Sunday, October 02, 2011

நவராத்ரி - இதன் பொருள் யாது?

ஒன்பது இரவுகள் - அன்னை சக்தியைத் துதிப்பதற்கு - குறிப்பாக பெண்களால் கொண்டாடப்படுவது.
.... மேலும்....?

சக்தி?
இயக்க சக்தி - இயங்குவதற்கான சக்தி.
இந்த சக்தி உடலில் இருந்தால் தானே எந்த செயலையும் செய்ய இயலும்?
ஓட்டப்பந்தயத்தில் போல ஓடி தங்கப் பதக்கத்தைப் பெறவும் சக்தி வேண்டுமல்லவா!
ஒரே நோக்கத்தோடு உடலில் சக்தியை கவனத்தோடு செயலில் நடத்துகையில் நமது சக்தியின் திறனை அறிகிறோம்.  மன நிறைவைப் பெறுகிறோம்.
இது போலவே தான் இறைவனின் சக்தியும்.
இறைவனின் சக்தியில் கவனத்தைக் குவிக்கையில் - அந்த குவிமுனையில் விளையும் ஆக்கத்தினை அறிகிறோம். அவ்வாறு விளையும் ஆக்கமே அன்னை சக்தியாம்.

எப்படி உடலில் சக்தியினை அறிகையில் "நம்மால் இந்தச் செயலை செய்ய முடியும்" என்கிற திறனை அறிகிறோமோ, அதுபோல, இறைசக்தியெல்லாம் ஒன்று சேர - அவற்றின் ஆதாரத்தினை - அன்னையை அறிகிறோம்.

எப்படி குழந்தைக்கு அதன் அன்னை ஆதாரமோ அதுபோல உலகிற்கும் அனைத்து உயிர்களுக்கும், உயிரில்லா பொருட்களுக்கும் அன்னை சக்தியே ஆதாரம். அந்த ஆதாரத்தினை, இறைவனின் சக்தியினை அறிகிறோம்.

"ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்"
என்பான் "பாட்டுக்கொரு புலவன்" பாரதி.

இவ்வாறு அன்னையை, இறை சக்தியின் ஆதாரத்தினை அறியும் சாதனையைச் செய்வதற்கான பண்டிகையே - நவராத்திரி எனப்பட்டது.