Showing posts with label ஆத்ம போதம். Show all posts
Showing posts with label ஆத்ம போதம். Show all posts

Wednesday, April 29, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்திமூன்று

பா 68:
திக்கிடங் காலமுதற் றேம லென்றுமெத்
திக்குமார்ந் தேக்குளிர்மு றிப்பதா - யெக்களங்கமு
மற்றநித் யானந்த வான்மதீர்த் தத்துதோய்
உற்றவ னார்செய்கை யொன்றின்றி - மற்றவன்
யாவு மறிந்தொணா யெங்குநிறைந் தாரமிர்த
நாவ னெனவே யறி.

பதம் பிரித்து:
திக்கு, இடம், காலம் முதற்றே அமலென்றும்
எத்திக்கும் ஆர்ந்தேக் குளிர் முறிப்பதா(ம்) - எக்களங்கமும்
அற்ற நித்யானந்த ஆன்ம தீர்த்தத்து
தோய்வுற்றவனார் செய்கை ஒன்றின்றி மற்றவன்
யாவும் அறிந்தொணா எங்கு(ம்) நிறைந்த ஆரமிர்தன்
ஆவன் எனவே அறி.


பொருள்:
திசை, இடம், காலம், போன்றவற்றுள் மட்டும் அடக்கிவிடாத முடியாததும்,
எல்லா நேரத்திலும், எல்லா இடத்திலும் நிறைந்ததுமான,
எதிர்மறையான வெப்பத்தினையும், குளிரையும் கூட அழிப்பதுமான,
களங்கமில்லா, நிலையான, அழிவிலா இன்பத்தை இகத்தில் தருவதுமான, பரம்பொருளை,
எவனொருவன் எல்லா செய்கைகளையும் துறந்து, தன் ஆன்மாவெனும் தீர்தத்தில் மூழ்கித் தோய்கிறானோ,
அவன், எல்லாமும் அறிந்தவனாய், எங்கெங்கும் நிறைந்தவனாய்,
அமிர்தமாய் அழிவில்லாததாய் ஆகிறான்.

விளக்கம்:
பரம்பொருளானது காலம், இடம், திசை போன்ற குணங்களால் குறுக்கப்படாமல், எல்லாவற்றையும் தாண்டி எல்லா இடத்திலும், எல்லா திசையிலும் நிறைத்திருக்கிறதாம்.
அப்பரம்பொருளை, தன் ஆன்மாவான 'தீர்த்தத்தில்' - புனித நீரில் மூழ்கி - தன்னைத்தானே, அதில் தோய்த்துக் கொள்கிறானோ, அவன் அந்த பரம்பொருளாகவே, அதன் அழிவிலா நிலையினை அடைகிறானாம்.
புனிதமான எந்த ஒரு இடத்துக்கும் செல்ல வேண்டாமல், தன் இகத்திலேயே பரத்தினைக் காண ஏதுவாகிறது ஞானிக்கு. அது அவனுக்கு நித்யமான ஆனந்தத்தினை நிரந்தரமாய் அடையவும் செய்கிறது.

~~~

இவ்வாறாக ஆத்ம போதம் நிறைவடைந்தது.
பகவான் இரமணரின் திருவருளால், இப்பகுதிகளை இங்கே தர இயன்றது.

உசாத்துணை: சுவாமி நிகிலானந்தரின் ஆத்ம போதம் ஆங்கில உரை.

மேலும், இணையத்தில் கிடைத்த சுவாமி சின்மயானந்தரின் ஆங்கில உரையாக்கம்:

ஆத்ம போதம் - சுவாமி சின்மயானந்தர் உரை ஓம் தத் சத்!

Sunday, April 19, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்திரண்டு

பா 66:

சிரவண மாதிகளாட் றேசுறு ஞான
வெரியினிற் காய்ச்சி யெடுக்கச் - சருவ
மலமும்போய்ச் சீவன் மறுவில்பொன் போனிர்
மலனாகித் தன்னொளிர் வான்.

பதம் பிரித்து:
சிரவணமாதிகளாலே சுறு ஞான
எரியினிற் காய்ச்சி எடுக்கச் - சருவ
மலமும் போய்ச் சீவன் மறுவில் பொன் போல்
நிர்மலன் ஆகித் தன்னொளிர்வான்.

பொருள்:
சிரவணம் முதலான சாதகங்களில் ஆன்ம முதிர்விற்கு உந்தப்படும் சாதகன்,
ஞானமெனும் நெருப்பில் நன்கு காய்ச்சி எடுக்கப்படுவது போலவாம்.
பொன்னை நெருப்பில் காய்ச்சி,
அதில் இருக்கும் பொன் அல்லாத, மற்ற உலோகங்களை அதனில் இருந்து அகற்றி,
தூய்மையான தங்கத்தை எடுப்பது போல,
சிரவணம் முதலான, கேட்டல், பாடுதல் போன்றவற்றில் ஈடுபட்டு,
தன்னில் இருக்கும் அழுக்கான மலங்களை அகற்றி,
தூய்மையான சச்சிதானந்தாமாய் ஒளிர்வான்.

விளக்கம்:
ஞானமெனும் நெருப்பு : நெருப்பு எப்படி, தூய்மையாய், மாசற்று இருக்கிறதோ அதுபோல, தூய்மையான மெய்ஞானமும், அழுக்கற்று இருக்கும். நெருப்பில் காய்ச்சி, அழுக்கு அகற்றிட, தூய்மையாகும் பொன்போல,
ஜீவனில் அழுக்கு அகற்றி, அதன் தூய்மையான முழுமுதல் நிலைக்கு திரும்பிட ஆவன செய்ய வேண்டும்.
எவ்வாறு?: சிரவணம் (மறைகள் சொல்லும் உன்னத நெறிதனைக் கேட்டறிதல்) முதலான (சிரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், ஸக்யம், ஆத்ம நிவேதனம்)
வழி நெறிகளில் தன்னைத் தான் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
அவ்வழிநெறிகளில் நன்கு பக்குவப்பட்ட மனதில், அழுக்குகள் அகல, அதுவே அவன் தன்னைத் தானறிந்து ஒளிர்ந்திட ஏதுவாகிறது.

பா 67:
இதயவெளி தோன்றி யிருளையழி ஞான
உதயரவி யான்மா வொளிரு - நிதமுமே
யெல்லாவட் றும்பரவி யெல்லாமுன் தாங்கினிந்
றெல்லா மொளிர்விக்கு மெண்.

பதம் பிரித்து:
இதயவெளி தோன்றி இருளை அழி ஞான
உதய ரவி ஒளிரு(ம்) நிதமுமே
எல்லாவற்றும் பரவி, எல்லாமுன் தாங்கி நின்று
எல்லாம் ஒளிர்விக்கும் எண்.

பொருள்:
இதயவெளியில் இருந்து தோன்றிய, ஞானமானது, அறியாமை என்னும் இருளை அழித்திட, அது அன்றாடம் கிழக்கில் உதிக்கும் சூரியன் இருளை அழித்து, ஒளிர்வது போலவாம். அம்மெய்ஞானம், எல்லாப் பொருளிலும் பரவி, எல்லாப் பொருளையும் நிலைப்பெறச் செய்து, எல்லாப்பொருளிலும் நிறைந்து, அவை எல்லாவற்றையும் ஒளிர்ந்திடச் செய்திடுவது, என்று எண்ணுக.

Wednesday, March 25, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி இருபத்தொன்று

பா 64:
எதுவெது காணவுங் கேட்கவு மேயு
மதுபிரம்மத் தன்னிய மாகா - ததுவுமே
தத்துவஞா னத்தினாற் சச்சிதா னந்தமா
மத்துவை தபிரம மாம்.

பதம் பிரித்து:
எதுவெது காணவும் கேட்கவுமேயும்
அது பிரம்மத்தின் அன்னியம் ஆகாததுவுமே,
தத்துவ ஞானத்தினால் சச்சிதானந்தமாம்
அத்துவைத பிரம்ம மாம்.

பொருள்:
நாம் காண்பவையும், கேட்பவையும்,
பிரம்மத்தில் இருந்து வேறானது அல்ல.
மெய்ஞானத்தை அடைந்தவர் பிரம்மத்தை சத் என்றும் சித் என்றும் ஆனந்தம் என்றும்,
பிரித்துச் சொன்னாலும்,
அது 'இரண்டு' என்றில்லாத, அத்வைதமான, பிரம்மமேயாம்.

விளக்கம்:
மெய் ஞானத்தினை அடைந்தவர் எங்கெங்கும் பிரம்மத்தினை அன்றி வேறொன்றும் பார்த்தறியார், கேட்டறியார்.
அந்த முழுநிலையினை அடையாதவருக்கோ, அது பன்மையாகத் தெரிந்தாலும், அவர்களும் பார்ப்பதும், கேட்பதும் எல்லாமுமே, பிரம்மமேயாம்.
தான் யாரெனும் தன்னறிவு தூர்ந்ததும், சச்சிதானந்த மயமான பிரம்மம் தானெனும் மெய்யறிவு மேலிட,
இரண்டிலா பிரம்மமாக இரண்டிலா நிலையினை தம்மிலும் உணர்வர்.

பா 65:
சருவத்துஞ் சார்ந்ததாஞ் சச்சிதா னந்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்
ஞானக்கண் ணில்லாத நண்ணானே காட்சியொளிர்
பானுவையன் தன்போலப் பார்.

பதம் பிரித்து:
சருவத்தும் சார்ந்ததாம் சச்சிதானந்த்தப்
பிரம்மத்தை ஞானக்கண் பெற்றான் - தரிசிப்பான்,
ஞானக்கண் இல்லாதன் நண்ணானே காட்சியொளிர்
பானுவை யந்தன் போலப் பார்.

பொருள்:
பிரம்மம் சச்சிதானந்தமாய், எங்கெங்கும் எல்லாப்பொருளிலும் நிறைந்திருந்தாலும்,
ஞானக் கண் உடையவரால் மட்டுமே, அதை உணர்ந்திட இயலும்.
அந்நிலையை அடையாதவருக்கோ,
கண்ணெதிரே சூரியன் உதித்திருந்தாலும், அதை அறிய இயலாத பார்வை இழந்தவன் போல், ஒளிரும் பிரம்மத்தினை உணர இயலாதவனாய் இருக்கிறான்.

விளக்கம்:
பிரம்மம் எப்போதும், எல்லாவிடத்தும் ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும்,
தமது அகக்கண்ணை மறைக்கும் அறியாமை இருள் அகலாத வரைக்கும்,
அவர்கள், மெய்ஞானப் பார்வைதனை இழந்தவராய்,
ஒளிரும் பிரம்மத்தினைக் காண இயலாதவராய் இருக்கின்றார்.

அவனது பார்வையோ, அவனது சொல்லோ, அல்லது அவனது வேறு எந்த புலனோ அவனுக்குத் துணையில்லை. அவன் செய்யும் தவமோ, அல்லது நற்செயலோ கூட இல்லை. எப்போது, தூய சுடரொளியாம் ஞானம் பெறுகிறானோ, அப்போதுதான் அவன் பரமனைப் பார்க்கிறான். அந்தப் பரமனையே தியானிக்க, அந்தப் பரமனில் இரண்டில்லாமல் ஆகிறான்.
