Showing posts with label நவராத்ரி. Show all posts
Showing posts with label நவராத்ரி. Show all posts

Sunday, October 16, 2016

ஆனந்தபைரவியில் மூன்றாவது ஆனந்தம்

இரண்டு ரொம்பவே குறைச்சல் என்றபின் மூன்றாவதற்கு முனையாமல் இருக்க முடியாதல்லவா!

ஆனந்த பைரவி இராகத்தில் தொடர்ந்து மூன்றாவது கிருதி - கமலாம்பாள் அன்னையே - என்னைக் காத்து அருள்வாய்.

இப்பாடல் முத்துசாமி தீக்ஷிதரால் இயற்றப்பட்டது. கமலாம்பாள் நவ-ஆவரணக் கிருதிகளில் முதலாவது கிருதி. இந்தத் தொகுப்பில் இடம் பெறும் ஒவ்வொரு பாடலிலும் ஒரு ஸ்ரீசக்ர ஆவரணம் என ஒன்பது ஆவரணங்களையும் பாடுவதாக அமைத்துள்ளார்.



பல்லவி
கமலாம்பா3 ஸம்ரக்ஷது மாம்
ஹ்ருத்கமலா நக3ர நிவாஸினீ அம்பா31

அனுபல்லவி
ஸுமனஸாராதி4தாப்3ஜ முகீ2
ஸுந்த3ர மன:ப்ரியகர ஸகீ2
கமலஜானந்த3 போ3த4 ஸுகீ2
காந்தா தார2 பஞ்ஜர ஶுகீ

சரணம்
த்ரிபுராதி3 சக்ரேஶ்வரீ அணிமாதி3 ஸித்3தீ4ஶ்வரீ
நித்ய காமேஶ்வரீ
க்ஷிதி புர த்ரை-லோக்ய மோஹன சக்ரவர்தினீ
ப்ரகட யோகி3னீ
ஸுர ரிபு மஹிஷாஸுராதி3 மர்தி3னீ
நிக3ம புராணாதி3 ஸம்வேதி3னீ

த்ரிபுரேஶீ கு3ரு கு3ஹ ஜனனீ
த்ரிபுர ப4ஞ்ஜன ரஞ்ஜனீ
மது4 ரிபு ஸஹோத3ரீ தலோத3ரீ
த்ரிபுர ஸுந்த3ரீ மஹேஶ்வரீ

பாடல் வரிகளுக்கு உதவி சாகித்யம்.நெட்




ஸ்ரீசக்ரத்தின் அமைப்பு முறையினைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

ஸ்ரீசக்ரத்தின் முதலாவது ஆவரணமாகிய  த்ரை லோக்ய மோஹன சக்ரம் பாடற்பெருவதைப் பார்க்கலாம். இந்த சக்ரத்தின் தேவதை பூபுரம் எனப்படும். மேலும் விவரங்களுக்கு இத்தளத்தில் பார்க்கலாம்.

இந்த கிருதியை இரஞ்ஜனி-காயத்ரி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


சஞ்சய் சுப்ரமணியன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


Wednesday, October 14, 2015

சங்கரி சம்குரு சந்தரமுகி

நவராத்ரி என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் கிருதிகளில் ஒன்று சாவேரி இராகத்தில் அமைந்த ஷ்யாமா சாஸ்திரி அவர்களின் "சங்கரி சம்குரு சந்தரமுகி" ஆகும். மிகவும் இனிமையானதும் நெகிழ்ச்சியைத் தரக் கூடியதுமான இப்பாடலை எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

பஞ்ச பூத தலங்களில் நீருக்கு உரிய தலமாம் திருவானைக்காவலில் வீற்றிருக்கும் அம்பிகையாம் அகிலாண்டேஸ்வரியைப் பாடும் பாடல்.

இராகம் : சாவேரி
தாளம்: திஸ்ர நடை
இயற்றியவர்: ஷ்யாமா சாஸ்திரிகள்

பல்லவி:
சங்கரி சம்குரு* சந்தரமுகி அகிலாண்டேஸ்வரி
சாம்பவி சரசிஜ பவ வந்திதே கௌரி அம்பா

(*சம்குரு/சங்குரு)

அனுபல்லவி:
சங்கட ஹாரினி ரிபு விதாரிணி கல்யாணி
சதா நட பலதாயிகே ஜகத் ஜனனி

சரணம்:
ஜம்புபதி விலாசினி ஜகதவனோலாசினி
கம்பு கந்தரே பவானி கபால தாரிணி சூலினி
அங்கஜ ரிபு தோஷிணி அகில புவன போஷிணி
மங்களபிரதே ம்ருதானி மராள சன்னிபவ காமினி
ஷ்யாமகிருஷ்ண சோதரி ஷ்யாமளே சாதோதரி
சாமகான லோலே பாலே சதார்தி பஞ்சன சீலே.

பொருள்:
குளிர் நிலவினை முகமாகக் கொண்ட சங்கரி - சங்கரனின் துணைவி
சம்குரு - நலங்களை எமக்கு வழங்கிடு,
அகில உலகங்களுக்கெல்லாம் ஈஸ்வரி - மனதுக்கு இயைந்த இறைவி - அகிலாண்டேஸ்வரி.
சாம்பவி - சாம்புவின் துணைவி.
தாமரைப் பூவில் அமர்ந்த பிரம்மாவால் வணங்கப்படும் கௌரி.

