Friday, August 29, 2008

மகாகவி காட்டும் மரணத்தை வெல்லும் வழி


இடம் : புதுச்சேரி
பாரதியும், குவளைக்கண்ணன் சுவாமிகளும் உரையாடுகிறார்கள்:

பாரதி : கண்ணா, ஆழ்வார்கள் எத்தனை பேர்?
குவளையார் : பன்னிரெண்டு பேர்
பாரதி : ஆழ்வார்கள் பாடிய பாடல்கள் எத்தனை?
குவளையார் : நாலாயிரம்
பாரதி : அப்படியா, அவர்கள் பன்னிரெண்டு பேர், நாலாயிரம் பாடினார்கள்.
நான் ஒருவனே ஆறாயிரம் பாடுகிறேன் பார்!

பாரதியின் மனோதிடத்தை என்னென்று சொல்வது. இப்புவியின் மீதேறி, அதன் நடுவில் ஒரு சிம்மாசனம் வைத்து, அதன் மீது அமர்ந்தவனாயிற்றே. என்ன, அவ்வாறு அவனால் நெடுநேரம் அமர முடிவதில்லை. அவனியிலே மாந்தர் படும் அல்லல் கண்டு ஓடோடி வந்து விடுகிறான். இங்கே, நாலாயிரம் போல், நானொரு ஆறாயிரம் படைப்பேன், நான் ஆறாயிரம் படைத்தால், அந்த ஆழ்வார்கள் படைத்த நாலாயிரம் போல வரும் என நினைத்தானோ!



ஆறாயிரம் பாடுகிறேன் பார் - இப்படிச் சொல்லி முடித்த உடனேயே ஆறாயிரம் பாடும் சங்கற்பத்தினை மேற்கொண்டார். அன்றே பாரதியார் மௌன விரதத்தினைத் துவங்கினார். நாற்பது நாளாக தொடர்ந்தது. எப்போதும் ஏதாவது பாடிக்கொண்டும், பேசிக்கொண்டும் இருக்கும் பாரதி, மௌனத்தில் இருந்தார்!. மாங்கொட்டைசாமி மற்றும் குள்ளச்சாமி எனுப்படும் சித்தர் - அவரையே பாரதி - தன் மோனகுரு என்கிறார். அதோடு கோவிந்தசாமி மற்றும் யாழ்ப்பாணத்துச்சாமி ஆகியோரின் தாக்கமும் இருந்திருக்கிறது. இவர்கள் மூவரின் நேரடித் சந்திப்புகளும், அரவிந்தரின் அருகாமையும், புதுவையில் பாரதியின் சுதந்திர வேட்கையைத் தணித்து, ஆன்ம தாகத்திற்கு உரமூட்டின.
தேசத்தார் இவன்பெயரைக் குள்ளச்சாமி
தேவர்பிரான் என்றுரைப்பார்;தெளிந்த ஞானி
பாசத்தை அறுத்துவிட்டான்,பயத்தைச் சுட்டான்;
பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்;
நாசத்தை அழித்துவிட்டான்;யமனைக் கொன்றான்;
ஞானகங்கை தனைமுடிமீதேந்தி நின்றான்;
ஆசையெனும் கொடிக்கொருதாழ் மரமே போன்றான்,
ஆதியவன் சுடர்பாதம் புகழ்கின் றேனே. (19)
என குள்ளச்சாமியைப் புகழ்கிறார் பாரதி. இதேபோல், கோவிந்தசாமியையும், யாழ்ப்பாணத்து சாமியையும் புகழந்து பாவிசைக்கிறார் இந்தப் பகுதியில்.

மௌனவிரதம் முடித்து, ஆறாயிரம் எழுதத் துவங்குகிறார். ஆனால், அந்தோ, அது அறுபத்தாறோடு நின்றுவிடுகிறது. இதற்கு காரணம் தன் ஆத்ம சக்தியினை வைத்து, விடுதலை பெற்றுத்தருகிறேன் பார், என்கிற வீராவேசமாக புதுவையை விட்டுக் கிளம்பியதாக இருக்கலாம். எனினும் அந்த 66 பாடல்களில் நமக்குத் தரும் அருஞ்செய்திகளில் இருந்து சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறேன்.

