Showing posts with label கணேசர். Show all posts
Showing posts with label கணேசர். Show all posts

Monday, May 30, 2011

முதல் வணக்கம்

அன்பெனும் கணபதிக்கு முதல் வணக்கம்
ஆனைமுகனுக்கு முதல் வணக்கம்
அரும்பெரும் செவியனுக்கு முதல் வணக்கம்
ஆதாரத் துணைவனுக்கு முதல் வணக்கம்!

உமைபாலனுக்கு முதல் வணக்கம்
ஊறும் சக்தியதன் உறைவிடமே முதல் வணக்கம்
ஊழ்வினை விலக்குபவனே முதல் வணக்கம்
உந்தீபறவென உரைக்கின்றேன் முதல் வணக்கம்!

மதியணி சங்கரன் மகனுக்கு முதல் வணக்கம்
மாலவன் மருகனுக்கு முதல் வணக்கம்
மனங்கவர் முருகனின் மூத்தவனுக்கு முதல் வணக்கம்
மூஷிக வாகனனுக்கு முதல் வணக்கம்
மறையதன் மெய்ப்பொருளுக்கு முதல் வணக்கம்
மூலாதார முதல்வனுக்கு முதல் வணக்கம்
முழுமுதற் கடவுளுக்கு முதல் வணக்கம்!

அகர உகர மகரமென ஒலிக்கும்
ஓங்காரப் பிரணவமே முதல் வணக்கம்!

Sunday, December 19, 2010

பக்தியும் ஞானமும் (2) : கணபதி

காலைப் பிடித்தேன் கணபதி - நின் பதம் கண்ணிலொற்றி!
- மகாகவி பாரதி
(சென்ற பகுதியில் முகவுரையைத் தொடர்ந்து இரண்டாம் பகுதி இப்போது...)
புராணக் கதைகளில் பார்த்தால் விநாயகர் யாருடைய உதவியையும் நாடியது கிடையாது. ஆனால் எல்லோரும் அவரது உதவியை நாடி இருப்பார்கள். திரிபுர சம்ஹாரத்தின் போது தேர் முறிந்து இடையூறு ஏற்பட, சிவனே விநாயகரை பூஜை செய்து, அசுரர்களை வென்றார். பண்டாசுர அரக்கனை வெல்ல, தேவி விநாயகரை நாட, அரக்கனின் விக்ன யந்திரங்களை அகற்றி தேவிக்கு வெற்றியை அளித்தார். ஹேரம்ப மூர்த்தியாக ராமர் உபாசித்து, இராவணனை அழித்தார். அர்க்க கணபதியாக சூரியனால் வழபடப் பட்டவர். பிரம்மா விநாயகரை வழிபடாததால், சிருஷ்டியின் தொடக்கத்தில் பிரச்சனைகள் ஏற்பட்டதாம். முருகனுக்கோ, வள்ளி மணம் புரிய துணை புரிந்தவர். இப்படியாக சொல்லிக் கொண்டே போகலாம். சரி, இப்படியெல்லாம் ஏன் சொல்கிறார்கள்? தெய்வத்திற்குள் ஏன் இந்த உயர்வு தாழ்வுகள் என யோசிக்கலாம். இப்படியெல்லாம் புராணக் கதைகள் சொல்வதின் பிண்ணணியில் தத்துவங்கள் அடங்கி இருக்கும்.

அது என்ன? எதையும் கணபதி துணையுடன் துவங்குதல் நன்மையில் முடியும் என்பது மரபு. இதற்கு ஆழமான காரணங்களுண்டு. கணபதி மூலாதார சக்கரத்தின் முதல்வன். அசுத்த மாயைகள் அண்டாமல் காப்பவன். வினைகளைக் களைபவன் விக்னேஸ்வரன். கர்ம வினைகளைக் களைந்தால் தான், மனமது முக்தி என்னும் நிலைக்குத் தயாராகிறாது. எந்த ஒரு தெய்வதை வணங்குவதற்கு முன்பாகவும் கணபதியை வணங்கிடுதல், குறுக்கிடும் இடர்களை களைவதற்கு துணை புரியும். இவ்வுண்மைகள் தான் திரும்பத் திரும்ப பல்வேறு புராணங்கள் மூலமாக சொல்லப்படுகின்றன!

முத்துசாமி தீக்ஷிதரின் கணபதி கீர்த்தனைகளில் சிலவற்றை எடுத்து, அவற்றில் சொல்லப்படும் குறிப்புகளைப் பட்டியலிடலாமா!