சங்கட ஹாரினி - சங்கடங்களை அழிப்பவள். துயர் துடைப்பவள்.
எப்போதும் (சதா) வேண்டும் (நட) அன்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றுபவள்.
ஜகத் ஜனனி - உலகங்களை ஈன்றவள், தாயானவள். கல்யாணி,

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் துணைவி.
ஜகத் +அவன + விலாசினி = உலகங்களைக் காப்பத்தில் மகிழ்பவள்.
சங்கினை (கம்பு) ஒத்த கழுத்தினைக் கொண்டவள். சக்தியின் மூலமானவள்.

பவானி! கபலாத்தினை ஏந்தியவள். சூலினி - சூலத்தினை ஏந்தியவள். உக்ர தேவதையாய் இருந்த அகிலாண்டேஸ்வரியை, ஸ்ரீசக்ர பிரதிஷ்டை மூலமாக ஆதி சங்கரர் சாந்தப்படுத்தியாக சொல்லப்படுகிறது.

மன்மதனின் எதிரியாம் சிவனின் மனதிற்கு உகந்தவள்.
அகில உலகங்களையும் போஷிப்பவள் - பேணுபவள்.
மங்களங்களைத் தருபவள்.
ம்ருதானி - மிருடனின் (கருணையுடையவன்) - சிவனின் துணைவி.

மராள (அன்னம்) சன்னிபவ காமினி - அன்னம் போன்ற நடையை உடையவள். லலிதா சகஸ்ரநாமத்தில் 47வது நாமம்.

ஷ்யாம கிருஷ்ணனின் சகோதரி. ஷ்யமாளா என வழங்கப்படுபவள்.

சதோதரி - மெல்லிய(சாத) இடையை(உதரி) உடையவள். இமவானுக்கு 'சதோதரன்' என்றோரு பெயருண்டு. இமவானின் மகளாதலால் சதோதரி எனவும் கொள்ளலாம். லலிதா சகஸ்ரநாமத்தில் 130வது நாமம்.

சாம கானத்தினை கேட்டு மகிழும் பாலே - பாலா திரிபுரசுந்தரி. லலிதா சகஸ்ரநாமத்தில் 965வது நாமம்.

எப்போதும் அன்பர்களின் துயர் துடைப்பதில் நாட்டம் உடையவள்.

சங்கரியே எப்போதும் நலங்களை எமக்கு வழங்கிடு,

---------------
இப்பாடலை கேட்க:

ரஞ்சனி & காயத்ரி:




டி.கே.பட்டம்மாள்:


மகாராஜபுரம் சந்தானம்:

விஜய் சிவா:

மாண்டலின் ஸ்ரீநிவாஸ்:


Sunday, October 21, 2012

நவராத்ரிப் பாடல்


ஆதியவன் சோதியாம் அன்னையவள் சக்தி
ஆதரிப்பாள் அன்புடனே அனுதினமும் போற்றி
நீதிநிலை நாட்டிடவே தீமையாவும் ஓட்டிடுவாள் சக்தி
நீடுதனி சூலமதை ஏந்திடுவாள் போற்றி
மூடச்சித்தமும் சிதைபட விடுவாளோ சக்தி
பாடியுன்னை சரண் புகுவேன் போற்றி

வையமெல்லாம் நினது கண்மணியாம் அலர்மேல்மகளே
வாழ்வாங்கு வாழ்ந்திடச் செய்வாயே நீயே
பொன்னென மணியென மின்னிடும் அன்னையே
உன்னையன்றி உலகத்தோர் உழல்வாரில்லையே.
இணைமலர்த் திருவடி இறைஞ்சிப் புகுந்திட
இனியில்லைத் துயரென அடைந்தேன் தஞ்சம்.

ஆலயமாய் அமைந்ததுபார் அன்பர் மனதும்நீ அமர
காலமெல்லாம் காத்திடுவாய் கருத்ததனை கலைமகளே
வேதமும் நாதமும் தாயே நின் உறைவிடம்
வேண்டுவோர் திகழ்ந்திட வரமளிப்பாய் நித்தமும்
போனது போகட்டுமெனப் பணிவேன் நின்பதம்
போகாமல் நீயெனக்களிப்பாய் ஞானம் யாவும், உயர் ஞானம் யாவும். ===================================================

கேட்கமாலேயே பால் நினைந்தூட்டுவதுவாம் அன்னையின் கருணை.

அதுபோலவே,

கேட்காமலேயே பாடிப் பதிவேற்றி இருக்கிறார் சுப்பு தாத்தா,

அனைவரும் கேட்டு அன்னையின் அருள் பெற:

 

Sunday, October 02, 2011

நவராத்ரி - இதன் பொருள் யாது?

ஒன்பது இரவுகள் - அன்னை சக்தியைத் துதிப்பதற்கு - குறிப்பாக பெண்களால் கொண்டாடப்படுவது.
.... மேலும்....?