- முண்டக உபநிடதம், III, i, 8

Sunday, March 15, 2009

தமிழில் ஆத்ம போதம் : பகுதி இருபது

பா 62:
ஒளிர்ந்துலக மெல்லானத னுள்வெளிவி யாபித்
தொளிர்ந்திடு மப்பிரம மோர்வா - யொளிரு
நெருப்பினிற் காய்ந்தங்கி நேரொளிரு மந்த
விரும்புண்டை யைப்போல வே.

பதம் பிரித்து:
ஒளிர்ந்து உலகமெல்லான் அதனுள் வெளி வியாபித்து
ஒளிர்ந்திடும் அப்பிரமம் ஓர்வாய் ஒளிரும்
நெருப்பினிற் காய்ந்தங்கினேர் ஒளிரும் மந்த
இரும்புண்டையைப் போலவே.

பொருள்:
ஒளிர்ந்து உலகின் உள்ளே, வெளியே, என எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதுமான
பிரம்மம் ஒளிருவது -
மந்தமான ஒரு இரும்பு உருண்டையை, நெருப்பில் காட்டி, பழுக்கக் காய்ச்சிட,
அதன் உள்ளும்,புறமும், எல்லாமும் நெருப்பாகவே ஒளிருவதைப் போலவே ஆகும்.

பா 63:
பிரமம முலகிற் பிறிதாகு மந்தப்
பிரமத் தணுவில் பிறிதாய் - பிரமத்தற்
கன்னிய மேது மவிர்ந்தா லதுமித்தை
யுன்னுக கானநீ ரொத்து.

பதம் பிரித்து:
பிரமம் உலகிற் பிறிதாகும் அந்தப்
பிரமத்தின் அணுவில் பிறிதாய் - பிரம்மத்தற்கு
அன்னியம் ஏதும் அவிர்ந்தால் - அது மித்தையென
உன்னுக கான(ல்) நீர் ஒத்து.

அருஞ்சொற்பதம்:
அவிர்தல் : ஒளிர்தல்
மித்தை : தோற்றமயக்கம்
உன்னல் : நினைத்தல்

பொருள்:
பிரம்மம், உலகத்தில் இருந்து வேறுபட்டதாகும்.
அப்படிப் பிரித்து, 'இன்னொன்றாய்'ப் பார்க்கையில்,
பிரம்மத்தினைத் தவிர இன்னொன்று ஒளிர்ந்தால், அது, பொய்யான, காட்சிப் பிழையாகத் தான் இருக்க வேண்டும்,
பாலைவனத்து கானல் நீர்போல.

விளக்கம்:
அத்வைத வேதாந்தத்தின் முடிபாக இப்பாவினைக் காணலாம்.
ஞானம் பெற்றவன், எல்லாவிடத்திலும், பிரம்மத்தினையே பார்க்கிறான்.
மற்றவர்களுக்கு, வெவ்வேறாகத் தெரிபவை எல்லாம், அவன் பார்வையில் 'ஒன்றே'யாம். அதுவே உண்மையாம்.
அறியாமையினால், வெவ்வேறாகத் தெரிந்தவையும் 'ஒன்றென'த் தெரியுமாம்,
அவ்வறியாமை அகன்றதும்.
அங்கே மெய்ஞானம் மட்டுமே, பிரம்மம் எனத் தெளிவித்து ஒளிர்ந்திடச் செய்யும்.
வறண்ட பாலையில் தொலைவில் தெரியும் நீர்ச்சுனை, உண்மையில் தோற்ற மயக்கம் என்பதுபோல,
இவ்வுலகமே பிரம்மம் எனத் தெரிவதும் காட்சிப்பிழையேயாம்.
இவ்வுண்மையை அறிந்தவர்க்கு, தன்னை அறிதலே தலையாய குறிக்கோளாய் இருக்கும்.
தான் யாரெனும் வினவலை விடுத்து, உலகம் யாதெனச் சென்றாற்பின், அது கானல்நீர் வேட்டை போலத்தான் ஆகும்.

"இரண்டாகத் தெரிவதை இருப்பதாகக் கொண்டாலும், அது மறைந்து போகத் தான். ஏனெனில், இரண்டெனத் தெரிவதெல்லாம் காட்சிப் பிழையே. அத்வைதம் மட்டுமே, உன்னதமான உண்மை."
- கௌடபாதரின் மாண்டூக்ய உபநிடதக் காரிகை I, 17

Monday, February 09, 2009

தமிழில் ஆத்மபோதம் - பகுதி பத்தொன்பது

பா 59:
அதனிடத் துள்ள தகிலமுஞ் செய்கை
யதையடுத் துள்ளதே யாகு - மதனாற்
பரவிடு மெல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு நெய்போல வே.

சீர்களைப் பிரித்தபின்:
அதனிடத்துள் உள்ளது அகிலம் உன் செய்கை
அதை அடுத்து உள்ளதே ஆகும் - அதனாற்
பரவிடும் எல்லாம் பரம்பொருள் பாலில்
விரவிடு(ம்) நெய் போலவே.

பொருள்:
பிரம்மம் - அதனுள், அகிலமும், அதளுள் அடங்கும் அனைத்துப் பொருள்களும் அடங்கும்.
அகிலத்தில் நிகழும் அனைத்து செயல்களும், அதனைத் தொடர்ந்தே நிகழ்கின்றன.
மூலமான பரம்பொருளில் இருந்துதான் மற்ற எல்லாமும் பரவுகின்றன.
பாலில் நெய் போல் பரம்பொருளும் எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும், எல்லா செயலிலும் விரவி இருக்கிறது.

விளக்கம்:
எல்லாப் பொருளிலும் பிரம்மம் எனும் பரம்பொருளே நிறைந்து இருக்கிறது.
எல்லாப் பொருளிலும் இருக்கும் நித்யமான, சாசுவதமான ஒரே பொருள் பிரம்மம் மட்டுமே.
எல்லா செயலிலும் - கேட்டல், பார்த்தல், நுகர்தல், தொடுதல், சுவைத்தல் - என எல்லா செயல்களும் நிகழ மூலக் காரணமாய், பரம்பொருளே அவர்களில் சைத்தன்யமாக திகழ்கிறான்.
பாலைக் கடைந்து அதிலிருந்து கிடைக்கும் நெய் போல, எல்லாப் பொருட்களின் பெயர் மற்றும் உருவ வேறுபாடுகளைக் கடைந்தெடுத்தால், கிடைத்திடும் பொருள் தான் பரம்பொருள்!

இப்படியாக, பரம்பொருளின் பேரின்பம் "இவை" எல்லாவற்றாலும் மறைக்கப்படுள்ளது, அவையாவன:

பா 60:
பருமையு னுண்மையுற் பத்தி வினாசங்
குருகலு நீட்சியுங் கூடத் - துருவங்
குணங்குல நாமமுங் கொள்ளாம லுள்ள
துணர்க பிரம்மமென் றுற்று.

சீர்களைப் பிரித்த பின்:
பருமையு(ம்) நுண்மை உற்பத்தி, வினாசம்,
குருகல், நீட்சியும் கூடத்து - உருவம்,
குணம், குலம், நாமமும் கொள்ளாமல் உள்ளது
உணர்க பிரம்மம் என்று உற்று.

பொருள்:
அளக்கக்கூடிய பொருளின் பருமனும்,
அளக்கவும் அரிதான பொருளின் நுண்மையும்,
உற்பத்தி ஆகுபவையும்,
அவற்றில் அவ்வப்போது அழிந்து போகுபவையும்,
சிறுத்துப் போதலும், பெரிதாகலும் -
இப்படியாக எல்லா வகையான உயிரும் பொருளுமாக இருந்தாலும், அவற்றில்,
உருவம், குணம், குலம், பெயர் போன்ற வேறுபாடுகளைக் கொள்ளாமல்,
ஒன்றென, இருப்பதுவே பிரம்மம் என உணர்ந்து கொள், உற்று நோக்கி.

விளக்கம்:
இவ்வாறாக, வெவ்வேறெனத் தெரிவதில் எல்லாம் மறைந்து இருப்பது பரம்பொருள். மறையோதி மனம் திறந்திட, மறைபொருள் புலப்பட, அறியாமை எனும் இருள் அகன்றிட, இவ்வேறுபாடுகள் களைந்திட, உன்னுள்ளே எழும் சுய வினவலின் விளைவாக, இவ்வேறுபாடுகள் அற்றதே பரம்பொருள் என உணர்வாய்.

பா 61:
எதனொளியி னாலொளிரு மேயிரவி யாதி
யேதனை யவையொளிர்க்க வெலா - தெதனாலே
யிந்தவுல கெலா மிலகு மதுதானே
யந்தப் பிரம மறி.

சீர்களைப் பிரித்தபின்:
எதன் ஒளியினால் ஒளிருமே இரவியாதியே
அதனை அவை ஒளிர்க்க இலா - எதனாலே
இந்த உலகெலாம் இலகும் அதுதானே
அந்தப் பிரமம் அறி.

(இலகும் - விளங்கிடும்)

பொருள்:
சூரியன் முதலான விண்மீன்களும், பரம்பொருளால் ஒளிர்கின்றன. ஆனால், அவை தமக்கே ஒளியினைத் தந்திட இயலா. எந்த ஒரு பொருளால், இவ்வுலகமெல்லாம், விளங்கித் திகழ்கிறதோ, அப்பொருள்தான் பிரம்மம் என அறிந்திடுவாய்.

விளக்கம்:
வானத்தில், தானாக ஒளிர்விடும் பொருட்கள் உண்டு. அவற்றின் ஒளியினைப் பிரதிபலிக்கும் பொருட்களும் உண்டு.
இவற்றில், எதுவாகிலும் சரி, அவற்றின் ஒளியின் மூலத்தின் மூலம், பரம்பொருளேயாம்.
தமது ஒளியாலேயே தம்மைத் தாமே, ஒளிர்க்க (தத்தம் அறியாமை அகன்றிடச் செய்திட) இயலாத பொருட்கள் இவை. அவற்றின் அறியாமை அகன்று, ஒளியுடன் திகழ, பரம்பொருளின் ஒளி தேவைப்படுகிறது.
அந்த பரம்பொருளின் ஒளியால் தானே, இந்த உலகமும், அண்ட சராசரங்களும், விளங்கித் திகழ்கிறது!

இருட்டில் ஒரு பொருள் இருக்கிறது. என்ன பொருள் என கண்டுகொள்ள இயலவில்லை. அதன்மீது ஒரு கைவிளக்கின் வெளிச்சத்தை செலுத்திப் பார்க்கிறோம், எந்த பொருள் எனத் தெரிய.
தபால்காரன் கொண்டுவந்து தந்த பெட்டிக்குள் இருக்கும் பொருள் என்னவென்று தெரியவில்லை, அதைப் பிரித்துப் பார்க்கும் வரை. பிரித்தபின் அதுவென்ன என விளங்குகிறது.
ஏற்கனவே தெரிந்த பொருளாக இருந்தாலும், தெரியாமல் இருந்தது, இப்போது தெரிந்ததாகிறது.
இப்படியாக, தெரியாமல் இருந்த ஒவ்வொன்றும் தெரியத் துவங்குகிறது, அதைப் பற்றிய அறியாமை அகன்றதும்.
ஆக, அறியாமை அகல, தெரியாப் பொருளைப் பற்றிய அறிவு சேர்கிறது, கொஞ்சம் கொஞ்சமாக.
இதற்கு எங்கே முடிவு?
