Friday, December 24, 2010

பக்தியும் ஞானமும் (4) - சிவன்

தரிசித்தளவில் முக்தி பெறலாம் - புலியூரனை
தரிசித்தளவில் முக்தி பெறலாம்.
- முத்துத்தாண்டவர்

மறை நான்கின் அடிமுடியும் நீ ...
பிறவும் நீ ஒருவன் நீயே
பேதாதி பேதம் நீ பாதாதி கேசம் நீ
பெற்ற தாய் தந்தை நீயே.
-நடராஜப் பத்து.


சிவன் அருவம், உருவம், அரு உருவம் என்ற மூன்று வழிகளிலும் துதிக்கப்படுவது சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். அருவம் என்பது, உருவமேயில்லாமல், ஞானிகள் தமது யோக மகிமையால் அகக்தில் பரம் என்னும் பேரானந்த நிலையை அடைந்துத் தெளிவது. உருவம் என்பது, உடல் உருப்புகள் கூடிய நடராஜப் பெருமான் போன்றதொரு வடிவம். அரு உருவம் என்பது தெளிவான உருவமில்லாமலும், அருவமாக இல்லாமலும் இருக்கும் லிங்க வடிவம். இப்படி மூன்று நிலைகளிலும் துதிக்கப்படுபவர் சிவ பெருமான்.


(என்ன இவ்வளவு பெரிய படம் போட்டுட்டேன்னு பார்க்குறீங்களா! இந்த படத்துக்கோ, நீளம் - அகலம் என்ற அளவுகள் உண்டு. அலகிலா ஜோதியனுக்கு அது போன்ற எல்லைகளில்லை. இந்தப் படத்தைக் காட்டுவதற்குப் போதுமானது, இரண்டு பரிணாமங்கள். ஆனால் எத்தனை பரிணாமங்கள் இருப்பினும் அத்தனையானாலும் முழுதுமாய் விளக்க இயலாதது பரம சொருபம். அதுவென்றே, அதுவொன்றே என அடங்காதவரை.)

சிவன் தத்புருஷம், அகோரம், வாமம், சத்யோஜாதம், ஈசானம் என்கிற ஐந்து முகங்களைக் கொண்டவர். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்கிற ஐந்து தொழில்களையும் செய்பவர். திருநீறு, ருத்ராக்ஷம், பஞ்சாக்ஷரம் ஆகிரயவற்றில் விருப்பமுடையவர். ருத்ரம், சமகம் முதலான மகாமந்திரகளால் மனம் மகிழ்பவர். கோபமான வடிவில் ருத்ரனாகவும், சாந்தமான வடிவில் தக்ஷிணாமூர்த்தியாகவும் திகழ்பவர்.

சிவனுக்கு அவதாரங்கள் இல்லை என்றாலும், காரியார்த்த காரணமாக உருவங்களைக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இவற்றில் தக்ஷனை கொல்வதற்காக வீரபத்திரர்; தாருகவனத்து ரிஷிகளின் கர்வத்தை அடக்க பிட்சாடண மூர்த்தி; மார்க்கண்டேயனுக்காக யமனைக் கொல்ல காலசம்ஹாரமூர்த்தி; பிரம்மாவைத் தண்டிக்க பைரவர்; ஞான வடிவாக அம்பலம் தன்னில் ஆனந்த நடமாடும் தில்லைக் கூத்தன் நடராஜ வடிவம் - இப்படியாக பல வடிவங்களில் சிவனை தரிசித்து மகிழ்ந்திட ஏதுவாகிறது. பதஞ்சலி முதலான முனிவர்கள் தரிசித்து மகிந்த குஞ்சித பாதம் தில்லை சிற்சபேசனின் பொற்பாதமன்றோ!

இதய ஆகாசம் - அதை தகராகாசம் என்பார்கள் - வெளியே வான்வெளி ஆகாசம் போலவே விரிந்து பரந்தது இந்த இதய ஆகாசமும். பரமாகாச சொரூபியான பரமன், ஆன்ம சிற்றணுவிலும் தகராகாத்திலும் திகழ்கிறார். "த்" என உச்சரிக்கையில், நுனிநாக்கு மேற்பல் அடியைத் தீண்டி நிற்பதுபோல, அகமதில் இறையதை உணர்த்தப்பெறும் இடம் தகராகாசம் ஆகும். "த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! தகரகன நடனபதி என்றும் தகராலய மூர்த்தி என்றும் வழங்கப்படுபவன் நதிப்புனை ஈசன். ஈசனின் திருவருளால் வள்ளாலாரெனும் அருட்கொடைவள்ளல் பெருமான் அருட்பெரும்ஜோதி அகவலதில் தான் பெற்ற காட்சியனுபவத்தை "உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டிய அபய சிற்சபையில் அருட்பெரும்ஜோதி" எனப்பாடி மகிழ்கின்றார்.

