Showing posts with label இராமன். Show all posts
Showing posts with label இராமன். Show all posts

Sunday, November 01, 2020

எப்படி மனம் துணிந்ததோ?

ராமயணத்தில் தந்தையின் சொற்படி காட்டுக்குச் செல்லத் தயாராகிறான் இராமன். சீதையை அயோத்தியிலேயே விட்டுவிட்டு இராமன் மட்டும் காட்டுக்குச் செல்வதா?


இதைக் கேட்டதும் சீதையின் மனம் எப்படி இருக்கும்? என்னவெல்லாம் அவள் மனதில் தோன்றும்?
படம் பிடித்துக் காட்டுகிறார் அருணாசலக் கவிராயர்.
 

இராகம்: உசேனி (ஹூசேனி)

இயற்றியவர்: அருணாசலக் கவிராயர் 

 பல்லவி

எப்படி மனம் துணிந்ததோ சுவாமி? - வனம் போய் வருகிறேன் 

என்றால் இதை ஏற்குமோ பூமி?

 

அனுபல்லவி 

எப்பிறப்பிலும் பிரியவிடேன் என்று கை தொட்டீரே

ஏழையான சீதையை நாட்டாற்றிலே விட்டீரே              (எப்படி)

 

சரணம் 1 

கரும்பு முறித்தாற்போலே சொல்லல் ஆச்சுதோ? - ஒருக் 

காலும் பிரியேன் என்று சொன்ன சொல்லும் போச்சுதோ?

வருந்தி வருந்தித் தேவரீர் வெல்ல 

வார்த்தையால் கொல்லாமல் கொல்ல 

இரும்பு மனது உண்டாச்சுதல்லவோ - மெல்ல 

என்னை விட்டு போகிறேன் என்று சொல்ல                (எப்படி) 

 

சரணம் 2 

அன்னை கொண்ட வரம் இரண்டும் என்னைத் தள்ளவோ - நீர்

அழகுக்கோ, வில்பிடித்து நிலம் ஊன்றிக் கொள்ளவோ?

குன்னமோ? உமக்கென்னைத் தாரம் 

கொடுத்தவன் மேல் அல்லவோ நேரம்?

என்னை இட்டுக்கொண்டு போவதோ பாரம்?

இதுவோ ஆண்பிள்ளைக்கு வீரம்? (எப்படி) 

 

சரணம் 3 

நாடிநீர் போயிருக்கும் வனத்தின் பேர் சொல்ல வேணும் - அதை 

நினைத்துக் கொண்டு இறந்தால் அங்கே பிறக்கலாம் காணும்   

கூடி நாம் உகந்திருக்கும் காடு 

குறைவில்லா என் மிதிலை நாடு 

காடு நீர் இல்லாத வீடு 

கால் வையும் தெரியும் என் பாடு (எப்படி)

 

 ---------

குன்னம் = அவமானம்

______

நம்பினார் கெடுவதில்லை என்றிருக்க நம்பி வந்த என்னை விட்டுப் பிரியலாகுமோ?

~வடிவாய் நின் வல மார்பினில் (பிரிவின்றி) வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு~ என்று பெரியாழ்வார் பாடுகையில் பிராட்டிக்குத்தான் பிரிவுண்டோ? பின் ஏன் பிராட்டி கலங்குகிறாள்?

கொஞ்சம் பின்னால் பால காண்டம் செல்வோம். அருணாசலக் கவிராயர் இராம அவதார நிகழ்வினை இவ்வாறு பாடுகிறார்:

பரப்பிரம்ம சொரூபமே ஸ்ரீராமன் ஆகப்

பாரினில் வந்தது பாரும்!

பாரினில் பரப்பிரம்ம் அவதராம் எடுக்கணும்னாலும் பிரக்கிருதியின் துணை வேணும். பிரகிருத்தியினால் பரப்பிரம்ம் நாராயணனாகவும், நாராயணியாகவும் அவதாரம் எடுக்க முடிகிறது. இப்போ, எடுத்த பின்னால், அதன் நோக்கம் நிறைவேறணுமே? இவர் மட்டும் தனியா காட்டுக்கு போன எப்படி நிறைவேறும்?

ஆதலினால் கலங்குகிறாள் பிராட்டி.

சாதரணப் பெண் போல் அரற்றுகிறாள். உங்களுக்கு என்ன இரும்பு மனமா? நீ இங்கேயே இரு, நான் மட்டும் காட்டுக்கு போகிறேன் என்று சொல்ல? நீங்கள் வில்லைப் பிடித்திருப்பது, ஃபோட்டோக்கு ஃபோஸ் கொடுக்கவா? இதுதானா வீரம்? நீங்க போகிற வனத்தின் பேரைச்சொன்னால், அதை நான் நினத்துக்கொண்டே இறந்தால், அந்த வனத்தில் மீண்டும் பிறந்து உங்களை அடைவேன் அப்படின்னு பிளாக்மெயில் எல்லாம் பண்ணறாங்க.

அப்படியாவது இராம அவதார நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும் எங்கிற முனைப்பினால்.

இதனால், சகல மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்….

நம்முடைய உடல் பிறக்க நம் அன்னை ஆதரமாக இருப்பது போல், நம்முடைய ஜீவன் உடலில் வசிப்பதற்கு பிரக்கிருதி ஆதாரமாக இருக்கிறது.

எப்பிறப்பிலும் பிரிய விட மாட்டேன் என்ற வாக்கைப் பெற்றுக்கொண்டு, இந்த பூமியில் பிறந்தோம். ஆனால் பிறந்தபின், வாசனையே வாழ்க்கை என்றாகி விட்டது. வந்த நோக்கம் என்ன? நட்டாற்றில் நின்றாலும், நாதனைப் பிரியாது மீண்டும் எங்கிருந்து வந்தோமே, அந்த இடத்திற்கே சென்றடைவதுதான். 

இந்த இராமயணக் காட்சி இப்படியாக நடந்தேறியதற்கு காரணம் – நம் பிறப்பின் நோக்கம் மறவாதிருக்க, அதற்கான முனைப்பு நமக்கு ஏற்பட, நமக்கொரு பாடம் சொல்லத்தான்.   

இதைவிடுத்து இராமன் செய்தது சரியா? அல்லது சீதையின் மொழிகள் சரியா? என்று பட்டிமன்றம் நடத்துவது வீண்.   

எஸ் சௌம்யா அவர்கள் பாடிட கேட்கலாம்:



சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடிட கேட்கலாம்:



Monday, September 01, 2014

சுந்தர காண்டம் - காட்சிப் படலம் (2)

1. மனத்தவத்தால் உயர்ந்து விளங்கும்
மாசிலா மங்கையாம் சீதையைக் கண்ட அனுமன்
மாநிலம் உய்வதன் காரணத்தைக் கண்டான்.
வானவரும் உய்வர். முனிவரும் உய்வர்.
வேதியரும் ஏனையரும் உய்வர். 
தீவினையெலாம் மடிய
அறம் வாழும் என்றே ஆனந்தம் அடைந்தான்.

2. ஆங்கே அசுரர் கோமான் இராவணன்
அசோகவன வாயில் கண் தோன்றினான்.
இலங்கேஸ்வரனின் தலையில் மகுடமும்
தோளில் வலயமும் செவியிற் குண்டலமும்
பளபளத்தன.

3. 
அரக்கன் இராவணன் பிராட்டியை அணுகி
ஆசை வார்த்தைகளை மொழிவதை
அனுமன் மரத்திலிருந்து பார்த்தான்.

பழுக்க காய்ச்சிய இரும்புக்கம்பியை ஒத்த
அழுக்கான அரக்கனது வார்த்தைகள் பிராட்டியை வந்து
அடைவதற்கு முன்னமே அவளது செவிகள் தீய்ந்து போனது.

4. சினந்த  சீதை அறிவுரை பகர்ந்தாள்.
என் இன்னுயுர்த் தலைவன் 
இராமபிரானின் பாணம் மேருவையும் துளைக்கும்.
விண்ணையும் பிளக்கும். ஈரேழு புவனங்களையும் அழிக்கும்
வல்லமை பெற்றது என அறிந்திருப்பாய். எனினும்
சிறப்பற்றவற்றைச் சொல்லி தலை பத்தும்
சிந்திப்போகச் செய்வாயோ இராவணா?

5. மாயமான் ஒன்று ஏவி மாயையினால்
மறைந்து வந்தென்னைக் கவர்ந்தாய்.
தப்பிப் பிழைக்க வேண்டின் வழி தேடு.
தவறிடின் போர்மூள உன்குலத்திற்கே நஞ்சாகும்.
பெற்ற வரம் யாவும் காலனிடம் இருந்து உனைக்காக்கவே.
பிரானின் பாணத்தின் முன்னே அவை தாங்குமோ மூடனே?

6. பெற்ற வாளும் ஆயிளும் அமைந்த வலிமையும்
பேறினால் வானோர் வழங்கிய வரங்களும்
இராமன் அம்பைத் தொடுத்து விட்டவுடனே
இலவமாய் பறந்து அழிந்து போகுமே.
இருளும் நிற்குமோ ஆதவனின் முன்பு?

7. மறைந்துநீ வாழும் இவ்விடமாம் இலங்கையை
அறிந்து என் கோமகன் வரும்கால் 
ஆழியும் அதன் நடுவே அமைந்த இலங்கையும் 
அழியும் - அதுமட்டுமா? ஊழிக்காலமும் ஏற்பட
அழிவது உன் உயிர் மட்டுமன்று, உணர்வாய் என்றாள்.

