Showing posts with label திருஞான சம்பந்தர். Show all posts
Showing posts with label திருஞான சம்பந்தர். Show all posts

Friday, September 11, 2020

திருநெல்வாயில் அரத்துறை

பொன்னானவன் மணியானவன் முத்தானவன் 
சொன்னசொல்லானவன் பேச்சானவன் மூச்சானவன் 
ஒன்றானவன் ஒவ்வொன்றானவன் ஒவ்வொரு பொருளானவன் 
எனினும் தான்மட்டுமே தனக்கு நிகரானவன்.

தலம்: திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டத்துறை)
 
மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்

அம்பாள்: ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
 
திருவட்டத்துறை என்று தற்போது வழங்கப்பட்டு வரும் திருநெல்வாயில் அரத்துறைத் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலம். விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் உள்ளது.

ந்தாம் திருமுறையில் மூன்றாம் பதிகத்தில் நாவுக்கரசர் ஒவ்வொரு பாடலிலும் உலகியில் பொருட்களை ஒப்புமைக்கு எடுத்துகொண்டு சிவனைப் போற்றுகிறார். இப்பாடலில், பொன் போன்றவன், பொன்னின் சுடர் போன்ற மின்னல் போன்றவன், அன்னை போன்றவன் என்றெல்லாம் சொல்கிறார். இறுதியில், அவனுக்கு அவன் மட்டுமே ஒப்பானவன் என்கிறார். 
 
இது முரணாக உள்ளதோ என்றால், இல்லை. ஏனெனில் பொன்னின் குணத்தையும், மின்னலின் குணத்தையும், அன்னையின் குணத்தையும், ஏன் இன்னபிற எல்லாவற்றின் குணத்தையும் கொண்டவனாக அவன் இருக்கிறான். ஆகவே அவனது குணத்தை ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அந்த ஒரு குணத்துக்கு ஒப்பாக ஒன்றைச் சொல்ல இயலுமே தவிர, எல்லா குணங்களையும் கொண்ட ஒன்றாக இருக்கும் அவனுக்கு நிகர் அவன் மட்டுமே.
 
பொன் ஒப்பானைப், பொன்னிற் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அன்னை ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
- திருநாவுக்கரசர் தேவாரம் (பதிகம் 5.3 பாடல் 8)

திருமணம் நடக்க இருந்த போது, சுந்தரரை வலிய வந்து இறவன் தடுத்தாட் கொண்டதையும், சுந்தரருக்காக இறைவனே தூது போனதையும் அறிவோம். ஆனால் அடுத்துப் பார்க்கப் போகும் பாடலில் தன் நண்பர் பாவனையை விட்டுவிட்டு பிழைத்துப்போக வழிதேடி தொடர்ந்து வந்ததாக இரங்குகிறார்!  

ஏழாம் திருமுறையில், இப்பதிகப் பாடலில், சுந்தரமூர்த்திப் பெருமான் - ஒருவன் பிறந்தான்; பின் இறந்தான் என்று காலப்போக்கில் வெறும் சொல்லாக வாழ்க்கை கடந்து விடாமல் - பிழைக்கும் வழி கிட்டிட உன்னைத் தொடர்ந்தேன் என்கிறார்.   அவருக்காக அருள் செய்யவே, அகிலும் மணிகளும் இயற்கையாகவே தள்ளிக்கொண்டு நதியின் கரையை அடைவதுபோல், இயற்கையாகவே, வெண்மதி சூடிய பெருமான் நெல்வாயிலெனும் ஊரில் அரத்துறையில் கோயில் கொண்டான்.

கல்வாய் அகிலும் கதிர்மாமணியுங்
    கலந்து உந்திவரும் நிவவின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
    நிலவெண்மதிசூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
    நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
    தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே

- சுந்தரர் தேவாரம் (பதிகம் 7.3 பாடல் 1)

நிவவின் கரை - நிவா நதிக்கரை - தற்போது வடவெள்ளாறு. ஒரு சமயம் இந்த நிவா நதிக்கரையில் ஆதிசேஷன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி பெருமானும் அன்னையுடன் காட்சி அளித்தார். அவ்விடம் அன்றுமுதல் அரவம்+துறை = அரத்துறை என்று வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாலகன் திருஞான சம்பந்தர் இந்தத் தலத்திற்கு வருவதற்கு முன்பாக, அவரது பாத தாமரை நோகமல் இருக்க, இறைவனே முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களையும் அவருக்கு வழங்கி இந்த தலத்திற்கு அழைத்து வரப்பெறுகிறார் என்கிறது பெரிய புராணம். 

