Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

Thursday, December 13, 2018

அரிய புதியதோர் நுண்ணுயிர்!

அத்தனை உலகமும் வர்ணக் களஞ்சியமாகப்
பல பல நல்லழகுகள் சமைத்தாய்!

உலகில் உள்ள உயிர் வகைகளை மனிதன் என்றும், மிருகம் என்றும், பறவை என்றும், நீர் வாழ் மீன்கள் என்றும், தாவரம் என்றும், நுண்ணுயிர் என்றும் பலப்பலவாக அவற்றின் உருவாக்கத்தின்படி அறிவியலார் பிரிவுகளாக வகுத்தனர். அவ்வகைகளில் அவ்வப்போது புது உயிரினம் கண்டுபிடிக்கப்படும்போது அவை ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு வகையின் சிறிய சூழ்நிலை மாற்றமாகவே இருந்து வருகிறது. 

இரன்டு வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஒரு நுண்ணுயிரோ, இது வரை அறியப்பட்ட இன வகைகளில் இருந்து அப்பாற்பட்டு புது இன வகையாய் இருப்பதை அறிந்த ஆராய்சியாளர்கள் ஆச்சரியப்பட்டார்கள். ஹெமிமாஸ்டிகோட் (hemimastigote) என்ற வகையினை சார்ந்தது இந்த நுண்ணுயிர்.

தற்செயலாய் ஒரு மாணவர் மலையேற்றத்தின் போது கொண்டு வந்த மண்மாதிரியினை சோதனைக்கூடத்தில் சில நாட்களாக சோதனை செய்ய, தற்செயலாய் நுண்ணோக்கியில் தெரிந்த அசைவுதான் இந்த நுண்ணுயிர் கண்ண்டுபிடிக்க காரணமாய் அமைந்ததாம்.
 
இந்த நுண்ணுயிரை நுண்ணோக்கி மூலமாக எடுக்கப்பட்ட படம் இது:


படம் மூலம்: யானா எக்லிட் (Yana Eglit)

இவ்வகையில் 100 வருடங்களுக்கு முன்னாலேயே சுமார் 10 நுண்ணுயிர்கள் இருப்பது அறியப்பட்டாலும், மரபணுச் சோதனகள் இதுவரை செய்யப்படாததால், இவை ஏற்கனவே அறியப்பட்ட உயிரின வகையா, இல்லை புதியதோர் இனவகையா என்பது இதுவரை தெரியாமல் இருந்தது. DNA Sequencing எனப்படும் மரபணுத் தொகுத்தலின் வழியாக செய்யப்பட்ட சோதனைகள் இந்நுண்ணியிர் எப்படி மற்ற இன வகைகளில் இருந்து மாறுபட்டு இருக்கின்றனதென அறிந்துள்ளனர். இவை பேக்டீரியா மற்றும் காளான் வகைகள் எந்த மூல வகையில் இருந்து இருந்து உருவானதோ அவற்றில் இருந்து உருவாகியிருக்க வேண்டும் என்கின்றனர்.பேக்டீரியா போன்ற நுண்ணுயிர் இதுவானாலும், பேக்டீரியா போல் அல்லாமல், இந்த நுண்ணியிர் வகைக்கு நுண் அங்கங்கள் இருப்பது வியப்பினைத் தருகிறது. அவை எப்படி உணவு உட்கொள்கின்றன எனபதனையும் நுண்ணோக்கி மூலமாக சோதித்து அறிந்துள்ளனர்.

மேலதிக விவரங்களுக்கு இந்த  செய்தியினைப் பார்க்கவும்.


Sunday, November 25, 2018

அணுவில் ஆனந்த நடனம்!

பொருட்கள் யாவும் அணுக்களின் கூட்டுத் தொகுதி என்பதையும் அவ்வணுக்களின் மத்தியில் அணுக்கருவும் அவற்றைச் சுற்றி சுழலும் எலக்ட்ரான்களைப் பற்றியும் நாம் படித்திருக்கிறோம்.





ஒரு அணுவில் அதன் கருவானது மிக மிகச் சிறிய அளவில் தான் இருக்கிறது. அக்கருவினை சுற்றி வரும் எலக்ட்ரான்களும் ஆங்காங்கே தான் இருக்கின்றன.

உதாரணத்திற்கு உறுதியான இரும்பினை எடுத்துக்கொள்வோம்.
அதன் அணுவின் மொத்த எடையில் 99.5 சதவிகிதம் அதன் அணுக்கருவில் இருந்தாலும், அவ்வணுக்கரு அணுவின் மொத்த கொள் அளவில் 0.0000000000001 சதவிகிதமே எடுத்துக்கொள்கிறது. அப்படி என்றால், அவ்வணுவின் மீதமுள்ள 99.999999999999 சதவிகிதம் கொள்ளளவில் இருப்பது என்ன?  கருவினை சுற்றி வரும் எலக்ட்ரான்களும் அங்கிகெனாதபடி இருக்க, மீதம் இருப்பதில் பெரிதும் வெறும் வெற்றிடம் தானா?

அப்படி ஒவ்வொரு அணுவிலும் பெரிதும் வெற்றிடமே இருக்கிறது என்றால், இரும்பினை நம் விரலால் அழுத்தினால் ஏன் அது இலகுவாக அழுந்துவதில்லை?

இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

முதலாவது : அணுக்கருவினை அதன் இடத்தில் வைத்திருக்கும் மின் விசையானது மிகவும் வலிமையாக இருப்பதனால், அவ்வணுக்களை எளிதல் இடம் பெயரச் செய்ய, வெறும் இலகுவான அழுத்தத்தால் முடிவதில்லை.

இரண்டாவது: சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் போல் எலக்ட்ரான்கள் அணுக்கருவினைச் சுற்றி வருவதில்லை. மாறாக பல எலக்ட்ரான்கள் ஒன்று சேர்ந்து பெருங்குழுவாக நடமாடுகின்றன.

