Showing posts with label வில்லி பாரதம். Show all posts
Showing posts with label வில்லி பாரதம். Show all posts

Sunday, September 11, 2011

கண்ணன் விடு தூது

மிழ் இலக்கியத்தில் தூது என்பது சிற்றிலக்கிய வகைகளில் ஒன்றாக பேசப்படும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது. அகம் இது, புறம் இது என அளபெடுத்த தமிழர் அவற்றில் ஒவ்வொரு பகுதியினையும் ஆராய்ந்து அழகு படுத்தியுள்ளனர். அகம், புறம் இரண்டிலும் இடம்பெறக் கூடிய சிறப்பு தூதிற்கு உண்டு. பற்பல காப்பியங்களில் அவற்றை அலங்கரிக்கும் பாத்திரங்கள் தமக்குள்ளே ஏற்பட்ட ஊடலையோ அல்லது பிரிவையோ அல்லது சச்சரவினையோ தீர்க்கும் பொருட்டு இரு தரப்பிற்கும் பொதுவான ஒருவரையோ, அல்லது பொருளையோ, ஏன் தமிழ் மொழியைக்கூடத் தூது விட்டதுண்டு!

மகாபாரதத்தை எடுத்துக்கொண்டால், அக்காப்பியத்திலேயே பல தூது உண்டு என்றாலும் அவற்றில் கண்ணன் தூது சிறப்பிலும் சிறப்பு. சரி, கண்ணன் விடு தூது என்று சொல்லலாமா அல்லது கண்ணன் விடும் தூதா? மான் விடும் தூது/ மயில் விடு தூது என்றால் மானையோ மயிலையோ தூதாக அனுப்பப்பட்டதைச் சொல்லலாம். பாண்டவர்கள் சார்பில் கண்ணன் தூதனாக கௌரவர்களிடம் சென்றான் என்பதினைக் கண்ணன் விடு தூது எனலாம். ஆனால் எல்லாவற்றுக்கும் மூலமுதலாகக் கண்ணன் இருக்கையில் தூதனாகச் செல்வதும், செல்லச் சொல்வதும் கண்ணன் அல்லவோ! கண்ணன் அன்றி வேறில்லை.

கண்ணன் தூதுச் சருக்கத்தில், வில்லிபுத்துரார், கடவுள் வாழ்த்துப் பாடலில், பாரளந்த அண்ணலைப் பாடுகிறார்:
பேர் படைத்த விசயனுடன் மும்மை நெடும் பிறவியினும் 
பிரியான் ஆகி, 
சீர் படைத்த கேண்மையினால், தேர் ஊர்தற்கு இசைந்து
அருளும் செங் கண் மாலை
பார் படைத்த சுயோதனற்கு, 'படை எடேன் அமரில்!' 
எனப் பணித்த கோவை, 
கார் படைத்த நிறத்தோனை, கை தொழுவார் பிறவு 
ஆழிக் கரை கண்டாரே. 
- வில்லி பாரதம் 

கௌரவர்களிடம் இருந்து சஞ்சயன் தூதனாக வந்து போன பின்பு, தருமர் தன் தரப்பு நியாத்தை எடுத்துரைக்க வேண்டி திருத்துழாய் மாலை சூடும் கமலக்கண்ணனைத் தூதாக அனுப்ப எண்ணி இருந்தார். கண்ணனை அழைத்து அவரிடமும், தனது தம்பியர் நால்வரிடம் அவ்வெண்ணத்தைப் பகிர்ந்து கொண்டார்.   "கண்ணா, போர் என்று வந்தால் அனைவரும் மாள்வார். ஆகையால் போர் வேண்டாம். சமாதானம் வேண்டு. நாட்டில் எங்களது பகுதியினை வேண்டு. அதைத் தர அவர்கள் மறுத்தால் ஐந்து ஊர்கள் வேண்டு. அதையும் தர மறுத்தால், ஐந்து வீடுகளாவது வேண்டு. அதனையும் தர மறுத்தால், பின் போர் வேண்டு" என்றான் தருமன். 

