Thursday, July 31, 2008

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ?

ந்த இடுகையில் தமிழிசையின் மும்மூர்த்திகள் என நாம் பெருமையுடன் அழைக்கும் மூவரில் ஒருவர், மாரிமுத்தாப்பிள்ளை அவர்களின் பாடலில் ஒன்று பார்க்கவிருக்கிறோம். 'தமிழ் மூவர்' என்றும் 'தமிழிசை மும்மூர்த்திகள்' என்றும் வழங்கப்படுவோர் :
முத்துத்தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை, அருணாசலக் கவியார் - ஆகியோராவர். இவர்களோடு, பாபவினாசம் முதலியார் அவர்களையும் சேர்த்து 'தமிழிசை நால்வர்' எனவும் வழங்குவதுண்டு.

முத்துத்தாண்டவர் தில்லை சிதம்பரநாதனை ஏராளமான பாடல்களில் பாடி இருக்கிறார். இன்றைக்கும் நம் பாடல்களில் வழங்கி வரும் 'பல்லவி - அனுபல்லவி - சரணம்', என்கிற முறையை முதன்முதனில் தமிழில் இவர் இயற்றிய பாடல்களில் பார்க்கிறபடியால், இவரே 'கிருதி' முறைக்கு முன்னோடி என்பர். குறிப்பிட்ட தாளத்தில் பாடல்களை இசைப்பதும் இவர் காலத்தில், வழக்கில் நிலைத்தது. தமிழிசைத் தலைநகரான 'சீர்காழி' யில் வாழ்ந்தவர் இவர்.

முத்துத்தாண்டவரின் பாடல்களில் நான் கேட்டுச் சுவைத்தவையில் சில:
சேவிக்க வேண்டுமய்யா சிதம்பரம் - ஆந்தோளிகா
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை - மாயாமாளவகௌளை
ஈசனே கோடி சூரிய பிராகசனே - நளினகாந்தி
தரிசித்தளவில் - லதாங்கி

மாரிமுத்தாப்பிள்ளை அவர்களும் தில்லை நடராஜப் பெருமான் மீது பல பாடல்களை இயற்றியுள்ளார். இவரது காலம் 1712 முதல் 1787 வரையாகும். இவரது தில்லைப் பாடல் தொகுதிக்குப் பெயர் 'புலியூர் வெண்பா' ஆகும்.

இவர் இயற்றிய பாடல்களில் சில:
காலைத் தூக்கி நின்றாடும் தெய்வமே - யதுகுல காம்போஜி
இன்னமும் ஒரு தலம் இருக்கும் - சுருட்டி

இந்த இடுகையில் நாம் கேட்கப்போகும் 'இன்னமும் ஒரு தலம்' பாடலில், சிதம்பரத் தலத்தின் பெருமையை எங்கனம் எடுத்துரைக்கிறார் பார்ப்போம். எத்தனைத் தலம் இருந்தாலும், சிவகாமி அன்பில் உறை சிற்சபை வாசனின் தில்லைத் தலத்திற்கு ஈடான தலமுண்டோ என வினா எழுப்பி, அதற்கான விடையும் தருகிறார். வெண்மதியும், தாமரையும், கற்பக மரமும் எப்படித் தனித்துவம் வாய்ந்ததாய் அவனியிலே திகழ்கிறதோ, அப்படியே, புண்டரீகபுரம் எனச்சொல்லப்படும் தில்லைச் சிதம்பரம் என்கிறார்.

விருத்தம்:
கற்பூரமும்....

உப்பும் கற்பூரமும் ஒன்றைப்போல் இருந்தாலும்

ஊரெங்கும் பெரிதாய் கற்பூரம் தனைச் சொல்வாரே...!

அப்படிப்போல அனேகத்தலம் இருந்தாலும், அந்த

அல்லல் வினைத் தொலைக்கும் தில்லைப்பதிக்கு நேரோ...?

எடுப்பு:
இன்னமும் ஒரு தலம் இருக்கும் என்றொருகாலே,

ஏன் மலைக்கிறாய் மனமே?