இக்காணொளியில் பற்பல சிறு பறவைகள் குழுக்களாகக் கூடி சிம்ஃபொனி ஆர்க்கஸ்ட்ராவிற்காகவே நடனமாடுவதைப் போல எலக்ட்ரான்கள் நடமாடுகின்றன எனச் சொல்லலாம்.


அவற்றின் நடம் - நளினமாக நடனம் என்றே சொல்லலாம். ஒவ்வொரு குழுவும் தமக்கென்ன ஒரு முறையில் நடனமாடும். அம்முறையினை வகுத்திடும் கணிதச் சமன்பாட்டினை ஸ்க்ரோடிஞ்சர் சமன்பாடு என்பர்.

நாம் இரும்பினை அழுத்தும்பொழுது, எலக்ட்ரான் குழுக்களின் தொகுதியனைக் கலைக்கவோ அல்லது அகற்றவோ மிகவும் அதிகமான விசை அழுத்தம் தேவைப்படுகிறது. நமது விரலின் அழுத்தமானது அதற்குப் போதுமானதாக இல்லை. இதனால் அணுவில் கொள்ளளவில் பெரிதும் வெற்றிடம் என்றாலும், இரும்பானது எளிதாக அழுந்துவதில்லை. ஆனால் அதிகமான வெப்பத்தில் இரும்பினை உட்படுத்தும் பொழுது, அதன் எலக்ட்ரான் குழுக்கள் உடைந்து போய், உருகும் நிலைக்குக் கொண்டு செல்கிறது.

Sunday, October 14, 2012

அறியாமைதான் அன்பே பேரின்பமே - 2

சென்ற பகுதியைத் தொடர்ந்து, இரண்டாவது பகுதியொன்று எழுதுவேன் என்று நானே நினைத்துப் பார்க்கவில்லைதான் அப்போது. ஆனால், இந்த காணொளிப் படத்தினைப் பார்த்தபின்பு அதன் தொடர்ச்சியாகத் தோன்றத் தான் செய்தது.





காட்சிப் படத்தின் கருவினை, சுருக்கமாக இரண்டொரு வார்த்தைகளில்:
ஜில் போல்ட் டெய்லர் என்கிற மூளை சம்பந்தபட்ட நோய்கள் பிரிவு மருத்துவர் / ஆராய்சியாளர்  தனக்கே ஏற்பட்ட அனுபவங்களை மிகவும் உணர்வுபூர்வமாக சுவைபட விவரிக்கிறார்.


நோயாளிக்கு நோய் வருகையில் மருத்துவரைச் சென்று பார்க்கிறார்.
ஆனால் மருத்துவருக்கே நோய் வருங்கால்?
இந்த காட்சிப் படத்தில் அவர் தன்னைத்தானே ஆராய்சி செய்துகொள்ளும் பேறு பெற்றேன் என்கிறார். அப்படியொரு ஆராய்சியில் அவர் என்னதான் சொல்கிறார்?
மூளையில் இரண்டு பகுதிகளான வலது மூளை மற்றும் இடது மூளை ஆகியவற்றின் நிலைப்பாடுகளில் இருந்து தனித்தனியே செயல்படும் பொழுது:
(காணொளிக் காட்சிப் படத்தின் இறுதியில் 17:09 நிமிடங்கள் கடந்தபின்) 
வலது மூளையானது இப்படியாக செயல்பட்டதாம்: "நானே அண்ட சராசரங்களையும் இயக்கிடும் சக்தி. என் உடலில் உள்ள 50 டிரில்லியன் மூலக்கூறுகளுக்கும் (molecule) நான் ஆதார சக்தியாகவும், எல்லாப்பொருள்களுடனும் ஒன்றாகவும் தெரிகிறேன்."
இடது மூளையானது இப்படியாக செயல்பட்டதாம்: "நான் மற்றவர்களில் இருந்து தனிப்பட்டு, நான் என்கிற தனித்துவமானவர். நான் ஒரு மருத்துவர்...என்றெல்லாம்.".
"ஆகவே மக்களே, நமக்குள் இப்படியாக இரண்டு சாய்ஸ்கள் இருந்தால், எதை நீங்கள் தேர்ந்தெடுப்பீர்கள்? எப்போது?" என்கிற கேள்வியைக் கேட்டதோடு, இவாறு நிறைவு செய்கிறார்: "எந்த அளவிற்கு நாம் வலது மூளையில் அமைதியையும் சாந்தத்தையும் நிலைபெறச் செய்கிறோமோ அந்த அளவிற்கு நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம், உலகத்திலும் அமைதியையும், சாந்தத்தையும் திகழ்ச்செய்வோம்".

---------------------------------------------------------------------------

சென்ற பகுதியில் ஐம்புலன்களும் எப்படி ஆழ்மனதிற்கு "இடையூறு" என்பதைப் பார்த்தோம். அதுபோலவே, நமது வெளி உலக அனுவங்களும், நமது வெளியுலகக் கல்வியும் ஆழ் மனதிற்கு இடையூறாகவே இருக்கின்றன. அது எப்படி? நமது புத்தியில் சேகரிக்கப்படும் அனுபவங்களும், உணர்வுகளும் நம்மை திருப்பி வெளியுலக அனுபவதிற்கே இட்டுச் செல்கிறன.



படத்தில் காட்டியுள்ளபடி, மனதின் செயல்பாட்டுப் பகுதிகளாக, ஆழ்மனம், சித்தம், அகங்காரம், புத்தி எனப் பிரிக்கலாம். சித்தம் என்பது சிந்திக்கும் வேலையைச் செய்யும் பகுதியாகும். சித்தம் என்னும் பகுதியில், மனதினால் அறிந்ததை, புத்தி என்னும் சேமிப்பு கிடங்கிலிருந்து கிடைத்த தகவல்களின் அடிப்படையில், "முடிவுகளை" எடுக்கிறது. அகங்காரத்தின் உதவியால் எல்லா செயல்களையும, முடிவுகளையும் தன்னோடு (ஜீவனோடு) இணைத்துப்பார்க்க இயல்கிறது.

