Friday, September 26, 2008

கனவில் வந்த கதைகள் : விழிக்குத் துணை

ன்றைக்கு அந்த ஆறு லேன் சாலையில் என் வாகனத்தை சீரானதொரு வேகத்தில் நிறுத்திப் பயணித்துக் கொண்டிருந்தபோது, பக்கத்து லேனில் சென்று கொண்டிருந்த திறந்த கார் என் கவனத்தை ஈர்த்தது. அந்த காரின் பின் பக்கத்தில் கொட்டை எழுத்துக்களில் 'Hello Uncle, Where are you? In Search of you - NORA.' அந்த வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த இளைஞன், காதில் ஹெட்போனை மாட்டிக் கொண்டிருந்தவாறு, ஏதோ தாளத்திற்கு ஏற்றாற்போல் தலையை வேகமாக அசைத்தவாறு இருந்தான். அவனைப் பார்த்தவாறும், அந்த வாசகத்தை படித்தவாறும், ஒன்றும் புரியாமல், நானிருக்க, சற்றுத் தொலைவில் இன்னொரு லேனில் வந்து கொண்டிருந்த காரில் இருந்து ஒரு நபர், இந்த இளைஞனை நோக்கி கையசைத்து, சமிஞ்சை காட்டினார். ஆனால் அந்து இளைஞனோ அதை கவனிக்கவில்லை. லேசாக அவர் காரின் ஹார்னை அழுத்தி, ஒலி எழுப்பியும், அவனது கவனத்தை அவரது பக்கம் திருப்பிட இயலவில்லை. சற்று நேரத்தில் அந்த இளைஞனின் கார், அடுத்த சாலைத் திருப்பத்தில், திரும்பிவிட, அவர் முகமும் அந்த கார் சென்ற பக்கமாய் திரும்பிப் பார்த்தது. அவரது முகத்தை எங்கோ பார்த்ததுபோல் இருந்திட, அவரைக் கூர்ந்து கவனித்தேன். ஆ, ப்ரொபசர் மனோகர் தான் அவர், எனக் கண்டுகொண்டேன்.

அந்த சம்பவத்தை அப்போதே மறந்து விட்டேன். அன்றைக்கு மாலை, கந்தர் அலங்காரப் பாடல்களை படித்து, ஒரு பாடலுக்கு விளக்கத்தினை கூகிளில் தேடிக்கொண்டிருக்கையில், மீண்டும் அந்த இளைஞன் நோராவைச் சந்திக்க நேர்ந்தது - பதிவர் நோராவாக! ப்ரொஃபைலில் இருந்த அவனது புகைப்படத்திலிருந்து, அவன் அன்று காரில் பார்த்த அந்த இளைஞன்தான் என்பதையும் உறுதிப் படுத்தியது. அவனது ப்ளாக்கில் இருந்த பதிவுகளைப் பார்த்த போது, சில வருடங்களுக்கு முன், நிறைய ஆன்மீகப் பதிவுகளை, குறிப்பாக முருகன் பற்றி நிறைய எழுதி இருந்ததெல்லாம் பார்த்து, ஆச்சரியத்தில் மூழ்கலானேன். சடாரென்று ஒரு எண்ணம் தோன்றியது, இந்த இளைஞனுக்கு ஒரு மின் அஞ்சல் அனுப்பி, இவன் தேடும் அங்கிள் பற்றியான விவரத்தை தெரிவிக்கலாமே என்று.

அவனுக்கு மின் அஞ்சல் எழுதும் போதுதான் தோன்றியது, இந்த இளைஞனை இந்த சாக்கிட்டு நம் வீட்டில் விருந்துக்கு அழைத்து, அவனிடம் கந்தர் அலங்காரம் பற்றி கொஞ்சம் பேசித் தெரிந்து கொள்ளலாமே என்று! அப்படியே மின் அஞ்சல் தட்டி விட்டேன். என் வீட்டு முகவரியோடு. அந்த இளைஞனிடம் இருந்து, சிறிது நேரத்தில் பதில் வந்தது. அவனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வழியில் தான் என் வீடு இருக்கிறதென்றும், அந்த வழியில் வந்து நாளை மாலை என்னைப் பார்ப்பதாகவும்.

