Thursday, September 27, 2012

வேலும் மயிலுமே



இராகம்: சுசரித்ரா
தாளம்: ரூபகம்
இயற்றியவர்: கோட்டீஸ்வர ஐயர்



எடுப்பு

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே - வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே! 

தொடுப்பு

காலை மாலையுமே மனமே துதி  கந்தனை!

காலை மாலையுமே மனமே துதி காலன் வரினுமே - வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே!

முடிப்பு

சித்ரகவி நக்கீரன் தத்தை தவிர்த்த தீரன்

கஜபத்ர வீரபத்ர வீரபாகு சோதரன்

ஆறுபத்ர வசீகரன் சுசரித்ர சுசீகரன்

விசித்ர கவி குஞ்சரதாச மித்ர ருசீகரன் - சக்தி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே! - வெற்றி

வேலும் மயிலுமே எவ்வேளையிலுமே வெல்லுமே!

---------

பாடுபவர்: சஞ்சய் சுப்ரமணியம்


Wednesday, September 19, 2012

அறியாமைதான் அன்பே பேரின்பமே!

எனது ஆண்டிராய்ட் கைபேசியில் எப்.எம் இணைய வானொலி ஒன்றைத் துழாவிக்கொண்டிருக்கையில் பாட்டொன்று ஒலித்தது:
"அறியாமை தான் இங்கே பேரின்பம் அன்பே
காதலின் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே...
அய்யங்காரு வீட்டு அழகே."  (அன்னியன் திரைப்படப் பாடல்)

அறியாமை எப்போதாவது பேரின்பமாகுமா?
"... அறியாத" மானிடரை வையம் சுமப்பது வம்பன்றோ!

"Ignorance is Bliss" என்பார்கள் ஆங்கிலத்தில்.  சில சமயம் தெரிந்து துன்பப்படுவதை விட தெரியாமல் இருப்பதே தேவலை என்பதால் போலும்.

வேதாந்தம் உரைத்த ஞானியர் சொல்வார்:
அவித்தை என்னும் அறியாமையாவது தவறான அல்லது குறைவான புரிதலினால் விளைவது. அவித்தையின் விளைவால் மனதானது, தன் கண் போன போக்கிலே தன் கால் போகலாம் என நினைக்கிறது. "துய்ப்பது பரமன்" என்னும் உண்மையை உணராது, தனது புற அவையங்களால் துய்க்கப் படும் உணர்வுகளைத் தான் துய்ப்பதாகக் கொண்டு பெருமிதத்தில் புரண்டோடுகிறது.
ஆகவே ஐம்புலங்களால் தான் இந்த அவித்தையே ஏற்படுகிறது அல்லவா? இன்புட்டே இல்லாமல் இருந்தால்?
இதைத்தான் அருணகிரியார் வேண்டுவார்:
"ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர்
அந்தி பகல் அற்ற நிலை அருள்வாயே" என்று.
இருந்த இடத்தில் இருந்து கொண்டே உலகத்தைச் சுற்றி வலம் வந்த ஐங்கரனைப் போல் அலைபாயும் மனது - அவ்வாறு செயல்படுவதற்கு - அதன் அவையங்களே பெரிதும் துணை புரிகின்றன. உள்வயப்படமால் வெளியுலக ஈர்ப்பிலேயே மனமானது உழல்கிறது. அதனால், ஐம்புலன்களையும் அகற்றிய நிலையினை வேண்டுகிறார்.

அல்லது, ஐம்புலன்களுக்கும் மனதிற்கும் இடையே ஒரு பெருஞ்சுவரை எழுப்பியாக வேண்டும். மனதிற்கும் ஐம்புலன்களுக்கும் தொடர்பே இல்லாமல் செய்ய வேண்டும்.

அல்லது மனம் ஐம்புலன்களைப் பற்றியே அறிவே இல்லாமல், மனமானது "ஐம்புலன் அறியாமை" தனில் இருக்க வேண்டும். அப்படியொரு நிலையில் இருந்தால், அந்த அறியாமையும் பேரின்பம் விளைவிக்கலாம். ஏனென்றால், ஐம்புலன்கள் மனதில் மயக்கத்தினை விளைவிக்காத பொழுது, அது தனக்குள்ளே, தன் புத்தியில் பிரதிபலிக்கும் பரமனின் பிம்பத்தினைக் கவனிக்கத் தொடங்குகிறது. வாட்டத்தை ஓட்டும் நாட்டத்தை நாடி இருக்கிறது. அவ்வாறான "தன் வயப்பட்ட" நிலையில் வெளி உலகப் புலன் வழிச் செய்திகள் ஏளிதாக மனதில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

பகவான் கண்ணன் கீதையில் உரைப்பதினை:
மமைவாம்ஸோ² ஜீவலோகே ஜீவபூ⁴த: ஸநாதந: | 
மந:ஷஷ்டா²நீந்த்³ரியாணி ப்ரக்ருதிஸ்தா²நி கர்ஷதி || 15- 7||
"நானே ஜீவனாய் இருக்கிறேன். பிரகிருதியில் இருப்பதும் நானே. மனம் மற்றும் ஐந்து புலன்களையும் நானே கவர்கிறேன்."
மனதில் நிறுத்திட வேண்டும்.