எப்போது, இன்னும் மேலுமாக, அறிவதற்கு மேலும் ஏதுமில்லை என்ற நிலை எப்போது ஏற்படும்?
அந்த பரம்பொருள் இன்னவென்று அறிந்த பேரறிவினை எட்டிய நிலையில் மட்டுமே.
அதனால், அவ்வறிவிற்குப் 'பேரறிவு' எனப்பெயர். இவ்வறிவிற்கு மேல், அறியவேண்டியது ஏதுமில்லா முக்தி நிலை.

பாரதியும் சொல்லுவான்,
பல்லாயிரம் வேதங்கள் அறிவொன்றே தெய்வம் உண்டாமெனல் கேளீரோ!

Thursday, February 05, 2009

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினெட்டு

இந்தத் தொடரை சின்ன இடைவேளைக்கு அப்புறம் தொடருகிறோம். இதுவரை வந்த பகுதிகளை இங்கே பார்க்கவும்.
முதல் முறையா வந்திருக்கீங்கன்னா, ஆத்ம போதம் என்றால் என்ன, யார் எழுதியது என்கிற விவரங்களை இத்தொடரின் முதல் பகுதியில் இங்கு பார்க்கவும்.

பா 57:
எதழிவில் லாத தெதையன்றென் றன்றென்றே
வேத முடிவு விளக்கடும் - யாதொன்
றகண்டவின் பாகி யமருமது தானே
திகழும் பிரமன் தெளி.

சீர்களைப் பிரித்து:
எது அழிவில்லாதது, எதை அன்றென்று அன்றென்றே
வேத முடிவு விளக்கிடும் - யாதொன்று
அகண்ட இன்பாகி யமரும் அதுதானே
திகழும் பிரமன் தெளி.

பொருள்:
எது எப்போதும் அழிவில்லாததாய், நித்யமாய் இருக்கிறதோ,
எதை வேதங்களேல்லாம், 'இது அதுவல்ல, இது அதுவல்ல, இது அதுவல்ல,....' என அலசி, ஆராய்ந்து, முடிவாக விளக்குகிறதோ,
எந்த ஒரு பொருள், பேரின்பப் பெருவெள்ளமாய் எல்லா இடத்திலும் நிறைக்கிறதோ,
அந்தப் பொருள் தான்,
ஒளி விட்டுத் திகழும் பரப்பிரம்மம்; தெளிவாய்.

விளக்கம்:
அழிவில்லாமல், சிதைவில்லாமல், எப்போதும் முழுமையாய் இருக்கின்றதாம் பிரம்மம். அதைத் தவிர, வேறொன்று என்றில்லை என, எல்லாப் பொருளிலும், எல்லா உயிரிலும் அது இருக்கின்றது. அந்த பிரம்மத்தின் கண்களில் 'வேற்றுமை' என்பதே இல்லை. அதை விட்டு இன்னொரு பொருள் இருந்தால் தானே, வேற்றுமை பாராட்ட இயலும்?
அப்படியாக, வேறொன்று என்றில்லாமல், ஒன்றே ஒன்றாய் இருக்கிறது பிரம்மம்.

இது அதுவல்ல: 'நேதி, நேதி' - எது பிரம்மம் என்கிற கேள்விக்கு, வேதங்கள், அவற்றின் உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்ம சூத்திரம் போன்ற மறைகள், ஒவ்வொரு பொருளாக எடுத்துக்கொண்டு, இதுவல்ல பிரம்மம், இதுவல்ல பிரம்மம், என்று பிரம்மம் பற்றி அடையும் முடிவினைக் கொண்டு நாம் விளங்கிக் கொள்ளலாம்.

"அடுத்து, பிரம்மம் யாதெனச் சொல்ல, அது இதுவல்ல, இதுவல்ல."
- பிரஹதாரண்யக உபநிடதம் II, iii, 6

நேதி நேதி-யைப் பற்றி முன்பொரு ஆத்மபோதச் செய்யுளிலும் பார்த்தோமல்லவா. அதன் சுட்டி இங்கே.

தெளிவாய்: பிரம்மம் 'இன்னொரு பொருள்' என்றல்ல. தானே அப்பரம்பொருள் எனத் தெளிவாய்.
அப்படியானல், தான் தானாக இருந்துகொண்டு அப்பரம்பொருளின் பேரின்பத்தில் எத்தனை அளவு துய்க்க இயலும்? அடுத்த பா சொல்கிறது:

பா 58:
அகண்ட சுகமய வான்மாவி லற்ப
சுகத்தை யடுத்தே சுரராய்த் - திகழும்
பிரம்மாதி யேனோர் பிறங்குவரின் புற்றுத்
தராதர மாகத் தரி.

சீர்களைப் பிரித்து:
அகண்ட சுகமய ஆன்மாவில் அற்ப
சுகத்தை அடுத்தே சுரராய்த் திகழும்
பிரம்மாதி யேனோர் பிறங்குவர் இன்புற்றுத்
தராதரம் ஆகத் தரி.
(பிறங்குவர்: உயர்வடைவர்/சிறப்படைவர்;
அடுத்தே: பின் தொடர்ந்தே;
தரி: கொள்)
பொருள்:
எங்கும் அகண்டு பரவியிருக்கும், பேரின்பத்தின் சிறிய பகுதியான சுகத்தையே
பிரம்மன் போன்ற சுரர்கள் (தேவர்கள்) சுவைத்திட,
அதற்கேற்றாற்போல், அவர்கள் ஒளிவிட்டுத் திகழ்வார்கள்.
விளக்கம்:
எல்லாவற்றிலும் மேலான பிரம்மம் எங்கும் வியாபித்து இருக்க, அப்பெரிய பொருளின் சிறிய துகள் போலத்தான் - பிரம்மா, இந்திரன் முதலான தேவர்கள் ஆவர். படைப்புத் தொழிலையே நடத்தி வந்தாலும், பிரம்மனும், பரப்பிரம்மம் எனும் பெரும் பனிக்கட்டியின் சிறு நுனி போலவே ஆவர்.
"இதுவே உயர்ந்த இலக்கு, இதுவே உன்னத வெற்றி. இதுவே உயர்ந்த உலகம். இதுவே பேரின்பம். மற்ற எல்லா உயிர்களும், இதனில் சிறு துகள்களாக, அப்பேரின்பத்தில் இருந்து சிறு துளியையே பெருகிறார்கள்."
- பிரகதாரண்யக உபநிடதம், IV, iii, 32.

Saturday, December 20, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினேழு

பா 56:

எதுகுறுக்கு மேல்கீழா மெங்குநிறை வாகும்
எதுசச்சித் தின்பிரண் டிலா ததானந்தம்
நித்தமா யொன்றாய் நிகழ்வதெது வாகுமவ்
வத்து பிரம மதி.
(சீர்களைப் பிரித்து:)
எது குறுக்கு மேல் கீழாம் எங்கும் நிறைவாகும்
எது சச்சித் இன்ப இரண்டிலாத ஆனந்தம்
நித்தமாய் ஒன்றாய் நிகழ்வது எதுவாகும் அவ்
வத்து பிரமம் அதி.

பொருள்:
குறுக்கு, மேல், கீழ் என எங்கும் நிறைந்திருக்கும் எப்பொருளோ,
எது சத் எனவும், சித் எனவும், ஆனந்தம் எனவுமான பொருளோ,
எது இரண்டு என்றில்லாமல்,
எது எப்போதும் ஒன்றாகவே இருக்கிறதோ,
எது எப்போதும் ஒளிர்ந்து திகழ்கிறதோ,
அப்படிப்பட்ட பொருளே, பிரம்மம் எனக் கொள்வாய்.

விளக்கம்:
வேதங்கள் யாவும் கூறும் உண்மைப் பொருளாம், தன்னை அறிந்தார் உணர்வதாம்,
பிரம்மம் என்னும் மெய்ப்பொருள் எப்படி இருக்குமாம்?
இவ்வெண்பா சொல்லும்:
பிரம்மம் என்னும் வஸ்து, எல்லாவற்றுக்கும் மேலேயிலிருந்து, எல்லாவற்றுக்கும் கீழ் வரையும், இரண்டுக்கும் இடைப்பட்ட இடமெலாமும், இப்படியாக எல்லா இடமும், நிறைந்திருக்குமாம்.

முன்னே இருப்பதும் பிரம்மம், பின்னே இருப்பதும் பிரம்மம்,
வலப்பக்கம் இருப்பதும் பிரம்மம், இடப்பக்கம் இருப்பதும் பிரம்மம்,
கீழேயும் பிரம்மம், மேலேயும் பிரம்மம்.
இங்கே இருப்பது எல்லாமும் பிரம்மம். பிரம்மம் மட்டுமே.
-முண்டக உபநிடதம்.

அது சத்(களம்), சித் (சாதனம்), ஆனந்தம் (இலக்கு) எனவாய் இருக்கிறது. ஒரு கிரிக்கெட் விளையாட்டை எடுத்துக் கொண்டால், அதில் ஆடுகளமும் ஆட்டமும் - சத்; எல்லையில்லா பிரபஞ்சத்திலோ எல்லாமே சத்; கிரிக்கெட் ஆட பயன்படும் பந்து, மட்டை, கையுறை போன்றவை சாதனம் - ஆகவே அவை சித். அடைய வேண்டிய வெற்றியானது ஆனந்தம். இந்த மூன்றுமாய் இருக்கிறது பிரம்மம். அதவாது, அடைய வேண்டிய இலக்காகவும், அடைவதற்கான களமாகவும், அடையத் தேவையான சாதனமாகவும் இருக்கிறது.

ஜீவனாய் இருக்கும்வரை இரண்டெனத் தெரிந்தது. பிரம்ம நிலையில் எல்லாமே ஒன்றுதான். ஒன்று என எங்கெங்கும் நிகழ்வாய் திகழ்கிறது.


"அதுவும் (தெரியா பிரம்மம்) நிறைவானது, இதுவும் (தெரிந்த பிரம்மம்) நிறைவானது.
இந்த நிறை (தெரிந்த பிரம்மம்), அந்த நிறையில்(தெரியா பிரம்மம்) இருந்து தான் உருவானது.
இந்த நிறையின் முழுமை, யாதெனத் தெளிந்தபின், அந்த நிறையே இங்கும், எங்கும் நிறைந்தது."
- பிரஹதாரண்யக உபநிடதம்


சுட்டிகள்:
* சச்சிதானந்தம் பற்றி மகாபெரியவர் 'அருள்மொழி அமுதம்' தனில் சொல்வது:
"‘சத் சித் ஆனந்தம்’ என்று நாம் கேட்டிருக்கிறோம். சச்சிதானந்தம் என்று சொல்லிக்கொண்டும் இருக்கிறோம். இதற்கு அர்த்தம் என்ன என்று அநேகம் பேருக்குத் தெரிந்திருக்காது. தெரிந்திருந்தாலும் புரிந்து கொண்டிருப்பவர்கள் சில பேர்தான் இருப்பார்கள். ‘சத்’ என்பது ஒரு புறம் இருக்கட்டும். ‘சித்’ என்பது தான் ஞானம். தக்ஷிணா மூர்த்தி காட்டிக் கொண்டு இருக்கும்படியான முத்திரைக்குச் சின்முத்திரை என்று பெயர். ஆனந்தம் பொங்கி அடங்கும் போது ஞானம் பூர்ணமாக நிறைந்திருந்தால் அதுதான் சாந்தம். ஞானம் நிறைந்தவனிடம் ஆனந்தமும் நிறைந்திருக்கிறது என்று அர்த்தம். ஞானம் நிறைந்து ஆனந்தமும் நிறைந்து, அடங்கியிருக்கும் படியான தக்ஷிணாமூர்த்தி சந்நிதானத்தில்தான் அவரைப் போலவே உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொண்டு பெரியோர்கள் பஞ்சாக்ஷர ஜபம் பண்ணுவார்கள். ஜபம் பண்ணுவது தக்ஷிணாமூர்த்தி சந்நிதானம். தரிசனம் பண்ணுவது ஆனந்தக் கூத்தன் சந்நிதானம்."

