Saturday, November 10, 2007

எங்கிருக்கிறான் இறைவன்?

இறைவன் எங்கே இருக்கிறான் என்று எனக்கு முதன் முதலில் சொல்லித்தந்த வரிகள் - இந்த வள்ளலாரின் வைர வரிகள் தான். ஏதோ ஒரு வகுப்பு, எதுவென்று நினைவில்லை - தமிழ் பாடப் புத்தகத்தில் கடவுள் வாழ்த்துப் பாடலாக வரும்:


எங்கும் மனிதர் உனைத்தேடி
இரவும் பகலும் அலைகின்றார்.

எங்கும் உளது உன் உருவம்
எனினும் குருடர் காண்பாரோ?

எங்கும் எழுவது உன் குரலே
எனினும் செவிடர் கேட்பாரோ?

எங்கும் என்றும் எவ்வுயிரும்
எல்லாம் ஆன இறைவனே.

அந்த வயதில், கடவுள் என்றால் படங்களில் பார்த்த சிவனோ, முருகனோ, திருமாலோ, விநாயகனோ - இப்படி இன்னும் பலரின் திருமுகங்கள் தான் நினைவுக்கு வரும். அந்தப் பருவத்தில் - இப்படி யார் ஒருவரின் பெயரும் இல்லாமல், இறைவன் இவன் என்று சொன்ன அந்த வரிகள் என் கவனத்தை கயிற்றால் கட்டி இழுத்தன போலும். எளிதான அந்த வரிகளின் சக்தி இன்றைக்கும் பிரம்மிப்பாகவே இருக்கிறது.

யார் இறைவன் என்றெல்லோரும் தேடி அலைகின்றார். ஓராயிரக்கணக்கில் கதைகள் சொல்லி எப்படியெல்லாமோ அவனைப் பற்றி பலரும் சொல்லி விட்டார். எனினும் அந்த தேடல் தீர்ந்த பாடில்லை. மண்ணில் எத்தனை மூலை முடிக்கிலும் தேடினாலும் அவன் மாயவனாகவே இருக்கிறான். ஏற்கனேவே பலர் தேடிக் கண்டதாகச் சொன்னாலும் ஒவ்வொருவரும் மீண்டும் தானாகவும் தேட வேண்டியிருக்கிறது. மனிதர் தேடும் வேறு எந்த பொருளுக்கும் இப்படி ஒரு தனித்துவமான குணம் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு குறிப்பிட்ட கடவுளை வணங்குவது ஒரு குறிப்பிட்ட உருவத்தில் இறைவனைக் குறிக்குவது போலாகாதா? அப்படி குறுக்கப்பட்ட கடவுளும் கடவுளாகுமோ என்று கேட்கலாம். கடவுளே இவ்வுலகம். அனைத்து உருவங்களும் அவர் உருவங்களே. எந்த உருவத்தில் வேண்டுமானாலும் அவரை வழிபடலாம். கீதையில், இறைவன் ஸ்ரீகிருஷ்ண உருவத்தில் அர்ஜூனனுக்கு இவ்வாறு உபதேசம் சொல்கிறார். "இறைவனான என்னிடம் இருந்தே அனைத்தும் தோன்றுகினறன, நிலை பெறுகின்றன, ஒடுங்குகின்றன".

எங்கும், என்றும், எவ்வுயிரும் எல்லாமும் ஆன இறை அவன் பிரதிபலிக்கும் இடங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் பரம்பொருளான சைதன்யமோ அளவற்றது. எல்லையில்லாதது. அதே சைதன்யம் என்னும் பேரறிவுதான் (Super Consciousness), மேலே பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கீதா உபதேசத்தில் 'என்னிடம் இருந்து' என்ற சொல்லாக மலருகிறது. அதே சைதன்யம்தான் நம்மையும் 'நான்' எனச் சொல்ல வைக்கிறது. நான்தான் எல்லாவற்றுக்கும் காரணம் என்று நீங்களும் நானும் கூடச் சொல்லலாம். நான் இந்த உடல் அல்ல, நான் இந்த மனம் அல்ல, நான் என் அவையங்கள் அல்ல, நான் புத்தியா, நான் ஒன்றுமில்லாமல் சூன்யமா, பின் நான் யார், என்ற சுய வினவலின் மூலமாக அறிந்து, அந்த அறிவின் மூலமாக நான் அந்த சைதன்யமாகவே இருக்கிறேன் என்று உணர்ந்து சொல்லலாம்.

வேதாத்திரி மகரிஷி அழகான எடுத்துக்காட்டு ஒன்று தருவார். எங்கெங்கும் நிறைந்திருக்கும் பிரம்மத்தினை, ஒரு பெருங்கடலுக்கு ஒப்பாக எடுத்துக் கொண்டு, அதிலிருந்து ஒரு குடுவையில் நீர் முகர்ந்து கொண்டால், அந்த குடுவை நீர்தான் நம் ஜீவன். குடுவை நீர் மீண்டும் கடலில் கலக்கும்வரை, அது வெறும் நீர்தான். கடலில் கலந்த பின்னோ அது கடல். கடலில் எந்தப் பகுதி நீர் இந்தக் குடுவை நீர் எனப்பிரித்தறிய இயலாது.அதுபோலவே ஜீவன் பரமனை அடைந்த பின்னரும்.

சுவாமி தயானந்த சரஸ்வதி கடலின் அலைகளுடன் ஒப்பிடுவார். பெருங்கடலில் சிறிய அலை ஒன்று கரையை நோக்கி உருண்டோடிக் கொண்டிருக்கிறது. இன்னும் சிறிது நேரத்தில் நான் அழிந்து விடுவேனே என்ற வருத்ததுடன். "நான் அழியுமுன் என்னை காப்பாற்ற யாருமில்லையா" என ஓலமிடுகிறது. அதைக்கேட்டு அருகில் வந்த பேரலை ஒன்று, சிற்றலையிடம், "வருத்தப்படாதே, கண நேரமே தோன்றி மறையும் அலையல்ல நீ, இந்த பெருங்கடல் நீ என உணர்வாய். உன்னையும், என்னையும், ஏனைய அலைகளையும் படைத்த கடவுள் இந்த கடலே. உன்னில், என்னில் மற்றும் ஏனைய அலைகளிலும் இந்த கடலே நீராக வியாபித்து இருக்கிறது. நீயும் இந்தக் கடலும் வேறல்ல, அனைவரும் இந்தக் கடலில்தான் இறுதியில் ஒடுங்குவோம்." என்று கூறுகிறது.

இறைவனும் நாமும் உண்மையில் அளவற்ற சைதன்யம்தான். சைதன்யமான நம்மிடத்தில்தான் அனைத்துலகமும் இருக்கிறது. அதைப்படைத்த இறைவனும் இருக்கிறான்.

44 comments:

  1. ஜீவா,

    இறைவன் - அவனைப் பற்றிய ஒரு அருமையான பதிவு.
    //
    எங்கும் என்றும் எவ்வுயிரும்
    எல்லாம் ஆன இறைவனே.
    //

    வள்ளளாரின் வைர வரிகள்.
    அருட் பெருஞ் ஜோதி
    தனிப் பெரும் கருணை
    உருவமில்லா இறைவனை அறிமுகப் படுத்திய பெருமான் அவர்.

    இறைவனைத் தேடுவது நம் வேலை.
    நமக்கு உணர்த்துவது அவன் வேலை.

    நாம் ஒருவருக்கு மகன். இன்னொருவருக்கு தமையன். மற்றொருவருக்கு தம்பி. மற்றும் மாணாக்கண், நண்பன், காதலன், கணவன், தந்தை, மாமன், மச்சினன், எனப் பலப் பல உருவங்கள் எடுத்தாலும் நாம் ஒன்றேதான். அந்த ஒன்றான நாம் என்பது யாரெனத் தெரியாது.

    இதுதான் இறைத் தத்துவம் என நினைக்கிறேன்.

    கண்டவர் விண்டிலர்
    விண்டவர் கண்டிலர்

    ReplyDelete
  2. இருந்தும், அறியாமையால் தேடுகின்ற மனிதர்க்கு, இறையொளியைக் காட்ட வேண்டுமென்பதே வள்ளளாரின் தத்துவம். இனிமை,எளிமை - அதனுள் தூய்மை - இந்த நான்கு அடிகளில் தோன்றும்.

    ReplyDelete
  3. "அருட் பெருஞ் ஜோதி
    தனிப் பெரும் கருணை"


    அந்த இரண்டு வரிகளில்
    மாத்திரைகளின் கணக்குகள் கூட
    மாறாமல் இருப்பதென்னே?

