Saturday, January 31, 2009

ப பூ ப வி!

இது என்ன தலைப்பு? ப பூ ப வி!
அதாங்க, பட்டாம் பூச்சி பதிவர் விருது.
கீதாம்மா பாட்டுக்கு, நம்ம பக்கம் தள்ளி விட்டுட்டாங்க....ஞானம் அப்படியெல்லாம் வேற சொல்லிட்டாங்க!
Half knowledge is more dangerous than No knowledge அப்படீங்கற வாசகம் தான் நினைவுக்கு வருது, அதனால பயமாத்தான் இருக்கு!

ப பூ பற்றி முன்னாடி நிறைய கேள்விப்பட்டது இல்லை. யாரோ, ஒண்ணு ரெண்டு பதிவர் பக்கத்துல்ல பார்த்ததா ஞாபகம்! ஆனா, சமீபத்துல, திவா சார் பக்கத்துல பார்த்தா, இதைப் பற்றிப் பெரிய்ய்ய்ய ஆராய்ச்சியே செஞ்சு வைச்சுருக்காரு!

நமக்கு கொடுத்த விருது, நமக்கே இல்லையாம்,
இதை, மூணு பேருக்கு கொடுக்கணுமாம்மே!
ஆனா ஒரு சந்தேகம், ஒரு விருதை எப்படி மூணா பங்கிடுவது? 33.333...% ஆகவா?
இப்படியெல்லாம் சாக்கு சொல்லி, விருதை நம்ப பக்கமே வச்சுக்க தந்திரம் ஏதும் பலிக்காததுனாலே,
ஒருவழியா, மூணு பேரையும் இங்கே(யே) அறிவிச்சிடுறேன்!:

1. தங்கமணி அவர்களின் தங்கமான கவிதைகள்.
மரபில் சிறப்பாகவும் வழுவிலாமலும் அழகான
கவிதைகளை படைக்கும் இவரின் நடை
சுவைக்க சுவைக்க இனிக்கும்!
பதமலர் என்னும் கவிதையில் இவரது இந்த ஒரு சொல்லாடலே சான்றோ!:
'விட அரவும் புலியதளும் விரிசடையில் நதிமதியும் மிளிரும் ஈசன்'

2. அடுத்தது, காற்று வெளிதனில் சகலமும் படைப்பவர், மதுமிதா க்கா.
நிறைய நாளாகவே, இவங்க பதிவுகள், ஆச்சரியமா, அனுபவிச்சு படிச்சு வருகிறேன்.
இலக்கியவாதி, செய்தியாளர், தேசநேசி என பற்பல பரிணாமங்கள், இவரது பதிவுகளில் படங்களுடன் பட்டொளி வீசிப் பறந்திடக் காணலாம்!

3. முடிவா, முத்தாய்ப்பா, ஷைலஜா க்கா.
எண்ணிய முடிதல் வேண்டும், நல்லவே எண்ண வேண்டும் என்று
நல்ல நல்ல விஷயங்களை நாளொரு வண்ணமாய் தருபவர். இவங்க அருமையா புயங்கப் பெருமானின் புஜங்கம் பாடி இருந்தாங்க! சமீபத்தில, இவர் தந்த புத்தகக் கண்காட்சி அனுபவங்களைப் படிக்கையில், நாமும் கண்காட்சியைப் பார்க்கலையே என ஏங்க வைத்தன. கடைசியா நான் சென்னை புத்தகக் கண்காட்சிக்குப் போய் பத்து வருடங்கள் இருக்கும். அப்போ, என்னென்ன புத்தகங்களைப் பார்த்தேன், என்ன புத்தகங்களை வாங்கினேன் என அசைபோட்டு பார்க்கையில், நினைவுகள் வியந்தன!

விருதைப் பெற்ற மூன்று பேருக்கும் வாழ்த்துக்கள்.
அப்புறம், முன்கூட்டியே நன்றியும், எனென்றால்:
இந்த விருது - ஒலிம்பிக் ஜோதியை எடுத்துக்கிட்டு போறது போல - அதனால, பின்பற்றவேண்டிய சில விதி முறைகள் இருக்காம்!: (

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)

2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)

3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)

4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)

5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

~~~~
மூணு பேரைப் பாராட்ட வாய்ப்புக் கொடுத்த கீதாம்மாவுக்கு ஒரு நன்றி!
~~~~
அங்கே இருந்து ஒரு சத்தம் கேட்டது: க்கர்ர்ர்ர்ர், ஒண்ணே ஒண்ணு தானா?
~~~~
சரி, சரி, மூன்று நன்றிகள்! :-)
~~~~

Sunday, January 25, 2009

கால்வண்ணம் கண்டு கொண்டோம்!

இந்தப் பகுதியில் ஒரு அருமையான பாடலை பார்க்கப்போகிறோம். இப்பாடலை வஞ்சகப் புகழ்ச்சி அல்லது 'தூற்றுமறைத் துதி' (நிந்தாஸ்துதி) என்கிற வகையில் சொல்லலாம். அதாவது, தூற்றுவது போல போற்றும் பாடல். சமீபத்தில் தான், வஞ்சகப் புகழ்ச்சி அணியினை, அகரம்.அமுதா அவர்கள், காளமேகப் புலவரின் கவியினைக் கொண்டு வெண்பா வகுப்பினில் விளக்கி இருந்தார்.

