Monday, May 30, 2011

முதல் வணக்கம்

அன்பெனும் கணபதிக்கு முதல் வணக்கம்
ஆனைமுகனுக்கு முதல் வணக்கம்
அரும்பெரும் செவியனுக்கு முதல் வணக்கம்
ஆதாரத் துணைவனுக்கு முதல் வணக்கம்!

உமைபாலனுக்கு முதல் வணக்கம்
ஊறும் சக்தியதன் உறைவிடமே முதல் வணக்கம்
ஊழ்வினை விலக்குபவனே முதல் வணக்கம்
உந்தீபறவென உரைக்கின்றேன் முதல் வணக்கம்!

மதியணி சங்கரன் மகனுக்கு முதல் வணக்கம்
மாலவன் மருகனுக்கு முதல் வணக்கம்
மனங்கவர் முருகனின் மூத்தவனுக்கு முதல் வணக்கம்
மூஷிக வாகனனுக்கு முதல் வணக்கம்
மறையதன் மெய்ப்பொருளுக்கு முதல் வணக்கம்
மூலாதார முதல்வனுக்கு முதல் வணக்கம்
முழுமுதற் கடவுளுக்கு முதல் வணக்கம்!

அகர உகர மகரமென ஒலிக்கும்
ஓங்காரப் பிரணவமே முதல் வணக்கம்!

Thursday, May 26, 2011

சுடராழி


கண்டதும் கழன்றது
கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.
-பூதத்தாழ்வார் (2248)
(ஆழி - சக்கரம்)

கண்டேன்! கண்டேன்! கண்ணுக்கினியவன் கண்டேன். அவன் கையிலேந்திய திருச்சக்கரத்தைக் கண்டேன்!
அச்சக்கரம் எப்படி இருந்ததாம் - கனலாய், சுடர்மயமாய் பிரகாசித்ததாம்.
தீபாவளிப் பட்டாசு விடும் சமயத்தில் மட்டுமே நாம் அப்படிப்பட்ட சக்கரத்தைப் பார்த்திருக்கிறோம். ஆழ்வாரோ, நெடுமால் விடும் சுடராழிதனைக் கண்டு சொல்கிறார். வாசனையாய் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்களான இருவினைகளையும் - அச்சக்கரத்தைக் கண்டவுடன் தொலைத்தேன் என்கிறார்.
முன்னம் இராமன் சிவதனுசை எடுத்த கணமே அதைக் கண்டவர் அது ஒடிந்ததைக் கேட்டது போலக் கண நேரத்தில் வினைகளும் தொலைந்தது போலும்.
சரி, இரு வினைகள் என்பவை யாவை? நல்வினை, தீவினை எனக் கொண்டால், ஏன் நல்வினையும் அகல வேண்டும்? தீவினை நரகத்தில் தள்ளும். நல்வினை சொர்கத்தில் சேர்க்கும். இரண்டும் இலாமல் பரந்தாமனின் பரமபதமே வேண்டும் எனக் கொண்டாரோ!
அவ்விரு வினைகளைக் களைந்தாலும் அவை இருந்த இருப்பால் தொடரும் வாசனைகளின் விளைவுகள் முற்றிலுமாய்க் களைய இன்னும் சிலநாள் கழியுமாதலால் - அதனை 'மறுநோய்' என்றார். அதனையும் தொலைத்திட அருளுபவன் எம்பெருமான் எனப் பாடுகிறார் ஆழ்வார்.

வையம் தகழியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.
(பொய்கையாழ்வார்)

அசதோமா சத் கமய
தமசோமா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்.

Sunday, May 22, 2011

ஓம் சக்தி சிவசக்தி

ஓம் சக்தி! சிவசக்தி! பராசக்தி!
பாரெங்கும் பரவடிவம் அதுவே பராசக்தி வடிவம். வல்லமை தந்திட வேண்டும் வரமென
ஒரே பாட்டில் ஆறு துணை நாடும் அரும் பெரும் பாடல் - பாட்டுக்கொரு புலவன் பாரதி வடித்தது.
இப்பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடுவதை கேட்கலாமா?