    "இறைவனைத் தேடுவது நம் வேலை.
    நமக்கு உணர்த்துவது அவன் வேலை."


    இந்த இரண்டு வேலைக்கும் இடையேதான் எத்தனை தூரம்?

    "கண்டவர் விண்டிலர்
    விண்டவர் கண்டிலர்"


    ஆகா, அழகாக நான்கே நான்கு வார்த்தைகளில் சொல்லி அழகாக முடித்தீர் திரு. சீனா.
    இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற ஜீவன் முக்தர்கள் அதற்கு விதிவிலக்கானாலும், இது பெரும்பாலும் பொதுமொழி.

    ReplyDelete
  4. செல்விஷங்கர்,
    முதல் முறையா இந்தப்பக்கம் வந்து மறுமொழி கொடுத்திருக்கீங்க, வருகை நல்வரவாகுக.

    இறைவொளியாகவே இருந்து
    அருள் ஒளியை பெரும் மழையாய் பொழிந்தவர் அல்லவா அந்த அருட்பெருங்கோ!

    ReplyDelete
  5. கண்ணிருந்தும் குருடராய்,
    காதிருந்தும் செவிடராய்
    இங்கு பலர் இருக்கிறோம்.

    எங்கெங்கு காணினும் இயற்கையடா எனப் பாடிய பாரதியும் இதையே சொல்லிச் சென்றான்.

    தினசரி பதிவு தயார் செய்ய வேண்டியிருப்பதால், இங்கெல்லாம் வரமுடியவில்லை.
    மன்னிக்கவும், திரு.ஜீவா.

    ReplyDelete
  6. ஆகா, இப்போதாவது வர இயன்றதே என்று மனம் சொன்னாலும்,இனி அடிக்கடி வர வேணும் என்று மதி சொல்லுது, திரு.(வி)எஸ்.கே!
    ஞானபண்டிதனின் அருள்முகமும் மறுமொழிகளில் இடம் பெரும் அல்லவா!

    ReplyDelete
  7. Anonymous9:18 AM

    வேதாத்திரி மகரிஷி, மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோரின் எடுத்துக்காட்டுகளும் விளக்கங்களும் அருமை! ராமகிருஷ்ண பரமஹம்சர் இதே போல் சொல்வார், "எல்லையற்ற கடல், கங்குகரையற்ற தண்ணீர். அந்தக் கடலில் ஒரு பானை மூழ்கியுள்ளது. பானைக்கு வெளியேயும் தண்ணீர், உள்ளேயும் தண்ணீர். உள்ளும் புறமும் ஒரே பரமாத்மா இருப்பதை ஞானி காண்கிறான். அப்படியானால் எது இந்தப் பானை? பானை இருப்பதால் தான் தண்ணீர் இரண்டு பகுதியாகத் தெரிகிறது, உள்ளே, வெளியே என்ற எண்ணம் தோன்றுகிறது. 'நான்' என்ற பானை இருந்தால் இந்த எண்ணமும் இருக்கும். இந்த 'நான்' மறைந்தால் எது இருக்கிறதோ அது இருக்கிறது. அது சொற்களுக்கு அப்பாற்பட்டது."

    இதையெல்லாம் உணர்வுப்பூர்வமாக அனுபவித்தவர் தானே வள்ளலார் பெருமான். அதனால் தானோ அவரது அந்த எளிய வரிகளிலும் அத்தனை சக்தி!

    ReplyDelete
  8. வருக ஸ்ரீநிவாசன்,
    //பானைக்கு வெளியேயும் தண்ணீர், //
    நல்ல உருவகம், உருவகக் கதைகள் சொல்வதில் பரமஹம்சருக்கு இணை அவரே.

    ReplyDelete
  9. பரமாத்மா நிர்குணம். நிராகாரம். குணங்களற்றதாய், அருவாய், எல்லாம் அடக்கியதாய், எங்கும் நிறைந்ததாய் சொல்லப்படுகிற பிரம்மன் ஆகும்.

    இத்தகைய பிரம்மனுக்கு நாம ரூபங்களை அதாவது பெயர், உருவம் இவைகளையும், குணங்களையும் (உபாதி என உரைக்கப்படுவது) சேர்த்து நினைப்பது ஸகுண பிரம்மன் என்றும் ஈஸ்வரன் என்றும் சொல்வோம்.

    இந்த உபாதிகளுடன் இணங்கிய அல்லது இணைக்கப்பட்ட ஈசுவரனுக்குத்தான் நாம் பல்வேறு பெயர்களிட்டு, குணங்களையிட்டு, நமது குலவழி நடைமுறைக்கு ஒத்தாற்போல் பூசை செய்கிறோம். இந்த பூசை முறைகளைத்தான் மறைகளில் விளக்கமாக கர்ம காண்டத்தில் விளக்கப்படுகின்றன். இந்த கர்ம காண்டத்தில் சொல்லப்படுகின்ற அனைத்தும் இல்வாழ்வில் ஈடுபடுகின்ற எல்லோருக்கும் பொருந்தும்.

    நிற்க. மற்றும் இல்வாழ்வினைத்துறந்து சன்னியாச வாழ்வை மேற்கொள்ள தயார் நிலையில் உள்ள வானபிரஸ்தம் என்ற நிலை அடைந்தவர் இந்த ஈசுவரனை கர்ம காண்டங்களில் சொல்லப்பட்ட முறைகளினின்றும் சிறிது சிறிதாக தம்மை விடுத்திக்கொண்டு ராஜ யோகத்தில் சொல்லப்படுகின்ற தாரணம் தொடங்கி தியானத்தில் ஈடுபட்டு உயர்ந்த் அறிவின் ( Gnana )
    மூலம், மேலே சொல்லப்பட்ட ஈசுவரனை உருவமற்ற குணங்களற்ற பேரறிவாக தியானிக்க, போற்ற முயல்கிறார்.

    முற்றும் துறந்த சன்னியாசிகள் கர்ம காண்டத்தைக்கடந்து சென்றவர். அவர் ஈசுவரனை (அதாவது நாம ரூபங்கள் உடைத்த பிரும்மனை) தியானம் துறந்து, அருவாக குணங்களற்றாத எல்லாம் நிறைந்த பேரறிவாக பேரானந்தமாக தியானிக்கிறார்.

    இந்த நிலை அடைந்தோர் எவ்வாறு பிரும்மனை வர்ணிப்பார் ?
    கண்டவர் விண்டிலை. விண்டவர் கண்டிலை என்பார்.

    ஆயினும் ஏதேனும் சொல்லவேண்டும். ஆகவே பரமஹம்சர் போன்றவர் பிரும்ம த்தை அனுபவித்தவர் இந்த ஆகாச, ஆழி நீர் குட‌ உதாரணங்கள் சொல்லுவது வெள்ளிடை மலை.

    குளத்தில் ஒரு பாண்டத்தை அமிழ்த்தினால், உள்ளேயும் புறமேயும் தண்ணீர் உள்ளது.
    பாண்டத்தை உடைத்துவிடின் எல்லாம் ஒன்றாய்க்கலந்து விடுகிறது.
    பிரும்மன் அகண்ட வெளி. அவனை நாம் உருவங்கள், குணங்கள் தந்து ஒரு பானைக்குள் அடைத்து வைத்து ஈசுவரனாக வழிபடுகின்றோம். இது தவறில்லை. ஆயினும், இது ஒரு வழியே. This is a means not an end.
    புறப்பொருள்களிலிருந்து விடுபட்ட நிலை... மண்பாண்டம் உடையும் நிலை.
    அ ந் நிலையில் ஈசுவரனை பிரம்மனாக காண்கிறோம். இது முடிவு நிலை. The End Game.

    பரம ஹம்ஸர், வேதாத்ரி மகரிஷி போன்றோர் ஏனைய மானுடர்தம் அன்றாட வாழ்க்கையிலிருந்து விடுபட்டு பரமனை உணர்ந்த மகான்கள் .
    இரண்டை விடுத்து அந்த ஒன்றோடு ஒன்றானவர்கள்.
    கபீர் விளக்குகிறார்: அதே உதாரணம் தான்.

    Jal mein kumbha, kumbha mein Jal, Bhahar Beethar Paani.
    pat pootath jal jalhi samaana, ( jaamein ) paani paani..

    சூரிய நாராயணன்.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  10. ஆகா, அழகாக அனைத்தையும் ஒரே பின்னூட்டத்தில் விளக்கிவிட்டீர் ஐயா, மிக்க நன்றி.

