Showing posts with label ஊத்துக்காடு வேங்கடகவி. Show all posts
Showing posts with label ஊத்துக்காடு வேங்கடகவி. Show all posts

Sunday, August 21, 2011

கண்ணன் அன்றி வேறில்லை

ஆற்றங்கரையோரம் சேற்றுத்தென்னை மரநிழலில் இளைப்பாறுகையில் எங்கிருந்தோ இனியதொரு கானம் தென்றல் காற்றொடு இழைந்து வருகுதே! இப்படியொரு இணையிலா இனிமை ததும்பும் இசையை இதுநாள்வரை கேட்டிலையே. கோலக்குயில் ஓசைபோல் குழலிசைத்தார் யாரோவென என்மனம் திகைக்க காரணமெதுவென கண்டிலேனே. அதைக்கேட்கக் கேட்க என் மனத்திலும் கவிதைகள் பிறக்குதே:

மருத நிலத்தின் மேன்மை மண்ணொடு வயலொடு செழுமை!
ஆற்றுநீரும் அந்தக் குழலிசையோடு சேர்ந்திசை பாடும்!
எப்படிப்பாடும்? துள்ளித்துள்ளிக் குதித்துப் பாடும்!
ததிங்கிணத்தோம் தத்திங்கணத்தோம் என ஜதி போடும்!
ஏனிப்படி அடியே, ஏனிப்படி நதியே? எனக்கேட்டால்,
கண்ணன் குழலிசையே எனச் சொல்லும்!, அது சொல்லும்!

காத்திருத்தலே நிமித்தம் முல்லை நிலத்தில் - அதுபோலே
காத்திருந்தேன் நானும் குழலிசையைக் கேட்டே.
கண்ணன் கனிமுகத்தைக் காண்பேனா மாட்டேனே அறியேனே.
அடி நீயாவது சொல்லேனடி சற்றே ஆறுதலாய்க் கண்ணே.

காத்திருந்த முல்லை மலர்களும் ஏங்கும் - எப்போது
எங்களிறைவன் முடி சேர்வோம் என ஏங்கும்.
முல்லை மலராவது பரவாயில்லை, அவன் முடிசேர முயலும்.
அடியேன் அவன் அடியாவது அடைவேனா அறியேனே.

தூங்கும் பனிநீரை வாங்கும் கதிரோன்போல் வருவான்
கண்ணன் வருவான், நான் பொய்யொன்றும் சொல்ல வில்லை.
எங்கள் கண்ணன் அன்றி வேறில்லை,
கண்ணன் அன்றி வேறில்லை, வேறில்லை.
-ஜீவா

கவிதைகளில் கற்பனையை வடிப்பவர் சிலருண்டு!
கதைகளில் கற்பனையை வடிப்பவர் பலருண்டு!
ஆனால், கற்பனையும் இல்லாமல் கதையும் இல்லாமல் கண்ணனோடு தனது நேரடி அனுபவத்தினைக் கவின்மிகு கவிதைகளாக, இசைநயத்தோடு வடித்துப்போனவர் வெகு சிலரே.
அவ்விடத்தில் தமிழ்க்கவி ஊத்துக்காடு வேங்கடகவியின் பாடல்கள் முன்னிற்பதை தமிழ்கூறும் நல்லுலகம் அறியும்.
அப்பாடற்தொகுதியில் இன்னுமொரு பாடலை இந்தப்பதிவுல் பகிர்வதில் பேரானந்தம் அடைகிறேன்!

