Showing posts with label ஆழ்வார் பாசுரம். Show all posts
Showing posts with label ஆழ்வார் பாசுரம். Show all posts

Friday, August 26, 2016

கொண்டல் வண்ணன்

10. கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் 
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!

திருபாணழ்வார் அருளிச் செய்தது. "அமலனாதி பிரான்" எனத் தொடங்கும் பத்து பாசுரங்களில் பத்தாவது ஆகும் இது. இதற்கு முந்தைய ஒன்பது பாசுரங்களும் ஆழ்வார் தனது ஞான திருஷ்டியில் அருளியதாகவும், பத்தாவது பாசுரமோ, திருவரங்கனை நேரடியாக தரிசித்தபின் அருளியதாக பெரியோர்கள் சொல்வார்கள். 

பாணர் குலத்தில் பிறந்த இவருக்கு இசை எனபது இயற்கை அன்றோ! பத்து பாசுரங்களில் பரந்தாமன் மேனி அழகை ஒவ்வொன்றாகப் பாடி இருப்பது அருமை!

1: திருவடி அழகு
அமலன், ஆதிபிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன், விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன், நீள்மதில் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே


உயர்ந்த மதில்கள் உடைய அரங்கநாதன் உறையும் திருவரங்கத்திலேயே தானும் இருந்தாலும் அரங்கனைத் தன் மனக்கண்ணால் மட்டுமே கண்டு வந்த ஆழவாரின் முதல் பாசுரம். வெளியில் இருந்தே பார்த்தாலோ என்னவோ, மதில்கள் சூழ்ந்ததே திருவரங்கத்தை விளிக்கும் பெயரடையாய்(adjective) வந்தது!

2: ஆடை அழகு
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற
நிவந்த நீள்முடியன், அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன், கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தையே

திருவடிக்கு அடுத்து அரைக்கு அசைத்த செவ்வாடையில் தன்சிந்தையைப் பறி கொடுத்தாராம் ஆழ்வார்.

3. நாபிக்கமல அழகு
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றான், அரங்கத்(து) அரவின் அணையான்
அந்திபோல் நிறத்தாடையும், அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்(து) இன்னுயிரே

அரையைத் தாண்டி அயனைக் கமலத்தில் தாங்கி நிற்கும் எழிலான உந்தியில் தன்னுடைய உள்ளத்தைப் பதித்தாராம்.

4. அரை ஞாண் கயிறு
சதுரமாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்தும்
உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன், ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட, மாமயிலாட, அரங்கத்தம்மான்
திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

அடுத்தாற்போல் அரங்கனின் அரையை அலங்கரித்த அரை ஞாண் கயிறானது அவரது மனத்தில் நிலைத்து உலாவியதெனச் சொல்கிறார்.

5. திருமார்பழகு
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே

அடுத்து ஆழ்வார் சிந்தையுள் புகுந்தாட்கொண்டது அரங்கனின் அழகு மார்பு, திருவும் (இலக்குமியும்), முத்து மாலைகளும் அலங்கரிக்கும் மார்பினை "திருஆர"மார்பென்றார்!

6. திருக்கழுத்தழகு
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்
அண்ட பகிரண்டத்து ஒருமாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே

தொடர்ந்து அரங்கன் அழகைப் பருகும் ஆழ்வார் அரங்கனின் கண்டமானது தான்  உய்ய ஒரு வழி வகுத்ததெனச் சொல்கிறார்.

7. திருவாயழகு
கையினார் சுரிசங்கு அனல் ஆழியார் நீள்வரை போல்
மெய்யனார், துளப விரையார், கமழ்நீள்முடி எம்
ஐயனார், அணிஅரங்கனார், அரவினணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

கழுத்தைத் தாண்டி முகத்தை அடைந்த ஆழ்வார் அங்கு முதலிற் கண்டது அரங்கனின் செவ்வாயினை. அதுவே முதலில் அவரது சிந்தைக் கவர்ந்தது போலும்.

8. கண்ணழகு

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து
கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே

திருமுகத்தில் அடுத்து பளிச்சிடும் கண்களைக் கண்டு அவை தன்னை பேதமை செய்ததாகச் சொல்கிறார்.


9.முழு மேனி எழில்
ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்
கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே



இப்படியாக மேனி முழுதையும் தனது மனத்தில் நிறைத்து விட்டு, இனி அந்நெஞ்சில் வேறேதும் நுழைய இடமில்லாதபடி எல்லாமும் அரங்கனே என நிறைந்து விட்டதென நிறைவடைகிறார்! அதன் பின் மற்றொன்றினைக் காண எப்படி முடியும்!

Monday, November 21, 2011

தில்லை விளாகம்

திருவாரூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டையிலிருந்து வேதாரண்யம் செல்லும் வழியில் அமைந்துள்ளது தில்லைவிளாகம் திருத்தலம். இங்கே அமைந்துள்ள கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் தெய்வீகப் பொலிவுடன் திகழும் இராம விக்ரகம் - மிகவும் பிரசித்தம். தில்லைச் சிதம்பரத்தில் நடராஜரோடு சேர்ந்து கோவிந்தராஜருக்கும் சன்னிதி இருப்பதுபோல, இங்கு நடராஜருக்கு சந்நிதி உண்டு. இத்தலத்திற்கு "ஆதி தில்லை" என்றும் பெயருண்டு.

"ராம சரம்" என்னும் அம்பினை ஒரு கையில் ஏந்தியவாறு, ஜானகி அன்னையுடனும், தம்பி இலக்குவனுடனும் நின்ற கோலத்தில் மட்டுமே விளங்குவதால் "தில்லை சித்ரகூடம்" என இத்தலம் வழங்கப்படும்.

தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் திறல்விளங்கு மாருதியோ டமர்ந்தான் றன்னை
எல்லையில்சீர்த் தயரதன்றன் மகனாய்த் தோன்றிற் றதுமுதலாத் தன்னுலகம் புக்க தீறா
கொல்லியலும் படைத்தானைக் கொற்ற வொள்வாள் கோழியர்கோன் குடைக்குலசே கரஞ்சொற் செய்த
நல்லியலின் தமிழ்மாலை பத்தும் வல்லார் நலந்திகழ்நா ரணனடிக்கீழ் நண்ணு வாரே.

என்று பத்தாம் திருமொழியில், குலசேகர ஆழ்வார் பாடும் "தில்லை சித்ரகூடம்" இவ்விடம்தான் என்பது தமிழ்த் தாத்தா உ.வே.சா அவர்களின் கூற்று.