    நான் முதன் முதலில் ஈஸ்வரன் சென்ற சொல்லை விளகங்களில் கேள்விப்படும்போது - இந்த ஈஸ்வரந்தான் சிவனுமா என்று குழப்பைக்கொண்டேன். பின் இங்கே ஈஸ்வரன் என்பது ஒரு Personal Godஐ (இஷ்ட தேவதை) குறிப்பதாககும். அது சிவனாகவும் இருக்கலாம், இன்னொரு தெய்வமாகவும் இருக்கலாம், அல்லவா?

    //இது தவறில்லை. ஆயினும், இது ஒரு வழியே. This is a means not an end.
    புறப்பொருள்களிலிருந்து விடுபட்ட நிலை... மண்பாண்டம் உடையும் நிலை.
    அந்நிலையில் ஈசுவரனை பிரம்மனாக காண்கிறோம். இது முடிவு நிலை. The End Game.
    //
    வழியையும் முடிவையும் அழகாக சொல்லி 'End Game' என முடித்திருப்பது அருமை.

    கபீரின் ஈற்றடிகளிலும் அதே உதாரணம், நிறைவைத் தருகிறது.

    ReplyDelete
  11. அத்வைத சித்தாந்தத்தைப் பற்றிய ஒரு நல்ல தொகுப்பு ஜீவா. நன்றி.

    ReplyDelete
  12. வருக குமரன். வருகைக்கு நன்றி.
    தவறேதும் கண்டால் தவறாமல் சொல்லவும்.

    ReplyDelete
  13. ஈண்டு முதலில் வந்தபோது, இந்த நண்பர் குழாம் இததகைய ஆற்றல் படைத்தது என
    நினைத்துப்பார்க்கவில்லை.

    குமரன் அவர்களின் வலைப்பதிவினில் "லிங்காஷ்டகம்" மற்றும் "முருகனருள்" "திரு நீற்றுப்பதிகம் " ஆகிய சில வலைப்பதிவுகளைக் கணடு, அந்த திரு நீற்றுப்பாடல்கட்கு
    எளிய நடையில் பொருள் எழுதிய திறன் என் நெஞ்சத்தினை விம்ம வைத்தது என்றால்
    மிகையாகாது.

    I lack words to portray my feelings on seeing your blog. Simply said, that was a Divine Experience.

    குமரன் குகன், கந்தன், கதிர்வேலன்,
    கார்த்திகை பாலன், கான மயில் வீரன்.
    கண்டோர் வியக்கும் அழகன் முருகன்
    வேததிற்குப்பொருளுரைத்த வித்தகன்
    தந்தைக்கு உபதேசம் செய்து
    "தான்" அதை ஒடுக்கிய வீரன்.
    சூரனை வென்ற வேலன். ‍ ‍= சூரியாம்
    "எனது தலையிற் பதங்கள் அருள்வோனே"

    "அவன் அருளாலே அவன் தாள் வணங்கி"
    குமரா சரணம் , கந்தா சரணம்,
    முருகா சரணம் =

    கார்த்திகை நாளில் அவன் கைவேல் நினைந்து
    கண்கள் நனையவே அக இருள் களைவோம்.

    குமரனுக்கு இந்த செய்தி.
    உங்கள் பணி தொடர,
    ஈசன் எல்லா அருள் புரிவான்.
    Be Yourself. God Bless You.
    சூரிய நாராயணன்.
    சென்னை.

    ReplyDelete
  14. தங்கள் ஆசிகளுக்கு மிக்க நன்றி திரு. சூரிய நாராயணன்.

    - அடியேன் சிறிய ஞானத்தன்.

    ReplyDelete
  15. Anonymous3:23 PM

    //ஏற்கனேவே பலர் தேடிக் கண்டதாகச் சொன்னாலும் ஒவ்வொருவரும் மீண்டும் தானாகவும் தேட வேண்டியிருக்கிறது. //

    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

    உடலுக்கு உணவுபோல், உயிருக்கு சுவாசம் போல்

    உள்ளத்திற்கு வைராக்கியம் ஆனால் அன்றோ தேடல் கூடும்.

    ReplyDelete
  16. //உடலுக்கு உணவுபோல், உயிருக்கு சுவாசம் போல்

    உள்ளத்திற்கு வைராக்கியம் ஆனால் அன்றோ தேடல் கூடும்.
    //
    இதைவிடவும் அருமையாக சொல்ல இயலுமோ?
    தேடலும் கூடவும்...கை கூடவும்.
    உள் உணர்வு வழி காட்டிட அகத்தேடல் அருமருந்தாய் உய்ய வழி கிட்டும் அல்லவா.

    வருகைக்கு நன்றி, மீண்டும் மீண்டும் வருக.

    ReplyDelete
  17. //"கண்டவர் விண்டிலர்
    விண்டவர் கண்டிலர்"//

    ஜீவா ஜீ,

    இதை எல்லோருமே சொல்றாங்க.
    :)

    இருந்தாலும் ஒரு கேள்வி,

    "கண்டவர் விண்டில்லை" - அதாவது கண்டவர் திரும்பியதில்லை.

    இது எப்படி தெரியும் ? திரும்பி வராமல் (விண்டாமல்) இருக்கிறார்வர்களை, அங்கே போய் யாராவது "அவங்கெல்லாம் கண்டவங்க", இனிமே திரும்பி வரமாட்டாங்க என்று பார்த்து நலம் விசாரித்து வந்தவர்கள் இருக்கிறார்களா ? அப்படி விண்டாதவர்களை கண்டுவந்தர்கள் காணதவர்களா ? இவர்களுக்கு எப்படி தெரியும்.


    ஆன்மிகத்தின் அதிகபட்ச பிதற்றல்

    "கண்டவர் விண்டில்லை " என்று சொல்லுவது தான், உண்மையாக இருந்தால் 'கண்டவர் விண்டாமல்' எப்படி தெரியவந்தது ?

    ஆன்மிகம் என்ற பெயரில் உளரி கொடினால் கூட தத்துவமாகும் என்பதற்கான நல்ல எடுத்துக்காட்டு

    "கண்டவர் விண்டில்லை" - இது மரணம் என்ற நிகழ்வுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கும்.

    ReplyDelete
  18. மரணத்தைப்பற்றி தான் சொல்லப்படுகிறது கோவி. மரணம் அடைந்தபின் மறுபிறவியில் திரும்பி வாரார், எல்லாம் அறிந்து முக்தி பெற்றவர்.
    தான் யார் என்றும் முழுதும் உணராதவர் (அவரே கண்டிலார்) மறுபிறவி என்னும் பிறவிச்சுழலில் சிக்கித் தவிப்பவர்.

    கேள்விகளெல்லாம் நிறைய கேட்கறீங்க, இப்பவெல்லாம் சரியான பதிலும் சொல்லிடறீங்க!

    ReplyDelete
  19. ஜீவா சார், என்னை நன்றாக ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். உங்கள் பதிவுகள் மிகுந்த சிரத்தையுடன் தயாரிக்கப்படுகிறது. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  20. வாங்க கலைவாணி,
    சிரத்தையை விடுங்க, நான் படித்தது சரிதானா உங்கள் மூலம் பிரயோகித்து சரி பார்த்துக் கொள்கிறேன், அவ்வளவுதான்! ;-)

    ReplyDelete
  21. கோவி.கண்ணன். விண்டுதல் என்றால் திரும்பி வருதல் என்று பொருளா? சொல்லுதல் என்றல்லவா நான் எண்ணியிருந்தேன். நான் அறிந்த வரை கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்பதற்குப் பொருள் - இறையைப் பற்றிப் பேசுபவர்கள் எல்லாம் இறையைப் பற்றி முழுதும் அறிந்தவர்கள் இல்லை; அப்படி முழுதும் அறிந்தவர்கள் யாருமே இறையைப் பற்றிப் பேசுவதில்லை. அப்படி முழுதும் அறிந்த பின் இறையே ஆகிவிடுகிறார்கள் என்பது பொது விதியாக ஆன்மிகத்தில் சொல்லப்படுகிறது. அந்தப் பொது விதிக்கும் விதி விலக்குகள் உண்டு. அவர்கள் தான் அவதார புருஷர்கள்; அப்படி இறைவனை முழுதும் அறிந்த பின்னரும் இறையே ஆன பின்னரும் மக்களின் மேல் இருக்கும் கருணையால் மக்கள் நடுவே வந்து பேசுகிறார்கள் என்பது ஆன்மிகம் சொல்லும் விளக்கம். அவர்களை ஜீவன்முக்தர்கள் என்பார்கள். பௌத்தத்திலும் போதிசத்துவர்கள் என்று இந்த நிலையை அடைந்தவர்களைக் கூறுவார்கள் - நிர்வாண நிலையை அடைந்த பின்னரும் மக்களின் மேல் உள்ள கருணையால் அவர்கள் நிர்வாண நிலையை தள்ளி வைத்துவிட்டு மக்களுக்காக உழைக்கிறார்கள் என்பது அந்தக் கோட்பாடு - அந்த மாதிரி இருக்கும் போதிசத்துவர்களைத் தான் திபெத், சீனம், ஜப்பான் போன்ற நாடுகளில் இருக்கும் புத்த மதத்தவர் வழிபடுகிறார்கள் என்பது என்னுடைய புரிதல். சரி தானா?

