Sunday, February 15, 2009

வானத்தில் ஒரு மாடு : ரிஷபம்

தானென்று சொல்லி தனக்கு ஒப்பிலா
வானதன் வன்னமது காண்!

தான், நான், எனக்கு... - என்னும் கூற்றுகளில் சிக்கிட, தனக்கு ஒப்பிலா வானம் போல், எங்கும் நிறைந்திருக்கும் இறையையும் கண்டு கொள்ள இயலுவதில்லை. வானத்தில் எப்போதும் விண்மீன்கள் ஒளிர்ந்து கொண்டிருப்பினும், அவை யாவையென கண்டும் காணமல் இருப்பது போல. ஒப்பிலாதவனின் ஒருதுளியாய் இருப்பினும், அவனின் பூரண ஒளியினைக் காண்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. இருப்பினும், அவன்/அது எவ்வாறெல்லாம் சமைந்திருக்கிறான்/றது என்பதை ஒவ்வொன்றாக ஆராய்ந்து அறியலாம் அல்லவா!

எங்கெங்கும் நிறையும் இறை, எத்தனை எத்தனை விந்தைகளில் சமைகிறான்!
அவற்றில் சில துளிகளை இங்கே படங்களில் பார்த்து பரம் வசப் படலாமா?

வானத்தில் தெரியும் விண்மீன் கூட்டங்களுக்கு பலவாறான உருவங்களைக் கொடுத்து, அவற்றைப் பற்பல பெயர்களில் வழங்குவது நமக்குத் தெரிந்ததுதான் அல்லவா. இங்கே 'ரிஷபம்' என்னும் மாடு வடிவிலான விண்மீன் தொகுதியினைப் பார்ப்போமா!

Stellarium எனும் மென்பொருள் மூலமாக கீழே இருக்கும் படங்கள், பிப்ரவரி மூன்றாம் தேதி எடுத்தவை. இவற்றில் சந்திரன், ரிஷப விண்மீன் தொகுதியினுள் இருப்பதைக் காணலாம்.

ரிஷபம்





மேலே இருக்கும் இரண்டு படங்களும் இந்த ரிஷப நட்சத்திரத் தொகுதியினைக் தொகுத்துக் காட்டுதல்லவா.
இத் தொகுதியில், அந்த மாட்டின் வலது கண் பக்கத்தில், பெரிதாய்த் தெரியும் நட்சத்திரம் தான் ரோகிணி. இதற்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் Aldebaran (87 Alpha Tauri). நமக்கு, 65 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ரோகிணி, சூரியனை விட 40 மடங்கு பெரியது, 125 மடங்கு ஒளி மிகுந்தது.
அடுத்த படத்தில், ரோகிணி பற்றிய தகவல்களையும், அதன் அருகே உள்ள நட்சத்திரங்களையும் பற்றி விவரமாகக் காணலாம். படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்.


முதல் இரண்டு படங்களில், மாட்டின் வயிற்றுப் பக்கத்தில், சந்திரனுக்குப் பக்கத்தில், புள்ளி புள்ளியாக சில நட்சத்திரங்கள் தெரிகிறதல்லவா. அவற்றை அருகில் சென்று பார்ப்போம், அடுத்த படத்தில்:



அட, ஆறு நட்சத்திரங்கள் எளிதாகத் தெரியுது!. இவை தான் கார்த்திகை நட்சத்திரம்(ங்கள்!). இவற்றோடு அங்கிருக்கும் ஏழாவது நட்சத்திரத்தினையும் சேர்த்து ஆங்கிலத்தில், இவற்றின் தொகுதியை Pleiadas என வழங்குவர். கிரேக்கக் கதைகளில், இவற்றை, 'Seven sisters'(Alcyone, Electra, Maia, Merope, Taygete, Celaeno மற்றும் Asterope) என்பர். ஆறேழு மட்டுமல்ல, இருநூறுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இங்கே கொட்டிக் கிடக்கு. கீழே இருக்கும் படத்தில் பாருங்கள், நட்சத்திரப் படலமாகத் தெரியும் இவை:

ஜப்பானியர்கள், இந்நட்சத்திரத் தொகுதியினை 'Subaru' எனவும், ஈரானியர்கள் 'Soraya' எனவும் பெயரிட்டனர்!.

அடுத்து நாம பார்க்கப்போகிறது ஒரு நெபுலா.(Nebula). இது ஒரு நடசத்திரத் துகள் படலம். தூசிபோல, ஒரே நட்சத்திரத் துகள்களாப் படிந்து இருப்பது. இந்த ரிஷப தொகுதிக்குள்ளே, மாட்டின் முதல் கொம்புக்கு அருகே (முதல் படத்தில் சதுரக் கட்டத்தினுள் இருப்பது), இதுபோல ஒன்றைப் பார்க்கலாம்.