8. இப்பெருஞ் செல்வம் யாவும் வழங்கினான் ஈசன்
எப்பொழுதும் மாதவத்தில் நிற்பாய் என்றே.
ஒப்பிலா செல்வமும் உன் உறவெலாமும் ஒழிய
தப்புகின்றாய் அறத்தில் இருந்தே. 
முப்பொழுதும் அறத்தையே விரும்பாயோ? என்றாள்.

9. அறஉரை கேட்ட அரக்கன் இராவணனின்
இருபது கண்களும் மின்னலாய்ப் பிளந்தன.
வெப்பம் கக்கிடும் குன்றுகளும் இற்றுப்போக
வெளிப்பட்ட வெங்கனல் சீற்றமும் 
மிஞ்சியது முன்னிருந்த காமத்தையும்.

10. கோபத்தில் கால்கள் வளர்ந்தன. 
தோள்கள் திசைகளை அளந்தன.
நெருப்பைக் கண்கள் உமிழ்ந்தன.
பெண் இவளைப் பிளந்து தின்பேன் 
என்றே முதலில் புறப்பட்டான், 
பின் நின்றான்.
சீற்றமும் காதலும் எதிரெதிர் கிளம்ப
செய்வதறியாது திகைத்தான்.

11. புனலென புறப்பட்ட இராவணன்
பிராட்டியைத் தொடும் முன்னர் அவனை
நான் காலாலே மிதித்துக் கையாலே பிசைந்து
நற்பணி செய்வேன் என்றே 
உறுதி கொண்டான் அனுமன் மரத்திலிருந்தவாறே.

12. தலைகள் பத்தும் சிதற மோதிப்பின்
இலங்கையை கடலின் கீழ் அமிழ்த்தி
புனித பிராட்டியை சுமந்து போவேன்
எனக்கருதி கைகளை பிசைந்திருந்தான் அனுமன்.



13. சினம் தணிந்த இராவணன் பிராட்டியிடம் :
உனக்கு உரிமையான இராமனைக் கொன்றபின்
உன்னைக் கொண்டு வருதலைச் செய்வேனாயின்
அதனால் நீயுன் உயிரை விட்டால்
அதனால் என்னுயிரும் நீங்கும் - ஆகவே
அன்று வஞ்சகம் செய்தேன் என்றான்.

14. அற்ப ஆயுளாள் சீதையே, யான் அயோத்தி சென்று
அரசாளும் பரதன் முதலானோர் உயிரைப் பருகி 
மிதிலையில் வாழ்பவரையும் அடியோடு அழித்து
அதிவிரைவில் திரும்பிவந்து உன்னைக் கொல்வேன் என்றே
அதட்டிச் சொன்னான்.

15. அஞ்சிடச் செய்தாவது அல்லது அறிவில் 
எஞ்சிடச் செய்திடும் உபாயம் ஏதாவது கொண்டு
வஞ்சியினை வசியம் செய்வீர் - தவறினால்
நஞ்சினைப் போலாவேன் நான் என்றே
வெஞ்சினத்துடன் உரைத்தான் அரக்கர் கோமான்
தனித்தனியே ஒவ்வொரு அரக்கியரிடமும்.

16. பொங்கும் அரவமாம் இராகு விழுங்கிக் கக்கிய 
மங்காத் தூவெண் மதிபோன்று இருந்த அன்னையை
தீயவர் அரக்கியர் சூழ்ந்து இழித்து அதட்டித்
தீமனம் போன போக்கில் சீறிப் பேசினர்.

17.  குறையா மனம் பெற்ற பிராட்டியைக்
கொல்லும் பொருட்டு அணுகிய அரக்கியரையும்
தின்னும் பொருட்டு அணுகிய அரக்கியரையும்
தீமொழி பேசிச்சென்ற இராவணனின் ஏவலையும்
தன்மனத்திலே எண்ணிப்பார்த்து கண்களில் கண்ணீர்
ததும்பியவாறு சிரித்தவளானாள் சீதை.

18. இன்னல்களில் இடைமறித்த திரிசடை:
அன்னையே கவலை வேண்டாம், 
முன்பு சொன்ன கனவின் முடிவாய்
நன்றே நடக்கும் என்றே சொல்லித் தேற்றினாள்.

19. முக்காலமும் அறிந்தவரை ஒத்த திரிசடை
மொழிந்ததைக் கேட்ட அரக்கியர் சீற்றம் குறைத்தனர்.
மேலும் துன்புறுத்தாது அடங்கினர். 
மெலிந்த பிராட்டியோ தன்னுயிர் நிலைபெற்றாள்.

Monday, June 23, 2014

சுந்தர காண்டம் : கடல் தாவு படலம்

வாழ்த்து
அன்பெனும் அமுதைப் பொன்னெனப் பூண்டவன்
தன்மனம் முழுதிலும் இராமனை நிறைத்தவன்
அகிலமும் அவனை அனுமனெனப் போற்றிட
அன்பனின் அருமையைச் அடியேனும் சாற்றுவேன்.

கடல் தாவு படலம்
1. அன்பர் அனைவரின் விடைதனைப்பெற்று
அனுமன் பெற்றனன் பேருருவம்!
விண்வரை உயர்ந்தவன் இந்திர உலகத்தைக்
கண்டு ஐயுற்றான் இலங்கை இதுதானோ என்று;
பின் தெளிந்தான் இலங்கை இதுவல்ல வென்று.

2. பின்னர் கண்டனன் இலங்கை மூதூர் நகரை.
பொன்மதில்கள், கோட்டைகள், மாட வீதிகள்
எனப்பல கண்ட மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தான்
அனுமனும் ஆகா வென்றே .

3. மூதூர் நோக்கி கால்களை அழுத்தி
வானில் எழும்பியபோது மகேந்திர
மலையோ பாவம் அழுந்திப் போனது அடியே.
மலையின் வயிறு பிதுங்கி அங்கிருந்த
மலைப்பாம்புகள் யாவும் வெளியே வந்து விழுந்தன.

4.  வானில் அனுமன் பறந்த காட்சி :
வால் எடுத்து, தாள் மடக்கி, மார்பு ஒடுக்கி
கழுத்தினை சுருக்கி கை நீட்டி விசைத்தான்.
விண்ணவரும் முனிவரும் வாழ்த்த விரைவாய்
விண்ணிலே காற்றைக் கிழித்துப் பறந்தான்.
முன்னம் பரந்தாமன் காலால் அளந்த உலகை
அனுமன் வாலால் அளந்தானோ என
வானோர் மருண்டனர்.

5. காலனின் கயிற்றுக்கு இதுவரை இலங்கை
செல்லவே அச்சம்; ஆனால் இப்போது இல்லை.
ஏனெனில் தலைவனாம் அனுமனின் வாலின்
பின்னால் ஒளிந்து கொண்டு செல்லலாமே!

6. வான்வெளியை ஊடுறுவிப் பறந்த வேகத்தில்
வானவர்கள் ஆங்காங்கே பறந்து வந்த
விமானங்களோ அந்தோ ஒன்றோடு ஒன்று
விரைவாய் மோதி நசுங்கி வீழ்ந்தனவே!

7. இவன் பறந்த வேகத்தைக் கண்டு
இந்திரனும் வியந்தான் - ஆகா, இவ்வேகத்தில்
இலங்கை மட்டும் தான் என்னே?
இன்னுமும் பலதூரம் செல்வான் என்றான்!

8. ஆழ்கடலில் ஆர்ப்பரிக்கும் திமிங்கிலம் முதலான
ஆபத்தான மீன்கள் எல்லாம் அந்தோ
அனுமனின் காற்று வேகத்தை தாக்குப் பிடிக்காமல்
தண்ணீரிலேயே மடிந்து மிதந்தனவே.

9. தடக்கை இரண்டையும் காற்றினில் செலுத்திப் பறக்க
தடக்கை இரண்டிலும் இருப்பது யாரோ?
தடக்கை இரண்டையும் இயக்க இருப்பது
சுடரொளி இராமனும் இலக்குவனும் ஆமே.

10. கடலின் மேலே விறையும் பாதையின் குறுக்கே
கடலினில் எழுந்தது மைந்நாகமலை.

அடடா இதுவென்ன தடை? என்று
அனுமனும் தன் காலினால் உதைத்திட
அம்மலையும் கடலினில் குப்புற வீழ்ந்தது.

அதன்பின் சிறு மானிட உருவம் கொண்டு,
அன்போடு உபசரித்து, இம்மலையில்
"இங்கே சற்று இளைப்பாறி விட்டுச் செல்லவும்" என்றது.

11. அனுமனும் அன்பினை மெச்சினான்.
அம்மலை விருந்துண்டுச் செல்ல வேண்டிட,
அனுமனோ, எண்ணிய கருமம் ஈடேறும் வரை
உண்ணேன் எனும் விரதம் தனை உரைத்தான்.
பின் திரும்பி வருங்கால் ஏற்பேன் என்றான்.


12. அடுத்து அனுமனின் வலிமைக்கு ஓர் சோதனை:

தக்கனின் மகளாம் சுரசையை
அரக்கி வடிவினில் அனுப்பினர் தேவர்.
இது மலையா? கடலா?
அல்லது மலை போன்றெழும் கடலா?

விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையே
பிளந்த வாயில் "நீயாக வந்து விழுவாய்" என்றாள்.

அனுமனோ மிகச் சிறிய உருவம் கொண்டு,
கண் இமைக்கும் நேரத்தில் செவிக்குள் புகுந்து
வாய் வழியே வெளியே வந்தான்.

அஞ்சா நெஞ்சன் அனுமனனின் வேகத்தை
மெச்சி வாழ்த்தி வழி அனுப்பினர் தேவர் முதலானோர்.