னி, முத்துசாமி தீஷிதரின் கிருதிகளில் இருந்து:

* சதாசிவனே (சிந்து ராமக்ரியா ராகம்) : சத்யோதாதி பஞ்சமுகன்
* தியாகராஜனே: 'பஞ்சக்ருத்யகரணேன': ஐந்து தொழில்களும் குறிப்படப்படுகின்றன.
* தியாகராஜாயே நமஸ்தே (பேகடா ராகம்): முனிவர்கள் முதல் பூச்சிகள் வரை எல்லா உயிரனங்களுக்கும் முக்தி தர வல்லவர்.
* ருத்ரகோப ஜாத வீரபத்ரமாஸ்ரயே (ருத்ரபிரியா ராகம்): வீரபத்ரர்
* கால பைரவம்: (பைரவி) : காலபைரவர்
* மாரகோடி கோடி லாவண்யாய (ஆரபி) : பிக்ஷாடணர், விபூதி ருத்ராக்ஷ அபிமானர்
* ஸ்ரீதக்ஷிணாமூர்திம் (பேனத்யுதி ராகம்) : வேதங்களால் போற்றப்படுபவர், ஆலமரத்தடியில் வசிப்பவர்
* சங்கர அபிராமி மனோகரம் (மனோகரி) : மார்கண்டேயனைக் காலனிடம் இருந்து காப்பாற்றியது
* நீலாசலநாதம் (சம்யுக்தி ராகம்) : அர்ஜூனனுக்கு பாசுபதாஸ்த்ரம் வழங்கியது
* ஸ்ரீமாத்ருபூதம் (கானடா) : தாயுமானவர்
* அருணாசல நாதம் (சாரங்கா) : நினைத்தாலே முக்தி தரும் அக்னி தலமாம் திருவண்ணாமலையில் 'தேஜோமய லிங்கம்' தனைக் குறிப்பிடுகிறார்.
* சிந்தயமாகந்த மூலகந்தம் (பைரவி) : காஞ்சி ஏகாம்பரர்- மாமரத்தின் கீழ் வீற்றிருப்பவர், பிருத்வி லிங்கம்
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்) : நடராஜர் - பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு திருவடி தரிசனம் தந்தது.

- இப்படியாக, பட்டியலில் இவரது பாடல்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.

குறிப்பாக, தில்லைக்கூத்தனைப் பாடும் இக்கீர்த்தனையைப் பார்ப்போம்:
* ஆனந்த நடனப் பிரகாசம் (கேதாரம்)
பாடுபவர்: டி.எம்.கிருஷ்ணா


பல்லவி
ஆனந்த3 நடன ப்ரகாசம் சித்ஸபே4சம்
ஆச்ரயாமி சிவ காம வல்லீசம்


அனுபல்லவி
பா4னு கோடி கோடி ஸங்காசம்
1பு4க்தி முக்தி ப்ரத3 த3ஹராகாசம்
தீ3ன ஜன ஸம்ரக்ஷண சணம்
தி3வ்ய பதஞ்ஜலி வ்யாக்4ர பாத3-
த3ர்சித 2குன்ஞ்சிதாப்3ஜ சரணம்


சரணம்
சீதாம்சு க3ங்கா3 த4ரம் நீல கந்த4ரம்
ஸ்ரீ கேதா3ராதி3 க்ஷேத்ராதா4ரம்
பூ4தேசம் சார்தூ3ல சர்மாம்ப3ரம் சித3ம்ப3ரம்
பூ4-ஸுர த்ரி-ஸஹஸ்ர முனீச்வரம் விச்வேச்வரம்
நவனீத ஹ்ருத3யம் ஸத3ய 3கு3ரு கு3ஹ தாதம்
ஆத்3யம் வேத3 வேத்3யம் வீத ராகி3ணம்
அப்ரமேயாத்3வைத ப்ரதிபாத்3யம்
ஸங்கீ3த வாத்3ய வினோத3 தாண்ட3வ -
ஜாத ப3ஹு-தர பே4த3 சோத்3யம்


பாடற்பொருள்

ஆனந்த நடனம் - பேரொளிப் பிரகாசம் - சிற்சபை தன்னில் சரணடையும்
என்னைக் காத்தருள்வாய், சிவகாமவல்லி பதியே, சிவனே.

