Wednesday, May 21, 2008

சுவர்களை உடைத்திட சக்தி தருவாய்!



காண்பதெல்லாம் காட்சிப்பிழையென்றால் - காசினியும்

பொய்யல்லவோ சொல்லடி சிவசக்தி - மாயையென்று

காண்பதெல்லாம் கொண்டால் மாண்டிடாதோ

மன்னுயிரெல்லாம், சொல்லடி சிவசக்தி.


பாரெல்லாம் பரசிவ வெள்ளம் பரவி

யாவையும் உன்னில் மூழ்குதடி, எனினும்

என்னிடம் மறைந்திட்டாய், ஏனடி சிவசக்தி?

எட்டியும் எட்டாமலும் செய்திட்டாய், ஏனடி சிவசக்தி?


காட்சிப் பொருளில் எல்லாம் சாட்சியாய்

ஆட்சியும் செய்யும் சச்சிதா னந்தாமாய்

தோற்றமெல்லாம் நீயிருக்க பிழைவர பிறிதுமோர்

காரணமும் உண்டோ சொல்லடி சிவசக்தி!


வேட்கையும் தணிந்திட வேதனையும் ஓய்ந்திட

வேங்குழல் நாதமாய் நாதன்நாமம் ஓதிட

வாட்டிடும் பிணியெல்லாம் வந்தவழி ஓடாதோ

உனைப்பணிந்திட, அருள் சொல்லடி சிவசக்தி!


பிறப்பெல்லாம் உன்னில் தொடக்கமென இருக்க

இறப்பெல்லாம் உன்னை அடைந்திடவென இருக்க

இடையில் எழுந்த சுவரையெல்லாம் உடைத்திட

சக்தி தந்திடுவதெப்போ, சொல்லடி சிவசக்தி!

8 comments:

  1. படம் அதற்கேற்ற கவிதை... :)

    ReplyDelete
  2. வாங்க, திரு.மௌலி!

    ReplyDelete
  3. படமெல்லாம் சூப்பர்! கவிதை அதை விட சூப்பர்! கடைசி மூணு பத்தியும் ரொம்பப் பிடித்தது.

    //பிறப்பெல்லாம் உன்னில் தொடக்கமென இருக்க

    இறப்பெல்லாம் உன்னை அடைந்திடவென இருக்க

    இடையில் எழுந்த சுவரையெல்லாம் உடைத்திட

    சக்தி தந்திடுவதெப்போ, சொல்லடி சிவசக்தி!//

    உங்களுக்கு அவள் சொன்னா, எனக்கும் சொல்லுங்க!

    ReplyDelete
  4. வாங்க கவிநயா,
    இந்தப் படத்தை பதிவிடலாம் என்று மூன்று மாதம் முன்பே சேமித்து வைத்தது - இப்போதுதான் எல்லாமும் சேர்ந்து பதிவிட இயன்றது.
    இந்தக் கவிதை உருவானதன் பின்புலம் என்னவென்று யோசித்தபோது - பாரதியும், பாரதியின் காட்சிகளை VSK சார் இங்கே படம்பிடித்துக் காட்டியதும் இருக்கலாம் எனத் தோன்றுகிறது.

    ReplyDelete
  5. நல்ல பொருட்செறிவுள்ள கவிதை. நண்பரை வாசிக்கச்சொல்லி விட்டுக் கண்களை மூடிக் கொண்டு ரசித்தேன் என்பதை விட மெய்சிலிர்த்தேன் என்றுதான் சொல்லவேண்டும். -அகரம்.அமுதா

    ReplyDelete
  6. நல்லது அகரம்.அமுதா,
    தங்கள் ரசிப்பில் இந்த எழுத்தின் பயனைப் பெற்றேன், நன்றிகள்.

    ReplyDelete
  7. மறுமையில் இறைவனை அடைந்திட
    இடையூறாய் எழுந்து நிற்கும் மாயச்
    சுவரையெல்லாம் (படங்கள் அருமை) இடித்திடிவதே இம்மையிலே
    இடப் பட்ட பணியெனக் கொண்டு,
    சக்தி வேண்டி தவம் செய்யும்
    நல்ல கவிதை. கவி நடை பிரமிக்க வைக்கிறது. வாசிப்பேன் விரைவில் மற்ற கவிதைகளையும்.

    ReplyDelete
  8. வாங்க ராமலக்ஷ்மி,
    வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றி.
    இன்ன பிற இடுகைகளையும் படித்து கருத்துச் சொல்லவும்!

    ReplyDelete