் காலம். சென்று பார்க்க ஏற்ற தருணம்.

பெங்களூரில் இருந்து 379 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மிக அருகே
உள்ள ரயில் நிலையம் - ஷிமோகா. (104 கிலோமீட்டர்)

மேலதிக விவரங்களுக்கு
ஆங்கில விக்கிபீடியா

Sunday, November 18, 2007

'நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?' : நரேந்திரன்

'நீங்கள் கடவுளைக் கண்டதுண்டா?'
'எனக்கு கடவுளைக் காட்ட முடியுமா?'


இப்படி எல்லோரிடமும், இறுதியாக இராமகிருஷ்ண பரமஹம்சரிடமும் கேட்ட அந்த வங்காளத்துச் சின்னப்பையன், நரேந்திரனைப் (நரேந்திரநாத் தத்தா) பற்றி நமெக்கெல்லாம் நன்றாக தெரியும். விவேகானந்தரான அவர் கதை நமக்கு எப்போதோ சொல்லப்பட்டு விட்டதல்லவா? அது சரி, நரேந்திரனின் பயிற்சிக்கூடம் எப்படி இருந்திருக்கும்? விவேகானந்தர் எப்படி கடவுளை கண்டறிந்தார்? சுவையான சில சம்பவங்கள் மூலமாக பார்ப்போம்.

முதலாவதாக, இராமகிருஷ்ணர் தன் சீடர்களுக்கு இந்த ஒரு வழியினைத்தான் பின்பற்ற வேண்டும் என்றெந்த கட்டுப்பாட்டினையும் விதிக்கவில்லை. அவரவர் பின்புலத்திற்கு தகுந்தவாறு தங்கள் வழியினில் தங்கள் இறைஅறிவுத் தேடலில் ஈடுபடலாம். அவ்வாறே நரேந்திரனுக்கும். அதே சமயம், நரேந்திரனின் பயிற்சி முறைகள் பரமஹம்சரால் நேரடியாக உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டன.

பயிற்சிக்கூடத்தில் சக மாணவர்களுக்குள் பல சமயம் அவர்களுக்குள் வாக்குவாதம் வரும். பல கடவுள்களைப் பற்றியும், பல நம்பிக்கைகளைப் பற்றியும் விவாதங்கள் வளரும். இந்த விவாதங்களில் நரேந்திரனின் பேச்சுத் திறமைகளை தொலைவில் இருந்து ரசிப்பார் ராமகிருஷ்ணர். அப்படி ஒரு சமயத்தில், ராகல் என்னும் சக மாணவரின் காளி பக்தியை நரேந்திரன் கிண்டல் செய்வதைப் பார்த்து, மற்றவகள் இறை நம்பிக்கையை சிதைக்கும் படியாக ஏதும் செய்யக்கூடாது என அறிவுறுத்தினார்.

இன்னொரு சமயம், இராமகிருஷ்ணர் விளக்கியிருந்த அத்வைதக் கோட்பாடுகளைப்பற்றி மாணவர்கள் விவாத்தித்து கொண்டிருந்தனர். அப்போது நரேந்திரனோ, 'இது என்ன பிதற்றல், இறைவன் எங்கேயும் இருக்கிறானாம். அருகிலிருந்த ஜாடியைக் காட்டி, இந்த ஜாடியிலும் இருக்கிறானம், அதன் மூடியிலும் இருக்கிறானாம்' - என்று கிண்டலாகச் சொல்லவே, அனைவரும் சிரித்து விட்டனர். இவர்களின் நகைப்புக்கு காரணம் அறிந்து அங்கு வந்த இராமகிருஷ்ணர், நரேந்திரனைத் லேசாக தொட்டுவிட்டு சென்று விட்டார். நரேந்திரனுக்கு என்ன நடந்ததோ தெரியவில்லை. அடுத்த சில நாட்களுக்கு நரேந்திரன் பார்ப்பதில் எல்லாம் பரப்பிரமம் தெரிந்ததாம்!. அத்வைதத்தின் சாரம் அப்போதே நரேந்திரனுக்கு காணக்கிடைத்தாலும் முழுஅறிவினைப் பெறுவதற்கு பின்னொரு நாளானது.