"எம்பார்" கோவிந்த தாசர், இராமனுஜருடைய "திருவடி நிழல்"(இராமனுஜ கோவிந்த தாசர்)  எனப்பெயர் பெற்றவர். "சிம்மாசலம் வராக நரசிம்மர் பாமாலை", "மங்களகிரி பானக நரசிம்மர் பாமாலை"ஆகிய பாடற்தொகுதிகளை இயற்றியுள்ளார். சோழ நாட்டுத் திருத்தலங்களை பெரிதும் பாடியிருக்கும் இவரது பாடல்களில், தில்லை விளாகம் இராமபிரானப் பாடும் பாடலொன்றை இங்கே பார்க்கலாம்.

இராகம்: தன்யாசி
தாளம்: ரூபகம்

பல்லவி
தில்லை விளாகம் ராமனைக் கண்டால்
இல்லை யென்றாகும் நம் வினைகளே

அனுபல்லவி
தொல்லை நோய்களைத் தொலைக்கும் வில்லினை
அல்லும் பகலும் தரித்த நம் தலைவனை

சரணம்
சோழ நாட்டிலே சோற்றுக் கலைவதா
தாழ வந்த நம் ராமனை மறப்பதா
ஏழை என்றாலும் உள்ள ஜீவனில்லையோ
நாழியும் மறவா நம் நாதனில்லையோ
(மத்யம காலம்)
கோவிந்த நாமனை காவிரி நாடனை
சேவிக்க வேணும் ஜானகி ராமனை

Thursday, May 26, 2011

சுடராழி


கண்டதும் கழன்றது
கண்டேன் திருமேனி யான்கனவில், ஆங்கவன்கைக்
கண்டேன் கனலுஞ் சுடராழி, - கண்டேன்
உறுநோய் வினையிரண்டும் ஓட்டுவித்து, பின்னும்
மறுநோய் செறுவான் வலி.
-பூதத்தாழ்வார் (2248)
(ஆழி - சக்கரம்)

கண்டேன்! கண்டேன்! கண்ணுக்கினியவன் கண்டேன். அவன் கையிலேந்திய திருச்சக்கரத்தைக் கண்டேன்!
அச்சக்கரம் எப்படி இருந்ததாம் - கனலாய், சுடர்மயமாய் பிரகாசித்ததாம்.
தீபாவளிப் பட்டாசு விடும் சமயத்தில் மட்டுமே நாம் அப்படிப்பட்ட சக்கரத்தைப் பார்த்திருக்கிறோம். ஆழ்வாரோ, நெடுமால் விடும் சுடராழிதனைக் கண்டு சொல்கிறார். வாசனையாய் ஒட்டிக்கொண்டிருக்கும் நோய்களான இருவினைகளையும் - அச்சக்கரத்தைக் கண்டவுடன் தொலைத்தேன் என்கிறார்.
முன்னம் இராமன் சிவதனுசை எடுத்த கணமே அதைக் கண்டவர் அது ஒடிந்ததைக் கேட்டது போலக் கண நேரத்தில் வினைகளும் தொலைந்தது போலும்.
சரி, இரு வினைகள் என்பவை யாவை? நல்வினை, தீவினை எனக் கொண்டால், ஏன் நல்வினையும் அகல வேண்டும்? தீவினை நரகத்தில் தள்ளும். நல்வினை சொர்கத்தில் சேர்க்கும். இரண்டும் இலாமல் பரந்தாமனின் பரமபதமே வேண்டும் எனக் கொண்டாரோ!
அவ்விரு வினைகளைக் களைந்தாலும் அவை இருந்த இருப்பால் தொடரும் வாசனைகளின் விளைவுகள் முற்றிலுமாய்க் களைய இன்னும் சிலநாள் கழியுமாதலால் - அதனை 'மறுநோய்' என்றார். அதனையும் தொலைத்திட அருளுபவன் எம்பெருமான் எனப் பாடுகிறார் ஆழ்வார்.

வையம் தகழியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடராழியானடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடராழி நீங்குகவே என்று.
(பொய்கையாழ்வார்)

அசதோமா சத் கமய
தமசோமா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோமா அம்ருதம் கமய
ஓம் சாந்தி சாந்தி சாந்தி ஓம்.

Sunday, June 27, 2010

நீள்முடி ஐந்து : ஆழ்வார் மறைமொழி

ஆழ்வார்கள் அருளிய தமிழ்வேதம் இனிக்க இனிக்கச் சொல்லும் அமுதத்துளிகளில் இருந்து ஒரு துளிகள் இப்பகுதியில் பார்ப்போம்.

காளியன் பொய்கை கலங்கப் பாய்ந்திட்டு அவன்
நீள்முடி ஐந்திலும் நின்று நடம் செய்து
மீள அவனுக்கு அருள் செய்த வித்தகன்
தோள்வலி வீரமே பாடிப் பற,
தூமணி வண்ணனைப் பாடிப் பற. (313)

-பெரியாழ்வார்
கண்ணன் பொய்கையிற் பாய்ந்து, நீள்முடி ஐந்திலும் நடம் செய்து, காளியனை *மீள்*வித்தானாம்.காளிங்கன் எனப்படும் காளியன் ஏன் ஐந்து தலை அரவமாய் உருவகப் படுத்தப்படுகிறான்?

ஆணவம் மிகுந்தவரை என்ன சொல்கிறோம் - அவருக்கு தலைக்கனம் அதிகம் என்றல்லவா. இந்த "தான்,தனது" என்கிற எண்ணங்கள் படுத்துகிற பாடு இருக்கிறதே, அது சொல்லி மாளாது. தலையை ஊதிப் பெரிதாக்கி, என்று வெடித்துவிடுமோ என எல்லோரையும் அச்சப்படச் செய்யும். ஒரு தலை இருக்கையிலே இப்படியென்றால், ஐந்து தலை இருந்தால்?

பொய்கையில் நீர் அருந்தச் சென்ற அப்பாவிச் சிறுவர்கள், அதிலிருந்த விடமதை அறியாமல் அருந்தி மாண்டனராம். இப்படி நஞ்சாக நின்று அனைவரையும் கெடுக்கும் ஆணவம் என்ன செய்யும்?

கண்ணன் பொய்கையிற் குதித்தவுடன், கலங்கிய பொய்கையினைக் கண்டு சீற்றம் கொள்ள, நீரிலிருந்து எழும்பிக் குதித்து, தன் வால்களில் சிக்குண்டதுபோல் நடிக்கும் கண்ணனைப் பிடித்து அடிக்கத் துவங்கியது. அதற்கு அத்துணை பலம் எப்படி வந்தது. செருக்கு செய்யும் மாயம் கொலோ?

