Monday, June 30, 2014

சுந்தர காண்டம் : ஊர் தேடு படலம்

1. என்னென்று சொல்வது இலங்கை நகர் அழகை!
பொன்னாலும் மணியாலும் இரத்தினங்களாலும்
மின்னும் கற்களாலும் இழைக்கப்பட்டு பளபளவென
கண்ணைப் பறித்து ஜொலித்தது.

2. மக்கள் கூட்டம் எங்கும் நிரம்பி வழிந்தது.
தேவர்கள் யாவரும் இங்கே சேவகம் புரிந்தனர்.
யானைகளும் குதிரைகளும் இலங்கைச் சேனையில்
மட்டுமே இருப்பதுபோல் தோன்றியது.

3. வாத்தியங்கள் பலவும் இசை முழங்கின.
நாலாபுறமும் முரசு ஒலித்தது.
யானைகளின் பிளிறல், அலைகளின் ஓசை,
இனிய இசையான பெண்களின் குரலும்,
காற் சிலம்பும் ஒலித்தது.

4. இலங்கைப் படைகளின் எது பெரிது?
விற்படையா வேற்படையா வேல்படையா மல்யுத்த
வீரர் படையா, அல்லது ஏனைய ஆயுதப் படையா?
அன்பு இராமனிடம் எதுவென்று சொல்வேன்
என வியந்தான் அனுமன்.

5. இரவு நேர வானத்தில் மின்னிய விண்மீன்கள்:
அனுமனை வாழ்த்தி தேவர்கள் தூவிய பூமழை
இராவணனுக்கு பயந்து மண்மீது செல்லாமலும்,
திரும்பிச் செல்ல இயலாமலும் இடையே
திண்டாடு கின்றனவோ?

6. கதிரவன் இராவணனிடம் பயந்துதான் நகரின்
மதிலின் உள்ளே நுழைவதில்லை என்பதைவிட, இம்
மதிலைக் கதிரவனும் தாண்டுவது கடினம்
என்பதே காரணமாக இருக்க வேண்டும்.



7. முன்னூறு வெள்ளம் வீரர் புறம் இரண்டிலும்
முனைப்புடனே புரிந்தனர் மதிற்காவல்.
எண்ணற்ற ஆயுதங்களை தாங்கிய அரக்கர் இவரோடு
வீணாய்ப் போர் புரியாமல் மதிலைத் தாவுவதே உசிதம்
என நினைத்தான் அனுமன்.

8. மதிலருகே சென்ற மாருதியை வழி மறித்தனள்
மாது இலங்காதேவி - "யாரடா நீ"  என்றே வினவி.
அனுமனோ நயமாய் "ஊரைப் பார்க்க ஆசை" என்றான்.
"முப்புரம் எரித்த சிவனும் இப்புறம் வர அஞ்சிட,
குரங்கான நீ எம்மாத்திரம்? ஓடிப்போ" என்றாள் அவ்வரக்கி.

9. இருவருக்கும் பேச்சு முற்றி கைகலப்பாயிற்று.
இறுதியில் அனுமன் விட்டான் பலமான குத்தொன்று.
அதில் அரக்கியும் மூர்ச்சையானள். பின் தெளிந்து,
அனுமன் யாரென்றும், தன் மதிற்காவல் தொழிலானது
அவனால் நிறவு பெற்றதையும் உணர்ந்து,
அவனை நகருக்குள் செல்ல அனுமதித்தாள்.

10. ஒவ்வொரு மலரிலும் தேனினை சேகரிக்கும்
வண்டு போல நகரில் ஒவ்வொரு இடமாய்
சென்று ஆராய்ந்தான். ஆங்கே கும்பகர்ணன்,
விபீஷணன், இந்தரஜித் முதலானோர்
மாளிகைகளை துழாவிச் சென்றான்.

11. நகரமே உறங்கிக் கொண்டிருக்கையில் அனுமன் மட்டும்
உறங்காமல் சீதா பிராட்டியைத் தேடினான்.
பெண்கள் இருக்கும் இடமெல்லாம், அங்கு சீதையைக்
காண்போமா என்று ஏங்கித் தேடினான்.

