Tuesday, December 16, 2008

மார்கழி : எப்படிப் பாடினாரோ!

மது இசை வரலாற்றைத் திருப்பிப் பார்க்கையில், எண்ணற்ற இறையடியாளர்களின் இனிய இசைத் தொண்டினைக் கேட்டுப் பூரிக்கலாம். இன்று, நேற்று என்றில்லாமல், பற்பல நூற்றாண்டுகளாக, தாங்களும் பாடிப் பூரித்ததோடு, இறவாப் பாடல்கள் மூலம் நம்மையும், இசையின் இனிய நாதத்தினை மகிழ்ந்து பருகும் படியாக செய்து விட்டுப் போயிருக்கிறார்கள். வரப்போகும் சந்ததிக்கு, இசைச் செல்வத்தினை சேர்த்து வைத்துவிட்டுப் போன நம் மூதாதையர்களுக்கு எத்துணை நன்றி செலுத்தினாலும், அது போதாது.

இந்தப் பகுதியில், இரண்டு பாடல்களைப் பார்க்கப்போகிறோம். ஒன்று அக்காலாத்துப் பாடல், இன்னொன்று இக்காலத்துப் பாடல். முதல் பாடலில், முதற்காலத்தில் இருந்த, மாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம். இரண்டாவது பாடலில், முதற்காலத்திற்கு, அடுத்த காலகட்டத்தில் வந்துதித்த மகாகவிகளின் பட்டியலைப் பார்க்கலாம்.

இது என்ன பாடலா, அல்லது பட்டியலா? இரண்டும் தாங்க!. இந்தப் பட்டியலில் இடம் பெரும், மகாகவிகளின் பல பாடல்களை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால், அவர்களைப் பற்றிய பாடலை?. இங்கே, அப்படிப்பட்ட, ஒரு பாடல்... இல்லை, இல்லை, இரண்டு பாடல் பார்க்கப் போகிறோம்! ப்ளாஷ்பேக்-குக்கு ரெடியா?

முதல் பாடல்:
இயற்றியவர்: சுத்தானந்த பாரதி
இராகம் : கர்நாடக தேவகாந்தாரி.

எடுப்பு
எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
ஆசை கொண்டேன் சிவனே

தொடுப்பு
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப் பிள்ளையும்
அருள் மணி வாசகரும் பொருளுணர்ந்து உன்னையே

முடிப்பு
குருமணி சங்கரரும் அருமை தாயுமானாரும்
அருணகிரி நாதரும் அருட்ஜோதி வள்ளலும்
கருணைக்கடல் பெருகி காதலினால் உருகி
கனித்தமிழ் சொல்லினால் இனிதுனை அனுதினம்
(எப்படிப் பாடினாரோ!)
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இப்பாடலை இயற்றியவர் சுத்தானந்த பாரதியார் அவர்கள் (1897-1990). யோகி சுத்தானந்தர், இவரோ பெரிய கவி. பக்தியாளரும், சுதந்திரப் போராட்ட வீரரும் கூட. புதுவை அரவிந்த ஆசரமத்தில் சுமார் 23 ஆண்டுகள் தங்கி இருக்கையில், யோக நெறிதனை பின்பற்றி, அவற்றில் உச்சங்களை எட்டினாராம். 1914இல், மகாத்மா காந்தியுடன் ஏற்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, சிலகாலம் அரசியலில் ஆர்வம் செலுத்தினாலும், சிலகாலத்தில் முழுமையாக ஆன்மீகத்தில் ஆழ்ந்திடலானார். அரவிந்த ஆசரமத்தில் சுவாமி சிவானந்தர், இவரை அங்கு சந்தித்து இருக்கிறார்.
சுத்தானந்த பாரதியார் இயற்றிய பாடல்களில் சில:
* அருள் புரிவாய் (ஹம்சத்வனி)
* சகலகலா வாணியே (கேதாரம்)
* தூக்கிய திருவடி (சங்கராபரணம்)
* ஜங்கார சுருதி செய்குவாய் (பூர்விகல்யாணி)