    ReplyDelete
  22. விண்டிலர் என்பதற்கு குமரன் சொல்வதே சரி எனப்படுகிறது.
    மேலும் ஒருவரும் இங்கே அப்படியே சொல்லி இருக்கிறார்.

    ReplyDelete
  23. ஜீவா, குமரனின் விளக்கம் பொருத்தமானதாக இருக்கிறது. அதையே ஏற்றுக் கொள்வோம். சுட்டி வேலை செய்யவில்லை.

    கோவி கண்ணன்.... விவாதத்தில் உளறல், பிதற்றல் போன்ற சொற்களைத் தவிர்க்கலாமே!

    பொதுவாக, பல பதிவுகளில் கோவி பின்னூட்டமிட்டு விவாதத்தைத் தொடங்கினாரென்றால் பலப்பல புதுப்புது செய்திகள் வெளி வரும். அவ்வகையில் கோவியும் ஒரு தொண்டு தான் செய்கிறார்.

    ReplyDelete
  24. சுட்டி வேலை செய்யவில்லையா, இதோ சுட்டியில் உள்ள பொருளை இங்கே தருகிறேன்:

    தமிழ் மறைகளும் உபனிஷத்துகளும் இறைவனின் பெருமையைக் கூறுமிடத்து இறைவனை சொற்களால் வருணிக்க முடியாது என்றும் சொற்களுக்கு எட்டாத தூரத்தில் இருப்பவனே இறைவன் என்றும் தெளிவாகக் கூறுகின்றன. ஆனால் சில அடியார்கள் இறைவனை வருணிப்பதை காண்கிறோம். அது முழுமையான படம் இல்லை. ஏனெனில் கடவுளைக் கண்டவர் அவனது முழு உருவத்தையும் சொல்ல முடிந்ததில்லை (விண்டிலர்). அப்படிச் சொல்ல வந்தவர்கள் உண்மையில் இன்னும் அவனது முழு சொரூபத்தைக் காணவில்லை (கண்டிலர்) என்றே சொல்ல வேண்டும். ஆனால் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற சில ஞானிகள் இதை சற்று விளக்கமாகக் கூறுகிறார்கள். முழு சமாதி நிலையில் முழுகுவதற்கு முன்பாக சிலர் மட்டும் மக்களின் நன்மைக்காக வெளியே வந்து அவ்வாறு சொன்னதுண்டு. அதைத்தான் நாம் ஜீவன் முக்தர்களின் வாழ்க்கையில் படிக்கிறோம். ஆகையால் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பது பெரும்பாலனவர் விஷயத்தில் உண்மையே.

    ReplyDelete
  25. அருமையான விளக்கத்திற்கு நன்றி ஜீவா

    ReplyDelete
  26. தகுந்த கருத்து சொன்ன சுட்டியை எடுத்து இட்டதற்கு நன்றி ஜீவா. தமிழ் மறைகளும் உபனிஷத்துகளும் சொல்லும் கருத்து என்று சொல்லியிருக்கிறது. இரண்டிலும் ஒவ்வொரு தரவை மட்டும் தருகிறேன். தமிழ் இலக்கியங்களில் 'ஜீவன் சிவன் ஆவதை'ப் பற்றி பல இடங்களில் வருகின்றது. ஞானவெட்டியான் ஐயா அந்தக் கருத்தைப் பல முறை பல இடங்களில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லிவருவார். உபனிஷத்துகளில் 'ப்ரஹம்வித் ப்ரஹ்மைவ பவதி - இறையை அறிந்தவர் இறையாகவே ஆகின்றனர்' என்று சொல்லப்பட்டிருக்கின்றது. இறையை அறிந்தவர்கள் இறையே ஆகிவிடுவதால் சொல்வதில்லை - கண்டவர் விண்டிலர்; அப்படிப் பேசிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் (அடியேனைப் போன்றவர்கள்) இறையை முழுதும் அறிந்தவரில்லை - விண்டவர் கண்டிலர். 'அறிந்தேன் என்று சொல்பவன் உண்மையில் அறியவில்லை; அறியவில்லை என்று சொல்பவன் உண்மையில் அறிந்தவன்' என்றொரு வாக்கியம் உபனிஷத்தில் (ஈசோபனிசத் என்று நினைவு) வருகிறது. அதன் விளக்கமும் இதனை ஒட்டியது தான்.

    இவையெல்லாம் பிதற்றல்களா? இருக்கலாம். பித்தரைப் போல் திரிபவர்கள் தானே ஞானிகள். அந்தப் பித்தர்கள் பேசுபவை ஞானப் பிதற்றல்களாக இருக்கக்கூடாதா?

    ஆன்மிகம் என்ற பெயரில் உளறிக் கொட்டினாலும் தத்துவமாகும் என்பதும் உண்மை தானே. எத்தனை எத்தனை வித உளறல்களைத் தினந்தோறும் நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அவற்றை எல்லாம் தான் கோவி.கண்ணன் குறிக்கிறார் என்று எடுத்துக் கொள்வோம். முடிந்த வரை நீரையும் பாலையும் பிரித்து உண்ணும் அன்னத்தைப் போல் நாம் இருக்க முயல்வோம். இங்கே இருப்பதை அவர் உளறல் என்று சொல்லியிருந்தாலும் 'சரி. ஏதோ ஒரு வேகத்தில் சொல்லிவிட்டார்' என்று விட்டுவிடுவோம். வேறு சில இடங்களில் (பொது மக்கள் நடுவில், தொலைக்காட்சியில், திரைப்படங்களில்) என்று ஆன்மிகத்தின் பெயரில் உளறல்கள் நடந்து கொண்டு தானே இருக்கின்றன.

    சீனா ஐயா. ஒரு முறை கோவி.கண்ணன் தன்னை நாரதர் என்று அழைத்துக் கொண்டார். நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்? அந்த பயனைத் தான் நீங்கள் கண்டு சொல்லியிருக்கிறீர்கள்! :-)

    ஆனால் இன்னும் எனக்கு விண்டுதல் என்றால் திரும்பி வருதல் என்று தான் பொருளா என்ற கேள்வி இருக்கிறது. கோவி. கண்ணன் அந்தப் பொருளில் எங்காவது படித்திருப்பார். அதனை வைத்துத் தான் அவர் அதனைச் சொல்லியிருப்பார்; கேட்டிருப்பார். எங்கே அப்படிப் படித்தார் என்பதை அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.

    ReplyDelete
  27. //சீனா ஐயா. ஒரு முறை கோவி.கண்ணன் தன்னை நாரதர் என்று அழைத்துக் கொண்டார். நாரதர் கலகம் நன்மையில் தானே முடியும்? அந்த பயனைத் தான் நீங்கள் கண்டு சொல்லியிருக்கிறீர்கள்! :-)

    ஆனால் இன்னும் எனக்கு விண்டுதல் என்றால் திரும்பி வருதல் என்று தான் பொருளா என்ற கேள்வி இருக்கிறது. கோவி. கண்ணன் அந்தப் பொருளில் எங்காவது படித்திருப்பார். அதனை வைத்துத் தான் அவர் அதனைச் சொல்லியிருப்பார்; கேட்டிருப்பார். எங்கே அப்படிப் படித்தார் என்பதை அறிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.//

