Wednesday, March 05, 2008

திருவெண்காட்டில் தேவாரம் பாடுவோம் வாங்க!

திருவெண்காடு - இத்திருத்தலம் சீர்காழி மற்றும் மயிலாடுதுறைக்கு இடையே உள்ளது.
சுவாமி - சுவேதாரண்யேஸ்வரர், அம்பாள் - பிரம்மவித்யாநாயகி
திருவெண்காட்டீசனை திருஞான சம்பந்தர் இரண்டாம் திருமுறையான தேவாரப் பதிகத்தில் பாடும் செய்யுள்களை இங்கு பார்க்கலாம். இந்தப் பத்துப் பாடல்களையும் அவற்றின் பொருளையும் பார்ப்பதோடு, பாடலைக் கேட்டுப் பாடுவோம்.
பண் : சீகாமரம்; பாடுபவர் : திருமதி. விஜயலக்ஷ்மி ராஜாராம்
1.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
நெற்றியில் இமைக்கும் கண் பொருந்தியவன்,
எரிகனலை கையில் காட்டுபவன்,
தன்னில் பாதியைப் பெண்ணுருவாய் காட்டுபவன்,
விரிசடையில் பிறைச்சந்திரனைக் கொண்டவன்,
பாடல்களின் பண் வடிவான இசைப்பிரியன்,
பயிர்களின் உயிரான மழை மேகமாய் இருப்பவன்,
நந்தியினை கொடியில் காட்டுபவன்,

இப்படியெல்லாம் இருப்பவன் திருவெண்காட்டில் உறையும் ஈசன்.

2.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையாரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே.
திருவெண்காட்டின் முக்குள நீரில் மூழ்கி எழுந்தால், பேயெனச் சொல்லப்படும் தீயவை எல்லாம் மடியும். பிள்ளைச்செல்லவம் இல்லாதவர்க்கு அந்தப் பேறு கிட்டும். மனதால் நினைத்த வேறு யாவும் உமை ஒரு பாகமாய் கொண்டவனின் அருளால் கிட்டும்.
இந்தப் பாடலே, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஈசனின் அருள் நிறைந்த அருளாளரான மெய்கண்ட தேவர் குழந்தையாய் பிறக்கும் அருள் பாலித்ததாக வரலாறும் உண்டு.

3.
மண்ணொடு நீரனல் காலோடாகாய மதியிரவி
எண்ணில் வருமியமானந் இகபரமும் எண்டிசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
எம்பிரான் ஈசன் எப்படி எல்லாமுமாய் இருக்கிறான் - மண்ணாய், நீராய், நெருப்பாய், காற்றாய், ஆகாயாமாய், நிலவாய், கதிரவனாய் இருக்கிறான். இப்பிறப்பாகவும், இதற்கு அடுத்த பிறப்பாகவும், எண் திசையாகவும், ஆணாகவும், பெண்ணாகவும், பெரியனவற்றுள் பெருமையாகவும், சிறியனவற்றுள் சிறுமையாகவும் இருக்கிற சிவபெருமான், விண்ணவர் தலைவன் இந்திரன் வழிபட திருவெண்காட்டினை உறைவிடமாய் கொண்டானே.

4.
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
நஞ்சினை உண்ட அண்ணல் உறையும் வெண்காட்டின் அருகே உள்ள குளிர்ந்த முல்லை நிலத்தில் உள்ள நீர் நிலையில் மலர்ந்த கடல் தாழைகள் வளைந்து இருக்க, தாழை மலரின் பிம்பம் நீரில் தெரிய, அது தம்மை உண்ணக் காத்திருக்கும் குருகு(பறவை) தானோ என நீர்நிலையில் இருக்கும் கெண்டை மீன்கள் ஐயுற்று, தாமரை மலரின் அடியில் மறைந்து கொள்ளவும், இதைப் பார்த்து நீர்நிலையில் இருந்த வெண்முத்துக்கள் நகைத்தனவாம்.
இந்தச் செய்யுளில் தற்குறிப்பேற்றம் தனை கவனிக்கவும். இது நாம் செய்யும் செயலுக்கெல்லாம் தானே காரணம் என அறியாமையினால் கொள்ளும் கலக்கத்தை ஒத்தது. அந்த கெண்டை மீன்கள் போல தாமரையிடம் - அனகதத்தில் அவனிடன் சரணடவதே கலக்கத்தை கலைக்க வழி.

5.
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.
நீர்நிலைகள் சூழ்ந்த குளுமையான வெண்காட்டீசன் திருவடிகளை மாலைகள் மற்றும் சந்தனத்தாலும் வழிபட்ட சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த காலனை சிவன் காலால் மிதித்ததை அந்த எமதூததர்கள் அறிவார்கள். அதனால் சிவபிரான் அடியவர் என்றாலே அவர்கள் அஞ்சுவர்.

6.
தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
தன் சடையில் ஒரே சமயத்தில் குளுமையான மதியையும், வெம்மையான பாம்பினையும் தாங்குபவன். ஒளி வீசும் பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடைய உமையன்னையை ஒருபாகமாய்க் கொண்டவன். அப்படிப்பட்ட ஈசன் உறையும் வெண்காட்டுக்கோயிலில், இசைமொழியில் அவன் திருப்பெயர்கள் பலவும் ஓதக்கேட்ட பச்சை நிறக் கிளிகள், அவற்றை திருப்பி ஓதியவாறு, வெள்ளைநிற மேகங்களைத் தொட்டிடும் அளவற்கு உயர்ந்து வளர்ந்த பனை மரங்களில் வீற்றிருக்குமாம்.
அந்தக் கிளிகளுக்குத்தான் என்னப்பேறு, வானத்தை எட்டிட வைத்தது யாரு?

7.
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிராவதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.
திருமாலுக்குச் சக்கராயுதம் ஈந்தவனும், சலந்தராசுரனைப் பிளந்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் (வெண் யானை - வெண்ஆனைக்காடு - திருவெண்காடு) பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், தீவினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய என் இறையவனே.

8.
பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
இசையின் பண் கூடிய இனிய மொழியினளாகிய உமையன்னையே அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தான் - பித்தனாகிய இராவணன். அவன் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவனுறையும் கோயில் இங்கு. அவ்விடம், தம் தோகையில் அழகிய கண்கள் பொருந்திய நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வரிவண்டுகள் இசை ஒலியும் கேட்கும் திருவெண்காடெனும் திருத்தலம்.

9.
கள்ளார் செங்கமலத்தான் கடற்கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்று
உள்ளாடி யுருகாதார் உணர்வுடைமை யுணரோமே.
தேன் நிறைந்த செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் மற்றும் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிக உயர்ந்தும் ஆழ்ந்தும் அவனைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபெருமான் வெள்ளானையும் தவஞ் செய்து வழிபடும் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று உருகாதவரும் உண்டோ?

10.
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர் என்றுணருமினே.
புத்த மதத்தவர்களும், சமணர்களும் வலிந்து கூறும் உரைகளைப் பொருட்படுத்தாமல், அவர்களை பேதையர்களாகக் கொண்டு, அவர்களைப் பிரிவீர்களாக.
அறிவுடையவர்களே, இதனைக் கேளுங்கள்.
வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் திருப்பெயர்களை
ஓதியவர்களுக்கு யாதொரு தீங்கும் வாராது என உணர்வீர்களாக.

11.
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறைவெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான் பொலியப் புகுவாரே.
குளிர் சோலைகளால் சூழப்பட்ட சண்பை(சீர்காழி) நகர்த் தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தனாகிய யான், விண்ணில் பொலியும் வெண்பிறை சேர்ந்த தலையினை உடைய சிவன் உறையும் திருவெண்காட்டைப் பண் மீட்டிய ஒலிப் பாட்டு பத்தினையும் பாடிடுபவர், மண்ணில் சிறப்புற வாழ்வதோடு வான் சென்ற பின்னும் சிறப்போடு வாழ்வர்.

திருசிற்றம்பலம்.

15 comments:

  1. திருவெண்காட்டுப் பதிகம் - எனை ஆட்கொண்ட தேவாரப் பாடல்களில் இதுவும் ஒன்று :-) விளக்கத்துக்கும் நன்றி... வெ.வ.வா ஜீவ்ஸா நீங்க, இல்ல இன்னொரு ஜீவாவா? :-)

    ReplyDelete
  2. பட்டினத்தார் பிறந்து வாழ்ந்த இடமும் கூட இந்தப் பெருமைபெற்ற திருவெண்காடு!

    மனதுக்கினிய பதிகம்!

    நன்றி, திரு. ஜீவா!

    நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!

    ReplyDelete
  3. நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!
    இமைப்போழுதுமென் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,
    கோகழி ஆண்ட குறுமனிதன் தாள் வாழ்க, வாழ்க நமச்சிவாய எனும் நாமம் வாழ்கவே!

    பதிவிற்கு நன்றி ஜீவா. 'ழ்', 'ள்' குழப்பம் சரி செய்துவிட்டேன், அதற்கு விஎஸ்கே அவர்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  4. நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க!
    இமைப்போழுதுமென் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க,
    கோகழி ஆண்ட குறுமனிதன் தாள் வாழ்க, வாழ்க நமச்சிவாய எனும் நாமம் வாழ்கவே!

    பதிவிற்கு நன்றி ஜீவா. 'ழ்', 'ள்' குழப்பம் சரி செய்துவிட்டேன், அதற்கு விஎஸ்கே அவர்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  5. வாங்க சேதுக்கரசி,
    //எனை ஆட்கொண்ட தேவாரப் பாடல்களில் இதுவும் ஒன்று :-)//
    ஆகா, நல்லது!
    //வெ.வ.வா ஜீவ்ஸா நீங்க, இல்ல இன்னொரு ஜீவாவா? //
    வெண்பா வாத்தியில்லை, மாணவன் என்று வேண்டுமென்றால் சொல்லிக் கொள்ளலாம்.
    அவரும் இப்போது கேமிரா சகிதம் கிளம்பி விட்டார்!

    ReplyDelete
  6. வாங்க வி.எஸ்.கே.
    //பட்டினத்தார் பிறந்து வாழ்ந்த இடமும் கூட இந்தப் பெருமைபெற்ற திருவெண்காடு!//
    அப்படியா, இந்தச் செய்தி அறியாதது. மிக்க நன்றி.

    நமச்சிவாய வாழ்க
    !
    நாதன் தாள் வாழ்க!

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. வாங்க மதுரையம்பதி!
    இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க - என்ன அழகான வார்த்தைகள்.

    கோகழி ஆண்ட குருமணி தன் தாள் - திருவாடுதுறை எனும் கோகழியில் என்னை ஆட்கொண்டு அருளிய குரு - மணி போன்ற என் இறைவன் தாள் வாழ்க - என்பது பொருள்.

    ReplyDelete
  9. இன்னொரு சிறப்பு இந்த வெண்காட்டுப் பதிகத்துக்கு உள்ளது,தெரியுமா?
    இப்பதிகம் மாறாது பாராயணம் செய்பவர்களுக்கு எவ்வினையிருப்பினும் தீர்த்து குழந்தைவரம் அளிப்பான் திருவெண்காட்டிறைவன் என்பது நம்பிக்கை.

    ReplyDelete
  10. பிள்ளைச்செல்வம் அருளும் பதிகமென

    குறிப்பிட்டுச் சொன்னமைக்கு நன்றி அறிவன்.
    இது குறிப்பாக, இப்பதிகத்தின் இரண்டாம் பாடலுக்குப் பொருந்தும்.

    ReplyDelete
  11. மண்ணொடு நீரனல் காலோடாகாய மதியிரவி
    எண்ணில் வருமியமானந் இகபரமும் எண்டிசையும்//

    //எம்பிரான் ஈசன் எப்படி எல்லாமுமாய் இருக்கிறான் - மண்ணாய், நீராய், நெருப்பாய், காற்றாய், ஆகாயாமாய், நிலவாய், கதிரவனாய் இருக்கிறான். //

    அற்புத‌மான‌ ப‌திவு ம‌ஹா சிவ‌ராத்திரி அன்று.
    உள‌மாற‌ப் பாராட்டுகிறேன்.

    போற்றித்திருவ‌க‌வ‌லில் உள்ள‌தையும் ஒப்பிட‌லாம்:

    "
    பாரிடை யைந்தாய்ப் ப‌ர‌ந்தாய் போற்றி
    நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி.
    தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி
    வளியிடை யிரண்டாய் மகிழ்ந்தாய் போற்றி
    வெளியிடை யொன்றாய் விளைந்தாய் போற்றி
    யளிபவ ருள்ளத் தமுதே போற்றி."

    ஐந்திலுந்து துவங்குகிறது போற்றித்திரு அகவல்.

    நிலமாகிய ஐந்தாவது பூதமாயும் நீராகிய நான்காவது பரிணமித்துள்ள‌
    நின்னை நான் போற்றுகிறேன்.

    மூன்றாவது பூதமான அக்னியும் நீயே. இரண்டாவது பூதமான வாயுவும் நீயாகி,
    அதே சமயம் முதல் பூதமான ஆகாயமும் ஆனாய். உன் பெயர்தனை உள்ளத்தில்
    இருப்பவர்க்கு அமிர்தமாக ஒளிர்கிறாய் நீ. போற்றி.


    இந்த‌ ப‌ஞ்ச‌ பூத‌ங்க‌ள் ஒன்றிலிருந்து இன்னொன்று வ‌ந்த‌து என்கிற‌து வேத‌ம்.

    தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாசஹ ஸம்பூதஹ‌
    ஆகாசாத் வாயுஹு வாயோர் அக்னிஹி அக்னேர் ஆபஹ‌
    அத்பயஹ ப்ருத்வி ப்ருதிவ்யா ஓஷதயஹ‌
    ஓஷதீப்யோஹோ அன்னம். அன்னாத் புருஷஹ.

    (தைத்ரீய உபனிஷத். 2 ‍ 1 )

    முதலும் அவனே முடிவும் அவனே
    முற்றிலும் அவனே.


    நமச்சிவாய வாழ்க.
    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    சிவராத்திரி இன்று. லிங்காஷடகம் கேட்பீர்.
    http://pureaanmeekam.blogspot.com
    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  12. தங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி திரு.சுப்புரத்தினம்.
    அகவல் ஐந்துலிருந்து துவங்கி ஒன்றுக்கு வந்தது அருமையாக இருந்தது.
    அதுபோல - கார்த்திகேயன், கணேசன், சிவன் - இவர்களின் பெயரிலும் ஒரு Sequence இருக்கிறது!

    ReplyDelete
  13. திருச்சிற்றம்பலம். எப்போதோ நீங்கள் இட்ட இந்தப் பதிகத்தை இன்றே படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நன்றிகள்.

    ReplyDelete
  14. வருக குமரன், வருகைக்கு நன்றி.
    இன்றிட்ட திருமுறைப்பாடலையும் பார்த்தீர்களா?

    ReplyDelete