ராகம்: காவடிச்சிந்து
தாளம் : திஸ்ரகதி
இயற்றிவர்: ஊத்துக்காடு வேங்கடகவி

கண்ணன் வருகின்ற நேரம் - கரையோரம்
தென்றல் கண்டுகொழித்தது பாரும் - அந்தக்
கானத்திடை மோனக்குயில் ஓசைக்கு இணை யாதென
தரமான குழலிசை கேளும் - போன ஆவி எல்லாம் கூட மீளும்!
(கண்ணன்)
சல்ல சலனமிட்டு ஓடும், நதி பாடும் - தென்றல்
தங்கித் தங்கிச் சுழன்று ஆடும் - நல்ல
துதிபாடிடும் அடியாரவர் மனமானது இதுபோலென
துள்ளித் துள்ளிக் குதித்தாடும் - புகழ்
சொல்லிச் சொல்லி இசைபாடும்!
(கண்ணன்)
கண்ணன் நகைபோலே முல்லை, இல்லையில்லை - என்று
கண்டதும் வண்டொன்றும் வரவில்லை
இது கனவோ அல்ல நனவோ எனக் கருதாதிரு மனமே - ஒரு
காலமும் பொய் ஒன்றும் சொல்லேன் - எங்கள்
கண்ணன் அன்றி வேறு இல்லேன்!
(கண்ணன்)
தாழைமடல் நீர்த்து நோக்கும், முல்லை பார்க்கும் - என்ன
செளக்கியமோ என்று கேட்கும் - அட
மொழி பேசிட இதுவோ பொழுதெனவோ - மாதவனின்
முத்து முடி தனில் சேர்வோம் - அங்கே
மெத்த மெத்தப் பேசி நேர்வோம்!
(கண்ணன்)

இப்பாடலை பாம்பே சகோதரிகள் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.
கே.ஜே.யேசுதாஸ் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்.

Sunday, January 09, 2011

மானாட மழுவாட மதியாட...

மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமியாட,
மாலாட நூலாட மறையாட திறையாட
மறைதந்த பிரம்மனாட,
கோனாட வானுலகு கூட்டமெல்லாமாட,
குஞ்சர முகத்தனாட,
குண்டலமிரண்டாட தண்டைபுலியுடையாட
குழந்தை முருகேசனாட,
ஞானசம்பந்தரொடு இந்திராதி பதினெட்டு
முனியட்ட பாலகருமாட,
நுரை தும்பை யறுகாட நந்திவாகனமாட
நாட்டியப் பெண்களாட,
வினை ஓட உனைப்பாட எனை நாடி யிதுவேளை
விருதோடு ஆடிவருவாய்
ஈசனே சிவகாமி நேசனே எனை ஈன்ற
தில்லைவாழ் நடராசனே.
- நடராஜப் பத்து.


"பரமானந்தக் கூத்து" என்பார் பரமசிவனவன் ஆடும் ஆனந்த நடனமதை. அவன் ஆட, ஆட எப்படி அவன் உடலில் அணிந்துள்ள ஒவ்வொன்றும் ஆடுகிறது என்பதை "மானாட மழுவாட" பாடலில் நடராஜப் பத்து பாடுகிறது! அவனோடு சேர்ந்து மங்கை சிவகாமியும், மடியில் அமர்ந்த குழந்தை குமரேசனும் ஆடுகிறான்!
நாமோ, நாம் செய்த நற்செயலில் பயனாய் அவனைப் பாடிட நாடிட முடிகிறது. நாடிய நெஞ்சத்தை வாடிட விடுவானோ வானவர்கோன்!

கவிச்சக்ரவர்த்தி கம்பனும், சிவபெருமான் நடனமாடுவதை, எப்படி வர்ணிக்கின்றார் பாருங்கள்: கின்னரர்கள் எல்லாம் இசைக்கருவிகளோடு இசை பாடுகிறார்களாம். விண்ணவரும், முனிவர்களும் கரம் குவித்த படி இருக்க, மார்ச்சனம் என்னும் மாப்பசை தடவப் பட்ட முரசு அதிர, வான் அரங்கில் நடம் புரிவான் கண்ணுதல் வானவன்:
எண்ண அரிய மறையினோடு கின்னரர்கள் இசைபாட உலகம் ஏத்த
விண்ணவரும் முனிவர்களும் வேதியரும் கரம் குவிப்ப வேலை என்னும்
மண்ணும் மணி முழவு அதிர வான் அரங்கில் நடம் புரிவாள் இரவி ஆன
கண்ணுதல் வானவன் கனகச் சடை விரித்தா லென விரிந்த கதிர்கள் எல்லாம்
- கம்பன் (இராமகாதை, மிதிலைக் காட்சிப் படலம், 153)
பரமசிவன் பாரண்டம் மீது ஆட, சடையாட, பாதிமதியும் ஆட, "நாதமோடு" ஆடினான் எனத் திருமூலர், அவன் நட்டத்தின் நாட்டத்தை நன்குரைக்கிறார்:

ஆதிபரன் ஆட அங்கை கனலாட
ஓதுஞ்சடை யாட உன்மத்த முற்றாட
பாதிமதி யாட பாரண்ட மீதாட
நாதமோ டாடினான் நாதந்த நட்டமே
- திருமூலர்
முத்துத்தாண்டவரின் இந்த பிரபலமான பாடலிலும் அதே நடையினைக் காணலாம்.