    நான்கு பார்வையற்றோர்கள் யானையை தடவி பார்த்த போது, ஒருவர் காதை மட்டும் தொட்டு பார்த்துவிட்டு யானை முறம் போல் இருக்கிறது என்றாராம், மற்றொருவர் கால்களை தொட்டுப் பார்த்துவிட்டு யானை தூண் போல் இருக்கிறது என்றாராம், இன்னொருவர் வயிற்றில் கைவைத்து பார்த்துவிட்டு யானை சுவர் போல் இருக்கிறது என்றாராம், கடையில் இருந்தவர் வாலை தடவி பார்த்து யானை சாட்டை போல் இருக்கிறது என்றாராம், ஆக யானையை தடவிபார்த்தவர்களின் அனுபவம் தான் கடவுளைப் பற்றி வரும் பல்வேறு கருத்துக்களும், எதாவது ஒன்றாவது சரியாக இருந்திருந்தால் ஏன் இவ்வளவு உருவகங்கள் தேவைப்படப் போகிறது, எதுவுமே உண்மை என்பதற்கு மாறாக நம்பிக்கை என்ற அளவில் தான் கடவுள் பற்றிய வரையறை இருக்கிறது. வரையறைக்குள் சிக்காதவன் இறைவன் என்று வேண்டும் என்று சொல்வீர்கள், அதன் பிறகு எதோ ஒரு சாமியார், சாமியாடி, சொல்லி இருக்கிறார் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பார்த்தீர்களா ? என்று புலகாங்கிதம் அடைவீர்கள். பொருத்தம் என்று சொல்வதற்கு அதை ஒப்பிட்டு அளவில் அறிந்திருக்க வேண்டும், ஆனால் புனிதர் என்ற அடையாளத்தில் சொல்லப்படுபவையும் புனிதமாக இருக்கும் என்ற நம்பிக்கை மட்டுமே அதாவது புனிதரின் சொல்லையும், அவர் மீது இருக்கும் நம்பிக்கை மட்டுமே 'பொருத்தமான கருத்தின்' ஒப்பிட்டு அளவுகோள் ஆகிவிடுகின்றது. :)

    அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்பது அதீத நம்பிக்கைதான்.
    பாராட்டுக்கள் !
    :))

    விண்டுதல் - திரும்பிவருதல் என்ற பொருளில் தான் சொல்கிறார்கள், தமிழில் அதற்கு பொருளளவில் அதுதான் பொருளா என்று தெரியாது. முக்தி, மோட்சம் என்பதை அடைந்தவர் எவரோ, அவர் மட்டும் அதை உணர்வார் என்று நம்புகிறீர்களோ, அதே பொருளில் தான் சொல்லி இருக்கிறேன்.

    விண்டாமல் இருப்பவர் எதைக் கண்டார் ? என்று சொன்னால் சரியாக இருக்கும். உருவ வழிபாடுகளின் மயக்கத்தில் மனதில் நினைப்பது காட்சியாக தெரியுமாம். நீங்கள் வழிபடும் ஒரு முருகனுக்கு தும்பிக்கை இருப்பது போன்ற உருவம் இருந்தால், நீங்கள் பரவசம் அடையும் போது நீங்கள் காணும் காட்சியில் முருகனுக்கு தும்பிக்கை இருக்கும். உணர்வு பெருக்கில், காணுதல் என்பது மனதில் இருக்கும், உருவத்தை தரிசிப்பதாக ஆகும்.

    இதுதான் இராமகிருஷ்னர் போன்றோர் பார்த்த பரவசகாட்சி, ஆனால் விவேகநந்தர் போன்றோர்கள் தத்துவரீதியாக சென்றதால் அவருக்கு அந்த காட்சியெல்லாம் தெரியவில்லை. எனவே அவர் காணாதவர் என்று கொள்ள முடியுமா ?

    ReplyDelete
  28. ஜீவா,

    இன்றுதான் பார்த்தேன். பதிவினையும் பின்னூட்டங்களையும் படித்து ரசித்தேன். நான் சமீபத்தில் படித்த ஆதி சங்கரரின் கோகர்ண ஸ்லோகங்களைப் பற்றிப் படித்தேன்.

    நானே இதனை தனிப் பதிவாக எழுத எண்ணியிருந்தேன்....இங்கு அதில் உள்ள அத்வைத கருத்தை மட்டும் கீழே கொடுக்கிறேன்.

    "ஐக்யானுபவாத் அஹமஸ்மி பூமா"

    அதாவது கோகர்ணத்தில் ஈஸ்வரன், அம்பிகையை தனியாக கண்டார், பின் அர்த்தநாரி ஸ்வரூபமாகவும் கடைசியாக "தானே அந்த மஹத்தான, எல்லையற்ற, எங்கும் நிறைந்த பரப்ரஹ்மம் (பூமா) என்ற் நிஜத்தை உணர்ந்தேன்" என்கிறார்.

    ReplyDelete
  29. ஈசோபனிசத்தையும் சுட்டிக்காட்டியதற்கு நன்றி குமரன்.

    விண்டு என்பதற்கு பிளவுபட்டு என்றொரு பொருளும் உண்டல்லவா?
    அதுவும் பொருத்தமாகத்தான் வருகிறது! அதாவது கண்டவர் இறைவனும் தானும் வேறல்ல என அறிந்தவரே என்று.

    ReplyDelete
  30. கோவி,
    இந்து மெய்யியல் நீங்கள் நினைப்பதைப்போல் நம்பிக்கைகள் மட்டும் அல்ல. அதையும் தாண்டி வெகுதூரம் மெய்ஞான மேன்மைக்கு வழி காட்டுகிறது. அறிவியலார் இன்னமும் எட்ட இயலாத சிகரங்களையெல்லாம் எப்போதோ ஆன்மீகம் எட்டிவிட்டது.

    தன்னைப் பார்த்துக்கொண்டே இருப்பவன் யாரென திரும்பிப் பார்த்து, தெளிந்து, முற்றும் நொடிப்பொழுதில் உணர்ந்திடும் அரும்கலை அகத்தவம். இதற்கு வெறும் புத்தக அறிவோ, அல்லது குருமாரின் போதனையோ போதாது.
    பக்தி மார்க்கமென்றால், பக்தியின் தன்னை முழுதும் சமர்பிப்பதோ, அல்லது ஞான மார்கமென்றால், தியான நிலையில் உள்ளொளி பெருக்கி, தன்னையும் அண்ட சராசரங்களையும் சைதன்யமாய் நிறைந்திருப்பவன் இறைவன் தான் என கண்டறிதலும் வேண்டும். இதில் யாரோ சொன்னது மட்டும் போதாது.
    தானாக தேடித் தேடித் தேடிக் கண்டுணர வேண்டும்.

    ReplyDelete
  31. கோவி,
    இதுதான் பரமஹம்சரின் பரவசக் காட்சி என்று யாராலும் வரையுறுக்க முடியாது. அதை அவர் மட்டுமே அறிவார். அதைப்பற்றி நமக்கு விவாதம் தேவையில்லை. நாம் எப்படி இறைவனை அடைய இயலும் என்று நாமாக முயற்சிப்பது மட்டுமே நம் வேலை.

    //ஆனால் விவேகநந்தர் போன்றோர்கள் தத்துவரீதியாக சென்றதால் அவருக்கு அந்த காட்சியெல்லாம் தெரியவில்லை. //
    விவேகானந்தருக்கு தத்துவம் சொல்லிக்கொடுத்ததே அதே பரமஹம்சர்தான். விவேகானந்தருக்கு காட்சியெல்லாம் தெரியவில்லை என்று யார் சொன்னது? ராமகிருஷ்ணருக்கு ஏற்பட்ட அதே இறையுணர்வுகள் விவேகானந்தருக்கும் ஏற்பட வேண்டிய அவசியமும் இல்லை, ஒரே வழியில் சென்றாலும்.
    விவரமாக பதிவொன்றில் பார்ப்போம்.

    ReplyDelete
  32. வருக மதுரையம்பதி சார்.
    தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    அப்படியா, அப்போது இவைகளை, ப்ரம்மத்தினை அடையும் வழியில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு படிகளாக கொள்ளலாம் என்ற நினைக்கிறேன்.

    ராஜ யோகத்தில் உள்ளொளியினைக் காண்பதும், பிரம்மத்தின் பிம்பத்தினைக் காண்பதும், பின்பு பிரம்மம் வேறு தான் வேறு அல்ல என்றுணர்வதும் நிலைகளாக சொல்லப்படுகிறது அல்லவா.