ராமகிருஷ்ணரும் தன் மாணவர்களை பலவிதமான சோதனைகளுக்கு உட்படுத்தி வந்தார். ஒருமுறை, ஒரு காரணமே இல்லாமல் நரேந்திரனுடன் சில நாட்களாக பேசவே இல்லை. முகமெடுத்துக்கூட பார்க்காமல் அலட்சியப்படுத்தி வந்தார். சில நாட்கள் கழித்து, அவரே நரேந்திரனிடம், 'உன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்கிறேன். நீயேன் தினமும் இங்கே திரும்பித் திரும்பி வந்து கொண்டே இருக்கிறாயே?' என்றார் கோபமாக. நரேனோ, சாந்தமாக, 'உங்கள் மீதுள்ள அன்பினால் உங்களைப் பார்க்க வருகிறேன், நீங்கள் பேசுவதைக் கேட்பதற்காக அல்ல' என்று சொன்னார். நரேனின் பதிலில் மகிழ்ந்த இராமகிருஷ்ணர், 'நல்லது, உன்னை சோதனை செய்யவே இப்படிச் செய்தேன். என் வெளி அணுகுமுறையில் மாற்றத்தினால் நீ மாறுகிறாயா என்று பார்த்தேன். வேறொருவாராய் இருந்தால் இங்கே திரும்பி வந்திருக்கமாட்டார்' என்றார்.

ஒருமுறை நரேந்திரனை அழைத்து, பலவிதமான ஏற்பாடுகளையெல்லாம் செய்துவிட்டு, இதுவரை கடும் தியானங்கள் புரிந்து பெற்ற ஆத்ம சக்தியெல்லாம் உனக்கு தந்துவிடலாம் என நினைக்கிறேன் என்றார். நரேந்திரனோ, 'அப்படியா, இந்த சக்தியெல்லாம் பெற்றால், அவை கடவுளை அறிய எனக்கு துணை புரியுமா?' என்று கேட்டார். பரமஹம்சரோ புன்னகைத்து, 'அவற்றைக் கொண்டு கடவுளை அறிய இயலாது. ஆனால் நீ ஒரு ஆசானாக மற்றவர்களுக்கு இருக்க அவை துணை புரியும்' என்றார். உடனே நரேன், "ஐயா, அப்படியானால் அவை இப்போது எனக்கு தேவைப்படாது, முதலில் கடவுள் யாரெனக் கண்டறிவதில் கவனம் செலுத்துகிறேன். அவ்வாறு கண்டறிந்தபின், இந்த சக்திகளுக்குத் தேவை இருக்குமா எனத் தெரியும். மேலும், இப்போது இவைகளை பெற்றுக்கொண்டாலோ, என் தேடலை மறந்துபோய், என் சுயநலத்திற்காக பயப்படுத்தி விடுவேனோ என்னவோ." என்று மறுத்து விட்டார்.

இராமகிருஷ்ணரைப்போல் நரேந்திரனால் உள்ளொளியில் அமைதியாக ஒளிர்ந்திட இயலவில்லை. தனக்கு தியானம் சொல்லித் தரும்படி மன்றாடிட, அதற்கு இராமகிருஷ்ணரோ, "கடவுள் நம் பிரார்த்தனைகளைக் கேட்டுக் கொண்டே இருக்கிறார். நீ கடவுளைப் பார்க்கவும், பேசவும் முடியும் - என்னுடன் நீ பேசுவதைப் போலவே. அவர் பேசுவதைக் கேட்கவும் அவரைத் தொடுவதை உணரவும் முடியும்." என்றார். தொடர்ந்து, "நீ தெய்வங்களின் உருவங்களில் நம்பிக்கை அற்றவனாக இருக்கலாம். ஆனால், எல்லாவற்றுக்கும் மேலான ஒருவன் இருக்கிறான் என்று நம்பினால், அவனிடம் கேள் - 'இறைவா, நீ யாரென்று நானறியேன். என் மீது கருணை கொண்டு, உன் நிஜ சொருபத்தினை காட்டிடுவாய்' என வேண்டிடு. உன் வேண்டுதல் நேர்மையாய் இருக்கும் பட்சத்தில், நிச்சயம் அவன் அதற்கு செவி மடுப்பான்." என்றாரே பார்க்கலாம்.

உசாத்துணை : விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தா

(இன்னமும் வளரலாம்...)

Saturday, November 10, 2007

எங்கிருக்கிறான் இறைவன்?

