Saturday, June 03, 2006

படித்தால் வேலை, வேலை கிடைத்தால் சோறு, ஆனால்...

ஒன்றாய் பிறந்தோம், ஒன்றாய் வளர்ந்தோம்.

படித்தால் வேலை, வேலை கிடைத்தால் சோறு என்றார்கள்.

ஆனால் இடையில் இட ஒதுக்கீடு...

ஒருவனுக்கு படித்தாலும் வேலை இல்லை.

ஒருவனுக்கு படிக்காவிட்டாலும் வேலை.

இப்போதுதான் சொல்கிறார்கள்,

படித்தால் மட்டும் போதாது,

'சரியான' சாதியில் பிறந்திருக்க வேண்டுமாம்.

அடடா, இது அப்போதே தெரிந்திருந்தால்,

வேறு 'உயர்த்தப்பட்ட' சாதியில் பிறந்திருக்கலாமே...!

14 comments:

  1. இதற்கெல்லாம் பதில் இந்த சுட்டியில் இருப்பது மாதிரி தான் சொல்லனும்

    http://kuzhali.blogspot.com/2006/04/blog-post_16.html

    ReplyDelete
  2. ஜீவா,
    //'சரியான' சாதியில் பிறந்திருக்க வேண்டுமாம்.

    அடடா, இது அப்போதே தெரிந்திருந்தால்,

    வேறு 'உயர்த்தப்பட்ட' சாதியில் பிறந்திருக்கலாமே...!//

    நெஞ்சைக் கனக்க வைக்கும் வரிகள். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ எம்மினத்துக்குள் வலுக்ககட்டாயமாக புகுத்திய சாதியத்தை இந்த நூற்றாண்டிலும் கையாண்டுவரும் எம்மினத்தின் முட்டாள்தனத்தை என்னெவென்று சொல்லியழுவது.

    நல்ல கவிதை.

    நன்றிகள்.

    அன்புடன்
    வெற்றி

    ReplyDelete
  3. குழலி,
    நன்றி. ஆனால் உங்கள் சுட்டிக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை...'தாழ்வே' இல்லாப் பதிவல்லவோ இது!

    ஆனால், உங்கள் சுட்டியில் சுட்டியுள்ளவற்றுடன் ஓரளவு ஒத்துப்போகிறேன்.

    அதே சமயம் இட ஒதுக்கீட்டினால் ஒதுக்கப்பட்டவர்களுக்காக தனி இட ஒதுக்கீடு ஏதும் வாராதோ? என்று சொல்பவரும்் இருக்கலாம்.

    வெற்றி,
    சரியாக சொன்னீர்கள். ஒருவருடைய பிறந்த சாதியைக் கொண்டு மட்டுமே இட ஒதுக்கீடு என்பது் அன்றைய சாதி முறைக்கும் இன்றைக்கும் என்ன வித்யாசம். அரசாங்கமே பழிக்கு பழி என்கிறதா?.

    இப்படியே தொடர்ந்தால் என்னவாகும்? அடுத்த தலைமுறையில் இட ஒதுக்கீட்டினால் ஒதுக்கப்பட்டவருக்காக தனி இடஒதுக்கீடு ஏற்படுத்த வேண்டியிருக்கும்!

    நன்றி.

    ReplyDelete
  4. கொஞ்சம் உணர்ச்சி வசப்படாமல் யோசிக்கவும். இராமநாதனின் இந்த இடுகையைப் படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் இடஒதுக்கீட்டின் மூலம் பயன் பெற்றவன்தான். ஆனால் இப்பொழுது எங்கள் நெசவாளர் _ஜாதி_ பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இல்லை. எனவே இது தற்காலிக ஏற்பாடுதான் என்பதை உணரவும்.

    நன்றி,
    குலவுசனப்பிரியன்

    ReplyDelete
  5. நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் எனத் தெரியவில்லையே கு.பிரியன்..?

    ReplyDelete
  6. எல்லாரும் இட ஒதுக்கீடு பெற்றிடல் வேண்டும்!!


    இலவசங்களை எதிர்பார்த்து
    என்றுமே வாழ்ந்திருக்கும் ஒருகூட்டம்
    எளியோரைக் காட்டி ஏமாற்றிட எண்ணுகிறது!
    எத்திப் பிழைத்திடத் துடிக்கிறது.

    மலம் சுமந்த நல்லோரை
    மலம் தின்ன வைத்ததுவும்
    கடை நிலையில் உள்ளவரைக்
    கரை சேர்க்க எண்ணாமல்,

    அவர் நிழலில் வாழ எண்ணி
    அடுத்தவரைத் தூற்றி வந்து
    எல்லா நலனும் பெற்றிட்ட எத்துக்காரர்
    இடஒதுக்கீட்டை வாழ்த்துகிறார்

    இவர் எண்ணம் எமக்கிங்கு புரியாதா
    எதற்கிங்கு இவர் பல்லை இளிக்கின்றாரென்று
    தனக்கதிலே என்ன லாபம் என்பதனை மட்டிலுமே
    மன்க்கவலை படுமிவரை மன்னித்தல் தகுமோ?