அந்த மாலையும் வந்தது. ப்ரொபசர் மனோகரின் வீடு இருக்கும் இடம் எனக்குத் தெரியுமாதலால், விருந்துக்குப்பின், நோரோவை, நானே ப்ரொபசரின் வீட்டுக்கு அழைத்துப்போவதாக திட்டம். விருந்தின் போது பொதுவான விஷயங்களைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தோம். விருந்தும் முடிந்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் ப்ரொபசர் மனோகரின் வீட்டுக்குப் புறப்படலாம் என்று பேசிக்கொண்டோம். அதற்குமுன் அவரிடம் தொலைபேசியில் நாங்கள் வருவதை தெரிவிக்க கூப்பிட்டோம். முதலில் நான் அவரிடம் பேசிவிட்டு, தொலைபேசியை நோராவிடம் தந்தேன்.

அவர்கள் உரையாடத் துவங்கினார்கள்.
'அலோ அங்கிள். போன வாரம்தான் இந்த ஊருக்கு வேலை மாற்றலில் வந்தேன். உங்கள் முகவரியும் தொலைபேசி எண்ணும் இல்லாததால் எப்படி தொடர்பு கொள்ளுவதென விழித்துக் கொண்டிருந்த போது, இப்படி காரில் விளம்பரப்படுத்தலாம் என தோன்றிற்று. சின்ன உலகம் பாருங்கள், கை மேல் பலன்' என்றான் நோரா.
இப்படியாக தொடர்ந்த பேச்சினை கவனிக்காமல் எதோ செய்து கொண்டிருக்கும் என் கவனத்தையும் ஈர்த்தது, தொடர்ந்த அவர்களது பேச்சு.
'அங்கிள், இன்றிறவே நமது Reuniuon-ஐக் கொண்டாடலாம். வரும்போது என்னென்ன பொருட்கள் வாங்கி வர சொல்லுங்கள்....ஆங்... முக்கியமாக ஒரு 24 பேக் பியர் கேன், அப்புறம் காண்டோம் - இதெல்லாம், வாங்கி வந்துடறேன்...மஜா பண்ணிடலாம்' என்றான் நோரா.

அவர்கள் பேச்சு முடிந்த கையோடு, நோராவின் ப்ளாகைப் பற்றியும், கந்தர் அலங்காரம் பற்றியும் பேச்சைத் துவங்கினேன், நான்.
'அதெல்லாம் அந்தக்காலம். அப்போது எங்கள் தமிழாசிரியரின் தூண்டுதலால், தமிழார்வம் ஏற்பட்டு, நிறையப் படித்ததுண்டு. அகராதி கொண்டு, பல பழந்தமிழ் பாடல்களின் பொருளை ஷெர்லாக் ஹோம்ஸ் போல தேடிக் கண்டுபிடித்து, எழுதுவதில் ஒரு 'திரில்' இருந்தது.' என்றான் நோரா.
'இப்போது...?', என ஆவலோடு வினவினேன் நான்.
'இப்போ, பல ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பயணிக்கிறேன். வாழ்க்கையை அனுபவிக்க, இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது எனத் தெரிந்து கொண்டேன். செல்லும் இடத்தில் நட்பு வட்டாரங்களை ஏற்படுத்திக் கொண்டு, வாழ்க்கையை அனுபவிக்கிறேன்' என்றான்.
'சரி. அனுபவித்துக் கொண்டே இருக்கும் போது, திடீரென ஒருநாள் இந்த அனுபவிப்பையெல்லாம் துறக்க வேண்டும் என்றால் இயலுமா' என வினவினேன்.
'ஏதற்காக துறக்க வேண்டும்?' என்றான் அவன்.
'உனக்கும் உலகுக்கும் இருக்கும் தொடர்பு எந்த அளவில் என்பதைக் கணிக்க... அதைவிடு. சும்மா ஒரு பேச்சுக்குச் சொல்லேன்.' என்றேன் நான்.
'நல்லா திளைத்து விட்டால், எப்படி துறக்க இயலும்?' என்றான்.
'அப்போ கற்றதனால், ஆய பயனென் கொல்?' என்றேன்.
'ஓ, நீங்க அங்கே வரீங்களா?. இந்த தமிழ் இருக்கே, அதுவும் மது போல. அதைக் கற்க கற்க கிடைத்த இன்பத்தில் திளைத்தேன். அது தந்த இன்பம் போல், இப்போது இன்னும் பலவும் இருக்கக் கண்டேன். எனக்கு இவற்றில் வேறுபாடில்லை.' என்றான்.
இதுபோல மொழியின் வசத்தில் சிக்கி, அதைத்தாண்டி செல்ல இயலார் நிறைய பேர் உண்டு' என என் மனதிற்குள் நினைத்துக் கொண்டேன், அவனிடம் சொல்லவில்லை. ஆனால், இதை மட்டும் சொன்னேன்.
'இருக்கட்டும். எந்த இன்பத்தில் திளைத்தாலும், அதனோடு உனக்குள்ள தொடர்பின் நீளத்தை அறிந்துகொள். அதை சரியாக கணக்கிட்டு வைத்திருக்கும் பட்சத்தில், அதை துறப்பதும் எளிதாகும். உனக்கு நன்கு பழக்கப்பட்டிருக்கும் கந்தர் அலங்காரச் செய்யுளையும், அப்படி தேவைப்படும்போது, மனதில் நினைத்துக்கொள்:
“விழிக்குத்துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றா
மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த
பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”
விழிக்கு - மொழிக்கு - பழிக்கு - தனி வழிக்கு - இவை யாவைக்கும், இன்னும் நீ சாதிக்க விரும்பும் இன்ன பிறவற்றிற்கும், அவனைத் துணையாக கொண்டால், இயலாதது இல்லையப்பா.' என்றேன்.