தில்லையில் ஆனந்த நடம் ஆடும் ஈசன், கூத்தன், விரிசடை விண்ணவன், எப்போதும் ஒரு காலைத் தூக்கி நின்றாடுகிறான் அல்லவா! எதனால்? அவன் ஒரு காலைத் தூக்கி நின்றாடுவதன் மறைபொருள் ஒருபுறம் இருக்க, அவன் காலைத் தூக்கி நிற்பதால், அவன் முடமாகி நிற்கிறானோ, என்பதுபோல பலவற்றைச் சுவைபடச் சொல்லுகிறார் பாடலாசிரியர் இப்பாடலில். கவி காளமேகப் புலவரின் இந்த வெண்பா போல:
வாதக்கால் ஆம்தமக்கு மைத்துனர்க்கு நீரிழிவுஆம்
பேதப் பெருவயிறுஆம் பிள்ளைதனக்கு! - ஓதக்கேள்!
வந்தவினை தீர்க்க வகை அறியார் வேற்றூரார்
எந்தவினை தீர்ப்பார் இவர்?

சிவன் காலைத் தூக்கி நிற்க, அவருக்கு வாத நோயாம். அவர் மைத்துணர் திருமாலுக்கோ, நீரிலியே படுத்திருப்பதால், நீரிழிவு நோயாம். பிள்ளையாருக்கோ, பெருத்த வயிராம்! ஆமாங்க, இவிங்க குடும்பமே நோய்வாய்ப்பட்ட குடும்பம் போல! இவிங்க நோய்களையே தீர்த்துக்கக் காணும், எங்கே நம்ப வினையை தீர்க்கறது?!!!

வாதம் - சீதம் என வருகிற மாதிரி, ஒரு நீண்ட பாடலே இயற்றி இருக்காரு, பாபவிநாசம் முதலியார் அவர்கள். இவர், நிறைய தமிழ்ப் பாடல்களை இயற்றி இருக்கிறார்கள். இவர் இயற்றிய பெரும்பாலுமான பாடல்கள், இந்த வகையைச் சார்ந்த இருப்பதாகச் சொல்லுகிறார்கள். இப்பாடலில் பாருங்கள் எப்படி அருமையா எதுகை அமைச்சிருக்காரு! :
நடம் - முடம் - திடம் - சடை
எடுப்பும், தொடுப்பும் என்னமா துடிக்குது!

இராகம் : காம்போதி
இயற்றியவர் : பாபவிநாச முதலியார்
(1650-1725)

எடுப்பு
நடமாடித் திரிந்த உமக்கு இடதுகால் உதவாமல்
முடமானதேன் என்று சொல்லுவீரய்யா!

தொடுப்பு
திடமேவும் தில்லைநகர் மருவு பேரானந்த
சடைவிரித்தாடினவா தேவ சிற்சபை அறிய
(நடமாடித்..)

முடிப்பு
1. திருநீறைச் சுமந்தீரோ! நெருப்பான மேனிதனில்
சீதத்தினால் மிகுந்த வாதகுணமோ!

ஒருமையுடன் மார்கண்டர்க்கு உதவியாய் மரலி விழ
உதைக்க சுளிக்கேறியுண்ட குணமோ!

பரவைதன் தெருவாசற்படி இடறிற்றோ, எந்தன்
பாவமோ, என் சிவனே, மூவர்க்கும் முதல்வன் என்று

(நடமாடித்..)
2. தனஞ்செய மஹிபனுடன் சமரில் அடிபட்டு விழ
சந்திலே முடி பிசகி நொந்ததுவோ?

இனம் புரியும் தாருகா வனமெங்கும் திரிந்ததில்
முள்ளேறுண்டதோ சொல்லும்? - முறிந்ததுவோ?

கனகசபை தனில் நடனம் கண்டோர்கள் அதிசயிக்க
கண்ணெண்றுண்டதோ சொல்லும்?
விண்ணவர்க்கும் முதல்வன் என்று


(நடமாடித்..)
3. பக்தி செய்யும் பெரியோர்கள் பாபநாசமாகும்
பரமபதம் இதுவென்று தூக்கி நின்றதுவோ?

சக்தி சிவகாமவல்லி தன்பாதம் நோகுமென்றே
தரையில் அடிவைக்க தயங்கி நின்றதுவோ?

சத்யலோக அதிபதி தாளத்திற்கேற்ப நடம்
தாங்கியே ஒரு காலைத் தூக்கி நின்றதுவோ?
(நடமாடித்..)

இந்தப் பாடலை டி.எம்.கிருஷ்ணா அவர்கள் பாடிடக் கேட்கலாம். அவர் முடிப்பில் முதல் சரணத்தை மட்டுமே பாடுகிறார். சில புத்தகங்களில், இரண்டாவது சரணம் இடம் பெறுவதில்லை. மேலும், சில புத்தகங்களில், இப்பாடல், கோபால கிருஷ்ண பாரதி அவர்களால் இயற்றப்பட்டதென தவறாக குறிக்கப்படுவதும் உண்டு.
பாடலைக் கேட்டவாறு, அதன் பொருளை மேயலாமா?