இறைவன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு முதன் முதலில் சொல்லித்தந்த வரிகள் - இந்த வள்ளலாரின் வைர வரிகள் தான். ஏதோ ஒரு வகுப்பு, எதுவென்று நினைவில்லை - தமிழ் பாடப் புத்தகத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலாக வரும்:


எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்
எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே
எனினும் செவிடர் கேட்பாரோ?

எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறைவனே.

அந்த வயதில், கடவுள் என்றால் படங்களில் பார்த்த சிவனோ, முருகனோ, திருமாலோ, விநாயகனோ - இப்படி இன்னும் பலரின் திருமுகங்கள் தான் நினைவுக்கு வரும். அந்தப் பருவத்தில் - இப்படி யார் ஒருவரின் பெயரும் இல்லாமல், இறைவன் இவன் என்று சொன்ன அந்த வரிகள் என் கவனத்தை கயிற்றால் கட்டி இழுத்தன போலும். எளிதான அந்த வரிகளின் சக்தி இன்றைக்கும் பிரம்மிப்பாகவே இருக்கிறது.

யார் இறைவன் என்றெல்லோரும் தேடி அலைகின்றார். ஓராயிரக்கணக்கில் கதைகள் சொல்லி எப்படியெல்லாமோ அவனைப் பற்றி பலரும் சொல்லி விட்டார். எனினும் அந்த தேடல் தீர்ந்த பாடில்லை. மண்ணில் எத்தனை மூலை முடிக்கிலும் தேடினாலும் அவன் மாயவனாகவே இருக்கிறான். ஏற்கனேவே பலர் தேடிக் கண்டதாகச் சொன்னாலும் ஒவ்வொருவரும் மீண்டும் தானாகவும் தேட வேண்டியிருக்கிறது. மனிதர் தேடும் வேறு எந்த பொருளுக்கும் இப்படி ஒரு தனித்துவமான குணம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்குவது ஒரு குறிப்பிட்ட உருவத்தில் இறைவனைக் குறிக்குவது போலாகாதா? அப்படி குறுக்கப்பட்ட கடவுளும் கடவுளாகுமோ என்று கேட்கலாம். கடவுளே இவ்வுலகம். அனைத்து உருவங்களும் அவர் உருவங்களே. எந்த உருவத்தில் வேண்டுமானாலும் அவரை வழிபடலாம். கீதையில், இறைவன் ஸ்ரீகிருஷ்ண உருவத்தில் அர்ஜூனனுக்கு இவ்வாறு உபதேசம் சொல்கிறார். "இறைவனான என்னிடம் இருந்தே அனைத்தும் தோன்றுகினறன, நிலை பெறுகின்றன, ஒடுங்குகின்றன".

எங்கும், என்றும், எவ்வுயிரும் எல்லாமும் ஆன இறை அவன் பிரதிபலிக்கும் இடங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பரம்பொருளான சைதன்யமோ அளவற்றது. எல்லையில்லாதது. அதே சைதன்யம் என்னும் பேரறிவுதான் (Super Consciousness), மேலே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதா உபதேசத்தில் 'என்னிடம் இருந்து' என்ற சொல்லாக மலருகிறது. அதே சைதன்யம்தான் நம்மையும் 'நான்' எனச் சொல்ல வைக்கிறது. நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நீங்களும் நானும் கூடச் சொல்லலாம். நான் இந்த உடல் அல்ல, நான் இந்த மனம் அல்ல, நான் என் அவையங்கள் அல்ல, நான் புத்தியா, நான் ஒன்றுமில்லாமல் சூன்யமா, பின் நான் யார், என்ற சுய வினவலின் மூலமாக அறிந்து, அந்த அறிவின் மூலமாக நான் அந்த சைதன்யமாகவே இருக்கிறேன் என்று உணர்ந்து சொல்லலாம்.

வேதாத்திரி மகரிஷி அழகான எடுத்துக்காட்டு ஒன்று தருவார். எங்கெங்கும் நிறைந்திருக்கும் பிரம்மத்தினை, ஒரு பெருங்கடலுக்கு ஒப்பாக எடுத்துக் கொண்டு, அதிலிருந்து ஒரு குடுவையில் நீர் முகர்ந்து கொண்டால், அந்த குடுவை நீர்தான் நம் ஜீவன். குடுவை நீர் மீண்டும் கடலில் கலக்கும்வரை, அது வெறும் நீர்தான். கடலில் கலந்த பின்னோ அது கடல். கடலில் எந்தப் பகுதி நீர் இந்தக் குடுவை நீர் எனப்பிரித்தறிய இயலாது.அதுபோலவே ஜீவன் பரமனை அடைந்த பின்னரும்.