அந்த முத்துச்சிவிகையில் ஏறுவதற்கு முன்பாக, மாறன்படியில் தான் ஏறி வருவதற்கு சிவிகை அனுப்பி வைத்த திருநெல்வாயில் அறத்துறை நாதனை "எந்தை ஈசன்" எனத் துவங்கும் பதிகம் பாடுகிறார் சம்பந்தப் பெருமான்.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. 

- சம்பந்தர் தேவாரம் (பதிகம் 2.90 பாடல் 1)



இத்தலத்தின் கூகுள் மேப் இணைப்பு 





Wednesday, May 07, 2008

தேறுவது எப்போ நெஞ்சே?

தமிழிசை தழைத்திட தமிழ்ப்பாடல்களை இயற்றித் தொண்டு செய்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் திரு.நீலகண்ட சிவன் (1839-1900). 2000 க்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார் இவர். தமிழ் மூவர் இயற்றிய பாடல்களை படித்து வளர்ந்த கன்னியாகுமரிக்காரரான இவர், சிவ-பார்வதி தரிசனம் கிடைக்கப் பேறு பெற்றவர். இவருடைய மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாபநாசம் சிவன் அவர்கள்!

நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய "தேறுவதெப்போ நெஞ்சே..." பாடலை இங்கு பார்க்கலாம். நீந்திக் கரை ஏற இயலாத பெருங்கடலென பிறவியினைச் சொல்வார்கள் பெரியோர்கள். பிறந்த முதலே, புலன்கள் சொல்லித்தரும் ஈர்ப்புகளில் நம்மை இழந்து விடுகிறோம். இந்த உலகில் சேர்க்கும் செல்வத்தோடும், சொந்த பந்தங்களுடனும், இன்ன பிற விருப்பங்களுடனும் இருக்கமானதொரு இணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்த இணைப்பில் தவறேதும் இல்லை. ஆனால் அவையெல்லாம் நிலையில்லாதவை என்பதினை நாம் நமது சுயலாபத்திற்காக எளிதாக மறந்து விடுகிறோம். நிலையில்லா உலகில் நிலைப்பதெப்போ? நீந்திக் கரை ஏறுவதெப்போ? எல்லா இணைப்புகளையும் அறிந்திடும் அதே புத்தியில் ஒரு ஓரத்திலாவது, நிலையான நீலகண்டனின் நினைப்பிருந்தாலே போதுமே. அகந்தை அழிந்திட, சித்தினை அறிந்திடும் புத்தியினை நெஞ்சில் வார்க்கும் அவன் கருணையைத் தேடிட, கடைத்தேறாதோ பிறவி?
வேதம் நான்கும் சொல்லிடும் நாதன் நாமமே மெய்ப்பொருளாக இருக்கையில், வேறேன்ன வேண்டும்?

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது

வேதநான் கினும் மெய்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயமே.

(மூன்றாம் திருமுறை - திருஞான சம்பந்தர் தேவாரம்).

இப்போது திரு.நீலகண்ட சிவனின் பாடலைப் பார்ப்போம்:
------------------------------------------------------------------------------------------
இராகம் : கமாஸ்
தாளம் : ஆதி

எடுப்பு
தேறுவதெப்போ நெஞ்சே தெளிந்து கரை
ஏறுவதெப்போ நெஞ்சே

தொடுப்பு
கூறும் வேதத்தின் உண்மை குறியாமலே அஞ்ஞான
காரிருளில் கவிழ்ந்து கலங்கி மயங்கி நின்றால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

முடிப்பு
மண்ணே பொருளே யெந்தன் மனைவி மக்களேசொந்த
கண்ணே நீங்களே அல்லால் கதியில்லை என்றிருந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

உடலை நிலையென் றெண்ணி உலகவாழ்விதை நம்பி
மடமை பெருக நின்று வனமிருகம் போல் அலைந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

அண்டம் அளந்த மாலும்அயனும் அளவா நீல
கண்டம் கருணைதேடும் கருத்துணராராகில் ஜன்மம்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

சங்கீத கலாநிதி திருமதி. டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட, இந்தப் பாடலை கேட்கலாம்:

தேறுவதெப்போ நேஞ்சே?