நாமும் பெரும்பாலும் இப்படித்தான் - ஐம்புலன்களும், முக்குணங்களும் செய்யும் மாயத்தால் - அகக்கண் மறைக்கப்பெறுகிறோம். அதன் விளைவால் சீற்றம் மிகுந்து 'தாம், தூம்' தான். தலைக்கேறிய செருக்கு சென்ற இடம் தெரியாமல், இருக்கும் இடத்தை மறக்கச் செய்து, குதிக்கச் செய்கிறது.

அறியாமை காளியனுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் தான். காளியனால் கட்டுண்ட கண்ணனைப் பார்த்த கோகுலச் சிறுவர்கள், அச்சுற்று அலறிக்கொண்டுபோய் ஊர்ப் பெரியவர்களிடம் முறையிட்டார்கள். சிலர் பெரிய நாகம் கண்ணனைப் பிடித்தது என்றார்கள். சிலர் ஐந்து தலைப் பாம்பு என்றார்கள், சிலர் நூறு தலைப் பாம்பு என்றார்கள். பார்த்தீர்களா, ஆணவம் தாண்டவமாடும் இடத்தில் ஐந்து நூறாகவும் பயமுறுத்துவதை!

கண்ணனுக்கோ காளியன் சிறுபுல். மிகுந்த உற்சாகத்துடன் காளிங்கன் தலைகளில் மாற்றி மாற்றி 'தா தை தத்தித்தை' என நர்த்தனம் செய்து - அவன் செருக்கை அடக்கினான். கண்ணனிடம் சரணடைந்த காளியன் மீள்கிறான். தன்னை யாரென உணர்ந்து மீள்கிறான் - மாயையில் இருந்து மீள அவன் கண்ணன் அருள் பெறுகிறான்.

காளியனை அடக்கிவிட்டு மீண்டு வந்த கண்ணனைச் சூழ்ந்து கொண்ட சிறுவர்கள் கேட்டார்கள் - கண்ணா, இந்த ஐந்து தலைப்பாம்பை எப்படி அடக்கினாய் - நாங்கள் பயந்தே போய் விட்டோம் என்று. கண்ணன் சொல்கிறான் - ஐந்து தலைப் பாம்பா? அது ஒரு தலைப் பாம்புதான்; அதன் நான்கு குட்டிகளும் அதனுடன் சேர்ந்து கொண்டு ஐந்துதலைப் பாம்புபோல் வேடமிட்டன என்று. கண்ணனுக்கு எல்லாவற்றிலும் விளையாட்டுதான். அது ஐந்து தலைப் பாம்பும் இல்லை என்கின்றான்!

ஆம், இல்லைதான். ஐந்து கருவிகளால் ஏற்படும் அல்லல் அகற்றப் பெற்றால் ஐந்தில்லையே. ஐயனே - ஒன்றேயெனத் தான் உன்னையே உணர்வேனோ!.
உணர்ந்த காளியனை மீள்வித்தவன், நம்மையும் மீள்விப்பானோ!

ஐந்து கருவிகளும் ஆன்மாவை உடலெனும் செக்கிலிட்டுப் பிழிகையில் பீடிக்கும் ஐம்பெரும் நோய்களில் இருந்து காப்பாற்றும் ஒரே மருந்தும் நீயல்லவோ!

தீர்மருந் தின்றி ஐந்து நோயடும்
செக்கி லிட்டுத் திரிக்கும் ஐவரை,
நேர்ம ருங்குடைத் தாவடைத்து நெகிழிப்பான்
ஒக்கின்றாய்,
ஆர் மருந்தினி யாகுவர்? அடலாழி
யேந்தி அசுரர் வன்குலம்,
வேர் மருங்கறுத் தாய். விண்ணுளார் பெருமானேயோ. (3457)
-நம்மாழ்வார்

அசுரர் குலத்தை வேரறுத்த எம்பெருமான், அதுபோல இப்போது எம் பிறவிப் பிணியினை தீர்க்க வேண்டும்.

பிறிந்தேன் பெற்றமக் கள்பெண்டி ரென்றிவர் பின்னுதவா
தறிந்தேன் நீபணித் தவருளென்னும் ஒள் வாளுருவி
எறிந்தேன் ஐம்புலன்கள் இடர் தீர வெறிந்துவந்து
செறிந்தேன் நின்னடிக் கேதிரு விண்ணகர் மேயவனே (1461)
-திருமங்கை ஆழ்வார்


அருள் என்னும் வாள் உருவி அறுத்து எறிந்தேன் ஐம்புலன்களை என்பார் திருமங்கை ஆழ்வாரும். பகவத்கீதை அத்தியாயம் 15 இல், பகவான் கண்ணன் வழிகாட்டுவது இதைத்தான் - "பற்றின்மை எனும் கோடாலியால், சம்சார விருட்சத்தினை வெட்டி வீழ்த்து" என்று.

இந்த ஐம்புலன்களும் அப்படியென்ன காளியன் என்னும் பாம்பின் ஐந்து தலைகளுக்கு ஒப்பாகச் சொல்லும் அளவிற்கு மோசமா? இந்த அடுத்த பாசுரத்தில் பாருங்களேன், ஐம்புலன்களை 'வன் கயவர்' என்கிறார் ஆழ்வார்.


ஒன்று சொல்லி ஒருத்தினில் நிற்கிலாத

ஒரைவர் வன்கயவரை,
என்று யான்வெல்கிற்பனுன் திருவருளில்லையேல்?,
அன்று தேவர் அசுரர் வாங்க
அலைகடலரவம் அளாவி, ஓர்
குன்றம் வைத்த எந்தாய். கொடியேன் பருகின்னமுதே. (3459)

- நம்மாழ்வார்

இந்த ஐந்து கயவர்களையும் உன் திருவருள் இல்லாமல் என்னால் எப்படி வெல்ல முடியும்?. கௌரவ கூட்டத்தை வெல்ல பாண்டவர்கள் உன் துணையை நாடியது போலவும், அலைபாய்ந்து கொண்டே இருக்கக் கூடியதும், ஒரே இடத்தில் நிலையாக நிற்க வைக்க கடினமானதுமான ஐம்புலன்களை அடக்க, கோகுலத்துச் சிறுவர்கள் செய்ததைத் தான் நாமும் செய்ய வேண்டும் - கண்ணனை அழைக்க வேண்டும். அவன் அருளால் மட்டும் தான் - நீள்முடி ஐந்திலும் நடம் செய்து இக்கயவரை அடுக்குதல் இயலும்.
அன்பாழி யானை யணுகென்னும்,
நாஅவன்றன்
பண்பாழித் தோள்பரவி யேத்தென்னும், முன்பூழி
காணானைக் காணென்னும்
கண்செவி கேளென்னும்
பூணாரம் பூண்டான் புகழ். (2153)
- பொய்கையாழ்வார்

ஐம்புலங்களும் துளசிமாலை அணிந்த நெடுமாலை நினைந்து (கை கூப்பித் தொழுது, வாய் நிறைய புகழுரை வாழ்த்தி, கண் நிறையக் கண்டு, செவி இரண்டிலும் கேட்டு) இருப்பதாகச் சொல்கிறார் ஆழ்வார். அலையும் புலன்களை அவன் வழி செலுத்தி நன்றான ஒன்றில் நாட்டம் செலுத்துவதே உய்வதற்கான வழியாய் நம்மறை நவிலும், கேளீரோ நல்லுலகத்தாரே!