'எனக்கு முன்னே பல சித்தர்கள் இருந்தனர், யானும் வந்தேன் - ஒரு சித்தன் இந்நாட்டில்' என்று தன்னையும் ஒரு சித்தனாக அறிமுகப்படுத்திக் கொண்டு துவங்குகிறார். கடவுள் வாழ்த்தாக, பாராசக்தியைத் துதிக்கிறார். அடுத்ததாக,

மரணத்தை வெல்லும் வழி என்னும் தலைப்பிட்டுச் சொல்கிறார்:
பொன்னார்ந்த திருவடியைப் போற்றி யிங்கு
புகலுவேன் யானறியும் உண்மை யெல்லாம்:
முன்னோர்கள் எவ்வுயிரும் கடவுள் என்றார்,
முடிவாக அவ்வுரையை நான்மேற் கொண்டேன்;
அன்னோர்கள் உரத்ததன்றிச் செய்கையில்லை
அத்வைத நிலைகண்டால் மரணமுண்டோ? (4)
பொன்னான திருவடிகளே சரணம் எனப் போற்றியபின், அறிவேன் இந்த உண்மையெல்லாம்,
எந்த உண்மையெல்லாம்?
என் முன்னோர்கள் 'எவ்வுயிரும் கடவுள்' என்றதை.

கடவுள் எங்கே இருக்கிறார்? என்கிற தலைப்பிட்டு,
சொல்லடா! ஹரியென்ற கடவுள் எங்கே?
சொல்'' லென்று இரணியந்தான் உறுமிக் கேட்க,
நல்லதொரு மகன் சொல்வான்:-'தூணி லுள்ளான்
நாரா யணந்துரும்பி லுள்ளான்'என்றான்.
வல்லபெருங் கடவுளிலா அணுவொன் றில்லை.
மஹாசக்தி யில்லாத வஸ்து வில்லை;
அல்லலில்லை அல்லலில்லை அல்லலில்லை;
அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ ? (15)
என்கிறார்.
தொடர்ந்து அடுத்தா பாட்டில் தெள்ளத் தெளிவான விளக்கம் சொல்வார்:
...
கூடி நின்ற பொருளனைத்தின் கூட்டம் தெய்வம்.
மீளத்தான் இதைத் தெளிவா விரித்துச் சொல்வேன்;
விண்மட்டும் கடவுளன்று மண்ணும் அஃதே. (16)
அடுத்ததாக அச்சம், ஆசை, கோபம் ஆகியவை அசுர குணங்கள். மரணமில்லா பெருவாழ்விற்கு இவை மூன்றும் விலக்கல் வேண்டும் என்கிறார்.

அடுத்து,
...
விடமுண்டுஞ் சாகாம லிருக்கக் கற்றால்,

வேறெதுதான் யாதாயின் எமக்கிங் கென்னே?
திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! (10)

நஞ்சுண்டும் சாகமல் இருப்பது கற்றால், வேறென்ன வேண்டும்?
நெஞ்சில் உரமும், நேர்மைத்திறனும் கொண்டு தேம்பாமல், அஞ்சாமல் வாழ்வோம் புவியினிலே.