* திண்ணையில் எஸ்ஸார்ஸி : வேத வன விருட்சம்:
"சத் சித் ஆனந்தம்
பிரம்மத்தை தொடக்கமாய்ப் பேசும்
சத்தும் சித்தும் வேறல்ல
அறிதலுக்கு சாட்சியே சத்
மெய்யை அறிதல்
வலி யினின்று விடுதலை
பிரம்மம் ஆனந்தக் கடல்
சித்தே ஆனந்தம்
சத் சிதா ஆனந்தம்"

Sunday, December 07, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினாறு

சென்ற சில வெண்பாக்களில், ஜீவன் முக்தரைப் பற்றியும், அவர் முக்தி அடைந்த பின், பரமனை முழுதும் அறிந்த நிலையில், அந்த பரமனும், ஜீவனும் வேறில்லா நிலைதனை அடைதலைப் பற்றியும் பார்த்தோம். தொடர்ந்து, நாம் பார்க்கப்போகிற சில பாக்களில், பரமனை எட்டிய ஜீவனின் ஆன்மா, பரமன் எப்படிப்பட்டதென அறியும் என்பது சொல்லப்படுகிறது.

பா 54:
எவ்வடை விற்பிறி தேதுமடை தாற்கின்றோ
வெவ்வின்பி னிற்பிறி தின்பின்றோ - வெவ்வறிவு
தன்னிற் பிறிதறிவு தானின்ற மோவது
தன்னைப் பிரமமெனச் சார்.
(சீர்களைப் பிரித்து)
எவ்வடைவில் பிறிது ஏதும் அடைதல் இன்றோ
எவ்வின்பினில் பிறிது இன்ப(ம்) இன்றோ - எவ்வறிவு
தன்னில் பிறிதறிவு தான் இன்றமோ அது
தன்னைப் பிரம்மம் எனச் சார்.

பொருள்:
எதை அடைந்தபின், அடைவதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எவ்வின்பத்தினை அடைந்தால், அதன் பின் அதைத்தவிர வேறொரு இன்பம் என்றில்லையோ,
எவ்வறிவானது, தான் யாரென அறிந்திடும் அறிவினைத் தந்திட, அந்த தன்னறிவு அன்றி வேறேதும் அறிய இல்லை, என்கிற நிலைதனைத் தந்திடுமோ,
அது, வேறொன்றும் இல்லை, அது தான் அன்றி வேறொன்றும் இல்லை,
அது, பிரம்மம் என அவன் சென்றடைவான்.

பா 55:

எதுகாணக் கண்டார் கேதுவுமே யின்றோ
வேதுவான பின்சன்மா மின்றோ - வேதுவறிந்த
பின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ
வானது தான்பிரம மாம்.
(சீர்களைப் பிரித்தபின்)
எதுக்காணக் கண்டார்க் ஏதுவுமே இன்றோ
எதுவானபின் சன்மா இன்றோ - எதுவறிந்த
பின்னறியத் தக்க பிறிதோர் பொருளின்றோ
ஆனது தான் பிரம்மமாம்.

பொருள்:
எதைக் கண்டபின், பார்ப்பதற்கு வேறொன்று என்பது இல்லையோ,
எதை அடைந்தபின், அதன்பின் இன்னொரு பிறப்பு என்பதில்லையோ,
எதை அறிந்தபின், அதன்பின் அறியத் தக்க பொருள் என்று வேறில்லையோ,
அப்படிப்பட்ட பொருள் தான், பிரம்மமாம்.

விளக்கம்:
எல்லோரும் ஏதோ ஒரு பொருளை அடைய, அன்றாடம் ஏதோ ஒரு முயற்சியை மேற்கொள்கிறோம். ஆனால், எதை அடைந்தாலும், அதனால் அடையும் நிறைவானது தற்காலிகமாகவே இருக்கின்றது. தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அடைதலும், நிறைவின்மையும் கூட தொடர்ந்து கொண்டே இருக்கிறது. பிறவிக்குப் பின் பிறவியிலும், இத்தேடல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது முற்றுப் பெறுவது எப்போது?
பிரம்மம், என்னும் அந்நிலைதனை அடைந்தால் மட்டுமே, தேடல் நிற்கிறது. அதன் பின், அடைவதற்கு வேறோன்றும் இல்லை என்னும் நிறைவினை தருகின்றது.
பொருள் மட்டும் இன்றி, இன்பத்தையும் தேடி அன்றாடம் அலைகின்றோம். ஆனால், கிட்டும் இன்பமெல்லாம் நிறைவினைத் தருவதில்லை. நிலையான பேரின்பம் மட்டுமே, அடைதலுக்கு வேறொரு இன்பம் தேவையில்லை என்கிற நிறைவினைத் தந்திட இயலுமாம்.
பொருளும், இன்பமும் மட்டுமல்ல, பலவற்றையும் கற்றும், கண்டும், கேட்டும், அறிகிறோம். புலன் வழி கற்கும் அறிவோ, பொருளறிவாகவே இருக்கிறது. பேரின்பம் தரும் பெரும் ஞானத்தினை, புலன்களுக்கு அப்பாற்பட்ட பேரறிவினைத் தருவதில்லை. பெரும்பாலும் கற்றலே, ஞானத்தினை அடைவதற்கு தடையாகவும் உள்ளது. (பார்க்க - கபீரின் கனிமொழிகள் : கற்றவர் படும் பாடு.) தான் யாரெனும் தன்னறிவு தந்திடும், உயர் ஞானத்தினை அடைந்திடுதல் மட்டுமே, பேரின்பம் தரும். அதுவே அடைய வேண்டிய எல்லா அறிவுகளிலும் உயர்வான ஞானம்.

அப்படிப்பட்ட பிரம்மத்தினைக் கண்டபின், காண்பதற்கு வேறொன்றுமில்லை. எல்லாமே ஒன்றாதக் தெரிவதால். தானும், அண்ட சராசரங்களும், அகில உலகமும், எல்லாமும், ஒன்றாகவே இருப்பதால், அந்த அனுபூதி நிலையில், வேறொன்று எனக் காண்பதற்கு இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மமாகவே மாறிய பின், பிறப்புச்சுழலும் அறுகிறது. மீண்டும் அல்லல் தரும் பிறப்பு என்னும் நிலை இல்லாமல் இருக்கிறது. அந்த பிரம்மத்தினை அடைந்த பின், அடைவதற்கு உகந்த பொருள் என்று ஏதுமில்லை.

Sunday, November 23, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினைந்து

பா 53:

உபாதிநா சத்த லுறுவான் முனிவ
னுபாதியில் விஷ்ணுவி னுள்ளே - யபேதமே
தோயத்திற் றோயமும் தூவிண்ணி லேவிண்ணும்
தீயிற்றீ யும்போலத் தேர்.

(சீர்களைப் பிரித்த பின்:)
உபாதி நாசத்தல் உறுவான் முனிவன்
உபாதியில் விஷ்ணுவின் உள்ளே ஏய - பேதமே
தோயத்தில் தோயமும் தூவிண்ணிலே விண்ணும்
தீயிற் தீயும்போலத் தேர்.

பொருள்:
தான் உண்மையில் யாரென தெரியாமற் செய்யும் உபாதிகளை அழித்து ஒழித்தவன், உபாதி இல்லாத, எங்கெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும், விஷ்ணுவின் உள்ளே சென்று, அதுவாகவே ஆவான். அவனுக்கும், பரமனுக்கும் வேறுபாடு ஏதும் இருக்காது - தண்ணீரில் தண்ணீர் போலவும், தூய விண்ணில் விண் போலவும், நெருப்பில் நெருப்பு போலவும், தான் இரண்டற இருப்பதை அறிந்து தெளிந்தான்.

விளக்கம்:
தன் முந்தைய வினைகள் களையப்பட்டவன், உபாதிகளையெல்லாம் இழந்து, இறுதியான நிலையினை அடையுங்கால், எல்லாமும் ஆன பரமனும், தன் ஆன்மாவும், இரண்டு என்றில்லாமல், ஒன்றாக இருப்பதை அறிவான்.

ஒரு பானை நிறைய இருந்த தண்ணீர் இருக்கையில், அந்தப் பானை உடைந்து, அதன் நீர், ஒரு பெரிய நீர்நிலையில் கலந்து விட, அந்த நீர்நிலையில் இருக்கும் தண்ணீரில், எந்தத் தண்ணீர் பானையில் இருந்த வந்த தண்ணீர், எனப் பிரித்தறிய இயலாததுபோல, பரமனில், ஜீவனின் ஆன்மா, இரண்டற இருப்பதை அறிவான்.

ஒன்றுமில்லாத பானை, ஒன்று உடைந்து போக, பானைக்குள் இருந்த பரப்பிற்கும், எங்கெங்கும் நிறைந்திருக்கும் பர வெளிக்கும், இடையே பிரிவேதும் இல்லை.

எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு, அணைந்து போக, எங்கே போனது நெருப்பு?. அணைந்த நெருப்பும், எல்லாமுமான பரமனில் கரைந்தது போல.

முக்தி என்றால் என்ன?
மீண்டும் மீண்டும் பிறப்பெடுத்து, அல்லலோ அல்லல் படும் நிலைகளில் இருந்து, சுதந்தரம் பெறும் நிலையே முக்தி என்பதாகும். பொதுவாக இரண்டு வகையில், குறிப்பிடுகிறார்கள்: ஜீவன் முக்தி - அதாவது, மனிதர் உடலில் உயிர் இருக்கும் போதே, அடையும் முக்தி நிலை. விதேக முக்தி - உடலை விடுத்தபின், அடையும் முக்தி நிலை. ஜீவன் முக்தர், உடலோடு இருப்பதனால், இன்னும் அவருக்கு, தன் ஆன்மாவும், பரமனும், இரண்டாகத் தெரியும் நிலையில் இருப்பார். ஆனால், அது உண்மையல்ல என்பதையும் அவர் அறிவார். உண்மையான இறுதி நிலை, ஒன்றான நிலை, என்பதை அவர் நன்கு அறிந்திருப்பதால், மனக் கலக்கங்கள் இல்லை. என்றாலும், அவர் பரமனின் நிலையான நிலையை அறிந்திருந்தாலும், தன் உடலைத் துறக்கும் வரையிலும், அவர் பரமனாகவே மாறுதல் நிகழாது. (உடலோடு, சேர்ந்து, மறைதல் என்னும் நிலையும் சொல்லப்படுகிறது. இந்நிலை, வேதாந்தத்தைக் காட்டிலும் சித்தாந்தத்தில் வலியுறுத்தப் படுகிறது.)

உபநிடதங்களில் இருந்து குறிப்புகள்:
"அவன் எப்போது, எல்லா தளைகளில் (கர்ம வினைகள்) இருந்து விடுபடுகிறானோ, அக்காலம் வரை, தாமதமாகின்றது. அதன் பின், அவன் முழுமை அடைகிறான்."