பண் : இந்தளம்
இராகம் : மாயாமாளவகௌளை
தாளம் : ஆதி
இயற்றியவர் : முத்துத்தாண்டவர்

இப்பாடலை திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
எடுப்பு
ஆடிக்கொண்டார் அந்த வேடிக்கை காணக் கண்
ஆயிரம் வேண்டாமோ?
(ஆடிக்கொண்டார்)

தொடுப்பு
நாடித் துதிப்பவர் பங்கில் உறைபவர்
நம்பர் திருச்செம்பொன் அம்பலவாணர்
(ஆடிக்கொண்டார்)

முடிப்பு
ஆர நவமணி மாலைகள் ஆட
ஆடும் அரவம் படம் விரித்தாட
சீரணிக் கொன்றை மலர்த்தொடையாட
சிதம்பரத் தேராட

பேரணி வேதியர் தில்லை முவாயிரரும்
பூசித்துக் கொண்டு நின்றாட
காரணி காளி எதிர்த்து நின்றாட
கனக சபை தனிலே
(ஆடிக்கொண்டார்)


அதுமட்டுமா? ஊத்துக்காடு வேங்கடகவியின் இப்பாடலில் கார்மேகக் கண்ணன் குழலோடு இசைக்கிறான். அவன் காளிங்கன் தலை மீது ஒரு பதம் வைத்து, இன்னொரு பதத்தை தூக்கி நின்றாட, அவனோடு சேர்ந்து அவனது மயிலிறகும், அவன் காதணியும் ஆடுகிறது. அவனது மயக்கும் விழிகளும் ஆட, இது கனவோ நினைவோ என பார்ப்பவர் வியக்கும் வண்ணம் ஆடிய நர்த்தனத்தை இப்பாடலில் ஊத்துக்காடரின் சொல்நயத்தில் கேட்பதோடு மட்டுமல்லாமல், கண்ணனின் நடனத்தைக் நேரில் கண்டு களிக்கலாம்.

இராகம் : சிம்மேந்திர மத்யமம்
தாளம் : ஆதி
எடுப்பு
அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால்
நம் அழகன் வந்தான் என்று சொல்வது போல் தோன்றும்
(அசைந்தாடும்)

தொடுப்பு

இசையாறும் குழல் கொண்டு வந்தான்
இந்த ஏழேழு பிறவிக்கும் இன்ப நிலை தந்தான்
திசை தோறும் நிறைவாக நின்றான்
என்றும் திகட்டாத வேணு கானம் ராதையிடம் ஈந்தான்

முடிப்பு
எங்காகிலும் எமதிறைவா இறைவா,
என மன நிறை அடியவரிடம் தங்கு மனத்துடையான்!
அருள் பொங்கும் முகத்துடையான்!
ஒரு பதம் வைத்து மறு பதம் தூக்கி நின்றாட,
மயிலின் இறகாட மகர குழையாட மதி வதனமாட,
மயக்கும் விழியாட மலரணிகளாட மலர் மகளும் பாட,
இது கனவோ நனவோ என மன நிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட
(அசைந்தாடும்)

அசை போடும் ஆவினங்கள் கண்டு
இந்த அதிசயத்தில் சிலை போல நின்று,
நிஜமான சுகம் என்று ஒன்று இருந்தால்
ஏழுலகில் இதையன்றி வேறெதுவும் அன்று!
திசையாறும் கோபாலன் இன்று,
மிக எழில் பொங்க நடமாட எதிர் நின்று ராதை பாட
(எங்காகிலும்)

பாடலை சுதா ரகுநாதன் பாடிட இங்கே கேட்கலாம்:

Monday, January 12, 2009

மார்கழி : அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் ஆளாவது எந்நாளோ?