நடம் - நடனம் ஆடித் திரியும்
இதர கவிகளால், இப்படியெல்லாம், சிவன் நடம் ஆடுவதைப் பாடிவார்:
* ஆனந்த நடம் ஆடுவார் தில்லை, அம்பலம் தன்னில் ஆனந்த நடம் ஆடுவார் தில்லை (நீலகண்ட சிவன் : பூர்வி கல்யாணி)
* ஞான சபையில் தில்லை, ஆனந்த நடமாடும், ஆனந்த நடராஜனே (பாபநாசம் சிவன் : சாரங்கா)
* நடனம் ஆடினார், வெகு நாகரீகமாகவே, கனக சபையில் ஆனந்த நடனம் ஆடினார் (கோபால கிருஷ்ண பாரதி : வசந்தா)
* ஆடிக்கொண்டார், அந்த வேடிக்கை காண கண் ஆயிரம் வேண்டாமோ (முத்துத்தாண்டவர் : மாயமாளவகௌளை)

இடதுகால் முடம் :
இடதுகாலைத் தூக்கி நிற்பதால், இவருக்கு கால் முடமோ?, இவரால் காலை ஊன்றி நிற்க இயலாததன் காரணம் என்னவோ என வினவுகிறார்!
இதர கவிகள் இப்படியெல்லாம் 'காலை தூக்கி நின்றாடுவதை' பாடுவார்கள்:
* இடது பதம் தூக்கி ஆடும் நடராஜன் அடி பணிவையே, நெஞ்சே (பாபநாசம் சிவன் - கமாஸ்)
* காலைத் தூக்கி நின்று ஆடும் தெய்வமே, எனை கைதூக்கி ஆள் தெய்வமே! (மாரிமுத்தாப்பிள்ளை - காம்போதி)
இவரோ, இடது கால் தூக்கி நிற்பதை 'முடம்' என்கிறார்.

ஐந்தெழுத்து மந்திரமாம் 'நமசிவாய' தனில் தொடக்கமாம் 'ந' வெனும் எழுத்தும், உனைப்போல் தூக்கிய காலுடன் நிற்பதுவே!

திடமேவும் தில்லை நகர்
தில்லைத் தலம் என்று சொல்லத் தொடங்கினால், இல்லை பிறவி, பிணியும் பாவமும்! (கோபாலகிருஷ்ண பாரதி - சாமா)
அப்படிப்பட்ட தில்லைநகரில், "திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுள்", சடைதனை விரித்த வண்ணம், பேரானந்தம் தரும் சத்-சித்-ஆனந்தம். எங்கெங்கும், எல்லாமுமாய் ஆகாசத்தில் பரந்து விரிந்து நிறைந்திருக்கும் பரப்பிரம்மம்.

சீதமும் வாதமும்
சுடலைப்பொடி பூசும், உள்ளம் கவர் கள்வனே, திரு-நீறை உடலில் பூசியதால், சீதமாகியதோ, அதனால், வாத குணமும் வந்து, இடது காலைக் கீழே வைக்க இயலாமல் தவிக்கிறீரோ? நமக்கெல்லாம், திருநீறைப் பூசினால், நமது நீர் குறையும். ஆனால், இங்கே எதிர்மறையா சொல்லுகிறாரே!. ஒருவேளை, திருநீறை நாம் பூசி, நம் சீதம் குறைந்து, அதெல்லாம் அவனுக்குப் போய்விட்டதோ! ஹ ஹா!

காலனை ஒரு காலால் உதைத்த 'ஒரு-காலன்':
நீரோ ஒற்றைக் காலில் ஆடுபவன்! மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, உன் காலால், காலனை உதைத்க, அப்போது, உம் காலில் தான் சுளுக்கு ஏறியதோ? அதனால் தான், ஒற்றைக் காலை எப்போதும் தூக்கியவாறே நிற்கிறீரோ?

வாசல் படி இடறிற்றோ?
ஈசனே, உமது 'நண்பர்' சுந்தரமூர்த்தி நாயனார், அவரது மனைவி பரவையாரை மீண்டும் சேருவதற்காக தூது போனீரோ!. அப்படி அவசர அவசரமாக அவரது வீட்டுக்குள் நுழையும்போதுதான், பரவையாரின் வீட்டு வாசற்படித் தடுக்கி கீழே விழுந்து, அதனால் முடமாகிப் போனீரோ?

எந்தன் பாவமோ?
ஒருவேளே, நான் செய்த பாவங்களால், அதனால் உனக்கு குறைவு வந்ததோ, அதனால் தான், நீர் முடமாகிப் போனீரோ?

இப்படியாக மற்ற இரண்டு சரணங்களிலும், ஒவ்வொரு கதையினைச் சொல்லி, அதில் தன் கற்பனையைப் புகுத்தி, இதனால் தான் சிவன் முடமாகிப் போனதுவோ, என்பதுபோல பாட்டினை வடிவமைத்திருக்கிறார் பாபவிநாசம் முதலியார்!

* சிவன் வேடனாக, தனஞ்செயன்(அர்ஜூனன்) உடன் போரில் நீர் அடிபட்டு விழ, அப்போது, உமது இடுப்பு எலும்பு இணைப்புகளில் வலி ஏற்பட்டு, அதனால், உம்காலைத் தூக்க இயலவில்லையோ? (சந்து: இடுப்பு; முடி:முடிச்சு:எலும்பு இணைப்புகள்; சமர்:போர்)
* தாருகா வனத்தில் பிச்சை எடுப்பவன் போல் திரிந்ததில், முள்ளும் உன்காலைத் தைத்ததுவோ?
* கனகசபை தன்னில், உமது ஆனந்த நடனம் கண்டு அதிசயத்தவர்களில் கண்பட்டுத்தான் இவ்வாறு நேரிட்டதோ?
* உன் இடது பாகத்தில் இருக்கும் சக்தி சிவகாமவல்லி, தன் பிஞ்சுப்பாதம் நோகுமென்று தரையில் கால் வைக்க தயங்கினாளோ?
* சத்தியலோக அதிபதியாம், பிரம்மனின் வேகமான தாளத்திற்கு ஏற்ப, நடமாடினீரே! அந்நடனமதில், உமக்குப் பிடித்த, அருமையான நடன முத்திரை இதுவென, ஒருகாலைத் தூக்கிக் காட்டுகிறீரோ எமக்கு!