13. முதலிரண்டு தடைகளும் அன்பால் என்றால்
மூன்றாவது தடையோ பகையால் வந்தது:

திடீரென கடலில் நடுவே எழுந்தனள்
அங்காரதாரை எனுமோர் அரக்கி.

 நிழலைப் பிடித்தே இழுக்கும் சக்தி கொண்ட அவள்,
பறக்கும் அனுமனை அவ்வாறே கீழே இழுத்தாள்.
"அடே என்னைக் கடந்து செல்வதார்" என வினவி,
அனுமனை விழுங்க தன் வாயைப் பிளந்தாள்.

அரக்கியின் வாய் வழியே நுழைந்த அனுமன்
அவளது வயிற்றைக் கிழித்து வெளியே வந்தான்.

அரக்கியும் அத்தோடு மாண்டிட,
தேவர் முதலானோர் அனுமனை வாழ்த்திட,
வீரன் விண்ணில் பறந்தான்.

14. இனிமேலும் இடர்கள் வாராமல் இருக்க
இனியதோர் உபாயம் இராம நாமம்
உச்சரிப்பதே எனத்தெளிந்து இராம நாமம்
செபித்தாவாறே பறந்தான் ஆஞ்சநேயன்.

15. இப்படியாக அனுமன் இலங்கை மூதூர் நகரில்
இலம்பகம் என்னும் பவழமலையில் வந்து இறங்கினான்.
இறங்கியபோது புயலில் சிக்கிய மரக்கலம் போலும்
ஆட்டம் கண்டு பின் நின்றது அம்மலை. அங்கிருந்து
அனுமன் இலங்கை நகர் தெரியக் கண்டான்.

Friday, December 21, 2012

ராமா நீ யாரோ, எந்த ஊரோ?

இது என்ன கேள்வி? இராம காதையை அறியாதவர் எவரும் உண்டோ?
இராமன் பிறந்த ஊரையும் அவன் பெற்ற பேரையும் அறியாதவர் எவரும் உண்டோ?

அப்படியும் ஒருவர், யாரிந்த இராமன் என வியந்தால், அதற்காக இராம நாடக கீர்த்தனங்களில் அருணாசலக் கவிராயர் இயற்றிய பாடலும் உண்டு:

இராகம்: சங்கராபரணம்
தாளம்: ஆதி

(இவனை) யாரோ என்றெண்ணாமலே நாளும்
இவன் அதிசயங்களை சொல்லப் போமோ (யாரோ)

சூராதி சூரன் ராமனெனும் பேரன்
சுகுணா தீரன் ரவிகுல குமாரன் இவன் (யாரோ)

துரத்தும் சாபம் அகலிகைக்குக் காலினாலே
துடைத்தானே அவளுடல் மாசை - இன்பப்
பெருக்கமென்ன இவன் பிறக்கவே - உலகெங்கும்
பிறந்தது மங்கள ஓசை

பருத்த வில் இவன் கைக்குப் போதுமோ போதாதோ
பார்க்க வேணும் என்னோர் ஆசை - இங்கே
வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை

ரகுகுல திலகனாக இராமன் அயோத்தியில் பிறந்தான். சீதையை மணந்தான். பின் பிரிந்தான். காட்டில் அலைந்தான். வானரப் படையோடு இலங்கைக்குச் சென்று இராவண வதம் செய்து, சீதையை மீட்டான். பின் அயோத்தி மீண்டு ஆண்டான்.

ஆனால் உண்மையில் இராமன் யார்? மானுடனா, தேவர்களில் ஒருவனா, இறைவனா?
இவர்களில் யாரும் இல்லை என்பான் இராவணன்.
அளக்கமுடியாத பாற்கடல் போல் வரங்கள் பெற்றவன் இராவணன். ஆகையால், ஒரு மானிடனால் தன்னை இம்மியளவும் அசைக்க இயலாது என்று நம்பியிருந்தான். மானிடன் ஒருவனால் ஆபத்துக்கள் வரலாம் என்று அவனிடம் மற்றவர்கள் சொன்னபோதும் அதை எடுத்தெறிந்தவன், தான் வரங்கள் பெற்றபோதும் தேவர்களால் தனக்கு அழிவு வரக்கூடாது என்பதிலேயே குறிப்பாக இருந்தான்.
போரில் இராவணன் விடுத்த சூலத்தினை இராமன் தவிடுபொடியாக்கிய உடன், யாரிவன் இந்த இராமன் என்று ஐயுற்று இவ்வாறாக சொல்கிறான்:

 'சிவனோ? அல்லன்; நான்முகன் அல்லன்; திருமாலாம்
அவனோ? அல்லன்; மெய் வரம் எல்லாம் அடுகின்றான்;
தவனோ என்னின், செய்து முடிக்கும் தரன் அல்லன்;
இவனோதான் அவ் வேத முதல் காரணன்?' என்றான்.
(கம்பராமாயணம் - இராவணன் வதைப்படலம் 135.)

இராமன் சிவனும் அல்ல, திருமாலும் அல்ல, நான்முகனாம் பிரம்மாவும் அல்ல.  நான் பெற்ற வரங்களையெல்லாம் அழிக்கின்றான். பெரும் தவம் செய்து பெற்ற வரங்களைப் பெற்றவனோ என்றால், அப்படியும் தெரியவில்லை. இராமன் இவர்களுக்கெல்லாம் மேலான பரம்பொருளாகவே இருக்க வேண்டும் என எண்ணுகிறான். இப்பாடலில் இராவணனின் சிறிதேனும் சத்வ குணம் வெளிப்படுகிறது. ஆனால் அடுத்த பாடலில், அவனது ரஜோ குணம் வெளிப்பட, எதிரில் இருப்பவன் எவனாக இருந்தால் என்ன, எதிர் நின்றே வெற்றியை முடிப்பேன் என்றான்.

மேலே கம்பன் எழுதிய பாடலைப் போலவே, தியாகராஜரும் ஒரு பாடல் புனைந்துள்ளார்.

இராகம்: தர்பார்
தாளம் : திரிபுட தாளம்

பல்லவி
எந்துண்டி வெடலிதிவோ
ஏ ஊரோ நே தெலிய, இபுடைன தெலுபவைய ஸ்ரீராமா
அனுபல்லவி
அந்த சந்தமு வேறே நடதலெல்ல த்ரிகுணாதீ
தமையுன்னாதே கானி ஸ்ரீராமா நீவு

(இராமா, நீ எங்கிருந்து வந்தாயோ? உனக்கு எந்த ஊரோ? இப்போதாவது எனக்குத் தெரிவிப்பாயா?
மனதை மயக்கும் அழகான வதனம் இருந்தாலும், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவனாய் தெரிகிறாயே -  அப்படிப்பட நீ உண்மையில் யாரோ? எந்த ஊரோ?)

சரணம்
1. சிடுகண்டென பராத சயமுல தகிலிஞ்சே
சிவலோகமு காது
(ஒரு சில பொழுதுக்குள் அபராதங்கள் நேர்ந்துவிடுமோ என்று பயப்படும் சிவலோகத்தைச் சேர்ந்தவரில்லை)

2. வடுரூபைடு பலினி வஞ்சிஞ்சி யணத் ஸூவானி
வைகுண்டமு காது
( வாமனனாக வந்து மகாபலியை ஏமாற்றி அடக்கிய திருமால் வசிக்கும் வைகுண்டமும் உன் இருப்பிடம் இல்லை.)

3. விடவிசன முலாடி சிரமு த்ரும்ப பட்ட
விதிலோகமு காது
(பொய் சொல்லி தலை அறுபட்ட பிரம்மா வசிக்கும் சத்தியலோகமும் உன் இருப்பிடம் இல்லை.)

4. திடவு தர்மமு சத்யமு ம்ருது பாஷலு கலுகு
த்வியரூப த்யாகராஜ நுத நீவு
(திடமும், அறமும், வாய்மையும், இன்சொல்லும் ஆழகானதொரு வடிவத்தில் ராமன் என்ற பெயரில் வந்தது, சரிதானே! தியாகராஜனுக்கு இதை தெரிவிக்க வேண்டுமய்யா!)

இராமா, அபராதம் செய்தவர்களுக்கு மன்னிப்பே அளித்திருக்கிறாய்.
ஏமாற்றுப் பேச்சும் உன்னிடம் காணப்படவில்லை.
சொன்ன சொல் வழுவாமல் நின்றிருக்கின்றாய்.
கபடநாடகமெல்லாம் உனக்குத் தெரியாது.
ஒரு சொல், ஒரு பாணம், ஒரு மனைவி என்பதில் எப்போதும் உறுதியாய் இருக்கிறாய்.

ஆகவே, முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவனாய், மும்மூர்த்திகளாம் சிவன், திருமால் மற்றும் பிரம்மா ஆகியோர்களுக்கும் மேலான பரம்பொருள் நீ தான். இதுவே உன் தனிப்பெரும் பெருமை.

இப்பாடலை அபிஷேக் ரகுராமன் பாடிட இங்கு கேட்கலாம்:

Tuesday, December 18, 2012

தனுஷ்கோடியில் இராமன்

இராமனின் வில்லானது அவனது ஆயுதம். மானிடனாய் அவதரித்த இராம காதையில் அவனது இலக்கு இராவண வதம். அங்கே அவனுக்கு ஆயுதம் தேவைப்பட்டது. மானிடர் வழிபடும் இராமனுக்கு எதற்கு கோதண்டம்? மாரனின் கரும்பு வில்லுக்கு ஒரு பயனுண்டு. இராமனின் கோதண்ட வில்லிற்கு? அதன் இலக்கு தான் என்ன?