Wednesday, September 23, 2009

திருமகள் பெருமை

வராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் திருமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கலைவாணிக்கும் அர்பணிப்பது வழக்கும். சென்ற பதிவில் சக்தி பற்றியதொரு பாடலைப் பார்த்தோம். இந்த பதிவில், திருமகள் பெருமைகளில், அடியேன் அறிந்த வெகு சிலவற்றைப் பார்க்கலாமா?. அதுசரி, அதுவேன் இப்படியொரு தலைப்பு? திருமால் பெருமைன்னு சிவாஜி நடிச்ச படம் வந்துருக்கே அதுமாதிரியான்னு கேக்கறீங்களா? திருமால் பெருமை எல்லாருக்கும் தெரிந்தது. திருமகள் பெருமை?. இந்த உரையாடலைக் கேளுங்க...

அவர் செல்வத்துக்கு அதிபதி, அவரை வணங்கினால் செல்வம் செழிப்பு கிடைக்கும் - இதுதான் நாம் எல்லோரும் பொதுவா நினைப்பது இல்லையா? சரி, அவ்வளவுதானா?

அட, ஆமாங்க, ஆங், எங்க ஊரில் அஷ்டலஷ்மி கோவில் இருக்குல்லே. தனலஷ்மி, தான்யலஷ்மி - இப்படிப் பலவித செல்வங்களை அருள்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேனே...


சரிதான். அஷ்டலஷ்மி என்பது இலக்குமித்தாயாரின் எட்டு வடிவங்கள் - ஆதிலஷ்மி, தனலஷ்மி, தான்யலஷ்மி, கஜலஷ்மி, சந்தானலஷ்மி, வீரலஷ்மி, விஜயலஷ்மி, வித்யாலஷ்மி என்பவைதான் இந்த எட்டு அம்சங்களாக்கும்.

ஓ, இவங்களும் வீரத்தையும், விஜயத்தையும் தருவாங்களா, நான் அது பார்வதி அன்னைதான்னு நினைச்சேன்!

:-) டொய்ங்...கல்வியா, செல்வமா, வீரமா...சரஸ்வதி சபதம் படம் நல்லா நினைவிலே இருக்கு போல!
இலக்குமி என்று நாம பொதுவா சொல்லறவங்களுக்கு, பலவித சிறப்பு அம்சங்கள் இருக்கு. அந்த ஒவ்வொரு அம்சத்தையும் தனிதனியா பெருமைப்படுத்தத்தான், இதுபோன்ற சிறப்புப் பெயர்கள். மற்றபடி, எல்லாருமே ஒருவர் தான்!
இன்னும் இருக்கு. பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் துணைவி இலக்குமித்தாய். திருமாலுக்கே 'திருமகள் கேள்வன்' (திருமகள் நாயகன்) என்றொரு பெயருண்டு. வைணவ ஆச்சார்ய பரம்பரையில், முதன்மையான ஆச்சாரியர் திருமால் என்றால், அதற்கு அடுத்த இடம் திருமகளுக்கேயாம்.

ஆகா, அப்படியா, குருவின் இடத்தில் திருமகளை வைத்துப் போற்றுவதற்கு ஆழ்ந்த காரணம் இருக்கணும் இல்லையா!

இலக்குமியின் மூன்று அம்சங்களாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி அப்படியும் சொல்லிக் கேட்டிருக்கோம் இல்லையா.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி வழியே காணக் கிடைத்தது:

உடன் அமர் காதல் மகளிர்
திருமகள், மண்மகள், ஆயர்
மடமகள் என்றிவர் மூவர்.
ஆளும் உலகமும் மூன்றே.
உடன் அவை ஒக்க விழுங்கி
ஆலிலை சேர்ந்தவன் எம்மான்...


இவங்க மூணுபேரும் மூணு உலகத்தை ஆள்பவர்களாம் - முறையே விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று.
நம்ப கண்ணபெருமான் இருக்காரு இல்லையா, அவர் மண்ணைத்தின்றபின் வாயைத்திறந்து காட்ட, அதில் இம்மூவலகமும் தெரிந்திட, இந்த மூன்று பேரையும் ஒன்று சேர்த்து விழுங்கியவனாம். அதாவது, அவன், எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவனாய் இருக்கிறான். மாமகள் மூவரையும் கொண்ட மாரமணனாய் இருக்கிறானாம்.

அடுத்தது, இந்த முதல் திருவந்தாதிப் பாடலைப் பார்ப்போம்:

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்?

என்னது, திருமகள்தான் மற்ற இரண்டு பேரைக்காட்டிலும் உயர்வு என்பதுபோல வருகிறதே?

நம்ம குறைகளை கேட்டு, அவற்றை திருமாலிடம் இயம்பி, நிவர்த்தி செய்வதற்காக ஒருவர் மட்டுமில்லை, மூவர் இருக்கிறார் என்கிறார் பொய்கையாழ்வார்! அவற்றில் இருவர் - பூதேவியும், நீளாதேவியும், விஷ்ணுவின் சக்தி.
விஷ்ணுவின் சக்தி யார்? இலக்குமி. ஆகையில் மகாலஷ்மியின் அம்சமாகவே - திருமகளின் அம்சமாகவே அவர்களும் இருக்கிறார்கள்.