தொடுப்பு:

சொன்ன சொன்ன தலங்கள் எங்கும் ஓடிக்களைத்து

சோதித்தறிந்தால், இந்த ஆதிசிதம்பரம் போல்

(இன்னமும் ஒரு தலம்...)

முடிப்பு:
விண்ணுலகத்தில் நீ(ள்)நிலமெலாம் கூடினும்

வெண்ணிறமாம் ஒரு தண்மதி முன்னில்லாது

தண்ணுலவிய அல்லித் திரளாய்ப் பூத்தாலும்

ஒருதாமரைக்கு ஒவ்வாது

மண்ணுலகத்தில் உள்ள தருக்கள் அனைத்தும் கூடி

மருவுலவும் கற்பகத் தருவுக்கு இணை வராது

புண்ணிய தலங்கள் பல இருந்தாலும் நடேசன் வாழும்

புண்டரீகபுரம் போல் கண்டுசொல்ல வேறேது?
(இன்னமும் ஒரு தலம்...)


இங்கே இந்தப் பாடலை இசைப்பேரொளி திரு.சஞ்சய் சுப்ரமணியம் பாடிடக் கேட்கலாம்:



அந்த கடைசி இரண்டு வரிகளை சஞ்சய் பாடிட எப்படியெல்லாம் மனம் இளகுகிறது! Hats off Sanjay!
*கண்டுசொல்ல வேறேது?* கண்ணுக்கினியனாய், கண் கண்ட தெய்வமாய் காலைத்தூக்கி ஆடும் கனகசபாபதிக்கு நேர் ஏதுவென நேர்ந்திடும் நம் மனம் நெகிழ்ந்திடுதே இப்பாடல் கேட்டு!

உசாத்துணை:
* திரு. வி. சுப்ரமணியம் - சுருதி இதழ்
* திரு.சேதுராமன் சுப்ரமணியன் - சென்னை ஆன்லைன்

Saturday, July 26, 2008

என் மதியம் நிதிஸ்ரீ சுவேதிகா வாம்!

ஆமாங்க, சொல்லிடறேன், ஆடி முதலாம் நாளில் எங்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
குழந்தைக்கு 'சுவேதிகா' எனப் பெயர் சூட்டியுள்ளோம்.
சுவேதம் என்னும் சொல்லுக்கு, 'வெண்மை', 'தூய்மை' என்பன பொருள். ஒளிரும் வெண்மையான பாதரசம், என்ற பொருளில் திருமந்திரச் செய்யுள் ஒன்றிலும் குறிப்பிருக்கிறது.
திரு'வெண்'காட்டில் உறையும் ஈசன் சுவேதாரண்யேஸ்வரர் பெயரை நினைவூட்டும் வண்ணம் பெயர் அமைந்துள்ளது.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோடு உள்ளநினைவு
ஆயினவே வரம்பெறுவர் ஐயுறவேண்டா ஒன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையார் அவர்தம்மைத் தோயாவாம் தீவினையே
என்னும் திருஞான சம்பந்தர் தேவாரப் பதிகப்பாடல் எம்வாய் மொழிந்து,
எல்லாம் வல்ல ஈசன் கருணையினால் குழந்தையும் எல்லா நிறைகளுடன் பிறந்துள்ளது.

என்னே ஈசன் கருணை, அவனுக்கு எத்துணை நன்றி நவில்வேன்?

ஆடி முதல்நாளில் ஆடிய பாதத்தான்
ஆதி சிதம்பர நாதன் அருளில்
உதித்திட்ட நித்திலம் ஈதென் மதியம்
நிதிஸ்ரீ சுவேதிகா வாம்.

கருணை மழைபொழி வெண்காட்டு ஈசன்
அருணோத யம்போல் சுவேத அருள்பொழிந்து
அன்பனுக்கு ஆடி முதல்நாளில் ஈந்துவந்த
என்செல்வம் வெண்மதி யாம்.

தென்னாடுடைய சிவனே போற்றி!!!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!!
திருச்சிற்றம்பலம்.


