Showing posts with label சேக்கிழார். Show all posts
Showing posts with label சேக்கிழார். Show all posts

Sunday, April 27, 2008

உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்!

பெரிய புராணத்தின் தொடக்கச் செய்யுள் - 'உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்...'. சேக்கிழார் பெருமானுக்கு சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்து, அதிலிருந்து விளைந்த வாழ்த்துப் பாடலைப் பார்ப்போமா?

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

எவ்வுயிர்களாயினும் தம்மறிவால் உணர்வதற்கும் ஓதுவதற்கும் அரியவன்! : அவனை மனத்தால் உணர்வதும், மொழியினால் ஓதுதலால் அடைவதும் அவ்வளவு எளிதானது அல்லவாம்.

அப்படியே அறிவதற்கு அரியவனாய் இருப்பவனாக இருப்பினும், தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினைக் கொண்டவனாய் இருக்கிறானாம்!. (அவன் கருணையே அவனை அடைவதற்கான கருவி!)

பிறைச் சந்திரனையும் கங்கையையும் தன் திருச்சடையில் அணிந்து பல்லுயிர் காக்கும் பண்பைப் பெற்றவனாம்!

அளவிட இயலாத ஒளியினை உடையனாம்!

அரியவன், வேணியன், சோதியன் - இப்படியெல்லாம் பெருமை உடையவன் தில்லைச் சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாகவும் இருப்பவன் கூத்தப் பெருமான்.

அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த அவன் திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வோம் என்று அவனெடுத்துக் கொடுத்த அடியினை முடிக்கிறார் சேக்கிழார் பெருமான்.

இப்பாடலில் இறைவனின் இரண்டு நேரெதிர் இயல்புகளைக் கூறுவதைக் கேட்கலாம்.
அறிவதற்கு அரியவனாய் - உருவம் என்று ஒன்று இல்லாதவன் ஆகவும், அதே சமயத்தில் நிலவினையும் நீரினையும் சடைமுடியில் அணிந்தவனாகவும் இருக்கிறான்.

அலகில்(லாத) - அளவிட முடியாத சோதிப் பிழம்பாய் இருக்கிறான். அதே சமயத்தில் - அம்பலத்தில் எப்போதும் ஆடுபவனாகவும் இருக்கிறான்!
---------------------------------------------------------------
இப்போது பாடலை பாடிக் கேட்கலாமா?






--------------------------------------------------------------

இன்ன பிற:
ஜெயமோகன் திண்ணையில் எழுதியது