திருமகளோ, எப்போதும் மாலவன் மார்பிலேயே வாசம் செய்கிறாள்; பெருமாளைப் பிரிந்ததே கிடையாது. எல்லாவிடத்திலும், விஷ்ணுவாக நிறைந்தபோதும், அதிலெல்லாம் நிறைந்திருக்கிறாள்.
பெருமாளை 'சொல்லின் பொருள்' என்றால்,
திருமகளைச் 'சொல்' எனலாம்.
திருமகளை 'அறச்செயல்' என்றால்,
அதனால் விளையும் நன்மையினைத் திருமால் எனலாம்.
எல்லா உயிர்களிலும் ஆணாகத் திருமாலும், பெண்ணாகத் திருமகளும் வாசம் செய்து,
எல்லா ஜனனங்களுக்கும் ஜகத்காரணமாய்த் திகழ்கிறார்கள்!

Saturday, January 17, 2009

திருவேங்கட நீராட்டும் அலங்காரமும்

ம்பெருமானின் திருவடியில் அபயம் பெறும் பேறன்றி வேறென்ன வேண்டும். அபயம் என வந்தோர்க்கு அருள் தரும் தீன சரண்யன், விபீடனன் போல என்னையும் காப்பான் எனத் திண்ணமாய் இருப்பேன். திகழொளி தருவன். அவன் திருமேனிக்குத் திருமங்கள நீராட்டுப் பாடிட, செங்கமலக் கண்ணன், செம்மை சேர்ப்பான்.

பேசுமின் திருநாமம் எட்டெழுத்தும்
சொல்லி நின்று பின்னரும்
பேசுவார் தமை உய்ய வாங்கிப்
பிறப்பறுக்கும் பிரானிடம்
வாசமாமலர் நாறுவார் பொழில்
சூழ் தரும் உலகுக்கெல்லாம்
தேசமாய்த் திகழும் மலை
திருவேங்கடம் அடை நெஞ்சமே
- திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி.


திரு நீராட்டு முடிந்து, அடுத்து அலங்காரம் செய்யலாமா. நம்ம தமிழ்த்தியாகய்யா, பாபநாசம் சிவன் ஹம்சாநந்தியில் அழகான கீர்த்தனை வடிச்சிருக்காரே, அதைக் கேட்டவாரு, அலங்காரப் பிரியனை, அலங்கரித்து, அகமகிழ்வோமா!



முன்னம், இங்கு ரஞ்சனி&காயத்ரி அவர்கள் பாடிட, குலசேகர ஆழ்வார் திருமொழிகளில் இருந்து மூன்று பாசுரங்களைக் கேட்டோம் அல்லவா, அதில் மூன்றாவது பாசுரம் ஹம்சாநந்தி இராகமாக அமைந்திருந்தது. விருத்தம் பாடிய பின்னர், தொடர்ந்து இந்தக் கிருதியினை, அதே ஹம்சாநந்தி இராகத்தில் இங்கே தொடருகிறார்கள், கேட்கவும்:



எடுப்பு
ஸ்ரீநிவாச திருவேங்கடம் உடையாய்
ஜெய கோவிந்த முகுந்த அனந்த
(ஸ்ரீநிவாச...)

தொடுப்பு:
தீன சரண்யன் எனும் பெயர் கொண்டாய்
தீனன் எனைப்போல் வேறெவர் கண்டாய்

(ஸ்ரீநிவாச...)

முடிப்பு:
ஜகம் புகழும் ஏழு மலை மாயவனே
திருமகள் அலர்மேல்மங்கை மனாளனே

ஜகன்நாதா........
ஜகன்நாதா, சங்கு சக்ர தரனே

திருவடிக்கு அபயம்... - உன்
திருவடிக்கு அபயம், அபயம் ஐயா!

(ஸ்ரீநிவாச...)

இங்கே திருமதி.சௌம்யா அவர்கள் பாடிட இப்பாடலைக் கேட்கலாம்.

Friday, January 09, 2009

மார்கழி : விருத்தம் பாட வருத்தம் எதற்கு?

ன்றா இரண்டா, ஓராயிரம் விருத்தங்கள் பாடிக் கொண்டே இருக்கலாம்.
அதுவும், எழில்மலை வேங்கடவனை தீந்தமிழில் பாடிடுதல் என்பது, சொல்லில் அடங்கா சுகம் தருவது...
சமீபத்துல, அரங்கனா, வேங்கடவனா, என்றெல்லாம் இங்கே கேட்டாங்க. வேங்கடரங்கன் அப்படீன்னும் சொன்னாங்க.
"அமலன் ஆதிப் பிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர் கோன், விரை
யார் பொழில் "வேங்கடவன்",
நிமலன் நிர்மலன் நீதி வானவன்,
நீள்மதில் "அரங்கத்து அம்மான்"
என திருப்பணாழ்வார் பாசுரத்தை எடுத்து விட்டு, அரங்கநாதனை பார்கையில், முதல்லே, வேங்கடவனும், அடுத்து, அரங்கனும் தெரியறாங்கன்னு சொன்னாங்க.
ஒருவேளே, எழுந்து நின்றால் முழுதும், எழில் பொழில் நிறை மலையான், ஏழுமலையானாய்த் தெரிவானோ!
வேங்கடவன், அவன் அலர்மேல் மங்கை மனாளன், அம்புஜ நாபன்,
தயா கரன், மலைமேல் உறைபவன், பாற்கடல் மேல் துயில்பவன்!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மன்னன் குலசேகரன் 8ஆம் நூற்றாண்டில், சேர நாட்டு மன்னன். வேங்கடவன் மீதும், அரங்கன் மீதும் அளவிலா அன்பு கொண்டவர். குலசேகரப்பெருமாள் என ஆழ்வார்களில் ஒருவனானவர். 'இராகவனே தாலேலோ', என தாலாட்டுப் பாடல்களை பாடியவர். திவ்யப் பிரபந்தத்தில், இவரது, 105 பாசுரங்களுக்கு, 'பெருமாள் திருமொழி' எனப்பெயர். அவற்றுள், 11 பாசுரங்கள், வேங்கடாசலன் மீது இயற்றப்பட்டவை. அவற்றில் மூன்றினை இங்கே பார்ப்போம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவத்தில், ரஞ்சனி&காயத்ரி அவர்கள் இப்படித் தான் அழகான ஆழ்வார் பாசுரங்களைப் பாடி நம் மனதை உருக்கினர். இங்கே நீங்களும் கேளுங்கள்:

குலசேகரப் பெருமாள் திருமொழி (நாலயிர திவ்யப் பிரபந்தம்)

பி.கு: பாசுர விருத்தம் முடிந்த பின், 'ஸ்ரீநிவாச திருவேங்கட முடையான்...' எனும் பாபநாசம் சிவன் பாடல் தொடங்குகிறது. அப்பாடலை, இன்னொரு சமயம் பார்ப்போம்.