மேலே குறிப்பிட்ட மனதின் வரை படத்தின் எல்லைகளை ஒரு அமீபா செல்லின் செல் சுவர்களோடு ஒத்து நோக்கவும். ஆமீபாவின் செல் சுவர்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட வரையுரைக்குள் இல்லாமல் இப்படியும் அப்படியுமாக பெருத்தும் சிறுத்துமாகிக் கொண்டே இருக்கும். அதற்கு ஒப்பாக, மனதில் சித்தம் விகாரமடைத்து, ஆழ் மனமானது புத்தி, அகங்காரம் மற்றும் ஐம்புலன்களின் ஈடுபாட்டால், தன் வயப்பட இயலாமல் போகிறது.

இதனாலேயே நம்மால், "தன்னை" அறியாமல் போவதற்கு ஏதாகிறது.



Friday, November 05, 2010

எந்திரன் எனக்குள் என்ன செய்கிறான்?

னித உடல் பாகங்களில் மூளையே மனிதனை நடத்துவிக்கும் "தலைமைச் செயலகம்" என்று எல்லோரும் சொல்லிக் கொண்டிருக்கிறோம் அல்லவா!
சமீப கால கண்டுபிடிப்புகள் அந்த சொல்லாடலைக் கேள்விக்குறியாக்கி கொண்டிருக்கின்றன.

கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.
உங்கள் வயிற்றுக்குள் சின்னச் சின்னதாக எந்திரன் பலப்பல உட்கார்ந்து கொண்டு உங்களை ஆட்டிப் படைப்பதாக...
என்னது என்பவர்கள், வாங்க பாக்டீரியா உலகத்திற்கு.

உங்கள் உடலில் உள்ள செல்களின் மொத்த எண்ணிக்கையில் 90 சதம் உங்களது அல்ல. உண்மையில் அவை யாவும் பாக்டீரியாக்கள்தான்!

பாக்டீரியா எனப்படும் இந்த நுண்ணுயிர்கள் தங்களுக்குள் சங்கேத மொழியில் பேசிக்கொள்கின்றன. இரசாயனங்கள் மூலமாக செய்திகளை பறிமாறிக்கொள்கின்றன. தங்களுக்குள் கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன. பாக்டீரியா அல்லாத செல்களுடன் கூட அவை தொடர்பு கொள்கின்றன. ஆய்வாளர்கள் அவற்றுக்கு "சமூக அறிவு" இருப்பதாகக் கூறுகிறார்கள். இனி யாரும் மனிதர்களை தனி நபர் என்று சொல்ல முடியாது! அவர்களுக்குள் குட்டி எந்திரன் பேக்டீரியாக்கள் அவர்களை வாழவோ, வீழ்த்தவோ செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் இருப்பதால். அப்படி அவற்றால் என்னதான் செய்ய முடியும்?

நாம் உண்ணும் உணவில் இருக்கும் சக்திகள் நமக்கு போய்ச்சேருவதை பாதித்தல், குடற்பகுதிச் செல்களின் முதர்ச்சி அடைதல் மற்றும் ஊக்குவித்தலை பாதித்தல் போன்றவற்றில் பாக்டீரியாக்களுக்கு பங்கிருப்பதாகச் சொல்கிறார்கள். உடற் செயல்பாடுகளில் இதனால் இவற்றின் பங்கு முக்கியான பாதிப்பனை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.

பாக்டீரியாக்களை தொந்தரவு செய்தால், அவை நச்சுத்தனமையைக் கூட ஏற்படுத்தக்கூடும். பாக்டீரியாக்களைப் பற்றியான ஆராய்ச்சிகள் சொல்லும் முடிவுகள் தற்கால மருத்துவத்தில் பெரிதானதொரு மாறுதலை ஏற்படுத்தும் என்பதை கட்டியம் சொல்லலாம். இனிமேல் மருத்துவர்கள் பாக்டீரியாக்களை போட்டுத்தள்ளும் மருந்துகளை அவ்வளவு எளிதாக பரிந்துரைப்பது என்பது கேள்விக்குறியாகிடும். பாக்டீரியாக்கள் அம்மருந்துகளைக் கூட மறுதலிக்கச் செய்யும் ஆற்றலை நாளடைவில் வளர்த்துக் கொள்ளக்கூடயதாகவும் உள்ளன.

நல்ல மனநிலைக்கும் பாக்டீரியாக்கள் காரணியாகின்றன. மனித மூளையினை செயல்படுத்தும் அதே இரசாயனங்களை பாக்டீரியக்கள் செலுத்த முடியும். குடல் பகுதியில் இருக்கும் நரம்புத் தொகுதிகளுடன் அங்கிருக்கும் பாக்டீரியாக்கள் தொடர்ந்து தொடர்பு கொள்கின்றன. தயிர் போன்ற உணவுகளில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை உண்பது மூலமாக நல்ல மனநிலைக்கு உதவிடலாம் என்றும் சொல்கிறார்கள். ப்ரோ-பயோடிக் எனச் சொல்லப்படும் பாக்டீரியாக்கள் மருந்து வடிவிலும் கிடைக்கிறது. சீரியல் போன்ற காலை உணவுகளில் கூட ப்ரோ-பயோடிக் பாக்டீரியாக்கள் சேர்த்துத் தர இருக்கிறார்கள். இப்படியாக, நம் உடலுக்குள் இழந்த பாக்டீரியாகளைச் சமன் செய்வதன் மூலமாக உடலுக்குள் இருக்கும் சுற்றுச்சூழல் மாசினை சரிசெய்ய முயல்கிறார்கள்.

