Showing posts with label திருநாவுக்கரசர். Show all posts
Showing posts with label திருநாவுக்கரசர். Show all posts

Friday, March 18, 2022

வட்டனை மதிசூடியை - அப்பர் தேவாரம்

திருவாவுக்கரசர் தேவாரம்

திரு அண்ணாமலைத் தலம்



வட்டனைம் மதி சூடியை வானவர்
சிட்டனைத் திரு வண்ணா மலையனை
இட்டனையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்டனை யடி யேன் மறந் துய்வனோ.

வானனைம் மதி சூடிய மைந்தனைத்
தேனனைத் திரு வண்ணா மலையனை
ஏனனை யிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆனனை யடி யேன்மறந் துய்வனோ.

மத்தனைம்மத யானை யுரித்தவெஞ்
சித்தனைத் திரு வண்ணா மலையனை
முத்தனைம் முனிந் தார்புர மூன்றெய்த
அத்தனை யடி யேன்மறந் துய்வனோ.

காற்றனைக் கலக்கும்வினை போயறத்
தேற்றனைத் திரு வண்ணா மலையனைக்
கூற்றனைக் கொடி யார்புர மூன்றெய்த
ஆற்றனையடி யேன்மறந் துய்வனோ.

மின்னனை வினை தீர்த்தெனை ஆட்கொண்ட
தென்னனைத் திரு வண்ணா மலையனை
என்னனை யிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்னனை யடி யேன்மறந் துய்வனோ.

மன்றனைம் மதி யாதவன் வேள்விமேல்
சென்றனைத் திரு வண்ணா மலையனை
வென்றனை வெகுண் டார்புர மூன்றையுங்
கொன்றனைக் கொடி யேன்மறந் துய்வனோ.

வீரனை விட முண்டனை விண்ணவர்
தீரனைத் திரு வண்ணா மலையனை
ஊரனை யுண ரார் புர மூன்றெய்த
ஆரனையடி யேன்மறந் துய்வனோ. 

கருவினைக் கடல் வாய்விட முண்டவெம்
திருவினைத் திரு வண்ணா மலையனை
உருவினை யுண ரார்புர மூன்றெய்த
அருவினையடி யேன்மறந் துய்வனோ. 

அருத்தனை யரவைந்தலை நாகத்தைத்
திருத்தனைத் திரு வண்ணா மலையனைக்
கருத்தனைக் கடி யார்புர மூன்றெய்த
அருத்தனை யடி யேன்மறந் துய்வனோ. 

அரக்கனை யலற வ்விர லூன்றிய
திருத்தனைத் திரு வண்ணா மலையனை
இரக்கமா யென் உடலுறு நோய்களைத்
துரக்கனைத் தொண்ட னேன்மறந் துய்வனோ.

 

Friday, September 11, 2020

திருநெல்வாயில் அரத்துறை

பொன்னானவன் மணியானவன் முத்தானவன் 
சொன்னசொல்லானவன் பேச்சானவன் மூச்சானவன் 
ஒன்றானவன் ஒவ்வொன்றானவன் ஒவ்வொரு பொருளானவன் 
எனினும் தான்மட்டுமே தனக்கு நிகரானவன்.

தலம்: திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டத்துறை)
 
மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்

அம்பாள்: ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
 
திருவட்டத்துறை என்று தற்போது வழங்கப்பட்டு வரும் திருநெல்வாயில் அரத்துறைத் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலம். விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் உள்ளது.

ந்தாம் திருமுறையில் மூன்றாம் பதிகத்தில் நாவுக்கரசர் ஒவ்வொரு பாடலிலும் உலகியில் பொருட்களை ஒப்புமைக்கு எடுத்துகொண்டு சிவனைப் போற்றுகிறார். இப்பாடலில், பொன் போன்றவன், பொன்னின் சுடர் போன்ற மின்னல் போன்றவன், அன்னை போன்றவன் என்றெல்லாம் சொல்கிறார். இறுதியில், அவனுக்கு அவன் மட்டுமே ஒப்பானவன் என்கிறார். 
 
இது முரணாக உள்ளதோ என்றால், இல்லை. ஏனெனில் பொன்னின் குணத்தையும், மின்னலின் குணத்தையும், அன்னையின் குணத்தையும், ஏன் இன்னபிற எல்லாவற்றின் குணத்தையும் கொண்டவனாக அவன் இருக்கிறான். ஆகவே அவனது குணத்தை ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அந்த ஒரு குணத்துக்கு ஒப்பாக ஒன்றைச் சொல்ல இயலுமே தவிர, எல்லா குணங்களையும் கொண்ட ஒன்றாக இருக்கும் அவனுக்கு நிகர் அவன் மட்டுமே.
 