-------------------------------------------------------------------
நீலகண்ட சிவன் இயற்றிய பாடல்களில் இதர புகழ் பெற்ற பாடல்கள்:
சம்போ மகாதேவா,
உமைக்குரிய திருமைந்தா,
ஆனந்த நடம் ஆடுவார் தில்லை

Wednesday, March 05, 2008

திருவெண்காட்டில் தேவாரம் பாடுவோம் வாங்க!

திருவெண்காடு - இத்திருத்தலம் சீர்காழி மற்றும் மயிலாடுதுறைக்கு இடையே உள்ளது.
சுவாமி - சுவேதாரண்யேஸ்வரர், அம்பாள் - பிரம்மவித்யாநாயகி
திருவெண்காட்டீசனை திருஞான சம்பந்தர் இரண்டாம் திருமுறையான தேவாரப் பதிகத்தில் பாடும் செய்யுள்களை இங்கு பார்க்கலாம். இந்தப் பத்துப் பாடல்களையும் அவற்றின் பொருளையும் பார்ப்பதோடு, பாடலைக் கேட்டுப் பாடுவோம்.
பண் : சீகாமரம்; பாடுபவர் : திருமதி. விஜயலக்ஷ்மி ராஜாராம்
1.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
நெற்றியில் இமைக்கும் கண் பொருந்தியவன்,
எரிகனலை கையில் காட்டுபவன்,
தன்னில் பாதியைப் பெண்ணுருவாய் காட்டுபவன்,
விரிசடையில் பிறைச்சந்திரனைக் கொண்டவன்,
பாடல்களின் பண் வடிவான இசைப்பிரியன்,
பயிர்களின் உயிரான மழை மேகமாய் இருப்பவன்,
நந்தியினை கொடியில் காட்டுபவன்,

இப்படியெல்லாம் இருப்பவன் திருவெண்காட்டில் உறையும் ஈசன்.

2.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையாரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே.
திருவெண்காட்டின் முக்குள நீரில் மூழ்கி எழுந்தால், பேயெனச் சொல்லப்படும் தீயவை எல்லாம் மடியும். பிள்ளைச்செல்லவம் இல்லாதவர்க்கு அந்தப் பேறு கிட்டும். மனதால் நினைத்த வேறு யாவும் உமை ஒரு பாகமாய் கொண்டவனின் அருளால் கிட்டும்.
இந்தப் பாடலே, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஈசனின் அருள் நிறைந்த அருளாளரான மெய்கண்ட தேவர் குழந்தையாய் பிறக்கும் அருள் பாலித்ததாக வரலாறும் உண்டு.

3.
மண்ணொடு நீரனல் காலோடாகாய மதியிரவி
எண்ணில் வருமியமானந் இகபரமும் எண்டிசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
எம்பிரான் ஈசன் எப்படி எல்லாமுமாய் இருக்கிறான் - மண்ணாய், நீராய், நெருப்பாய், காற்றாய், ஆகாயாமாய், நிலவாய், கதிரவனாய் இருக்கிறான். இப்பிறப்பாகவும், இதற்கு அடுத்த பிறப்பாகவும், எண் திசையாகவும், ஆணாகவும், பெண்ணாகவும், பெரியனவற்றுள் பெருமையாகவும், சிறியனவற்றுள் சிறுமையாகவும் இருக்கிற சிவபெருமான், விண்ணவர் தலைவன் இந்திரன் வழிபட திருவெண்காட்டினை உறைவிடமாய் கொண்டானே.