சாந்தோக்ய உபநிடதம் VI. xiv, 2

"அவனுக்கு, இறுதியில், எல்லா மாயைகளும், அவற்றால் ஏற்படும் எல்லா குறைபாடுகளும் முற்றுப்பெறுகின்றன."
ஸ்வேதஸ்வதார உபநிடதம் 1.10

"எப்படி, நதிகளெல்லாம், கடலினில் கலந்திடுகையில், தம், நாம, உருவங்களை இழக்கின்றதோ, அது போல, தன்னறிவு பெற்றவன், பரமனை அடைகையில், தன் நாம, உருவங்களை இழக்கிறான்."
முண்டக உபநிடதம் III. ii.8


இப்போது, இரண்டு பகுதிகளுக்கு முன்னால், கே.ஆர்.எஸ் எழுப்பிய வினாக்களை, திரும்பிப் பார்க்கலாமா?

1. இந்த நிலையில் அவர்கள் வினைகள் அனைத்தும் ஓய்ந்திருக்குமா? சஞ்சித/பிராரப்தங்கள் முடிந்து விட்டிருக்குமா?
ஜீவன் முக்தருக்கு, முழுமையாக எல்லா வினைகளும் முடிந்திருக்காவிட்டாலும், உபாதிகளால் குறைபாடுகள் இல்லை. அவற்றால், தான் இரண்டாகத் தெரிவதை நன்கறிந்திருப்பார்.

2. உலகியலின் இயற்கைத் தேவைகளை (உண்பது/உறங்குவது) கடந்து விட்டிருப்பார்களா?
ஜீவன் முக்தருக்கு, உண்பது, உறங்குவது போன்ற உபாதிகள் முழுமையாக முடிவடையாவிட்டாலும், அவற்றால், யாதொரு குறைபாடும் இல்லை.

3. ஜீவன் முக்தியில் இருப்பவர், விதேஹ முக்தி எப்படி எப்போது பெறுவார் என்பது எப்படி தீர்மானிக்கப்படும்? ஜீவன் முக்தரே தீர்மானித்துக் கொள்வரா?
எல்லா கர்ம வினைகளும் முடிந்த பின்னால், எல்லா உபதிகளையும் இழந்து, தானும், பரமனும் வேறல்ல என்பது தெளிந்து, அந்த பரமனை அடைவார்.

Monday, November 17, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதிநான்கு

சென்ற பகுதியில் மறுமொழிகளால் நிறைத்தருளிய கண்ணபிரான் இரவிசங்கருக்கு வந்தனங்கள் பலப்பல. ஜீவன் முக்தரைப் பற்றி அறிந்திட, அவர் எழுப்பிய வினாக்கள், ஆத்ம போதத்தில், அடுத்து வரும் செய்யுள்களுக்கு, முன்னோடியாய் அமைந்திருக்கின்றன என்றால், வியப்பும் மேலிடுகிறது. இப்போது பார்க்கப்போகிற இரண்டு பாக்களுமே, ஜீவன் முக்தரைப் பற்றியவைதான்!

இந்தப்பாடல், ஜீவன் முக்தன் ஒருவன், எப்படி உலகத்தில் வாழ்வான் எனச் சொல்கிறது:
பா 51:
அனித்தவெளி யின்பிச்சை யற்றானா யான்மா
தானின்பித் திருத்தி தன்னையுற் - றனிசமுன்
தன்னொளி யாற்குடம் தன்னுள் விளக்கெனத்
தன்னுள்ளே தானொளிர்வன் றான்.
(சீர்களைப் பிரித்தபின்:)
அனித்தவெளியில் இன்ப இச்சை அற்றனாய் ஆன்மா
தான் இன்பித்தில் இருத்தி தன்னையுற்ற நிஜமுன்
தன்னொளியால் குடம் தன்னுள் விளக்கெனத்
தன்னுள்ளே தான் ஒளிர்வன் தான்.

பொருள்:
தன்னின் வெளியே இருக்கும் உலகத்தின் பால் ஏற்படக்கூடிய இச்சை அல்லது விருப்பம் தீர்ந்திருக்க,
அவ்விச்சைகளெல்லாம், இப்போது தன் ஆன்மாவின் மேல் அன்பாய் மாறியிருக்க,
அந்த 'தான்'(ஆன்மா) தரும் அணையா ஒளியால்,
குடத்தினுள் வைத்த விளக்குபோல, அவன், அவ்வான்மாவால் ஒளிர்வான்.

விளக்கம்:
பரமனின் ஒரு பகுதியாக ஒளிரும், விகாரமேற்படா ஆன்மா, எப்போதும் ஒவ்வொருவர் உள்ளும் ஒளிர்ந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால், ஜீவன் எப்போதுமே, தன்னின் வெளியிலேயே தான் கவனம் செலுத்தி வருவதால், தன் அக ஒளியை தானே கவனிக்க இயலுவதில்லை. ஜீவன் முக்தன், தன் உபாதிகளை எல்லாம் இழந்து வருவதனால், அவனால், வெளி உலகத்தின் ஈடுபாடுகளை புறக்கணித்து, தன் அகவொளியினை உணர இயல்கிறது.
வெளி இன்பங்களில் சிதறடிக்கும் உபாதிகளை இழந்தவன், தன் ஆன்மாவின் பெருமையைப் போற்றும் அன்பில் திளைத்திட,
அவனின் அகங்காரமிலாத மனதில், ஒளிர்ந்திடும் ஒளியினை உணர, அந்த ஒளியாகவே மாறிட, அம்மனதும் விழைகிறது.
எப்படி, கண்ணாடிக் குடத்தினுள், ஒளிதரும் விளக்கினை வைத்துவிட்டு, வெளியில் இருந்து பார்த்தால், அக்குடமே, ஒளியுடன் திகழ்கிறதோ, அதுபோல, அந்த ஜீவனும் ஒளிர்வான்.

கீதையில் கண்ணனும் உரைப்பான்: (2.55):
பார்த்தா, எப்போதும் தன்னுடைய மனதில் எழும் ஆசைகளைத் இழந்து, தனக்குள் மகிழ்ச்சியுடன் ஒருவன் இருப்பானேயானால், அவன் நிலையான ஞானம் அடைந்தவன் எனக் கூறப்படுவான்.

பா 52:
உபாதியுற் றானேனு மொட்டாவிண் போலவ்
உபாதித்தரு மங்களொ டொட்டா - னுபாதியில்லான்
முற்றறிவ னெனுமுனி மூடனென வாயுபோற்
பற்றறச் சஞ்சரிப் பான்.
(சீர்களைப் பிரித்த பின்:)
உபாதியுற்றா னேனும் ஒட்டா விண் போல
உபாதி தரும் அங்களோடு ஒட்டான் - உபாதியில்லான்
முற்றறிவன் எனும் முனி, மூடன் என வாயுபோல்
பற்று அறச் சஞ்சரிப் பான்.

பொருள்:
உபாதிகளைக் கொண்டவனாய் இருப்பினும், ஜீவன் முக்தன், விண்ணைப்போல, அந்த உபாதிகள் தரும் குறைபாடுகளோடு, ஒட்டாமல் இருப்பான். அவைகளால், அவனுக்கு மாறுதல்கள் ஏதும் ஏற்படா. உபாதிகள் முற்றிலும் அறும் வரை, வாயுபோல இப்பூவுலகில் ஒட்டாமல் சஞ்சரித்துக் கொண்டு இருப்பான்.

விளக்கம்:
உபாதி : எவையெல்லாம், நான், எனது, என்று ஜீவனை, நினைக்க வைக்கிறதோ, அவையெல்லாம் உபாதிகளாம். அதாவது இந்த உடல், அதன் அவையங்கள், நம் எண்ணம், நம் மனம், இவையும், இன்ன பிறவற்றின் விளைவால், ஆவதெல்லாமே, என்னால் எனக் கொள்கிறோம். நம்மோடு பிறந்த இவ் உபாதிகளை ஒவ்வொன்றாக இழக்க வேண்டும். எல்லா உபாதியையும் கழட்டி விட்ட பின், உபாதி இல்லா ஆன்மா - அது தான் தூய்மையான சச்சிதானந்த நிலையாகும்.

ஜீவன் முக்தனுக்கு, இன்னும் உபாதிகள் முழுமையாக முடிவடையவில்லை. அவற்றுக்கு அவன் பார்வையாளனாக இருப்பினும், அவைகளோடு, தாமரை இலைத் தண்ணீர் போல, ஒட்டாமல் அவன் இருப்பான். உபாதிகளால் ஜீவனில் ஏற்படும் குறைபாடுகளான, மறு பிறப்பு, நிலையிலாமை, இறப்பு போன்றவை ஜீவன் முக்தனுக்கு இல்லை.

விண்ணைப்போல : பொதுவாக வானம், வெளிர் நீல நிறத்தில் தெரிகிறது. சில நேரம், கருமைத் தூசிகளாலோ, அல்லது கரும் மேகங்களாலோ, கருமையாகவும் தெரிகிறது. ஆனால், ஆகாயத்திற்கு, இதனால், பாதிப்போ, அல்லது மாற்றமோ, இல்லையே. விண்ணுக்கும், மண்ணுக்கும் இடையே இருக்கும் பார்வையில் தான் பிழை. விண்ணுக்கேதும் குறை இல்லை. அதுபோல, ஜீவன் முக்தர், உண்ணுவது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட்டாலும், அதனால், அவர்களுக்கேதும் குறைவில்லை.

மூடன்: ஜீவன் முக்தர், யார் என்ன சொன்னாலும், போற்றினாலும் சரி, தூற்றினாலும் சரி, அவர், யாதொரு மாறுதலும் அதனால் அடையாமல், அமைதியாக அதைக் கேட்டுக்கொள்வார் - கிட்டத்தட்ட மூடன் போல. எல்லாவற்றில் அவர் பிரம்மத்தினையே பார்ப்பதால், தனக்காக, ஏதையும் செய்ய இயலார்.

மேலும்:
ஜீவன் முக்தனுக்கு, பிராப்த கர்ம வினைகள், இன்னமும் இருந்திடலாம் என்றும், இவ்வினைகள் முழுவதும் முடியும் வரை, நிலையான, இறுதியான முக்தி அடைய இயலாது என்றும் சிலர் கருதுகிறார்கள். இன்னும் சிலரோ, ஜீவன் முக்தி என்னும் நிலையே, இறுதியான நிலை. இந்நிலையிலேயே, எல்லா வினைகளும் அற்று இருப்பார்கள் என்கிறார்கள். இப்படி ஏதும், பொதுமைப்படுத்தாமல், ஒவ்வொரு ஞானிக்கும், ஒவ்வொரு விதமாக, இறைவனின் திரு உளத்திற்கு ஏற்றால் போல் அவ்வாறு அமைந்தது எனக் கொள்ளவே வேண்டும். எதுவாக இருப்பினும், உபாதிகளை இழந்து, எல்லாமும் ஆன பரமனை அடைந்து, துவங்கிய இடத்தை, மீண்டும் அடைவதுதான் ஜீவனின் நோக்கமாக இருக்க வேண்டும்.

அடுத்த பகுதியில், ஜீவன் முக்தன் பூவுலகை அகலும் இறுதியான நிலையினையும், அவன் பரமனை அடைவதைப் பற்றியும், ஆத்ம போதம் செல்லுவதைப் பார்ப்போம்.