சக்தி?
இயக்க சக்தி - இயங்குவதற்கான சக்தி.
இந்த சக்தி உடலில் இருந்தால் தானே எந்த செயலையும் செய்ய இயலும்?
ஓட்டப்பந்தயத்தில் போல ஓடி தங்கப் பதக்கத்தைப் பெறவும் சக்தி வேண்டுமல்லவா!
ஒரே நோக்கத்தோடு உடலில் சக்தியை கவனத்தோடு செயலில் நடத்துகையில் நமது சக்தியின் திறனை அறிகிறோம்.  மன நிறைவைப் பெறுகிறோம்.
இது போலவே தான் இறைவனின் சக்தியும்.
இறைவனின் சக்தியில் கவனத்தைக் குவிக்கையில் - அந்த குவிமுனையில் விளையும் ஆக்கத்தினை அறிகிறோம். அவ்வாறு விளையும் ஆக்கமே அன்னை சக்தியாம்.

எப்படி உடலில் சக்தியினை அறிகையில் "நம்மால் இந்தச் செயலை செய்ய முடியும்" என்கிற திறனை அறிகிறோமோ, அதுபோல, இறைசக்தியெல்லாம் ஒன்று சேர - அவற்றின் ஆதாரத்தினை - அன்னையை அறிகிறோம்.

எப்படி குழந்தைக்கு அதன் அன்னை ஆதாரமோ அதுபோல உலகிற்கும் அனைத்து உயிர்களுக்கும், உயிரில்லா பொருட்களுக்கும் அன்னை சக்தியே ஆதாரம். அந்த ஆதாரத்தினை, இறைவனின் சக்தியினை அறிகிறோம்.

"ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;
யாதானும் தொழில் புரிவோம்; யாதுமவள் தொழிலாம்"
என்பான் "பாட்டுக்கொரு புலவன்" பாரதி.

இவ்வாறு அன்னையை, இறை சக்தியின் ஆதாரத்தினை அறியும் சாதனையைச் செய்வதற்கான பண்டிகையே - நவராத்திரி எனப்பட்டது.

Saturday, October 09, 2010

ஆலவாய் வளர் அம்மையும் அப்பனும்

கபாலி நீள் கடிம் மதில் கூடல் ஆலவாயாம்
எத்தலத்தினும் ஏழுவரும் புகழ்
முத்தும் முத்தமிழும் முற்றும்
மாநகர் மதுரையம்பதி தன்னில்
அம்மையும் அப்பனும் அமரந்தருள் தரும்
அழகினை என்னென்று சொல்வேன்!


பாபநாசம் சிவன் அவர்களின் இரண்டு அழகான பாடல்கள் துணையுடன்!
முதலில் தேவி நீயே துணை என்று, அங்கயற்கண்ணியாம் அம்மை உமையன்னையைப் பாடும் பாடல். இவள் புவன சுந்தரி, புவனேஸ்வரி। மலையத்வஜன் மாதவத்தின் பலனாய் பிறந்தவள்। காஞ்சனமாலை புதல்வி. அமுதாய் இனிக்கும் செந்தமிழ் வளர்த்த தேவி நீயே துணை!


பாடல் : தேவி நீயே துணை
இராகம்: கீரவாணி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இப்பாடலுக்கான சுரக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

எடுப்பு
தேவி நீயே துணை
தென்மதுரை வாழ் மீனலோசனி
(தேவி...)

தொடுப்பு
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா
(தேவி...)

முடிப்பு
மலையத்வஜன் மாதவமே - காஞ்சன
மாலை புதல்வி மஹாராக்னி
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த
(தேவி...)

மார்கழி மகாஉற்சவத்தில் உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடிட பாடலை இங்கு கேட்கலாம்.

நித்யஸ்ரீ மஹாதேவன் அவர்கள் பாடிட இப்பாடலை இங்கு கேட்கலாம்.

இப்பாடலினை நாட்டியத்துடன் இங்கு பார்க்கலாம்.

--------------------------------------------------------------------------------------------------------
எண்டிசைக் கெழில் ஆலவாய் மேவிய
அண்டனே அஞ்சல் என்றருள் செய்யெனைக்
குண்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்காகவே.
- திருஞானசம்பந்தர், மூன்றாம் திருமுறை

திருஆலவாய் மேவிய பெம்மான் சந்திரசேகரன், சுந்தரேஸ்வரன் - சங்கத் தமிழ்த் தலைவன், மீனாட்சி மநாளன், அடிமையான என்ன ஆண்டருள் செய்வான்!

என்று தவழ்ந்தோடி வரும் கௌரி மனோகரி ராகத்தில் கௌரி மனோகரனைப் பாடும் பாடல்:

பாடல் : கௌரி மனோகரா
இராகம்: கௌரி மனோகரி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

எடுப்பு
கௌரி மனோகரா,
கருணாகர சிவ சங்கர ஸ்ரீ
கௌரி மனோகரா!

தொடுப்பு
சௌரிராஜன் பணியும்
சதாசிவ சந்திரசேகரா,
சுந்தரேஸ்வரா!
(ஸ்ரீ கௌரி மனோகரா!)

முடிப்பு
தாராதரம் புகழ் ஆலவாய் வளர்
சங்கத் தமிழ்த் தலைவனே
வராபயகர மீனலோசனி மநாளன்
உளமிரங்கி அடிமையை ஆள்!
(ஸ்ரீ கௌரி மனோகரா!)

