Showing posts with label இயற்கை. Show all posts
Showing posts with label இயற்கை. Show all posts

Saturday, August 30, 2008

அடி வயிற்றைக் கலக்கும் டொர்னடோக்கள்

டொர்னடோ என்கிற பேரைக் கேள்விப் படாதவருக்கு, நம்ம ஊரில் அதைப்போல வேறொன்றைக் காட்டி - இதைப்போல என விளக்குவதற்கு, ஏதுமில்லாதபடி இருக்கிறது. சுழற்றி இழுக்கும் சூறாவளிப் புயல் காற்று எனச் சொன்னால் அது தோராயமாகத்தான் இருக்கும். வானத்தில் இருந்து தரையை தொட்டுப்பார்க்கும் (இதற்கு 'touchdown' எனப்பெயர்) இதன் நீளம், வானத்தில் இருந்து தரை வரை என்றால், அதன் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான டொர்னடோக்கள் ஏற்படுகின்றன. இவற்றில் சில நொடிகளே நீடிப்பவையும் உண்டு. பெரும் பொருட்சேதங்கள் ஏற்படுத்துவையும் உண்டு. முன் அறிவுப்பு மூலமாக, உயிர்சேதம் மட்டுப்படுத்தப் பட்டாலும், அதன் அபாயம் என்றைக்கும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பூகம்பம், எரிமலை, சுனாமி என இயற்கைச் சீற்றங்கள் பலவும் இருந்தாலும், டொர்னடோக்கள் அவற்றில் இருந்து மாறுபட்டவை. அவை வானத்தில் இருந்து வருவதால், டொர்னடோவின் நகர்வினை யாராலும் முழுமையாக கணக்கிட முடிவதில்லை. இதுவரை நிகழ்ந்தவற்றில் இருந்து கிடைத்த பொதுவான காரணிகளில் இருந்து, டொர்னடோ நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை தோராயமாக மட்டுமே கணிக்க இயல்கிறது. அக்காரணிகள் என்னவென்றால்: தரையின் அருகே இருக்கும் சூடான, அதே சமயத்தில் ஈரப்பதமான காற்று, கிழித்து வீசும் காற்று, உயரம் போகப்போக காற்றின் வீச்சில் தெரியும் திசை மாற்றம் ஆகியவையாகும். இடி மின்னலோடு ஏற்படும் சூறாவளிக் காலங்களில், காற்றும் சுழன்று வீசுவதால், அக்காலங்களில் டொர்னடா நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

அமெரிக்காவில் நிகழும் டொர்னடாக்களில் பெரும்பான்மையானவை, மத்திய அமெரிக்காவில் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் உள்ள காலத்தில் ஏற்படுகின்றன. தெற்கு டகோடா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலம் வரைக்கும் இடைப்பட்ட மாநிலங்களில் தான், இவை அதிகமாக நிகழ்கின்றன. ராக்கி மலைத்தொடர்களில் இருந்து வரும் குளிர்ந்த மற்றும், வரண்ட காற்று, அதே சமயம் தெற்கில் மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து வடக்கே நகரும் சூடான, மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகையில் - எதிர் எதிர் துருவங்கள் சந்தித்தால் என்னவாகும்? மழையும், பனிக்கட்டி மழையையும் பொழிய - இவற்றின் கலவை தான் காலிஃபிளவர் போன்ற தலையுடன் வானத்தை நோக்கி விரியும், டொர்னடோ. டொர்னடோவின் முழு சக்தியையோ, வீச்சையோ வல்லுனர்களால் நேரடியாக அளவிட இயலாததால், அவற்றில் ஏற்படும் பாதிப்புக்களைக் கொண்டே அவற்றை அளவிட வேண்டியுள்ளது. எங்கள் வீட்டுப் பக்கத்தில், டொர்னடோ வருவதற்கு முன்பான ஆலங்கட்டி மழைகளால் மட்டுமே அவர்களின் வீட்டின் கூரைக்கு இழப்புகள் பல ஆயிரம் டாலர்கள். நல்ல வேளை டொர்னடோ தரையைத் தொடவில்லை அன்று. வீட்டின் கூரையின் மேல், படபடவென்று யாரோ கற்களை எறிந்ததுபோல இருக்க, நாங்களோ செய்தி அறிக்கையை கேட்டவாறே, அடுத்த 15 நிமிடங்களுக்கு, குளியலறையில், பாத்ரூம் டப்பில் பதுங்கிக் கொண்டோம்!