அவன் என்னை ஒருமாதிரி பார்த்துக் கொண்டிருக்க, அந்த தருணத்தை முடிவுக்கு கொண்டு வருவதுபோல், 'என்ன ப்ரொபசர் வீட்டுக்கு கிளம்பலாமா?' என்றேன். அவ்வாறாகவே செய்தோம்.

கனவும் கலைந்தது.

மெய்ம்மை?: சுட்டி!

14 comments:

  1. ஜீவா,

    இது கனவாக சொல்லப்பட்ட கதை, அப்படித்தானே?

    இதில் நீங்க சொல்லியிருப்பதைத் தான் படிப்பது ராமாயணம், இடிப்பது கோவில் அப்படின்னு நம்ம ஊர்ல சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  2. வாங்க மௌலி சார்,
    //இது கனவாக சொல்லப்பட்ட கதை, அப்படித்தானே?//
    திருத்தம். இது கதையாக சொல்லப்பட்டக் கனவு.
    எனக்கு கற்பனைக் கதைகள் எழுதும் பழக்கமில்லை. ஆனால், கனவில் வரும் சம்பங்களில் கோர்வையை கதையாகத் தர இயல்கிறது. இதுவரை இதுபோல நான்கு எழுதிவிட்டேன் என்றால், எனக்கே மலைப்பாய்த்தான் இருக்கிறது!

    அந்த இரு பாத்திரங்களுக்குமான பெயர்கள் கனவில் தோன்றவில்லை. அவை மட்டும் என் கற்பனையே.
    //படிப்பது ராமாயணம், இடிப்பது கோவில் அப்படின்னு நம்ம ஊர்ல சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.//
    இதிலும் உணர்ந்து செய்தல், உணராமல் செய்தல் எனப் பல நிலைகள் உள்ளன.
    எல்லாம் உணர்ந்து விட்டால், இனி இங்கே ஏன் இருக்கப் போகிறோம்?

    ReplyDelete
  3. // விழிக்குத்துணை திருமென் மலர்ப்பாதங்கள் மெய்ம்மை குன்றா
    மொழிக்குத்துணை முருகாவெனும் நாமங்கள் முன்பு செய்த
    பழிக்குத்துணை அவன் பன்னிருதோளும் பயந்த தனி
    வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே.//

    இத‌ற்கு முத‌ற்ப‌திவில், தாங்க‌ள் குறிப்பிட்ட "கைத்த‌வம்" என்ப‌து " முன்பு செய்த‌
    ப‌ழி" அதாவ‌து முற்பிற‌வியில் செய்த‌ வினைப்ப‌ய‌ன் அவ‌ற்றிலிருன்து விடுப‌ட‌
    ஒரு இல்லை ஒரே துணை அவ‌ன் ப‌ன்னிருதோளும்..என‌ பொருள் கொள்ள‌லாமோ ?