இப்பாடலை பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:


அனைவருக்கு இனிய நவராத்ரி வாழ்த்துக்கள்!

Saturday, September 26, 2009

சரஸ்வதி இராகத்தில் சரஸ்வதி!

நவராத்ரியின் நிறைவுக்கு பக்கத்திலே வந்துட்டோமில்லையா, நவராத்ரி என்றதுமே, நமக்கு சரஸ்வதி பூஜையும், ஆயுத பூஜையும் தானே உடனுக்கு நினைவுக்கு வருவது!
இந்தப் பதிவில் சரஸ்வதியன்னை பற்றிய பாடல் ஒன்றைப் பார்ப்போம். அதுவும் சரஸ்வதி இராகத்தில்!
ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு ராகதேவதை உண்டெனச் சொல்வார்கள். அந்த இராகத்தை மனஉருகிப் பாடுகையில், அந்த இராகத்தின் இனிமையும், அழகும் மிளிரத் தோன்றிடும் ராகதேவதை, அந்த இராகத்தைக் கேட்போர் அனவரையும் பரவசப் படுத்துவாளாம். இந்தப் பாடலைக் கண்மூடிக் கேட்டுத் இசையமுதில் திளைத்தால், அந்த சரஸ்வதி இராகதேவதை உங்கள் மனக்கண்முன் பிரகாசிப்பாள், என்பதில் எனக்கேதும் ஐயமில்லை.

சரஸ்வதி நமஸ்துப்யம்
வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி
ஸித்திர் பவது மே ஸதா!

இராகம் : சரஸ்வதி
தாளம்: ஆதி
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

இப்பாடலை, திருமதி. நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

எடுப்பு
சரஸ்வதி, தயைநிதி - நீ கதி,
தண்ணருள் தந்தருள்வாய், பாரதி!

தொடுப்பு
கரமலர் மிளிர் மணிமாலையும் வீணையும்
கருணைபொழியும் கடைக்கண்ணழகும் வளர்

(சரஸ்வதி)

முடிப்பு
நின்னருள் ஒளி இல்லையானால்
மன இருள் நீங்குமோ, சகலகலைமாதே!
வெள் அன்ன வாகினி!
வெண் கமலமலர் வளரும் வாணி!
வெள்ளைக்கலையணி, புராணி!

(சரஸ்வதி)

~~~
வெள்ளை ஆடையைத் தரித்தவளே,
வெள்ளைத்தாமரை மலரதில் அமர்பவளே,
எம் இதயக் கமலத்தில் ஒளிர்வாயே, தாயே!
வெள்ளை அன்னமதை வாகனமாய்க் கொண்டவளே,
நின் அருள் இன்றி, மன இருள் நீங்குமோ? ஞானசொரூபமானவளே, எம் அஞ்ஞானம் நீங்கிட அருள்வாய்!
நல்வாக்கிற்கு அதிபதியே, கூத்தனூரில் கொலுவீற்றிருக்கும் நாயகியே, நின் தாள் சரண்.
~~~
பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிது எய்தநல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும்வெங் காலும், அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!
- சகலகலாவல்லி மாலை

Wednesday, September 23, 2009

திருமகள் பெருமை

வராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் திருமகளுக்கும், கடைசி மூன்று நாட்கள் கலைவாணிக்கும் அர்பணிப்பது வழக்கும். சென்ற பதிவில் சக்தி பற்றியதொரு பாடலைப் பார்த்தோம். இந்த பதிவில், திருமகள் பெருமைகளில், அடியேன் அறிந்த வெகு சிலவற்றைப் பார்க்கலாமா?. அதுசரி, அதுவேன் இப்படியொரு தலைப்பு? திருமால் பெருமைன்னு சிவாஜி நடிச்ச படம் வந்துருக்கே அதுமாதிரியான்னு கேக்கறீங்களா? திருமால் பெருமை எல்லாருக்கும் தெரிந்தது. திருமகள் பெருமை?. இந்த உரையாடலைக் கேளுங்க...

அவர் செல்வத்துக்கு அதிபதி, அவரை வணங்கினால் செல்வம் செழிப்பு கிடைக்கும் - இதுதான் நாம் எல்லோரும் பொதுவா நினைப்பது இல்லையா? சரி, அவ்வளவுதானா?

அட, ஆமாங்க, ஆங், எங்க ஊரில் அஷ்டலஷ்மி கோவில் இருக்குல்லே. தனலஷ்மி, தான்யலஷ்மி - இப்படிப் பலவித செல்வங்களை அருள்வாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேனே...


சரிதான். அஷ்டலஷ்மி என்பது இலக்குமித்தாயாரின் எட்டு வடிவங்கள் - ஆதிலஷ்மி, தனலஷ்மி, தான்யலஷ்மி, கஜலஷ்மி, சந்தானலஷ்மி, வீரலஷ்மி, விஜயலஷ்மி, வித்யாலஷ்மி என்பவைதான் இந்த எட்டு அம்சங்களாக்கும்.

ஓ, இவங்களும் வீரத்தையும், விஜயத்தையும் தருவாங்களா, நான் அது பார்வதி அன்னைதான்னு நினைச்சேன்!