ம்ம ஊரில் இறைவனுக்கு அடியார்களாக இருந்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மட்டும் அல்லாமல், அவ்வடியார்களுக்கு அடியாராகவும் இருப்பவர்களும் இருந்திருக்கிறார்கள். அடியார்க்கு செய்யும் தொண்டே, ஆண்டவனுக்குச் செய்யும் தொண்டாக, கொண்டாடி இருக்கிறார்கள். தொண்டாடுவதே, கொண்டாடுவது எனக் கொண்டாடி இருக்கிறார்கள். நாயன்மார்களாக நாம் போற்றும் பலரும், இப்படித்தான். அடியார்க்கு அடியாராக இருப்பதே சிவத்தொண்டு என வாழ்ந்த அந்நாயன்மார்களின் பட்டியலினை இங்கு ஒரு பாடலில் நாம் பார்க்கப் போகிறோம்.
என்ன பாடலா? பட்டியலா? இரண்டும் தாங்க!
அதற்கு முன்னால், ஒரு பட்டினத்தார் பாடலைப் பார்ப்போம்.

வாளால் மகவரிந்து ஊட்டவல்லேன் அல்லேன்; மாதுசொன்ன
சூளாலிளமை துறக்கவல்லேன் அல்லன்; தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடத்து அப்பவல்லேன் அல்லன்நான் இனிச்சென்று
ஆளாவது எப்படியோ ...?

இதுதான் பட்டினத்தார் பாடல். இதில் அவர் குறிப்பிடும் மூன்று நாயன்மார்கள்:
சிறுத்தொண்டர், திருநீலகண்டர், கண்ணப்பர் என மூன்று நாயன்மார்களை குறிப்பிடுகிறார்.

இப்போது, மூன்றிலிருந்து, அறுபத்து மூன்றுக்குச் செல்வோமா!

ஊத்துக்காடு வேங்கடகவி(1700(?)-1765(?)) அவர்களைப் பற்றி நமக்குத் தெரியும். 'அலைபாயுதே, கண்ணா...', 'தாயே யசோதா' போன்ற அற்புதமான கண்ணன் பாடல்களை இயற்றியவர். அப்படிப்பட்டவர், சிவனடியார்களையும் ஒரு நீண்ட பட்டியலெடுத்துப் பாடுகிறார்!
பார்ப்போமா! பாடல், தொடங்குவதைப் பாருங்கள், மேலே பார்த்த பட்டினத்தார் பாடல் விட்ட இடத்தில் இருந்து, தொடங்குவது போல உள்ளது.

இராகம் : பரசு
தலைப்பு : பெரியபுராணக் கீர்த்தனை
வழங்குபவர் : அருணா சாய்ராம்
நிகழ்ச்சி : மார்கழி மகா உற்சவம் 2008
வயலின் : H.N.பாஸ்கர்
மிருதங்கம் : J.வைத்யநாதன்
கடம் : கார்த்திக்



~~~~~~~~~~~~~~~~~~~
பாட்டைக் கேட்டுக்கொண்டே, வரிகளைப் பார்ப்போமா?

எடுப்பு
ஆளாவது என்னாளோ சிவமே
அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் - உன்
அடியார்க்கு அடியார்க்கு அடியனாய் (ஆளாவது...)

தொடுப்பு
கேளாது அளிக்கும் வரமே அண்ட மேலானதற்கும் பரமே
இளம் தாளான கமல முட்புறமே பதம்
ததிக்க தாமென விதித்த தாளமும்
துதிக்க தாமென மதித்து கதிபெற (ஆளாவது...)

முடிப்பு
புன்மை பிறவி போகவேணும் எடுத்தால்
புண்ணிய பிறவியாக வேணும்

இன்னவரில் ஒருவரைப் போலே இணையொன்றும்
இல்லா பதத்திணையாக வேணும்(இன்னவரில்)

1. காழிமணம் சிவபாதமகன் (1), திருநாவரசன் (2), மணிவாசக(3), சுந்தரன்(4) எனும் (இன்னவரில்)

2. சிறுத் தொண்டர்(5), திருநீலகண்ட(ர்)(6), விறன் மீண்ட(ர்)(7), நமி நந்தி(8), தண்டி அடிகளெனும்(9) (இன்னவரில்)

3. ஐயடிகள் காடவர்கோன் (10) ஆனாய(11) கணம் புல்லர்(12) நின்றசீர் நெடுமாற(13)
கணநாத (14) முனையாடுவாரொடு (15) திருநாளைப் போவாரெனும்(16) (இன்னவரில்)

4. மெய்பொருளார் (17) பெருமிழலைக் குறும்பர்(18) ஏனாதிநாத(19) கலிக்கம்பர் (20)
அமர்நீதி(21) நரசிங்க முனையரய (22) சடைய(23) சண்டேச (24) கலிய(25) காரியாரெனும்(26) (இன்னவரில்)

5. மானக்கஞ்சாற(27) நேச(28) பூசலாரொடு(29) வாயிலார்(30)
சோமாசிமாற(31) மங்கையர்க்கரசி(32) குங்கிலியக் கலயார்(33) இளையான்குடி
மாற(34) அரிவாட்டாயரி(35) கூற்றுவர்(36) கோட்புலி(37) சாக்கியர்(38) சத்தியள்(39) - சிறப்
புலியர் (40) செருத்துணையர் (41) புகழ்த்துணையர்(42) குலச்சிறையர்(43) கழற்றறிவர்(44) இயற்பகையரெனும் (45) (இன்னவரில்)

6. திருமூல(46) முருக(47) மூர்த்தி (48) அப்பூதி(49) ருத்தர பசுபதியார்(50) இசைஞானியர்(51)
நீலநக்கர்(52) இடங்கழியர்(53)அதிபத்தர்(54) எறிபத்தர்(55) ஏயர் கோனொடு(56)
நீலகண்ட யாழ்பாண(57) புகழ் சோழ(58) கோட்செங்கட்சோழ(59) கழற்சிங்கர்(60)
காரைக்கால் நகர்மேவு கனியாரொடு(61) கண்ணப்பர்(62) குறிப்புத் தொண்டரெனும்(63) (இன்னவரில்)

இணையொன்றுமில்லா பதத்திணையா வேணும். (ஆளாவது...)