    நிற்க‌. அன்றாட வாழ்க்கையிலே யாரோ யாரையோ தேட, பின் சேர, சார, பல்வேறு த‌ருண‌ங்க‌ளில் நாம் ஒரு trigger ஆக‌ அல்ல‌து catalyst ஆக‌
    இருக்கிறோம். இத‌ற்கான‌ ஊக்குவித்த‌ல் ந‌ம்மிடையே எப்ப‌டித்தோன்றுகிற‌து?
    ந‌ம் "விழிக்குத்துணை" இருக்கும் அவ‌ன‌து " திருமென் ம‌ல‌ர்ப்பாத‌ங்க‌ள்" தானே ?

    ம‌ர‌த்தைக் கொண்டு நாற்காலி செய்கிறோம். மேசை செய்கிறோம். உளி ந‌டுவில்
    வ‌ருகிற‌து. இழைப்பான் வ‌ருகிற‌து. செய்து முடித்த‌பின் உளியும் இழைப்பானும்
    நாற்காலி, மேசை அருகிலேவா நான்தான் உனைச்செய்தேன் என‌ச்சொல்லிக்கொண்டே
    இருக்கின்ற‌ன‌வா என்ன‌ ?

    அதுபோல‌வே ந‌ட‌க்கும் யாவைக்கும் நாம் ஒரு tool ஆக‌ இருக்கிறோம் என்ப‌துவே
    நித‌ர்ச‌ன‌ம்.

    சுப்பு ர‌த்தின‌ம்.
    த‌ஞ்சை.
    http://pureaanmeekam.blogspot.com


    "

    ReplyDelete
  4. வாங்க சுப்புரத்தினம் ஐயா,
    //அதுபோல‌வே ந‌ட‌க்கும் யாவைக்கும் நாம் ஒரு tool ஆக‌ இருக்கிறோம் என்ப‌துவே
    நித‌ர்ச‌ன‌ம்.//
    தாங்கள் மொழிந்தது மிகவும் நன்று.
    நாம், அவன் கையில் கருவி. என்ன சில சமயம், இந்தக் கருவிகளும் கர்வித்துக் கொள்கின்றன. கர்வம் கண்ணை மறைக்கம், சித்தம் கலங்குகின்றது. தெளிவிலா சித்தம், பாவம் எனும் கல்லறைக்கு இருக்கும் பல வழிகளில் தொலைந்து போகிறது.
    கர்வம் கொள்ளா மனமே, உன் கால் வருடேனோ?

    ReplyDelete
  5. சில சமயம் என்ன, எப்போதுமே நாமேதான் எல்லாம் நடத்துகிறோம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது :(

    //எந்த இன்பத்தில் திளைத்தாலும், அதனோடு உனக்குள்ள தொடர்பின் நீளத்தை அறிந்துகொள். அதை சரியாக கணக்கிட்டு வைத்திருக்கும் பட்சத்தில், அதை துறப்பதும் எளிதாகும்.//

    இதுவும் சரிதான் :)

    ReplyDelete
  6. //திருத்தம். இது கதையாக சொல்லப்பட்டக் கனவு.//

    சரிங்க..திருத்திக் கொண்டேன் :)

    //கனவில் வரும் சம்பங்களில் கோர்வையை கதையாகத் தர இயல்கிறது. இதுவரை இதுபோல நான்கு எழுதிவிட்டேன் என்றால், எனக்கே மலைப்பாய்த்தான் இருக்கிறது!//

    4 எழுதியிருக்கீங்களா?, நான் 1-2 தான் படித்திருக்கேன்னு நினைக்கிறேன். சுவாரஸ்யமாக இருக்கிறது, அப்பறம் மீதியிருப்பதையும் படிக்கிறேன்.


