Wednesday, October 15, 2008

துணை நீயே, குமரா, துணை நீயே!

இந்த இடுகையில் நாம பார்க்கப்போகிற பாடல், டாக்டர். பாலமுரளி கிருஷ்ணா அவர்களால் பாடப்பட்டு பிரபலமான பாடல். அவரது சொந்த சாகித்யம் எனச் சொல்லப்படுகிறது(...?!).

அன்பர் ஒருவர், இந்தப் பாடலை இங்கு தரும்படி கேட்டிருந்தார். அவர் கேட்டபின்புதான், அவர் உதவியால் இந்த பாடலை அறிந்து கொண்டேன். ஆகையால், அவருக்கு முதற்கண் நன்றிகள்.

இராகம் : சாருகேசி
தாளம் : ஆதி

எடுப்பு
துணை நீயே, என்றும் துணை நீயே குமரா - என்
வினை தீர்த்தருள்வாயே முருகா.

தொடுப்பு
பார்தனில் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்தனையே
கார்முகில் வண்ணன் மருகோனே, கந்தனே, கருணைக் கடலே.

முடிப்பு
கன்னித்தமிழ் கண்ட ஆண்டவனே, தணிகையில் மணக்கோலம் கொண்டவனே
துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ?

பாடல் வரிகள் அழகாக இருக்கிறதல்லவா!
இப்போ பாடலை, பாலமுரளி சார் பாடிக் கேட்கலாம்:
துணை நீயே : இங்கே கேட்கலாம் : [play]
(Pop-Up window needs to be opened)

இராமா வர்மா அவர்கள் பாடிட யூ-ட்யூபில் இங்கு கேட்கலாம்.

பாலமுரளி சாரின் நடை அப்படியே பாடலில் தொனிக்கிறது. மெதுவாக பாடிடும் நடையை, இப்பாடலை வேகமாகப் பாடினால், எப்படி இருக்கும் என வியக்க வைத்தாலும், இந்நடையும் நன்றாகத் தான் இருக்கிறது. இப்போ, வரிகளைப் பார்ப்போம்.

துணை நீயே குமரா, வினை தீர்ப்பாய் முருகா - என அட்டகாசமானதொரு எடுப்பு!

தொடுப்பில் - பார்தனில் என்ற இடத்தில் - அவர் பாடுவதைக் கேட்டால், சில சமயம் - 'பார்த்தனின்' என்று பாடுவது போல் இருக்கிறது.
அதனால், சற்றே வரிகளை இப்படியாக மாற்றிப் பார்க்கிறேன்!:
பார்த்தனின் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்த
கார்முகில் வண்ணன் மருகோன் கந்தனே, கருணைக் கடலே.
ஏனெனில், விந்தைகள் புரிந்தது கண்ணனுக்கே மிகவும் பொருந்துவதால். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?

முடிப்பில் - துன்பமகற்றிடும் முரளிகானத்தில் தன்னை மறந்தே, என்னை மறந்தாயோ? என்ற வரிகளுக்கு என்ன பொருள்? முரளி (குழலின்) கானத்தில் எப்போது முருகன் தன்னை மறந்தார்? நமக்குத் தெரியாமல் ஏதேனும் புராணம் இருக்குமோ. இருந்தாலும் இருக்கும், நம்ம ஊரில் புரணாக்கதைகளுக்குத் தான் பஞ்சமே இல்லையே!
அப்படி ஏதும் இல்லையென்றால், இப்படி இருக்குமோ?. 'முரளி' என்று, பாலமுரளியான தன்னைச் சொல்கிறாரோ?. ஏனெனில் 'முரளி' என்பது இவருடைய முத்திரை போல இருக்கிறது. அப்படியென்றால், இவரோட இசையைக் கேட்டு, கந்தன் தன்னை மறந்து விட்டான் என்கிறாரோ?
அல்லது தன்னடக்கமாக இப்படிச் சொல்கிறாரோ?:
குமரா, உன்னை இதுநாள் வரை கானங்களால் துதித்து வந்தேன். என் துன்பங்களும் அதனால் மறைந்து வந்தன... ஆனால் இன்று, என்ன ஆயிற்று உனக்கு?
என் கானத்தில் தான் ஒருவேளே நீ மயங்கி விட்டாயோ?
கானத்தில் மயங்கி, என் குறைகளை தீர்ப்பதையெல்லாம் மறந்துவிட்டாயோ?
இருப்பினும், என்றும் துணை நீயே, குமரா.

நீங்க என்ன நினைக்கறீங்க?

14 comments:

  1. //'முரளி' என்று, பாலமுரளியான தன்னைச் சொல்கிறாரோ?. ஏனெனில் 'முரளி' என்பது இவருடைய முத்திரை போல இருக்கிறது//

    பாலமுரளி அவர்களின் முத்திரைதான் அது. அதை அவரது எல்லா படைப்புகளிலும் காணலாம்.