:-) டொய்ங்...கல்வியா, செல்வமா, வீரமா...சரஸ்வதி சபதம் படம் நல்லா நினைவிலே இருக்கு போல!
இலக்குமி என்று நாம பொதுவா சொல்லறவங்களுக்கு, பலவித சிறப்பு அம்சங்கள் இருக்கு. அந்த ஒவ்வொரு அம்சத்தையும் தனிதனியா பெருமைப்படுத்தத்தான், இதுபோன்ற சிறப்புப் பெயர்கள். மற்றபடி, எல்லாருமே ஒருவர் தான்!
இன்னும் இருக்கு. பாற்கடலில் பள்ளிகொண்ட பரந்தாமனின் துணைவி இலக்குமித்தாய். திருமாலுக்கே 'திருமகள் கேள்வன்' (திருமகள் நாயகன்) என்றொரு பெயருண்டு. வைணவ ஆச்சார்ய பரம்பரையில், முதன்மையான ஆச்சாரியர் திருமால் என்றால், அதற்கு அடுத்த இடம் திருமகளுக்கேயாம்.

ஆகா, அப்படியா, குருவின் இடத்தில் திருமகளை வைத்துப் போற்றுவதற்கு ஆழ்ந்த காரணம் இருக்கணும் இல்லையா!

இலக்குமியின் மூன்று அம்சங்களாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி அப்படியும் சொல்லிக் கேட்டிருக்கோம் இல்லையா.

நம்மாழ்வாரின் திருவாய்மொழி வழியே காணக் கிடைத்தது:

உடன் அமர் காதல் மகளிர்
திருமகள், மண்மகள், ஆயர்
மடமகள் என்றிவர் மூவர்.
ஆளும் உலகமும் மூன்றே.
உடன் அவை ஒக்க விழுங்கி
ஆலிலை சேர்ந்தவன் எம்மான்...


இவங்க மூணுபேரும் மூணு உலகத்தை ஆள்பவர்களாம் - முறையே விண்ணுலகம், மண்ணுலகம், பாதாள உலகம் என்று.
நம்ப கண்ணபெருமான் இருக்காரு இல்லையா, அவர் மண்ணைத்தின்றபின் வாயைத்திறந்து காட்ட, அதில் இம்மூவலகமும் தெரிந்திட, இந்த மூன்று பேரையும் ஒன்று சேர்த்து விழுங்கியவனாம். அதாவது, அவன், எல்லாவற்றையும் தன்னுள் கொண்டவனாய் இருக்கிறான். மாமகள் மூவரையும் கொண்ட மாரமணனாய் இருக்கிறானாம்.

அடுத்தது, இந்த முதல் திருவந்தாதிப் பாடலைப் பார்ப்போம்:

திருமகளும் மண்மகளும் ஆய்மகளும் சேர்ந்தால்
திருமகட்கே தீர்ந்தவா றென்கொல், - திருமகள்மேல்
பாலோதம் சிந்தப் படநா கணைக்கிடந்த,
மாலோத வண்ணர் மனம்?

என்னது, திருமகள்தான் மற்ற இரண்டு பேரைக்காட்டிலும் உயர்வு என்பதுபோல வருகிறதே?

நம்ம குறைகளை கேட்டு, அவற்றை திருமாலிடம் இயம்பி, நிவர்த்தி செய்வதற்காக ஒருவர் மட்டுமில்லை, மூவர் இருக்கிறார் என்கிறார் பொய்கையாழ்வார்! அவற்றில் இருவர் - பூதேவியும், நீளாதேவியும், விஷ்ணுவின் சக்தி.
விஷ்ணுவின் சக்தி யார்? இலக்குமி. ஆகையில் மகாலஷ்மியின் அம்சமாகவே - திருமகளின் அம்சமாகவே அவர்களும் இருக்கிறார்கள்.

திருமகளோ, எப்போதும் மாலவன் மார்பிலேயே வாசம் செய்கிறாள்; பெருமாளைப் பிரிந்ததே கிடையாது. எல்லாவிடத்திலும், விஷ்ணுவாக நிறைந்தபோதும், அதிலெல்லாம் நிறைந்திருக்கிறாள்.
பெருமாளை 'சொல்லின் பொருள்' என்றால்,
திருமகளைச் 'சொல்' எனலாம்.
திருமகளை 'அறச்செயல்' என்றால்,
அதனால் விளையும் நன்மையினைத் திருமால் எனலாம்.
எல்லா உயிர்களிலும் ஆணாகத் திருமாலும், பெண்ணாகத் திருமகளும் வாசம் செய்து,
எல்லா ஜனனங்களுக்கும் ஜகத்காரணமாய்த் திகழ்கிறார்கள்!

Sunday, September 20, 2009

திருவான்மியூர் வளர் திரிபுரசுந்தரி

மீபத்தில் சென்னை சென்றபோது திருவான்மியூர் சென்று திரிபுரசுந்தரி அன்னையை தரிசிக்க இயன்றது. அன்று ஆடிவெள்ளியாதலால், அன்னையின் தங்கரத பவனியும் காணக் கிட்டியது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தில் நாண்மலர் தூவி வலம்செயில் வாட்டந் தீர்த்திடும் வான்மியூர் ஈசனையும், அம்பிகையையும் பற்றி வாரம் ஒரு ஆலயம் நடராஜ் அவர்கள் வழங்கும் பாட்காஸ்டின் சுட்டி இங்கே.