1. ஸ்ரீ மூலாதார சக்ர விநாயக (ஸ்ரீராகம்)
* மூலாதார சக்கரத்தின் அதிபதி
* 600 சுவாசங்களுக்கு அதிபதி
2. பஞ்ச மாதங்கமுக கணபதினா (பிலஹரி)
* பஞ்ச பூதங்களால் ஆன பிரபஞ்ச சிருஷ்டிக்கு காரணம்
3. ஸ்ரீ கணேசாத் பரம்
* பூமி முதல் சிவன் வரை 36 தத்துவங்களை தன்னுள் கொண்டவர்
4. விநாயக (வேஹவாகினி ராகம்)
* சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகியவற்றை முக்கண்களாகக் கொண்டவர்
5. கஜானானயுதம் (வேஹவாகினி ராகம்)
* அர்த, காம, மோட்சம் என்னும் வாழ்வியல் குறிக்கோள்களை அடையத் தருபவர்
6. வாதாபி கணபதிம் (ஹம்சத்வனி)
* பிரணவ சொருபத்தினைக் கொண்டவர்
7. மஹா கணபதிம் (தோடி)
* திரிபுர சம்ஹாரத்தின் போது, சிவனால் அர்ச்சிக்கப்பட்டவர்
8. வல்லப நாயகஸ்ய (பேகடா)
* முருகன் வள்ளி திருமணத்திற்கு உதவியவர்
9. லம்போதராய (வராளி)
* அகத்தியரால் வணங்கப்பட்டவர்

இப்படியாக முத்துசாமி தீக்ஷிதரின் கீர்த்தனைகளில் இருந்து பல்வேறு சுவையான குறிப்புகளையும் கண்டெடுக்கலாம்.

இந்த படத்தில் பார்த்தீர்களா. கள்ளமற்ற வெள்ளைக் குழந்தைகள் தங்கள் பிஞ்சுக்கைகளால் பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனைமுகனும், குமாரசாமியும் அவர்களதுகூட எப்போதும் இருப்பார்கள்.

From என் வாசகம்


'ஸ்ரீகணேசாத் பரம்' என்னும் கீர்த்தனையை இங்கு பார்க்கலாம்.

இப்பாடலை திருமதி.ராதா பார்த்தசாரதி அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:
sri-ganesatparam-s...


ஸ்ரீ கணேசாத் பரம்
ராகம்: ஆர்த்ர தேஸி
தாளம்: ஜம்ப


பல்லவி
ஸ்ரீ க3ணேசாத் பரம் சித்த ந ஹி ரே ரே ஸிவாதி3 ஷட்-த்ரிம்ஸத்-தத்வ ஸ்வரூபிண:

அனுபல்லவி
வாகா3தி3 பஞ்சக வ்யாபார ரஹித - ஹ்ரு2த3யாகாஸ ஸம்ஸ்தி2தாத்- யோகி3 ராஜார்சிதாத்

சரணம்
மாதங்க3 வத3னாத்-உமா ருத்3ர த3ர்ஸிதாத் பூ4த பௌ4திக விஸ்வ பூஜித களேப3ராத் ஸ்வேதார்க ஸும த4ராத் ஸ்வேதர விவர்ஜிதாத் பீதாம்ப3ராவ்ரு2தாத் ப்3ரஹ்மாத்3யுபாஸிதாத் (மத்4யம கால ஸாஹித்யம்) பூ4தாதி3 நுத பதா3ம்போ4ஜாத்-ஸிவாத்மஜாத் ஸீதாம்ஸு த4ர பரம சிவ - கு3ரு கு3ஹாக்3ரஜாத்

பாடற்பொருள்:
சிவன் முதலான 36 தத்துவங்களையும் தன்னில் அடக்கிய கணபதியே, நீயே பரமன். உன்னில் உயர்ந்தது யாதுமில்லை. 'வாக்கு' முதலான ஐம்புலங்களும் நுழைய முடியாத இதயக் குகையில் - சிதாகாசத்தில் வசிப்பவனே - யோகியரால் வணங்கப்படுவனே!