இராமனின் வில் இருக்கிறதே - அதன் இரு முனைகளிலும் ஸ்ரீராமன் விளங்குகிறான். இந்த இரண்டு முனைகளையும் ஒரு பொதுப் பெயரால் வழங்குவதுண்டு - அதுதான் "தனுஷ்கோடி" - இராம தனுசின் இரு கோடிகள்.

பெரியவர்கள் இந்த கோதண்ட வில்லை ஆத்ம சக்தியாம் ப்ரணவ சக்திக்கு ஒப்பிடுகிறார்கள்.   அந்த வில்லின் இலக்கானது பேரின்பம். அந்த வில்லில் நாண் பூட்டி தரிக்கப்படும் அம்புதான் ஜீவன். செலுத்தப்படும் ஜீவனான அம்பு பேரின்பம் எனும் இலக்கை அடைய - கோதண்டம் என்னும் வில்லினை ஆயுதமாக தரித்துள்ளான் இராமபிரான்.

கோதண்டம் என்பது ப்ரணவம். கோதண்ட தீட்சை அருளும் குருவாய் இராமன் விளங்குகிறான். கோதண்டத்தின் மேல்முனையில் இராம பிரானின் திருமுகம் விளங்குகிறது. இம்முனையில் இராமனின் "முறுவல் எய்திய நன்று ஒளிர் முகத்தை" (கம்பனின் சொல்லாடல்: 1297) தரிசித்துப் பொங்குகிறாள் காவிரி அன்னை.  திருவரங்கத்தில் இருபுறமும் அரங்கனை அணைத்தவள் அன்றோ காவிரி. அன்றலர்ந்த செந்தாமரையை வென்ற முகத்தை உடைய இராமனை யோகியர் தியானத்தினால் தரிசித்து பேரின்பத்தினைப் பெறுகிறார்கள். அவர்கள் அடையும் அந்த ஆனந்தமே இராமன் என்னும் பரமன்.

கோதண்டத்தின் கீழ்முனையில் இராம பிரானின் திருப்பாதங்கள் விளங்குகின்றன. இம்மூனையில் இராமனின் பாதத்தைப் பற்றியாவறு புனித நதி என்னும் பெயர் பெற்றாள் கங்கை என்னும் நங்கை. (ஏனெனில் கங்கை நாரணரின் பாதத்தில் இருந்து தோன்றியது : ஸ்ரீமத் பாகவதம்) இராமனின் பாதங்களின் மகிமையை அகலிகையின் சாப விமோசனத்தில் அறிவோம். அதைக் "கால் வண்ணம்" என்று பாடும் கம்பனின் சொல்நயம் வெளிப்படும்:

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்
இனிஇந்த உலகுக் கெல்லாம்
உய்வண்ணம் அன்றி மற்றோர்
துயர்வண்ணம் உறுவது உண்டோ
மைவண்ணத்து அரக்கி போரில்
மழைவண்ணத்து அண்ணலேஉன் 
கைவண்ணம் அங்குக் கண்டேன்
கால்வண்ணம் இங்குக் கண்டேன்
(பால காண்டம், மிதிலைக்காட்சிப் படலம், 24.)

கோதண்டத்தின் மேல்முனையில் இராமனின் முகத்தை கடுந்தவம் புரிந்த யோகியர் கண்டு பெற்றனர் பேரின்பம். கீழ்முனையில் ஒன்றுமே செய்யாமல் இராமன் வரவுக்காக காத்திருந்த கல்லும் பெற்றது பிறவிப் பேறு!

இப்படியாக ஒரு முனையில் இருந்து மறு முனை வரை, தன்னைச் சரண் அடைய வந்து நின்ற எல்லோரையும் பிறவிப் பயன் என்னும் இலக்கினை அடைவதற்கான ஒரு சாதனமாம் கோதண்டத்தைத் தாங்கிய கோதண்டபாணியாய் திகழ்கிறான். அவனுக்கு கோதண்டம் ஆயுதம், நமக்கோ அது சாதனம். 

தியாகராஜ சுவாமிகளின் தோடி ராகப் பாடலான "கோடி நதுலு தனுஷ்கோடி" என்னும் பாடலில் இந்த சாரத்தினைத் தான் எடுத்தாள்கிறார்.

பல்லவி:
கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக
ஏடிகி திரிகேவே ஓ மனஸா.
அனுபல்லவி:
ஸூடிக ஷ்யாம சுந்தர மூர்த்தினி
மாடிமாடிகி ஜூசே மஹாராஜூலகு.

பல்வேறு (கோடி) புண்ணிய நதிகளும் தனுஷ்கோடியில் இருக்க, புண்ணிய நதியினை தேடிப் போவானேன்? அதுபோல, நீலமேக வண்ணனான இராமன் என்னும் பரமனைத் துதித்தால், அதுவே எல்லாக் கடவுள்களையும் துதித்தது போலவாகும். 

சரணம்:
கங்க நூபுரம் புனனு ஜனிச்செனு
ரங்குனி கனி காவேரி ராஜில்லெனு
பொங்குசு ஸ்ரீரகு நாதுனி ப்ரேமதோ
பொகடே தியாகராஜூ மனவி வினவே.

கங்கை அவன் காலில் தோன்றி புனித நதியானாள். காவிரியோ அரங்கநாதனை தரிசித்து ஒளி விடுகிறாள். அன்பன் தியாகராஜனும் பக்தியுடம் ரகுநாதனைத் துதித்திட இவனது விண்ணப்பத்தினை செவி சாய்த்துக் கேட்டிடவும்!
------------------------------------------------------------
இப்பாடலை இங்கு பாடிக் கேட்கலாம்:

------------------------------------------------------------
உசாத்துணை: டி.எஸ். பாலகிருஷ்ண சாஸ்திரிகள் (1962-இல் வைதீக தர்ம வர்தினி என்னும் பத்திரிக்கையில் "தியாகோபனிஷத்" என்ற தலைப்பில் வெளிவந்தது. இவற்றை மின்னாக்கம் செய்து பகிர்ந்து கொண்ட திவா சாருக்கு நன்றிகள்.)


Monday, November 21, 2011

தில்லை விளாகம்

திருவாரூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தில்லைவிளாகம் திருத்தலம். இங்கே அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் தெய்வீகப் பொலிவுடன் திகழும் இராம விக்ரகம் - மிகவும் பிரசித்தம். தில்லைச் சிதம்பரத்தில் நடராஜரோடு சேர்ந்து கோவிந்தராஜருக்கும் சன்னிதி இருப்பதுபோல, இங்கு நடராஜருக்கு சந்நிதி உண்டு. இத்தலத்திற்கு "ஆதி தில்லை" என்றும் பெயருண்டு.

"ராம சரம்" என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் "தில்லை சித்ரகூடம்" என இத்தலம் வழங்கப்படும்.

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் "தில்லை சித்ரகூடம்" இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.

"எம்பார்" கோவிந்த தாசர், இராமனுஜருடைய "திருவடி நிழல்"(இராமனுஜ கோவிந்த தாசர்)  எனப்பெயர் பெற்றவர். "சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை", "மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை"ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.

இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்

பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே

அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை

சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை

Sunday, December 26, 2010

பக்தியும் ஞானமும் (5) - திருமால்

என்ன தவம் செய்தனை யசோதா!
எங்கும்நிறை பரப்பிரம்மம் அம்மா
என்றழைக்க, என்ன தவம் செய்தனை!
- ஊத்துக்காடு வேங்கடகவி

திருமாலுக்கு அவதாரங்களோ பலப்பல. அவற்றில் குறிப்பாக, பூர்ணத்தவுமான அவதாரங்களாக இரமாவதாரத்தையும், கிருஷ்ண அவதாரத்தையும் சொல்ல வேண்டும். குழந்தைக் கண்ணன் தன் வாய் திறந்து அண்ட சராசரங்களையும் காட்டி அன்றே சொல்லிவிட்டான், சகுணப் பிரம்மமாக அவன் காட்சி அளித்தாலும், அவன் பரப்பிரம்மம் தான் என்று.

யாரோ என்றெண்ணாமலே நாளும் - இவன்
அதிசயங்களைச் சொல்லக் கேளும்!
சூராதிசூரன் இராமன் என்னும் பேரன்!
...
இங்கே வரச்சொன்னாலும் வரக் கிடைக்குமோ வலுவிலே
வந்தானே நீங்கள் செய்த புண்ணிய பூஜை!
- அருணாசலக் கவிராயர்.

ஆம், குணங்களோடு கூடியதான பரப்பிரம்மம் போற்றிப்பாடிட வழி செய்து பரமனை அறிய மற்றும் அடைய மனிதனுக்கு வழி வகை செய்திட, அது நம் பெருந்தவப் பலன் தான்.

முத்துசாமி தீக்ஷிதரின் கிருதிகளில் இராமனையும் கண்ணனையும் பாடும் பாடல்களில் கிடைக்கும் குறிப்புகளை இவ்விடுகையில் பார்க்கவிருக்கிறோம்.