பாசுரம் 1:
இராகம் : ஷண்முகப்பிரியா
ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்
தேனார் பூஞ்சோலை திருவேங்கடச் சுனையில்
மீனாய்ப் பிறக்கும் விதியுடையே னாவேனே!


பி.கு: இந்தப் பாடலை, அமரர் கல்கி அவர்கள், மிகவும் பொருத்தமாக பொன்னியின் செல்வனின் பயன்படுத்தி இருப்பார். தன்னைப் பார்த்து, பரிகாசம் செய்யும், ஆழ்வார்க்கடியனிடம், பூங்குழலி "மண்ணரசு வேண்டேன்" எனச் சொல்ல, உடனே "ஆகா, நல்ல தீர்மானம் செய்தீர்கள்" எனச் சொல்லி, இந்தப் பாசுரத்தை பாடிக் காட்டுவார், ஆழ்வார்க்கடியான்!

பாசுரம் 2:
இராகம் : மோகனம்
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்
எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே.

பாசுரம் 3:
இராகம் : ஹம்சாநந்தி
செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே!
நெடியானே! வேங்கடவா! நின்கோயி லின்வாசல்
அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்துன் பவளவாய் காண்பேனே.

எளிதான இப்பாசுரங்களுக்கு பொருள் சொல்ல வேண்டியிருக்காது. எனினும் இனிதானதை எத்தனை முறை வேண்டுமென்றாலும் படிக்கலாம் அல்லவா. கூடலார் குமரன் பதிவில் படித்து மகிழவும்!

மேலே ரஞ்சனி&காயத்ரி பாடுவது தான் உருக்கம் என்றால், இங்கு அருணா சாய்ராம் அவர்கள் பாடுவதை என்னவென்று சொல்வது? சொல்ல வார்த்தைகள் இல்லை. சே, இந்த பதிவு எழுதறதை விட, 'சும்மா' இருக்கலாம்! விருத்தம் பாடி முடித்தபின்: மீனாய்ப் பிறந்தாலும், படியாய்க் கிடந்தாலும், குலசேகரன் படியாய் உன் பவள வாயை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தாலும் எல்லாமும் ஒன்றுதான் - மீனாய்ப் பிறந்தாலும், படியாய் கிடந்தாலும், குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா...' அடுத்த கிருதியினை தொடங்கிய விதமும் அருமை!

Wednesday, January 07, 2009

மார்கழி : ஆண்டாள் திருக்கல்யாணம்

மார்கழி இல்லாமல் மாதங்களா!

ஆண்டாள் இல்லாத மார்கழியா!

இங்கே ஆண்டாளின் மார்கழியில், ஆண்டவளை, ஆண்டாளை அகமகிழ கேட்டு இரசிப்போமா!

திருமதி. விசாகா ஹரி அவர்கள் ஜெயா டி.வி. மார்கழி மகா உற்சவத்தில் வழங்கிய ஹரிகதையினைப் பார்ப்போமா?
சென்ற முறை, தியாகராஜ இராமாயணம் வழங்கினார். இந்தமுறை அவர் வழங்கும் கோதை நாச்சியார் கதை கேட்டு கோதுகம் (உளக்களிப்பு) கொள்வோமா?

கதை கேளு, கதை கேளு, சுவையான கதை கேளு.
கோதையார் கதை கேளு, காது கொடுத்துக் கதை கேளு.

வழங்குபவர் : விசாகா ஹரி
வயலின் : அனந்தகிருஷ்ணன்
மிருதங்கம் : அர்ஜூன் கணேஷ்

பகுதி 1: (கோதை பிறப்பு)


பகுதி 2: (கோதை விடு தூது)


பகுதி 3 : (திருப்பாவை : மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்நாளால்...)


பகுதி 4 : (சூடிக் கொடுத்த சுடர்க்கொடி)


பகுதி 5 : (திருமண உற்சவம்)


பகுதி 6 : (வழியனுப்புதல்)


கண்களில் நீர் தளும்ப, உருக்கமாய் கதை சொன்ன பாங்கில், நீங்களும் உருகலையோ?
நேரடியாய், நிகழ்சியை பார்த்தவர்களில் சிலர், கண்ணீர் தாரையாய் மல்கிட, மாலனைச் சார்ந்தனரே.

Moral Of the Story? : பக்தி பண்ணி பாடி...

Wednesday, December 24, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (3)

சென்ற பகுதியில் திருமதி.சௌம்யா அவர்கள், தேவாரத் திருமுறைகளில் இருந்து பாடல்களை வழங்குவதைப் பார்த்தோம். As a Sequel, இப்பகுதியில் தமிழ்மறையாம் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் இருந்து பாடல்களை வழங்குகிறார்.


"...பசுங்கதிர் மதியமொடு சுடர் கண்ணாக
இயன்ற எல்லாம் பயின்றகத்தடக்கிய
வேத முதல்வன் என்ப
தீதற விளங்கிய திகிரியோனே"


என்ற சங்ககாலப் பாடலின் வழி வரும் ஆழ்வார் பாசுரங்களின் (பா + சுரம் = பாசுரம் = இசைப்பா!) திரட்டில் இருந்து, இரண்டு பாடல்கள் இசைக்கப் பார்க்க விருக்கிறோம்.
இப்பாடல்களுக்கு இசை அமைத்தது, இந்நிகழ்ச்சியில் வயலின் வாசிக்கும், எம்பார் எஸ்.கண்ணன் அவர்களேயாம்!.

4. திவ்யப் பிரபந்தம்

முதல் பாடல்:
இயற்றியவர் : நம்மாழ்வார்
தலம் : வானமாமலை
இராகம் : கௌளை
நோற்ற நோன்பிலேன் நுண்ணறி விலேனாகிலும்
இனி யுன்னைவிட்டு,ஒன்றும்
ஆற்ற கின்றிலேன் அரவினணை யம்மானே,
சேற்றுத் தாமரை செந்நெ லூடுமலர் சிரீவர மங்கலநகர்,
வீற்றிருந்த எந்தாய். உனக்கு மிகையல்லே னங்கே.


நம்மாழ்வாரின் இப்பாசுரம் துதிப்பது நாங்குநேரியில் வீற்றிருக்கும் 'தோத்தாத்ரி நாதன்' எனும் திருநாமம் கொண்ட திருமாலை. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இத்தலத்திற்கு இதர பெயர்கள் வானமாமலை, திருசிரீவரமங்கை ஆகியவை - திருநெல்வேலிக்குத் தெற்கே உள்ளது. இத்தலத்தின் தீர்த்தம் சேற்றுத்தாமரைத் தீர்த்தம். ஆதிசேஷன் இத்தலத்தில் தவமியற்றி, திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றானாம். இத்தலத்தின் சாத்தப்படும் சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டிருக்கும்.