தொடர்புடைய இடுகை:
திருவெண்காட்டு தேவாரப் பதிகம்

Wednesday, July 09, 2008

அருள் செய்ய வேண்டும் அய்யா!

ந்த இடுகையில் நாம் பார்க்கப்போகிற பாடலில் ஆசிரியர் மிகவும் இசைப்புலமை வாய்ந்தவர். 72 மேளகர்த்தா இராகங்களிலும் இவர் பாடல்கள் இயற்றியிருக்கிறார் என்பதே இவரது இசைப்புலமையை பறை சாற்றும். நீதிமதி இராகத்தில் இவர் இயற்றிய 'மோகன கர முத்துக்குமரா' பாடல் மிகவும் புகழ் பெற்ற பாடல். முருகன் மீதும், மயிலை கற்பகாம்பாள் மீதும் இவருக்கு அளவு கடந்த பக்தி. அவர்கள் மீது எண்ணற்ற பாடல்களை இயற்றியுள்ளார்.

இப்படிப்பட்ட பெருமைகளைக் கொண்ட இவர் யார்? கோடீஸ்வர ஐயர் (1870-1936), என்பது இவரது பெயர்.
"கவி குஞ்சர பாரதி" என்றொரு பெரும் புலமை வாய்ந்த கவியின் பேரன். "கவிகுஞ்சர தாசன்" என்று தன் தாத்தாவின் பெயரோடு 'தாசன்' என சேர்த்துக் கொண்டார், இவரது சாகித்ய முத்திரைகளில்.

இவரது படைப்புகளின் பட்டியலைப் பார்த்தாலே பிரம்மிப்பாக இருக்கிறது:
* சித்தி விநாயகர் பதிகம்
* சண்முக மாலை
* சுந்தரேஸ்வர பதிகம்
* கயற்கண்ணி பதிற்றுப்பத்து
* மீனாட்சி அந்தாதி

இங்கு பார்க்கப்போகிற பாடலின் இராகம் இரசிகப்பிரியா. 72 மேளகர்த்தா இராகங்களில் கடைசி இராகமாகிய இந்த இராகம், மிகவும் சுவையானது. இது, விறுவிறுப்பான பாடல்களை அமைப்பதற்கு ஏற்ற இராகம். முன்பொருமுறை திரு.சிமுலேஷன் அவர்கள் இந்த இராகத்தைப்பற்றி எழுதி இருந்தார். இதோ அதன் சுட்டி. இரசிகப்பிரியாவில் எனக்குப் பிடித்த இன்னொரு பாடல் சித்ரவீணை இரவிகிரண் அவர்கள் இயற்றிய 'இரசிகப்பிரிய, இராக இரசிகப்பிரியே!. அந்தப்பாடலை இங்கு கேட்கலாம். அந்தப் பாடல் போலவே, இந்த இடுகையில் நாம் பார்க்கப்போகும் இந்தப் பாடல் வரியிலும் இராகத்தின் பெயரும் இடம்பெற்று இருப்பது, தற்செயலோ, தவச்செயலோ!

இராகம்: இரசிகப்பிரியா
(72வது மேளம்)
இயற்றியவர் : கோடீஸ்வர ஐயர்
பாடுபவர் : டி.எம்.கிருஷ்ணா

எடுப்பு
அருள் செய்ய வேண்டும் அய்யா - அரசே முருகய்யா
அருள் செய்ய வேண்டும் அய்யா!

தொடுப்பு
மருளுரவே என்னை மயக்கிடும்
மாய வல் இருள் அறவே ஞான
சூரியன் என வந்தோர் சொல்
அருள் செய்ய வேண்டும் அய்யா!

முடிப்பு
நிலையா காயம் இலையே இதனை
நிலையென்று
எண்ணுவதென்ன மாயம்?
நிலையென்று உனையே
நினைந்து நான் உய்ய

நேச கவி குஞ்சரதாச ரசிகப்பிரியா
அருள் செய்ய வேண்டும் அய்யா!

arulseyya_vEndum_i...