Friday, November 14, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதிமூன்று

பா 49:
சீவன் முக்தன் வித்வான் தேருவதன் முன் தன்னை
மேவும் உபாதிகுணம் விட்டுடனே - மேவுவான்
தன்னுரு சச்சித் இன்பத் தாங்கிடும் வண்டினுருத்
தன்னையுறல் போலத் தறி.

சீவன் முக்தன், அவன் ஆன்மஞானி ஆவதற்கு முன்னம் இருந்த உபாதிகளை கைவிட்ட உடனேயே, சச்சிதானந்த நிலை தனை அடைவான். வண்டு தன், புழு போன்ற உருவத்தினை விட்டு, பூச்சி வடிவத்தை அடைவதைப்போல.

ஜீவன் முக்தர் - என அழைக்கப்படுபவர், முக்தி என்னும் நிலையினை அடைந்த பின்னரும், உலக நன்மை பொருட்டு, தம் பூவுடலை துறக்காமல் இருப்பராவர். எனினும், அவருக்கு, அவருடைய ஞானத்தினால், அவர் சச்சிதானந்த சொருபீயாக இருப்பதினால், அவரே பிரம்மமாகவும் இருப்பவர். அவருக்கு முந்தைய உபாதிகள் ஏதும் அப்போது இல்லை. அதாவது, அவர் அந்நிலையை எட்டுமுன், அவருக்கு இருந்த, உடல், புலன் உணர்வுகள், மனம், போன்ற உபாதிகள் இல்லை.
எப்படி தங்கள் புழு போன்ற தோற்றத்தில் இருந்து, பறக்கும் பூச்சி போன்ற தோற்றத்திற்கு மாறிட, தங்கள் தோற்றத்தை, வண்டு போன்ற பூச்சிகள் இழக்கின்றனவோ, அதைப்போல.

பா 50:
மோகக் கடல் கடந்து மூளாசை கோபமுதல்
ஆகும் அரக்கர் அறக்கொன்று - யோகி
அமைதியொடு கூடியான் அவ்வின்பத்
தமைந்து ஒளிர்வானென்றே அறி.

மோகமெனும் கடலினைக் கடந்து, ஆசை, கோபம் எனும் அரக்கர்களைக் கொன்றபின், யோகியானவன், அமைதி என்னும் சாந்த நிலையினை அடைந்து, அது தரும் பேரின்ப நிலையில் ஒளிர்வான்.

மோகம், ஆசை, கோபம் என்னும் மூன்று அரக்கரையும் வெல்லுதல் யோகியின் முதற்செயலாகும். அவ்வாறு வென்றவன், எளிதாக, தான் யாரென்று அறியாமற் மறைக்கும் மாயைதனை வெல்வான். அறியாமை அகன்றால், பின் இனியெல்லாம் ஞானமே அல்லவோ. அங்கு, அமைதியைத் தழுவிதல் என்பது, "சும்மா இரு சொல்லற", என்பதைச் சொல்லுகிறதோ! அந்நிலையில், நான் யார் என வினவிட, அவ்வினவலின் தோன்றலின் ஆதாரத்தினை ஆராய்ந்திட, கிட்டாதோ யாதும்!.

(கடல் கடந்து, அரக்கரைக் கொன்று, பிரிந்த மனைவியொடு சேர்ந்து, ஒளிர்ந்தான் இராமனும்!.)

இந்தத் தொடரில், இரமண மகரிஷி அவர்கள், வெண்பாக்களாய் வடித்த, ஆத்மபோதம் தனைப் பார்த்து வருகிறோம். அடியேனுக்குப் புரிந்த வரையில், செய்யுட்களைப் பிரித்துப் பொருள் தேடி வருகிறேன். பிழைகளைச் சுட்டினால், திருத்திட ஏதுவாய் இருக்கும். இதுவரை வந்த பகுதிகளை இங்கே காணலாம்.

Monday, September 15, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பனிரெண்டு

ஆத்ம போதம் பா 47:
நன்று தனையறிவின் ஞானியாம் யோகியும்
ஒன்றுமெலான் தன்னில் உறுவதை - ஒன்றான
தானெல்லாமாய் உளதை தன்ஞானக் கண்ணினாற்றான்
காண்பான் என்றே தறி.
~~~
உண்மையாகவே தான் யார் என அறியும் யோகியும், தன்னில் தோன்றும் பேரின்பத்தை அறியுங்கால்,
எல்லாப் பொருட்களும், எல்லா பெயர்களும், எல்லா வடிவங்களும், இறுதியில் ஒன்றே என, ஒன்றாக தன்னில் வந்து இணைவதைக் காண்பான்.
அவனைத்தவிர வேறொரு பொருளோ, உயிரோ எதும் இல்லை என்பதை தன் ஞானக் கண்ணால் காண்பான்.
~~~
இதையே, வள்ளலார், பதினொன்றாம் திருஅருட்பாவில் "நாம்பிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை..." என்பார்.
~~~
தன்னைத்தவிர வேறொருவரையும் காண இயலாத ஞானியால் எப்படி இன்னொருவரிடம் போய், தான் கண்டதைச் சொல்ல இயலும்? கண்டவர் விண்டிலார் அல்லவா!.


ஆத்ம போதம் பா 48:
ஆன்மாவே இவ்வுலகமெல்லாம் ஆகும் அற்பமும்
ஆன்மாவுக்கு அன்னியமாய் இல்லை - ஆன்மாவாய்க்
காண்பன் எல்லாமுங் கடாதிகள் மண்ணின்வேறாய்க்
காண்பதும் உண்டோ கழறு.
(கடாதிகள்: கடம் போன்ற மண்பாண்டங்கள்)

இவ்வுலகும், எவ்வுலகும், அண்ட சராசரமும், இவ்வான்மாவேயாகும்.
மிக மிக நுண்ணிய அணுவும், ஆன்மாவில் இருந்து வேறில்லை.
- இப்படி, எல்லாமும் ஆன்மாவாய்க் காண்பவனுக்கு எப்படி எல்லாம் ஒன்றாய் இருக்கும் என்றால்:
மண்பானை போன்ற மண்ணாலான பாண்டங்களில், மண்ணைத் தவிர வேறொன்றும் இல்லாமல் இருக்கிறதோ அதுபோல.
~~~
இதைப்போலவே, கபீரும்: மலையும் கடுகும், அவனுக்குள் அடக்கம் எனச்சொல்லியிருப்பதை,
திரு.கபீரன்பன் இங்கு குறிப்பிட்டிருப்பதை நினைவு கூர்கிறேன்.
~~~
இவ்வுலகம், அவ்வுலகம் என்றெல்லாம் வெவ்வேறாய் காண்பதே கானல் நீர்போலத்தான். கண்முன் தோன்றும் தோற்ற மயக்கங்கள் தான். வெவ்வேறு வடிவங்களில் காண்பது தற்காலிகமானது தான். அதன் தற்காலிகத் தன்மையிலும், அதன் மெய்ப்பொருள் வேறொன்றாய் இல்லை. பானையில் இருக்கும் சுட்ட மண்ணும், மண்ணாய்த் தான் இருக்கிறது. பானையின் வடிவம் மட்டுமே வேறு. அந்த வடிவம் போனபின், அந்தப் பானையும் மண் தானே.
பிரம்மம் இரண்டு வழிகளில் இருப்பதாக அறிகிறோம். ஒன்று விகாரப்பட்டது. இன்னொன்று விகாரப்படாதது. இந்த பிரபஞ்சம், விகாரப்படாததற்கான அடையாளம். ஜீவனோ, விகாரப்பட்டதற்கான அடையாளம் - மண் கடமாவதும் - அந்த கடம், மீண்டும் மண்ணாவதும் அதன் சுழற்சியில் அடங்கிடும்.
~~~
இதுவரை வந்த ஆத்ம போதம் பகுதிகளின் தொகுப்பு இங்கே.

Wednesday, August 13, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பதினொன்று

இரமண மகரிஷி வெண்பாக்களாய் வடித்து வைத்த ஆத்மபோதம்:
முன்னுரை இங்கே.
இதுவரை நாம் பார்த்த பகுதிகள் இங்கே.

நெடுநாள் கழித்து, ஆத்மபோதம் படிப்பதை தொடரலாமா?

பா 45:
பிரம்மத்திற் சீவன் பிராந்தியாற் கட்டை
புருடன்போற் கற்பிதன் பொய்யாம் - உருவத்தின்
தத்துவம் யாதென்று தானுணரின் அவ்வுருவம்
வத்துவா காது மதி.
(வத்து - வஸ்து)

இந்த ஜீவனை எல்லா செயல்களுக்கும் மூலமான பிரம்மம் என இறுமாப்பு கொண்டு, 'நான்', 'எனது', என்ற பொய்யான மயக்கத்தில் ஜீவனை பிரம்மமாகக் கொள்வது, வைகறையில் தொலைவில் தெரியும் கட்டை மரத்தைப் பார்த்து அங்கு யாரோ ஒரு மனிதன்தான் இருக்கிறான் என்பதான பொய்யான தோற்ற மயக்கத்தில் ஏமாறுவது போன்றதாகும். இந்த ஜீவன் இருக்கும் வரை அது பிரம்மமாகாது. பிரம்மமானது, வெளியில் இருந்து பார்த்துக்கொண்டே இருக்கும் பார்வையாளன். பார்வையாளனும், பார்க்கப்படும் பொருளும் வெவ்வேறாக இருந்தால்தானே அதனால் கவனிக்க இயலும்?. ஆன்மாவானது, உருவத்தின் உண்மையான முழுமையான தத்துவம் யாதென்று உணர்ந்தால், அது யாதொரு உருவமும் கொண்டிருக்காது என அறிவாய்.
ஜீவனின் இயற்கையானது, அறியாமல் இருக்கும் ஆன்மாவாகும். அந்த ஆன்மா, 'தத்வமஸி (அதுவே நான்)' போன்ற மகாவாக்கியங்களை ஓதுவதன் மூலமாக பிரம்மத்தினை அறிந்துணர, அதன் அறியாமையும், அது கொண்டிருக்கும் ஜீவன் என்னும் உருவமும் அழிந்திடும்.

திருநாவுக்கரசர் தேவாரம் - நான்காம் திருமுறை 31.7 (திருக்கடவூர் வீரட்டம்)
மாயத்தை யறிய மாட்டேன் மையல்கொண் மனத்த னாகிப்
பேயொத்துக் கூகை யானேன் பிஞ்ஞகா பிறப்பொன் றில்லீ
நேயத்தா னினைய மாட்டே னீதனேன் நீசனே னான்
காயத்தைக் கழிக்க மாட்டேன் கடவூர்வீ ரட்ட னீரே.

காயத்தைக் கழிக்காமல் மாயத்தை, பொய்ப்பொருள் தரும் மையலை, வெல்ல இயலாமல், மெய்ப்பொருளை நேயத்தோடு தேடி அறிய இயலாமல் இருக்கின்றேனே!

அடுத்த வெண்பாவில், அந்த பிரம்ம ஞானம் என்ன செய்ய வல்லது என்பதைச் சொல்லுகிறார்:

பா 46:
தத்வசொரூப அனுபூதி ஆற்றான் உதி
உத்தம க்யானம் உடனேயாம் மித்தைய்யா
நானெனதெனக் க்யான நசிப்புக்குன் திக்பிரமை
பானு உதயத்தெனவே பார்.