அடுத்த பாடல்:
இயற்றியவர் : குலசேகர ஆழ்வார்
இராகம் : தோடி

என்னை வருக வெனக்குறித்திட்டு
இனமலர் முல்லையின் பந்தர் நீழல்
மன்னி அவளைப் புணரப்புக்கு
மற்றென்னைக் கண்டு உழறா நெகிழ்ந்தாய்
பொன்னிற ஆடையைக் கையில்தாங்கிப்
பொய் அச்சம் காட்டிநீ போதியேலும்
இன்னம் என் கையகத்து ஈங்கொருநாள்
வருதியேல் என்சினம் தீர்வன்நானே


இந்தப் பாடலுக்கு நாட்டியமாடிப் பார்க்க வேண்டும். அழகான முக பாவங்களைக் காட்டிட ஏதுவானதொரு பாடல். இயலும், இசையும், நாடகமும் - முத்தமிழும் ஒன்றே சங்கமிக்க, இனியதொரு களனாய் இப்பாடல் அமைந்திருக்கிறது!

பொருளைப் பாருங்களேன்!:
கண்ணா, என்னை ஒரு இடத்திற்கு வருமாறு சொன்னாய்.
நீயோ, அந்த குளிர்ந்த முல்லை மலர் பந்தலில் மறைந்தவாறு,
அங்கே நெடுநேரம் காத்திருந்த வேறோருவரை அணைத்துக் கொண்டிருந்தாய்.
என்னை நீ பார்த்தும், மெல்ல விடுவித்துக் கொண்டாய். உன் பொன்னிற ஆடையைத் தாங்கி, ஏதோ, என்னைக் கண்டு அச்சம் கொண்டு விலகுவது போல், பொய் நாடகமாடுகிறாய்.
என்றேனும் ஒருநாள், நீ என்னருகே வருவாய் அல்லவா, அன்று பார்த்துக்கொள்கிறேன்!
என் சினத்தை அப்போது, தீர்த்துக்கொள்கிறேன்!

நித்திலமான இப்பாடல்களை இங்கே கேட்கலாம்:



ஞானத்தில் முதிர்ந்த பெரியோர்கள் அருளிய அமுதம் மறைகளாம். தமிழ்மறையாய் தீந்தமிழ் சோற்களை, செந்நெல் விதையாய் விதைத்து, விளைந்தது அல்லவோ, இவ்வாழ்வார் பாசுரங்கள்!

5. கம்ப இராமாயணம்
இராகம் : நாட்டை

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்
நிலைபெ றுத்தலும் நீங்கலும் நீங்கலா
அலகி லாவிளை யாட்டுடை யாரவர்
தலைவ ரன்னவர்க் கேசரண் நாங்களே.


தமிழிசை வரலாறு, இப்போது பனிரெண்டாம் நூற்றாண்டை அடைந்திருக்கிறது! 'விருத்தத்திற்கு கம்பன்' எனச் சொல்லும் அளவிற்கு, மரபுக் கவிகளின் மகுடமாம், கவிச்சக்ரவர்த்தி கம்பனின் இராமகாதை வாழ்த்துப்பாடலை பாடுகிறார். 'உலகம் யாவையும்' எனக் கம்பர் பாடத் துவங்கி, விரிந்து, பரந்து, உயர்ந்தோங்கி நிற்கும் அவரது காவியம் போல், தமிழும், இசையும் ஒருங்கே பற்பல நூற்றாண்டுகளுக்கு பட்டொளி வீசிப் பறந்திடக் காணீர்.

(அடுத்த பகுதியில் தமிழிசை வரலாறு தொடர்கிறது...)

Thursday, September 18, 2008

இப்பேர்பட்டவரு யாருங்க? : குளிர்மழை

என்னவோ போங்க, இவரை இப்படியெல்லாம் சொல்லறாங்க, யாரு இவரு? கிரிதாரியாமே, பெரிய உபகாரியாமே, அப்புறம் சக்ரதாரியமே, அப்படிப்படவரு யாருங்க?

கிராமத்து அதிகாரி சரி, அது என்ன கிரிதாரி? கிரின்னா மலையாமே. மலைக்கு அதிகாரியா?, அல்லது மலையை தூக்கியவரா? ஓ, தன் சுண்டு விரலில், கோவர்த்தன மலையைத் தூக்கி நிறுத்தி, அங்கே இருக்கிற கிராமம், குளிர் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படாம, மலையையே குடையா பிடிச்சவாரா! ஓகோ!

அப்புறம் என்ன சொல்லறாங்க, உபகாரி?, பெரிய உபகாரம் செஞ்சவராமே - அப்படி என்ன செஞ்சாரு? ஓ, கதறி அழைத்த பெண்ணின் மானத்தைக் காத்தவராமே. ஆமாங்க அது பெரிய உபகாரம் தான்.

இன்னமும் சொல்லறாங்க என்னவோ, சக்ரதாரி என்று. சக்கரம் கொண்டவரு என்ன செஞ்சாரு?. பிளிரு கேட்டபோது, பதறிப்போய் காப்பதினாராமே. அது என்ன பிளிறு, ஓ அதுவா, இந்த யானைகள் கத்துமே, அந்த சப்தம் தானே பிளிறு.
அட, களிறுனா யானை இல்லையா. களிறு - அதன் சப்தம் - பிளிறு : என்ன சொற்பொருத்தம்!.
அட, ஆமாம், அன்று, முதலை தன் காலைப் பிடித்து தண்ணீருக்குள் இழுத்தபோது, அக்களிறின் பிளிரிடும் சப்தம் கேட்டு ஓடி வந்து, தன் சக்கரம் விட்டு, அந்தக் களிறைக் காப்பாற்றினாராமே!

இப்பேர்பட்டவரு, யாருங்க, கொஞ்சம் படம் போட்டுக் காட்டுங்களேன்?

குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி:

துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி:

பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி:


ஓ, அப்படியா, இவரு கிட்ட நாம என்ன கேட்கலாம்?,

வளர்த்தென்னை இங்கு பரிபாலி. என்னை உன்பால் மிகுந்த அன்பு காட்டுமாறு வளர்த்து விடு.
உன் நாமம் அதைப்பாடி, நற்கதி பெறும் வழிகாட்டு.
களிறு மீட்டதுபோல், களபம் என் அறியாமை போக்கிடு.
துகில் மீட்டியதுபோல், என் அறிவினை மீட்டிடு.
கூக்குரல் கேட்டிட, வந்து காத்திடு.