பாடலைக் கேட்டீர்களா, எப்படி விறுவிறுப்பாக அமைந்துள்ளதல்லவா!. பாடல் வரிகளில் நான் வியந்தது என்னவென்றால், பல சொற்கள், மிகச்சிரிய சொற்கள் - மருள் உர, இருள் அற, மாய, வல், ஞான, நேச, கவி என இப்படியாக!
விறுவிறுப்பில், அருணகிரியாரை அல்லவா நினைவு படுத்துகிறது!

இவ்வளவு எளிய பாட்டில் எவ்வளவு உயர்ந்த தத்துவமும் அடங்கி இருக்கு! இப்பாடலில், முருகனின் அழகைப்பற்றிப் பாடவில்லை. அவன் அணிந்திருக்கும் வேல், மயில் அல்லது சேவல் பற்றிக் குறிப்பில்லை. அவன் சிவன் சுதன் என்றோ அவனே சிவனே எனவோ சொல்லவில்லை. அவன் முகுந்தன் மருகன் எனச் சொல்லவில்லை. வேறு எதைப்பற்றித்தான் இருக்கு? எதைப்பற்ற வேண்டும் என்றிருக்கு! எதைப்பற்ற வேண்டும்? நிலையானதைப் பற்ற வேண்டும். நிலையிலா உடலைப்பற்றி என்ன பயன்? மிஞ்சுவது மாயை தரும் மருள் மட்டுமே. தொடக்கமில்லா மாயை, இங்கே இப்போதே முடிவு பெற, முடிவில்லா, நிலையான, முருகனை நினைக்க, அதுவே துன்பங்களில் இருந்து மீள்வதற்கான வழி. உன்னைப் பற்றிட அருள் செய்ய வேண்டும் முருகய்யா!

ஓவியரும் இசைக்கலைஞருமான திரு.S.ராஜம் அவர்கள் கோடீஸ்வர ஐயர் கீர்த்தனைகளை தொகுத்து புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள் என்பது கேள்வி. இதுபோன்ற தமிழ் கீர்த்தனைகளை மக்களிடையே பரவிடச் செய்திடல் வேண்டும். இசைக் கலைஞர்களும் தங்களின் கச்சேரிகளில் நிறைய தமிழ் கீர்த்தனைகளைக் கொடுத்து, தமிழிசையை வளர்க்க வேண்டும்.

பி.கு: இந்தப் பாடலை இன்னும் சில பாடகர்கள் பாடிக் கேட்கையில், பாடல் வரிகளில் சற்றே மாற்றம் இருப்பதாகத் தெரிகிறது. நீங்களும் சற்றே மாற்றத்துடன் இந்தப் பாடலைக் கேட்டிருக்கலாம்!

உசாத்துணை:
* கர்நாடிகா.நெட்
* வித்வன்.காம்

Thursday, July 03, 2008

நரேந்திரனின் பயிற்சிக் களம் - 2

இராமகிருஷ்ண ஆசரமத்தில் ஏனைய சீடர்களுள் ஒருவராக நரேந்திரனும், பத்தோடு பதினொன்றாக இருந்தாலும், அவர்களிடையே குன்றிலிட்ட விளக்கு போல ஒளி வீசித் திகழ்ந்தார் எனவே சொல்ல வேண்டும். நரேந்திரனின் பயிற்சிக் களத்தில் நடந்த சம்பவங்கள் சிலவற்றை முன்பொரு இடுகையொன்றில் பார்த்தோம். சுவாமி விவேகானந்தரின் நினைவு நாளான இந்த ஜூலை நான்கில், நரேந்திரனாய் இருந்தபோது நிகழ்ந்த முக்கியமானதொரு சம்பவத்தினையும், இன்னும் சிலவற்றையும் இங்கு பார்ப்போம்.