பாக்டீரியா ஆராய்சிகள் சொல்லும் மேலும் பல தகவல்களை இந்த அருமையான உரையில் நீங்களே கேட்டுப்பாருங்கள்:

Sunday, February 15, 2009

வானத்தில் ஒரு மாடு : ரிஷபம்

தானென்று சொல்லி தனக்கு ஒப்பிலா
வானதன் வன்னமது காண்!

தான், நான், எனக்கு... - என்னும் கூற்றுகளில் சிக்கிட, தனக்கு ஒப்பிலா வானம் போல், எங்கும் நிறைந்திருக்கும் இறையையும் கண்டு கொள்ள இயலுவதில்லை. வானத்தில் எப்போதும் விண்மீன்கள் ஒளிர்ந்து கொண்டிருப்பினும், அவை யாவையென கண்டும் காணமல் இருப்பது போல. ஒப்பிலாதவனின் ஒருதுளியாய் இருப்பினும், அவனின் பூரண ஒளியினைக் காண்பது என்பது அவ்வளவு எளிதானதாக இருப்பதில்லை. இருப்பினும், அவன்/அது எவ்வாறெல்லாம் சமைந்திருக்கிறான்/றது என்பதை ஒவ்வொன்றாக ஆராய்ந்து அறியலாம் அல்லவா!

எங்கெங்கும் நிறையும் இறை, எத்தனை எத்தனை விந்தைகளில் சமைகிறான்!
அவற்றில் சில துளிகளை இங்கே படங்களில் பார்த்து பரம் வசப் படலாமா?

வானத்தில் தெரியும் விண்மீன் கூட்டங்களுக்கு பலவாறான உருவங்களைக் கொடுத்து, அவற்றைப் பற்பல பெயர்களில் வழங்குவது நமக்குத் தெரிந்ததுதான் அல்லவா. இங்கே 'ரிஷபம்' என்னும் மாடு வடிவிலான விண்மீன் தொகுதியினைப் பார்ப்போமா!

Stellarium எனும் மென்பொருள் மூலமாக கீழே இருக்கும் படங்கள், பிப்ரவரி மூன்றாம் தேதி எடுத்தவை. இவற்றில் சந்திரன், ரிஷப விண்மீன் தொகுதியினுள் இருப்பதைக் காணலாம்.

ரிஷபம்





மேலே இருக்கும் இரண்டு படங்களும் இந்த ரிஷப நட்சத்திரத் தொகுதியினைக் தொகுத்துக் காட்டுதல்லவா.
இத் தொகுதியில், அந்த மாட்டின் வலது கண் பக்கத்தில், பெரிதாய்த் தெரியும் நட்சத்திரம் தான் ரோகிணி. இதற்கு ஆங்கிலத்தில் வழங்கப்படும் பெயர் Aldebaran (87 Alpha Tauri). நமக்கு, 65 ஒளியாண்டுகள் தூரத்தில் இருக்கும் ரோகிணி, சூரியனை விட 40 மடங்கு பெரியது, 125 மடங்கு ஒளி மிகுந்தது.
அடுத்த படத்தில், ரோகிணி பற்றிய தகவல்களையும், அதன் அருகே உள்ள நட்சத்திரங்களையும் பற்றி விவரமாகக் காணலாம். படத்தைப் பெரிதாக்கிப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்.


முதல் இரண்டு படங்களில், மாட்டின் வயிற்றுப் பக்கத்தில், சந்திரனுக்குப் பக்கத்தில், புள்ளி புள்ளியாக சில நட்சத்திரங்கள் தெரிகிறதல்லவா. அவற்றை அருகில் சென்று பார்ப்போம், அடுத்த படத்தில்:



அட, ஆறு நட்சத்திரங்கள் எளிதாகத் தெரியுது!. இவை தான் கார்த்திகை நட்சத்திரம்(ங்கள்!). இவற்றோடு அங்கிருக்கும் ஏழாவது நட்சத்திரத்தினையும் சேர்த்து ஆங்கிலத்தில், இவற்றின் தொகுதியை Pleiadas என வழங்குவர். கிரேக்கக் கதைகளில், இவற்றை, 'Seven sisters'(Alcyone, Electra, Maia, Merope, Taygete, Celaeno மற்றும் Asterope) என்பர். ஆறேழு மட்டுமல்ல, இருநூறுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் இங்கே கொட்டிக் கிடக்கு. கீழே இருக்கும் படத்தில் பாருங்கள், நட்சத்திரப் படலமாகத் தெரியும் இவை:

ஜப்பானியர்கள், இந்நட்சத்திரத் தொகுதியினை 'Subaru' எனவும், ஈரானியர்கள் 'Soraya' எனவும் பெயரிட்டனர்!.

அடுத்து நாம பார்க்கப்போகிறது ஒரு நெபுலா.(Nebula). இது ஒரு நடசத்திரத் துகள் படலம். தூசிபோல, ஒரே நட்சத்திரத் துகள்களாப் படிந்து இருப்பது. இந்த ரிஷப தொகுதிக்குள்ளே, மாட்டின் முதல் கொம்புக்கு அருகே (முதல் படத்தில் சதுரக் கட்டத்தினுள் இருப்பது), இதுபோல ஒன்றைப் பார்க்கலாம்.



அடுத்த படத்தில், இதே நெபுலாவினை, நமது தொலைநோக்கியை உற்று நோக்கச் செய்து, பக்கத்தில் போய் பார்க்கலாமா?
வாவ்!


இதற்குப் பெயர் Crab Nebula. நமக்கு 6,500 ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ளது. 1054ஆம் வருடம், இந்த நெபுலா ரொம்ப பிரகாசமாக இருந்ததாம், பகலிலேயே தெரிகிற அளவிற்கு!. பெரிய நட்சத்திரங்கள் வெடித்துப் போகும்போது, அதன் மீதமே, இதுபோன்ற படலங்கள். இந்த நெபுலாவுக்கு நடுவிலே, pulsar எனும், அந்த வெடித்துப்போன நட்சத்திரத்தின் கரு, இன்னமும் விட்டு விட்டு எரிந்துகொண்டே இருக்கிறதாம்!