ஆற்றான் - வலிமையில்லாதவன்
பானு - சூரியன்

இந்த செயல் உடனுக்குடன் நிகழ்வது.
ஆன்ம வலிமையில்லாதவனுக்கு தன்னறிவை, அனுபூதியை, எட்டிடும் போது,
தான் யார்? என்கிற பேரறிவை அடைந்த உடனேயே, 'நான்', 'எனது' என்கிற எண்ணங்களெல்லாம் நசிந்து நொடிந்து போகும். எப்படி சூரியன் உதித்தவுடன், எந்த திசை எந்தப்பக்கம் என்னும் குழப்பம் விலகிடுமோ அதைப்போல.

நான், எனது எனும் எண்ணங்கள் ஜீவனில் தோன்றுவது இயற்கையானது. அதுபோல, திசைக் குழப்பமோ, மரத்தை மனிதனாகக் கொள்வதோ, கயிறை அரவமாகக் கொள்வதோ - இவையெல்லாமே, ஜீவனில் தோன்றும் இயற்கையான குழப்பங்கள். இவையெல்லாம், ஆதவன் எழுந்தவுடம் விலகிடும் இருள் போல, சச்சிதானந்த பேரறிவு ஜீவனில் விளைந்திட்ட உடனேயே விலகிடுமாம்.

Monday, February 11, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி பத்து

பா 44:

ஆன்மாவெப் போதும் அடைந்துளதே யானாலுன்

தான்மடமை யாலடையா தாயமரு - மான்மடிய

வெய்தப்பெற் றாற்போ லிங்குந்தன் கண்டவணி

யெய்தப்பெற் றாற்போல வே.


கண்டவணி: கண்டம் + அணி = கழுத்தில் அணியும் அணிகலன் - கழுத்து மாலை / நகை
விளக்கம்:
ஆன்மா எப்போதுமே எல்லா இடத்திலேயும் அடைந்துள்ளதாகவும், எல்லா இடத்திலேயும் நிறைந்துள்ளதாகவும் இருந்தாலும்,
தன் அறியாமை என்னும் மடமையினால் தன் உண்மை நிலையை அடையாமல் இருக்கின்றது. நான் இந்த உடல் என்கிறது அந்தப் பேதை.

ஒருவர் கழுத்தில் சிறியதாய் விலை உயர்ந்த அணிகலன் அணிந்திருக்கிறார். ஒரு சமயம் அது தொலைந்துவிட்டது என்கிற எண்ணத்தில் எல்லா இடத்திலும் தேடிக்கொண்டு இருக்கிறார். திடீரென, அந்த நகை வேறெங்கும் இல்லை, தன் கழுத்தில் தான் உள்ளது என உணர்ந்தால், அவர் எப்படி நிம்மதி அடைவாரோ, அது போல,

தன் அறியாமை மடிந்தாலோ, தனக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தது போல உணர்வார். ஆன்மாவின் உண்மையான சொரூபம் எப்போதும் பிரகாசித்து ஒளிர்ந்து கொண்டே இருந்தாலும், அறியாமையினால், அதனை அறியாமல் இருக்கின்றார்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Sunday, February 10, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி ஒன்பது - அகலும் மடமை

பா 42:

ஆன்மா வெனும் அவ்வரணியில் இவ்விதம்

ஆன்மத் தியான வகமதனன் - தான்முயன்று

சந்ததஞ் செய்தலாற் சார்ஞானத்தீ மடமையி

இந்தனமெல்லாம் எரிக்கு மே.


அரணி : தீக்கடை கோல் - குச்சிபோன்ற இந்த கோல் தனை வேகமாக உரசி தீ மூட்டுவர்.
இந்தனம் : விறகு

விளக்கம்:
ஞானத்தீயானது அறியாமை என்னும் மடமையை எரித்திடுமாம்.
எதைப் போல?
தீக்கிடை கோல் கொண்டு விறகில் உரசி உரசி, சிறுபொறியின் மூலம் கிளப்பப்படும் தீ போல.
எவ்வாறு?
தொடர்ந்து முயற்சியுடன், உராய்வு விசையினைத் தருவதன் மூலமாக.
அதுபோல,
ஆன்மாவெனும் கோல் கொண்டு தொடர்ந்து தளராத முயற்சியுடன் உள்ளார்ந்து தியானம் செய்யச் செய்ய -
என்னவாகும்?
சிறு பொறி மூட்டும் ஞானத்தீ கனன்று கொழுந்து விட்டு எரியும்.
கூடவே, ஆன்மாவை பிரித்து வைத்திருக்கும் அறியாமை எரிந்து போகும்.
பிறகென்ன?
ஆன்மா தன் தனித்ததல்ல என அறிய, பின் எல்லாம் பேரின்பமயமே.

பா 43:

அருணனாலே அல் அகலுதல் போல்முன்

மரும் அறிவால் அம் மடமை இரியவே

பொங்கும் ஆன்மா பரிபூரண மாகவே

பொங்கும் ஆதித்தனைப் போல்.


அல் : இரவு
இரிதல் : தேய்ந்து அழிதல்

விளக்கம்:
அருணனின் வருகையால் இரவென்னும் இருள் அகலுதல் போல்,
ஞானமென்னும் அறிவின் வருகையால் அறியாமை என்னும் மடமை தேய்ந்து மறையும்.
மேலும், பேரறிவினால், ஆன்மா பொங்கி நிறைந்திடும், பரிபூரணமாக நிறைத்திடும்.
பொங்கிடும் ஆதவனின் கதிர்கள், இருள் நிறைந்திருந்த இடத்திலெல்லாம் பரவி நிறைப்பது போல்.

சூரியன் - பிரம்மத்தினைப்போல் எப்போதும் தானாகவே ஒளிர்ந்து கொண்டு இருக்கிறது.
அறியாமை அழிந்தவுடன், ஆன்மா தன் உண்மையான சொரூபத்தினை தானாக உணர்ந்திடும். அதற்கு வேறெந்த பயிற்சியும் தேவையில்லை. வேறொருவரின் துணையும் தேவயில்லை.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Sunday, February 03, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி எட்டு

பா 39:

புத்திமான் காணும் பொருள் எவையும் ஆன்மாவிற்

புத்தியால் ஒன்றல் புரிவித்தே - சுத்தமாம்

விண்ணென வொன்றாய் விளங்கிடு மான்மாவை

யெண்ணுக வெப்போது மே.

விளக்கம்:
தான் காணும் பொருள் யாவற்றிலும், தன் அறிவினைக் கொண்டு ஆன்மாவில் இணைதலைச் செய்து காட்டுவர் உயர் ஞானம் பெற்றார்.
மேலும் அவர்கள் எப்போதும் ஆன்மாவை - சுத்தமான - மேகங்களற்ற ஒளிர் விடும் வெளிர் வானத்துக்கு ஒப்பாகக் கொள்வர்.
--------------------------------------------------------------------------------

இந்த உலகத்தில் நாம் அறிவால் உணரும் அனைத்து உணர்வுகளும் சுயத்தின் சார்புடையவையாகவே இருக்கின்றன. எனக்கு பரிசு கிடைத்துவிட்டது, அல்லது என்னால் ஏதும் இயலவில்லை என்பது போல - எல்லாமே நான், எனது என்கிற உணர்வின் அடிப்படையினால். இது தாம்புக்கயிற்றைக் கண்டு பாம்பென அலறும் தோற்ற மயக்கத்தை ஒத்தது. பார்க்கும் தோற்றங்களுக்கு உண்மையான அடிப்படை என்ன? சுயத்தில், நான் எனது என்று தெரிவதெல்லாம் எதன் பிம்மம்? ஆன்மாவெனும் கண்ணாடியில் தெரிவது பிம்பம் எனில், ஏதோ ஒரு மூலப் பொருள் இருக்க வேண்டுமே? அந்தப் மூலப் பொருளென்ன? - என்ற கேள்விகள் சுயத்தில் எழுந்திட அறிவெனும் சுடரின் வெளிச்சத்தில் சுட்டுக் கருகாதோ அறியாமை இருள்.

காணும் பொருள் யாவற்றிலும் :
"பார்க்கும் இடங்களெல்லாம் நந்தலாலா..."
போன்ற அமர வரிகளை நினைவில் கொள்க.

எல்லா இடங்களிலும் நிறைந்திருக்கும் பரம்பொருளை உணர்ந்தவன் எப்படி இருப்பான்?
அடுத்த பா சொல்கிறது:

பா 40:

உள்ள துணர் தோனுருவம் வருண முத

லுள்ள மயல்கள் ஒருங்கொழித் - துள்ளான்

திகழ்பரி பூரபோன்ற சித்தானந்தன் தானாத்

திகழ்ந்திடுவ நாளுந் தெளி.

விளக்கம்:
எங்கும் நிறை பரமனின் 'இருப்பை' உணர்ந்தவன்,
பல்வேறு உருவங்கள் மற்றும் நாமங்களில் உள்ள வேறுபாட்டை அழித்தொழித்தவனாய் இருப்பான்.
தனக்குள்ளே இருப்பவனை தினம் தினமும், தெளிவாய் ஒளிவிடும், எங்கும் நிறை சித் மற்றும் ஆனந்தமாக,
உருவங்களுக்கெல்லாம் அறிவானதாக உணர்வான்.

மேலும், அடுத்த பாவில்:

பா 41:

அறிவான் அறிவோடு அறிபடுவ பேத

முறுபரம் ஆன்மாவி லுறாதே - அறிவு

இன்புருவாய் ஒன்றாய் அஃதுறுவதன் ஆற்றான்

உருவாலே தானொளிருமொரு மோர்.

விளக்கம்:
பிரம்மத்தினைப் பற்றி அறியும் ஞான அறிவுக்கும், (Knowledge)
அந்த அறிவால் அறியப்படும் பிரம்மத்திற்கும் இடையே, (object of the Knowledge)
வேறுபாடு ஏதும், பரமன் தன்னில் இருப்பதை அறிந்ததொரு ஆன்மாவில் ஏற்படாது.
ஏனெனில், அந்தப் பரமன், அறிவு மற்றும் ஆனந்தத்தின் உருவாய், ன்றாய்,
இருப்பதால், அந்த ஆன்மா சுடர் விட்டு தானாக ஒளிர்ந்து கொண்டு மட்டும் இருக்கிறது.

----------------------------------------------------------------------------------
இந்த நிலையினை - நிர்விகல்ப சமாதி நிலை என்பர். இந்த நிலையின் பரமனுடன் இரண்டறக் கலந்து இருக்கும் ஆன்மாவிற்கு, ஒன்று, ஒன்றென, எல்லாமே ஒன்றாக மட்டும் தெரியுமாம்.
இதற்கு முந்தைய நிலையான - சவிகல்ப சமாதி நிலையில், பரமனுக்கும் தன் ஆன்மாவிற்கும் உள்ள வேறுபாட்டினை ஆன்மாவால் உணர இயலும் என்றும் சொல்வர்.


---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Saturday, February 02, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி ஏழு

பா 37:

நிரந்தரம் இவ்வாறு நிகழ்த்தப்படும் அப்

பிரம்மமே யான் அவனென்னும் உறுதி

அழிக்கும் அறியாமை அலைவுகளை நோய்கள்

ஒழிக்கும் இரசாயனம் ஒத்து.