    சரியாகச் சொல்லுகின்றேன் கேட்டிடுவீர்!
    "இட ஒதுக்கீடு வேண்டும்!!"
    ஏழைகட்கும் எளியவர்க்கும்
    இன வேறுபாடு இல்லாமல்!!!

    எல்லாரும், எல்லாமும் பெற்றிடல் வேண்டும்
    அல்லாரும், எளியாரும் அதிக பலன் அடைந்திடல் வேண்டும்!
    இல்லாமை இல்லையெனும் நிலையிங்கே வர வேண்டும்!
    பொல்லாமை செய்வரைப் புதைத்திடல் வேண்டும்!!

    ReplyDelete
  7. வாவ், இதுவல்லவோ திருவாசகம்!

    எளிமையாய், இனிமையாய்
    நறுக்குத் தெரித்தாற்போல்
    நயமான வார்த்தைகளில்
    இயம்பிட்ட எஸ்.கே அவர்களே
    உம் வாசகம்,
    இதுவல்லவோ திருவாசகம்!

    ReplyDelete
  8. ஜீவா,

    இன்றைக்கு இடஒதுக்கீடுப் பெற்று முன்னேறினால் அப்பிரிவினர், நாளை இடஒதுக்கீடு பெறப்போவதில்லை. இட ஒதுக்கீடு என்பது தற்காலிக நடவடிக்கைதான். நீங்கள் நினைக்கிறமாதிரி ஒரு பகுதியினறே தொடர்ந்து பயன்பெருவதில்லை. நான் படித்தகாலத்தில் விரல்விட்டு எண்ணிக்கொள்ளக்குடிய அளவில்தான் பொறியில் கல்லூரிகள் இருந்தன. ஏன் நான் 10ம் வகுப்பு முடித்துவிட்டு படித்த பாலிடெக்னிகில்கூட, வேலைவாய்ப்பு அதிகம் இருந்ததால் பல இஎநிலைப்பட்டம் பெற்ற மாணவர்களும் சேர்ந்து படித்தனர். இன்று பாலிடெக்னிக்கை சீந்துவார் இல்லை.
    அதுபோல் உயர்கல்விதரும் கல்லூரிகளும் பெருமளவில் திறக்கப்படும் என்று நம்பலாம். இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் பலரும் பொதுநலத்தைப் பார்ப்பதில்லை என்பது என் அனுமானம்.


    பி.கு என் சித்தி மகன், வசதியில்லை, இட ஒதுக்கீடும் இல்லை. அவனுடைய வளர்ச்சி பெருமைக்குறியது. முதலில் டிப்லொமா, பாலிடெக்னிக்கில் வேலை, கல்லூரி விடுதி கண்காணிப்பாளராகவும் இருந்ததால், விடுதியில் தங்கும் வசதி, உணவு, மேலே AMIE படித்துப்பட்டம், பின் பொதுத்தேர்வில் தேறி கல்ப்பாக்கம் அணுமின்நிலையத்தில் சிறுவயதில் விஞ்ஞானி.

    நன்றி,
    குலவுசனப்பிரியன்

    ReplyDelete
  9. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக குரல் கொடுப்பது சரி...ஏற்ப்பாட்டின் மூலம் ஒரு கிராமத்து மாணவனுக்கு தரமான கல்வி கிடைக்கும் என்றால் அதனை விட என்ன சாதனை இருக்க முடியும்...

    ஏசி ரூமில் இருந்து இட ஒதுக்கீடுக்கு எதிராக குரல் கொடுப்பது தவறு..

    சரியான கல்வி கிடைக்காமல் கிராமத்தில் இருந்து படித்து ஓரளவு சுமாரான மதிப்பெண் எடுத்து இடஒதுக்கீடு மூலம் ஒரு மாணவர் பயன்பெறுவாரெனில்...

    ஆதரிப்பேன்...வன்மையாக...

    ReplyDelete
  10. கு.பிரியன்:
    // இன்றைக்கு இடஒதுக்கீடுப் பெற்று முன்னேறினால் அப்பிரிவினர், நாளை இடஒதுக்கீடு பெறப்போவதில்லை//
    இதற்கான திடமான அறிவிப்பு ஏதும் அரசாங்கத்திடம் இருந்து வந்திருக்கிறதா.? அடுத்த N வருடங்களில் யார் யாருக்கு இட ஒதுக்கீடு நிறைவு பெறும் என்று?

    //அதுபோல் உயர்கல்விதரும் கல்லூரிகளும் பெருமளவில் திறக்கப்படும் என்று நம்பலாம்.//
    ஏற்கனவே, பல்வேறு சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சீந்துவாரில்லாத நிலைமையில்தான் இருக்கிறது - தரமின்மையால்.