Saturday, August 30, 2008

அடி வயிற்றைக் கலக்கும் டொர்னடோக்கள்

டொர்னடோ என்கிற பேரைக் கேள்விப் படாதவருக்கு, நம்ம ஊரில் அதைப்போல வேறொன்றைக் காட்டி - இதைப்போல என விளக்குவதற்கு, ஏதுமில்லாதபடி இருக்கிறது. சுழற்றி இழுக்கும் சூறாவளிப் புயல் காற்று எனச் சொன்னால் அது தோராயமாகத்தான் இருக்கும். வானத்தில் இருந்து தரையை தொட்டுப்பார்க்கும் (இதற்கு 'touchdown' எனப்பெயர்) இதன் நீளம், வானத்தில் இருந்து தரை வரை என்றால், அதன் பிரம்மாண்டம் பிரமிக்க வைக்கிறது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் மட்டும் ஆயிரக்கணக்கான டொர்னடோக்கள் ஏற்படுகின்றன. இவற்றில் சில நொடிகளே நீடிப்பவையும் உண்டு. பெரும் பொருட்சேதங்கள் ஏற்படுத்துவையும் உண்டு. முன் அறிவுப்பு மூலமாக, உயிர்சேதம் மட்டுப்படுத்தப் பட்டாலும், அதன் அபாயம் என்றைக்கும் இருந்து கொண்டேதான் இருக்கிறது.

பூகம்பம், எரிமலை, சுனாமி என இயற்கைச் சீற்றங்கள் பலவும் இருந்தாலும், டொர்னடோக்கள் அவற்றில் இருந்து மாறுபட்டவை. அவை வானத்தில் இருந்து வருவதால், டொர்னடோவின் நகர்வினை யாராலும் முழுமையாக கணக்கிட முடிவதில்லை. இதுவரை நிகழ்ந்தவற்றில் இருந்து கிடைத்த பொதுவான காரணிகளில் இருந்து, டொர்னடோ நிகழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை தோராயமாக மட்டுமே கணிக்க இயல்கிறது. அக்காரணிகள் என்னவென்றால்: தரையின் அருகே இருக்கும் சூடான, அதே சமயத்தில் ஈரப்பதமான காற்று, கிழித்து வீசும் காற்று, உயரம் போகப்போக காற்றின் வீச்சில் தெரியும் திசை மாற்றம் ஆகியவையாகும். இடி மின்னலோடு ஏற்படும் சூறாவளிக் காலங்களில், காற்றும் சுழன்று வீசுவதால், அக்காலங்களில் டொர்னடா நிகழ்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

அமெரிக்காவில் நிகழும் டொர்னடாக்களில் பெரும்பான்மையானவை, மத்திய அமெரிக்காவில் மார்ச் மாதம் முதல் ஜூலை மாதம் வரையிலும் உள்ள காலத்தில் ஏற்படுகின்றன. தெற்கு டகோடா மாநிலத்தில் இருந்து டெக்ஸாஸ் மாநிலம் வரைக்கும் இடைப்பட்ட மாநிலங்களில் தான், இவை அதிகமாக நிகழ்கின்றன. ராக்கி மலைத்தொடர்களில் இருந்து வரும் குளிர்ந்த மற்றும், வரண்ட காற்று, அதே சமயம் தெற்கில் மெக்ஸிகோ வளைகுடாவில் இருந்து வடக்கே நகரும் சூடான, மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகையில் - எதிர் எதிர் துருவங்கள் சந்தித்தால் என்னவாகும்? மழையும், பனிக்கட்டி மழையையும் பொழிய - இவற்றின் கலவை தான் காலிஃபிளவர் போன்ற தலையுடன் வானத்தை நோக்கி விரியும், டொர்னடோ. டொர்னடோவின் முழு சக்தியையோ, வீச்சையோ வல்லுனர்களால் நேரடியாக அளவிட இயலாததால், அவற்றில் ஏற்படும் பாதிப்புக்களைக் கொண்டே அவற்றை அளவிட வேண்டியுள்ளது. எங்கள் வீட்டுப் பக்கத்தில், டொர்னடோ வருவதற்கு முன்பான ஆலங்கட்டி மழைகளால் மட்டுமே அவர்களின் வீட்டின் கூரைக்கு இழப்புகள் பல ஆயிரம் டாலர்கள். நல்ல வேளை டொர்னடோ தரையைத் தொடவில்லை அன்று. வீட்டின் கூரையின் மேல், படபடவென்று யாரோ கற்களை எறிந்ததுபோல இருக்க, நாங்களோ செய்தி அறிக்கையை கேட்டவாறே, அடுத்த 15 நிமிடங்களுக்கு, குளியலறையில், பாத்ரூம் டப்பில் பதுங்கிக் கொண்டோம்!


டொர்னடோ வரப்போகிறது என்று தெரிந்தால், வீட்டின் அடிமட்டத்திலோ அல்லது வேறு ஒரு பாதுகாப்பான இடத்திலோ, தஞ்சம் அடைய மக்கள் அறிவுருத்தப்படுவார்கள். சராசரியாக, டொர்னடோ உருவாகத் துவங்கிய இடத்தில், அதற்கு கீழே வசிப்பவர்கள், பாதுகாப்பான இடத்தில் பதுங்கிக் கொள்ள இருப்பது 13 நிமிடங்கள் தானம். அதற்குப்பின் டொர்னடோ தரையைப் பதம் பார்க்க வாய்ப்புகள் அதிகம். அதனால், அந்தப்பகுதியை விட்டு பாதுகாப்பான வேறு இடத்துக்குப் பயணிக்ககூட நேரம் இருக்காது. தரையை தொட்டுவிட்டலோ, அங்கு குடியிருப்பு ஏதேனும் இருந்தாலும், அது அநேகமாக, வானத்தில் பறந்திருக்கும். பல இடங்களில், வெளியில் நிறுத்தப்பட்டைருந்த வாகனங்களும், வீட்டின் கூரையும், மேல்தளமும் சிதைந்து சின்னபின்னமாகியுள்ளன.

1996 இல் வெளிவந்த திரைப்படமான 'டிவிஸ்டர்' மிகவும் சுவாரஸ்யமாக டொர்னடோக் கதையைச் சொல்லி இருக்கும். இத்திரைப்படத்திற்குப்பின் டோர்னடோக்களைத் தேடிப்போய் அவற்றைப் புகைப்படம் எடுப்பவர்களும் அதிகமானார்கள். இது உயிருக்கு ஆபத்தான செயல் என்றாலும், அதையும் பணயம் வைத்து, இந்தக் காரியத்தில் இறங்குகிறார்கள். மோசமான தட்பவெட்ப நிலையிலும், பற்கள் கடுகடுக்க, அவர்களின் வாகனங்களை பனிக்கட்டி மழைகள் பதம் பார்க்க, டொர்னடோ தொடருதல் நடைபெருகிறது. சில அஞ்சா நெஞ்சங்கள்(/ளை) டொர்னடோவைக் காட்டுவதற்கு டூர் அழைத்துப்போகும் கைட் போல வேலை செய்வதும் உண்டு. ஆனால் நிச்சயமாக அது நயகரா நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் செல்வதுபோல எளிதானதாக இருக்காது! :-)

அமெச்சூர் டொர்னடோ வேட்டையாளர்களைப் போலவே, அறிவியல் ஆராய்சியாளர்களும் டொர்னடோக்களைத் தேடிப்போவதுண்டு. நிலையான ராடார் கருவிகளைக் கொண்டு மட்டும் இவற்றை ஆய்வு செய்ய இயலாது. டொர்னடோ நிகழ்ப்போகும் இடத்தில் கொண்டுபோய் டாப்ளர் ராடார் கருவுகளைப் பொருத்துவதால் ஓரளவுக்கு பயனிருக்கிறது. இப்படி ஆராய்சியாளர்கள் தங்களால் இயன்ற அளக்கும் கருவிகளை தயார் செய்து, அங்கு வைத்து விட்டு வந்தால், பல சமயம், இந்த சுழற்காற்றுகள், ஒன்றுமில்லாமல் இற்றுப்போய் விடும். அடுத்த முறை வரை, அவர்கள் காத்திருக்க வேண்டியதுதான்.

சமீப ஆண்டுகளில் சற்றே முன்னேறியிருக்கும் GPS போன்ற நுட்பங்களும் இந்தப் பணியில் கைகொடுக்கின்றது. டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள அவற்றுக்கு எவ்வளவு அருகே செல்லமுடியுமோ அவ்வளவு அருகில் சென்று அவற்றைப்பற்றிய புள்ளி விவரங்களை சேகரிப்பது அவசியமாகிறது. இதற்காக, ஆராய்சியாளர்கள், அமெச்சூர் காரார்களையும் உதவிக்கு கொள்கிறார்கள். டொர்னடோ பற்றியான புள்ளி விவரங்களைச் சேகரிக்கும் சின்னச்சின்னக் கருவிகளை, டொர்னடோ வரும் பாதையில் கொண்டுபோய் வைத்துவிட்டு, உடனே அந்த இடத்தைவிட்டு அகன்று விடுவார்கள். அவற்றில் ஒன்றான, 'டின்மேன்' எனப்படும் டொர்னடோக்களை படம் பிடிக்கும் கருவி, பிரபலம். இதன்மூலம், டொர்னடோவைப்பற்றிய தகவல்கள் மற்றும் படங்களை அவை மிக அருகாமையில் வரும் சமயம் பதிவு செய்ய முடிகிறது. இந்த தகவல்களின் உதவியால் வெப்பம், ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் மாறிக்கொண்டே இருக்கும் காற்றின் திசை ஆகியவற்றை மேலும் துல்லியமாக கணிக்க இயல்கிறதாம். தொடரும் ஆராய்ச்சிகள், டொர்னடோக்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வழி வகுக்கும் என்ற நம்பிக்கையுடம் ஆராய்ச்சியாளர்கள் தங்கள் பணியைத் தொடருகிறார்கள்.

Friday, May 20, 2005

நுண்பொருள் திரைப்படவியல்

அறிவியலில் வேகமான வளர்சியில் பல மைல்கற்களை கடந்து வேகமாக முன்னேறிக்கொண்டு இருக்கிறோம். ஆனாலும், மனித இனத்தால் கற்பனையில்கூட எட்ட இயலா உயரத்தில் இயற்கை வளர்ந்து இருக்க, இதெல்லாம் எப்படி சாத்தியம் என்று தினம்தினம் வியந்து கொண்டே இருக்கிறான் மனிதன். (நம்மூர்காரர்கள் வெட்டி மேடைப்பேச்சில் காலவிரயம் செய்வது வேறு விஷயம்). வெற்று சூனியமாகத் தெரியும் அண்ட வெளிகளை ஆராய்வது மட்டுமில்லாமல், தன் சொந்த பூமியையும், அதிலுள்ள எண்ணற்ற உயிர் வகைகளையும் மனிதனின் வியப்பு ஆராயச்செய்துள்ளது. உயிர் வகைகளில் முதல் முதலாக தோன்றியிருக்க வேண்டிய நுண் உயிர்களை ஆராய்வதில் மேலும் ஒரு விஞ்ஞான முன்னேற்றம் - நுண்பொருள் திரைப்படவியல்.

நுண்பொருள் திரைப்படவியல் - MicroCinematography - என்பது நுண்ணிய பொருட்களை படம்பிடிப்பதாகும். இந்த துறையின் பயன்பாடுகள்:
* ஆராய்சிகளில் நுண்நோக்கியுடன் இணைக்கப்பட்டு நுண்ணுயிர்களை படம்பிடித்தல்
* மருத்துவத்துறை - உடல் உருப்புகள், கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி போன்றவற்றை முப்பரிமாண படம் பிடித்தல்
* திரைப்படத்துறையில் சிறப்புக் காட்சிகளில் வியத்தகு special effects காட்சிகளை உருவாக்குதல்

நுண் உயிர் ஆராய்ச்சி:
அமீபாவையும், செல்களையும் எத்தனை நாள்தான் பாடப்புத்தகங்களிலேயே கருப்பு வெள்ளை படங்களிலேயே பார்த்துக்கொண்டு இருப்பது?
அதற்கு அடுத்த கட்டமாய் நுண்நோக்கிகளில் பார்த்து வந்தோம். எனினும் இதுவும் இரண்டு பரிமாண தோற்றமே. இதற்கு அடுத்த நிலையாக இதே நுண்நோக்கிகளில் மிக நுண்ணிய CCD கேமராக்களைப் பொருத்தி நுண் உயிர்களின் அசைவுகளைப் படம் பிடிக்கும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. படமாக பிடிப்பதால் பல்வேறு நன்மைகள் உள்ளன. பல்வேறு நோக்குகளில் படம் பிடித்து அவற்றை முப்பரிமாணப் படமாக உருவகம் செய்யலாம். மென்பொருள் கொண்டு தானியங்கி ஆய்வுகளை மேற்கொள்ளலாம். இன்னமும் மேலும் பல ஆய்வுகள் டிஜிடல் படமாக மாற்றியபின் சாத்தியமாகின்றன.
நகரா படங்களை மட்டுமே பார்த்து வந்த நிபுணர்களும் இப்போது இந்த நேர இடைவெளையை குறுக்கி, செல்களை நம் பார்வையில் 'நகர' வைத்த படங்களைப் பார்த்து வியக்கிறார்கள். செல்களும், ஏனைய நுண் உயிர்களும் இத்தனை வேலைகளை செய்கின்றனவா என்று, புதியதொரு புரிந்துகொள்ளுதலை உருவாக்கியுள்ளன இந்த படங்கள்.

இருபதாம் நூற்றாண்டில் நுண்பொருள் திரைப்படவியல் வளர்சிகளைச் சித்தரிக்கும் குறும்படம் பார்க்கலாமா? சுட்டுங்கள் இங்கே. (QuickTime Player தேவை)

செல்கள் எவ்வாறு தோன்றுகின்றன, மறைகின்றன, எவ்வாறு ஒன்றுக்கொண்று பேசிக்கொள்கின்றன போன்ற பல விஷயங்களை நிபுணர்களும், ஆர்வலர்களும் விளக்கப்படங்களாக செய்து இந்த இணையதளத்தில் வெளிக்கொணர்ந்துள்ளனர். நீங்களும் பார்த்து, கேட்டு பயனடையாலாமே!

மருத்துவத்துறை:
நுண்பொருள் திரைப்படவியலின் உதவியால், இப்போது கருவில் வளரும் குழந்தையின் வளர்ச்சியை முப்பரிமாணத்தில் கண்காணிக்க முடியும். இரு பரிணாமத்தில் ஸ்கேனர் கொண்டு ஒருசில நோக்குகளில் மட்டுமே கண்காணிக்க முடியும் என்ற நிலைமாறி, இப்போது எந்த சமயத்திலும், எந்த நிலையிலும் கருவில் வளரும் குழந்தையின் முப்பரிமாண தோற்றத்தை அச்சில் வார்க்கமுடியும் என்பது பெரியதொரு முன்னேற்றமாகும்.
மேலும் லேசர் அறுவை சிகிச்சை போன்ற அதி நுண்ணிய சிகிச்சைகளுக்கு நேரடியாக நுண்ணிய பகுதிகளை திரையில் பார்த்தவாறு நிபுணர்கள் அறுவை சிகிச்சையில் ஈடுபட பேருதவியாய் இருக்கிறது இந்த நுட்பம்.

திரைப்படத்துறை:
அறிவியல் வளர்சிக்கு மட்டுமல்ல, பொழுதுபோக்கிற்கும் பயன்படுகிறது இந்த துறை. மென்பொருளால் உருவாக்கப்படும் மாயத்தோற்றங்களை நிஜமான உருவங்கள் போல பெரிய திரையில் தோற்றமளிக்கச் செய்யும் சாகசமெல்லாம் நுண்பொருள் திரைப்படவியல் கொண்டு சாத்தியமாகிறது.

Sunday, April 03, 2005

மலேரியா

சமீபத்தில் அமெரிக்க நோய்தடுப்பு நிறுவனமான CDC இந்தியாவிற்கு பயணம் செய்பவர்களுக்கு மலேரியவைப்பற்றி எச்சரிக்கை விடுத்தது. ஒவ்வொரு வருடமும் 2 மில்லியன் பேர் மலேரியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1000 பேர் மலேரியாவில் இறப்பதாகவும் செய்தி சொல்கிறது.
செய்தியின் சுட்டி இங்கே.
பல நூற்றாண்டுகளுக்கு, இந்தியாவில் மலேரியா பெரிய பிரச்சனை என்பது தெரியும். ஆனால் இன்னமும் மலேரியவின் தாக்கம் பெரிதுமாக இருக்கிறது.

70 களில் மிகப்பரவலாக இருந்த மலேரியா, பல்வேறு திட்டங்களின் உதவியால், கணிசமாக 80 களில் குறைக்கப்பட்டது. ஆனால், 80 களில் இருந்து இன்றுவரை பெரிதான முன்னேற்றம் ஏதும் இல்லை. 90 களில் புதிய காரணங்களாலும், தொழில்மயமாக்கத்தின் விளைவும், நீர்தேக்கங்களின் சரியான பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. ( பதிவின் இறுதியில் கொடுத்துள்ள அட்டவணை ஆண்டு வாரியாக விவரிக்கிறது)

மலேரியாவைபற்றி அடிப்படை தகவல்களை சேகரித்து இங்கு பதிவு செய்கிறேன்.

மலேரியா எவ்வாறு வருகிறது:
கொசு கடிப்பதால் என்று எல்லாருக்கும் தெரியும். ஆனால் பெண் கொசு கடித்தால் மட்டுமே வரும். எப்படி பெண் கொசுவை கண்டு பிடிப்பது என்று கேட்காதீர்கள். மாலை நேரத்திலிருந்து நள்ளிரவுக்குள் கடிக்கும் சொசுக்களில்தான் மலேரியா பரவுகிறது. அதாவது மலேரியா கிருமியை கொசு உங்களுக்கு இரவல் தந்து விடுகிறது. பெண்களை விட ஆண்களையே அதிகமாக கடிக்கிறதாம். (ஆமாம் சார், நம்புங்கள்!). கொசுவிற்கு மோப்ப சக்தி உண்டு. ஒருவரை முகர்ந்து பார்த்து, தனக்கு பிடிக்காவிட்டால் கடிக்காதாம்.

கடிக்கும் சொசுவிற்கு பற்கள் உண்டா?
கொசு கடிக்கிறது என்று சொல்வதை விட, குடிக்கிறது என்றே சொல்ல வேண்டும், உங்கள் இரத்தத்தை. 2-3 மூன்று நாட்களுக்கு ஒருமுறை 30 முதல் 150 முட்டைகள் வரை இடும் பெண் கொசுவிற்கு ஊட்டச்சத்து மிக்க பானமே உங்கள் ரத்தம்!. கொசு இரத்தத்தை உறுஞ்சுவதற்காக அதற்கு இரண்டு ஊசி போன்ற குழல்கள் உண்டு. ஒரு குழல் மூலம் இரத்தத்தை உறிஞ்சியவாறே, மற்றொரு குழல் மூலன் தன் எச்சிலை செலுத்துகிறது. எச்சிலில் உள்ள இரசாயனப் பொருட்கள், இரத்தம் கட்டிக்கொள்ளாமல் பார்த்துக்கொள்கிறது.
அதனால் உங்களுக்கு அதிகம் வலிக்காமலும், வீங்காமலும் இருக்கிறது. அப்போதுதானே அதன் வேலையயை தடையின்றி செயல்படுத்த முடியும்!

மலேரியாவின் அறிகுறிகள் என்ன:
அதிகமான காய்ச்சல், நடுநடுக்கம், சிலசமயம் குளிர் காய்ச்சல் மற்றும் வேர்த்துப்போகுதல்.

ஒருவருக்கு மலேரியா வந்துள்ளதா என தீர்மானிப்பது எப்படி:
இரத்தச் சோதனை மூலம், மலேரியா கிருமிகளில் எதேனும் ஒன்று இரத்தத்தில் உள்ளதா எனக் கண்டறிவது.

மலேரியாவை குணப்படுத்துவது பற்றி:
மலேரியாவை 48 மணி நேரத்திலேயே குணப்படுத்தி விடலாம். ஆனாலும், கவனிக்காமல் விட்டுவிட்டால், அபாயகரமான விளைவுகள் ஏற்படலாம்.

மலேரியா வராமல் தடுப்பது பற்றி:
மற்ற பல நோய்களுக்கு இருப்பதுபோல் வருமுன் தடுக்கும் தடுப்பூசி மலேரியாவிற்கு இதுவரை இல்லை. சாதரணமாக கொசு அண்டாமல் பார்த்துக்கொள்வதே மலேரியாவிலிருந்து தப்ப சிறந்த வழி. கதவு/ஜன்னல்களை மூடிவைத்தல், கொசுவர்த்தி/மேட்/லோஷன்/சொசு வலை போன்றவற்றை பயன்படுத்துதல் போன்ற வழிகளில்.
உயரமான மலைப்பகுதிகளில் (இந்தியாவில்) மலேரியா பரவும் வாய்ப்பு அதிகம்.
வீட்டிற்குள் இருளான பகுதிகளும், ஈரப்பதமான பகுதிகளும் கொசுக்கள் பதுங்கியுருக்க ஏதுவான இடங்கள். மாலை முதல் நள்ளிரவு வரை வீட்டுக்குள் புகுந்தபின் இதுபோன்ற இடங்களில் பதுங்கி இருந்து, பின்னர் நீங்கள் தூக்கியபின் உங்களை கடிக்கக்கூடும்.
உடுத்திய துணிகள் போன்றவற்றை கொடியில் தொங்கப்போட வேண்டாம்.
நீர்த்தேக்கங்களுக்கு (ஓடை, குளம்) அருகே வசிப்பர்கள் அதிக கவனமாக இருக்கலாம். நீர் தேங்குவதை முடிந்த வரை தவிர்க்கலாம்.

கடந்த ஆண்டுகளில் இந்தியாவின் மலேரியா புள்ளி விவரம்









































































































வருடம்பாதிக்கப்பட்டவர்
இறப்புகள்

1947

75 million

8,00,000

1961

49151

--

1965

99667

--

1976

6.47 million

59

1984

2.18 million

247

1985

1.86 million

213

1986

1.79 million

323

1987

1.66 million

188

1988

1.85 million

209

1989

2.05 million

268

1990

2.02 million

353

1991

2.12 million

421

1992

2.13 million

422

1993

2.21 million

354

1994

2.51 million

1122

1995

2.93 million

1151

1996

3.04 million

1010

1997

2.57 million

874

1998

2.09 million

648



மேலும் விவரங்களுக்கு:
உலக சுகதார நிறுவனம் ( WHO ) : மலேரியா பகுதி

மலேரியா தடுப்பூசி உறுவாக்கும் முயற்சிகள்