ஏனையா, நடராஜனே, எனிப்படி ஒற்றைக் காலை தூக்கி நிற்கிறீர்?
ஆணவம், மற்றும் மாயை ஆகியவற்றில் இருந்து விடுபட, "இந்தா என் அருள்" என வழங்கிடும் வண்ணம்தனைக் குறிக்கத்தான், இப்படித் தூக்கிய காலுடன் நின்றீரோ, ஐயா!. பக்தி செய்பவர்களின் பாவமெல்லாம் நாசம் செய்யும், "பரமபதம் இதுவென" உன் பாதம் தனைக் காட்டும் கருணையுள்ளம் கொண்ட பெருமானே, வந்தனம் செய்வேன் உம்மை!.

பி.கு:
* அடைப்புக்குறியில் () குறிக்கப்பட்டவை பாடலை இயற்றியவர் பெயரும், பாடலின் இராகமும்.
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் சென்னை ஆன்லைன் தளத்தில் இப்பாடலைப்பற்றி, தந்துள்ளவற்றை இங்கே பார்க்கவும்.
* இப்பாடலின் வரிகளுக்கு விளக்கம் தந்துதவிய திரு.ஸ்ரீநிவாசன் சபாரத்தினம், திரு.சேதுராமன் சுப்ரமணியன் ஆகியோருக்கு நன்றிகள்.

Saturday, January 17, 2009

திருவேங்கட நீராட்டும் அலங்காரமும்

ம்பெருமானின் திருவடியில் அபயம் பெறும் பேறன்றி வேறென்ன வேண்டும். அபயம் என வந்தோர்க்கு அருள் தரும் தீன சரண்யன், விபீடனன் போல என்னையும் காப்பான் எனத் திண்ணமாய் இருப்பேன். திகழொளி தருவன். அவன் திருமேனிக்குத் திருமங்கள நீராட்டுப் பாடிட, செங்கமலக் கண்ணன், செம்மை சேர்ப்பான்.

பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்
சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தமை உய்ய வாங்கிப்
பிறப்பறுக்கும் பிரானிடம்
வாசமாமலர் நாறுவார் பொழில்
சூழ் தரும் உலகுக்கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம் அடை நெஞ்சமே
- திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி.


திரு நீராட்டு முடிந்து, அடுத்து அலங்காரம் செய்யலாமா. நம்ம தமிழ்த்தியாகய்யா, பாபநாசம் சிவன் ஹம்சாநந்தியில் அழகான கீர்த்தனை வடிச்சிருக்காரே, அதைக் கேட்டவாரு, அலங்காரப் பிரியனை, அலங்கரித்து, அகமகிழ்வோமா!



முன்னம், இங்கு ரஞ்சனி&காயத்ரி அவர்கள் பாடிட, குலசேகர ஆழ்வார் திருமொழிகளில் இருந்து மூன்று பாசுரங்களைக் கேட்டோம் அல்லவா, அதில் மூன்றாவது பாசுரம் ஹம்சாநந்தி இராகமாக அமைந்திருந்தது. விருத்தம் பாடிய பின்னர், தொடர்ந்து இந்தக் கிருதியினை, அதே ஹம்சாநந்தி இராகத்தில் இங்கே தொடருகிறார்கள், கேட்கவும்:



எடுப்பு
ஸ்ரீநிவாச திருவேங்கடம் உடையாய்
ஜெய கோவிந்த முகுந்த அனந்த
(ஸ்ரீநிவாச...)

தொடுப்பு:
தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்
தீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய்

(ஸ்ரீநிவாச...)

முடிப்பு:
ஜகம் புகழும் ஏழு மலை மாயவனே
திருமகள் அலர்மேல்மங்கை மனாளனே

ஜகன்நாதா........
ஜகன்நாதா, சங்கு சக்ர தரனே

திருவடிக்கு அபயம்... - உன்
திருவடிக்கு அபயம், அபயம் ஐயா!

(ஸ்ரீநிவாச...)

இங்கே திருமதி.சௌம்யா அவர்கள் பாடிட இப்பாடலைக் கேட்கலாம்.

Monday, January 12, 2009

மார்கழி : அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் ஆளாவது எந்நாளோ?

ம்ம ஊரில் இறைவனுக்கு அடியார்களாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மட்டும் அல்லாமல், அவ்வடியார்களுக்கு அடியாராகவும் இருப்பவர்களும் இருந்திருக்கிறார்கள். அடியார்க்கு செய்யும் தொண்டே, ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாக, கொண்டாடி இருக்கிறார்கள். தொண்டாடுவதே, கொண்டாடுவது எனக் கொண்டாடி இருக்கிறார்கள். நாயன்மார்களாக நாம் போற்றும் பலரும், இப்படித்தான். அடியார்க்கு அடியாராக இருப்பதே சிவத்தொண்டு என வாழ்ந்த அந்நாயன்மார்களின் பட்டியலினை இங்கு ஒரு பாடலில் நாம் பார்க்கப் போகிறோம்.
என்ன பாடலா? பட்டியலா? இரண்டும் தாங்க!
அதற்கு முன்னால், ஒரு பட்டினத்தார் பாடலைப் பார்ப்போம்.