முதலில் ஜகம் புகழும் புண்ணிய கதை : இராமகாதை.
* மாமவ இரகுவீரா (மாஹாரி ராகம்) : இராம சொருபம் தத்வ சொருபம்
* ராமசந்திரேண சம்ரஷிதோஹம் : பிரம்ம, விஷ்ணு, ருத்ர சொரூபம்
* ஸ்ரீ ராமச்சந்ரோ (ஸ்ரீரஞ்சனி) : விஸ்வாமித்திரரின் யாகத்தை காத்தது, தாடகை வதம், மிதிலைப் பிரவேசம், வில் ஒடித்தல், சீதை மணம், பரசுராமரின் கர்வத்தை அடக்குதல் - என்று பாலகாண்டம் பளிச்சிடுக்கிறது.
* இராமச்சந்திராதன்யம் (தன்யாசி) : சுபாகு, மாரீசன், கரன், தூஷணன் போன்றோர்களைக் கொன்றது குறிப்படப்படுகிறது.
* மாமவ பட்டாபிராம (மணிரங்கு) : அனுமனால் பாடப்பட்டு, பரதன், இலக்குவன், சத்ருக்கணன், விபீடணன் மற்றும் சுக்ரீவன் போன்றவர்களால் சேவிக்கப்பட்டு, முனிவர்களின் ஆசிகளுடன் நவரத்தின மண்டபத்தில் மணிகள் பூண்ட சிம்மாசனத்தில் அன்பின் சீதையுடன் கொலு வீற்றிருக்கும் பட்டாபிஷேகக் காட்சியினை தத்ரூபமாக படம் பிடிக்கப்படுகிறது - பாடலில் தான்.

அடுத்து கவின்மிகு கண்ணன் கதை.
* பாலகோபால (பைரவி) : கம்ச வதம், துரோண, கர்ண, துரியோதனன் முதலானவர்களை ஒஇத்தது. பாஞ்சாலியின் மானத்தைக் காத்தது.
* ஸ்ரீகிருஷ்ணம் பஜரே (ரூபவதி): பாரதப் போரில் சக்ராயுதத்தால் சூரியனை மறைத்தது.
* பார்த்தனின் சாரதியானதை ஒரு பாட்டில் 'தனஞ்சய சாரதே' என்கிறார்
* கிருஷ்ணாநந்த முகுந்தமுராரே (கௌடிபந்து) : நாராயணன், வாசுதேவன், கோவிந்தன், பத்மநாபன் எனப் பெயர்களைப் பட்டியலிடுகிறார்.

மேலும், பிளிறு கேட்டோடி வந்து களிறு மீட்டது - கஜேந்திரனைக் காப்பாறியது பல கீர்த்தனைகளில் குறிப்படப்பட்டுள்ளது.
பக்தன் பிரகலாதனை பரிபாலித்தது, கூர்மாவதாரம், வாமனாவதாரம் போன்றவயும் அவரது கீர்த்தனைகளில் இடம்பெற்றுள்ளன.
அஜாமிளன், அம்பாரிஷன் கதைகளும் கூட இடம்பெற்றுள்ளன.

திருமால் திருத்தலங்களை இவரது பாடல்கள் மூலமாகவே தரிசித்து விடலாம். திருப்பதி, காஞ்சி, சோளங்கிபுரம், திருவரங்கம், சிதம்பரம், திருக்கண்ணமங்கை, அழகர் கோவில், குருவாயூர், திருவனந்தபுரம் என நெடியோன் தலப்பட்டியல் நீள்கிறது. "சேஷாசல நாயகம்" என்னும் வராளிராக கீர்த்தனையில் திருவேங்கடத்தானின் அலங்கார அகுகளை வர்ணிப்பார்.

இந்த இடுகையில் நாம் சாகித்யத்துடன் பார்க்கப் போகும் பாடல் 'சந்தான ராமசுவாமினம்' என்னும் பாடல்.
இராகம் : ஹிந்தோள வசந்தம்
பாடற்தலம்: நீடாமங்கலம் (திருவாரூர்)

திருமதி, இராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இப்பாடலை இங்கு கேட்கலாம்:
santhanaramaswamin...


பல்லவி

சந்தான ராம சுவாமினம்
சகுண நிர்குண ஸ்வரூபம் பஜரே

அனுபல்லவி
சந்ததம் யமுனாம்பாபுரி நிவசந்தம்
நத சந்தம் ஹிந்தோள
வசந்த மாதவம் ஜானகீதவம்
சச்சிதானந்த வைபவம் சிவம்

சரணம்
சந்தான சௌபாக்ய விதரணம்
சாது ஜன ஹிருதய சரசிஜ சரணம்
சிந்தாமண்யாலங்க்ருத காத்ரம்
சின்மாத்ரம் ஸூர்ய சந்த்ர நேத்ரம்
அந்தரங்க குருகுஹ ஸம்வேத்யம்
அன்ருத ஜடது:க ரஹிதம் அனாத்யம்

பாடற்பொருள்:
பாடலில் பல்லவியிலேயே தீஷிதர் பிரம்மத்தின் இரண்டு பரிணாமங்களை எடுத்து இயம்பி விட்டார். சந்தான இராம சாமி - இவரே தான் குணங்களோடு கூடியவர் - இவரேதான் குணங்கள் இல்லாமலும் இருப்பவர். எதற்காக இப்படி இருக்க வேண்டும் என்றால் - நமக்கு அருள் செய்வதற்குதான் - அதற்காகத்தான் குணங்கள் பொருந்திய சகுண பிரம்மமாகத் திககிறார்.

எப்போதும் யமுனாம்புரமதில்(நீடாமங்கலம்) வாசம் செய்பவர். ஹிந்தோள வசந்தம் என்னும் இராகத்தில் பாடப்படும் மாதவர்.
சச்சிதானந்த சொருபம். சத்யம் - ஞானம் - ஆனந்தம் - என மூன்று சொருபங்களிலும் ஆனவர்.
"சிவம்" - சிவம் என்னும் நிலை - துரியம் - இதுவே சைத்தன்யம்.

பக்தர்களுக்கு சந்தான சௌபாக்கியங்களை அருள் செய்பவர்.
அவரது தாமரைப் பாதங்கள் சாதுக்களின் இருதயத்தில் தெரிகிறது. (அகங்காரம் அற்றவர்களிடமெல்லாம் அவர் இருப்பார்)
சிந்தாமணி முதலான ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்டவர்.
சைத்தன்ய சொருபமானவர்.
சூரியன் மற்றும் சந்திரன் இவரது கண்களாய் அமைந்தன.
குருகுஹனான தீக்ஷிதரால் துதிக்கப்படுபவர்.
பொய்யானது இங்கே இல்லை, ஜடமானது இங்கே இல்லை. துக்கம் இங்கே இல்லை. பின் என்ன?
சத்யமாயும், ஞானமாயும், ஆனந்தமாயும் திகழும் சச்சிதானந்த சொரூபம் மட்டுமே. ஆதி அந்தமில்லா சச்சிதானந்தம்.

~~~
திருமாலைப் பற்றிச் சொல்லும்போது அவனது திருமார்பினை விட்டு அகலாத திருமகளைப் பற்றியும் சொல்ல வேண்டும். திருமகள் பெருமையினைப் பாடும் 'ஹிரண்மயிம் லக்ஷ்மீம்' எனும் லலிதா ராகப் பாடலை இங்கு முன்பே பார்த்திருக்கிறோம்.
~~~
ஸ்ரீ சத்யநாராயணம் (சுபபந்துவரளி) கிருதியில் தீக்ஷிதர் சொல்லுவது போல, சத்யம் - ஞானம் - ஆனந்தம் எனும் வடிவில் எப்போதும் உள்ளார் நாராயணர். பரமாத்ம சொரூபத்தைத் தவிர பிரபஞ்சத்திற்கு தனியான ஒளி இல்லாததால், சர்வமாக நாராயணர் இருக்கிறார்.

குணங்களோடு கூடிய சகுணப் பிரம்மமாக போற்றப்பட்டாலும் - குணங்களற்ற நிர்குண பிரம்மமாய் இராமன் இருப்பவன் என்பதை மகான் கபீர்தாஸர் எப்படி வலியுருத்தி இருக்கிறார் என்பதனை சூரி சாரும் கபீரன் வலைப்பதிவில் குறிப்பிட்டிருப்பதை இங்கே நினைவு கூறுவது பொருத்தமாய் இருக்கும்.

Sunday, May 23, 2010

கான ரசிகன் கந்தன்

இசை ரசனை எல்லோருக்கும் உண்டு.
உங்களுக்கும், எனக்கும், ஏன் என்னப்பன் குமரக்கடவுளுக்கும் கூடத்தான்!
குமாரசாமியின் இசை ரசனைக்கு, 'ரசிகசிகாமணி' என்றொடு பட்டம் கொடுத்த பாடல் ஒன்று உள்ளது. நாம் இங்கே பார்க்கவிருக்கும் அப்பாடல் கோடீஸ்வரஐயரால் இயற்றப்பட்டது. இவர் 72 மேளகர்த்தா இராகங்களிலும் பாடல்களைப் புனைந்த பெருமை பெற்றவர். இவரைப் பற்றிய குறிப்புகளை முன்பொருமுறை பார்த்திருக்கிறோம் இங்கே. இப்பாடல், 62வது மேளகர்த்தா இராகமாகிய ரிஷபப்பிரியா இராகத்தில் அமைந்துள்ளது. இவரது மற்ற பாடல்களைப் போலவே, இந்த பாடலிலும் இராக முத்திரையினைக் காணலாம். மேலும் 'கவி குஞ்சரதாசன்' எனப்பாடல் இயற்றியவர் முத்திரையினையும் காணலாம்.