கோடிகோடி சூரிய பிரகாசமானவனே - சூரியன் முதலான எல்லா ஒளிக்கும் மூல ஒளியே.
தகராகாசம் என்னும் இதய ஆகாசத்தில் - சைத்தன்ய சொருபமாய் இருப்பவனே,
சித்த சுத்தி வந்து கடைத்தேறச் செய்பவனே, நீ தீனர்களை துன்பத்தில் இருந்து காப்பாற்றுபவன்.
பதஞ்சலி முதலான முனிவர்களுக்கு தன் பொற்பாதத்தைக் காட்டிய பொன்னம்பலவனே.

சிவன், சந்திரன் மற்றும் கங்கையைத் தரித்தவன், நீலகண்டன்.
கேதாரம் முதலான 12 தலங்களை இருப்பிடமாய்க் கொண்டவன். (இப்பாடலின் இராகமும் கேதாரம்!)
பூதகணங்களுக்கு அதிபதி. புலித்தோலை அணிந்தவன்.
சித் + அம்பரம் = சிதம்பரம் : அவனது சித்தம் சைத்தன்யமாய் ஆகாச வெளியில் எங்கெங்கும் பரவியிருக்க, எங்கெங்கும் நிறைந்திருப்பவன்.
முனிவர்களால் கொண்டாடப் படுபவன். உலகங்களுக்குத் தலைவன்.
இளகிய மனம் கொண்டவன். குருகுஹனாம் முருகனின் - வேதத்தின் உட்பொருளின் - தந்தையானவன்.
ஈடு இணையிற்றவன், அத்வைதமாய் இருப்பவன். அத்வைத வேதாந்தத்தைப் பிரகாசிப்பவன்.
அனைத்து இசைக் கருவிகளோடு சிற்சபை தன்னில் தாண்டவம் எனும் ஆனந்த நடமாடுபவன்.

இப்படியாக, ஈசன் குணங்களோடு கூடிய ஈஸ்வரனாக காட்சி அளிப்பது - பக்தர்கள் அவனைப்போற்றிப் பாட ஏது செய்யத்தான். மாயையுடன் சேர்ந்த நிலையில் சகுண பிரம்மமாவதும், நிர்குணமாய் இருப்பதும் - அவன் ஒருவனே - அவனே பரம்பொருள் எனும் மெய்ப்பொருள் தனை அறிவோம்.

12 comments:

  1. ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ
    பார்க்கோ பரம்பரனே என் செய்கேன் ‍ = தீர்ப்பு அரிய‌
    ஆனந்தம் மால் ஏற்றும் அத்தன் பெருந்துறையான்
    தான் என்பார் ஆர் ஒருவர் தாழ்த்து. (திருப்பெறுந்துரையில் அருளிய திருவெண்பா)

    சிவ தரிசனம்.அது அனந்தம். அது ஆனந்தம்.
    அது பேருண்டி. அதைப் புசிக்க வருவது பெரும் இன்ப மயக்கம்.
    அப்பேருண்டியில் நான் தனியனாக அதில் திளைப்பதா ? ஆரவாரம் செய்வதா ?
    அலறுவதா ? ஆடுவதா அல்ல பாடுவதா அல்ல கண்டு களிப்பதா அல்ல‌
    உண்டு மகிழ்வதா ?

    திகைத்து நிற்கிறேன்.

    சுப்பு ரத்தினம்.
    தங்கள் அனுமதியை எதிர்பார்த்து இன்று ஒரு லிங்க் கொடுத்திருக்கிறேன்.
    http://pureaanmeekam.blogspot.com

    ReplyDelete
  2. //சிவன் அருவம், உருவம், அரு உருவம் என்ற மூன்று வழிகளிலும் துதிக்கப்படுவது சிறப்பாகக் குறிக்கப்பட வேண்டியதாகும். அருவம் என்பது, உருவமேயில்லாமல், ஞானிகள் தமது யோக மகிமையால் அகக்தில் பரம் என்னும் பேரானந்த நிலையை அடைந்துத் தெளிவது. உருவம் என்பது, உடல் உருப்புகள் கூடிய நடராஜப் பெருமான் போன்றதொரு வடிவம். அரு உருவம் என்பது தெளிவான உருவமில்லாமலும், அருவமாக இல்லாமலும் இருக்கும் லிங்க வடிவம். இப்படி மூன்று நிலைகளிலும் துதிக்கப்படுபவர் சிவ பெருமான்.//

    அற்புதமான விளக்கம். மூன்று நிலைகளையும் புரிகிற மாதிரி சொன்னது அருமை. மிகவும் யோசிக்க வைத்த பத்தி.