அடுத்ததாக 'பொறுமையின் பெருமை' என்கிற பகுதியில் இடம் பெற்றுள்ள நான்கு பாடல்களில் ஒன்று,
தணிகைமலை உறையும் வேலனை பொறுமையின் பெருமையெனச் சொல்கிறார்:

திருத்தணிகை மலைமேலே குமார தேவன்
திருக்கொலுவீற்றிருக்கும் அதன் பொருளைக் கேளீர்!
திருத்தணிகை என்பதிங்கு பொறுமை யின்பேர்.
செந்தமிழ்கண்டீர், பகுதி'தணி'யெனுஞ்சொல்,
பொறுத்தமுறுந் தணிகையினால் புலமை சேரும்,
'பொறுத்தவரே பூமியினை ஆள்வார்'என்னும்
அருத்தமிக்க பழமொழியும் தமிழி லுண்டாம்.
அவனியிலே பொறையுடையான் அவனே தேவன்! (11)
பின்னர் 27ஆம் பாடல் முதல் 36ஆம் பாடல் வரை உபதேசம் எனத்தலைப்பிட்டு பத்து பாடல்கள் எழுதி இருக்கிறார். இவையெல்லாம் சித்தர் பாடல்கள் போல் இருப்பன.
...
வாசியை நீ கும்பகத்தால் வலியக்கட்டி
மண்போல, சுவர்போல வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றி னுள்ளே
தெரிவதுபோல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதிற் பயனில்லை; அனுபவதாற்
பேரின்ப மெய்துவதே ஞான மென்றான் (28)
வாசி : மூச்சு; கும்பகம் : மூச்சை அடக்கியாளும் யோகமுறை
கிணற்றில் ஆழத்தில் பிம்பமாய் ஆதவன் தெரிவதுபோலே, ஈசனை, உன் ஆன்மாவில் சச்சிதானந்தத்தின் பிம்பமதைக் காணத்தெளிவாய். இதைப்பேசிப் பயனில்லை. உன்னால் உன்னில் உணர்ந்தால் மட்டுமே அது ஞானம்.

பாரதி அறுபத்தாறு - முழுமைக்கும் இங்கே பார்க்கவும்.

சுத்த அறிவே சிவம் என்று பறைசாற்றும் பாரதி, எல்லா உயிர்களிலும், எல்லா திடப்பெருள்களிலும் இருப்பது இறைவன் என அறுதியிட்டுக் கூறுகிறார். மேலே பாரதி சொல்லும் அசுர குணங்களை அழித்து அச்சம் ஒழித்து, பொறுமையுடன் அந்த இறைவனை, பார்க்கும் இடத்திலெல்லாம் நந்தலாலாவின் வண்ணத்தில் பார்க்கத் தெரிந்தவரே, மரணத்தை வெல்வார் என்பது திண்ணமன்றோ!

மரணத்தை வெல்லும் வழி சொன்ன பாரதி ஏன் மாண்டான் என்போர் சிலர். மாண்டதெல்லாம் மரணமில்லை மதியிலிகாள், மரணத்தை வென்ற பின்னே, மரணம் வருமோ பின்னே? காலனைக் காலால் மிதித்தவனுக்கு ஏது மரணம்? ஸ்தூல உடலில், பரமனைப்பார்த்த பின்னே, இந்த உடலும் ஒரு பொருட்டோ, என அதனைத் துய்த்த பாரதி, அமரன். பாரலுகில் இவனைப்போல் இன்னொருவன் இருந்ததில்லை, இனி இருக்கப்போவதும் இல்லை.

18 comments:

  1. தங்களின் வலைப்பதிவை முதன்முறையாகப் பார்வையிடுகிறேன். மிகவும் அருமை. அரிய செய்திகளை வழங்கியிருக்கிறீர்கள். இனி தொடர்ந்து பார்ப்பேன்.. படிப்பேன்.

    ReplyDelete
  2. வருக திரு.சுப.நற்குணன்,
    தங்கள் பாராட்டுக்கு நன்றிகள். தொடர்ந்து வரவும்.

    ReplyDelete
  3. //அவர்கள் பன்னிரெண்டு பேர், நாலாயிரம் பாடினார்கள்//

    நானும் ஒரு சித்தன் வந்தேன் என்றார் இன்னோர் இடத்தில். இங்கே 'நானும் ஒரு ஆழ்வார்' என்கிறாரோ? சரி தான். கண்ணன் பாட்டு எழுதிய இவர் ஆழ்வார் இல்லையென்றால் வேறு யார் ஆழ்வார் ஆகமுடியும்?