டொர்னடோ வரப்போகிறது என்று தெரிந்தால், வீட்டின் அடிமட்டத்திலோ அல்லது வேறு ஒரு பாதுகாப்பான இடத்திலோ, தஞ்சம் அடைய மக்கள் அறிவுருத்தப்படுவார்கள். சராசரியாக, டொர்னடோ உருவாகத் துவங்கிய இடத்தில், அதற்கு கீழே வசிப்பவர்கள், பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்ள இருப்பது 13 நிமிடங்கள் தானம். அதற்குப்பின் டொர்னடோ தரையைப் பதம் பார்க்க வாய்ப்புகள் அதிகம். அதனால், அந்தப்பகுதியை விட்டு பாதுகாப்பான வேறு இடத்துக்குப் பயணிக்ககூட நேரம் இருக்காது. தரையை தொட்டுவிட்டலோ, அங்கு குடியிருப்பு ஏதேனும் இருந்தாலும், அது அநேகமாக, வானத்தில் பறந்திருக்கும். பல இடங்களில், வெளியில் நிறுத்தப்பட்டைருந்த வாகனங்களும், வீட்டின் கூரையும், மேல்தளமும் சிதைந்து சின்னபின்னமாகியுள்ளன.

1996 இல் வெளிவந்த திரைப்படமான 'டிவிஸ்டர்' மிகவும் சுவாரஸ்யமாக டொர்னடோக் கதையைச் சொல்லி இருக்கும். இத்திரைப்படத்திற்குப்பின் டோர்னடோக்களைத் தேடிப்போய் அவற்றைப் புகைப்படம் எடுப்பவர்களும் அதிகமானார்கள். இது உயிருக்கு ஆபத்தான செயல் என்றாலும், அதையும் பணயம் வைத்து, இந்தக் காரியத்தில் இறங்குகிறார்கள். மோசமான தட்பவெட்ப நிலையிலும், பற்கள் கடுகடுக்க, அவர்களின் வாகனங்களை பனிக்கட்டி மழைகள் பதம் பார்க்க, டொர்னடோ தொடருதல் நடைபெருகிறது. சில அஞ்சா நெஞ்சங்கள்(/ளை) டொர்னடோவைக் காட்டுவதற்கு டூர் அழைத்துப்போகும் கைட் போல வேலை செய்வதும் உண்டு. ஆனால் நிச்சயமாக அது நயகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதுபோல எளிதானதாக இருக்காது! :-)

அமெச்சூர் டொர்னடோ வேட்டையாளர்களைப் போலவே, அறிவியல் ஆராய்சியாளர்களும் டொர்னடோக்களைத் தேடிப்போவதுண்டு. நிலையான ராடார் கருவிகளைக் கொண்டு மட்டும் இவற்றை ஆய்வு செய்ய இயலாது. டொர்னடோ நிகழ்ப்போகும் இடத்தில் கொண்டுபோய் டாப்ளர் ராடார் கருவுகளைப் பொருத்துவதால் ஓரளவுக்கு பயனிருக்கிறது. இப்படி ஆராய்சியாளர்கள் தங்களால் இயன்ற அளக்கும் கருவிகளை தயார் செய்து, அங்கு வைத்து விட்டு வந்தால், பல சமயம், இந்த சுழற்காற்றுகள், ஒன்றுமில்லாமல் இற்றுப்போய் விடும். அடுத்த முறை வரை, அவர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

சமீப ஆண்டுகளில் சற்றே முன்னேறியிருக்கும் GPS போன்ற நுட்பங்களும் இந்தப் பணியில் கைகொடுக்கின்றது. டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவற்றுக்கு எவ்வளவு அருகே செல்லமுடியுமோ அவ்வளவு அருகில் சென்று அவற்றைப்பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பது அவசியமாகிறது. இதற்காக, ஆராய்சியாளர்கள், அமெச்சூர் காரார்களையும் உதவிக்கு கொள்கிறார்கள். டொர்னடோ பற்றியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் சின்னச்சின்னக் கருவிகளை, டொர்னடோ வரும் பாதையில் கொண்டுபோய் வைத்துவிட்டு, உடனே அந்த இடத்தைவிட்டு அகன்று விடுவார்கள். அவற்றில் ஒன்றான, 'டின்மேன்' எனப்படும் டொர்னடோக்களை படம் பிடிக்கும் கருவி, பிரபலம். இதன்மூலம், டொர்னடோவைப்பற்றிய தகவல்கள் மற்றும் படங்களை அவை மிக அருகாமையில் வரும் சமயம் பதிவு செய்ய முடிகிறது. இந்த தகவல்களின் உதவியால் வெப்பம், ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் மாறிக்கொண்டே இருக்கும் காற்றின் திசை ஆகியவற்றை மேலும் துல்லியமாக கணிக்க இயல்கிறதாம். தொடரும் ஆராய்ச்சிகள், டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணியைத் தொடருகிறார்கள்.

Thursday, August 28, 2008

ஆழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு...