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ ...?

இதுதான் பட்டினத்தார் பாடல். இதில் அவர் குறிப்பிடும் மூன்று நாயன்மார்கள்:
சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் என மூன்று நாயன்மார்களை குறிப்பிடுகிறார்.

இப்போது, மூன்றிலிருந்து, அறுபத்து மூன்றுக்குச் செல்வோமா!

ஊத்துக்காடு வேங்கடகவி(1700(?)-1765(?)) அவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். 'அலைபாயுதே, கண்ணா...', 'தாயே யசோதா' போன்ற அற்புதமான கண்ணன் பாடல்களை இயற்றியவர். அப்படிப்பட்டவர், சிவனடியார்களையும் ஒரு நீண்ட பட்டியலெடுத்துப் பாடுகிறார்!
பார்ப்போமா! பாடல், தொடங்குவதைப் பாருங்கள், மேலே பார்த்த பட்டினத்தார் பாடல் விட்ட இடத்தில் இருந்து, தொடங்குவது போல உள்ளது.

இராகம் : பரசு
தலைப்பு : பெரியபுராணக் கீர்த்தனை
வழங்குபவர் : அருணா சாய்ராம்
நிகழ்ச்சி : மார்கழி மகா உற்சவம் 2008
வயலின் : H.N.பாஸ்கர்
மிருதங்கம் : J.வைத்யநாதன்
கடம் : கார்த்திக்



~~~~~~~~~~~~~~~~~~~
பாட்டைக் கேட்டுக்கொண்டே, வரிகளைப் பார்ப்போமா?

எடுப்பு
ஆளாவது என்னாளோ சிவமே
அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் - உன்
அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் (ஆளாவது...)

தொடுப்பு
கேளாது அளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே
இளம் தாளான கமல முட்புறமே பதம்
ததிக்க தாமென விதித்த தாளமும்
துதிக்க தாமென மதித்து கதிபெற (ஆளாவது...)

முடிப்பு
புன்மை பிறவி போகவேணும் எடுத்தால்
புண்ணிய பிறவியாக வேணும்

இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும்
இல்லா பதத்திணையாக வேணும்(இன்னவரில்)

1. காழிமணம் சிவபாதமகன் (1), திருநாவரசன் (2), மணிவாசக(3), சுந்தரன்(4) எனும் (இன்னவரில்)

2. சிறுத் தொண்டர்(5), திருநீலகண்ட(ர்)(6), விறன் மீண்ட(ர்)(7), நமி நந்தி(8), தண்டி அடிகளெனும்(9) (இன்னவரில்)

3. ஐயடிகள் காடவர்கோன் (10) ஆனாய(11) கணம் புல்லர்(12) நின்றசீர் நெடுமாற(13)
கணநாத (14) முனையாடுவாரொடு (15) திருநாளைப் போவாரெனும்(16) (இன்னவரில்)

4. மெய்பொருளார் (17) பெருமிழலைக் குறும்பர்(18) ஏனாதிநாத(19) கலிக்கம்பர் (20)
அமர்நீதி(21) நரசிங்க முனையரய (22) சடைய(23) சண்டேச (24) கலிய(25) காரியாரெனும்(26) (இன்னவரில்)

5. மானக்கஞ்சாற(27) நேச(28) பூசலாரொடு(29) வாயிலார்(30)
சோமாசிமாற(31) மங்கையர்க்கரசி(32) குங்கிலியக் கலயார்(33) இளையான்குடி
மாற(34) அரிவாட்டாயரி(35) கூற்றுவர்(36) கோட்புலி(37) சாக்கியர்(38) சத்தியள்(39) - சிறப்
புலியர் (40) செருத்துணையர் (41) புகழ்த்துணையர்(42) குலச்சிறையர்(43) கழற்றறிவர்(44) இயற்பகையரெனும் (45) (இன்னவரில்)

6. திருமூல(46) முருக(47) மூர்த்தி (48) அப்பூதி(49) ருத்தர பசுபதியார்(50) இசைஞானியர்(51)
நீலநக்கர்(52) இடங்கழியர்(53)அதிபத்தர்(54) எறிபத்தர்(55) ஏயர் கோனொடு(56)
நீலகண்ட யாழ்பாண(57) புகழ் சோழ(58) கோட்செங்கட்சோழ(59) கழற்சிங்கர்(60)
காரைக்கால் நகர்மேவு கனியாரொடு(61) கண்ணப்பர்(62) குறிப்புத் தொண்டரெனும்(63) (இன்னவரில்)

இணையொன்றுமில்லா பதத்திணையா வேணும். (ஆளாவது...)