    ஓ. இந்த இடத்தில் தான் தன்னையும் ஒரு சித்தன் என்று சொல்லிக் கொண்டாரோ. பாரதி அறுபத்தியாறு எனக்கு மிகவும் பிடித்த பகுதி ஜீவா. முன்பெல்லாம் அடிக்கடி அதனை வாசித்துக் கொண்டு இருப்பேன். இப்போது பாரதியிலிருந்து கொஞ்சம் விலகி சங்க காலத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். :-)

    ReplyDelete
  4. //நானும் ஒரு சித்தன் வந்தேன் என்றார் இன்னோர் இடத்தில். இங்கே 'நானும் ஒரு ஆழ்வார்' என்கிறாரோ? சரி தான்//

    விஷ்ணு 'சித்தன்' என்ற சித்தனும் ஆழ்வார் தானே குமரன்!
    ஆக பாரதி சித்தனும் ஆழ்வானுமே ஆவான்!

    ReplyDelete
  5. //மௌனவிரதம் முடித்து, ஆறாயிரம் எழுதத் துவங்குகிறார். ஆனால், அந்தோ, அது அறுபத்தாறோடு நின்றுவிடுகிறது. இதற்கு காரணம் தன் ஆத்ம சக்தியினை வைத்து, விடுதலை பெற்றுத்தருகிறேன் பார், என்கிற வீராவேசமாக//

    அப்படி இருக்காது ஜீவா!
    பாரதி வரகவி!

    நாலாயிரத்தின் சாரத்தை, எதற்கு இன்னும் விரித்து ஆறாயிரம் ஆக்க வேண்டும்?
    சாரம் என்றாலே எண்ணிக்கை குறைவு, வீரியம் அதிகம் அல்லவா? அதான் அறுபத்தாறு போதும் என்பது இறைவன் திருவுள்ளம் போலும்!

    முப்பதே பாட்டை வேதம் அனைத்துக்கும் 'வித்தாகும்' கோதைத்தமிழ் என்று சொல்லவில்லையா? அதே போல் தான் வீர்யமுள்ள சாரம் அறுபத்தாறு!

    ReplyDelete
  6. வாங்க குமரன்,
    //வேறு யார் ஆழ்வார் ஆகமுடியும்? //
    :-)
    பாரதி ஆழ்வானும் தான், ஆள்வானும் தான்!. கண்ணனை எல்லாவற்றிலும், எல்லாருமாய்ப் பார்த்ததில், வேதாந்தியும் கூட. புதுவையில் சித்தர் கூட்டத்தில் குட்டிச்சுவர்களுடன் சுவராக நின்று, முழங்காலை மடக்கி, மௌனம் எனும் அருந்தவத்தில் அகத்தை உருக்கி சித்தனுமாய்ப் போனான். (போனான் - போயே சேர்ந்தான்) தனக்குமுன் சென்ற தவப்புதல்வர்கள் - தாயுமானவர் போல், வள்ளலார்போல் - தான் கண்ட பேரின்பப் பெருங்களிப்பை எளிய பாக்களாய் குறித்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான்!

    ReplyDelete
  7. வாங்க கே.ஆர்.எஸ்,
    //அதான் அறுபத்தாறு போதும் என்பது இறைவன் திருவுள்ளம் போலும்!//
    நல்லது, வீரியமுள்ளதுதான்.

    ReplyDelete
  8. பாட்டுக்கொரு புலவனைப் பற்றி அழகாக எழுதியிருக்கிறீர்கள். பாரதியைப் படித்தாலே பிறக்கும் எழுச்சி. அவன் தமிழைக் கேட்டாலே வளரும் மகிழ்ச்சி! நன்றி ஜீவா.

    ReplyDelete
  9. வாங்க கவிநயா,
    தங்கள் வருகையும் மகிழ்ச்சி!