பெரியசாமித் தூரன் அவர்கள், திருவான்மியூர் வளர் தேனார் மொழி வல்லி, என தாயார் திரிபுரசுந்தரி அன்னையைப் பாடும் சுத்த சாவேரி இராகப் பாடலை இங்கு பார்க்கலாம். பாடலில், காமதேனு, தன் சாபம் தீர, வணங்கிய தலம் என்கிற குறிப்பும் உள்ளது.

மக்கு உடலில் பிணி ஏற்பட, நாம் மருத்துவரிடம் செல்கிறோம். மருத்துவரும் மருந்து தருகிறார். பிணியும் மறைகிறது. சில சமயம் மீண்டும் மீண்டும் வருகிறது. நிரந்தரமாக பிணி தீராதா என்பது நமது கோரிக்கை. நிரந்தரமாக மட்டுமல்ல, தீர்க்க இயலாத பிணிகளையும் தீர்க்கும் மருந்தொன்று இருக்கிறதாம். கோபாலகிருஷ்ண பாரதியும் 'பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது - பேரின்பம் அங்குள்ளே' என்பார். பிணிகளை தீர்ப்பது மட்டுமல்ல, பேரின்பம் தர வல்லதுமாம், அம்(மா)மருந்து.

சரி, அப்படிப்பட்ட மருந்தினைத் தரவல்ல மருத்துவர் யார்? பெரியசாமித் தூரனார் இப்பாடலில் அந்த மருத்துவர் வேறாரும் இல்லை - அம்பிகையேதான், "பிணியெலாம் தீர்க்கும் மருந்துடையாள்" என்கிறார்! அது என்ன மருந்து என்றால், "சதாசிவம்" என்னும் மருந்தாம். தாயே, திரிபுரசுந்தரி, சிவஞானம் எனும் மாமருந்தினைத் தருவாய், பிணிகளைக் களைவாய் என வேண்டிக் கொள்வோம்.

இராகம்: சுத்தசாவேரி
இயற்றியவர்: பெரியசாமித் தூரன்

பல்லவி:
தாயே திரிபுரசுந்தரி - உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி
தாளிணை மறவேன், சரணம்!

அனுபல்லவி:
தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வல்லி - ஜகமெல்லாம் படைத்த

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

சரணம்
காமதேனு வணங்கும் கருணாரூபிணி
கண்ணொளியால் அருள் காட்டும் தயாபரி
சாமகான மகிழ் சதாசிவபரமெனும்
தனிமருந்துடையாய்
பிணியெலாம் களைவாய்