~~~~~~
புதிர் பக்கம்:
1) ஆகா, 63 நாயன்மாரையும் ஒரே பாட்டில் அடுக்கிட்டாரே!
ஆனா, ஒருத்தரை விட்டுட்டாரு போல இருக்கு? அப்படியும் இருக்குமோ? அப்படீன்னா, ஏனோ?
புதிருக்கான குறிப்பு இங்கே இருக்கு, பார்த்துச் சொல்லுங்க!
2) இந்தப் பாட்டில், நாயன்மார்களை, ஊத்துக்காடார், குறிப்பிடுகையில், எதேனும் வரிசை இருக்கிறதா? முதல் வரியில் சமயக்குரவர் நால்வரையும் குறிப்பிட்டி விட்டார். அவர்கள் முதன்மையானவர்கள் என்பதனால். மற்றவர்ளைக் குறிப்பிடுகையில் வரிசை ஏதுமுண்டா? அப்படியானால், அது என்ன?. பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் வரிசைக்கும், இவ்வரிசைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
~~~~~~
பி.கு : ஒவ்வொரு நாயன்மார் பெயருக்கும் சுட்டி தந்துள்ளேன். தமிழ் விக்கிபீடியாவில் அவரைப்பற்றிய விவரங்கள் அறியலாம்.
~~~~~~
அடியார்க்கு அடியார் மட்டுமல்ல,
அடியார்க்கு, அடியார்க்கு, அடியனாம்!
அடியார்க்கு அடியாராய் இருப்பவருக்கு அடியாராய் ஆகும், உயர் நிலைக்கு, உகந்த ஆளாவது எப்போதோ?
நாயன்மார்கள் ஒவ்வொருவர் பெயராகச் சொல்லி, அவர்களெல்லாம் அடைந்த, ஈடு இணையில்லாத, இறையடி எனும் பதத்திற்கு இணையான பதத்தினை அடைய வேண்டும்! சிறுமையான, இப்பிறவி போக வேண்டும். இன்னொரு பிறவி வாய்த்தால், அது புண்ணிய பிறவியாக வேண்டும்.
தொடுப்பில் பாருங்கள், எப்படி, வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றன! அற்புதம்!

பாட்டைக் கேட்டீங்களா?
பாட்டென்றால் இப்படி இருக்க வேணும்.
பாட்டுக்கு இசை என்றால் இப்படி இருக்க வேணும்.
அதை அனுபவித்து பாடும் பாடகர் என்றால் இப்படி இருக்க வேணும்.
இப்படி எல்லாவற்றுக்கும் இலக்கணம், இப்பாடல்!

Friday, January 09, 2009

மார்கழி : விருத்தம் பாட வருத்தம் எதற்கு?

ன்றா இரண்டா, ஓராயிரம் விருத்தங்கள் பாடிக் கொண்டே இருக்கலாம்.
அதுவும், எழில்மலை வேங்கடவனை தீந்தமிழில் பாடிடுதல் என்பது, சொல்லில் அடங்கா சுகம் தருவது...
சமீபத்துல, அரங்கனா, வேங்கடவனா, என்றெல்லாம் இங்கே கேட்டாங்க. வேங்கடரங்கன் அப்படீன்னும் சொன்னாங்க.
"அமலன் ஆதிப் பிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர் கோன், விரை
யார் பொழில் "வேங்கடவன்",
நிமலன் நிர்மலன் நீதி வானவன்,
நீள்மதில் "அரங்கத்து அம்மான்"
என திருப்பணாழ்வார் பாசுரத்தை எடுத்து விட்டு, அரங்கநாதனை பார்கையில், முதல்லே, வேங்கடவனும், அடுத்து, அரங்கனும் தெரியறாங்கன்னு சொன்னாங்க.
ஒருவேளே, எழுந்து நின்றால் முழுதும், எழில் பொழில் நிறை மலையான், ஏழுமலையானாய்த் தெரிவானோ!
வேங்கடவன், அவன் அலர்மேல் மங்கை மனாளன், அம்புஜ நாபன்,
தயா கரன், மலைமேல் உறைபவன், பாற்கடல் மேல் துயில்பவன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மன்னன் குலசேகரன் 8ஆம் நூற்றாண்டில், சேர நாட்டு மன்னன். வேங்கடவன் மீதும், அரங்கன் மீதும் அளவிலா அன்பு கொண்டவர். குலசேகரப்பெருமாள் என ஆழ்வார்களில் ஒருவனானவர். 'இராகவனே தாலேலோ', என தாலாட்டுப் பாடல்களை பாடியவர். திவ்யப் பிரபந்தத்தில், இவரது, 105 பாசுரங்களுக்கு, 'பெருமாள் திருமொழி' எனப்பெயர். அவற்றுள், 11 பாசுரங்கள், வேங்கடாசலன் மீது இயற்றப்பட்டவை. அவற்றில் மூன்றினை இங்கே பார்ப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவத்தில், ரஞ்சனி&காயத்ரி அவர்கள் இப்படித் தான் அழகான ஆழ்வார் பாசுரங்களைப் பாடி நம் மனதை உருக்கினர். இங்கே நீங்களும் கேளுங்கள்:

குலசேகரப் பெருமாள் திருமொழி (நாலயிர திவ்யப் பிரபந்தம்)

பி.கு: பாசுர விருத்தம் முடிந்த பின், 'ஸ்ரீநிவாச திருவேங்கட முடையான்...' எனும் பாபநாசம் சிவன் பாடல் தொடங்குகிறது. அப்பாடலை, இன்னொரு சமயம் பார்ப்போம்.

பாசுரம் 1:
இராகம் : ஷண்முகப்பிரியா
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!