சுவாமி தயானந்த சரஸ்வதி கடலின் அலைகளுடன் ஒப்பிடுவார். பெருங்கடலில் சிறிய அலை ஒன்று கரையை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான் அழிந்து விடுவேனே என்ற வருத்ததுடன். "நான் அழியுமுன் என்னை காப்பாற்ற யாருமில்லையா" என ஓலமிடுகிறது. அதைக்கேட்டு அருகில் வந்த பேரலை ஒன்று, சிற்றலையிடம், "வருத்தப்படாதே, கண நேரமே தோன்றி மறையும் அலையல்ல நீ, இந்த பெருங்கடல் நீ என உணர்வாய். உன்னையும், என்னையும், ஏனைய அலைகளையும் படைத்த கடவுள் இந்த கடலே. உன்னில், என்னில் மற்றும் ஏனைய அலைகளிலும் இந்த கடலே நீராக வியாபித்து இருக்கிறது. நீயும் இந்தக் கடலும் வேறல்ல, அனைவரும் இந்தக் கடலில்தான் இறுதியில் ஒடுங்குவோம்." என்று கூறுகிறது.

இறைவனும் நாமும் உண்மையில் அளவற்ற சைதன்யம்தான். சைதன்யமான நம்மிடத்தில்தான் அனைத்துலகமும் இருக்கிறது. அதைப்படைத்த இறைவனும் இருக்கிறான்.

Monday, November 05, 2007

ரமணரிடம் சில கேள்விகள்

முன்பொருமுறை திருமதி பிக்காட் என்கிற ஆங்கிலேயப் பெண்மணி ஒருவர் ரமணாசரமம் வந்திருந்தார். அங்கு ரமண மகரிஷியை சந்தித்து அவரிடம் உணவு முறைகளை பற்றி சில கேள்விகளை எழுப்பினார். அப்போது நடந்த சுவையான உரையாடல் இங்கே, தமிழில்:

பிக்காட்: ஆன்ம ஞானம் பெற விழையும் சாதகனுக்கு எந்த வகையான உணவினை பரிந்துரைக்கிறீர்கள்?
ரமணர்: சாத்வீக உணவு - அதுவும் குறைந்த அளவில்.
பிக்காட்: சாத்வீக உணவு என்றால் என்ன சொல்ல முடியுமா?
ரமணர்: ரொட்டி, பழம், காய், பால் போன்றவை...
பிக்காட்: வட இந்தியாவில் சிலர் மீன்களை உண்கிறார்களே, அது சரியா?
(இந்த கேள்விக்கு பதிலேதும் இல்லை)
பிக்காட்: ஐரோப்பியர்களான எங்களுக்கு எங்கள் ஒருவித உணவு பழகிவிட்டது. அதை மாற்றினால், உடலும் அதனால் மனமும் சக்தியிழந்து விடுகிறது. உடல் நலம் பேணுவது அவசியம் அல்லவா?
ரமணர்: நிச்சயமாக. உடல் சக்தியிழக்கையில், வைராக்கியம் என்னும் சக்தியை மனம் பெறுகிறதே!
பிக்காட்: ஆனால், நாங்கள் மனவலிமை இழக்கிறோமே?
ரமணர்: மனவலிமை என்று எதைச் சொல்கிறீர்கள்?
பிக்காட்: உலகத்தின் பந்தங்களில் இருந்து விடுபடும் சக்தியினை சொல்கிறேன்.
ரமணர்: உண்ணும் உணவைக் கொண்டே மனம் வளர்கிறது. அதனால் உணவு சாத்வீகமாக இல்லாவிட்டால் அதனால் மனமும் பாதிக்கப்படுகிறது.
பிக்காட்: நிஜமாகவா, அப்படியென்றால், நாங்கள் எப்படி சாத்வீக உணவுக்கு வழக்கப்படுத்திக்குள்ளது.
ரமணர்: ( அருகில் இருக்கும் இவான்ஸ்-வெண்ட்ஸ் என்பவரைக் காட்டி ) நீங்கள் எங்கள் உணவை உண்ணுவதால், ஏதேனும் சங்கடம் இருக்கிறதா?
இவான்ஸ்-வெண்ட்ஸ்: இல்லை, ஏனெனில் அது எனக்கு பழகிவிட்டது.
பிக்காட்: பழக்கம் இல்லாதவர்களுக்கு என்ன சொல்வீர்கள்?
ரமணர்: பழக்கம் என்பது சூழ்நிலைக்கேற்ப தன்னை தயார் செய்து கொள்வதுதான். இங்கே மனம் தான் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது. மனம் சில வகையான உணவுகளை சுவையானதாகவும், நல்ல உணவாகவும் நினைத்துக் கொண்டு இருக்கிறது.
பிக்காட்: புலால் உணவுக்காக உயிர்கள் கொல்லப்படுகிறதல்லவா?
ரமணர்: யோகிகளுக்கு அஹிம்சையே தலையாய கொள்கை.
பிக்காட்: செடிகளுக்கும், அதில் காய்க்கும் காய், பழங்களுக்கும் உயிர் இருக்கிறது அல்லவா?
ரமணர்: நீங்கள் உட்கார்ந்திருக்கும் மேடைக்கும்தான் உயிர் இருக்கிறது!
பிக்காட்: நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக புலால் அற்ற உணவுக்கு பழகிக் கொள்ளலாமா?
ரமணர்: அதுவே வழி.