அப்போதெல்லாம், உருவ வழிபாட்டில் அவ்வளவு நம்பிக்கை இல்லாதவராக இருந்தார் நரேந்திரன். ஆனால் கடவுளை அவரால் முழுதுமாக மறுக்கவும் இயலவில்லை - அதற்கு காரணம் சிறுவயது முதலே அவருக்கு ஏற்பட்ட கடவுள் சம்பந்தப்பட்ட கனவுகளும், தன் குருவுடன் அவர் கண்ட காட்சிகளும்தான். இவையெல்லாம் உண்மையா என்கிற ஆர்வத்தினால்தானே, இராமகிருஷ்ண ஆசரமத்தில் ஒரு சீடராக பயில்கிறார். அந்த முயற்சியை அவ்வளவு எளிதாக விட்டுவிடவும் விரும்பவில்லை. நாளுக்கு நாள் எப்படியாவது கடவுள் இருக்கிறாரா என்று அறிந்து கொள்வதில் திடமாகிக் கொண்டிருந்தார். இறுதியில் ஒருநாள் அந்த சம்பவம் இப்படியாக நிகழ வேண்டும் என்றிருந்தது:

அன்றொருநாள், காலையில் வேலைதேடி வீட்டை விட்டுப் புறப்பட்டதுதான். அவர் வேலைதேடிச் சென்ற இடங்களில் எங்கும் அவரைப் பற்றி சரியானதொரு கருத்தில்லை. இருந்தால்தானே வேலை தருவார்கள்? அன்று நல்ல மழை வேறு. அன்று முழுதும் உணவும் இல்லை. மிகுந்த அலைச்சலுக்குப்பின், அந்த மாலை நேரத்தில் சற்றே ஓய்வுக்காக ஒரு வீட்டின் முன்னே திண்ணைப்புறமாக அமருகிறார். கண்களெல்லாம் இருட்டிக்கொண்டு வருகிறது அவருக்கு. ஏதேதோ எண்ணங்கள் வரலாயின, சுயக்கட்டுப்பாடின்றி. திடீரென, நம்ப இயலாத காட்சி ஒன்றையும் காணலானார், ஒவ்வொரு திரையாக விலகுவதுபோல. அவரது ஆன்மாவைச் சுற்றிலும் இருக்கும் ஒவ்வொரு திரையும் விலகி விலகி, இறுதியில் இறைவனின் கருணையையும் சத்தியத்தையும் காண்கிறார்.
கருணையான இறைவனின் படைப்பினிலும் துன்பம் இருக்கத்தான் செய்கிறது. எவ்வளவுதான் துன்பம் இருந்தாலும், இறைவனைக் கண்டறியும் இயல்பு மட்டும் இம்மியளவும் சிதையாமல் இருக்கிறது!
என்று வியந்தாராம் இந்த நிகழ்வைப் பற்றி பின்னர் விவரிக்கையில். இந்த நிகழ்விற்குப்பின், எல்லாவற்றையும் உணர்ந்தவராக அமைதி அடைந்தார். இந்த நிகழ்வு, கிட்டத்தட்ட ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம். மற்றவர்கள் என்ன சொன்னாலும், துறவே தனக்கான பாதை என்பதில் திடமானார். அமைதியும், சுதந்திரமும் அவரை வசீகரித்ததைக் காண முடிந்தது. இராமகிருஷ்ணர் இப்போதெல்லாம் கொல்கத்தாவிற்கு தினமும் வருகிறாராம், அவரது ஆசியினைப் பெற்று, துறவறத்தினை மேற்கொள்ள வேண்டியதுதான் என முடிவு செய்தார்.

அதுபோலவே, இராமகிருஷ்ணருடன் தக்ஷினேஸ்வரம் திரும்பினார் நரேன். ஆசரமத்தில், அன்றொருநாள், இராமகிருஷ்ணர், பாடலும், ஆடலுமாய் ஆனந்தக் களிப்பில் மூழ்கி இருக்கிறார். கண்கள் முழுதும் கண்ணீர். பாடல் வரிகளோ, நரேந்திரனின் மனதை அப்படியே படம் பிடித்துக் காட்டுவதுபோல இருந்ததாம். மற்ற சீடர்கள், இராமகிருஷ்ணரை அணுகி, அவரது துயரத்திற்கான காரணம் என்னவென்று வினவினர். சட்டென்று இராமகிருஷ்ணரோ, 'ஒன்றும் கவலைப்பட வேண்டாம். இது எனக்கும் நரேந்திரனுக்கும் இடையிலானது, மற்றவர்களுக்கு அல்ல' என்றாராம்! பின்னர் அன்றிரவு, நரேந்திரனை தனியாக அழைத்து, 'எனக்குத் தெரியும் நீ அன்னையின் கைங்கர்யத்திற்காகவே பிறந்தவன் என்று. நீ துறவியாவாய் என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், நான் இந்த உலகத்தில் இருக்கும் வரையாவது நீயும் இந்த உலகத்தில் இருக்க வேண்டும்.' எனக் கேட்டுக் கொண்டாராம், மீண்டும் கண்ணீரோடு!.

