Saturday, April 16, 2011

கறை கரைந்து காணும் தெய்வம்!

இறைநிலையோடு எண்ணத்தைக் கலக்கவிட்டு
ஏற்படும் ஓரமைதியிலே விழிப்பாய் நிற்க
நிறைநிலையே தானாக உணர்வதாகும்.
நித்தம் நித்தம் உயிருடலில் இயங்கு மட்டும்
உறைந்து உறைந்து இந்நிலையில் பழகிக்கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கறைநீங்கி அறிவு மெய்ப்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு; காணும் தெய்வம்.

- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

வேதாத்திரி மகரிஷி அவர்கள் எவ்வளவு அழகான கவியாய் வடித்திருக்கிறார் பேருண்மையை!

எண்ணம் என்ற மூலம் என்னிடத்தில் இருக்கும் வரை அது எனது எனது என்று என்னையே நினைத்து, என்னைச் சுற்றி வருகிறது.
ஆனால் அதே எண்ணத்தை என்பால் அகற்றி எல்லாமுமான இறையவனை நினைக்கும்போது...
"ஓரு அமைதி" கிட்டுகிறது.
தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்பின் கிட்டும் அவ்வமைதி பேரமைதி.

அந்த அமைதி நிலையில் நிலைத்து நிற்க. "எழுமின், விழிமின்" என நிலையில் விழிப்புடன், வழிமேல் விழி வைத்து நிற்க, தானாக ஏற்படும் நிறைநிலை. மெய்பொருள் யாதென உணந்திடும் தற்செயலும் இறை செயலேயாம்.

ஒருமுறை அந்நிலையை அடைந்து விட்டால், அந்நிலையை அடுத்து பழகப்பழக, காணும் காட்சியும், நுகரும் நாற்றமும், கேட்கும் ஒலியும் என எல்லாவற்றிலும் நந்தலாலா.

பின் எல்லாக் கறைகளும் களைந்தாயிற்று என்றால், தன் முனைப்பு தானாய்க் கரைந்து போகும்.
கண்ணுக்கினியவனை கண்ணாறக் கண்டு கைக்கொளலாம்!