    //அதுபோல‌வே ந‌ட‌க்கும் யாவைக்கும் நாம் ஒரு tool ஆக‌ இருக்கிறோம் என்ப‌துவே நித‌ர்ச‌ன‌ம்.//

    உண்மைதான் சூரி ஐயா, உங்களது பின்னூட்டத்தை நன்றாக உணர்கிறேன்.

    ReplyDelete
  7. வாங்க கவிநயாக்கா,
    //சில சமயம் என்ன, எப்போதுமே நாமேதான் எல்லாம் நடத்துகிறோம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது :(//
    என்னவென்று புரியவில்லை. ஏதோ சங்கதி இருக்கென்று மட்டும் புரியுது. அக்கா விவரமாக சொல்லுவார்கள் எனக் காத்திருக்கிறேன்!

    ReplyDelete
  8. /4 எழுதியிருக்கீங்களா?,// ஆமாங்க மௌலி!
    - கனவு என்கிற லேபிளை சொடுக்கினால், நாலும் வரும்!

    ReplyDelete
  9. வேற ஒண்ணுமில்ல ஜீவா. நீங்க சொன்ன

    //நாம், அவன் கையில் கருவி. என்ன சில சமயம், இந்தக் கருவிகளும் கர்வித்துக் கொள்கின்றன. //

    இதுக்காகத்தான் "சில சமயம் என்ன, எப்போதுமே நாமேதான் எல்லாம் நடத்துகிறோம் என்ற எண்ணமே மேலோங்கி இருக்கிறது" அப்படின்னு சொன்னேன்.

    முதல்லயே எடுத்துக் காட்டியிருக்கணும். குழப்பத்துக்கு மன்னிச்சுக்கோங்க :)

    ReplyDelete
  10. ஓ, அது மறுமொழிக்கான மறுமொழியா அக்கா,
    இப்போ புரிஞ்சு போச்சு.
    சரி, இதுக்கு பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாமே...

    ReplyDelete
  11. பரவாயில்லையே! இவ்வளோ தூரம் கனவுகள் ஞாபகம் இருக்குமா? எனக்கு இருப்பதில்லை.

    ReplyDelete
  12. வாங்க திவா சார்,
    எப்போதும் ஞாபகம் இருப்பதில்லை. காலையில் விழிப்பதற்கு சற்று முன்னால் வரும் கனவிலிருந்து, சட்டென்று விழித்துக்கொண்டால், கடைசியாக ஏற்பட்டது நினைவுக்கு வரும். அதிலிருந்து, பின்னோக்கி, பின்னோக்கிப்போய், முழுவதையும் ஒருமுறை நினைவுக்கு கொண்டு வருவேன். உடனே போய், இவற்றை, சிறு குறிப்புபோல எழுதி வைத்துக்கொண்டு, பின்னர் அதனை விரிவாக்கி எழுதிட பிறந்தவை இந்தக் கதைகள்.
    சில சமயம், குறிப்புகளை எழுதி வைக்காமல் மறந்ததுண்டு. சில சமயம், குறிப்புகளை எழுதி வைத்தும், பின்னர், அவற்றை விரித்து எழுத இயலாமல் விட்டதுண்டு. சுடச்சுட, சில மணி நேரங்களில் எழுத முயன்றால், சின்னச்சின்ன குறிப்புகளும் தங்குவதுண்டு!

    ReplyDelete
  13. "எந்த இன்பத்தில் திளைத்தாலும், அதனோடு உனக்குள்ள தொடர்பின் நீளத்தை அறிந்துகொள். அதை சரியாக கணக்கிட்டு வைத்திருக்கும் பட்சத்தில், அதை துறப்பதும் எளிதாகும்."
    மிகச்சரியான அளவுகோல்தான் ஆனால் அதன் நூலைப்பிடித்துச்செல்வதற்கு கூட நமக்கு குருவருளும் திருவருளும் வேண்டியுள்ளது என்பதுதான் உண்மை.

    ReplyDelete
  14. வாங்க கிருத்திகா அக்கா,
    முக்கியமானக் கருத்தை முன் நிறுத்திச் சொன்னீர்கள்;
    குருவருள் திருவருளும் இன்றி ஏதும் சாத்தியமில்லை.

    ReplyDelete