கிளிப் பாட்டொன்று கேட்கலையோ...

திருவைப் பணிந்து நித்தம்
செம்மைத் தொழில் புரிந்து
வருக வருவதென்றே - கிளியே!
மகிழ்வுற் றிருப்போமடி!

வெற்றி செயலுக் குண்டு
விதியின் நியமமென்று,
கற்றுத் தெளிந்த பின்னும் - கிளியே!
கவலைப் படலாகுமோ?

துன்ப நினைவுகளும்
சோர்வும் பயமு மெல்லாம்
அன்பில் அழியுமடீ! - கிளியே!
அன்புக் கழிவில்லை காண்!

ஞாயிற்றை யெண்ணி யென்றும்
நடுமை நிலை பயின்று,
ஆயிர மாண் டுலகில் - கிளியே!
அழிவின்றி வாழ்வோமடீ!

தூய பெருங்கனலைச்
சுப்பிர மண்ணி யனை
நேயத்துடன் பணிந்தால் - கிளியே!
நெருங்கித் துயர் வருமோ?



மாண்டு ராகம் - ஆதி தாளம்
எஸ். சௌம்யா பாடிடக் கேட்கலாம்:

சென்ற வருடம் அக்டோபர் 12இல், சென்னை வானொலி நிலையத்தில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்சியில் இடம்பெற்ற மகாகவி பாரதியின் பாடல் இது.

வெற்றியும் தோல்வியும், இன்பமும் துன்பமும் வினைப்பயன் என்று உணர்ந்தவர், எந்த செயலுக்கான விளைவிலும் தன்னை அலைக்கழிக்க விடார். மாறாக செயலின் விளைவை இறைவனின் பிரசாதமாக ஏற்றுக் கொள்வார். இன்பத்தில் திளைத்து தன்னை மறப்பதும் இல்லை. துன்பத்தில் வீழ்ந்து துழல்வதும் இல்லை. சூரியனைப்போல் நடு நிலமையுடன் தன் செயலின் பயன்களைக் கொள்வார், அழிவில்லாமல் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வார்.

வந்த துன்பத்தினை போக்குவதற்கான வழியாக அன்பை பயன்படுத்தச் சொல்லுகிறார். அன்பினால் துன்பம் செய்தவரை அணுகுங்கால் பகை விலகுவதோடு, தாம் கொண்ட துன்பமெல்லாம் அழியும். துயரம் விளைவிக்கும் சோர்வும், பயமும் நம்மிடம் இருந்து ஓட்டம் பிடிக்கும்.

அடுத்ததாக, இனிமேல் துயர் வராமல் இருப்பதற்கான வழியாக, அறிவுச்சுடராக விளங்கும் சுப்ரமணியனை பணிந்திட்டால் போதும், துயர் நெருங்கித்தான் வருமோ என்கிறார். யாமிருக்க பயமேன் என்று சொன்னவல்லவா அவன்!

திருவைப் பணிந்து செம்மையுடன் தினமும் நம் தொழில் செய்வோமடி கிளியே. வருவதெல்லாம் வரட்டும் என்று வருவதை ஏற்றுக்கொண்டு, என்றென்றும் மகிழ்வுற்று இருப்போமடி கிளியே!