பொன் ஒப்பானைப், பொன்னிற் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அன்னை ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
- திருநாவுக்கரசர் தேவாரம் (பதிகம் 5.3 பாடல் 8)

திருமணம் நடக்க இருந்த போது, சுந்தரரை வலிய வந்து இறவன் தடுத்தாட் கொண்டதையும், சுந்தரருக்காக இறைவனே தூது போனதையும் அறிவோம். ஆனால் அடுத்துப் பார்க்கப் போகும் பாடலில் தன் நண்பர் பாவனையை விட்டுவிட்டு பிழைத்துப்போக வழிதேடி தொடர்ந்து வந்ததாக இரங்குகிறார்!  

ஏழாம் திருமுறையில், இப்பதிகப் பாடலில், சுந்தரமூர்த்திப் பெருமான் - ஒருவன் பிறந்தான்; பின் இறந்தான் என்று காலப்போக்கில் வெறும் சொல்லாக வாழ்க்கை கடந்து விடாமல் - பிழைக்கும் வழி கிட்டிட உன்னைத் தொடர்ந்தேன் என்கிறார்.   அவருக்காக அருள் செய்யவே, அகிலும் மணிகளும் இயற்கையாகவே தள்ளிக்கொண்டு நதியின் கரையை அடைவதுபோல், இயற்கையாகவே, வெண்மதி சூடிய பெருமான் நெல்வாயிலெனும் ஊரில் அரத்துறையில் கோயில் கொண்டான்.

கல்வாய் அகிலும் கதிர்மாமணியுங்
    கலந்து உந்திவரும் நிவவின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
    நிலவெண்மதிசூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
    நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
    தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே

- சுந்தரர் தேவாரம் (பதிகம் 7.3 பாடல் 1)

நிவவின் கரை - நிவா நதிக்கரை - தற்போது வடவெள்ளாறு. ஒரு சமயம் இந்த நிவா நதிக்கரையில் ஆதிசேஷன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி பெருமானும் அன்னையுடன் காட்சி அளித்தார். அவ்விடம் அன்றுமுதல் அரவம்+துறை = அரத்துறை என்று வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாலகன் திருஞான சம்பந்தர் இந்தத் தலத்திற்கு வருவதற்கு முன்பாக, அவரது பாத தாமரை நோகமல் இருக்க, இறைவனே முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களையும் அவருக்கு வழங்கி இந்த தலத்திற்கு அழைத்து வரப்பெறுகிறார் என்கிறது பெரிய புராணம். 

அந்த முத்துச்சிவிகையில் ஏறுவதற்கு முன்பாக, மாறன்படியில் தான் ஏறி வருவதற்கு சிவிகை அனுப்பி வைத்த திருநெல்வாயில் அறத்துறை நாதனை "எந்தை ஈசன்" எனத் துவங்கும் பதிகம் பாடுகிறார் சம்பந்தப் பெருமான்.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. 

- சம்பந்தர் தேவாரம் (பதிகம் 2.90 பாடல் 1)



இத்தலத்தின் கூகுள் மேப் இணைப்பு 





Sunday, June 21, 2020

கள்வரோ நீர்?

ன்னவெல்லாம் தோன்றும் எம்பெருமான் மேனியிலே என்றெடுத்துச் சொல்வார் திருநாவுக்கரசர் பெருமான் இந்த திருப்பூவணம் பதிகத்தின் முதல் பாடலில்:
வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
 		- வாசீகப் பெருமான் நாவுக்கரசர்

முழு பதிகத்தினையும் இங்கு பார்க்கலாம்.

சிவகாமியின் சபதம் நாவலில் கல்கி அவர்கள் இப்பாடலுக்கும் இன்னும் சில பாடல்களுக்கும் சிவகாமி நாட்டியம் ஆடுவதாகக் கதை அமைத்து, கதையோடு சேர்த்து கண்ணுதற் கடவுளைக் கருத்தில் நிறைத்திடும் கனிவான திருநாவுகவுக்கரசர் தேவாரப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

இச்சில பாடல்களைப் படித்தாலே இன்னபிற இனிப்பினையும் தேடிப் படிப்பாரெனச் சொல்லவும் வேண்டுமோ!. இப்பாடல்கள் வரும் கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலுக்குள் செல்வோம்.

~~~~~~~~ முப்பத்தைந்தாம் அத்தியாயம் : கள்வரோ நீர்? ~~~~~~~~~~~~~

சிவகாமி மீண்டும் அரங்க மேடைக்கு வந்து அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள். திருநாவுக்கரசர் பெருமானின்,

"வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்

வளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும்"

என்னும் பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடித்தபோது, சபையோர் சாக்ஷாத் சிவபெருமானையே நேருக்கு நேர் தரிசித்தவர்களைப் போல் ஆனந்த வாரிதியில் முழுகினார்கள்.

பின்னர், "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்னும் திருப்பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடிப்பாள் என்று எல்லாரும் எதிர்பார்த்ததற்கு மாறாகச் சிவகாமி பின்வரும் பாடலைப் பாடி அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள்:

வெள்ளநீர்ச் சடையனார் தாம்

வினவுவார் போலவந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க்கு

உறங்குநான் புடைகள் போந்து

கள்ளரோ புகுந்தீர் என்னக்

கலந்துதான் நோக்கிநக்கு

வெள்ளரோம் என்று நின்றார்

விளங்கிளம் பிறையனாரே!

ஓர் அறியாப் பெண்ணின் உள்ளமாகிய இல்லத்தினுள்ளே வெள்ள நீர்ச்சடையனாராகிய சிவபெருமான் ஏதோ விசாரிக்க வருகிறவர்போல வந்து பிரவேசிக்கிறார். தூங்கிக் கொண்டிருந்த பெண் திடுக்கிட்டு எழுந்திருக்கிறாள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறாள். யாரோ முன்பின் அறியாதவர் எதிரில் நிற்பதைக் கண்டு,

"ஐயோ! இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் என் உள்ளத்திலே புகுந்த நீர் யார்? கள்ளரா?" என்று வினவுகிறாள்.

அப்போது வந்தவர் கண்ணோடு கண் கலங்கும்படி அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறார். பார்த்துவிட்டு நகை செய்கிறார்;

அந்த நகைப்போடு கலந்து, "நானா கள்ளன்? கள்ளத் தனமென்பதே அறியாத வெள்ளை மனத்தவனாயிற்றே அதற்கு அறிகுறியாக என் மேலேயும் வெண்ணீறு பூசியிருக்கிறேன், தெரியவில்லையா?" என்கிறார்.

வானத்திலே விளங்கிய இளம் பிறையைத் திருடித் தம் சிரசிலே அணிந்து கொண்ட பெருமான்தான் இப்படி ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்! ஆகா! அந்த இளம் பிறையின் அழகைச் சொல்வேனா? அவருடைய கள்ளத்தனத்தைச் சொல்வேனா? அல்லது கள்ள மற்றவர் போல அவர் நடித்த நடிப்பைச் சொல்வேனா?... மேற்கூறிய இவ்வளவு உள்ளப் பாடுகளும் வெளியாகும்படியாகச் சிவகாமி தன் முகபாவங்களினாலும், அங்கங்களின் சைகைகளினாலும் கைவிரல்களின் முத்திரையினாலும் உணர்ச்சியோடு கலந்து அற்புதமாக அபிநயம் பிடித்தாள்.