பி.கு: இந்தப் பாடலை, அமரர் கல்கி அவர்கள், மிகவும் பொருத்தமாக பொன்னியின் செல்வனின் பயன்படுத்தி இருப்பார். தன்னைப் பார்த்து, பரிகாசம் செய்யும், ஆழ்வார்க்கடியனிடம், பூங்குழலி "மண்ணரசு வேண்டேன்" எனச் சொல்ல, உடனே "ஆகா, நல்ல தீர்மானம் செய்தீர்கள்" எனச் சொல்லி, இந்தப் பாசுரத்தை பாடிக் காட்டுவார், ஆழ்வார்க்கடியான்!

பாசுரம் 2:
இராகம் : மோகனம்
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே.

பாசுரம் 3:
இராகம் : ஹம்சாநந்தி
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

எளிதான இப்பாசுரங்களுக்கு பொருள் சொல்ல வேண்டியிருக்காது. எனினும் இனிதானதை எத்தனை முறை வேண்டுமென்றாலும் படிக்கலாம் அல்லவா. கூடலார் குமரன் பதிவில் படித்து மகிழவும்!

மேலே ரஞ்சனி&காயத்ரி பாடுவது தான் உருக்கம் என்றால், இங்கு அருணா சாய்ராம் அவர்கள் பாடுவதை என்னவென்று சொல்வது? சொல்ல வார்த்தைகள் இல்லை. சே, இந்த பதிவு எழுதறதை விட, 'சும்மா' இருக்கலாம்! விருத்தம் பாடி முடித்தபின்: மீனாய்ப் பிறந்தாலும், படியாய்க் கிடந்தாலும், குலசேகரன் படியாய் உன் பவள வாயை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தாலும் எல்லாமும் ஒன்றுதான் - மீனாய்ப் பிறந்தாலும், படியாய் கிடந்தாலும், குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா...' அடுத்த கிருதியினை தொடங்கிய விதமும் அருமை!

Wednesday, January 07, 2009

மார்கழி : ஆண்டாள் திருக்கல்யாணம்

மார்கழி இல்லாமல் மாதங்களா!

ஆண்டாள் இல்லாத மார்கழியா!

இங்கே ஆண்டாளின் மார்கழியில், ஆண்டவளை, ஆண்டாளை அகமகிழ கேட்டு இரசிப்போமா!

திருமதி. விசாகா ஹரி அவர்கள் ஜெயா டி.வி. மார்கழி மகா உற்சவத்தில் வழங்கிய ஹரிகதையினைப் பார்ப்போமா?
சென்ற முறை, தியாகராஜ இராமாயணம் வழங்கினார். இந்தமுறை அவர் வழங்கும் கோதை நாச்சியார் கதை கேட்டு கோதுகம் (உளக்களிப்பு) கொள்வோமா?

கதை கேளு, கதை கேளு, சுவையான கதை கேளு.
கோதையார் கதை கேளு, காது கொடுத்துக் கதை கேளு.

வழங்குபவர் : விசாகா ஹரி
வயலின் : அனந்தகிருஷ்ணன்
மிருதங்கம் : அர்ஜூன் கணேஷ்

பகுதி 1: (கோதை பிறப்பு)


பகுதி 2: (கோதை விடு தூது)


பகுதி 3 : (திருப்பாவை : மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்நாளால்...)


பகுதி 4 : (சூடிக் கொடுத்த சுடர்க்கொடி)


பகுதி 5 : (திருமண உற்சவம்)


பகுதி 6 : (வழியனுப்புதல்)


கண்களில் நீர் தளும்ப, உருக்கமாய் கதை சொன்ன பாங்கில், நீங்களும் உருகலையோ?
நேரடியாய், நிகழ்சியை பார்த்தவர்களில் சிலர், கண்ணீர் தாரையாய் மல்கிட, மாலனைச் சார்ந்தனரே.

Moral Of the Story? : பக்தி பண்ணி பாடி...

Saturday, January 03, 2009

மார்கழி : ராகம் தானம் பல்லவி

"இராகம்,தானம்,பல்லவி", என்பது நமது பாரம்பரிய இசை வழக்கங்களில் ஒன்று. என்னதான் அது என்று கொஞ்சம் அலசிப் பார்க்கலாமா? இராகம் மற்றும் தானம் பகுதிகளில் பாடல் வரிகள் இருக்காது. பொதுவான ஆலாபனை தான் இருக்கும். இது என்ன 'ததரினஅஆஆஅ..' ன்னு பாடிக்கிட்டு இருக்காங்களேன்னு, முதலில் கேட்பவர்களுக்கு இருப்பவர்களுக்குத் தோன்றும். நானும் அப்படி நினைத்தது உண்டு. ஆனால், நிறையக் கேட்க கேட்க, இந்த இராகம், தானம் பல்லவியில், இராகத்தினை ஆழ்ந்து இரசிக்க லயிக்க இயலும், என்பது புரிகிறது.

RTP - என வழங்கப்படும், "இராகம்,தானம்,பல்லவி" யில்
இராகம் பகுதி :- இராக ஆலாபனை செய்வது போன்றது. ஆனால், சற்றே விரிவாக ஆலாபனை செய்வது. திரு.ஜி.என்.பாலசுப்ரமணியம், இதைச் சிறப்பாகச் செய்து, அதில் முத்திரை பதித்தவர். அவர் RTP பாடுகையில், முதலில் இராகத்தின் சாயலைக் காட்டும் ஆலாபனை, தொடர்ந்து வயலின், பின்னர் நீண்ட, ஆழ்ந்த ஆலாபனை, மீண்டும் வயலின் - எனப் பகுதி பகுதியாக இராகம் பகுதியினை சுவையாகத் தருவார். இப்போதெல்லாம், அதைக் காண்பது அரிது, பாடகர் ஆலாபனையை முழு மூச்சில் முடித்துவிட, வயலினார் ஆலாபனையைத் தொடருவார். இரண்டு அல்லது மூன்று வேகங்களிலும் பாடுவது உண்டு.