சுத்தானந்த பாரதி, தனக்கு முன் வந்த இறையடியாளர்கள், எப்படியெல்லாம் சிவனைப் பாடிக் கொண்டாடினர். ஆகா, அவற்றில் மயங்கி, அவர்களைப் போலவே எனக்கும் பாட ஆசை வந்ததே என்கிறார். தொடுப்பில் அவர் சொல்லும், நான்கு பேரும் திருமுறைகள் தந்த சமயக் குரவராவர். (அப்பர், சுந்தரர், சம்பந்தர் & மணிவாசகர்.). முடிப்பில், அவர் சொல்லும் நால்வரும், பெரும் ஞானியர். காலத்தை வென்று நிற்பவர்கள். முதலில் மணியான குருவாம் ஆதி சங்கரரில் தொடங்குகிறார். இவர் தமிழில் ஏதும் பாடல் இயற்றாவிட்டாலும், பின்னர் வரப்போகும் அத்வைத பாரம்பரியத்தின் முன்னோடி என்பதால், சுத்தானந்தர், சங்கரரில் துவங்கியிருக்க வேண்டும். அடுத்தது தாயுமானவர். அவரின் கண்ணிகளும், ஆனந்தக் களிப்பும் சொல்லில் அடங்கா சுகம் தருபவை. அருணகிரியாரின் சந்தத்திலோ அழகன் முருகனின் பாதார விந்தமே, தாளம் போடும். அருட்பெரும் ஜோதியார் அருளிய திருவருட்பாக்களோ, நன்னெறிக்கு வித்திடுவதோடு, அருள்நெறியும் தந்திடும். வள்ளலார் என்றவுடன், அடுத்த வார்த்தை, 'கருணை' என்று வந்திருக்கும் பொருத்தத்தினை என்னென்று சொல்வேன்!

ஆலாபனையுடன், இப்பாடலை, சங்கீத கலாநிதி, டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


மெல்லிசையில், பாடலை நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

அடுத்த பாடல்:
இப்பாடலில், 18 முதல் 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்க் கவிகளை திரு.சேதுராமன் சுப்ரமணியன் அவர்கள் பாடுகிறார். திரு.சேதுராமன் சுப்ரமணியன் - இவர் ஒரு அறிவியல் வல்லுனர். இவரது ப்ளாகர் பக்கத்தினை இங்கு பார்க்கலாம்.

எடுப்பு
எப்படிப் புனைந்தீரோ ராமய்யா!
அப்படி நானெழுத ஆசை கொண்டேன் சிவனே!
(எப்படி..)

தொடுப்பு
கோபால கிருஷ்ணனும் நீலகண்ட சிவனும்
அருணாசலக் கவியும் கண்டறிந்த பொருள் தனையே
(எப்படி..)

முடிப்பு
சுப்ரமண்ய பாரதியும் சுத்தானந்த பாரதியும்
கவிகுஞ்சர பாரதியும் கோடீஸ்வர அய்யரும்
பாசமுடன் எழுதி பரிவுடனே பாடிய
கனித்தமிழ்ச் சொற்களால் இறைவனின் புகழ் பாட
(எப்படி..)


முன்பு கேட்ட 'எப்படிப் பாடினாரோ' பாடலைப் போலவே இந்தப் பாடலையும் இயற்றியுள்ளார். அதே இராகத்தில் பாடிப் பார்க்கவும். இந்தப் பாடலின் எடுப்பிலேயே, தமிழ்த் தியாகராஜர், பாபநாசம் சிவன் (1890-1973) அவர்களை அழைக்கிறார். 'ராமய்யா' என்பது பாபநாசம் சிவன் அவர்களின் இயற்பெயர். சிவனாரின் காலத்திலும், அவருக்கு முற்பட்ட காலத்திலும் அருந்தமிழ் கவிகளை இயற்றிய தமிழிசைக் கவிஞர்களையும் இப்பாடல் குறிப்பிட்டு, அக்கவிகளுக்குப் பெருமை சேர்க்கிறது.

தொடுப்பில் தொடுக்கப்பட்டுள்ளோர்:
கோபால கிருஷ்ண பாரதி (1811-1896) - நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகளை இயற்றியவர்.
நீலகண்ட சிவன் (1839-1900)
அருணாசலக் கவியார் (1711-1779) - இராம நாடகக் கீர்த்தனைகளை இயற்றியவர்.

அடுத்து முடிப்பில், தொடுக்கப்பட்டுள்ளோர்:
சுப்ரமணிய பாரதி (1882, 1921),
சுத்தானந்த பாரதி (1897-1990),
கவிகுஞ்சர பாரதி (1810-1896) மற்றும்
கோடீஸ்வர ஐயர் (1870-1936)

இவர்களும், இன்னும் பற்பல கவிகளும் தந்துள்ள சாகாவரம் பெற்ற பாக்கள் தான் எத்தனை எத்தனை! அத்தனையும் செவிகளில் நிறைத்து மகிழ, உள்ளம் விழையுது. அவற்றைக் கேட்டிட நெஞ்சம் குழையுது!.