அடுத்த படத்தில், இதே நெபுலாவினை, நமது தொலைநோக்கியை உற்று நோக்கச் செய்து, பக்கத்தில் போய் பார்க்கலாமா?
வாவ்!


இதற்குப் பெயர் Crab Nebula. நமக்கு 6,500 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. 1054ஆம் வருடம், இந்த நெபுலா ரொம்ப பிரகாசமாக இருந்ததாம், பகலிலேயே தெரிகிற அளவிற்கு!. பெரிய நட்சத்திரங்கள் வெடித்துப் போகும்போது, அதன் மீதமே, இதுபோன்ற படலங்கள். இந்த நெபுலாவுக்கு நடுவிலே, pulsar எனும், அந்த வெடித்துப்போன நட்சத்திரத்தின் கரு, இன்னமும் விட்டு விட்டு எரிந்துகொண்டே இருக்கிறதாம்!

Monday, February 09, 2009

தமிழில் ஆத்மபோதம் - பகுதி பத்தொன்பது

பா 59:
அதனிடத் துள்ள தகிலமுஞ் செய்கை
யதையடுத் துள்ளதே யாகு - மதனாற்
பரவிடு மெல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு நெய்போல வே.

சீர்களைப் பிரித்தபின்:
அதனிடத்துள் உள்ளது அகிலம் உன் செய்கை
அதை அடுத்து உள்ளதே ஆகும் - அதனாற்
பரவிடும் எல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு(ம்) நெய் போலவே.

பொருள்:
பிரம்மம் - அதனுள், அகிலமும், அதளுள் அடங்கும் அனைத்துப் பொருள்களும் அடங்கும்.
அகிலத்தில் நிகழும் அனைத்து செயல்களும், அதனைத் தொடர்ந்தே நிகழ்கின்றன.
மூலமான பரம்பொருளில் இருந்துதான் மற்ற எல்லாமும் பரவுகின்றன.
பாலில் நெய் போல் பரம்பொருளும் எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும், எல்லா செயலிலும் விரவி இருக்கிறது.

விளக்கம்:
எல்லாப் பொருளிலும் பிரம்மம் எனும் பரம்பொருளே நிறைந்து இருக்கிறது.
எல்லாப் பொருளிலும் இருக்கும் நித்யமான, சாசுவதமான ஒரே பொருள் பிரம்மம் மட்டுமே.
எல்லா செயலிலும் - கேட்டல், பார்த்தல், நுகர்தல், தொடுதல், சுவைத்தல் - என எல்லா செயல்களும் நிகழ மூலக் காரணமாய், பரம்பொருளே அவர்களில் சைத்தன்யமாக திகழ்கிறான்.
பாலைக் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் நெய் போல, எல்லாப் பொருட்களின் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளைக் கடைந்தெடுத்தால், கிடைத்திடும் பொருள் தான் பரம்பொருள்!

இப்படியாக, பரம்பொருளின் பேரின்பம் "இவை" எல்லாவற்றாலும் மறைக்கப்படுள்ளது, அவையாவன:

பா 60:
பருமையு னுண்மையுற் பத்தி வினாசங்
குருகலு நீட்சியுங் கூடத் - துருவங்
குணங்குல நாமமுங் கொள்ளாம லுள்ள
துணர்க பிரம்மமென் றுற்று.

சீர்களைப் பிரித்த பின்:
பருமையு(ம்) நுண்மை உற்பத்தி, வினாசம்,
குருகல், நீட்சியும் கூடத்து - உருவம்,
குணம், குலம், நாமமும் கொள்ளாமல் உள்ளது
உணர்க பிரம்மம் என்று உற்று.

பொருள்:
அளக்கக்கூடிய பொருளின் பருமனும்,
அளக்கவும் அரிதான பொருளின் நுண்மையும்,
உற்பத்தி ஆகுபவையும்,
அவற்றில் அவ்வப்போது அழிந்து போகுபவையும்,
சிறுத்துப் போதலும், பெரிதாகலும் -
இப்படியாக எல்லா வகையான உயிரும் பொருளுமாக இருந்தாலும், அவற்றில்,
உருவம், குணம், குலம், பெயர் போன்ற வேறுபாடுகளைக் கொள்ளாமல்,
ஒன்றென, இருப்பதுவே பிரம்மம் என உணர்ந்து கொள், உற்று நோக்கி.

விளக்கம்:
இவ்வாறாக, வெவ்வேறெனத் தெரிவதில் எல்லாம் மறைந்து இருப்பது பரம்பொருள். மறையோதி மனம் திறந்திட, மறைபொருள் புலப்பட, அறியாமை எனும் இருள் அகன்றிட, இவ்வேறுபாடுகள் களைந்திட, உன்னுள்ளே எழும் சுய வினவலின் விளைவாக, இவ்வேறுபாடுகள் அற்றதே பரம்பொருள் என உணர்வாய்.

