Tuesday, December 21, 2010

பக்தியும் ஞானமும் (3) : தண்டாயுதபாணி

சப்தமும் அறியேன், அந்த சப்தத்தின் அர்த்தமும் அறியேன். ஆனால் என் இதயத்தில் ஆறு முகம் கொண்ட சத்யமான பொருள் ஒன்று பிராகசிக்கின்றது.
- சுப்ரமணிய புஜங்கம், ஆதி சங்கரர்.
ர்நாடக இசையில், முத்துசாமி தீக்ஷிதர் என்ற பெயரைக் கேட்டதும் நினைவுக்கு வருவது அவரது 'குருகுஹ' என்னும் அவரது இயற்றியவர் முத்திரையும், அதில் பொதிந்திருக்கும் கார்த்திகேயனது பெயரும் தான். 'குருகுஹ' என்னும் முத்திரைக்குக் காரணம், அவர் பாடல் இயற்றுவதை துவக்கி வைத்த அவது குருவும், குகனான திருத்தணி முருகனும் என்பதால். தந்தைக்கு உபதேசம் செய்த சுவாமிநாதன் மனக்குகையில் பிரகாசிப்பவனாகவும், ஞானத்தை உபதேசிக்கும் குருவாகவும் அமைந்திருப்பதுதான் அப்பெயருக்கு எப்பொருத்தம்!

ஷண்முகனுக்குத்தான் இன்னும் எத்தனை எத்தனை பெயர்கள்!!! முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளின் சாகித்யத்தில் அவையாவும் விரவியிருப்பது கண்கூடு. 'பரமசிவன் குமாரன்', 'பார்வதி புத்திரன்', 'கார்த்திகைப் பெண்டிரால் அரவணைக்கப்பட்டவன்', 'கந்தன்', 'குகன்', 'வேலாயுதன்', 'சேவல் கொடியோன்', 'தண்டாயுதபாணி', 'மயில் வாகனன்', 'தேவசேனதிபதி', 'ஆறு எழுத்தோன்', 'சரவணபவ', 'வள்ளி மணாளன்', 'தெய்வயானையின் கணவன்', 'அசுரர்களை அழித்தவன்', 'பிரணவ மந்திரத்தை உபயோகித்தவன்' போன்ற பற்பல பெயர்களால் குமரனை அழைத்து மகிழ்ந்திருக்கிறார் தீக்ஷிதர் பெருமான்.

குறிப்பாக, கீகண்ட தீக்ஷிதரின் கிருதிகளில் இருந்து:
* குருகுஹாதன்யம் (பல ஹம்ச ராகம்) :
'குப்த ஆகமார்த்த தத்வ ப்ரபோதினோ': மறைந்திருக்கும் வேத பொருளை அறிந்தவர்
'வாதிதராந்த தத்வஸ்வரூபிண': பூமி முதல் சிவன் வரையான 36 தத்துவங்களை உடையவர்
'சக்ஸ்ரதள சரசிஜ மத்ய நிவாசின' : 1000 தாமரை இதழ் கொண்ட சக்கரத்தின் மத்தியில் அமர்ந்தவர்
'ஜீவைக்யாத்மனோ' : ஜீவனோடு ஐக்கியமானவர்
'தஹரவித்யா ப்ரதாயக பரமாதனோ' : தஹர வித்யைக்கு காரணமானவர்
போன்ற பொருள் பொதிந்த பதங்களைக் காணலாம்.

* சுவாமிநாத (நாட்டை ராகம்)
'பூமிஜலாக்னி வாயுககன் கிரண' : பஞ்ச பூதங்களின் சொரூபமானவர்
'ப்ரப்ரவாமதி பூஜிதபதேன' : ப்ரப்ரவாம முதலான மந்திரங்களால் பூஜிக்கப்பட்டவர்

* ஷடானனே (கமாஸ் ராகம்)
'ஷட் ஆதாராதி சக்தியாத்மகே' : ஆறு சக்தியாக இருப்பவர் , அறுகோனங்களின் மத்தியில் இருப்பவர்

* ஸ்ரீ சுப்ரமண்ய நமஸ்தே (காம்போதி ராகம்)

'தாரக சிம்மமுக சூரபத்மாசுர சம்ஹர்த்ரே': தாரகாசுரன், சிம்மமுகன், சூரபத்மாசுரன் முதலிய கொடியவர்களை வதைத்தவர்.