12. இறுதியில் இராவணனின் மாளிகையை அடைந்து
இனிதே உறங்கும் இராவணனைக் கண்டதும் கோபத்தில்
இவனை இப்படியே கொன்றால் என்ன? என நினைத்தான்.
பின்னார் ஆராய்ந்து அது தவறென்று தெளிந்தான்.

13. அங்கும் சீதையைக் காணமல் வருந்தினான்.
ஒருவேளை கொன்றானோ, இல்லை தின்றானோ?
ஒருவரும் எட்ட முடியாத இடத்தில் தான்
சிறை வைத்தானோ? என புலம்பினான்.

14. நல்வினை யாவும்  நீங்கியது, எனவே யானும்
அல்லல் அடைந்தேன் அன்னையைக் காணாமல்.
இல்லை இனிமேல் நன்மை! என மனம் உடைந்தான்.
அரக்கன் இராவணனை அடித்துக் கேட்கலாமோ
அன்னை இருக்கும் இடத்தை?

15. இனி எப்படி என் இனிய இராகவன் திருமுகம்
காண்பேன்? இப்போதே இலங்கையை தீக்கிரையாக்கிவிட்டு
தானும் உயர் துறப்பதே மேல் என்று
எண்ணுகையில் மலர்வனம் ஒன்றைக் கண்ணுற்றான்.

Monday, June 23, 2014

சுந்தர காண்டம் : கடல் தாவு படலம்

வாழ்த்து
அன்பெனும் அமுதைப் பொன்னெனப் பூண்டவன்
தன்மனம் முழுதிலும் இராமனை நிறைத்தவன்
அகிலமும் அவனை அனுமனெனப் போற்றிட
அன்பனின் அருமையைச் அடியேனும் சாற்றுவேன்.

கடல் தாவு படலம்
1. அன்பர் அனைவரின் விடைதனைப்பெற்று
அனுமன் பெற்றனன் பேருருவம்!
விண்வரை உயர்ந்தவன் இந்திர உலகத்தைக்
கண்டு ஐயுற்றான் இலங்கை இதுதானோ என்று;
பின் தெளிந்தான் இலங்கை இதுவல்ல வென்று.

2. பின்னர் கண்டனன் இலங்கை மூதூர் நகரை.
பொன்மதில்கள், கோட்டைகள், மாட வீதிகள்
எனப்பல கண்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தான்
அனுமனும் ஆகா வென்றே .

3. மூதூர் நோக்கி கால்களை அழுத்தி
வானில் எழும்பியபோது மகேந்திர
மலையோ பாவம் அழுந்திப் போனது அடியே.
மலையின் வயிறு பிதுங்கி அங்கிருந்த
மலைப்பாம்புகள் யாவும் வெளியே வந்து விழுந்தன.

4.  வானில் அனுமன் பறந்த காட்சி :
வால் எடுத்து, தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி
கழுத்தினை சுருக்கி கை நீட்டி விசைத்தான்.
விண்ணவரும் முனிவரும் வாழ்த்த விரைவாய்
விண்ணிலே காற்றைக் கிழித்துப் பறந்தான்.
முன்னம் பரந்தாமன் காலால் அளந்த உலகை
அனுமன் வாலால் அளந்தானோ என
வானோர் மருண்டனர்.

5. காலனின் கயிற்றுக்கு இதுவரை இலங்கை
செல்லவே அச்சம்; ஆனால் இப்போது இல்லை.
ஏனெனில் தலைவனாம் அனுமனின் வாலின்
பின்னால் ஒளிந்து கொண்டு செல்லலாமே!

6. வான்வெளியை ஊடுறுவிப் பறந்த வேகத்தில்
வானவர்கள் ஆங்காங்கே பறந்து வந்த
விமானங்களோ அந்தோ ஒன்றோடு ஒன்று
விரைவாய் மோதி நசுங்கி வீழ்ந்தனவே!