~~~~~~
புதிர் பக்கம்:
1) ஆகா, 63 நாயன்மாரையும் ஒரே பாட்டில் அடுக்கிட்டாரே!
ஆனா, ஒருத்தரை விட்டுட்டாரு போல இருக்கு? அப்படியும் இருக்குமோ? அப்படீன்னா, ஏனோ?
புதிருக்கான குறிப்பு இங்கே இருக்கு, பார்த்துச் சொல்லுங்க!
2) இந்தப் பாட்டில், நாயன்மார்களை, ஊத்துக்காடார், குறிப்பிடுகையில், எதேனும் வரிசை இருக்கிறதா? முதல் வரியில் சமயக்குரவர் நால்வரையும் குறிப்பிட்டி விட்டார். அவர்கள் முதன்மையானவர்கள் என்பதனால். மற்றவர்ளைக் குறிப்பிடுகையில் வரிசை ஏதுமுண்டா? அப்படியானால், அது என்ன?. பெரியபுராணத்தில் சேக்கிழார் பெருமான் குறிப்பிடும் வரிசைக்கும், இவ்வரிசைக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா?
~~~~~~
பி.கு : ஒவ்வொரு நாயன்மார் பெயருக்கும் சுட்டி தந்துள்ளேன். தமிழ் விக்கிபீடியாவில் அவரைப்பற்றிய விவரங்கள் அறியலாம்.
~~~~~~
அடியார்க்கு அடியார் மட்டுமல்ல,
அடியார்க்கு, அடியார்க்கு, அடியனாம்!
அடியார்க்கு அடியாராய் இருப்பவருக்கு அடியாராய் ஆகும், உயர் நிலைக்கு, உகந்த ஆளாவது எப்போதோ?
நாயன்மார்கள் ஒவ்வொருவர் பெயராகச் சொல்லி, அவர்களெல்லாம் அடைந்த, ஈடு இணையில்லாத, இறையடி எனும் பதத்திற்கு இணையான பதத்தினை அடைய வேண்டும்! சிறுமையான, இப்பிறவி போக வேண்டும். இன்னொரு பிறவி வாய்த்தால், அது புண்ணிய பிறவியாக வேண்டும்.
தொடுப்பில் பாருங்கள், எப்படி, வார்த்தைகள் வந்து விழுந்திருக்கின்றன! அற்புதம்!

பாட்டைக் கேட்டீங்களா?
பாட்டென்றால் இப்படி இருக்க வேணும்.
பாட்டுக்கு இசை என்றால் இப்படி இருக்க வேணும்.
அதை அனுபவித்து பாடும் பாடகர் என்றால் இப்படி இருக்க வேணும்.
இப்படி எல்லாவற்றுக்கும் இலக்கணம், இப்பாடல்!