(சிட்டை ஸ்வரம்)
(தாயே திரிபுரசுந்தரி...)

~~~~
பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் பாடிட, இப்பாடலை இங்கு கேட்கலாம்:

Wednesday, October 08, 2008

நவராத்ரி : வாணி வாகதீஸ்வரி

சகலகலா வல்லி வாணி நின் அடிபோற்றி வணங்கியே பாடிட ஓர் பாட்டு.
இராக தாள சந்தி சேர்த்து, தூய கானம் பாடிடவே, நீ அருள்வாயே, வேதரூபிணி, வித்யாதேவி.

"ஆய கலைகள் அறுபத்தி நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அம்மை
தூய உருப்பளிங்கு போல்வாள் என்
உள்ளத்தின் உள்ளே இருப்பள் இங்கு வாராது இடர்

படிகநிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமழ் பூந்தாமரைபோற் கையும் துடியிடையும்
அல்லும் பகலும் நவரத முந்ததித்தாற்
கல்லுஞ் சொல்லாதோ கவி"

குமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையின் பத்து பாடல்களும், அவற்றின் பொருளும் படிக்க குமரன் அவர்களின் பதிவை இங்கே நாடிடவும்.

வாணி வாகதீஸ்வரி!
---------------
பாடலை இயற்றியது : B.A.சிதம்பரநாத்
இராகம் : வாகதீஸ்வரி
பாடுபவர் : கே.ஜே.யேசுதாஸ்

எடுப்பு
வாணி வாகதீஸ்வரி
வரம் அருள்வாய், இசைவாய் நீ வாகதீஸ்வரி!
வரம் அருள்வாய், இசைவாய் கலைவாணி, வாகதீஸ்வரி!

தொடுப்பு
வேணி, வேத புத்தக வாணி
வினைகள் அகற்றும் வித்யாரூப
(வாணி வாகதீஸ்வரி)

முடிப்பு
எத்தனை ஜென்மம் நீ எனக்களித்தாலும்
இசைஞானமும் நல்லொழுக்கமும் வேணும்!
அத்தனையும் நீ எனக்களித்தாலும்
என்னருகில் இருந்து ஆண்டிட வேண்டும்!
(வாணி வாகதீஸ்வரி)

Vaani
[play]

Tuesday, October 07, 2008

நவராத்ரி : அருள் மழை பொழி அலைமகள்

ஹிரண்மயிம் லக்ஷிமீம் பஜாமி எனத் தொடங்கும் முத்துசாமி தீக்ஷிதரின் கிருதி ஏற்பட்ட கதை இது:

ஒருமுறை தீக்ஷிதரின் சிஷ்யர் ஒருவர், அவரிடம் வந்து, ஐயா, நீங்கள் மகாராஜாவைப் போய் சந்திக்கலாமே, உங்கள் வரவுக்காக காத்திருக்கிறார் அவர். நீங்கள் போய் சந்தித்தாலே போதும், உங்களுக்கு அவர் பொன்னும் பொருளும் வாரி வழங்கிடுவார் என்று. அந்த சிஷ்யருக்குத் தெரியும் தீக்ஷிதரைப் பற்றி. இருப்பினும் தீக்ஷிதரின் மனைவியார் சில தங்க நகைகளுக்கு ஆசைப்பட்டாராம். அப்போது, அந்த சமயத்தில் குறிப்பாக, மகாராஜாவைப்பற்றிய செய்தியை காதில் போட்டு வைக்கலாமே என நினைத்தார் போலும்.

தீக்ஷிதரோ, இந்த ஆசைக்கு வளைந்தாரில்லை. ஸ்ரீவித்யா உபாசகரான அவர், சாட்சாத் இறைவனைப் பாடும் இந்த நாவால், சாமன்யர்களைத் துதிப்பதா, இயலாது என மறுத்துவிட்டார். அப்போது, தங்க விக்ரகமாக மஹாலஷ்மியே தன் இருதயத்தில் நிறைந்திருக்க, அவளே இதுபோன்ற நிலையில்லா உலகில் இருந்தென்னைக் காப்பாள், என்று பாடுகிறார். நிலையான செல்வம், இறையருள் மட்டுமே என்கிறார். அன்றிரவே, அவரது துணைவியாரின் கனவில் மஹாலஷ்மி தோன்றி, தங்க மழையாய் கனவில் பொழிவது போலவும், இது போதுமா, எனக் கேட்பது போலவும் கனாக் கண்டாராம். அப்போதுதான் அவருக்கு, சாட்சாத் திருமகளே அருள் பாலித்திடும்போது, இதைவிடவும் செல்வம் வேறுண்டோ என உணர்ந்தாராம்.

இராகம் : லலிதா
தாளம் : ரூபகம்
பாடுபவர் : நித்யஸ்ரீ மஹாதேவன்


hiranmayeem_lakshm...


பல்லவி
ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஸதா3 ப4ஜாமி
ஹீன மானவாஸ்1ரயம் த்யஜாமி

அனுபல்லவி
சிர-தர ஸம்பத்ப்ரதா3ம்
க்ஷீராம்பு3தி4 தனயாம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஹரி வக்ஷ:ஸ்த2லாலயாம்
ஹரிணீம் சரண கிஸலயாம்
கர கமல த்4ரு2த குவலயாம்
மரகத மணி-மய வலயாம்

சரணம்
ஸ்1வேத த்3வீப வாஸினீம்
ஸ்ரீ கமலாம்பி3காம் பராம்
பூ4த ப4வ்ய விலாஸினீம்
பூ4-ஸுர பூஜிதாம் வராம்
மாதரம் அப்3ஜ மாலினீம்
மாணிக்யாப4ரண த4ராம்
கீ3த வாத்3ய வினோதி3னீம்
கி3ரிஜாம் தாம் இந்தி3ராம்
(மத்யம கால ஸாஹித்யம்)
ஸீ1த கிரண நிப4 வத3னாம்
ஸ்1ரித சிந்தாமணி ஸத3னாம்
பீத வஸனாம் கு3ரு கு3ஹ -
மாதுல காந்தாம் லலிதாம்


பொருள்:
பல்லவி:
எப்போதும் என் இதயத்தில் கொலுவிருக்கும் தங்கமே, திருமகளே,
துணை நீ தானே, நிலையிலா மானிடர் தொடர்பினை அறுப்பாயே.

அனுபல்லவி:
நிலையான செல்வமாம், வீடுபேறுதனை வழங்குவாயே, பாற்கடலின் குமாரியே.
ஹரியின் ஹிருதயத்திலுருப்பாயே - மான் போலும், இளம்பாதம் கொண்டவளே.