    ReplyDelete
  33. கோவி.கண்ணன். இப்படி இதனைக் கேட்டால் அதனைச் சொல்வதையும் அதனைக் கேட்டால் அதற்கடுத்து நகர்வதையும் நீங்கள் அடிக்கடி செய்வதைக் கண்டும் நேரத்தை வீணாக்கி இன்னும் பேசிக் கொண்டிருக்கிறேன். ஏன் என்று தான் தெரியவில்லை. கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்பதற்கு விளக்கமாக ஆன்மிகத்தில் சொல்லப்படும் யானையைக் குருடர்கள் தடவி உணர்ந்ததையே நீங்களும் சொல்லி ஆனால் அதற்கு வேறு விதமான விளக்கம் சொல்கிறீர்கள். எந்த வகையில் விண்டுதல் என்பதற்குத் திரும்பி வருதல் என்ற பொருள் கொண்டீர்கள் என்று கேட்டதற்குப் பதில் இல்லை. ஏதோ போகிற போக்கில் சொன்னதாகவே தோன்றுகிறது. சரி தானா? சொன்ன பதில் - அப்படித் தான் பொருள் கொள்கிறார்கள்; ஆனால் தமிழில் அப்படித் தானா என்று தெரியாது. யார் அப்படி பொருள் கொள்கிறார்கள்? நீங்கள் மட்டுமேவா? இல்லை வேறெங்கேனும் படித்தீர்களா? என்று கேட்டேன். பதில் தாருங்கள். அப்படித் தான் பொருள் கொள்கிறார்கள் என்று அடித்துச் சொல்ல முடியாது. நான் வேறு பொருள் கொண்டிருக்கிறேன். நான் சொல்வதற்கு முன்னரே யாரோ எழுதி ஜீவா எடுத்துக் கொடுத்திருக்கும் கட்டுரையிலும் வேறு பொருள் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் கொண்ட பொருள் தவறாக இருக்கலாம்; அந்தத் தவறான பொருளின் அடிப்படையில் 'பிதற்றல்; உளறல்' என்றெல்லாம் சொல்லி சீனா ஐயா போன்றவர்களைப் புண்படுத்திவிட்டேன்; மன்னிக்கவும் - என்றொரு சொல் உங்களிடம் இருந்து வருமா? இது வரை நேரடியாக நான் சொன்னது தவறு தான் போலிருக்கிறது என்ற வகையில் உங்களிடம் இருந்து பதில் வந்ததே இல்லை. என் நோக்கம் உங்களிடம் அந்த மாதிரி சொல்லை வரவழைப்பது இல்லை; ஆனால் அப்படி சொல்லாமல் மெதுவாக அடுத்தப் புலனத்திற்கு நீங்கள் நழுவுவதைச் சுட்டிக் காட்டுவது.

    அதனால் தான் நேரத்தை வீணாக்குகிறேனோ என்று நினைக்கிறேன். அடுத்தப் புலனத்தைப் பற்றியும் நான் பேசினால் அதற்குத் தகுந்த பதில் சொல்லாமல் நீங்கள் இன்னொரு புலனத்திற்கு நகருவீர்கள். இப்படியே தொடந்து சென்று கொண்டிருக்கும். தேவையா எனக்கு?

    ReplyDelete
  34. ஆன்மிகத்தில் யானைக் கதையைச் சொல்வது இறைவன் இவர்கள் சொன்னவை எல்லாமுமாக இருக்கிறான்; அதற்கு மேற்பட்டும் இருக்கிறான் என்பதைச் சுட்டுவதற்காக. யானை இந்தக் குருடர்கள் கண்டு சொன்னவை எல்லாமுமாகவும் இருக்கிறது; அதற்கு மேலும் இருக்கிறது. ஏதாவது ஒன்று மட்டும் சரியாக இருப்பதில்லை - அதனைத் தான் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்ற பிதற்றல் / உளறல் என்று நீங்கள் சொன்ன வாசகம் சொல்கிறது. அந்தக் கதையையே அந்த வாசகத்திற்கு எதிரான கருத்து சொல்வதற்குப் பயன்படுத்திய உங்களைப் பெரிய அறிவாளி என்பதா சொல்லும் கருத்தைப் புரிந்து கொள்ளாமல் பேசுபவர் என்பதா என்று தெரியவில்லை. நான் பெரிய அறிவாளி என்றே கொள்ளுகிறேன்.

    நம்பிக்கை என்றால் உண்மையில்லை என்ற பொருளில் நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். நம்பிக்கை என்பது உண்மையின் அடிப்படையில் ஆனது என்று ஆன்மிகத்தவர் சொல்கிறார்கள். இரண்டும் நேர் கோடுகள்; சந்திக்க வாய்ப்புகள் இல்லை. அப்படி உண்மைகளின் அடிப்படையில் இருக்கும் நம்பிக்கைகளைத் தான் நாம் கொண்டிருக்கிறோம்; அதனால் கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்று ஆன்மிகத்தவர் சொல்கிறார்கள். அதனை நீங்கள் பிதற்றல் உளறல் என்றீர்கள்.

    இப்படியே நீங்கள் எடுத்து வைத்திருக்கும் ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு கட்டுடைக்கலாம் தான். ஆனால் நேரம் தான் செலவாகிறது. நீங்கள் அந்தப் புலனத்திலேயே நின்று பேசப்போவதில்லை. அடுத்தப் புலனத்திற்கு நகர்வீர்கள். அதனால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    ReplyDelete
  35. //குமரன் (Kumaran) said...





    //நான் வேறு பொருள் கொண்டிருக்கிறேன். நான் சொல்வதற்கு முன்னரே யாரோ எழுதி ஜீவா எடுத்துக் கொடுத்திருக்கும் கட்டுரையிலும் வேறு பொருள் கொடுத்திருக்கிறார்கள். நீங்கள் கொண்ட பொருள் தவறாக இருக்கலாம்; அந்தத் தவறான பொருளின் அடிப்படையில் 'பிதற்றல்; உளறல்' என்றெல்லாம் சொல்லி சீனா ஐயா போன்றவர்களைப் புண்படுத்திவிட்டேன்; மன்னிக்கவும் - என்றொரு சொல் உங்களிடம் இருந்து வருமா? //

    குமரன்,
    கட்டுரைக்கு எதிர்கருத்து சொன்னால் மனம் புண்படும், அதன் பிறகு அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா ? இது எந்தவிதமான கருத்து ? சீனா ஐயா முத்தவர் அவரிடம் மன்னிப்பு கேட்பதையோ, காலில் விழுவது பெரிய விசயமல்ல, ஆசி வாங்குவதற்கு வேண்டுமானால் அவ்வாறு செய்ய முடியும், பெரியவர்களிடம் செய்திருக்கிறேன். இங்கு நடப்பது விவாதம், இதில் புண்பட்டேன், நொந்து போனேன், மன்னிப்பு என்ற கட்டமைப்பு எல்லாம் ஏன் ? "உங்கள் கருத்தில் உடன்பாடு இல்லை, எனக்கு மாற்று கருத்து இருக்கிறது?" இது போதாதா ?. இங்கு பக்திபதிகம் எழுதிவிட்டு பொருள்குற்றம் கண்டுபிடியுங்கள் என்று போட்டி வைத்திருக்கிறார்களா ? இருப்பதை எடுத்து தானே விளக்குகிறார்கள். சொந்த கருத்து என்பது விளக்கம் என்ற அளவில் மட்டும் தானே ?


    //இது வரை நேரடியாக நான் சொன்னது தவறு தான் போலிருக்கிறது என்ற வகையில் உங்களிடம் இருந்து பதில் வந்ததே இல்லை. என் நோக்கம் உங்களிடம் அந்த மாதிரி சொல்லை வரவழைப்பது இல்லை; ஆனால் அப்படி சொல்லாமல் மெதுவாக அடுத்தப் புலனத்திற்கு நீங்கள் நழுவுவதைச் சுட்டிக் காட்டுவது. //



    விவாவதம் என்பதில் வெற்றி தோல்வி என்ற கட்டுக்குள் செல்கிறீர்களோ ? அது உங்கள் விருப்பம், நான் அவ்வாறு செய்வதில்லை. நீங்கள் ஒரு விவாதத்தை ஆரம்பித்து, 'எனது இந்த கருத்து பல சவால்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறது, மாற்றுக் கருத்து சொன்னதெல்லாம் தவறு' என்று முடிவுரை எழுதி முடித்திருக்கீறீர்களா ?. நான் விவாதத்தை, விவாதமாகவே நினைப்பேன். நீங்கள் 'ஆன்மிகம்' என்பதின் 'தீமை' என்று எதும் சிந்தித்திருக்கிறீர்களா ? அப்படி சிந்தித்து இருந்தால் அடுத்த புலனத்திற்கு சென்று பேச உங்களாலும் முடியும், நீங்கள் அங்கு செல்லாததாலேயே நான் செல்லும் போது நழுவலாக தெரிகிறது.