ழக்குழி தோண்டி அதிலே ஒரு முட்டை இட்டு அண்ணார்ந்து பார்த்தால் தொண்ணூறு முட்டை - அது என்ன? என்பார்கள்.
'தேங்காய்' என்று உடனே பதில் வரும்! பசுமரத்தாணி போல பதிந்து விட்டது இவ்விடுகதை. சிறுவயதில் விடுகதையாய் இந்தக் கேள்வி வரும் போதெல்லாம், அதோடு சேர்ந்து ஆவலும் இருந்ததுண்டு. ஒரு தேங்காயை மண்ணில் நட்டு வைத்தால், அது மரமாய் வளர்ந்தபின் அந்த ஒன்றில் இருந்து தொண்ணூறு தேங்காய் வருமாமே! (இப்போது கேட்டால், தொண்ணூறு என்ன, எல்லாமே பரமன் ஒருவனில் இருந்து வந்ததுதான் என வேதாந்தம் சொல்வேன்!)

காஞ்சிபுரத்தில் சொந்தவீட்டில் வசித்த போது, வீட்டின் இடப்பக்கம் முழுதும் செடிகள் நிறைந்த தோட்டமாய் அம்மா அமைத்திருந்தார்கள். வாழை மரமும், செம்பருத்தி, துளசி, டிசம்பர் பூக்கள், கனகாம்பரம், நந்தியாவட்டை போன்ற செடிகளும் இருக்கும். டிசம்பர் மாதத்தில் ஏராளமாய் பூக்கும் டிசம்பர் பூக்களை பறிப்பதில் ஒரு அலாதி ஆனந்தம் இருக்கும். குட்டி குட்டியாய் பூத்திருக்கும் அந்த பூக்களைப் பறித்துப் பறித்து தட்டில் சேர்க்க, இன்னமும் நிறைய இருக்கே என்ற மகிழ்ச்சியினால்!. அவற்றிலும் விதவிதமான வகைகள் - வெள்ளை, வெளிர் சிவப்பு, ஊதா, நாமம் என பல வகைகளில்!. வீட்டு வாசலில் கொடியாக படந்திருக்கும் நித்திய மல்லியும் அதன் அருகே, சம்பங்கிப் பூவின் கொடியும் படர்ந்திருக்க, சொல்லவே வேண்டாம், நறுமணமே, நான் இங்கே இருக்கிறேன் எனச் சொல்லும்!

தக்காளி,மணத்தக்காளி,சுண்டைக்காய் ஆகிய செடிகளும் இருந்தது. மனத்தக்காளி காய்க்கையில், காய் பச்சை நிறத்திலும், பின்னர் பழுத்தவுடன் திடீரென கறுப்பு நிறத்திலும் மாறி இருப்பது வியப்பைத் தரும். கனிந்த மணத்தக்காளிகளை, உடனே பறித்து வாயில் போட்டுக் கொள்வேன்! மணத்தக்காளிக் கீரைக் கூட்டும் அம்மா செய்து பறிமாற, அமுதாய் இருக்கும். ஆனால் பொதுவாக, காய்களாக இருக்கும்போதே அவற்றைப் பறித்து, மோரில் ஊறவைத்து, பின் வெய்யிலில் காய வைத்து, வற்றலாக்கி விடுவது வழக்கம்.

இந்தச் செடிகளை ஆடுமாடுகள் வந்து மேய்ந்திடாமல் தடுக்க, முதலில் 'ஆடாதோடா' செடிகளை வேலி போல நட்டு வைத்திருந்தார்கள். பின்னாளில் காம்பௌண்ட் சுவர் கட்டும் வரை, இந்த இயற்கையான வேலியே காப்பு! வீட்டில் இருந்து வெளியேறும் நல்ல தண்ணீர் எல்லாம் ஒரு கால்வாய் வழியாக செடிகளுக்குச் செல்லுமாறு வழி அமைத்திருப்பார்கள். சின்னப்பையனாய், அந்தத் தண்ணீர் செல்ல இயலா மற்ற இடங்களுக்கு ஹோஸ் பைப் மூலம் செடிகளுக்கு தண்ணீரை விடுவதும், பூக்களைப் பறித்து வந்து பூஜை அறையின் சுவரில் தலை முன் பக்கமாய் 'சற்றே சரிந்து நிற்கும்' சாமிப்படங்களுக்கு (செம்பருத்திப் பூவினை) வைத்ததும் இன்னும் மறக்கவில்லை!