7. இவன் பறந்த வேகத்தைக் கண்டு
இந்திரனும் வியந்தான் - ஆகா, இவ்வேகத்தில்
இலங்கை மட்டும் தான் என்னே?
இன்னுமும் பலதூரம் செல்வான் என்றான்!

8. ஆழ்கடலில் ஆர்ப்பரிக்கும் திமிங்கிலம் முதலான
ஆபத்தான மீன்கள் எல்லாம் அந்தோ
அனுமனின் காற்று வேகத்தை தாக்குப் பிடிக்காமல்
தண்ணீரிலேயே மடிந்து மிதந்தனவே.

9. தடக்கை இரண்டையும் காற்றினில் செலுத்திப் பறக்க
தடக்கை இரண்டிலும் இருப்பது யாரோ?
தடக்கை இரண்டையும் இயக்க இருப்பது
சுடரொளி இராமனும் இலக்குவனும் ஆமே.

10. கடலின் மேலே விறையும் பாதையின் குறுக்கே
கடலினில் எழுந்தது மைந்நாகமலை.

அடடா இதுவென்ன தடை? என்று
அனுமனும் தன் காலினால் உதைத்திட
அம்மலையும் கடலினில் குப்புற வீழ்ந்தது.

அதன்பின் சிறு மானிட உருவம் கொண்டு,
அன்போடு உபசரித்து, இம்மலையில்
"இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லவும்" என்றது.

11. அனுமனும் அன்பினை மெச்சினான்.
அம்மலை விருந்துண்டுச் செல்ல வேண்டிட,
அனுமனோ, எண்ணிய கருமம் ஈடேறும் வரை
உண்ணேன் எனும் விரதம் தனை உரைத்தான்.
பின் திரும்பி வருங்கால் ஏற்பேன் என்றான்.


12. அடுத்து அனுமனின் வலிமைக்கு ஓர் சோதனை:

தக்கனின் மகளாம் சுரசையை
அரக்கி வடிவினில் அனுப்பினர் தேவர்.
இது மலையா? கடலா?
அல்லது மலை போன்றெழும் கடலா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே
பிளந்த வாயில் "நீயாக வந்து விழுவாய்" என்றாள்.

அனுமனோ மிகச் சிறிய உருவம் கொண்டு,
கண் இமைக்கும் நேரத்தில் செவிக்குள் புகுந்து
வாய் வழியே வெளியே வந்தான்.

அஞ்சா நெஞ்சன் அனுமனனின் வேகத்தை
மெச்சி வாழ்த்தி வழி அனுப்பினர் தேவர் முதலானோர்.

13. முதலிரண்டு தடைகளும் அன்பால் என்றால்
மூன்றாவது தடையோ பகையால் வந்தது:

திடீரென கடலில் நடுவே எழுந்தனள்
அங்காரதாரை எனுமோர் அரக்கி.

 நிழலைப் பிடித்தே இழுக்கும் சக்தி கொண்ட அவள்,
பறக்கும் அனுமனை அவ்வாறே கீழே இழுத்தாள்.
"அடே என்னைக் கடந்து செல்வதார்" என வினவி,
அனுமனை விழுங்க தன் வாயைப் பிளந்தாள்.

அரக்கியின் வாய் வழியே நுழைந்த அனுமன்
அவளது வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான்.

அரக்கியும் அத்தோடு மாண்டிட,
தேவர் முதலானோர் அனுமனை வாழ்த்திட,
வீரன் விண்ணில் பறந்தான்.

14. இனிமேலும் இடர்கள் வாராமல் இருக்க
இனியதோர் உபாயம் இராம நாமம்
உச்சரிப்பதே எனத்தெளிந்து இராம நாமம்
செபித்தாவாறே பறந்தான் ஆஞ்சநேயன்.

15. இப்படியாக அனுமன் இலங்கை மூதூர் நகரில்
இலம்பகம் என்னும் பவழமலையில் வந்து இறங்கினான்.
இறங்கியபோது புயலில் சிக்கிய மரக்கலம் போலும்
ஆட்டம் கண்டு பின் நின்றது அம்மலை. அங்கிருந்து
அனுமன் இலங்கை நகர் தெரியக் கண்டான்.