17 comments:

  1. ஆஹா எப்படித்தான் இப்படி இயற்றி எப்படித்தான் பாடுகிறார்களோ அருமை! இனிமை! அளித்ததால் ஜீவாவுக்குப்பெருமை!

    ReplyDelete
  2. வாங்க ஷைலஜாக்கா,
    அருமைக்கு பெருமை எதுகையானாலும், பெருமைக்கல்ல, எல்லோருக்கும் இசை இன்பம் பரவவே!

    ReplyDelete
  3. ரேடியோ, இசைத்தட்டு, காஸெட் எல்லாம் இருந்தபோது நீங்கள் சொன்ன பாடல்கள் அனைத்தும் வைத்திருந்தேன். இந்த பாடல்களையெல்லாம் இப்போது கேட்கவேமுடியவில்லை.
    டிவியிலும் ஃஎப்.எம் ரேடியோவிலும் சினிமா பாட்டுத்தான்.
    நல்ல பாடல்களை நினைவு படுத்தியதற்கு நன்றி.
    சகாதேவன்

    ReplyDelete
  4. Anonymous11:10 PM

    http://tamil.sify.com/audio/fullstory.php?id=14623816

    - அ.நம்பி

    ReplyDelete
  5. Hi Jeeva:
    Thank you for featuring my parody (not a humorous but a serious one) in juxtaposition with the great song of SNB. My modest write-up was done on a spur-of-the-moment basis. Just as Meenakshisundaram PiLLai thought that GKB's magnum opus "nandanAr carittiram" had grammar mistakes my song too may have some compromised candam. But my attempt was primarily to pay tribute to the great Papanasam Sivan (honoring the other poets/composers alongside). So any grammatical transgressions may be forgiven.
    By the way the "shAnti nilava vENDum" song was written by Sethu Madava Rao. I attributed it to SNB erroneously in my article in chennaionline.com Please make the correction in yours too.

    ReplyDelete
  6. ஆஹா.. எவ்வளவு விவரக் குறிப்புகள்?..அத்தனையும் அற்புதம்..
    எனது சிறு பிராயத்தில் அடிக்கடி ரசித்துக் கேட்ட பழைய சுகமான நினைவுகளை நினைவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  7. அருமை, ஜீவா! அருமை!

    எத்தனை தமிழிசைப் பாவலரோ - அவர்
    அத்தனை பேருக்கும் அடியேன் வணக்கம்!

    எந்தரோ மகானுபாவுலு
    அந்தரிகி வந்தனமுலு

    சுத்தானந்த பாரதியும், சேதுராமன் சுப்ரமணியன் போட்டி போட்டுக்கிட்டு பட்டியல் போடுவதில் நமக்குத் தான் இன்பம் - இசை இன்பம்! :)

    இந்தப் பதிவை "அங்கும்" வாசித்-தேன்! அங்கு வாசித்ததில் இன்னும் சுவை அதிகம்! :)))

    ReplyDelete
  8. வாங்க சகாதேவன்!
    //ரேடியோ, இசைத்தட்டு, காஸெட் எல்லாம் இருந்தபோது நீங்கள் சொன்ன பாடல்கள் அனைத்தும் வைத்திருந்தேன். //
    இப்போ என்ன ஆச்சு?
    சங்கீதப்பிரியா[http://www.sangeethapriya.org/}
    பற்றித் தெரியும் என்று நினைக்கிறேன். அங்கிருந்து உங்களுக்கு வேண்டிய பாடல்களை தரவிறக்கிக் கொள்ளலாமே!

    ReplyDelete
  9. வாருங்கள் அ.நம்பி,
    குடவாயில் சகோதரிகள் அவர்களைப்பற்றிய சுட்டியினைத் தந்திருக்கிறீர்கள். அவர்கள் இப்பாடலை பாடி இருக்கிறார்கள், கேட்டுப் பார்த்தேன்.

    ReplyDelete
  10. வாருங்கள் சேதுராமன் சுப்ரமணியன் சார்,
    //But my attempt was primarily to pay tribute to the great Papanasam Sivan /
    Thanks for that!
    //Please make the correction in yours too.//
    Thanks for mentioning that as well.

    ReplyDelete
  11. வாருங்கள் ஜீவி ஐயா,
    தங்கள் சிறு பிரயாயத்தில் கேட்டு இரசித்த பாடல்களா, ஆகா, நல்லது.
    இன்றளவும், கேட்க இனித்திடும் சாகாவரம் பெற்ற பாடல்களாய் திகழ்கின்றன!

    ReplyDelete
  12. வாருங்கள் கே.ஆர்.எஸ்,
    இங்கும் அங்கும் எங்கும் பரவட்டும் இசை இன்பம்!

    ReplyDelete
  13. //எப்படிப் பாடினாரோ அடியார் அப்படிப் பாட நான்
    ஆசை கொண்டேன் சிவனே//

    இந்தப்பாடல் என் அம்மா மிகவும் விரும்பிப்பாடுவார். நான் சொல்வது 1950 ல்.
    ஒரு நாள் நடந்த நிகழ்ச்சி இது. ஏதோ விசேடத்திற்காக, ஏகப்பட்ட தடபுடல் சாப்பாடு,
    பக்ஷணம் எல்லாம். ஏகப்பட்ட நபர் அன்று சாப்பிட்டனர். அப்பாவுக்கு (அவர் லாயர்.) அவசரமாக‌
    கோர்ட்டுக்கு போய்விட்டு மாலை தான் வந்தார். காலையில் அவர் பக்ஷணம் சரியாக சாப்பிடவில்லை
    போலும். உள்ளே வந்து என் அம்மாவிடம் அந்த வடை, அதிரசம் இருந்தால் கொடு என்றார்.அப்பொழுது
    அம்மா நீங்க குறிப்பிட்ட பாட்டை பாடிக்கொண்டிருந்தார். பக்ஷணம் எல்லாமே,
    கிட்டத்தட்ட எல்லாமே காலியாகிவிட்டிருந்தது. வீட்டில் எனது பாட்டி (அப்பாவின் அம்மா) நன்னா
    இருக்கு, நன்னா இருக்குன்னு ஏகப்பட்டது சாப்பிட்டுவிட்டார். அம்மாவுக்கு கூட பாக்கி இல்லாமல்.
    அதை நாசூக்காக எங்க அம்மா பாடினார், இதே கர்னாடக காந்தாரியில்: அதே மெட்டில்:
    ஒரே நிமிடத்தில் பாட்டை மாற்றி புது பாட்டு இயற்றி பாடியும் விட்டார். இன்னும் நினைவு இருக்கிறது.

    " எப்படி சாப்பிட்டாரோ மாமியார் அப்படி சாப்பிட‌
    ஆசை கொண்டேன் சிவனே

    நெய் ததும்பி வழிய நாக்கில் ஜலம் சொட்ட‌
    அதிரசம் அனைத்தையும் அள்ளியே வாயில் போட

    குண்டு ஜீலேபியும் குடம் நிறை ஜீராவும்
    எண்ணிலடங்காத எள் உருண்டை பலவும்
    உளுந்து வடை பிளந்து பாயசத்தில் பிசைந்து
    அப்பளத்தை கலந்தே அதிசயமாய் தின்றார். "

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  14. வாங்க சுப்புரத்தினம் ஐயா,

    ஹா ஹா ஹா!
    வாழ்க சுப்பு தாத்தாவின் பாட்டி!
    அவரில்லாமல், இப்படி ஒரு அருமையான பாட்டு கிடைத்திருக்குமா!

    ReplyDelete
  15. இன்றுதான் வர முடிந்தது...அளித்தமைக்கும், அறிமுகம் தந்தமைக்கும் நன்றி...

    ReplyDelete
  16. நல்லது மௌலி சார்!

    ReplyDelete
  17. கவியோகியார் வாழ்ந்தது 1897-1990. இரண்டு இடங்களில் 1897-1937 என்று தவறாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. இசை இன்பம் என்கிற தளத்தில் இதே பதிவைப் பார்த்து விட்டு மார்ச் 12 ஆம் தேதி இதைக் குறிப்பிட்டுப் பின்னூட்டம் எழுதியிருந்தேன்.

    தேன் பாகைச் சுவைக்கிற போது, நடுவிலே கல்லும்மண்ணுமாய் ஒரு துரும்பு வந்து சுவையைக் கெடுக்குமே, அது மாதிரி கவியோகியாரின் பாடலை உல்டா அடித்த ஒரு பின்னூட்டத்தையும் இன்று தான் பார்த்தேன்.

    இந்தப்பக்கங்களில், நாம் மறந்துபோன, மதிக்கத்தவறிய ஒரு மாமனிதரைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ள முடியும்.
    http://maraboorjc.blogspot.com/2006/03/blog-post.html
    தொடுப்பில் விடுபட்ட விக்கிபக்கம் இங்கே
    http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

    ReplyDelete