ஓர் ஆண்டு, அவரை விதைத்து, அது கொடியாய்ப் படர, அதை, மொட்டை மாடியில் இருந்து கீழே வரும் மழைநீர் வடிகால் குழாயில் கட்டி விட, அது கொஞ்சம் கொஞ்சமாய் படர்ந்து, மொட்டை மாடியையே தொட்டு விட்டது. பின்னர் அங்கேயும், துணி உலர்த்தும் கம்பியில் தொடர்ந்து படர்ந்து வளர்ந்தது. பின்னர் அவரை காய்க்கும் பருவத்தில், அவரைக்காய் எக்கச்சக்கமாய் காய்த்துத் தள்ளியது!. வீட்டின் முன்புறத்தில் செடியாய் வைத்த முருங்கையும், சில ஆண்டுகளில் மரமாய் வளர்ந்து சுவையான முருங்கைகளை அள்ளித் தந்தது. முருங்கைக்காய்களைப் பறிக்க நீண்ட குச்சியில் ஆன தொரடு ஒன்றிருக்கும். (கே.ஆர்.எஸ், இந்த தொரடு என்கிற சொல்லைத் தேடியதில் தெரிந்தது - நீங்கதான், இந்த சொல்லைப் பதிந்த முதல் மற்றும் ஒரே பதிவர்!). தொரடின் நுனியில் இருக்கும் கொக்கியை தூக்கிப்பிடித்து, முருங்கையின் காம்புப் பக்கத்தில் இழுத்தால், கிளை முறியாமல், காய் மட்டும் கீழே வந்து விழும்.

----------------------------------------------------------
இவையெல்லாம் சின்னவயதின் நினைத்துப் பார்க்க இனிக்கும் நினைவுகள். இப்போ, அங்கிருந்து ஃபாஸ்ட் ஃபார்வர்ட் செய்து அமெரிக்கா வருவோம். அங்கே அத்தனைச் செடிகளைப் பார்த்துவிட்டு, இங்கே?
அந்த அளவிற்கு இல்லாவிட்டாலும், ஏதோ கொஞ்சம் கொஞ்சம், வீட்டைச் சுற்றி வளர்த்த பூச்செடிகளை, நீங்களே பாருங்களேன். இவற்றைத் தவிர தொட்டிச்செடியாக, ஸ்டார் மல்லியும், துளசியும், ஆரஞ்சும் உண்டு.

* செம்பருத்தி (மே மாதம் முதல் செம்டம்பர் வரை பூக்கிறது); வெளிர் சிவப்பு (இது தவிர வெள்ளை நிறத்திலும் பூக்கிறது) - பெரினியல் (வசந்த காலத்தில் மீண்டும் துளிர்த்திடும்)


* ரோஜா (மே முதல் அக்டோபர் வரை பூக்கிறது); சிவப்பு - பெரினியல்


* டே லில்லி (ஜூலை மாதம் மட்டும் பூக்கும்) (வெளிர் சிவப்பு மற்றும் வெள்ளை) - பெரினியல் பல்ப்


* ஃபோர்சைத்தியா (மார்ச், ஏப்ரல் மாதம் மட்டும் பூக்கும்) (மஞ்சள்) - பெரினியல்


* கிளாடியோலஸ் (ஜூன், ஜூலை மாதம் மட்டும் பூக்கும்) - பெரினியல் பல்ப்

Tuesday, November 20, 2007

இது எந்த இடம்? (விடை பதிவின் இறுதியில்)

இயற்கையின் அழகே அழகு...



ரம்யமான இந்த நீர் வீழ்ச்சியின் பெயர் என்ன?



எங்கே இருக்குன்னு சொல்லுங்க பார்க்கலாம்!






இன்னொரு படமும் சேர்த்திருக்கிறேன்:



படங்களை பெரிதாக பார்க்க, படத்தை அழுத்தவும்.

புதிருக்கான விடை:

ஜோக் அருவி (Jog Falls, கன்னடம்:ಜೋಗ ಜಲಪಾತ ),
கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்த அருவி, இது இந்தியாவில் உள்ள பத்து உயரமான அருவிகளில் ஒன்றாகும்.

இது ஷராவதி ஆறிலிருந்து 253 மீட்டர் உயரத்தில் இருந்து விழுகிறது.
அருவியின் அகலம் 1550 அடி.

இந்த அருவியானது கெருசொப்பெ அருவி எனவும் ஜோகதகுன்டி அருவி எனவும் அழைக்கப்படுகிறது. (கெருசொப்பெ வில் இருந்து 18 மைல்)

அருவி நான்காக பிரிந்து வருகையில், நான்கு பெரிய பகுதிகளுக்கு நான்கு பெயர்களும் உண்டு: ராஜா, ராணி, ராக்கெட், ரோரர் (Roarer)

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை சீசன் காலம். சென்று பார்க்க ஏற்ற தருணம்.

பெங்களூரில் இருந்து 379 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மிக அருகே
உள்ள ரயில் நிலையம் - ஷிமோகா. (104 கிலோமீட்டர்)

மேலதிக விவரங்களுக்கு
ஆங்கில விக்கிபீடியா