    ReplyDelete
  2. வாங்க கபீரன்பன் ஐயா,
    'முரளிகான' அல்லது 'முரளி' என்பதை முத்திரையாக பயன்படுத்தி இருக்கிறார் என்று தெரிகிறது.

    ReplyDelete
  3. >>மருகோன்<< ---> marugOnE
    Rama Varma learnt from BMK for about 10 years and adores him for his extraordinary talents. He has sung many of BMK's compositions both in private performances (like this Youtube presentation in Tiruvanantapuram palace) and in concerts elsewhere. Rama Varma sings the "tuNai nIyE" song in chouka kAlam which gives a little more pathos to the plea contained in the song. He follows BMK pretty much in style occasionally tweaking it a bit here and there. He also has a voice very similar to that of BMK.

    ReplyDelete
  4. //'முரளி' என்று, பாலமுரளியான தன்னைச் சொல்கிறாரோ?. ஏனெனில் 'முரளி' என்பது இவருடைய முத்திரை போல இருக்கிறது. அப்படியென்றால், இவரோட இசையைக் கேட்டு, கந்தன் தன்னை மறந்து விட்டான் என்கிறாரோ?//

    இந்த வரிகளைப் படிக்கும் பொழுதே நினைத்தேன்.. சொல்லிட்டீங்க..

    ReplyDelete
  5. வாருங்கள் சார்,
    //>>மருகோன்<< ---> marugOnE//
    மருகோனே, கந்தனே,
    என்பது பாடலின் அழகுக்கு அழகு சேர்க்கிறது!

    ReplyDelete
  6. இளவரசர் ராமா வர்மா பற்றி சில வார்த்தைகள் எழுதியமைக்கு நன்றிகள்!
    //Rama Varma sings the "tuNai nIyE" song in chouka kAlam which gives a little more pathos to the plea contained in the song.//
    Nice!

    ReplyDelete
  7. வாருங்கள் ஜீவி ஐயா!

    ReplyDelete
  8. பாடலும் வரிகளும் நல்லா இருக்கு. நன்றி ஜீவா.

    ReplyDelete
  9. வாங்க கவிநயாக்கா!

    ReplyDelete
  10. இந்த பாலமுரளி இருக்காரே அவர் ஒரு ஜீனியஸ்.
    அற்புதமாக பாடியிருக்கிறார் என்று சொன்னால் மட்டும் போதுமா என்ன?
    அனாயாசமாக விளாசியிருக்கிறார்.


    வாய்பாட்டு மட்டுமல்ல, வீணை, வயலின் ( ஏழு கம்பிகள் கொண்ட‌
    வயோலா) இவற்றிலும் வல்லவர்.
    அது மட்டுமல்ல, தாள வாத்தியங்களிலும் நிபுணர்.

    இது அவரது சொந்த சாகித்யம். அதனால் முரளி என்று பதித்திருக்கிறார்.
    அது ஒரு காபிரைட் மாதிரி.

    அது சரி.. அது என்ன ? கல்யாணி அப்படின்னு போட்டிருக்கிறீர்கள்.
    இது சாருகேசி ராகம் அல்லவா !

    சாருகேசி ராகம் அங்கங்கே ஷண்முகப்பிரியா சாயல் அடிக்கும். இரண்டுக்கும்
    உண்டான வேற்றுமை ஒற்றுமை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன்.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை ( இனிமே சென்னை)
    ஒரு வேளை டிசம்பருக்கு அப்பறம்
    ஒரு ஆறு மாசத்துக்கு உங்க ஊரு பக்கம்.

    http://movieraghas.blogspot.com

    ReplyDelete
  11. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
    //அது ஒரு காபிரைட் மாதிரி. //
    :-)
    //இது சாருகேசி ராகம் அல்லவா !//
    அட, ஆமாம், திருத்திடறேன்!
    //டிசம்பருக்கு அப்பறம்
    ஒரு ஆறு மாசத்துக்கு உங்க ஊரு பக்கம்.//
    ஆகா, வருக, வருக!
    கலிபோர்னியா?

    ReplyDelete
  12. //பார்த்தனின் துயரங்கள் நீக்கிடவே பலப்பல விந்தையும் புரிந்த
    கார்முகில் வண்ணன் .....
    ஏனெனில், விந்தைகள் புரிந்தது கண்ணனுக்கே மிகவும் பொருந்துவதால். நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?//
    பார்த்தன் துயர் நீக்கிய கண்ணன் பொருத்தமாதான் இருக்கு!
    முரலி சமாசாரம் - வார்த்தை விளையாட்டு, சுவையானதுதான்!

    ReplyDelete
  13. //இது அவரது சொந்த சாகித்யம். அதனால் முரளி என்று பதித்திருக்கிறார்.//
    Thanks for Confirmation, Sury Sir!

    ReplyDelete
  14. வாங்க திவா சார்!
    வார்த்தை விளையாட்டை இரசித்தமைக்கு நன்றிகள்!

    ReplyDelete