பா 61:
எதனொளியி னாலொளிரு மேயிரவி யாதி
யேதனை யவையொளிர்க்க வெலா - தெதனாலே
யிந்தவுல கெலா மிலகு மதுதானே
யந்தப் பிரம மறி.

சீர்களைப் பிரித்தபின்:
எதன் ஒளியினால் ஒளிருமே இரவியாதியே
அதனை அவை ஒளிர்க்க இலா - எதனாலே
இந்த உலகெலாம் இலகும் அதுதானே
அந்தப் பிரமம் அறி.

(இலகும் - விளங்கிடும்)

பொருள்:
சூரியன் முதலான விண்மீன்களும், பரம்பொருளால் ஒளிர்கின்றன. ஆனால், அவை தமக்கே ஒளியினைத் தந்திட இயலா. எந்த ஒரு பொருளால், இவ்வுலகமெல்லாம், விளங்கித் திகழ்கிறதோ, அப்பொருள்தான் பிரம்மம் என அறிந்திடுவாய்.

விளக்கம்:
வானத்தில், தானாக ஒளிர்விடும் பொருட்கள் உண்டு. அவற்றின் ஒளியினைப் பிரதிபலிக்கும் பொருட்களும் உண்டு.
இவற்றில், எதுவாகிலும் சரி, அவற்றின் ஒளியின் மூலத்தின் மூலம், பரம்பொருளேயாம்.
தமது ஒளியாலேயே தம்மைத் தாமே, ஒளிர்க்க (தத்தம் அறியாமை அகன்றிடச் செய்திட) இயலாத பொருட்கள் இவை. அவற்றின் அறியாமை அகன்று, ஒளியுடன் திகழ, பரம்பொருளின் ஒளி தேவைப்படுகிறது.
அந்த பரம்பொருளின் ஒளியால் தானே, இந்த உலகமும், அண்ட சராசரங்களும், விளங்கித் திகழ்கிறது!

இருட்டில் ஒரு பொருள் இருக்கிறது. என்ன பொருள் என கண்டுகொள்ள இயலவில்லை. அதன்மீது ஒரு கைவிளக்கின் வெளிச்சத்தை செலுத்திப் பார்க்கிறோம், எந்த பொருள் எனத் தெரிய.
தபால்காரன் கொண்டுவந்து தந்த பெட்டிக்குள் இருக்கும் பொருள் என்னவென்று தெரியவில்லை, அதைப் பிரித்துப் பார்க்கும் வரை. பிரித்தபின் அதுவென்ன என விளங்குகிறது.
ஏற்கனவே தெரிந்த பொருளாக இருந்தாலும், தெரியாமல் இருந்தது, இப்போது தெரிந்ததாகிறது.
இப்படியாக, தெரியாமல் இருந்த ஒவ்வொன்றும் தெரியத் துவங்குகிறது, அதைப் பற்றிய அறியாமை அகன்றதும்.
ஆக, அறியாமை அகல, தெரியாப் பொருளைப் பற்றிய அறிவு சேர்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக.
இதற்கு எங்கே முடிவு?
எப்போது, இன்னும் மேலுமாக, அறிவதற்கு மேலும் ஏதுமில்லை என்ற நிலை எப்போது ஏற்படும்?
அந்த பரம்பொருள் இன்னவென்று அறிந்த பேரறிவினை எட்டிய நிலையில் மட்டுமே.
அதனால், அவ்வறிவிற்குப் 'பேரறிவு' எனப்பெயர். இவ்வறிவிற்கு மேல், அறியவேண்டியது ஏதுமில்லா முக்தி நிலை.

பாரதியும் சொல்லுவான்,
பல்லாயிரம் வேதங்கள் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனல் கேளீரோ!

Thursday, February 05, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினெட்டு

இந்தத் தொடரை சின்ன இடைவேளைக்கு அப்புறம் தொடருகிறோம். இதுவரை வந்த பகுதிகளை இங்கே பார்க்கவும்.
முதல் முறையா வந்திருக்கீங்கன்னா, ஆத்ம போதம் என்றால் என்ன, யார் எழுதியது என்கிற விவரங்களை இத்தொடரின் முதல் பகுதியில் இங்கு பார்க்கவும்.

பா 57:
எதழிவில் லாத தெதையன்றென் றன்றென்றே
வேத முடிவு விளக்கடும் - யாதொன்
றகண்டவின் பாகி யமருமது தானே
திகழும் பிரமன் தெளி.

சீர்களைப் பிரித்து:
எது அழிவில்லாதது, எதை அன்றென்று அன்றென்றே
வேத முடிவு விளக்கிடும் - யாதொன்று
அகண்ட இன்பாகி யமரும் அதுதானே
திகழும் பிரமன் தெளி.