    ReplyDelete
  3. வாஙக சுப்புரத்தினம் சார்,
    இந்த இடுகையில் திருமுறைப்பாடல் ஏதும் இல்லாத குறையை நிறைவு செய்தமைக்கு நன்றிகள்.
    மணிவாசகரின் சிவபுரண திருவெண்பா மிகப்பொருத்தமாக இருந்தாலும் - பாராட்டெல்லாம் அவனுக்கே போய்ச்சேரட்டும். அவனே ஆட்டுவிப்பவன். அவனின் கருவியாக ஏதோ பிதற்ற இயல்கிறது.

    ReplyDelete
  4. வருக திரு.ஜீவி ஐயா,
    நன்றிகள்.

    ReplyDelete
  5. சுப்புரத்தினம் ஐயா,
    தங்களது சுட்டியினைப் பார்த்தேன். கீதை சுலோக விளக்கத்தோடு இவ்விடுகையை சேர்த்துள்ளீர்கள், நன்றிகள்!

    ReplyDelete
  6. அலகிலா ஜோதியனுக்கு அது போன்ற எல்லைகளில்லை.//

    அப்பாலுக்கும் அப்பால்!!! இல்லையா?? நல்ல பதிவு ஜீவா. பாடி இருக்கிறது டி.எம். கிருஷ்ணாவா?? சரிதான் கணினியிலே இருந்து தள்ளி உட்கார்ந்தே கேட்டுக்கறேன். :P

    இதிலேயும் இந்த ,
    //ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ//

    வரிகளில் கொஞ்சம் மாறுபட்ட கருத்து. முடிஞ்சால் இதைக் கொஞ்சம் விளக்கமாய் ஒரு பதிவாய்ப் போடுங்களேன்!

    ReplyDelete
  7. வாங்க கீதாம்மா,
    //ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது //
    ஈஸியா விடுங்க. அது ஏழாவது என்கிற எண்ணை குறிப்பதற்காக மட்டும் தான்!

    ReplyDelete
  8. //"த"கரம் எனும் மெய்யெழுத்து, தமிழ் நெடுங்கணக்கில் ஏழாவது வரிசையில் இருப்பதுபோல், ஆறறிவுக்கும் மேற்பட்ட ஏழாவது அறிவு - மெய்யறிவு இந்த தகராகாசத்தில் சித்தியாகின்றதோ! //

    grrrrrrrrrrrrrr!
    இதைப்பத்தி எழுத வந்தா முந்திகிட்டாங்க. கறபனை நல்லா இருக்கு.
    தகர மெய் ன்னு இருக்கலாமோ? என்னமோ நெரடுது.

    ReplyDelete
  9. புலியூரானை... நாலஞ்சு புலியூர் இருக்கு இல்லே? மேலே விவரம் யாராவது கொடுங்கப்பா!

    ReplyDelete
  10. திவா சார்,
    தகர மெய் - என்று சொல்லலாம்.

    புலியூர் - தில்லையை -புலியூர்ன்னு பலரும் குறிப்பிடப் பார்த்திருக்கிறேன். குறிப்பாக, சீர்காழியில் இருந்த தமிழிசைப் புலவர்கள் தில்லையை - புலியூர், தென்புலியூர் எனக்குறிப்பிடுகிறார்கள்.
    கோபால கிருஷ்ண பாரதியார் "தென்னஞ்சோலை தழைக்கும் தென்புலியூர்" எனக்குறிப்பிடுவார்.
    மாரிமுத்தாப்பிள்ளை அவர்கள், "புலியூர் வெண்பா" என்றொரு பாடல் தொகுதி படைத்துள்ளார் - தில்லை சிவகாமிநேசனைப் பாடி.

    ReplyDelete
  11. அருமையான பாடல் ஜீவா. இரவு நேரம் தனியாக அமர்ந்து கேட்க சுகமான பாடல். பன்னிரண்டு நிமிடத்திற்கு மேல் பாடல் இன்னும் வந்து கொண்டே இருக்கிறதே என்று தோன்றத் தொடங்கிவிட்டது. ஆனால் இசையின்பம் அதன் பின்னரும் அருமை தான். :)

    ReplyDelete
  12. வாருங்கள் குமரன்,
    தாங்கள் இசை இன்பத்தைப் பருகி, அதை வெளிப்படுத்தியதும் மிக்க மகிழ்ச்சி!

    ReplyDelete