தருமனது மேற்சொன்ன வார்த்தைகளைக் கேட்டு வெஞ்சினம் கொண்டு வெதும்பிச் சொன்னான் வீமன்:

சூடுகின்ற துழாய் முடியோன், சுரருடனே முனிவர்களும்
                  சுருதி நான்கும்
தேடுகின்ற பதம் சிவப்ப, திரு நாடு பெறத் தூது
                  செல்ல வேண்டா;
வாடுகின்ற மடப்பாவைதன் வரமும், என் வரமும்,
                  வழுவா வண்ணம்,
கோடுகின்ற மொழியவன்பால், எனைத் தூது விடுக! இனி,
                  கொற்ற வேந்தே! 
 
தேவர்களும், முனிவர்களும், வேதங்களும் தேடப்பெற்ற சிறப்புடைய கண்ணனை - போயும் போயும் நமக்கு அரசு வேண்டி தூது அனுப்பலாமோ, வேண்டாம் வேந்தே, என்னத் தூதாக அனுப்பு. நான் போய் என் கதையால் கௌரவர்கள் கதையை முடித்து விட்டு வருகிறேன் என்றான். வீமனது சினத்தைக்  தணித்தபின் கண்ணன் அர்ஜூனனை நோக்கி, "விஜயா, உன் கருத்து யாது?" என வினவினான். விஜயனோ, "கண்ணா, அண்ணன் வீமனும் போக வேண்டாம், யாரும் போக வேண்டாம், இங்கிருந்தே என் காண்டீபத்தால் அவர்களைப் பொடிப்பொடி ஆக்குவேன்" என்றான். அடுத்து கண்ணன் நகுலனைக் கேட்க, "தூதினால் பயனில்லை" என்றே பெயர்ந்தனன். இறுதியாக ஐவரில் இளையவனாம் சகாதேவனது கருத்தைக் கண்ணன் கேட்டான்:

நகுலன் இவை உரைத்ததற்பின், 'நன்று!' எனக் கை
                  அமைத்தருளி, 'நகுலன் சொல்லும்,
இகல் விசயன்தன் மொழியும், திறல் வீமன் இயம்பியதும்,
                  யாவும் கேட்டோம்;
புகல் அரிய உணர்வு உடையோய்! புகழ் உடையோய்!
                  திறல் உடையோய்! புகல், நீ' என்ன,
முகில் அனைய திரு மேனி முகுந்தனுக்கு மனம்
                  உருக, மொழிகின்றானே:

ஐவரில் ஞானி சகாதேவன் தான் போலும். சொல்லுதற்கு அரியதான மெய்யறிவை உடையவனாம் இளையோன் மொழிந்தான்: 

'சிந்தித்தபடி நீயும் சென்றால் என்? ஒழிந்தால் என்?
                  செறிந்த நூறு
மைந்தர்க்குள் முதல்வன் நிலம் வழங்காமல் இருந்தால்
                  என்? வழங்கினால் என்?
கொந்துற்ற குழல் இவளும் முடித்தால் என்? விரித்தால்
                  என்? குறித்த செய்கை
அந்தத்தில் முடியும்வகை அடியேற்குத்
                  தெரியுமோ?-ஆதி மூர்த்தி! 

"கண்ணா, தருமன் சொல்வதுபோல் நீயும் தூது சென்றால் என்ன? அல்லது செல்லாவிட்டால்தான் என்ன?துரியோதனன் எங்களுக்கு நிலம் தந்தால் என்ன? தராவிட்டால் என்ன? சபதமிட்ட பாஞ்சாலியும் தன் கூந்தலை முடித்தால் என்ன? முடியாமல் விரித்தால் என்ன? எந்த செய்கையும் எப்படி முடியும் என்று அறிந்தவன் நீ. எனக்கு என்ன தெரியும்? எது எப்படி நடந்தாலும் அது உன் விருப்பத்தால் விளைந்தது அல்லவோ!" என்றான்!:

'முருகு அவிழ்க்கும் பசுந் துளப முடியோனே! அன்று
                  அலகை முலைப்பால் உண்டு,
மருது இடைச் சென்று, உயர் சகடம் விழ உதைத்து,
                  பொதுவர் மனை வளர்ந்த மாலே!
ஒருவருக்கும் தெரியாது இங்கு உன் மாயை; யான்
                  அறிவேன், உண்மையாக;
திருவுளத்துக் கருத்து எதுவோ, அது எனக்கும் கருத்து!'
                  என்றான், தெய்வம் அன்னான். 