தானம் பகுதி :- தாளம் + ஆலாபனை = தானம். தாளத்தோடு சேர்த்த ஆலாபனையான இதை, பொதுவாக மத்தியம காலத்தில் பாடுவார்கள், இந்தப் பகுதியில். இதில் குறிப்பாக 'தா', 'னம்', 'தோம்', 'நொம்' போன்ற சொற்கட்டுக்களால் நிறைந்திருக்கும். பொதுவாக, பாடுபவரும், வயலின் இசைப்பவரும் மாற்றி மாற்றி இசைப்பார்கள். மிருதங்கம் சில சமயங்களில் சேர்ப்பதும் உண்டு.

பல்லவி பகுதி :- இறுதியாக, பல்லவி பகுதியில் தான், பாடலின் வரிகளையும் சேர்த்து பாடப்படும். அதுவும், பொதுவாக ஒரே ஒரு வரிதான் இருக்கும். அந்த ஒரு வரியினையே தங்கள் கற்பனைக்கேற்ப, விரிவாக பலவாறு விரித்துப் பாடுவார்கள். இப்பகுதியினை 'நிரவல்' என அழைப்பர். அதன் பின், பல்லவியை மூன்று முறைப் பாடும், திஸ்ரம் அல்லது திரிகாலம் என்பதைப் பாடுவர். அதன் பின், பல்லவியை, நான்கு முறை பாடுவர். நடையையோ அல்லது தாளத்தையோ வெவ்வேறாக மாற்றி, பல்லவி்யைப் பாடிட, பாடலுக்கு 'வேகம்' சேர்க்கும் அழகினைப் பார்க்கலாம். ஒரு இராகத்தோடு நிற்காமல், பல்லவியை, இராகமாலிகையாகவும் பாடுவர்.

பல்லவி முடிந்தபின், மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் வாசிப்பது வழக்கம்.

பெரும் பாடகர்கள் அனைவரும், தங்களுக்கென ஒரு பாணியைக் கடைப்பிடிப்பதும் வழக்கம். ஜி.என்.பி அவர்களுக்கு, ஆலாபனையில் கவனம் என்றால், அரியக்குடியாரும், செம்மங்குடியாரும் தானம் பகுதியில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். டி.என்.சேஷகோபாலன் அவர்கள் ஒன்றரை மணி நேரம் வரை கூட, ஒரே ராகம் தானம் பல்லவியைப் பாடியிருக்கிறார். அந்த அளவிற்கு, பாடகர் தனது கற்பனைத் திறனை பயன்படுத்தி, விதவிதமான கணக்குகளில் சஞ்சரிக்கும் சங்கதிகளைப் பாடுவதற்கான தளமாக இந்த இராகம்-தானம்-பல்லவி அமைகிறது. இசையின் சுரங்களின் கணக்கில் அமையும் அறிவியலும், அவ்வறிவியலுக்கு அப்பால், அங்கே அது கலையாக பரிமாணிப்பதும், என்ன அழகு, எத்தனை அழகு!

இங்கே, ஒரு இராகம், தானம், பல்லவியினைக் கேட்கலாமா?

இயற்றியவர்: மகா வைத்யநாத சிவன்
பாடுபவர் : செம்பை வைத்யநாத பாகவதர்
இராகம் : தோடி
பல்லவி வரி : உனது பாதம் துணையே, ஓராறு முகனே, உனது பாதம் துணையே!

Ragam Thanam Palla...



(படத்தில் : செம்பை வைத்யநாத பாகவதரும், செம்மங்குடி அவர்களும்; வயலினில் இருப்பது பிடில் சௌதய்யா அவர்கள்)

மேலும், மதுரை மணிஐயர் அவர்கள் பாடிட, பல்லவி பகுதியினை மட்டும் இங்கே கேட்கலாம்:


மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் அவர்கள் பாடிட, இராகம் (தானம்) பல்லவியினை இங்கு கேட்கலாம்:


மேலே எப்படி மூன்று இசை விற்பன்னர்கள், மூன்று விதமாக பாடியுள்ளார்கள் என்பதைக் கேட்கையில், நமது பாரம்பரிய இசையிலும் கற்பனைக்கேற்ப பாடுவதற்கு இடமும், கட்டமைப்பும் இருக்கத்தான் செய்கிறது என்பது தெளிவாகிறது. சமீபத்தில், டி.எம்.கிருஷ்ணா அவர்கள், மியூசிக் அகாடமி அரங்கில் நடைபெற்ற கச்சேரி ஒன்றில், சற்றே மாறுதலாக, ராகம், தானம் முடிந்தபின், பல்லவிக்கு பதிலாக, வர்ணம் பாடி, வர்ணத்தின் வரிகளைக் கொண்டு நிரவல், திரிகாலம் மற்றும் ஸ்வரம் ஆகியவற்றைப் பாடினார். இதுபோல், அவ்வப்போது, பாரம்பரியத்திற்கு இழுக்கு வராமல், அதே சமயம், புதுமைகளையும் படைத்தவாறு வீறுநடை போடும் இசைக் கலைஞர்களைப் பார்க்கையில் வியப்பாகவும், இருக்கிறது!