சீக்கிரமே, ஒரு தற்காலிக வேலையும் கிடைத்திட, வீட்டுத்தேவைகளை கொஞ்சமாவது நிறைவேற்ற இயன்றது நரேந்திரனால். இருந்தாலும் வறுமை வலியதல்லவா?. ஒருநாள் நரேந்திரனுக்கு தோன்றியது - நம் குருநாதரின் பிரார்த்தனைகளை காளி தேவியோ கேட்டுக்கொண்டிருக்கிறாள். நம் குருநாதர் ஏன் நமக்காக பிரார்த்தனை செய்து, நமது வருமையை போக்கக்கூடாது? - என்று. இந்த எண்ணத்தினை நரேன் இராமகிருஷ்ணரிடம் சொல்ல, அதற்கவர், நீ ஏன் காளிமாதாவை நேரடியாக கேட்கக்கூடாது? என்று திருப்பிவிட்டார்!. அது போதாதென்று, 'நீ காளியன்னையை ஜகன்மாதாவாக கொள்ளாததால்தான் இப்படியெல்லாம்" என்றுவேறு சொல்லி வைத்தார். தொடர்ந்து, 'இன்று செவ்வாய்கிழமை. அன்னைக்கு உகந்த நாள். அவள் கோயிலுக்குச் சென்று, அவள் உருவமுன் மண்டியிடு. அங்கு உனக்கு என்ன வேண்டுமோ, அதை தயங்காமல் கேள்; அது நிறைவேறும்' என்றாரே பார்க்கலாம்.

அன்றிரவு, ஒன்பது மணிக்கு, காளி கோயிலை அடைகிறார் நரேந்திரநாத். கோயிலின் முன் பகுதியில் நுழையும்பொழுதே, அவரது இதயம் துள்ளிக் குதித்தது - இன்றேயாவது காளியின் தரிசனம் கிடைக்குமோ என்ற ஆவலில். உள்ளே சென்று அன்னையின் திருவுருவின்மேல் கண் பதிக்கிறார். அங்கு அவர் கண்ணில் தெரிந்து கற்சிலையாக இல்லை. சாட்சாத் காளி தேவியே இருப்பதுபோலவே உணர்கிறார்; வேண்டும் வரத்தினை அளித்திடத் தயாராக - அது மகிழ்ச்சியான இல்லற வாழ்வாகவோ அல்லது ஆனந்தமயமான ஆன்மீக வாழ்வோ - எதுவாக இருப்பினும். இதைப்பார்த்து ஆகா, எனப் பரவசப்பட்ட நரேன், அன்னையிடம் கேட்டது - ஞானமும், பகுத்தறிவும், அன்னையின் இடையுறா தரிசனமும் மட்டுமே; பத்தும் செய்யும் பணத்தைப்பற்றி ஏதும் கேட்க மறந்து விட்டார் போலும். அங்கிருந்து ஆசரமத்தில் குருவின் அறைக்குத் திரும்பினார். குருவும், விடாது, 'என்னப்பா, பணத்தைப் பற்றிக்கேட்டாயா அன்னையிடம்?' என வினவ, இவர், 'அதை மறந்து விட்டேனே' என்கிறார். அதற்கு அவர், 'சரி அடுத்த முறை சென்று, மறக்காமல் கேள்' என்கிறார். நரேனோ, அடுத்தமுறையும் மறந்து விடுகிறார். இப்படியாக மூன்று முறைகளாக இந்த 'விளையாடல்' தொடர, நரேனுக்கு திடீரெனத் தோன்றுகிறது, ஒருவேளை, காளியைப்பார்த்த உடன், பொருள் கேட்காமல் மறந்து போவதும், தன் குரு இராமகிருஷ்ணரின் செயல்தானோ என்று - உலகியல் பொருட்களின் மீதான பற்றைப் போக்கத்தான் இப்படி செய்கிறாரோ என்று. பின்னர் இராமகிருஷ்ணரிடம் வந்து, 'ஐயா, பொருள் என் குடும்பத்தினைக் காப்பாற்றவே தேவைப்படுகிறது, நீங்கள் அவர்களுக்காவது ஏதாவது செய்ய வேண்டும்' எனக்கேட்டார்!. குருவும், 'நரேந்திரா, உலக வாழ்வை எல்லோரும் போல வாழ உனக்கு விதிக்கப்படவில்லை' என்று சொல்லி, 'உன் குடும்பத்திற்கு எளியதொரு வாழ்க்கை கிடைக்கும்' என உறுதி அளித்தார்.

மேற்சொன்ன சம்பவம் நரேந்திரனின் மனதில் பெரியதொரு தாக்கத்தினை ஏற்படுத்தியது எனலாம். அது அவரது ஆன்மீகப் புரிதலை வளப்படுத்தியது. கடவுள் எவ்வாறு இந்த உலகத்தின் நிகழ்வுகளில் தலைப்படுகிறார் என்பது பற்றிய புதியதொரு புரிதலை அவருக்கு கற்பித்தது. இதுகாறும் அவர் கடவுள் என்பவர் தன்னைச்சாரா வெளிப்பொருள் எனவும், மேல் உலகத்தில் இருந்து கொண்டு, இந்த உலகத்தைப் படைத்தவராகவோ மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தார். இப்போதோ,
* கடவுளின் தலைப்படுதல் எல்லாப் பொருட்களின் ஆக்கத்திலும் இருப்பதையும்,
* அண்ட சராசரங்களிலும், அதிலுள்ள அனைத்திலும் விரிந்து பரந்திருப்பவர் என்பதையும்,
* ஒவ்வொரு பொருளின் உயிரிலும், பேரறிவிலும்(Consciousness) உட்புகுந்திருக்கிறார் என்பதையும்,
* உருவங்களில் வெளிப்பட்டும், மற்றவற்றில் வெளிப்படாமலும் இருக்கிறார் என்பதையும் உணர்கிறார்.

இப்படி, எல்லாவற்றிலும் வியாபித்திருக்கும் 'உலக ஆத்மா'வினை - கடவுள் என்னும் 'நபர்' ஆகப் பார்க்கையில் - அதுதான் இஷ்ட தெய்வம் (அ) இஷ்ட தேவதை எனப்படும் Personal God. வெவ்வேறு மதங்கள், அந்த நபரை வெவ்வேறு உறவுப் பெயர் கொண்டும் பார்க்கின்றன - தந்தையாக, தாயாக, அரசனாக, அன்புக்குரிய காதலனாக - இப்படியெல்லாம். இந்த உறவு முறைகள் ஒவ்வொன்றும் ஒரு குறியீடுகளைக் கொண்டிருப்பதாகவும் - அன்னை காளியும் அவற்றில் ஒன்று என்கிற புரிதலுக்கு வருகிறார்.

கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளாக, குரு இராமகிருஷ்ணரின் அருகாமையில் இப்படியாக, நரேந்திரனின் ஆன்மீக வாழ்க்கை அச்சில் வார்க்கப்பட்டு வந்தது! எல்லா வகையிலும் இராமகிருஷ்ணர், ஒரு அற்புதமான குருவாக அமைந்திருந்தார் என்பதில் ஐயமில்லை.

(இன்னும் வளரலாம்...)

உசாத்துணை : சுவாமி விவேகானந்தர் வாழ்க்கைக் குறிப்புகள் - சுவாமி நிகிலானந்தர்