* மானச குருகுஹ ரூபம் பஜரே (ஆனந்த பைரவி)

திருத்தணி முருகனைப் பாடும் அற்புதமான பாடல். இப்பாடலில் முருகப் பெருமானை குருவாய் பாவிக்கிறார். சத்வ குணம் நிறைந்த சதாசிவமாய் இருபவர் சண்முகன். இவ்வுருவத்தில் இருந்துதான் எல்லா ஜீவனும் அவித்தையுடன் பிறந்தது. அண்ட சராசரமும் அவனது தாமச குணத்தின் குறிப்புதானோ!. தாரகேஸ்வரனாகவும் முருகப் பெருமான் இருந்து பிறவிக்கடலைக் கடக்க பேருதவி புரிகிறார்.அவரே 'ஆனந்தபைரவராக' - பேரானந்தப் பெருவொளியாய்த் திகழ்கிறார்.
இப்பாடலை சமீபத்தில் நடந்த ஜெயா டி.வி மார்கழி மகோற்சுவத்தில் மல்லாடி சகோதரர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:



அடுத்து, ஆனந்தபைரவி இராகத்தில் அமைந்த 'தண்டாயுதபாணிம்' என்கிற கீர்த்தனையை கொஞ்சம் விரிவாகப் பார்த்தால்:

மனமே, தண்டாயுதபாணியை நினை. அசுரரை தண்டித்தவனை, கருணைக் கடலானவனை, தேவர்களால் போற்றப்படுவனை நினை மனமே.

நூறுகோடி சூரியனாய் பிரகாசிப்பவனே! எப்போதும், எல்லாவிடத்திலும் நிறைந்து, எதனாலும் குறுக்கப்படாதவனே! உயர்ந்த கற்களை மாலையாய் அணிந்தவனே! தாரகாசுரனையும், சூரபதுமனையும் தண்டித்தவனே!

புன்னகை தவழும் தாமரை முகத்தவனே! மாதவன் மருகனே! தேவர்கள் பணியும் தேவசேனாபதியே! முனிகளின் மதிப்பே! முசுகுந்த வம்சத்தைக் காப்பாற்றியவனே! பிரம்மா மற்றும் விஷ்ணுவால் வணங்கப்பட்டவனே! உனது அதரங்கள் தேனானது. பூமிதத்துவத்தினை உனது சந்தனத்தில் தெரிவிப்பவனே! ஆகாச தத்துவத்தினை, மலரின் மணத்தில் தெரிவிப்பவனே! வாயு தத்துவத்தினை தூபத்திலும், நெருப்பினை, தீப வரிசையிலும், நீரினை உனது பிரசாதமாகவும் தருபவனே!

குருகுஹனே - நீயே பேரானந்தமாய் இருப்பவன். தாமரைப் பாதங்களைக் கொண்டவன். தனது சேனையில் தேர்களையும், யானைகளையும், குதிரைகளையும் கொண்டவனே! தூய ஞானமதைத் தரும் பேரானந்தமே!

பாடலை திருமதி இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
dandayudapAni-song...


தண்டாயுத பாணிம்
ராகம் : ஆனந்த பைரவி
தாளம் : ரூபகம்

பல்லவி
த3ண்டா3யுத4 பாணிம் த3ண்டி3த தை3த்ய ஸ்ரேணிம்
த3யா நிதி4ம் ப4ஜ ரே ஹ்ரு2த3ய ஸததம் ஸுர வினுதம்

அனுபல்லவி
சண்டா3ம்ஸு1 ஸ1த கோடி ஸங்காஸம் ஜக3தீ3ஸம்
அக2ண்ட3 ரூபம் அண்ட3ஜ மணி மண்ட3ல-மய குண்ட3லாதி3 -
(மத்4யம கால ஸாஹித்யம்)
மண்டி3தாங்க3 ஸுகுமாரம் க2ண்டி3த தாரகஸூரம்
பண்டி3த-தர நவ வீரம் சண்டி3கேஸாவதாரம்

சரணம்
மந்த3ஸ்மித வத3னாரவிந்த3ம் மாதுல கோ3விந்த3ம்
ஸரணாக3த ஸுர ப்3ரு2ந்த3ம் ப3ஹு மானித முனி ப்3ரு2ந்த3ம்
பரிபாலித முசுகுந்த3ம் ப்ரணத விரிஞ்சி முகுந்த3ம்
அத4ர மது4ர மகரந்த3ம் ம்ரு2து3-தர வசனம் அனிந்த3ம்
மாயா மூல கந்த3ம் ஸ்கந்த3ம் ஸந்த3ம்
ப்ரு2தி2வ்யாத்மக க3ந்த4ம் க3க3னாத்மக ஸும க3ந்த4ம்
வாயு-மய தூ4ப க3ந்த4ம் வஹ்னி-மய தீ3ப ப்3ரு2ந்த3ம்
அம்ரு2தாத்மக ரஸ ப்3ரு2ந்த3ம் ஸ்ரீ கு3ரு கு3ஹம் ஆனந்த3ம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஸுந்த3ர கர சரணாரவிந்த3ம் ரத2 க3ஜ துரக3 ப்3ரு2ந்த3ம்
ஸத்ய ஞானானந்த3ம் அதி ஸ்வச்ச2ந்த3ம்

ராஜ யோகத்தில் மணிபுர சக்கரத்தின் அதிபதி கந்தன். மூலாதாரத்தில் இருந்து மூலக்கனலை மேலெழுப்பி, சகஸ்ரத்தில் சேர்ப்பதில் துணை செய்பவன். 'சேனைகளுக்குள் ஸ்கந்தன்' என கீதை சொல்லுவதுபோல் இவன் தேவசேனாதிபதி. மனதில் எழும் பயங்களைப் போக்க 'யாமிருக்க பயமேன்?' போக்கிடுபவனாய் வேலுடன் நிற்பவன். விரைந்தோடி துணை புரிபவன் - அதனால் விரைவான ஊர்தியாம் - மயில் வாகனன். மணிபுர சக்ரத்திற்கான வாகனாக செம்மறி ஆடு சொல்லப்படும். குமரனுக்கு ஆடும் வாகனமாய் இருப்பதை திருப்புகழ் உரைக்கும்.

'சுப்ரமண்யன்' என்றாலே வேதத்தின் உட்பொருள் என்பது பொருள். பொன்னேரகம்பதியான சுவாமிநாதன் - ஞான பண்டிதன். அருணகிரியாருக்கு 'சும்மா இரு, சொல்லற' எனும் ஞான உபதேசம் சொன்னவன். அண்டி வரும் அடியார் மனமதில் குகனாய் வாசம் செய்து, அவர்தாம் மன இருள் அகற்றுபவன். உபநிடதங்களில், நாரதர் தனது துன்பங்களை போக்க வேண்டிட, சனத்குமாரர் அவரது அவித்தைகள் அகல, ஆத்ம உபதேசம் செய்திடுவார். அப்படிப்பட்ட சனத்குமாரர் சாட்சாத் குமரக் கடவுளின் அவதாரம் எனவும் உபநிடதங்கள் சொல்லும். கேட்டதைக் கொடுக்கும் குழந்தை - குறிப்பாக ஆன்ம ஞானத்தைக் கொடுக்கும் குழந்தை குமரன். கேட்க வேண்டியது மட்டுமே நம் பணி. குமாரா, கொடுத்தருள் செய்திட வேண்டும். முருகனை நினைந்துருகி ஒருதரம் பாடி நின்றால், கருணையுடனே வந்து காட்சி தருவான். முருகா! முருகா! முருகா!.

குணங்கள் பொருந்திய சகுணப்பிரம்மமாக குமரக் கடவுள் வழிபடப்பட்டாலும், அவன் உண்மையில் நிர்குணபிரம்மம் என உணர்வோம். எந்த ஒரு பொருளால் சூரியன் முதலான ஒளி தரும் பொருட்கள் எல்லாம் ஒளி விடுகிறதோ - அந்த மூலப்பொருளாக இருப்பது கந்தன். எந்த ஒரு பொருள் எல்லாமுமாக இருக்கிறதோ, எந்த ஒரு பொருளாக அறிந்தால் வேறொன்றில்லை என்கிற நிலை ஏற்படுகிறதோ அப்பொருளாம் பரம்பொருளாய் இருக்கிறான் முருகன். அதே பரம்பொருள் குன்று தோறும் சகுணப் பிரம்மமாக வீற்றிருந்து அடியார்களின் குறை தீர அருள் பாலிப்பது நாம் செய்த தவப்பயனால் தான்!

அடுத்த பகுதியில் ஆனந்த நடமாடும் தில்லை ஈசனைப் பாடும் தீக்ஷிதர் கிருதிகளைப் பார்ப்போம்.
கடந்த பகுதிகள்:
பக்தியும் ஞானமும் (2) : கணபதி
பக்தியும் ஞானமும் (1) : முகவுரை

9 comments:

  1. முசுகுந்த வம்சத்தைக் காப்பாற்றியவனே!//
    முசுகுந்த சக்ரவர்த்தி குகையில் படுத்து தூங்கின கதையும் அதை க்ருஷ்ணன் பயன்படுத்தி கொண்டதும் தெரியும். முருகன் கதை என்ன?