பொருள்:
எது எப்போதும் அழிவில்லாததாய், நித்யமாய் இருக்கிறதோ,
எதை வேதங்களேல்லாம், 'இது அதுவல்ல, இது அதுவல்ல, இது அதுவல்ல,....' என அலசி, ஆராய்ந்து, முடிவாக விளக்குகிறதோ,
எந்த ஒரு பொருள், பேரின்பப் பெருவெள்ளமாய் எல்லா இடத்திலும் நிறைக்கிறதோ,
அந்தப் பொருள் தான்,
ஒளி விட்டுத் திகழும் பரப்பிரம்மம்; தெளிவாய்.

விளக்கம்:
அழிவில்லாமல், சிதைவில்லாமல், எப்போதும் முழுமையாய் இருக்கின்றதாம் பிரம்மம். அதைத் தவிர, வேறொன்று என்றில்லை என, எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும் அது இருக்கின்றது. அந்த பிரம்மத்தின் கண்களில் 'வேற்றுமை' என்பதே இல்லை. அதை விட்டு இன்னொரு பொருள் இருந்தால் தானே, வேற்றுமை பாராட்ட இயலும்?
அப்படியாக, வேறொன்று என்றில்லாமல், ஒன்றே ஒன்றாய் இருக்கிறது பிரம்மம்.

இது அதுவல்ல: 'நேதி, நேதி' - எது பிரம்மம் என்கிற கேள்விக்கு, வேதங்கள், அவற்றின் உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் போன்ற மறைகள், ஒவ்வொரு பொருளாக எடுத்துக்கொண்டு, இதுவல்ல பிரம்மம், இதுவல்ல பிரம்மம், என்று பிரம்மம் பற்றி அடையும் முடிவினைக் கொண்டு நாம் விளங்கிக் கொள்ளலாம்.

"அடுத்து, பிரம்மம் யாதெனச் சொல்ல, அது இதுவல்ல, இதுவல்ல."
- பிரஹதாரண்யக உபநிடதம் II, iii, 6

நேதி நேதி-யைப் பற்றி முன்பொரு ஆத்மபோதச் செய்யுளிலும் பார்த்தோமல்லவா. அதன் சுட்டி இங்கே.

தெளிவாய்: பிரம்மம் 'இன்னொரு பொருள்' என்றல்ல. தானே அப்பரம்பொருள் எனத் தெளிவாய்.
அப்படியானல், தான் தானாக இருந்துகொண்டு அப்பரம்பொருளின் பேரின்பத்தில் எத்தனை அளவு துய்க்க இயலும்? அடுத்த பா சொல்கிறது:

பா 58:
அகண்ட சுகமய வான்மாவி லற்ப
சுகத்தை யடுத்தே சுரராய்த் - திகழும்
பிரம்மாதி யேனோர் பிறங்குவரின் புற்றுத்
தராதர மாகத் தரி.

சீர்களைப் பிரித்து:
அகண்ட சுகமய ஆன்மாவில் அற்ப
சுகத்தை அடுத்தே சுரராய்த் திகழும்
பிரம்மாதி யேனோர் பிறங்குவர் இன்புற்றுத்
தராதரம் ஆகத் தரி.
(பிறங்குவர்: உயர்வடைவர்/சிறப்படைவர்;
அடுத்தே: பின் தொடர்ந்தே;
தரி: கொள்)
பொருள்:
எங்கும் அகண்டு பரவியிருக்கும், பேரின்பத்தின் சிறிய பகுதியான சுகத்தையே
பிரம்மன் போன்ற சுரர்கள் (தேவர்கள்) சுவைத்திட,
அதற்கேற்றாற்போல், அவர்கள் ஒளிவிட்டுத் திகழ்வார்கள்.
விளக்கம்:
எல்லாவற்றிலும் மேலான பிரம்மம் எங்கும் வியாபித்து இருக்க, அப்பெரிய பொருளின் சிறிய துகள் போலத்தான் - பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் ஆவர். படைப்புத் தொழிலையே நடத்தி வந்தாலும், பிரம்மனும், பரப்பிரம்மம் எனும் பெரும் பனிக்கட்டியின் சிறு நுனி போலவே ஆவர்.
"இதுவே உயர்ந்த இலக்கு, இதுவே உன்னத வெற்றி. இதுவே உயர்ந்த உலகம். இதுவே பேரின்பம். மற்ற எல்லா உயிர்களும், இதனில் சிறு துகள்களாக, அப்பேரின்பத்தில் இருந்து சிறு துளியையே பெருகிறார்கள்."
- பிரகதாரண்யக உபநிடதம், IV, iii, 32.