எடுப்பு
கன நய தேசிக கானரசிக சிகாமணி நீயே கந்தா
எனக்கருள் நீயே தினம்

தொடுப்பு
கனிநய சொல்பொருள் கனகம்பீரம்
இனிய சுருதியோடு இயை லய தீர

முடிப்பு
ஸட்ஜ ரிஷபப்பிரிய காந்தார மத்யம
பஞ்சம தைவத நிஷாத வித
சப்தஸ்வர சங்கீத கவி குஞ்சரதாசன்
அனவரதம் தரும் நின்னருள் மய
-----------------------------
* பாடலை M.L.வசந்தகுமாரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
* சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
-----------------------------
"கன, நய, தேசிக" என்பது மூன்று விதமான இராகப் பிரிவுகளைக் குறிப்பதாகும்.
இதுபோன்ற மூன்று விதமான இராகப் பிரிவுகளையும் ரசிக்கும் ரசிகசிகாமணியாம் கந்தன்! கலைமாமணி பட்டத்திற்கு ஏங்கும் கலைஞர்கள் ஒருபுறமிருக்க, கந்தன் மட்டும் இசை விரும்பும் ரசிகனாகவே இருக்கிறான்!!!:-)

ஒரு பாடல் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான இலக்கணத்தினைச் சொல்லும் பாடலிது!

என்னவெல்லாம் இருக்கும்?:
சொல்
பொருள்
சுருதி

எப்படியெல்லாம் இருக்க வேண்டும்?
சொல்லிலும் பொருளிலும் - கனிநயம் நிறைந்திருக்க வேண்டும்.
அது கேட்போரை இழுக்கும் வகையில் கம்பீரமாக இருக்க வேண்டும்.
இனிமையான சுருதியினைக் கொண்டிருக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒன்றோடு ஒன்று இயல்பாக கலந்திருக்க வேண்டும்.

சப்த சுரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம் மற்றும் நிஷாதம் - ஆகியவற்றின் சஞ்சாரங்களில் அமையப்பெற்ற இசையென்னும் இனிமை ததும்பும் சங்கமத்தில், குஞ்சரகவி'யின் தாசனாகிய அடியேன் 'குஞ்சரதாசன்', எப்பொழுதும் பாடிப்புகழுவது யாதெனில், குன்று தோறும் வளரும் குமரக் கடவுளின் குன்றா அருள்தனையேயாம்.

"கனிநயம்":
சொல்லும் சொல்லதில் *கனி*யிருத்தி, காய் விலக்கிடுவீர் என்பார் வள்ளுவர்.
கனிவான சொற்புழக்கம் கனியான சொல்லினைத் தரும்.
அக்கனியோடு சேரும் நயம், பூவோடு சேரும் நார் போல. பூவினைத் தாங்கித் திகழச் செய்யும் மறைபொருள் போலே.
நயமெனில் யாது?
நன்மை பயக்கும் யாதும் நயமென இயம்பும் நாலடியார்.
கனிவான சொல்லினை புழங்கும் பாங்கினை கனிநயம் என்போம்.
கனிநயத்தில் அன்பும், அருளும் மிளிரட்டும். அது குமரனருளைப் பாடட்டும்.

--------------------------------------------------
இந்தப் பாடலைப் பார்க்கும்போது, தியாகராஜரின் ஆரபி இராக 'நாதசுதாரசம்' கிருதியும் நினைவுக்கு வருவதை தவிர்க்க இயலாதது. அப்பாடலில் அவர் சொல்லுவதாவது:

வேத புராண ஆகம சாஸ்திரங்களுக்கு ஆதாரமான
நாதமே இராமன் என்ற பெயரில் மனித உருவானது.

"சுரங்கள் ஏழும் இராமனின் திருமேனியில் மணிகளாகவும்
இராகம் அவனது கோதண்டமாகவும்
கன, நய, தேசிகம் ஆகிய பிரிவுகள் நாணின் முப்பிரிகளாகவும், ரஜஸ், தமஸ், சத்வம் எனும் முக்குணங்களாகவும்,
கதிகள் அம்புகளாகவும் அமையப்பெற்றுள்ளது"
என்றெலாம் இசையின் அங்கங்களை, தனது மனம் விரும்பும் மகாபுருஷனிடம் கண்டு களிக்கிறார்.
---------------
இப்பாடலை, ராதா ஜெயலக்ஷ்மி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


கத்ரி கோபால்நாத் அவர்களின் சாக்ஸபோனில் இப்பாடலிசை தவழ்வதை இந்த பாடல் தொகுதியில் இருந்துகேட்கலாம்.

Sunday, May 24, 2009

இராம நாமம்

ஸ்ரீராமஜெயம்!


சிறப்புகள் எல்லாம் சிறப்புற, சிறப்புகளின் மகுடமாய் சீர் பெற்று ஓங்கும் நாமம் இராம நாமம்.

இந்த இராம நாமத்தின் சிறப்புகளை இப்படியாக ஒரு வரியில் சொல்லி முடித்துவிட முடியாது. அதுக்குத்தான் இந்த பதிவு!

தியாகராஜ சுவாமிகள் முதல் பதிவர் திரு.ரமேஷ் சதாசிவம் வரை பலரும் இரசித்துப் பருகிய நாமம் இராம நாமம்.

சதாசிவ பிரம்மேந்திரரும், பருத்தியூர் கிருஷ்ண சாஸ்திரி அவர்களும் பாடித் துதித்த இராம நாமம்.

இப்படி எத்தனையோ மகான்கள், பாடிப் பேரின்பம் பெற்ற நாமம் இராம நாமம்.



இராகம் : ஜன சம்மோதினி

எடுப்பு
இராம நாமம் நல்ல நாமம்
நன்மையின் ரூபமாய் நானிலம் காக்கும்
இராம நாமம் நல்ல நாமம்

தொடுப்பு
தாமரைக்கண்ணனை தன்னிசையால் தினம்
தவத்திரு நாதயோகி தியாகராஜர் கண்ட
இராம நாமம் நல்ல நாமம்

முடிப்பு
ஜனன மரண பயம் தீர்க்கும் இராம நாமம்
ஜனகாதி முனிவர்கள் ஜபித்திடும் நாமம்
மனத்திருள் நீக்கிடும் மங்கள நாமம்
மாதா பிதா குருவை மதித்த மன்னன்
இராம நாமம் நல்ல நாமம்

இராமன் பரமன். அவன் நாமத்தை தியானித்தல் என்பது சகலகோடி தேவதைகளையும், தெய்வங்களையும் தியானிப்பது ஆகும். இராமன் கையில் இருக்கும் கோதண்டமே ப்ரணவம். அதன் இலக்கே, பரமானந்த பேரின்ப நிலை. அவனது சாரங்கத்தில் தரித்து ஏவப்படும் அம்பெனும் பாணமே, ஜீவன். ஜீவன், இராமானந்த நிலையினை அடைய வழி வகுக்கும் சாதனமாய், விளங்குகிறது இராமனின் வில்! அது போலவே இராம நாமமும், அப்பேரின்பத்தினை அடைய வழி வகுக்கும் சாதனம்!

தியாகராஜரின் தோடி இராகப் பாடல் ஒன்றுண்டு. 'கோடி நதுலு தனுஷ்கோடி லோனுண்டக...' எனத் துவங்கும் அப்பாடலில், தியாகப் பிரம்மம் சொல்லுகிறார்: 'நீலமேக ஷ்யாமளன் ஆன சுந்திர மூர்த்தியான இராமனை தியானம் செய்து, இதயக் கமலத்தில், காணப்பெற்றவர்கள், பாக்கியசாலிகள். அவர்கள் மகாராஜாவைப் போன்றாவர்கள்' என்று.

ப்ரணவம் == பரப்பிரம்மத்தின் சக்தி == கோதண்டம் == இராம நாமம்!
~~~
அடுத்து வருவது:
இராகம் : தேஷ்
இயற்றியவர்: தஞ்சை சங்கரய்யர்

எடுப்பு:
இராம நாமமே துதி மனமே!
க்ஷேமம் உறவே, நீ தினமே,
சீதாராம நாமமே துதி மனமே!

தொடுப்பு:

பூமியை, பொன்னை, பூவையரையும், நீ,
பூஜித்து பின் புண்ணாகாமலே
சீதாராம நாமமே துதி மனமே!

முடிப்பு:

சோதனைகள் பல, வாதனைகள் யாவும்,
நாதனை நினைந்திடில் நாடுமோ?
சீதாராம நாமமே துதி மனமே!
~~~
மூன்றாவதாக, புரந்திரதாசரின் 'ராமா ராமா' பாடலை, திருமதி.MLV அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

Tuesday, August 26, 2008

தமிழ் மூவரில் ஒருவர், அருணாசலக் கவிராயர்

மிழ் மூவர் என்று நம் இசை அறிஞர்களால் போற்றப்படும் மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் அவர்களைப் பற்றி இந்த இடுகையில் பார்க்கப்போகிறோம். தமிழில் கீர்த்தனைகள் உருவாக்கிய முன்னோடிகளான இம்மூவரில், மற்ற இருவரான முத்துத்தாண்டவர் மற்றும் மாரிமுத்தாப்பிள்ளை பற்றி ஏற்கனேவே முன்பொரு இடுகையில் பார்த்தோம்.

அருணாசலக் கவிராயர் (1711-1779) தில்லையாடியில் பிறந்து சீர்காழியில் வாழ்ந்தவர். பல இசைப்பாடல்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பெற்றவர். இவரது ஆக்கங்களில் முக்கியமாக குறிப்பிடப் பட வேண்டியது, 'இராம நாடகக் கீர்த்தனம்' எனப்படும் இசைக் காவியம். இராமயணத்தில் வரும் முக்கிய நிகழ்சிகளை மையமாக வைத்துக்கொண்டு, அவற்றை கீர்த்தனைப் பாடல்களாக இயற்றியுள்ளார். இப்பாடல்களை இவர் இயற்றியும், தன் உதவியாளர்களைக் கொண்டு அவற்றுக்கு இசை அமைத்தும், இவற்றை மக்களிடையே பரப்பினார். நடனம் மற்றும் நாட்டிய நாடகங்களிலும், கச்சேரிகளிலும் இன்றளவும் இப்பாடல்களைப் பாடக் கேட்கலாம். கம்பரைப்போலவே, இவரும் தனது இராம நாடகக் கீர்த்தனையை திருவரங்கக் கோயிலில் அரங்கேற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. இந்த அரங்கேற்றத்தின் போது பாடியதுதான் புகழ்பெற்ற 'ஏன் பள்ளி கொண்டீரய்யா' பாடல். 'கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' போன்ற புகழ் பெற்ற வரிகளுக்குச் சொந்தக்காரர் கவிராயர்.