    //அதனால் தான் நேரத்தை வீணாக்குகிறேனோ என்று நினைக்கிறேன். அடுத்தப் புலனத்தைப் பற்றியும் நான் பேசினால் அதற்குத் தகுந்த பதில் சொல்லாமல் நீங்கள் இன்னொரு புலனத்திற்கு நகருவீர்கள். இப்படியே தொடந்து சென்று கொண்டிருக்கும். தேவையா எனக்கு?
    //
    இதுபற்றி என் கருத்து, நான் சொல்வது அபத்தம், இணையத்தில் தவறான கருத்தாக நிலை பெற்றுவிடும் என்று நினைத்து உடனடியாக மறுக்க வேண்டும் என்று பக்தி சேவையாக என்று நினைக்கிறீர்கள். அதற்கு எனது பாராட்டுக்கள். ஆனால் "எனக்கு தேவையா ?" என்று நீங்கள் அலுத்துக்கொள்ள வேண்டும் என்று சத்தியமாக நான் உங்களைக் குறித்த கேள்வியாக எதையும் எழுதுவதில்லை. என்னை விடுங்கள், அபத்தமாகவே இருக்கட்டும், தகுந்த பதில்களினால் எத்தனை முறை கருத்தை மாற்றி இருக்கிறீர்கள் ? இறைவன் ஒருவனே என்ற கருத்து உங்களுக்கு ஏற்புடையது தானே ? முருகன், சிவன் என்று நீங்கள் பதிவில் எழுதினாலும், நீங்கள் 'வைணவராக' த்தானே உணர்கிறீர்கள் ?

    தேவையா ? இல்லையா ? நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். உங்களை அலுத்துக் கொள்ள வைத்தேன் என்பது போல் நீங்கள் முடிவு சொல்லி ("தேவையா எனக்கு?") என்று இருப்பதால், இதற்கு வேண்டுமானால் தெரியாமல் நடந்த தவறு என்று கருதி, உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

    இந்த இடுகையில் எனது கருத்து தவறு என்று நீங்களும், மற்றவர்களும் சொல்லி இருப்பதை கருத்தளவில் சரி என்று ஏற்கிறேன். ஆனால் 'கண்டவர் விண்டிலர்' இது மரணம் குறித்து சொல்வதற்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்பது என்கருத்து.

    ReplyDelete
  36. கோவி.கண்ணன். எதிர் கருத்து சொல்லி அதில் மனம் புண்பட்டால் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லவில்லை. பிதற்றல், உளறல் என்றெல்லாம் எழுதும் போது நீங்கள் சீனா ஐயாவை குறிவைத்துச் சொல்லவில்லை என்று எனக்குத் தெரியும். ஆனால் அவர் மனம் வருந்தியிருப்பது அதனை அவர் நாசூக்காகச் சொல்லியிருப்பதில் தெரிகிறதா? இந்த மாதிரி collatral damage ஆகும் போது அதனை நீங்கள் உணர்கிறீர்களா என்று தெரியவில்லை.

    அதனை நீங்கள் உணர்ந்த மாதிரி தெரியாததாலேயே மன்னிப்பு என்பதனைப் பற்றிப் பேசினேன். மற்ற படி நீங்கள் வழக்கமாக வைத்து வரும் கருத்துகளுக்கும் மாற்றுக் கருத்துகளுக்கும் மன்னிப்பு கேட்க வேண்டிய தேவைகள் இல்லை.

    ReplyDelete
  37. ஜீவா. விண்டு விண்டுச் சாப்பிடுதல் என்று வடை போன்ற உணவுப்பொருட்களை உண்பதைப் பற்றி பொதுவழக்கில் இருப்பதை அறிவேன். ஆனால் அதன் சொல் பொருள் வரலாற்றைப் பற்றி அறியேன்.

    ReplyDelete
  38. கோவி, நீங்கள் எதனால் அப்படிச்சொன்னீர்கள் என்று ஏதேனும் சான்று காட்டி இருந்திருந்தாலோ, அல்லது, சான்று ஏதும் கிடைக்கவில்லை என்றாவது சொல்லியிருந்திருந்தாலோ கூட போதுமானதாக இருந்திருக்கும். உங்களது நிலைப்பாடு புரிகிறது. எப்படி நம்பிக்கையே சரியா இல்லையா என்று தெரியாமல் நம்புவது என்று நினைக்கிறீர்கள். அறிவியல் பாடத்தில் சில கூற்றுகளை சோதனைகள் மூலமாக நிருபணம் செய்து பார்த்தோம். எதனால் அவற்றை செய்து பார்த்தோம்? விளைவில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லி இருக்கலாமே? அவரவர் தனக்குள்ளே சோதனைகள் செய்து பார்த்தால் தான் இறைவனைப் பற்றியும் பரிபூரணமாக அறிய முடியும்.

    //ஆனால் 'கண்டவர் விண்டிலர்' இது மரணம் குறித்து சொல்வதற்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் என்பது என்கருத்து. //
    விண்டிலர் என்பதகு திரும்பி வருதல் என்று சொல்வதில் இன்னுமொரு இடைஞ்சலும் இருக்கிறது. (காலத்தையும் கருத்தில் கொண்டால்)
    'விண்டவர் கண்டிலர்' என்னும்போது - திரும்பி வந்தவர் என்று பொருள் கொண்டேமேயானால் - திரும்பி வந்தவர், இனிமேல் எதிர்காலத்திலும் இறைவனைக் காண இயலாதவர் (எப்போதும்) என்ற பொருளும் தருகிறது. ஆனால் திரும்பி வந்தவர், இறைவனைக் காண, அடைய இயலும். ஆக, எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டால், அது பொருந்தவில்லை.

    ReplyDelete
  39. இந்த விவாதத்தில் முதலில் குறுக்கிட விரும்பவில்லை எனினும்
    விவாதம் " எடுத்துக்கொண்ட பொருளிலிருந்து" விலகி ஓடுவதாகத்தோன்றுகிறது.

    விண்டவர் எனும் சொல்லுக்கு பொருள் என்ன?
    என்பதுதானே சர்ச்சை ?

    "விண்டவர் " எனும் சொலலுக்கு மீண்டவர் எனும் பொருள் இருப்பதாகத்தெரியவில்லை.

    விண்டவர் என்றால் விண்டுதலான கருமத்தைச் செய்தவர்.

    விண்டு என்றால் உடை ( break ) அல்லது திற ( open ) எனவே தான் பொருள் காணப்படுகிறது.
    இந்த சொல்லுடைய நீட்டிய பொருள் ( extended meaning ) விளக்கிச்சொல்லுதல்
    analyze, reveal on or after analysis என்ற ஆங்கிலச்சொற்களிலும் காணப்படுகிறது.
    ஆக, " கண்டவர் விண்டிலர் " என்றால் பிரும்மனை உணர்ந்தவர் ,
    உணராதவருக்கு, உணராதவர் புரிந்து கொள்ளும் நிலையில் ( in the levels of understanding )
    உணர்த்தவில்லை. ( இது உணர்ந்தவர் இயலாமையா அல்லது உணர தலைப்பட்டவர் இயலாமையா எனும் அடுத்த சர்ச்சைக்கு தயை செய்து செல்லவேண்டாம்.)

    சிவனை ( பிரமனை உணர்ந்து எனப்பொருள் கொள்க )உணர்ந்தவர் தம‌து அனுபவத்தைப்பிறர்க்கு விளக்க இயலாது என திருமந்திரம் கூறுவது காண்க.

    " முகத்தில் கண்கொண்டு பார்க்கின்ற .......காள்
    அகத்திற் கண்கொண்டு பார்ப்பதே ஆனந்தம்
    மகட்குத் தாய்தன் மணாளனோ டாடிய‌
    சுகத்தைச் சொல் என்றாற் சொல்லுமா றெங்ஙனே.." ( 2944 )

    மற்றுமோர் பாயிரம் ( 621)
    விண்டுஅலர் கூபமும் விஞ்சத்து அடவியும்
    கண்டு உணர் வாகக் கருதீருப்பார்கள்
    செண்டு வெளியில் செழுங்கிரி யத்திடைக்
    கொண்டு குதிரைக் குசைசெறுத்தாரே..

    இப்பாயிரத்தில் விண்டு எனும் சொல்லுக்கு பிளந்து வெளிப்படும் என்ற பொருள்
    கூறப்பட்டுள்ளது. ( உரையாசிரியர்: திரு. அ.மாணிக்கம். தமிழ்ப்பேராசிரியர். அ.மா.ஜெயின்
    கல்லூரி, சென்னை. )

    இது கிடக்கட்டும். சொற்களா முக்கியம் ?
    சும்மா இரு என்றல்லவா சொன்னார் ரமணர் ?