குடை பிடித்த கிரிதாரி, துகில் மீட்டிய உபகாரி, களிறு மீட்ட சக்ரதாரி என்னை இங்கு பரிபாலி!. நம்ம தமிழ் மறை என்ன சொல்லுது பார்ப்போமா:

குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை,
ஒன்று மேதொழ நம்வினை ஓயுமே.
- நம்மாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (3042)

...
எண்ணிலா வூழி யூழி
தவஞ்செய்தார் வெள்கி நிற்ப,
விண்ணுளார் வியப்ப வந்து
ஆனைக்கன் றருளை யீந்த
கண்ணறா, உன்னை யென்னோ
களைகணாக் கருது மாறே.
- தொண்டரடிப்பொடியாழ்வார், நாலாயிர திவ்ய பிரபந்தம் (915)

ஆமாங்க, நீந்திக் கடக்க முடியாத, பிறவிக் கடலைக் கடக்க இவர் உதவியை நாடினால், கடக்க முடியுமாமே.
அலோ, சாரு,
கிரிதாரி - உபகாரி - சக்ரதாரி,
நேரா வந்து இங்கே என்ன பரிபாலிக்கணுமுங்க!

விருத்தம்

குளிர் மழை காக்க குடை பிடித்த கிரிதாரி,
துளிரிடை திரௌபதி துகில் மீட்டிய உபகாரி,
பிளிறு கேட்டோடி களிறு மீட்ட சக்ரதாரி,
கிரிதாரி - உபகாரி - சக்ரதாரி,
வளர்த்தென்னை இங்கு பரிபாலி.


பாடுபவர்: ரஞ்சனி & காயத்ரி
குளிர் மழை

Monday, May 26, 2008

தாலாட்டு : கண்ணன் என் கண்மணி

விருத்தம் பாடி பின்னர் தொடர்ந்து கிருதியினைப் பாடுவது நமது இசையில் ஒரு மரபு.
அதன்படி இங்கொரு விருத்தமும், பாடலும் பார்ப்போமா?
விருத்தம் ஒருவரால் இயற்றப்பட்டிருக்க, தொடர்ந்து வரும் உருப்படியோ இன்னொருவரால் இயற்றப்பட்டிருக்கும். இரண்டுக்கும் இடையே பாடகரால் நெய்யப்படும் தொடர்புதான் இருக்கிறதே, அது இயற்கையானது போலவே அமைந்திருப்பின், அது கேட்பவரை வியப்பின் விளிம்பிற்கு இட்டுச்செல்லும்!

அப்படிப்பட்ட ஒரு பாடலை இங்கு திருமதி. நித்யஸ்ரீ மஹாதேவன் பாடிடக் கேட்கலாம். முதலில் பாடும் விருத்தமானது, திருப்பாணாழ்வாரால் இயற்றப்பட்டது. இந்த செய்யுள் உட்பட, பாணரின் பத்து செய்யுள்கள் நாலயிர திவ்ய பிரபந்தத்தினில் அடங்கும். "கொண்டல் வண்ணனை, கோவலனை, வெண்ணை உண்ட வாயனை" என கண்ணனை விளித்த பெருந்தகையாளார் இவர்.

கண்ணன் வெண்ணை உண்பான் சரி, ஆனால், அவன் ஏழு உலகங்களையும் உண்டது எப்போது?
ஆகா, பரம்பொருளாய் எங்கெங்கும் நிறைந்திருப்பதைத் தான் அன்று கண்டாளோ அன்னை யசோதை.
எழில் நிறை நீல மேனியனின் வடிவழகு எல்லையில்லாமல் எங்கும் நிறைந்து பரம்பொருளாக நிரவி இருக்கிறது.
இப்போது இந்த ஆலமரத்திலை பாலகன் அழகில் லயித்திட, என் நெஞ்சமெல்லாம் அவன் நீலமேனி அழகும் நிறைந்திட,
ஐயோ, அண்ட சாரசரங்களெல்லாம் அதே கருநீல நிறத்தினில் என் நெஞ்சமெல்லாம் நிறைந்திடுதே!,
அம்மம்மா, விண்மீன்களெல்லாம் என்னுள்ளே மின்னிடுதே. இந்த விந்தையை என்னென்று சொல்ல!

விருத்தம்:

இயற்றியவர் : திருப்பாணாழ்வார்

ஆலமாமரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான், அரங்கத்து அரவின் அணையான்
கோலமாமணியாரமும் முத்துத்தாமமும்
எழில் நீல மேனி...முடிவில்லதோர் எழில் நீல மேனி ஐயோ...
எழில் நீல மேனி அம்மா...
நிறை கொண்டதென்
நெஞ்சினையே...நெஞ்சினையே... நெஞ்சினையே...
கண்ணா...கண்ணா...
தாலேலோ...
தா லே லோ...
தாலேலோ...


இப்படி ஒரு உணர்ச்சி வெள்ளத்தில் நிறைத்திட்ட இந்த பாலகனை, தாலேலோ என தாலாட்டுப் பாடி தூங்கச் செய்யும் பேறினையும் பெறாதா நெஞ்சென்ன நெஞ்சே?

கண்ணே என் கண்மணியே!

(ஒலிப்பதிவில், ஒலி அளவு குறைவாக உள்ளது, கணிணியில் ஒலியினைக் அதிகரித்துக் கேட்கவும்)

இப்போது தொடரும் கிருதி விருத்தத்தோடு, எப்படி அருமையாக இணைகிறது பாருங்கள்!. தமிழ்த் தியாகராஜர் என தமிழ் இசை ரசிகர்களால் போற்றப்படும் பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றியது. குறிஞ்சி ராகம் என்ன அழகாய் பொருந்துகிறது, தாலாட்டுப் பாடல்களுக்கு!

பாடல்:

ராகம்: குறிஞ்சி
தாளம்: திச்ரஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

எடுப்பு
கண்ணே என் கண்மணியே கண்ணனே கண் வளராய்
மண்ணுலகில் என் வாழ்வு வளம் பெற வந்துதித்த (கண்ணே)

தொடுப்பு
குயிலிசை குழலோசை உன் கொஞ்சு மொழிக் கிணையாமோ
கொண்ட மன சஞ்சலங்கள் பஞ்சாய்ப் பறந்திடுமே
தாலோ தாலேலோ....

முடிப்பு
தேடாத என் நிதியே திகட்டாத் தெள்ளமுதே
வாடாத மென் மலரே மனத்துள் இனிக்கும் தனித்தேனே
தாலோ தாலேலோ....