    ReplyDelete
  10. பாட்டுக்கொரு புலவனைப் பற்றி நல்லதொரு பதிவு.
    பாரதியை நினைத்தாலே, அவர் சம்பந்தப்பட்ட ஒரு புகைப்படம் என் நினைவுக்கு வரும்.

    பாரதி, தன் மனைவியை ஒரு நாற்காலியில் அமர வைத்து, பக்கத்தில் தான் நின்று கொண்டு இருக்கிறமாதிரியான புகைப்படம்!
    "பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா" என்று சொன்னவன், வெறும் சொல்லளவில் இல்லாமல், பெண்ணினத்திற்கு அவ்வளவு மரியாதையும் மதிப்பும் கொடுத்திருக்கிறான். '

    பாரதி வாழ்ந்த காலத்தில், சாத்தியபடாததையெல்லாம் சாத்திய மாக்கியிருக்கிறான், அந்த மஹாகவி!
    கல்லிடைக்குறிச்சித் தெருக்களில், தன் காதல் மனைவியை கரம் பிடித்து அழைத்துச் சென்று,'ஆகாத செயலைச் செய்து விட்டமாதிரி' தூற்றப்பட்டிருக்கிறான்...

    ஹூம்!.. பாரதி ஒரு சகாப்தம்!
    வாழ்க, அவன் நினைவுகள்!

    ReplyDelete
  11. வாங்க திரு.ஜீவி,
    //சாத்தியபடாததையெல்லாம் சாத்திய மாக்கியிருக்கிறான்//
    அழகாகச் சொன்னீர்கள்.
    காலத்தை மீறி வாழ்ந்துபோன கவி மட்டுமல்ல, ஆன்மயோகியும் கூட!

    ReplyDelete
  12. //திடங்கொண்டு வாழ்ந்திடுவோம்,தேம்பல் வேண்டா;
    தேம்புவதில் பயனில்லை,தேம்பித் தேம்பி
    இடருற்று மடிந்தவர்கள் கோடி கோடி
    எதற்குமினி அஞ்சாதீர் புவியி லுள்ளீர்! (10)//

    பாரதி நினைவு நாள் நெருங்கும் சமயம் நல்லதொரு அஞ்சலி. நினைவில் வைக்க வேண்டிய வரிகள்.

    ReplyDelete
  13. வாங்க கீதாம்மா,
    //நினைவில் வைக்க வேண்டிய வரிகள்.//
    நிச்சயமாக.

    ReplyDelete
  14. நல்ல கட்டுரை...

    //மாண்டதெல்லாம் மரணமில்லை மதியிலிகாள், மரணத்தை வென்ற பின்னே, மரணம் வருமோ பின்னே? காலனைக் காலால் மிதித்தவனுக்கு ஏது மரணம்? ஸ்தூல உடலில், பரமனைப்பார்த்த பின்னே, இந்த உடலும் ஒரு பொருட்டோ, என அதனைத் துய்த்த பாரதி, அமரன்//

    மிகச்சரி. நல்லாயிருக்கு ஜீவா சார் :)

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி மௌலி சார்!

    ReplyDelete
  16. Anonymous3:12 AM

    தங்கள் வலைப்பதிவினை இன்றுதான் முதன்முறையாக பார்வையிட்டேன். மிக அருமையான பல விஷயங்களை உள்ளடக்கி இருக்கின்றது.மிக பயனுள்ள வலைத்தளம் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.உங்கள் பணி தொடர எல்லாம் வல்ல எம்பெருமான் கண்ணபெருமான் அருளாசி வழங்கட்டும்.

    நா.சடகோபன்

    ReplyDelete
  17. தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றிகள் திரு. நா. சடகோபன் ஐயா.

    ReplyDelete
  18. BhArathi samO kavi na bhUthO na bavishyati
    बारती समो कवि न भूतो न बविष्यति
    பாரதிக்கு சமமான கவி அவனுக்கு முன்னும் இல்லை பின்னும் இல்லை

    ReplyDelete