Thursday, February 05, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினெட்டு

இந்தத் தொடரை சின்ன இடைவேளைக்கு அப்புறம் தொடருகிறோம். இதுவரை வந்த பகுதிகளை இங்கே பார்க்கவும்.
முதல் முறையா வந்திருக்கீங்கன்னா, ஆத்ம போதம் என்றால் என்ன, யார் எழுதியது என்கிற விவரங்களை இத்தொடரின் முதல் பகுதியில் இங்கு பார்க்கவும்.

பா 57:
எதழிவில் லாத தெதையன்றென் றன்றென்றே
வேத முடிவு விளக்கடும் - யாதொன்
றகண்டவின் பாகி யமருமது தானே
திகழும் பிரமன் தெளி.

சீர்களைப் பிரித்து:
எது அழிவில்லாதது, எதை அன்றென்று அன்றென்றே
வேத முடிவு விளக்கிடும் - யாதொன்று
அகண்ட இன்பாகி யமரும் அதுதானே
திகழும் பிரமன் தெளி.

பொருள்:
எது எப்போதும் அழிவில்லாததாய், நித்யமாய் இருக்கிறதோ,
எதை வேதங்களேல்லாம், 'இது அதுவல்ல, இது அதுவல்ல, இது அதுவல்ல,....' என அலசி, ஆராய்ந்து, முடிவாக விளக்குகிறதோ,
எந்த ஒரு பொருள், பேரின்பப் பெருவெள்ளமாய் எல்லா இடத்திலும் நிறைக்கிறதோ,
அந்தப் பொருள் தான்,
ஒளி விட்டுத் திகழும் பரப்பிரம்மம்; தெளிவாய்.

விளக்கம்:
அழிவில்லாமல், சிதைவில்லாமல், எப்போதும் முழுமையாய் இருக்கின்றதாம் பிரம்மம். அதைத் தவிர, வேறொன்று என்றில்லை என, எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும் அது இருக்கின்றது. அந்த பிரம்மத்தின் கண்களில் 'வேற்றுமை' என்பதே இல்லை. அதை விட்டு இன்னொரு பொருள் இருந்தால் தானே, வேற்றுமை பாராட்ட இயலும்?
அப்படியாக, வேறொன்று என்றில்லாமல், ஒன்றே ஒன்றாய் இருக்கிறது பிரம்மம்.

இது அதுவல்ல: 'நேதி, நேதி' - எது பிரம்மம் என்கிற கேள்விக்கு, வேதங்கள், அவற்றின் உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் போன்ற மறைகள், ஒவ்வொரு பொருளாக எடுத்துக்கொண்டு, இதுவல்ல பிரம்மம், இதுவல்ல பிரம்மம், என்று பிரம்மம் பற்றி அடையும் முடிவினைக் கொண்டு நாம் விளங்கிக் கொள்ளலாம்.

"அடுத்து, பிரம்மம் யாதெனச் சொல்ல, அது இதுவல்ல, இதுவல்ல."
- பிரஹதாரண்யக உபநிடதம் II, iii, 6

நேதி நேதி-யைப் பற்றி முன்பொரு ஆத்மபோதச் செய்யுளிலும் பார்த்தோமல்லவா. அதன் சுட்டி இங்கே.

தெளிவாய்: பிரம்மம் 'இன்னொரு பொருள்' என்றல்ல. தானே அப்பரம்பொருள் எனத் தெளிவாய்.
அப்படியானல், தான் தானாக இருந்துகொண்டு அப்பரம்பொருளின் பேரின்பத்தில் எத்தனை அளவு துய்க்க இயலும்? அடுத்த பா சொல்கிறது:

பா 58:
அகண்ட சுகமய வான்மாவி லற்ப
சுகத்தை யடுத்தே சுரராய்த் - திகழும்
பிரம்மாதி யேனோர் பிறங்குவரின் புற்றுத்
தராதர மாகத் தரி.