    உங்கள் எல்லோர் சொற்போர் எனக்கு ஆதி சங்கரர் யோக முத்கர: ( பஜ கோவிந்தம் )
    எனும் பாமாலையில் முதற் பாவில் சொல்லுகிறார்:

    Bhaj govindam bhaj govindam, Bhaj Govindam Mooda MadhE,
    SampradhE sannihithE kaalE, nahi nahi rakshathi TukrankaranE..

    கருத்து: கோவிந்தனை நினை அவனை தியானம் செய். காலன் வரும் காலத்து, (உனது)
    இலக்கணங்களெல்லாம் காப்பதில்லை.

    ஆக, இலக்கணங்கள் (Linguistics, Logic and Reasoning )
    அது சரியா, இது சரியா
    எனக்காலம் கடத்தாது பிரமனை தியானிப்பதில் மன நிலை கொள்வோமாக.

    Surya Narayanan.
    Chennai.

    ReplyDelete
  40. தங்க சமயத்தில் எடுத்துரைத்ததற்கும், இடித்துரைத்ததற்கும் மிக்க நன்றி சுரியநாரயணன் சார்.

    ReplyDelete
  41. நல்ல விளக்கங்கள் திரு. சூரிய நாராயணன் ஐயா.

    விவாதங்கள் செய்யாமல் குணானுபவங்களில் ஈடுபடத்தான் எனக்கும் விருப்பம். பெரும்பாலான நேரங்களில் அதனைத் தான் செய்ய விழைகிறேன். ஆனால் கேள்விகள் கேட்கப்படும் போதும் தவறான விளக்கஙக்ள் சொல்லப்படும் போதும் மாற்றுக்கருத்தினைச் சொல்லிட வேண்டும் என்ற உந்துதல் வருகின்றது. ஸர்வாரம்ப பரித்யாகியாக அடியேன் இன்னும் ஆகாததால் (அப்படி என்றால் என்ன; எப்படி இருக்கவேண்டும் என்று இன்னும் புரியாததால்) இப்படிப்பட்ட உந்துதலில் விளக்கம் சொல்லத் தலைப்பட்டுப் பின்னர் அது சொற்போராக மாறிவிடுகின்றது. சொற்போர்களைக் குறைத்துக் கொண்டு எது எல்லாவற்றையும் விட மிக முக்கியமோ அந்தச் செயலில் தொடர்ந்து செல்ல முயல்கிறேன். இறைவனின் திருவுள்ளமும் கருணையும் பெரியவர்களின் ஆசிகளும் வழிநடத்த வேண்டும்.

    ReplyDelete
  42. // சொற்போர்களைக் குறைத்துக் கொண்டு எது எல்லாவற்றையும் விட மிக முக்கியமோ அந்தச் செயலில் தொடர்ந்து செல்ல முயல்கிறேன். இறைவனின் திருவுள்ளமும் கருணையும் பெரியவர்களின் ஆசிகளும் வழிநடத்த வேண்டும்.//
    அன்புக் குமரன்,

    அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள். அப்படியே நீங்கள் செய்ய வேண்டுமென்றும் ஆசைப்படுகிறேன்.நமக்குத் தெரியாத,புரிபடாத விஷயங்கள், சமுத்திரம் போல் உள்ளது.அதில் ஒரு சின்ன சொம்பில் மொண்டுப் பார்த்து 'இன்னது' என்று சொல்ல முயற்சிக்கையிலேயே,முழு சமுத்திரத்தைப்பற்றி, அதன் தன்மை,உண்டாததின் நோக்கம்,ஏற்பட்டதின் விதங்கள்,நாளை இது என்னவாகும்,இதன் ஆரம்பம் என்ன,முடிவு என்ன என்று சகல சமாச்சாரங்களையும் சொல்ல வற்புறுத்தப்படின், திகைப்பு தான் மிஞ்சும். 'இப்போதைக்கு சொம்பில் மொண்ட நீர் உப்புக்கரைசலாக இருக்கிறது;கொஞ்சம் பொறு-வேறு என்ன புலப்படுகிறது என்று தெரிவிக்கிறேன்' என்று ஒருவரும், அதே மாதிரி மொண்ட இன்னொருவர் வேறொன்னும் சொல்லலாம். எது ஒன்றும் அனுபவபூர்வமாக ஆராய்வதற்கு, நீரை மொள்ள வேண்டும் என்பது யதார்த்தமான விஷயம். நீந்த வேண்டுமானால்,தண்ணீரில் இறங்க வேண்டுமல்லவா? 'கேள்வி பிறந்தது அன்று;பதில் கிடைத்தது இன்று' என்பது கவிஞன் வாக்கு. 'பிறந்த அன்றுக்கும்--கிடைத்த இன்றுக்கும்'இடைப்பட்ட நீண்ட கால வெளியில் சும்மா இருக்கவில்லை; தங்களைப் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்திக் கொண்டார்கள் என்பதை மறக்கக்கூடாது. நமக்கு சில கேள்விகள் மனத்தில் பிறக்கின், அவற்றில் நம்மை ஈடுபடுத்திக்கொண்டால் தான் அனுபவபூர்வமான பதில் கிடைக்குமே தவிர, பிறர் அனுபவத்தை நாம் தெரிந்து கொள்வது வெறும் கேள்வி ஞானமாகத் தான் இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.
    இங்கு 'சமுத்திரம்' என்ற சொல், விடை தெரியாத பல செய்திகளுக்கு உபமானமாகத் தான் எடுத்தாளப்பட்டது என்பதைச் சொல்ல விழைகிறேன்.

    ReplyDelete
  43. குமரன், நண்பர் ஜீவி அழகாக, பொருத்தமான விளக்கங்களைத் தந்திருக்கிறார். உடன்பட்டு தொடர்க பயணத்தை. இடையில் வரும் கேள்விகளைத் தள்ளிப் போடுக - பதில் தெரிய வரும் போது தெரியப் படுத்தலாம். சொற்போர் வேண்டாம்.

    ReplyDelete
  44. ஜீவா
    ஸ்ரீதர் இதே "கண்டவர் விண்டிலர்" பற்றி அண்மையில் கேட்டதால்,
    அவருக்கு அளித்த பதிலை, இங்கும் உங்கள் அனுமதியோடு பதித்து வைக்கிறேன்!
    http://madhavipanthal.blogspot.com/2008/07/final-part.html

    -----------------------------------

    //ஸ்ரீதர் நாராயணன் said...
    ஹ்ம்ம்.... அதே மெய்யியல்தான் 'கண்டவர் விண்டதில்லை. விண்டவர் கண்டதில்லை//

    கண்டவர் விண்டிலர்
    விண்டவர் கண்டிலர்

    உண்மை தான் ஸ்ரீதர்!
    அப்புறம் எப்படி இந்த வாசகத்தைச் சொன்னவர் மட்டும் கண்டு விண்ட முடிந்தது? மெய்யியல் நூல் எழுதியவர்கள் எல்லாம் காணாதவர்கள் விண்டது என்ற கதை ஆகி விடுமே? :)

    இதன் உண்மையான பொருள்:
    கண்டவர் "வேறொரு சொல்லையும்" விண்டிலர்!
    விண்டவர் "வேறொரு பொருளையும்" கண்டிலர்!

    ஓட்டப் பந்தயத்தில் இறுதியைக் கண்டவர்...வெற்றிக் கணத்தில் வேறெதுவும் பேச முடிவதில்லை! = கண்டவர் விண்டிலர்

    இறுதியை நோக்கி ஓடுபவர், கூவுவார்! விண்டுவார்! இறுதி இலக்கு நன்றாகவே தெரிகிறது...
    ஆனால் இன்னும் அவர் இறுதியைக் காணவில்லை! அதைக் காணும் வரை, அவர் வேறெதுவும் காண்பதில்லை = விண்டவர் (வேறொன்று) கண்டிலர்!

    ஆதலால் முரண்நிலை இல்லை!

    //நாந்தான் தப்பான பரீட்சையில உக்காந்துட்டேன்ப் போல. மீண்டும் மீண்டும் பெயிலாயிட்டிருக்கேன் :-)//

    பெயிலா?
    ஒவ்வொரு கேள்வியிலும் டபுள் ப்ரமோஷன் வாங்கிட்டு இப்படி ஒரு நாடகமா? ஹூம்
    வென்றவர் தேர்ந்திலர்
    தேர்ந்தவர் வென்றிலர்
    :)))))))))))))))))))

    ReplyDelete