முன்னொரு முறை தஞ்சைக் கோட்டையை ஆற்காடு நவாபின் படைகள் முற்றுகை இட்டபோது, தஞ்சைப்படையினருக்கு, மன உறுதியையும், ஊக்கத்தையும் தருவதற்காக, அருணாசலக் கவியாரை அழைத்து சிப்பாய்களுக்கு முன்னால் பாடச் சொன்னார்களாம். அவரும் 'அனுமன் விஜயம்' என்கிற தலைப்பில் சொற்பொழிவாற்றி, 'அந்த ராவணனைக் கண்டு சும்மா போனால், என்ன அனுமன் நானே?' என்ற அடாணா கீர்த்தனத்தைப் பாடியபோது வீரர்களிடையே ஓர் எழுச்சி ஏற்பட்டதாம். தொடர்ந்து,
'அடிக்காமலும், கைகளை
ஒடிக்காமலும், நெஞ்சிலே
இடிக்காமலும், என் கோபம்
முடிக்காமலும் போவேனோ?'
என்று பாடியபோது, வீரர்கள் எழுந்து ஆரவாரம் செய்தனராம்.
"ராமசாமியின் தூதன் நானடா ராவணா!", என்று மோகனராகத்தில் பாடியபோது, அனேக வீரர்கள் வீர உணர்ச்சியில் மூழ்கிப்போயினராம். பின்னர் நடந்த போரில், தஞ்சை வீரர்கள், 'பாய்ந்தானே அனுமான்', என்ற வாக்கியத்தையே படைமுழக்கமாக முழக்கிக்கொண்டு எதிரிகளின்மீது பாய்ந்து வெற்றி பெற்றதும் வரலாறு.

சீர்காழிக் கலம்பகம், சீர்காழி அந்தாதி, தியாகராசர் வண்ணம், சம்பந்தர்பிள்ளைத் தமிழ், சீர்காழி புராணம், சிர்காழிக்கோவை, அனுமான் பிள்ளைத் தமிழ், அசோமுகி நாடகம் என்பன இவர் இயற்றிய இதர நூல்கள்.

இவரது பாடல்களில் என் மனதைக் கவர்ந்தவை:
  • ஏன் பள்ளி கொண்டீர் ஐயா - ஸ்ரீ ரங்கநாதரே நீர், ஏன் பள்ளி கொண்டீர் ஐயா.
    இராகம் : மோகனம், தாளம் : ஆதி
    பாடுபவர் : சுதா ரகுநாதன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • ஆரோ இவர் ஆரோ - என்ன பேரோ அறியேனே
    இராகம் : பைரவி, தாளம் : ஆதி
    பாடுபவர் : எம்.எஸ்.சுப்புலஷ்மி
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • கண்டேன் கண்டேன் கண்டேன் சீதையை, இராகவா
    இராகம் : வசந்தா, தாளம் : ஆதி
    பாடுபவர் : சௌம்யா
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • இராமனுக்கு மன்னன் முடி தரித்தாலே, நன்மையுண்டொருகாலே
    இராகம் : ஹிந்தோளம், தாளம் : ஆதி
    பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்
    பாடலை இங்கு கேட்கலாம்.

  • எப்படி மனம் துணிந்ததோ என் சுவாமி
    இராகம் : ஹூசைனி, தாளம் : கண்ட சாபு
    பாடுபவர் : பாம்பே ஜெயஸ்ரீ

    பாடலை இங்கு கேட்கலாம்:
    Eppadi Manam .mp3


பொதுவாக கச்சேரியின் இறுதியில் மங்களப் பாடலாக 'நீ நாம ரூபமுலகு நித்திய ஜய மங்களம்' அல்லது 'பவமான சுதடு படு பாதார விந்த முலகு' பாடலையோ பாடுவார்கள். அருணாசலக்கவிராயரோ இசை நிகழ்ச்சிகளில் பாடி நிறைவு செய்வதற்காகவே தமிழில் அருமையான ஒரு மங்களப்பாடலைத் தந்துள்ளார்:

எடுப்பு / பல்லவி
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்- நல்ல
திவ்விய முகச் சந்திரனுக்கு சுப மங்களம்

தொடுப்பு / அனுபல்லவி
மாராபி ராமனுக்கு மன்னு பரந்தாமனுக்கு
ஈராறு நாமனுக்கு இரவிகுல சோமனுக்கு

முடிப்பு
(சஹானா சரணம்)
கொண்டல் மணி வண்ணனுக்கு கண்ணனுக்கு மங்களம்
கோசலை குமாரனுக்கு வீரனுக்கு மங்களம்
புண்டரீக தாளனுக்கு பூச்சக்கர வாளனுக்குத்
தண்டுளுவதோளனுக்கு
ஜானகி மனாளனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.
(மத்யமாவதி சரணம்)
பகிரண்டநாதனுக்கு வேதனுக்கு மங்களம்
பரதனாம் அன்பனுக்கு முன்பனுக்கு மங்களம்
சகல உல்லாசனுக்குந் தருமந்தஹாசனுக்கு
அகில விலாசனுக்கு அயோத்யாவாசனுக்கு
ஸ்ரீராமச் சந்திரனுக்கு ஜய மங்களம்.

Sunday, August 03, 2008

ஸ்ரீராம இருதயம்

சென்ற பகுதிகளில், சக்திக்கு சிவன் தந்த விளக்கமும், அந்த விளக்கத்தின் உள்ளே சிவன் மேற்கோள் காட்டிய சம்பவத்தினில், அனுமனுக்கு சீதை தந்த விளக்கமும் பார்த்தோம். அவற்றிலெல்லாம், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பிரம்மமாகவே இராமனின் உண்மை உருவம் இருப்பதாகப் பார்த்தோம். நம் அறியாமையினால்தான் இராமனை அவன் மாயா சக்தியில் இருந்து பிரித்தறிய இயலாமல் இருப்பதால் நம்மால் அவனை பரப்பிரம்மமாக உணர இயலவில்லை என்பதையும் பார்த்தோம்.

தொடர்ந்து சக்திக்கு சிவன் இராமனைப்பற்றி விளக்கிக்கொண்டிருக்கிறார். அதில் அனுமனுக்கு சீதை இராமனின் உண்மை உருவத்தினை விளக்கியதைத் தொடர்ந்து, சீதை அருகிலேயே இருந்த இராமனும் தொடர்ந்து அனுமனுக்கு உயர்ஞான உபதேசம் செய்யலானார்!.

இராமரின் உரை: அன்பின் அனுமனே, இப்போது உனக்கு நான் ஆத்மா, அனாத்மா மற்றும் பரமாத்மா பற்றியான உண்மையை சொல்லப்போகிறேன்:

ஒரு விளக்கத்திற்காக, ஆகாசத்தை எடுத்துக் கொள்வோம். அதை மூன்றாக பிரித்துக் கொள்வோம். முதலில் எங்கெங்கும் வியாபித்திருக்கும் வானம். அடுத்தாக, அந்த வானத்தின் ஒரு பகுதியாக, மண்ணில் நீர்நிலைகளின் பிம்பமாகத் தெரியும் வானம். இறுதியாக, ஒரு பானையிலோ அல்லது குடத்திலோ நிரப்பியிருக்கும் நீரில் பிம்பமாகத் தெரியும் வானம்.

இந்த ஆகாசப் பிரிவுகளைப்போலவே, சுத்த சைத்தன்யமும்(சைத்தன்யம் : உயர் ஞானமாய் விளைந்திருக்கும் பிரம்மம் - Consciousness) மூன்று பகுதிகளாகச் சொல்லலாம். முதலில் எங்கெங்கும் நிறைந்திருக்கும் சுத்த சைத்தன்யம். அடுத்ததாக புத்தியினால் தெரியும் சைத்தன்யம். மூன்றாவதாக, ஜீவனின் புத்தியில் பிம்பமாகத் தெரியும் சைத்தன்யம்.

எங்கெங்கும் வியாபித்திருக்கும் சுத்த சைத்தன்யம், எங்கெங்கும் விரிந்திருக்கும் ஆகாசத்தைப் போன்றது. அடுத்ததாக புத்தியில் தெரியும் சைத்தன்யம், ஒரு நீர் நிலையில் பரப்பளவிற்குள் அதன் எல்லைகளுக்கு உட்பட்டது. அடுத்ததாக, ஒரு சிறிய குடத்தில், அந்த நீர் நிலையில் இருந்து முகந்து வைக்க, அது தனிப்பட்ட ஆன்மாவிற்கு ஒப்பாகும். ஆக அந்த குடத்தில் பிம்பமாகத் தெரியும் வானம், அந்த குடத்தின் எல்லைகளுக்கு உட்பட்டது.