4.
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
நஞ்சினை உண்ட அண்ணல் உறையும் வெண்காட்டின் அருகே உள்ள குளிர்ந்த முல்லை நிலத்தில் உள்ள நீர் நிலையில் மலர்ந்த கடல் தாழைகள் வளைந்து இருக்க, தாழை மலரின் பிம்பம் நீரில் தெரிய, அது தம்மை உண்ணக் காத்திருக்கும் குருகு(பறவை) தானோ என நீர்நிலையில் இருக்கும் கெண்டை மீன்கள் ஐயுற்று, தாமரை மலரின் அடியில் மறைந்து கொள்ளவும், இதைப் பார்த்து நீர்நிலையில் இருந்த வெண்முத்துக்கள் நகைத்தனவாம்.
இந்தச் செய்யுளில் தற்குறிப்பேற்றம் தனை கவனிக்கவும். இது நாம் செய்யும் செயலுக்கெல்லாம் தானே காரணம் என அறியாமையினால் கொள்ளும் கலக்கத்தை ஒத்தது. அந்த கெண்டை மீன்கள் போல தாமரையிடம் - அனகதத்தில் அவனிடன் சரணடவதே கலக்கத்தை கலைக்க வழி.

5.
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.
நீர்நிலைகள் சூழ்ந்த குளுமையான வெண்காட்டீசன் திருவடிகளை மாலைகள் மற்றும் சந்தனத்தாலும் வழிபட்ட சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த காலனை சிவன் காலால் மிதித்ததை அந்த எமதூததர்கள் அறிவார்கள். அதனால் சிவபிரான் அடியவர் என்றாலே அவர்கள் அஞ்சுவர்.

6.
தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
தன் சடையில் ஒரே சமயத்தில் குளுமையான மதியையும், வெம்மையான பாம்பினையும் தாங்குபவன். ஒளி வீசும் பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடைய உமையன்னையை ஒருபாகமாய்க் கொண்டவன். அப்படிப்பட்ட ஈசன் உறையும் வெண்காட்டுக்கோயிலில், இசைமொழியில் அவன் திருப்பெயர்கள் பலவும் ஓதக்கேட்ட பச்சை நிறக் கிளிகள், அவற்றை திருப்பி ஓதியவாறு, வெள்ளைநிற மேகங்களைத் தொட்டிடும் அளவற்கு உயர்ந்து வளர்ந்த பனை மரங்களில் வீற்றிருக்குமாம்.
அந்தக் கிளிகளுக்குத்தான் என்னப்பேறு, வானத்தை எட்டிட வைத்தது யாரு?

7.
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிராவதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.
திருமாலுக்குச் சக்கராயுதம் ஈந்தவனும், சலந்தராசுரனைப் பிளந்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் (வெண் யானை - வெண்ஆனைக்காடு - திருவெண்காடு) பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், தீவினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய என் இறையவனே.

8.
பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
இசையின் பண் கூடிய இனிய மொழியினளாகிய உமையன்னையே அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தான் - பித்தனாகிய இராவணன். அவன் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவனுறையும் கோயில் இங்கு. அவ்விடம், தம் தோகையில் அழகிய கண்கள் பொருந்திய நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வரிவண்டுகள் இசை ஒலியும் கேட்கும் திருவெண்காடெனும் திருத்தலம்.

9.
கள்ளார் செங்கமலத்தான் கடற்கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்று
உள்ளாடி யுருகாதார் உணர்வுடைமை யுணரோமே.
தேன் நிறைந்த செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் மற்றும் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிக உயர்ந்தும் ஆழ்ந்தும் அவனைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபெருமான் வெள்ளானையும் தவஞ் செய்து வழிபடும் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று உருகாதவரும் உண்டோ?

10.
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர் என்றுணருமினே.
புத்த மதத்தவர்களும், சமணர்களும் வலிந்து கூறும் உரைகளைப் பொருட்படுத்தாமல், அவர்களை பேதையர்களாகக் கொண்டு, அவர்களைப் பிரிவீர்களாக.
அறிவுடையவர்களே, இதனைக் கேளுங்கள்.
வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் திருப்பெயர்களை
ஓதியவர்களுக்கு யாதொரு தீங்கும் வாராது என உணர்வீர்களாக.

11.
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறைவெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான் பொலியப் புகுவாரே.
குளிர் சோலைகளால் சூழப்பட்ட சண்பை(சீர்காழி) நகர்த் தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தனாகிய யான், விண்ணில் பொலியும் வெண்பிறை சேர்ந்த தலையினை உடைய சிவன் உறையும் திருவெண்காட்டைப் பண் மீட்டிய ஒலிப் பாட்டு பத்தினையும் பாடிடுபவர், மண்ணில் சிறப்புற வாழ்வதோடு வான் சென்ற பின்னும் சிறப்போடு வாழ்வர்.

திருசிற்றம்பலம்.