    ReplyDelete
  2. வாங்க திவா சார்!
    கிருஷ்ணனின் கதையில் மட்டுமல்ல - கந்தபுராணத்திலும், இந்திரனிடம் இருந்து தியாகேசரைப் பெறும் கதையிலும் வருகுறார் முசுகுந்தன். எல்லா முசுகுந்தனும் ஒரே நபரா என்பது தெரியவில்லை.

    தாராகாசுரனுடன் முதற்கட்டப்போரில் - வீரபாகு முதலானோர் துணையோடு முசுகுந்த வேந்தன் போரிடுகிறான். தாராகாசுரனை ஒன்றும் செய்ய முடியவில்லை. முசுகுந்தன் போரில் மிகுந்த காயங்களோடு நிலத்தில் வீழ்ந்தான். பின்னர் முருகனால் மட்டுமே அசுரனை வீழ்த்த முடியும் என்கிற நிலையில் கார்த்திகேயன் வந்து தாரகாசுரனை வீழ்த்துகிறார்.

    ReplyDelete
  3. உண்மைதான் சார். ஒரே பேர் உள்ள பலரும் இருந்து இருக்கலாம். கால கட்டம் வேறா இருக்கறதால வேறொரு முசுகுந்தனா இருக்கணும். அதான் அவரைப்பத்தி கதை உண்டான்னு கேட்டேன். நீங்க சொல்லறதுலேந்து முருகனுடைய படை வீரர் ஒத்தர்ன்னு தெரியுது. மேலே விவர்ம் ஒண்ணும் இல்லையே?

    ReplyDelete
  4. முசுகுந்தன் படைவீரரில் ஒருவரில்லை திவா சார்.
    அவர் ஒரு அரசன். வரம் வேண்டி, அதன் மூலன் வீரபாகு முதலோரை போரில் தனக்கு துணையாகப் பெற்றார் என்கிறது இந்தச் சுட்டி.

    ReplyDelete
  5. இந்தச் சுட்டியில் முசுகுந்தனுக்கு தாரகாசுரனுக்கும் நடந்த போர் பற்றியும் முருகன் வந்து காப்பாற்றியது பற்றியும் குறிப்பிடுகிறது.

    ReplyDelete
  6. ஆஹா1 மேல் விவரங்களுக்கும் சுட்டிகளுக்கும் நன்றி!

    ReplyDelete
  7. "தண்டாயுதபாணி" அனுபல்லவியில் தீக்ஷிதர் முருகனை "சண்டிகேஸ அவதாரம்" என்று குறிப்பிருகிறார்.

    சென்ன அபிராமிபுரத்தில் இருந்து சுந்தரராமன் எனும் அன்பர் ஒருவர் இது பற்றி வினவியிருந்தார் தனிமடலில். இது பற்றி மேலும் விவரங்கள் இருப்பின் யாரேனும் விளக்க வேண்டும்
    .

    நன்றிகள்!

    ReplyDelete
  8. அருமையான பதிவு ஜீவா. போகர் பத்திப் படிச்சுட்டு இருக்கேன். அப்போ உங்க தண்டாயுதபாணி தலைப்புத் தூக்கிவாரிப் போட்டது. போகர் சொல்லி இருக்கும் பொருள் வேறேதான். பாடல் கேட்கவில்லை. கேட்டுட்டுச் சொல்றேன்.

    அப்புறம் ராஜயோகத்தில் மணிபூரகத்தின் அதிபதியா ஸ்கந்தன்?? ம்ம்ம்ம்ம்ம்?? சரி, எதுக்கும் ஒரு தரம் செக் பண்ணிக்கிறேன். நான் வேறே மாதிரி இல்லை படிச்சேன்?? குழப்பம்!!!!!!!

    ReplyDelete
  9. வாங்க கீதாம்மா,
    தண்டாயுதபாணி உங்களையும் திவாசாரையும் ஒருசேர கொண்டு வந்திடுத்துபோல!

    போகர் பத்தி பதிவு போடுங்க அல்லது போட்டிருப்பீங்க - எனக்குத்தான் உங்க பதிவை படிக்க நேரமே கிடைப்பதில்லை!

    மணிபூரகத்தின் அதிபதி - இது ஒவ்வொரு School-உம் சற்றே மாறுபட்டுச் சொல்லுவாங்க.
    அதனால, வேற மாதிரி இருக்கறதுலே ஆச்சர்யம் இல்லை! ஆறு சக்கரங்களுக்கும் - அறுபடைவீடுகளை ஒத்து திருமுருகாற்றுப்படை மேற்கோள் காட்டியதை முன்பு இங்கே பார்த்தோம் இல்லையா!

    ReplyDelete