விளக்கம்:
யானே அவன் - யானே பிரம்மம் என்று கொள்ளும் அந்த அசைக்கமுடியாத உறுதியினால்
சத்-சித்தினில் தொடர்ந்து நிரந்தரமாய் தெரியும் ஒளியின் பிம்பம்.
எப்படி இரசாயன மருந்தினை உட்கொண்ட உடன் அது தணிக்கும் நோய்கள் அது அழிப்பது போல,
அறியாமையினால் ஏற்படும் தடுமாற்றங்களை அந்த உறுதி அழித்திடுமாம்.

-------------------------------------------------------------------------------

உறுதி என்கிற சொல்லாடலை கவனிக்கவும்! (நம்பிக்கை மட்டுமல்ல, உறுதி, அசைக்க முடியாத உறுதி).
இரசாயனம் - பித்தம் தெளிய மருந்தொன்று இருக்குது, பேரின்பம் அன்றுள்ளே. மற்ற மருந்துகள் உள்ளுக்குத் தின்றாலும் வல்லே வல்லே என்றே...

நிரந்தரமாய் நிகழ்த்தப்படும்: - தொடர்ந்து ஒரு ஆன்மீக சாதகன் யோகத்தினில் ஆழ்ந்து தன்னைப் பார்த்துக் கொண்டே இருக்கிற பிரம்மத்தினை தொடர்ந்து திரும்பிப் பார்த்துக் கொண்டே இருப்பானேயானால், அந்த பிரம்மத்தின் பிம்பத்தினை தன் அகத்தில் திகழ்வதனைக் காணுவான்.

ஒரு ஆன்மீக சாதகன் எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று அடுத்த பா சொல்கிறது.

பா 38:
ஏகாந்த தேசத் திருந்தாசையின்றி வெளி

போகாது வென்று பொறிகளை - ஏகமா

அந்தமி லான்மாவை அன்னியமில்(லா) புந்தியானாய்ச்

சிந்திக்க வேண்டுதன் தெரி.
விளக்கம்:
ஏனையவரின் அருகாமையில்லாத தனியானதொரு இடத்தில்,
ஆசைகள் ஏதுமில்லாமல்,
மனது அகத்தை விட்டு வெளியே போகாது கட்டுப்படுத்தி,
ஐந்து புலன்களையும் வென்று,
முடிவில்லாத ஆன்மாவில் இடராத கவனத்தை நிறுத்தி,
தன்னை விட்டு வெளியே இல்லாத உயர் ஞானத்தினை அடைய,
இரண்டென்றில்லாமல் ஒன்றாய் (ஏகமாய்) ஆன்மாவைக் கருதி தியானிக்க வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Wednesday, January 30, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி ஆறு

பா 35:

ஆகாயம் போல அகிலத்தினுள் வெளியான்

சாகாதான் சர்வ சமன் சித்தன் என்றேகாதி

யாவட்றும் பற்றற்றான் என்றும் அமலன் சலியான்

அவன் நானென்றே அறி.
விளக்கம்:

உள்ளேயும், வெளியேயும் எங்கெங்கும் பரவி இருக்கும் அண்ட வெளி போலானவன் வன்.

சாகாதான் - இறப்பில்லான்.
சர்வ சமன் - எல்லாவற்றிலும் சமமாக இருப்பவன்.
சித்தன் - விட்டு விடுதலை ஆகி நிற்பவன்.

உடல் தொடங்கி எல்லாவற்றிலும் ஒட்டுதல் அற்றவன் வன்.

எந்த விதத்திலும் குறைவோ அல்லது மாற்றமோ அடையாதவன் வன்.

அப்படிப்பட்ட அந்த வன் என்னும் பிரம்மமாய் நான் இருக்கிறேன் என்று அறிவாய்.

----------------------------------------------------------------------------------------------
"அகத்தில் பிரம்மமாய் இருக்கிறேன்" என்று எளிதாக சொல்லி விடுகிறோம், பிரம்மம் என்பது எப்படிப்பட்டது - எவ்வளவு பிரம்மாண்டமானது என்பது பாருங்கள்!
நினைவாலும் அளக்க இயலா எல்லைகளில் நிஜமாகப் பரவி இருக்கிறது அந்த பிரம்மாண்டம்!

அப்படிப்பட்ட பிரம்மாண்ட பிரம்மம் எப்படிப்பட்டது?
அடுத்த பா சொல்கிறது:

பா 36:

எது நித்தஞ் சுத்தம் எது முக்தம் ஏகம்

எது அகண்ட இன்பம் இரண்டலது எது சத்துச்

சித்தானந்தம் ஆகுன் திகழ்ப் பரபிரம்ம

வத்து யானேயா மதி.

விளக்கம்:
எது எப்போதும் சுத்தமாய், தூய்மையாய் இருக்கிறதோ,
எது எப்போதும் முக்தி அடைந்ததாய், எல்லாவற்றிலும் ஒன்றாய் இருக்கிறதோ,
எது எல்லா இடத்திலும் அகண்டு பரந்து இருக்கிறதோ,
எது பேரின்ப பெருங்களிப்பு தருகிறதோ,
எது அத்வைதமாய் இரண்டல்லவென்று இருக்கிறதோ,
எது அளவிட இயலாத சத் - சித் - ஆனந்தமாக இருக்கிறதோ,
- அந்த அது - பிரகாசமாய் ஒளி விட்டுத் திகழும் பிரம்மம்,
அது நான், நானேதான்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Sunday, January 20, 2008

ஆத்ம போதம் - பகுதி ஐந்து

பா 33:


மனமாலனான் ஆதலன் மன்னுதுயர் ஆசை


சினம் அச்சம் ஆதி எனைச்சேரா - வினமாகவப்


பிராணன் மனமில்லான் சுதன் என்றுமறை


செப்புகின்ற தன்றோ தெளி.

விளக்கம்:

மனதில் தோன்றும் ஆசை, சினம், அச்சம் போன்றவையும் என்னோடு (என் ஆன்மாவின் தூய நிலையில்) சேர்ந்து கொள்ளாது, ஏனெனில் நான் (தூய பிரம்மமாகிய நான்) அந்த மனமும் அல்ல.

பிராண சக்தியை நன்றாக பக்குவப்படுத்தத் தெரிந்தவனுக்கு இந்த மனதில் தோன்றும் மயக்க குணங்களை அண்ட விடாமல், மனமில்லாதவனாக இருப்பான் - அவன் தூய்மையான பிரம்மமானவன் என மறை சொல்வதனைக் கேட்டுத் தெளியவும்.

இறைவனின் அருகில் அழைத்துச் செல்லும் மாயையை வித்தை என்றால், இறைவனை விட்டு தூர விலகச்செல்லும் மாயையை அவித்தை எனலாம். மாயையிலும் நல்ல மாயை, கெட்ட மாயை என்றிருக்கிறது பாருங்கள்!


பா 34:


நிர்குண நிரஞ்சன நித்த நிராகர


நிர்விகாரன் சுத்த நிர்கிரிய - நிர்விகற்ப


நித்தமுக்தன் முன் நிகழ்திடப் பட்டவை


அத்தனையு நானென்று அறி.


விளக்கம்:


வன், இருக்கிறானே - அந்த வன் -


அவனுக்கு முன்னால் இருக்கிற அத்தனை பொருளும் சுடர் விட்டு பிரகாசிக்கும்.

அந்த வன் -

குணமில்லாதவன் - இப்படிப்பட்டவன், அப்படிப்பட்டவன் என்று எந்த ஒரு குணத்தைக் கொண்டும் அவனை வரையறுக்க இயலாது.

இருளில்லாதவன் - பூரணமான ஒளியாக பிராகசிப்பவன்.

முடிவில்லாதவன்.

வடிவில்லாதவன் - உருவமில்லாதவன்,

மாறுதலில்லாதவன்,

செயலற்றவன்,

வேறுபாடற்றவன்.

இவ்வாறாக தளைகள் அனைத்திலும் இருந்து விடுபட்ட பிரம்மமாக இருக்கிறேன், நான் - ஆகையால், நானே வன்.

என்று ஆன்மா அறிந்திடல் வேண்டும்.

---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்

Friday, January 18, 2008

தமிழில் ஆத்ம போதம் - பகுதி நான்கு - அவித்தை

பா 31:


அவித்தையா லானவை யாகமுதற் காணும்

இவை குமிழிபோலவழி வெய்தும் இவற்றின்

அயலாம் அமலவகம் பிரம்மமாம் என்றறி

யராமல் என்றும் அறி.

விளக்கம்:

இரண்டு வகையானவர்கள் - ஒரு வகை : அவித்தைகளால், இறையை வெளியே அங்கும் இங்கும் எங்கும் தேடி அலைபவர்கள் - இவர்கள் நீர்க்குமிழிபோல் எளிதில் உடைந்துவிடும் இயல்பு கொண்டுள்ளவர்கள். இன்னொரு வகை: தம் அப்பழுக்கற்ற தூய்மையான அகமே பிரம்மம் என அறிந்தவர்கள். அவ்வாறு பிரம்மம் என்றறிந்தவர்கள் அந்த அறிவில் இருந்து எந்த மாறுதலும் அடையாதவர்கள்.

அவித்தை: உபாதிகளால் ஏற்பட்ட மயக்கத்தினால், நான், எனது என்கிற ஈகோ ஏற்படக் காரணமாகிறது. அவ்வாறு ஆன்மாவில் விளையும் உபாதி, அவித்தை எனப்படுகிறது. பாசி பிடித்த குளத்தில், மேலே இருக்கிற சூரியனின் பிம்பம் தெரிவதில்லை. ஆனால், தெளிந்த நீருடைய குளத்திலோ, பிம்பம் தெளிவாகத் தெரிகிறது. குளத்தில் இருக்கும் பாசி போலத்தான் அவித்தைகளும். அவற்றை அகற்றினால், தெள்ளத் தெளிவாகத் தெரியும் சச்சிதானந்தம்.

மனதின் குணங்களுக்கும் ஆன்மாவிற்கும் நேரடித் தொடர்பேதும் இல்லாமல் இருத்தல் வேண்டும். அதனை அடுத்த பாவில் பார்ப்போம்:

பா 32:

உடலுக்கு வேறெனக் குண்டா தன் மூத்த
லோடுகுன்றல் சாவுமுதலொன்றா - படர்ந்த
வொலிமுதற் புலன்களோடு ஒன்றல் எனக்கின்றே
யலன்பொறிகளாய் ஆனத லால்.

விளக்கம்:

உடல் வேறு தான் வேறு என உணர்ந்த ஆன்மாவிற்கு - மூப்பில்லை, சோர்வில்லை, இறப்புமில்லை - இப்படியாக உடலுக்கு நிகழும் மாறுதல்கள் ஏதுமே பிரம்மத்தை உணர்ந்த ஆன்மாவுகில்லை. உடலின் அவையங்களோடான ஒன்றுதல் நான் என்ற அகங்காரத்தினையே தந்திடும். ஆதலால் ஆன்மா, ஒலி முதலான புலன்களில் ஏற்படும் உணர்வுகளோடு ஒட்டுதல் இல்லாமல் இருந்திடும்.


---------------------------------------------------------------------------------------------
ஆத்ம போதம்: முந்தைய பகுதிகள்