"அன்று நீ பாலகனாய் இருந்தபோதே, விடம் தடவி முலைப்பால் தந்து உனைக்கொல்ல வந்த பேய்மகளையும் அறிந்து கொண்டாய். மேலும் உரலோடு உன்னைக் கட்டி வைத்த பின்னும், அதனோடு மருது மரங்களுக்கு இடையே தவழ்ந்து சென்றாய். உயர்ந்து நின்ற சகடாசுரனும் நிலத்தில் விழச்செய்தாய். இடையர் மாளிகையில் வளர்ந்து இப்படியெல்லாம் இந்திரஜாலம் புரிந்த கண்ணா, நீ செய்யும் மாயை தனை இங்கு இருக்கும் ஒருவரும் அறியார். ஆனால் அதன் உட்பொருளை அடியேன் அறிவேன். உன் திருவுளத்தில் இருக்கும் கருத்தே என் கருத்தாகும். உன் சுதந்திரமே என் சுதந்திரம் ஆகும்" என்றான் கடவுளைப் போன்ற சகாதேவன்.

உடனே கண்ணன் சகாதேவனை தனியே அழைத்துச் சென்று நகைப்புடன் அவனது தந்திரமான பேச்சை மெச்சி, "சகாதேவா, நன்று உரைத்தாய். ஆனால், பாரதப் போர் நடக்காமல் இருக்க நீயே ஒரு உபாயம் சொல்." என்றான். அதற்கு சகாதேவன்:
'நீ பாரத அமரில் யாவரையும் நீறாக்கி,
பூ பாரம் தீர்க்கப் புரிந்தாய்! புயல்வண்ணா!
கோபாலா! போர் ஏறே! கோவிந்தா! நீ அன்றி,
மா பாரதம் அகற்ற, மற்று ஆர்கொல் வல்லாரே?  
கண்ணனை "புயல்வண்ணன்" என்றழைப்பதைப் பாருங்கள்! பூமியின் பாரத்தைக் குறைக்க புயலாகப் புறப்பட்டான் போலும் புயல்வண்ணன்! உன் திருவுளக் கருத்து அப்படி இருக்க, பாரதப் போர் ஏற்படாமல் தடுக்க உன்னால் மட்டுமே இயலும். எனினும் பாரதப்போரை தடுக்க ஓர் உபாயத்தினைக் கேட்பதால், உன்னைக் கட்டிப்போட்டல் இயலும் என்றான் சகாதேவன். அன்பனின் மனமதை அறிந்த கண்ணனும் பதினாறாயிரம் உருவங்கள் கொண்டு, "இப்போது என்னைக் கட்டுக பார்க்கலாம்" என்றான். மாயவனின் விளையாட்டை அறிந்த தூயவனாம் சகாதேவன், உலகளந்த உத்தமன் பாதங்களைத் தன் மனமாகிய கருத்தினால் கட்டினான்!  

பக்தியும் ஞானமும் ஒருங்கே அமையப்பெற்ற சகாதேவனை, "அன்பால் என்னை அறிந்த அன்பனே சகாதேவா" என கண்ணனும் அழைக்க, சகாதேவனும் "கண்ணா, வன் பாரதப்போரில் பாண்டவரை உன் பார்வையாலே காத்தருள வேண்டும்" என வேண்டிக் கொண்டான்.

Thursday, August 04, 2011

சிவனே இவன்! - அர்ஜூனன்

மாமல்லபுரத்துக் கடற்கரைச் சிற்பங்களுள் அர்ஜூனன் தவநிலையைக் காட்டும் சிற்பம் மிகவும் புகழ் பெற்றது. அத்தனை அத்தனை உருவங்களைத் தாங்கி நிற்கும் அச்சிற்பத்தின் நடுநாயகமாக, அர்ஜூனனார் விலா எலும்புகள் தெரிய, இருகை தூக்கி, ஒற்றைக்காலில் நின்றவாறு இருக்கும் தவக்கோலத்தை துல்லியமாய் அச்சிற்பத்தில் இழைத்திருப்பார்கள் பல்லவர்கள். கண்ணுக்கு விருந்தான இச்சிற்பத்தோடு காதுக்கு விருந்தான கவிநயத்தினை சற்றே இங்கு பருகலாமா! வில்லிபுத்தூரார் இயற்றிய வில்லிபாரதக் காப்பியத்தோடு.

தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் வில்லி பாரதத்தின் சந்த நயத்தை மிகவும் சிலாகித்து "அந்நூலின் நடையிலே ஒரு தனியான கம்பீரம் உள்ளது. இடத்துக்கேற்ற சந்தங்கள் அதில் மிக அழகாக அமைந்திருக்கின்றன. குதிரையின் கதியொலியும், தேரின் கடகடவோசையும் யானையின் முழக்கமும் அந்தச் சந்தங்களிலேயே ஒலிக்கும்." என்பார்.

"அர்ஜூனன் தவநிலை" என்று ஆசிரியர் தலைப்பிட்ட பகுதியில் இருந்து:

ஆசில் நான்மறைப்படியும், எண் இல் கோடி ஆகமத்தின்
படியும், எழுத்து ஐந்தும் கூறி,
பூசினான் வடிவம் எலாம் விபூதியால்; அப் பூதியினைப் புரிந்த
சடைப் புறத்தே சேர்த்தான்;
'தேசினால், அப் பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே
போலும்!' எனத் தேவர் எல்லாம்
பேசினார்; வரி சிலைக் கை விசயன் பூண்ட பெருந் தவத்தின்
நிலை சிலர்க்குப் பேசலாமோ?
-வில்லி பாரதம்

சி வா ய ந ம எனும் ஐந்தெழுத்து மந்திரத்தைச் செப்பி இருந்தனன்.
அபாயம் இல்லை என அறிந்தோதும் அர்ஜூனன், பரகதி பெற
உபாயம் இதுவே என ஓதினான்.
ஓலமறைகள் ஒன்றென ஒலித்திடும் ஐஞ்தெழுத்தை நெஞ்செழுத்தாய்க் கொண்டனன்.

அர்ஜூனனின் தவஒளியினைக் கண்ட தேவரெல்லாம் - கயிலாயம் மேவும் பெம்மான் சிவனே இவன் என்று பேசினராம். அப்படிப்பட்ட, அர்ஜூனனின் தவக்கோலம் எப்படியெல்லாம் இருந்ததாம்?

ஒரு தாளின்மிசை நின்று, நின்ற தாளின் ஊருவின்மேல் ஒரு
தாளை ஊன்றி, ஒன்றும்
கருதாமல், மனம் அடக்கி, விசும்பின் ஓடும் கதிரவனைக் கவர்
வான்போல் கரங்கள் நீட்டி,
இரு தாரை நெடுந் தடங் கண் இமையாது, ஓர் ஆயிரம் கதிரும்
தாமரைப் போது என்ன நோக்கி,
நிருதாதியரில், மனுவாய்த் தவம் செய்வாரில், நிகர் இவனுக்கு
ஆர்கொல்
?' என, நிலைபெற்றானே.

நிலத்தின் தொடர்பினை ஒற்றைக் காலோடு நிறுத்திடவே ஒற்றைக் காலில் நின்றனன் போலும். நிலமகளும் அக்காலைத்தாங்க, அவ்வாறு நின்றகாலின் தொடையில் இன்னொரு காலை ஊன்றினனாம். பரமனைத் தவிர வேறொன்றும் நினையாது, தன்னிரு கரத்தையும் கதிரவனைக் காட்டி விரித்திட்டானாம்.
இவ்வாறு தவம் செய்யும் "இவனுக்கு நிகர் யாருமில்லை" என்னும் நிலை பெற்றனன்.

கருந் துறுகல் எனக் கருதி, பிடியும், கன்றும், களிற்றினமும்,
உடன் உரிஞ்ச, கறையான் ஏறிப்
பொருந்தும் முழைப் புற்று அது எனப் புயங்கம் ஊரங்
கொடிகள் மரன் என்று பாங்கே சுற்ற,
பரிந்து, வெயில் நாள், மழை நாள், பனி நாள், என்று பாராமல்
நெடுங்காலம் பயின்றான்; மண்ணில்
அருந் தவம் முன் புரிந்தோரில் இவனைப்போல் மற்று ஆர்
புரிந்தார், சிவசிவ என்று
? அரியவாறே!

கருஞ்சிலை போலவே கடுந்தவம் புரியும் விஜயனைக் கல்லென்றே கருதின போலும்! அவனருகே வந்த யானைக்கூட்டங்கள், தம்முடலை அவன் மேல் பொருத்தி உராய்ந்தன!
அது மட்டுமா? கரையான்கள் ஏறி தங்குதலால் ஏற்பட்ட துளைகளைப் புற்றெனக் கருதி பாம்புகளும் அவன் மேல் ஊர்ந்தன. பூங்கொடிகள் மரமென்று நினைத்து அவனைச் சுற்றி வளைத்தன.
எக்காலமாயினும், வேற்றுமை ஏதும் பாராட்டாமல், தான் கொண்டதே குறியெனக் கருதி மண்ணில் பெருந்தவம் புரிந்தனன் பாண்டுவின் மைந்தன்.

"சிவ சிவ" என விடாமல் பயிலும் இவன் போல் மண்ணில் வேறு யார் புரிந்தார் அருந்தவம் என்கிறார் வில்லிபுத்தூரார்.

இவ்வாறு ஈசனை நோக்கித் தவம் புரியும் விஜயனைப்பற்றி தோழியர் மூலமாக அறிந்த அம்பிகை, சிவனிடம் அதைப்பற்றி வினவ, அதற்கு சிவன்:

ஆலம் உண்டு அமுதம் பொழிதரு நெடுங் கண் அம்பிகை
அருள் மொழி கேட்டு,
நீலம் உண்டு இருண்ட கண்டனும், இரங்கி, 'நிரை வளைச்
செங் கையாய்! நெடிது
காலம் உண்டு; அருள் கூர் அறத்தின் மைந்தனுக்கும்
காற்றின் மைந்தனுக்கும் நேர் இளையான்;
ஞாலம் உண்டவனுக்கு உயிர் எனச் சிறந்தோன்; "நரன்"
எனும் நாமமும் படைத்தோன்;

தருமனுக்கும் பீமனுக்கும் இளையோனானும், ஞாலம் உண்ட மாலவனுக்கு உற்ற நண்பனுமான பார்த்தனன், நம்மை நோக்கி நெடுங்காலம் தவம் புரிவதை அறிவோம் என்றார்.

பருகு நீர் துறந்து, காற்றும் வெவ் வெயிலும்
பாதபங்களின் சினை உதிர்ந்த
சருகுமே ஒழிய, காய் கனி கிழங்கும் தான் இனிது
அருந்துதல் தவிர்ந்தான்
உருகு மா மனத்தை நாம் உவந்து இருத்தற்கு உறைபதி
ஆக்கி, நம்மிடத்தே
செருகினான், உணர்வை; யாவரே, இவன்போல் செய் தவம்
சிறந்தவர்?' என்றான்.

சிறந்த தவத்தை இயற்றும் அர்ஜூனன், தனது இதயக் கமலத்தை - சிவன் விரும்பி வந்து வீற்றிருக்க ஏற்றதொரு இடமாய்ச் செய்தனன். ஆகையால், "நம்மேல் தனது உணர்வைச் செலுத்தி இருக்கும் இவன் போல் யார் செய்தார் தவம்" என்றார் சிவன்.

----------
இப்படியாக வில்லிபாரதத்தில் அர்ஜூனனின் தவக்கோலமும் அதன் சிறப்பும் விவரிக்கப்படுகிறது.
தன்னை அறியும் தவமே பெரிதென்று தரணியில் தவம் புரிவாரெல்லாம் சிவனை அறிவார், சிவனே ஆவார்.