தாமரை போன்ற கரங்களில் அல்லி மலரைத் தரித்தவளே,
மரகத வளை அணிந்தவளே.

சரணம் :
வெள்ளைத் தீவினில் வசிப்பவளே, கமலாம்பாள் நீதானே.
கணங்களும் தேவரும் தொழுதிட, தாமரைமாலை அணிந்தவளே.
நவரத்தின ஆபரணம் சூடி, ஒளி விடுபவளே.
இசைக் கருவிகளின் நாத இன்பத்தை இரசிப்பவளே.
குளிர் நிலவின் பொலிவே.
ஸ்ரீசக்ர சிந்தாமணியில் வீற்றிருந்து,
பக்தர்க்கு வேண்டியதை அளிக்கும் தேவ லோகத்து இரத்தினமே.
பட்டு பீதாம்பரம் அணிந்தவளே.
குருகுஹனின் மாமன் மனைவியே, லலிதாம்.

(குருகுஹ என்பது, தீக்ஷிதரின் முத்திரை; குஹன் என்பது இங்கு முருகனையும் குறிக்கிறது!. 'லலிதா' என இராக முத்திரையும் வருகிறது.)

Wednesday, October 01, 2008

நவராத்ரி : அம்பா, என்ன சொல்லிப் பாடுவேன்?

அம்பா, அடிமை நான், உனை என்ன சொல்லிப் பாடுவேன்?
பாபநாசம் சிவன் அவர்களைப்போல்,

அம்பா எனது அறிவு வந்த நாள் முதலாய்
அகமகிழ்ந்து, ஆலயம்தோறும் வந்து
செம்பொன் அடிவணங்கி...
அம்பா உனது பாத மலரே தஞ்சம்
என்று கேதார இராக கிருதியில்,
சிவராஜதானி நகர் வாழும் நாயகியை இராஜேஸ்வரி, பரமேஸ்வரி என்கிற பெயர்களால் அழைத்துப் பாடுவேனோ!

அல்லது,

பக்தர்கோடிகளை பரிந்து காக்கும் பரதேவதையும் நீயன்றோ, உனக்கு பாரபட்சம், ஓரவஞ்சனையும் உண்டோ, நான் என் செய்வேன்
முக்திமுக்தி சகல போகபாக்கியமும் பரிந்தருளும்
புவனேஸ்வரி
பூமகள், நாமகள் பணி
மயிலாபுரி கற்பகமே,
எளிய இராமதாசன் என்னைக் காத்தருள் அம்மா

என, 'என்னைக் காத்தருள்வாய் அம்மா' என்கிற சரஸ்வதி இராகக் கிருதியில் பாடுவேனோ!

------------------------------------------------------------------
தண்டபாணி தேசிகரைப் போல்,

அருள வேண்டும் தாயே
என்னும் சாரமதி இராகக் கிருதியில் சொல்லுவது போல்
பொருளும், புகழும் பொருந்தி வாழ
புவியின் நாதனை நினைந்து வாழ
கலைகள் கற்கவும் கற்பனை செய்யவும்
காலம் கடவாமல் கருத்தை திரட்டவும்
உலகிலே நல்ல உண்மைகள் பேசவும் உனை நினைக்கவும், உறுதியாய் வாழவும்
அருள வேண்டும் தாயே,
அங்கயர்கண்ணி
நீயே!

என பட்டியல் வைத்திட இயலுமோ!

---------------------------------------------------------------------
பெரியசாமித் தூரனைப்போல்,

தேயாத புகழ் மேவும் திருவான்மியூர் வளர்
தேனார் மொழி வள்ளி - ஜகமெல்லாம் படைத்த
தாயே திரிபுரசுந்தரி,
உமா மகேஸ்வரி
சியாமள சௌந்தரி, உன் தாளிணை மலரே சரணம்!

என்ற சுத்த சாவேரி இராகப் பாடலைப் பாடி உன்னை நாடிட வேண்டுமோ!

---------------------------------------------------------------
கனம் கிருஷ்ணயரைப்போல,

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
சுக ஸ்வரூபணி மதுர வாணி
சொக்கநாதர் மனம் மகிழும்
மீனாட்சி

என்ற ரதிபதிப்ரியா இராகக் கிருதியில் பாடி மகிழ்வேனோ!
பாடலின் சுட்டி இங்கே.
-------------------------------------------------------------------------
மும்மூர்த்திகளில் ஒருவரான சியாமா சாஸ்திரிகள் போலத்தான்,
ஷ்யாம கிருஷ்ண சகோதரி,
சிவசங்கரி, பரமேஸ்வரி,
காமாக்ஷி அம்பா,
அனுதினமும் மறவேனே என்கிற பைரவி இராக ஸ்வரஜதியில்தான் பாடிட இயலுமோ!



-----------------------------------------------------------------------
அன்ன பூர்ணே விசாலாட்சி அகில புவன சாட்சி, கடாக்ஷி!

எனும் மும்மூர்திகளில் ஒருவரான முத்துசாமி தீக்ஷிதரின் சாமா கிருதியைத் தான் பாடி உன் அருளை நாடிட வேண்டிடுவேனோ! : பாடலின் சுட்டி இங்கே.
----------------------------------------------------------------------
கும்பிட்ட நேரமும் "சக்தி"யென்றால்
உனைக் கும்பிடுவேன் மனமே!
அம்புக்கும் தீக்கும் விடத்துக்கும் நோவுக்கும்
அச்சமில்லாதபடி
உம்பர்க்கும் இம்பர்க்கும் வாழ்வு தரும்பதம்
ஓம் சக்தி, ஓம் சக்தி, ஓம்!

என்று மகாகவி சுப்ரமணிய பாரதி போல், பராசக்தியே உனை வேண்டி ஓம்கார சக்தி முழக்கமிடுவேனோ!
------------------------------------------------------------------
அடியேன், எளியேன், இப்பெரிய மகான்களெல்லாம் உன்னை உபாசித்தது போல், என்னால் இயலுமா எனத் தெரியவில்லை. இவ்வடியார்களின் அடியனாய், நின் கடைக்கண் பார்வைக்கு காத்திருக்கும், என்னையும் நீ காத்து ரட்சி!. அருட்பிச்சை இட்டு என்னை ஆதரி!