இப்போது, ஆன்மஞானம் முழுமையாக அடையாதவர்கள் என்ன தவறு செய்கிறார்கள் என்றால், புத்தியில் அல்லது ஜீவனில் பிம்பமாகத் தெரியும் சைத்தன்யத்தினை உண்மையானதாகக் கொள்வதுதான். அதாவது, தங்கள் அக உறுப்புகளால் செய்யும் செயலின் விளைவுகளுக்கு தாங்களே மூலம் என நினைக்கிறார்கள். உண்மையில் அவர்கள் ஒரு கருவி தான் என அறியார். அப்படித் தவறாக கொள்ளும் ஆத்மா, ஜீவனே ஆன்மாவின் மூலம் எனக் கொள்கிறது. அதானால்தான் அது ஜீவாத்மாவாகவே இருக்கிறது. அவர்களுடைய புத்தியானது, சித்தில் சேமித்திருக்கும் அனுபவங்களின் மூலமாக மட்டுமே முடிவு எடுத்ததினால் ஏற்படும் விளைவு இது. தத்வமஸி (அதுவே நீ) என்னும் மகாவாக்கியத்தினை கேட்டிட, ஓதிட, தியானித்திட, பரமாத்மாவிற்கும் ஜீவாத்மாவிற்கும் உள்ள ஒற்றுமையை உணரலாம். எல்லைகளால் சிறைப்பட்ட ஜீவனையும், அதன் புத்தியையும் மாயை என உணர, தானே எல்லாம் என்னும் அகங்கார மடமையும் அழிவதைக் காணலாம்.

தொடர்ந்து இராமர் சொல்கிறார்: என்னுடைய பக்தன் எவனொருவன், இந்த பேருண்மையை புரிந்து கொள்கிறானோ, அவனே என் நிலையை அடைவதற்கு தகுதியானவன். வெறுமனே, இந்த உண்மையைத் தேடி, மறைகளை மட்டும் கற்று அலசியும், என்னிடம் பக்தி இல்லாமல் இருக்கிறவன், என்னைப் பற்றி அறிய இயலாதவனாய் இருக்கிறான். அவனால் நூறு பிறவி எடுத்தாலும் பக்தி இல்லாமல் முக்தியை எட்ட இயலாது.

இப்படியாக இராமர் அனுமனிடம் சொல்லி முடித்தார்: "எந்த ஒரு தீவினையும் அண்டாதவனே, "ஸ்ரீராம இருதயம்" என்னும், என் உண்மை நிலையை உரைக்கும் இவ்வுரையை நானே உனக்கு நேரடியாக வழங்கிடும் பேறு பெற்றாய். இதனால் பெறும் பேரறிவானது, இந்திர லோகம் ஆளும் பேறினைக் காட்டிலும் பன்மடங்கு பெரியது.

அதானால் தான் தொண்டரடிப்பொடியாழ்வாரும்,
"பச்சை மாமலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
அச்சுதா, அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திரலோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன், அரங்கமாநகருளானே!"
என்றாரோ!

அத்யாத்ம இராமாயணத்தில் மேற்கூறிய ஸ்ரீராம இருதயம் எனப்படும், அனுமனுக்கு இராமர் அளித்திட்ட உரையை, பரமசிவன், பார்வதி தேவிக்கு உரைத்திட்டு சொல்கிறார்: "இந்த சுலோகங்களை இராம பக்தியோடு படிப்பவரும் கேட்பவரும் நிச்சயம் முக்தி அடைவர். பெரும் துயர் தரும் தீவினையாவும் கூட இவற்றைப் படிப்பவரிடம் இருந்து பறந்தோடிப் போகும். அவர்கள் பெரும் யோகியரும் பெருந்தவத்தால் அடையக் கடினமான பெரும் பேறினையெல்லாம் அடைவார்கள்".

உசாத்துணை:
* அத்யாத்ம இராமயணம் : சுவாமி தபஸ்யானந்தர் அவர்களின் ஆங்கில உரை.
* ஆதித்ய ஹ்ருதயமும் ஸ்ரீராம ஹ்ருதயமும் - பகுதி 2 : திரு. ச.நாகராஜன்.

Friday, May 23, 2008

ஜோ ஜோ ராமா ஜோ ஜோ!

இராமனுக்கு தாலாட்டுப்பாடும் ஸ்ரீஇராம ஹிருதயம் நிறையும் தியாகராஜர் தாலாட்டுகிறார்!
தன் நெஞ்சம் முழுதும் நிறையும் அன்பின் நிறைவில் தாலாட்டு பாடுகிறார்!
கேட்போமா இந்த இதயம் இனிக்கும் தாலேலோவை!

பல்லவி

ஜோ ஜோ ராமா ஆனந்த
கன ஜோ ஜோ ராமா ராமா
(ஆனந்த வடிவோனே தாலேலோ...)

சரணம்
(1)
ஜோ ஜோ தசரத பால ராமா
(தசரத மைந்தா தாலேலோ...)
ஜோ ஜோ பூஜா லோல ராமா
(நிலமகள் காதலா தாலேலோ...)

(2)
ஜோ ஜோ ரகு குல திலக ராமா
(ரகுகுல திலகனே தாலோலோ...)
ஜோ ஜோ குடில தராலக ராமா
(சுருள் முடியானே தாலேலோ...)

(3)
ஜோ ஜோ நிர்குண ரூப ராமா
(குணங்களுக்கு அப்பாற்பட்டவனே தாலேலோ...)
ஜோ ஜோ சுகுண கலாப ராமா
(எல்லா நற்குணங்களும் நிறைந்தவனே தாலேலோ...)

(4)
ஜோ ஜோ ரவி சசி நயன ராமா
(சூரியனும் சந்திரனும் கண்ணானவனே தாலேலோ...)
ஜோ ஜோ பணி வர ஸயன ராமா
(அரவணையில் சயனித்தருப்பவனே தாலேலோ...)

(5)
ஜோ ஜோ ம்ருது தர பாஷ ராமா
(இன்மொழியானே தாலேலோ...)
ஜோ ஜோ மஞ்சுள வேஷ ராமா
(இனிய திரு உருவத்தானே தாலேலோ...)

(6)
ஜோ ஜோ த்யாகராஜார்சித ராமா
(தியாகராஜன் அர்சிக்கும் ராமனே தாலேலோ...)
ஜோ ஜோ பக்த ஸமாஜ ராமா ஜோ ஜோ!
(பக்தர்கள் குழுமத்தில் நிறை ராமனே தாலேலோ...)

இராகம் : ரீதி கௌளை (இந்த ராகம் ஞாபகம் இருக்கா, 'சின்னக் கண்ணன் அழைக்கிறான்...' என Dr. பாலமுரளி கிருஷ்ணா பாடுவாரே!, அதே ராகம்.)

அருணா சாய்ராம் அவர்கள் இங்கே பாடியிருப்பதைக் கேட்கலாம்.

Monday, April 14, 2008

என்ன பிறப்பிதுவோ இராமா? : தியாகராஜர்

'ஏடி ஜன்மமீதி..' என்று தொடங்கும் தியாகராஜ கிருதியின் பொருள்:

என்னப் பிறப்பிதுவோ இராமா?
என்னப் பிறப்பிதுவோ?
எப்போதும் உன்னை அணுகிப்பேசிட இயலாத
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

கோடி மாரனும் ஒன்றுசேர்ந்த
அழகையும் விஞ்சிய அழகா, இராமா -
உன்னை அணுகிப்பேசிட இயலாத
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

பால் வடியும் முகமும், மணிமுத்து மார்பும்
கண்ணெல்லாம் நிறைந்தும்
மனம் நிறைவெய்யாமல்
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

இசையில் திளைப்பவனும்,
இன்னொருவர் மனதை புரிந்து
புரிந்துகொள்பவனும் ஆன இராமனை
மகிழ்ந்தணைத்து மனநிறைவுகொள்ளா
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமா,
தியாகராஜரால் போற்றப்பட்டவனே,
விரைவில் உன்னை காணத்
துடிக்குதென் இதயம் - திணரும்
என்ன பிறப்பிதுவோ, என் இராமா?

-------------------------------------

இராகம் : வராளி

தாளம் : மிஸ்ரசாபு

இயற்றியவர் : தியாகராஜர்

பாடுபவர் : திருமதி. விசாகா ஹரி

-------------------------------------

பல்லவி:
ஏடி ஜன்மமிதி ஹா ஓ ராம
ஏடி ஜன்மமு-இதி ஹா ஓ ராம

அனுபல்லவி:
ஏடி ஜன்மமிதி எந்துகு ௧கலிகெனு
எந்தனி ௨ஸைரிந்து ஹா ஓ ராம (ஏடி)
ஏடி ஜன்மமு-இதி எந்துகு கலிகெனு எந்தனி ஸைரிந்து ஹா ஓ ராம (ஏடி)

சரணம்:
ஸாதி லேனி மார கோடி லாவண்யுனி
மாடி மாடிகி ஜூசி மாடலாடனி தநக்(ஏடி)

ஸாரெகு முத்யால ஹாரயுரமு பாலு
காரு மோமுனு கந்நுலார ஜூடனி தநக்(ஏடி)

இங்கிதமெரிகின ஸங்கீத லோலுனி
பொங்குசு தநிவார கௌகிலிஞ்சனி தநக்(ஏடி)

ஸாகர சயநுனி த்யாகராஜ நுதுனி
வேகமே ஜூடக ௪வேகெனு ஹ்ருதயமு (ஏடி)

திரு. இராமநாத கிருஷ்ணன் அவர்கள் குரலில் இங்கு கேட்கலாம்.

------------------------------------------------
மேலும்:
பக்தியாளர் திரு.சுப்புரத்தினம் ஐயா தமிழ்ப்பாடல் வரிகளுக்கு மெட்டமைத்து, பாட்டாகத் தந்துள்ளார்கள். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்: