Saturday, September 26, 2009

சரஸ்வதி இராகத்தில் சரஸ்வதி!

நவராத்ரியின் நிறைவுக்கு பக்கத்திலே வந்துட்டோமில்லையா, நவராத்ரி என்றதுமே, நமக்கு சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் தானே உடனுக்கு நினைவுக்கு வருவது!
இந்தப் பதிவில் சரஸ்வதியன்னை பற்றிய பாடல் ஒன்றைப் பார்ப்போம். அதுவும் சரஸ்வதி இராகத்தில்!
ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு ராகதேவதை உண்டெனச் சொல்வார்கள். அந்த இராகத்தை மனஉருகிப் பாடுகையில், அந்த இராகத்தின் இனிமையும், அழகும் மிளிரத் தோன்றிடும் ராகதேவதை, அந்த இராகத்தைக் கேட்போர் அனவரையும் பரவசப் படுத்துவாளாம். இந்தப் பாடலைக் கண்மூடிக் கேட்டுத் இசையமுதில் திளைத்தால், அந்த சரஸ்வதி இராகதேவதை உங்கள் மனக்கண்முன் பிரகாசிப்பாள், என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா!

இராகம் : சரஸ்வதி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இப்பாடலை, திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

எடுப்பு
சரஸ்வதி, தயைநிதி - நீ கதி,
தண்ணருள் தந்தருள்வாய், பாரதி!

தொடுப்பு
கரமலர் மிளிர் மணிமாலையும் வீணையும்
கருணைபொழியும் கடைக்கண்ணழகும் வளர்

(சரஸ்வதி)

முடிப்பு
நின்னருள் ஒளி இல்லையானால்
மன இருள் நீங்குமோ, சகலகலைமாதே!
வெள் அன்ன வாகினி!
வெண் கமலமலர் வளரும் வாணி!
வெள்ளைக்கலையணி, புராணி!

(சரஸ்வதி)

~~~
வெள்ளை ஆடையைத் தரித்தவளே,
வெள்ளைத்தாமரை மலரதில் அமர்பவளே,
எம் இதயக் கமலத்தில் ஒளிர்வாயே, தாயே!
வெள்ளை அன்னமதை வாகனமாய்க் கொண்டவளே,
நின் அருள் இன்றி, மன இருள் நீங்குமோ? ஞானசொரூபமானவளே, எம் அஞ்ஞானம் நீங்கிட அருள்வாய்!
நல்வாக்கிற்கு அதிபதியே, கூத்தனூரில் கொலுவீற்றிருக்கும் நாயகியே, நின் தாள் சரண்.
~~~
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
- சகலகலாவல்லி மாலை

Wednesday, September 23, 2009

திருமகள் பெருமை

வராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் திருமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கலைவாணிக்கும் அர்பணிப்பது வழக்கும். சென்ற பதிவில் சக்தி பற்றியதொரு பாடலைப் பார்த்தோம். இந்த பதிவில், திருமகள் பெருமைகளில், அடியேன் அறிந்த வெகு சிலவற்றைப் பார்க்கலாமா?. அதுசரி, அதுவேன் இப்படியொரு தலைப்பு? திருமால் பெருமைன்னு சிவாஜி நடிச்ச படம் வந்துருக்கே அதுமாதிரியான்னு கேக்கறீங்களா? திருமால் பெருமை எல்லாருக்கும் தெரிந்தது. திருமகள் பெருமை?. இந்த உரையாடலைக் கேளுங்க...

அவர் செல்வத்துக்கு அதிபதி, அவரை வணங்கினால் செல்வம் செழிப்பு கிடைக்கும் - இதுதான் நாம் எல்லோரும் பொதுவா நினைப்பது இல்லையா? சரி, அவ்வளவுதானா?

அட, ஆமாங்க, ஆங், எங்க ஊரில் அஷ்டலஷ்மி கோவில் இருக்குல்லே. தனலஷ்மி, தான்யலஷ்மி - இப்படிப் பலவித செல்வங்களை அருள்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேனே...


சரிதான். அஷ்டலஷ்மி என்பது இலக்குமித்தாயாரின் எட்டு வடிவங்கள் - ஆதிலஷ்மி, தனலஷ்மி, தான்யலஷ்மி, கஜலஷ்மி, சந்தானலஷ்மி, வீரலஷ்மி, விஜயலஷ்மி, வித்யாலஷ்மி என்பவைதான் இந்த எட்டு அம்சங்களாக்கும்.

ஓ, இவங்களும் வீரத்தையும், விஜயத்தையும் தருவாங்களா, நான் அது பார்வதி அன்னைதான்னு நினைச்சேன்!

:-) டொய்ங்...கல்வியா, செல்வமா, வீரமா...சரஸ்வதி சபதம் படம் நல்லா நினைவிலே இருக்கு போல!
இலக்குமி என்று நாம பொதுவா சொல்லறவங்களுக்கு, பலவித சிறப்பு அம்சங்கள் இருக்கு. அந்த ஒவ்வொரு அம்சத்தையும் தனிதனியா பெருமைப்படுத்தத்தான், இதுபோன்ற சிறப்புப் பெயர்கள். மற்றபடி, எல்லாருமே ஒருவர் தான்!
இன்னும் இருக்கு. பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் துணைவி இலக்குமித்தாய். திருமாலுக்கே 'திருமகள் கேள்வன்' (திருமகள் நாயகன்) என்றொரு பெயருண்டு. வைணவ ஆச்சார்ய பரம்பரையில், முதன்மையான ஆச்சாரியர் திருமால் என்றால், அதற்கு அடுத்த இடம் திருமகளுக்கேயாம்.

ஆகா, அப்படியா, குருவின் இடத்தில் திருமகளை வைத்துப் போற்றுவதற்கு ஆழ்ந்த காரணம் இருக்கணும் இல்லையா!

இலக்குமியின் மூன்று அம்சங்களாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி அப்படியும் சொல்லிக் கேட்டிருக்கோம் இல்லையா.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி வழியே காணக் கிடைத்தது:

உடன் அமர் காதல் மகளிர்
திருமகள், மண்மகள், ஆயர்
மடமகள் என்றிவர் மூவர்.
ஆளும் உலகமும் மூன்றே.
உடன் அவை ஒக்க விழுங்கி
ஆலிலை சேர்ந்தவன் எம்மான்...


இவங்க மூணுபேரும் மூணு உலகத்தை ஆள்பவர்களாம் - முறையே விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று.
நம்ப கண்ணபெருமான் இருக்காரு இல்லையா, அவர் மண்ணைத்தின்றபின் வாயைத்திறந்து காட்ட, அதில் இம்மூவலகமும் தெரிந்திட, இந்த மூன்று பேரையும் ஒன்று சேர்த்து விழுங்கியவனாம். அதாவது, அவன், எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவனாய் இருக்கிறான். மாமகள் மூவரையும் கொண்ட மாரமணனாய் இருக்கிறானாம்.

அடுத்தது, இந்த முதல் திருவந்தாதிப் பாடலைப் பார்ப்போம்:

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்?

என்னது, திருமகள்தான் மற்ற இரண்டு பேரைக்காட்டிலும் உயர்வு என்பதுபோல வருகிறதே?

நம்ம குறைகளை கேட்டு, அவற்றை திருமாலிடம் இயம்பி, நிவர்த்தி செய்வதற்காக ஒருவர் மட்டுமில்லை, மூவர் இருக்கிறார் என்கிறார் பொய்கையாழ்வார்! அவற்றில் இருவர் - பூதேவியும், நீளாதேவியும், விஷ்ணுவின் சக்தி.
விஷ்ணுவின் சக்தி யார்? இலக்குமி. ஆகையில் மகாலஷ்மியின் அம்சமாகவே - திருமகளின் அம்சமாகவே அவர்களும் இருக்கிறார்கள்.

திருமகளோ, எப்போதும் மாலவன் மார்பிலேயே வாசம் செய்கிறாள்; பெருமாளைப் பிரிந்ததே கிடையாது. எல்லாவிடத்திலும், விஷ்ணுவாக நிறைந்தபோதும், அதிலெல்லாம் நிறைந்திருக்கிறாள்.
பெருமாளை 'சொல்லின் பொருள்' என்றால்,
திருமகளைச் 'சொல்' எனலாம்.
திருமகளை 'அறச்செயல்' என்றால்,
அதனால் விளையும் நன்மையினைத் திருமால் எனலாம்.
எல்லா உயிர்களிலும் ஆணாகத் திருமாலும், பெண்ணாகத் திருமகளும் வாசம் செய்து,
எல்லா ஜனனங்களுக்கும் ஜகத்காரணமாய்த் திகழ்கிறார்கள்!

Sunday, September 20, 2009

திருவான்மியூர் வளர் திரிபுரசுந்தரி

மீபத்தில் சென்னை சென்றபோது திருவான்மியூர் சென்று திரிபுரசுந்தரி அன்னையை தரிசிக்க இயன்றது. அன்று ஆடிவெள்ளியாதலால், அன்னையின் தங்கரத பவனியும் காணக் கிட்டியது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நாண்மலர் தூவி வலம்செயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூர் ஈசனையும், அம்பிகையையும் பற்றி வாரம் ஒரு ஆலயம் நடராஜ் அவர்கள் வழங்கும் பாட்காஸ்டின் சுட்டி இங்கே.


பெரியசாமித் தூரன் அவர்கள், திருவான்மியூர் வளர் தேனார் மொழி வல்லி, என தாயார் திரிபுரசுந்தரி அன்னையைப் பாடும் சுத்த சாவேரி இராகப் பாடலை இங்கு பார்க்கலாம். பாடலில், காமதேனு, தன் சாபம் தீர, வணங்கிய தலம் என்கிற குறிப்பும் உள்ளது.