ஆறு துணை

ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் - பரா சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி - ஓம் சக்தி
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்

கணபதி:
கணபதி ராயன்-அவனிரு
காலைப் பிடித் திடுவோம்;
குண முயர்ந் திடவே-விடுதலை
கூடி மகிழ்ந்திடவே
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

சக்தி:
சொல்லுக் கடங்காவே-பரா சக்தி
சூரத் தனங்க ளெல்லாம்;
வல்லமை தந்திடுவாள்-பரா சக்தி
வாழியென்றேதுதிப்போம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

முருகன்:
வெற்றி வடிவேலன்-அவனுடை
வீரத்தினைப் புகழ்வோம்
சுற்றி நில்லாதே போ!-பகையே!
துள்ளி வருகுது வேல்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

கலைமகள்:
தாமரைப் பூவினிலே-சுருதியைத்
தனியிருந் துரைப்பாள்
பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்
புண்ணிய மெய்திடுவோம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

கண்ணன்:
பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்
பாதத்தினைப் புகழ்வோம்;
மாம்பழ வாயினிலே-குழலிசை
வண்மை புகழ்ந்திடுவோம்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

திருமகள்:
செல்வத் திருமகளைத்-திடங்கொண்டு
சிந்தனை செய்திடுவோம்;
செல்வமெல்லாம் தருவாள்-நமதொளி
திக்க னைத்தும் பரவும்.
(ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்)

அடுத்த பாட்டு. சிவசக்தியைப் பாடும் பாடல். தக தக என ஆடி சக்தியைப் பாடும் பாடல். இரண்டு வாரங்களுக்குமுன் இங்கு அட்லாண்டாவில் நடந்த கச்சேரியிலும் நித்யஸ்ரீ மஹாதேவன் அற்புதமாய் பாடினார். அதே பாடல், அவரது குரலில்:



சக்திக் கூத்து

பல்லவி

தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-சிவ
சக்திசக்தி சக்தியென்று பாடோமோ?
(தகத்)

சரணங்கள்

அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள்-அவள்
அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே.
(தகத்)

புகப்புகப் புக இன்பமடா போதெல்லாம்
புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே-அது
குழந்தைகயதன் தாயடிக்குகீழ் சேய்போலே
(தகத்)

மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர-உள
வீரம்வந்து சோர்வை வென்று கைதேர
சகத்தினி லுள்ள மனிதரெல்லாம் நன்றுநன்றென-நாம்
சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென
(தகத்)

இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி,
மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்-நல்ல
மதமுறவே அமுதநிலை கண்டெய்தித்
(தகத்)

Monday, May 16, 2011

நல்லூரான் பாட்டு : நற்சிந்தனை

நல்லூரானை நாவில் ஏத்திட
நமக்கெலாம் நற்கதி காட்டிட
நற்சிந்தனை பாடும் கிளிப்பாட்டைக்
கேட்கலையோ யோகநாதர் பாடிவைத்தாரடி:

நல்லூரான் திருவடி

நல்லூரான் திருவடியை
நான்நினைத்த மாத்திரத்தில்
எல்லாம் மறப்பேனடி கிளியே
இரவுபகல் காணேனடி!

ஆன்மா அழியாதென்று
அன்றெனக்குச் சொன்னமொழி
நான்மறந்து போவேனோடி கிளியே
நல்லூரான் தஞ்சமடி!

தேவர் சிறைமீட்ட
செல்வன் திருவடிகள்
காவல் எனக்காமடி கிளியே
கவலையெல்லாம் போகுதடி!

எத்தொழிலைச் செய்தாலென்
எத்தவத்தைப் பட்டாலென்
கர்த்தன் திருவடிகள் கிளியே
காவல் அறிந்திடடி!

பஞ்சம்படை வந்தாலும்
பாரெல்லாம் வெந்தாலும்
அஞ்சுவோமோ நாங்களடி கிளியே
ஆறுமுகன் தஞ்சமடி!

சுவாமி யோகநாதன்
சொன்ன திருப்பாட்டைந்தும்
பூமியிற் சொன்னாலடி கிளியே
பொல்லாங்கு தீருமடி!