பாடலும் அபிநயமும் சபையோருக்கு எல்லையற்ற குதூகலத்தை அளித்துப் பல முறை 'ஆஹா'காரத்தை வருவித்தது. ஆனாலும் சபையோர்கள் திருப்தியடைந்தவர்களாகக் காணவில்லை. அவர்களில் ஒருவர் துணிந்து எழுந்து அரங்க மேடைக்குச் சென்று ஆயனர் காதோடு ஏதோ சொன்னார். அது சிவகாமியின் செவியிலும் விழுந்தது. சிவகாமி சிறிது தயக்கத்துடனேயே, "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்!" என்று பாடிக்கொண்டு அபிநயம் பிடிக்க ஆரம்பித்தாள். எவ்வளவோ திறமையுடனே, விதவிதமான உள்ளப்பாடுகள் அற்புதமாக வெளியாகும்படி அபிநயம் பிடித்தாள். பாட்டும் அபிநயமும் முடியும் தருவாயில் சபையிலே பலருக்கு ஆவேசம் வந்துவிட்டது!

ஒரு வயது சென்ற கிழவர் எழுந்து நின்று, "நடராஜா, நடராஜா! நர்த்தன சுந்தர நடராஜா!" என்று பாடிக் கொண்டே ஒரு காலைத் தூக்கிய வண்ணம் சபையிலே நடனமாடத் தொடங்கி விட்டார். "இம்மாதிரி உணர்ச்சி வாய்ந்த அபிநயத்தை இது வரையில் யாரும் பார்த்ததில்லை; இனிமேல் பார்க்கப் போவதும் இல்லை" என்று சபையோர் ஒருவருக்கொருவர் கூறி மகிழ்ந்தார்கள்.

Monday, October 29, 2012

முன்னோ பின்னோ? : அப்பர் பதிகம்

"தொன்று நிகழ்ந்து அனைத்தும் உணர்ந்திடும் சூழ் கலை வாணர்களும் - இவள் என்று பிறந்தனள் என்று அறியாத இயல்பினளாம் எங்கள் தாய்"
என்று பாரதி பாரதத்தாய் வாழ்த்துப் பாடி விட்டான். நம் நாட்டில் பண்டைக் காலத்து நிகழ்வுகளோ, சரித்திரங்களோ, எழுதப்பட்ட இலக்கியங்களோ, பலவற்றிற்கும் சரியானதொரு காலகட்டத்தைக் குறிப்பிட்டுச் சொல்ல இயலாத நிலையிலேயே இன்றும் இருக்கிறோம். தக்க சான்றுகள் இல்லாத நிலையில் அனுமானங்களையும், பல முரண்பாடன கணிப்புகளையும் சுமந்துகொண்டுதான் இருக்கிறோம். ஆராய்சியாளர்கள் தொடர்ந்து கிடைக்கும் சான்றுகளின் துணைகொண்டு, காலக் கணிப்பினை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏறக்குறைய பத்தாம் நூற்றாண்டில் சிவ பக்தரும் சோழ அரசருமான கண்டராதித்த சோழரது மனைவியாராகிய செம்பியன் மாதேவியாரால் திருவாரூர் தியாகராஜர் கோயில் பெரிதாகக் கற்றளியாக கட்டப்பட்டது. இன்று 33 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள, மிகவும் பிரம்மாண்டமான இக்கோயிலில், 9 ராஜ கோபுரங்கள், 80 விமானங்கள், 12 பெரிய மதில்கள், 13 மிகப்பெரிய மண்டபங்கள், 15 தீர்த்தக்கிணறுகள், 3 நந்தவனங்கள், 3 பெரிய பிரகாரங்கள், 365 லிங்கங்கள் (இவை வருடத்தின் மொத்த நாட்களை குறிப்பதாக சொல்கிறார்கள்), 100க்கும் மேற்பட்ட சன்னதிகள், 86 விநாயகர் சிலைகள், 24க்கும் மேற்பட்ட உள் கோயில்கள் அமைந்்துள்ளன. இன்றைக்கு இவ்வளவு பெரிய கோயிலாக இருப்பதற்கு, சோழர்களுக்கு முன்னால் பல்லவர்கள் தொடங்கி, சோழர்களுக்குப் பின்னால், பாண்டியர்கள், விஜயநகர அரசர்கள், தஞ்சை நாயக்கர்கள், மாரத்திய மன்னர்கள் என பல அரசுகளின் ஆதரவு இருந்திருக்கிறது. இராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலை கட்டுகையில் திருவாரூர் கோயிலை ஒரு முன்மாதிரியாக கொண்டாதகவும் ஒரு செய்தி உண்டு.

இவற்றுக்கெல்லாம் முன்பாக, கிட்டத்தட்ட ஏழாம் நூற்றாண்டு காலத்திலேயே அப்பர் பெருமான் திருவாரூர் கோயிலைப் பற்றிய காலக் கணிப்பொன்றில் ஈடுபட்டிருக்கிறார். பழமை வாய்ந்த திருத்தலமான ஆரூரில் (திருவாரூர்) கோயில் கொண்ட சிவபெருமானைப் பார்த்து - ஐயா,  நீர் திரு ஆரூரைக் கோயிலாகக் கொண்ட நாள் எதுவோ? என வினவுகிறார். குறிப்பாக, சிவபெருமானின் திருவிளையாடல்கள் ஒவ்வொன்றையும் சொல்லி, அந்தத் திருவிளையாடல் நிகழ்வதற்கு முன்பாகவே திருவாரூரில் கோயில் கொண்டீரா அல்லது அதற்குப் பின்னரா என வினவுகிறார்! இதற்கு சிவபெருமானைத் தவிர வேறு யாரால் விடை பகர இயலும்! எனினும், இதுவே திருவாரூர் தலத்தின் தொன்மைக்கு சான்றல்லவோ!


ஆறாம் திருமுறை 
திருநாவுக்கரசர் தேவாரம்
திரு ஆரூர் பதிகம்



*1
ஒருவனாய் உலகு ஏத்த நின்ற நாளோ?
ஓர் உருவே மூஉருவம் ஆன நாளோ?
கருவனாய்க் காலனை முன் காய்ந்த நாளோ?
காமனையும் கண்அழலால் விழித்த நாளோ?
மருவனாய் மண்ணும் விண்ணும் தெரிந்த நாளோ?
மான்மறி கை ஏந்தி, ஓர் மாது, ஓர்பாகம்
திருவினாள் சேர்வதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*2
மலையார் பொன்பாவையொடு மகிழ்ந்த நாளோ?
வானவரை வலி அமுதம் ஊட்டி, அந் நாள்
நிலைபேறு பெறுவித்து நின்ற நாளோ?
நினைப்ப(அ)ரிய தழல்பிழம்புஆய் நிமிர்ந்த நாளோ?
அலைசாமே அலைகடல்நஞ்சு உண்ட நாளோ?
அமரர்கணம் புடை சூழ இருந்த நாளோ?
சிலையாய் முப்புரம் எரித்த முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*3
பாடகம் சேர் மெல்அடி நல் பாவையாளும் நீயும் போய்
பார்த்தனது பலத்தைக் காண்பான்
வேடனாய் வில் வாங்கி எய்த நாளோ?
விண்ணவர்க்கும் கண்ணவனாய் நின்ற நாளோ?
மாடமொடு மாளிகைகள் மல்கு தில்லை மணி திகழும் அம்பலத்தை
மன்னிக் கூத்தை ஆடுவான் புகுவதற்கு முன்னோ? பின்னோ?---
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*4
ஓங்கி-உயர்ந்து எழுந்து நின்ற நாளோ?
ஓர் உகம் போல் ஏழ்உகம்ஆய் நின்ற நாளோ?
தாங்கிய சீர்த் தலைஆன வானோர் செய்த
தக்கன்தன் பெரு வேள்வி தகர்த்த நாளோ?
நீங்கிய நீர்த் தாமரையான் நெடுமாலோடு,
நில்லாய், எம்பெருமானே! என்று அங்கு
ஏத்தி, வாங்கி, மதி, வைப்பதற்கு முன்னோ? பின்னோ?---
வளர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*5 பாலனாய் வளர்ந்திலாப் பான்மையானே!
பணிவார்கட்கு அங்குஅங்கே பற்று ஆனானே!
நீலமாமணிகண்டத்து எண்தோளானே!
நெருநலையாய் இன்றுஆகி நாளைஆகும் சீலமே!
சிவலோகநெறியே ஆகும் சீர்மையே! கூர்மையே! குணமே!
நல்ல கோலம் நீ கொள்வதற்கு முன்னோ? பின்னோ?---
குளிர் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*6
திறம்பலவும் வழி காட்டிச் செய்கை காட்டிச்
சிறியையாய்ப் பெரியையாய் நின்ற நாளோ?
மறம்பலவும் உடையாரை மயக்கம் தீர்த்து
மா முனிவர்க்கு அருள்செய்து அங்கு இருந்த நாளோ?
பிறங்கிய சீர்ப் பிரமன்தன் தலை கை ஏந்திப்
பிச்சை ஏற்று உண்டு உழன்று நின்ற நாளோ?
அறம்பலவும் உரைப்பதற்கு முன்னோ? பின்னோ?---
அணி ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*7
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ?
நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகிக் கலந்து உரைக்கக்
கற்பகம்ஆய் நின்ற நாளோ?
காரணத்தால் நாரணனைக் கற்பித்து, அன்று, வலம் சுருக்கி
வல்அசுரர் மாண்டு வீழ, வாசுகியை வாய் மடுத்து,
வானோர் உய்ய, சலந்தரனைக் கொல்வதற்கு முன்னோ? பின்னோ?---
தண் ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*8
பாதத்தால் முயலகனைப் பாதுகாத்துப்
பார்அகத்தே பரஞ்சுடர்ஆய் நின்ற நாளோ?
கீதத்தை மிகப் பாடும் அடியார்க்கு என்றும்
கேடு இலா வான்உலகம் கொடுத்த நாளோ?
பூதத்தான், பொரு நீலி, புனிதன், மேவிப் பொய்
உரையா மறை நால்வர், விண்ணோர்க்கு, என்றும்
வேதத்தை விரிப்பதற்கு முன்னோ? பின்னோ?---