    உங்கள் சித்தி மகனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோல் மன திடம் கொண்டு தடைகளை மீறி வெற்றி பெறுதல் பராட்டுக்கு உரியது என்றாலும், அந்த வழிகளில் பல கடினங்களையும், தியாகங்களையும் எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. அவற்றை நானும் சந்தித்திருப்பதால், அறிவேன்.

    இட இதுக்கீடு எப்படி பலருக்கு உதவிக்கரமாக இருக்கிறதோ, அதே சமயத்தில் மற்றவர்களுக்கு தடைகல்லாக இருக்கிறது.

    இயற்கை தரும் தடைகள் போதுமே், இட ஒதுக்கீடு என்ற பாரபட்சமான இன்னொரு தடையும் வேண்டுமா?

    ReplyDelete
  11. தங்கள் விளக்கத்திற்கும் நேரத்திற்கும் நன்றி குலவுனசனப்பிரியன்!

    ReplyDelete
  12. செ.ரவி, நன்றி.

    கிராமத்தில் இருப்பவர், வசதி குறைந்தவர் என்ற நிலைமைகள் எல்லோருக்கும் பொதுவானது. இந்த சாதியினர் தான் வசதி குறைந்து இருக்க வேண்டும் என்ற விதியில்லை. ஆனால் இட ஒதுக்கீடு மட்டும் சாதி அடிப்படையில் ஏன்?
    கிராமத்து கோவில் அர்ச்சகர் மகன் என்ன செய்வான்?

    பள்ளி கல்வித் தரத்தில் உள்ள வேறுபாடுகளை களைதல் வேண்டும். அதுதான் அரசின் தலையாய பணி, இட ஒதுக்கீடு அல்ல.

    ReplyDelete
  13. சமீபத்திய உரையாடல் ஒன்று :

    ///இவர்கள் வாரிசு எல்லாம் எத்தனைக்காலமாக படிக்காமல் அதே தொழிலையே செய்துக்கொண்டு இருக்காங்க காரணம் என்ன, அவங்க தலை எழுத்தா , எல்லாம் உங்களைப்போலவங்க அவங்களை அடக்கி அடிமையா வைத்து இருந்தது தான், அரசியல் ரீதியாக அவங்களுக்கும் எதுவாச்சம் செய்யனும்னா இப்படி ஒதுக்கீடு கொடுக்கணும், அதுவும் பிடிக்காதே உங்களுக்கு.////

    இட ஒதுக்கீடு இதே முறையில் தொடர்ந்தால் இன்னும் 1000 வருடமானாலும், மலம் அள்ளுபவர்களின் சந்ததிகள் படித்து நல்ல வேலையில் சேர முடியாது. மீண்டும் மீண்டும் 'கிரிமி லேயர்' மக்களின் வாரிசுகளே இட ஒதுக்கீட்டு சலுகைகளை வெக்கமில்லாமல் அனுபவக்கின்றனர். தாழ்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் இருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு சேர வேண்டிய இடங்களை, நடுத்தர மற்றும் பணக்கார வகுப்பை சேர்ந்த மாணவர்களே அனுபவக்கின்றனர். சந்தேகம் இருந்தால் அண்ணா பல்கலை கழக நுழைவுத் தேர்வு பட்டியலில் இடம் பெறும் மாணவர்களின் பின்புலத்தை ஆரய்ந்து பாருங்கள். இட ஒதுக்கீட்டில் கிரீமி- லேயர்களை நீக்காவிட்டால், நீதி கிடைக்காது. வெறும் பேச்சும், வாக்குவாதுமும்தான் தொடரும்.

    இட ஒதுக்கீடு ஒரு தலைமுறைக்கு மட்டும்தான் என்றாலே பாதி நியாயம் கிடைக்கும். அரசு பள்ளிகளில் படிப்பவர்களிக்கே சலுகை என்றும் கொண்டுவரலாம்...

    ReplyDelete
  14. வருக அதியமான், பல்வேறு பதிவுகளின் தங்கள் கருத்தை அழகாவும், ஆணித்தரமாகவும் நிறுவி வருகிறீர்கள், வாழ்த்துக்கள்!

    க்ரீமி லேயர் - உயர்த்தப்பட்ட சாதியாகி விட்டது.
    இன்னபிறவெல்லாம் தாழ்த்தப்பட்ட சாதியாகி விட்டது. இது இந்த இட ஒதுக்கீடின் அரும்பெரும் சாதனை.

    இதனை தங்கள் ஓட்டு வங்கிக்கு பயன்படுத்தும் அரசியல்வாதிகள் திருந்த மாட்டார்கள். மக்களாகப் பார்த்து மாற்றினால்தான் உண்டு.

    ReplyDelete