Friday, November 05, 2010

எந்திரன் எனக்குள் என்ன செய்கிறான்?

னித உடல் பாகங்களில் மூளையே மனிதனை நடத்துவிக்கும் "தலைமைச் செயலகம்" என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் அல்லவா!
சமீப கால கண்டுபிடிப்புகள் அந்த சொல்லாடலைக் கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றன.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
உங்கள் வயிற்றுக்குள் சின்னச் சின்னதாக எந்திரன் பலப்பல உட்கார்ந்து கொண்டு உங்களை ஆட்டிப் படைப்பதாக...
என்னது என்பவர்கள், வாங்க பாக்டீரியா உலகத்திற்கு.

உங்கள் உடலில் உள்ள செல்களின் மொத்த எண்ணிக்கையில் 90 சதம் உங்களது அல்ல. உண்மையில் அவை யாவும் பாக்டீரியாக்கள்தான்!

பாக்டீரியா எனப்படும் இந்த நுண்ணுயிர்கள் தங்களுக்குள் சங்கேத மொழியில் பேசிக்கொள்கின்றன. இரசாயனங்கள் மூலமாக செய்திகளை பறிமாறிக்கொள்கின்றன. தங்களுக்குள் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன. பாக்டீரியா அல்லாத செல்களுடன் கூட அவை தொடர்பு கொள்கின்றன. ஆய்வாளர்கள் அவற்றுக்கு "சமூக அறிவு" இருப்பதாகக் கூறுகிறார்கள். இனி யாரும் மனிதர்களை தனி நபர் என்று சொல்ல முடியாது! அவர்களுக்குள் குட்டி எந்திரன் பேக்டீரியாக்கள் அவர்களை வாழவோ, வீழ்த்தவோ செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால். அப்படி அவற்றால் என்னதான் செய்ய முடியும்?

நாம் உண்ணும் உணவில் இருக்கும் சக்திகள் நமக்கு போய்ச்சேருவதை பாதித்தல், குடற்பகுதிச் செல்களின் முதர்ச்சி அடைதல் மற்றும் ஊக்குவித்தலை பாதித்தல் போன்றவற்றில் பாக்டீரியாக்களுக்கு பங்கிருப்பதாகச் சொல்கிறார்கள். உடற் செயல்பாடுகளில் இதனால் இவற்றின் பங்கு முக்கியான பாதிப்பனை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

பாக்டீரியாக்களை தொந்தரவு செய்தால், அவை நச்சுத்தனமையைக் கூட ஏற்படுத்தக்கூடும். பாக்டீரியாக்களைப் பற்றியான ஆராய்ச்சிகள் சொல்லும் முடிவுகள் தற்கால மருத்துவத்தில் பெரிதானதொரு மாறுதலை ஏற்படுத்தும் என்பதை கட்டியம் சொல்லலாம். இனிமேல் மருத்துவர்கள் பாக்டீரியாக்களை போட்டுத்தள்ளும் மருந்துகளை அவ்வளவு எளிதாக பரிந்துரைப்பது என்பது கேள்விக்குறியாகிடும். பாக்டீரியாக்கள் அம்மருந்துகளைக் கூட மறுதலிக்கச் செய்யும் ஆற்றலை நாளடைவில் வளர்த்துக் கொள்ளக்கூடயதாகவும் உள்ளன.

நல்ல மனநிலைக்கும் பாக்டீரியாக்கள் காரணியாகின்றன. மனித மூளையினை செயல்படுத்தும் அதே இரசாயனங்களை பாக்டீரியக்கள் செலுத்த முடியும். குடல் பகுதியில் இருக்கும் நரம்புத் தொகுதிகளுடன் அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன. தயிர் போன்ற உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை உண்பது மூலமாக நல்ல மனநிலைக்கு உதவிடலாம் என்றும் சொல்கிறார்கள். ப்ரோ-பயோடிக் எனச் சொல்லப்படும் பாக்டீரியாக்கள் மருந்து வடிவிலும் கிடைக்கிறது. சீரியல் போன்ற காலை உணவுகளில் கூட ப்ரோ-பயோடிக் பாக்டீரியாக்கள் சேர்த்துத் தர இருக்கிறார்கள். இப்படியாக, நம் உடலுக்குள் இழந்த பாக்டீரியாகளைச் சமன் செய்வதன் மூலமாக உடலுக்குள் இருக்கும் சுற்றுச்சூழல் மாசினை சரிசெய்ய முயல்கிறார்கள்.

பாக்டீரியா ஆராய்சிகள் சொல்லும் மேலும் பல தகவல்களை இந்த அருமையான உரையில் நீங்களே கேட்டுப்பாருங்கள்:

Thursday, November 04, 2010

தீபாவளிப் பாட்டு

சமீபத்தில் தீபாவளியின் கதை என்ன என்பதைப் பற்றி அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவர் தீபாவளி இராமன் அயோத்தி திரும்பி முடிசூட்டிய நாளென்றார். இன்னொருவர், கண்ணன் நரகாசுரனை வதைத்த நாள் என்றார். அது எப்படி இரண்டு தொடர்பில்லாத இதிகாசங்களிலும் தொட்டுத் தொடர்ந்தது இந்த தீபாவளி என இருவரும் வியந்தனர்.

தீபாவளி கொண்டாடுவதற்கு அவரவர் மாநிலத்தில் அவரவர்க்கு காரணங்கள் வேறாக இருக்கலாம். அது எல்லோருக்கும் இருள் முடிந்து நன்மைகள் பிறக்கும் நன்னாளாக அமைய வேண்டும். அவ்வாறு அனைவருக்கும் அமைய இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த பதிவில் மத்யமாவதி இராகத்தில் தீபாவளிப் பாட்டொன்று பார்க்கலாமா!
பாடலில் மத்யமாவதியின் அம்சம் அப்படி அருமையாக வெளிப்படும்படி இயற்றியிருப்பார் பாபநாசம் சிவன் அவர்கள்.
பூமி பிராட்டி தோரோட்ட & மங்கள தீபாவளி ஒளி - என்ற இடங்களில் எதுகை நயம் அழகாய் மிளிரும்!

இராகம் : மத்யமாவதி
தாளம் : ஆதி
இயற்றியவர் : பாபநாசம் சிவன்
பாடுபவர் : காயத்ரி வெங்கட்ராகவன்






எடுப்பு

கண்ணா காத்தருள் மேகவண்ணா
கடைக்கண் பார்த்தருள் கமலக்கண்ணா

தொடுப்பு
விண்ணாடரும் முனிவரும் வணங்கிவேண்ட
நரகாசுர வதம் செய்ய விரைந்துவந்த
(கண்ணா...)

முடிப்பு
பாமை வடிவான பூமிபிராட்டி தேரோட்ட
அசுரர் குலம் அழத்தவா!
சக்ரபாணி! உலகெலாம்
மங்கள தீபாவளி ஒளி
வீச அருள் புரிந்த (கண்ணா...)