விழவு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*9
புகைஎட்டும், போக்குஎட்டும், புலன்கள்எட்டும், பூதலங்கள்அவைஎட்டும்,
பொழில்கள்எட்டும், கலைஎட்டும், காப்புஎட்டும், காட்சிஎட்டும்,
கழல்சேவடி அடைந்தார் களைகண்எட்டும், நகைஎட்டும், நாள்எட்டும்,
நன்மைஎட்டும், நலம் சிறந்தார் மனத்துஅகத்து மலர்கள்எட்டும்,
திகைஎட்டும், தெரிப்பதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

*10
ஈசனாய், உலகுஏழும் மலையும் ஆகி,
இராவணனை ஈடு அழித்திட்டு, இருந்த நாளோ?
வாசமலர் மகிழ் தென்றல் ஆன நாளோ?
மதயானைஉரி போர்த்து மகிழ்ந்த நாளோ?
தாது மலர் சண்டிக்குக் கொடுத்த நாளோ?
சகரர்களை மறித்திட்டு ஆட்கொண்ட நாளோ?
தேசம் உமை அறிவதற்கு முன்னோ? பின்னோ?---
திரு ஆரூர் கோயிலாக் கொண்ட நாளே.

Sunday, December 21, 2008

மார்கழி : சிலப்பதிகாரம் முதல் சிவன் வரை (2)

சென்ற பகுதியில் திருமதி சௌம்யா அவர்கள், சிலப்பதிகாரப் பாடல்களில் கிரகபேத எடுத்துக்காட்டுகளை எடுத்துரைத்து, பாடிக் காட்டியதைக் கேட்டும் பார்த்தும் இரசித்தோம்.

இந்தப் பகுதியில், சங்க காலத்தில் இருந்து, தேவாரப் பதிகங்களின் காலகட்டத்திற்குச் செல்கிறோம். கிட்டத்தட்ட, இரண்டு முதல் ஐந்து நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சைவ சமயக் குரவர்களின் தமிழிசைப் பாடல்களை பாடக் கேட்கவிருக்கிறோம்.

3. தேவாரம்
நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவையாறு தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
"களித்துக் கலந்ததோர் காதற்கசிவோடு காவிரிவாய்க்
குளித்துத் தொழுது முன்நின்ற இப்பத்தரைக் கோதில் செந்தேன்
தெளித்துச் சுவையது ஊட்டி அமரர்கள் சூழியிருப்ப
அளித்துப் பெருஞ்செல்வமாக்கும் ஐயாறன் அடித்தலமே"

(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)
மூன்றாம் திருமுறை தேவாரப் பாடல் (சீர்காழி தலம்)
இயற்றியவர் : திருஞான சம்பந்தர்
பண் : கௌசிகம் (இராகம்: பைரவி)
யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா.
(இது பதிகத்தின் முதல் பாடல் மட்டுமே, இதைப்போல இன்னும் பத்து பாடல்கள் உள. பாடலின் முதலெழுத்தும், கடையெழுத்தும் ஒன்றாக இருப்பதைக் கவனிக்க. இப்படிப்பட்ட பாடலுக்கு என்ன பெயர்?)
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

நான்காம் திருமுறை தேவாரப் பாடல் (திருவொற்றியூர் தலம்)
இயற்றியவர் : திருநாவுக்கரசர்
இராகம் : நவ்ரோஜ்
மனமெனும் தோணி பற்றி மதியெனுங் கோலை ஊன்றிச்
சினமெனும் சரக்கை யேற்றிச் செறிகட லோடும் போது
மனனெனும் பாறை தாக்கி மறியும்போ தறிய வொண்ணா
துனையுனு முணர்வை நல்கா யொற்றியூ ருடைய கோவே.
(பாடலின் பொருளினை இங்கே பார்க்கவும்.)

(முடிவில், நம் இசையின் சுர நுணுக்கங்களையும், அவற்றில் தொக்கி நிற்கும் உயர் கணிதத்தினையும், அறிவியலையும் சௌம்யா அவர்கள் தொட்டுப் போவதைப் பார்க்கலாம்.)

ஏழாம் திருமுறை தேவாரப் பாடல் (திருவாரூர் தலம்)
இயற்றியவர் : சுந்தரர்

(விருத்தம்)
ஏழிசையாய் இசைப்பயனாய்
இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான்செய்யுந்
துரிசுகளுக் குடனாகி
மாழையொண்கண் பரவையைத்
தந்தாண்டானை மதியில்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே.

பண் : பழம் பஞ்சுரம் (இராகம்: சங்கராபரணம்)

பத்திமையும் மடிமையையுங்
கைவிடுவான் பாவியேன்
பொத்தினநோ யதுஇதனைப்
பொருளறிந்தேன் போய்த்தொழுவேன்
முத்தினைமா மணிதன்னை
வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனைநாள் பிரிந்திருக்கேன்
என்ஆரூர் இறைவனையே

மேலே குறிப்பிட்ட இரண்டு பாடலும் ஒரே பதிகத்தில் இடம் பெறுபவை. முதல் பாடலின் பொருளை இங்கேயும், இரண்டாம் பாடலின் பொருளை இங்கேயும் பார்க்கலாம்.



சைவம், ஒரு கண்ணென்றால், வைணவம் இன்னொரு கண்ணல்லவா!
இதுவரை சிவனடியார்களின் இசைத் தொண்டினால் தமிழிசை பெற்ற செல்வங்களைப் பார்த்தோம்.
அடுத்து வைணவப் பெருந்தகைகளான, ஆழ்வார்கள் படைத்திடும் அமுதினை அடுத்த பகுதியில் தொடர்வதினை கேட்டு மகிழ்வோம்!

Thursday, May 01, 2008

மாதர்பிறை கண்ணியானை : கண்டறியாதன கண்டேன்!

திருக்கைலாயத்தை தேடிச்சென்ற திருநாவுக்கரசர், பூலோக கைலாயமென பெரியவர் ஒருவர் குறிப்பிட திருவையாறு தலத்தை அடைகிறார். அங்கே அவர் தான் கண்ட காட்சியாக பாடுகிறார்:

இதோ, வீதியில் செல்லும் அவர்கள் அழகான பிறைமதியை தன் தலையணியாக அணிந்த சிவபெருமான் மற்றும் உமாதேவியை பாடிச் செல்கிறார்கள். அவர்கள் புதியதாக பறிக்கப்பட்ட பூவோடு நீரையும் எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் போகிறார்கள்.

அவர்கள் பின்னாலேயே போனால் நானும் கோயிலைச் சென்றடைவேனே.

கால்கள் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு தலத்தை அடைந்தேனே. (திருக்கயிலாயம் செல்ல எடுத்துக்கொண்ட முயற்சியினால் என் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சுவடே இல்லாமல் மறைந்து போனதுவே, திருவையாற்றினை அடைந்ததுமே!)

அங்கே ஆண்யானையும், பெண்யானையும் ஜோடியாக காதல் களிப்புடன் வரக் கண்டு,
அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைக் கண்டு தரிசித்தேன். (அன்பே சிவம்!)

இதுவரை கண்டு அறியாத காட்சிகளை (திருப்பாதம், சிவானந்தம்) எல்லாம் கண்டேன் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.

(இந்தப் பாடலில் யானைகள் ஜோடியாக வருவதைக் குறிக்கும் அவர், இந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விலங்கு அல்லது பறவை தன் துணையுடம் வருவதாக குறிக்கிறார்.)
--------------------------------------------------
பதிகத்தின் முதல் பாடல்: (நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம் பதிகம் 3)

மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

---------------------------------------------------------------------
மாதர்பிறை - அழகியபிறை
கண்ணி - நெற்றி/தலையில் சூடும் அணிகலன்
போதொடு நீர் - வழிபாட்டிற்குரிய நீர்
பிடி - பெண் யானை; களிறு - ஆண் யானை
---------------------------------------------------------------------
இந்தப் பாடலை பொன்னியின் செல்வனில், சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர் பாடிக்காட்டுவதாக வரும். சேந்தன் அமுதன் பாடி முடித்தபின், அருகிலிருந்த குந்தவை, செம்பியன் மாதேவியிடம், இந்தப் பதிகம் பிறந்த வரலாற்றைக் கேட்பார். அந்த முதிய பிராட்டி சொன்ன வரலாற்றை, கல்கியின் வரிகளில் இங்கே அப்படியே தருகிறேன். நீங்கள் மெய்மறந்து கேட்டிட:

அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு பெரியவர் அங்கே தோன்றி, "அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச் செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்" என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர் திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும் சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன; பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். "இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை" என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "கண்டறியாதன கண்டேன்!" என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்.

---------------------------------------------------------------
பாடல் : மாதர்பிறை கண்ணியானை

இயற்றிவர் : திருநாவுக்கரசு நாயன்மார்

தலம் : திருவையாறு

இராகம்: செஞ்சுருட்டி

பாடுபவர் : விஜய் சிவா

Monday, April 28, 2008

இறைவனின் திருவருளைப் பெறாதவர் யார்?

சென்ற பதிவில் ரஞ்சனி&காயத்ரி அவர்கள் பன்னிரெண்டாம் திருமுறையான பெரிய புராணத்தின் வாழ்த்துப் பாடலுடன் விருத்தத்தினைப் பாடத் துவங்குவதை பார்த்தோம்.
தொடர்ந்து, அவர்கள், இன்னொரு பாடலையும் பாடினார்கள்.
அந்தப் பாடல், ஆறாம் திருமுறையான திருநாவுக்கரசர் தேவரத்திலிருந்து ஒரு பாடல்.

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

இறைவனின் திருவருளைப் பெறாதவர் யார்?

'நமசிவாய' எனும் அஞ்செழுத்து திருநாமத்தினை ஒருகாலும் செப்பாதவர்.

தீவண்ணம் உடைய சிவனின் இயல்பை ஒருகாலும் பேசாதவர்.

ஒருகாலும் திருக்கோயிலினை வலம் வாராதவர்.

உண்பதற்குமுன் மலரைப் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதாவர்.

கொடுநோய்கள் தீர வெண்ணீற்றை அணியாதவர்.

இவ்வாறு செய்யாதாரெல்லாம் இறைவனது திருவருளை இழந்தவர் ஆவர்.
இப்படிப்பட்டவருக்கு, தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செய்து,
வரும் பிறப்பிலும் பயனின்றி இறந்து மீண்டும் மீண்டும்
பிறப்பதற்கு அவர் செய்த ஊழ் வினைகளே தொழிலாகி இறக்கின்றார், என்கிறார் திருநாவுக்கரசு நாயன்மார்.
---------------------------------------------------------------
தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கும் திருநீறினையும்,
பிறவிச் சுழலில் சிக்கித் தவிப்பவருக்கும் அபயம் தந்திடும்
நமசிவாய மந்திரத்தின் மாண்பினையும் இவ்வாறாய் எடுத்துரைக்கிறார் அப்பர் பெருமான்.
உம்மையில் தொடர்ந்த வினைகள், இம்மையில் அவன் பாதம் பற்றி அகற்றா வினைகள்,
எல்லாம் சேர்ந்து, மறுமையினைத் தொடர்வதற்கு தொழிலாகவே மாறி விடுகின்றனவாம்.
'ஒருகாலும்' என்ற சொல்லாடலை கவனிக்கவும். ஒருமுறையேனும், மேற்சொன்னவற்றைச்
செய்தாலும், அந்த நற்செயலின் பயனே, நாதனின் அருளைத் தந்திடாதோ.
நற்பயன்களின் தொடர்ச்சியால், வினைப்பயன்கள் வெந்து மடியாதோ.
---------------------------------------------------------------
சென்ற பதிவில் கேட்ட பாடலை இங்கும் கேட்கலாம்: ('உலகெலாம் உணர்ந்து...'தனை தொடர்ந்து கேட்கவும்)

பாடுபவர் : ரஞ்சனி & காயத்ரி
வயலின் : சாருமதி ரகுராமன்
மிருதங்கம் : அருண் பிரகாஷ்
கடம் : குருபிரசாத்
ராகம் : சுத்த தன்யாசி

Ulagellam unarndu....


பி.கு:
விருத்தம் முடிந்தபின், அடுத்த பாடலாக, நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய 'தேறுவதெப்போ நெஞ்சே...' என்ற பாடல் துவங்குகிறது. அந்தப் பாடலை, இன்னொரு சமயம் பார்ப்போம்.