மக்கு உடலில் பிணி ஏற்பட, நாம் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவரும் மருந்து தருகிறார். பிணியும் மறைகிறது. சில சமயம் மீண்டும் மீண்டும் வருகிறது. நிரந்தரமாக பிணி தீராதா என்பது நமது கோரிக்கை. நிரந்தரமாக மட்டுமல்ல, தீர்க்க இயலாத பிணிகளையும் தீர்க்கும் மருந்தொன்று இருக்கிறதாம். கோபாலகிருஷ்ண பாரதியும் 'பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது - பேரின்பம் அங்குள்ளே' என்பார். பிணிகளை தீர்ப்பது மட்டுமல்ல, பேரின்பம் தர வல்லதுமாம், அம்(மா)மருந்து.

சரி, அப்படிப்பட்ட மருந்தினைத் தரவல்ல மருத்துவர் யார்? பெரியசாமித் தூரனார் இப்பாடலில் அந்த மருத்துவர் வேறாரும் இல்லை - அம்பிகையேதான், "பிணியெலாம் தீர்க்கும் மருந்துடையாள்" என்கிறார்! அது என்ன மருந்து என்றால், "சதாசிவம்" என்னும் மருந்தாம். தாயே, திரிபுரசுந்தரி, சிவஞானம் எனும் மாமருந்தினைத் தருவாய், பிணிகளைக் களைவாய் என வேண்டிக் கொள்வோம்.

இராகம்: சுத்தசாவேரி
இயற்றியவர்: பெரியசாமித் தூரன்

பல்லவி:
தாயே திரிபுரசுந்தரி - உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி
தாளிணை மறவேன், சரணம்!

அனுபல்லவி:
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வல்லி - ஜகமெல்லாம் படைத்த

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

சரணம்
காமதேனு வணங்கும் கருணாரூபிணி
கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவபரமெனும்
தனிமருந்துடையாய்
பிணியெலாம் களைவாய்

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

~~~~
பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கு கேட்கலாம்:

Wednesday, September 16, 2009

பூவகத்துள் நின்ற பொற்கொடி!

தாபரத்து உள்நின்று அருள வல்லான் சிவன்
மாபரத்து உண்மை வழிபடுவாரில்லை
மாபரத்து உண்மை வழிபடு வாளர்க்கும்
பூவகத்து உள்நின்ற பொற்கொடி யாகுமே.
- திருமந்திரம் 1717


தானென அறிந்தோ இலையோ எனினும்
தன்னொளிர்ந்திடுமே தானேத் தானேயென்று
யாரறிவார் இதனை? யாருரை செய்வார்?
பாரிருள் போக்கிடப் பல்லாண்டு பாடிடுமே.

தனக்குள் நின்றாட எண்ணம் இல்லை
தடுமாறிடும் மனதிலும் நிலையே இல்லை
அலையாய் கரையும் மனது அகத்தில்
நிலையாய் நிலைப்பது எங்கே?

தானெனத்தான் அமர்ந்து, தன்னொளியைக் கூர்ந்திடத்
தாமரை இதயம் ஒளிர்ந்திடக் காணாயோ?
தானெனத்தான் அறிந்தது, தடாகமதில் மலர்ந்த
தாமரையும், எல்லாமுமே சிவமேயென அறியாயோ?

இன்பமும் மகிழ்வும் இனிமையும் ஆனந்தமும்
கொண்டபோதெல்லாம் ஒளிர்வதும் அதுதான் !
துன்பமும் அழுக்கும் சோர்வும் துயரமும்
கொண்டபோதெல்லாம் தோன்றாததும் அதுதான் !
என்ன வேண்டும் எனவறிந்த மனமே,
என்ன வேண்டும் இவ்விரண்டில்?
இன்பம் வேண்ட, வேண்டாயோ ஒளியைப்பே
ரின்பம் வேண்ட, நாடாயோ சிவமதை.

பூவகத்துள் நின்ற அன்னையவள் அன்பானவள்;
அவள்பெயர் பொற்கொடியாம், பொன்னென மிளிரும்
சிவஞானமதை ஈன்றிடும் அருட்கொடையாள்! - தானதைச்
சிவமனெத் தெளிந்திடச் செய்வாளே.

துன்பம் நேர்கையில் மின்னும் நவரத்தினமாய்
அன்னையவள் இதயக்கமலத்தின் மின்னுவதை நினைந்திட
எண்ணமதில் ஏறாது துயர், வாடாது பயிர்!
திண்ணமெனக் கொள்வாய் மனமே.

மூளை எலும்புகள் நாடிநரம்பெலாம் புகுந்து
மூச்சில் இடைபிங்கலை சுழிமுனையெல்லாம் நிறைந்திட
எப்போதும் இதயக்கமலம் ஒளிர்வதை உணர்வாய்;
எப்போதும் அதனைக்கவனித்து இருப்பாய்.