சீர்களைப் பிரித்து:
அகண்ட சுகமய ஆன்மாவில் அற்ப
சுகத்தை அடுத்தே சுரராய்த் திகழும்
பிரம்மாதி யேனோர் பிறங்குவர் இன்புற்றுத்
தராதரம் ஆகத் தரி.
(பிறங்குவர்: உயர்வடைவர்/சிறப்படைவர்;
அடுத்தே: பின் தொடர்ந்தே;
தரி: கொள்)
பொருள்:
எங்கும் அகண்டு பரவியிருக்கும், பேரின்பத்தின் சிறிய பகுதியான சுகத்தையே
பிரம்மன் போன்ற சுரர்கள் (தேவர்கள்) சுவைத்திட,
அதற்கேற்றாற்போல், அவர்கள் ஒளிவிட்டுத் திகழ்வார்கள்.
விளக்கம்:
எல்லாவற்றிலும் மேலான பிரம்மம் எங்கும் வியாபித்து இருக்க, அப்பெரிய பொருளின் சிறிய துகள் போலத்தான் - பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் ஆவர். படைப்புத் தொழிலையே நடத்தி வந்தாலும், பிரம்மனும், பரப்பிரம்மம் எனும் பெரும் பனிக்கட்டியின் சிறு நுனி போலவே ஆவர்.
"இதுவே உயர்ந்த இலக்கு, இதுவே உன்னத வெற்றி. இதுவே உயர்ந்த உலகம். இதுவே பேரின்பம். மற்ற எல்லா உயிர்களும், இதனில் சிறு துகள்களாக, அப்பேரின்பத்தில் இருந்து சிறு துளியையே பெருகிறார்கள்."
- பிரகதாரண்யக உபநிடதம், IV, iii, 32.

7 comments:

  1. ரசித்தேன்!

    ReplyDelete
  2. வாங்க திவா சார், சங்கீத சீசனில் இருந்து வெளியே வந்துட்டேனாக்கும்!

    ReplyDelete
  3. Anonymous6:59 AM

    //எதழிவில் லாத தெதையன்றென் றென்றென்றே
    வேத முடிவு விளக்கடும்//

    `ஏதழிவில் லாத தெதையன்றன் றென்றன்றே
    வேத முடிவு விளக்கிடும்’

    என வருதல்வேண்டும் என எண்ணுகிறேன்.

    சீர்பிரித்தால்:

    `ஏதழிவில் லாதது எதை அன்று அன்று என்று அன்றே’

    என வரும்.

    அன்புகூர்ந்து மூலத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள்.

    அன்புடன்

    அ. நம்பி

    ReplyDelete
  4. வருகைக்கும் அருள் கூர்ந்த திருத்தத்திற்கும் நன்றி அ நம்பி ஐயா!
    மீண்டும் மூலத்தினைப் பார்திட, ஒரு திருத்தம்.
    பிரிப்பதற்குபின் இப்படி உள்ளது:
    அன்றென்றன்றென்றே: அதைப்பிரித்திட
    "அன்று என்று, அன்று என்றே" - என வருகிறது.

    ReplyDelete
  5. Anonymous9:38 AM

    //"அன்று என்று, அன்று என்றே" - என வருகிறது.//

    இது சரி.

    எனில்

    ஏதழிவில் லாத தெதையன்றென் றன்றென்றே
    வேத முடிவு விளக்கிடும்’

    என வரும் என எண்ணுகிறேன்.

    அன்புடன்

    அ. நம்பி

    ReplyDelete
  6. அழிவு என்று ஒன்று இலை என்றால், அதற்கு அன்று, இன்று என என்று
    உளதோ ?


    சுப்பு ரத்தினம்

    ந்யூ ஜெர்ஸி.

    ReplyDelete
  7. வாங்க சுப்புரத்தினம் ஐயா!
    அழிவு என்றொன்று இருந்தால், அது எப்போது இருந்தாலும் ஒன்று தான்.

    ReplyDelete