யானை முகத்தவனே, சிவன் மற்றும் பார்வதியுடன் இருப்பவனே! வெள்ளை அர்க்க மலர் மாலை அணிபவனே! தன்னிலும், எல்லோரிலும் இருப்பவனே! பீதாம்பரம் அணிந்தவனே! பிரம்மனால் வணங்கப்பட்டவனே! தாமரை பாதங்கள் கொண்டவனே! பூத கணங்களால் போற்றப்படுபவனே! குருகுஹனாம் முருகனுக்கு மூத்தவனே! குளிர்பிறை தரித்த சிவனது மூத்த சேயே, உன்னில் உயர்ந்தது யாதுமில்லை.
~~~~~~~~~~~~

இவ்வாறாக, குணங்களோடு கூடிய தெய்வமாக போற்றினாலும், கணபதி முழுமுதல் பரமன், எல்லாவற்றிலும் உயர்ந்த பிரம்மம் என்றுதான் போற்றுப்படுகிறார். உன்னில் உயர்ந்தது யாதுமில்லை என்கிறார். இதன் காரணம், இறுதியில் அடைய வேண்டிய இலக்கான ஞானமதாகவே - பரம்பொருளாகவே - கணபதி இருப்பதுவேயாம்.

இராஜ யோக நெறியில் கணபதி வாயில் காப்போன் போல. அவனுடைய அனுமதியில்லாமல் முக்தி என்னும் உயரிய வீட்டுக்குள் நுழைய முடியாது. கணபதியின் காற்பதத்தை கண்ணிலொற்றி அவன் அருள் பெற்றபின் தான் அடுத்த நிலைக்கு செல்ல முடியும். எல்லா சித்திகளையும் பெறச் செய்யும் சித்தி விநாயகர் அவர். ஆகவே கணபதியைப் பாடிப் பணிந்து பக்தி செய்து அவன் அருள் பெறுவோம்.

ஓமெனு நிலையி லொளியாத் திகழ்வான்
..
தானே யாகிய தனிமுதற் கடவுள்
யானென தற்றார் ஞானமே தானாய்
முக்தி நிலைக்கு மூல வித்தாவான்
ஸத் தெனத் தத் தெனச் சதுர்மறை யாளர்
நித்தமும் போற்று நிர்மலக் கடவுள்
-மகாகவியின் விநாயகர் நான்மணிமாலை


அடுத்த பகுதியில் ஆனைமுகனுக்கு அடுத்தவனாம் அழகன் கார்த்திகேயனைப் பாடும் தீக்ஷிதர் கீர்த்தனைகளைப் பார்ப்போம்.

Friday, September 10, 2010

வாரண முகவா துணை வருவாய்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்இவை
நாலும் கலந்துனக்கு நாந்தருவேன் - கோலம்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சங்கத் தமிழ்மூன்றும் தா.
ஔவைப் பாட்டி, சங்கத் தமிழ் மூன்றும் வேண்டி பாடிய பாட்டு எல்லோருக்கும்தெரிந்தது। இன்னிசை இயல் இலக்கியம் ஆரியம் தமிழ் - இப்படி எல்லாமும் கேட்டு கோடீஸ்வர ஐயரால் இயற்றப்பட்ட பாடலை இங்கு பார்ப்போம். இவர் இயற்றிய "கந்த கானாமுதம்" என்னும் இசைப்பாடல்கள் தொகுப்பில் முன்னவனாம் ஆனைமுகத்தவனை வாழ்த்திப்பாடும் பாடல் - ஹம்சத்வனி இராகத்தில் அமைந்தது.

இயற்றியவர் : கோடீஸ்வர ஐயர்
இராகம் : ஹம்சத்வனி

இப்பாடலின் ஸ்வரக் குறிப்புகளுக்கு சிவ்குமார் கல்யாணராமன் அவர்களின் தளத்தினில் இங்கு பார்க்கலாம்.

எடுப்பு

வாரண முகவா துணை
வருவாய் - அருள்வாய், தயவாய்!

தொடுப்பு

ஆரணப் பொருளான கந்த
கானாமுதத்திற்குள் உன்
கருணாமுதம் உதவியே அருள் மத (வாரண..)

முடிப்பு

இன்னிசை இயல் இலக்கியம் ஆரியம் தமிழ் அறிவேதும் இன்றி
கன்னல் அனை கந்த கானமுத நன்னூலை
உன்னும் கவிகுஞ்சரதாசன் நான்
உன்னருள் கொண்டே பண்ணத் துணிந்தேன்;
முன்னவனே நீ முன்நின்றால் முடியாதது
ஒன்றில்லை! ஆதலால் அதிவேகமாகவே... (வாரண...)

இப்பாடலை டி.எம் கிருஷ்ணா பாடிட ராகா.காம் தளத்தில் இங்கு கேட்கலாம்:



பாடலை பிரியா சகோதரிகள் பாடிட இங்கு கேட்கலாம்:


இப்படியாக வினைகள் தீர்க்கும் கணபதி கடவுள் வாழ்த்துப் பாடி துவங்கினால் - நினைத்தது முடியாதது இல்லைதான். 'கந்த கானாமுதம்' என்னும் இந்த இசைத்தொகுப்பில் 72 மேளகர்த்தா இராகங்களிலும் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். இத்தனைக்கும் இவை அத்தனையும் தமிழ்ப்பாடல்கள். ஏற்கனவே இவற்றில் இரண்டு பாடல்களை இங்கே பார்த்திருக்கிறோம்। அண்மையில் மறைந்த கலைமேதை எஸ்.ராஜம் அவர்கள், இந்த இசைத்தொகுப்பின் கீர்த்தனைகளை ஸ்வரக்குறிப்புகளோடு பதிவு செய்திருக்கிறார், வருங்கால சந்ததியின் வளத்தினை மனத்தில் இருத்தி.

இந்த சதுர்த்தி தினத்தில் கணபதி அருள் அனைவருக்கும் கிடைக்கப்பெற்று எல்லா வளங்களையும் எட்டிட நமது பிரார்த்தனைகள் உரித்தாகட்டும்.

Sunday, February 21, 2010

அறிவியலுக்கு அப்பால்

பூவுலகில் நடப்பது யாவும்
சிவனின் சித்தமே என்றாலும்,
ஒவ்வொரு நொடியும் நடப்பதுயாவும்
கணபதி வரையும் நுண்ணிய ஓவியமேயாம்.
உடனடியாய் வருவான் ,
உடனேயே இருப்பான் ,
புவி ஈர்ப்பு விசை போலே.

தன்னுடனேயே இருந்து
தன்னைச் சாதிக்கச் செய்ததெல்லாம்
ஆனைமுகன் செயலேயாம்.
அழகாக வந்து மடியில் அமர்ந்து
ஆகா, சாதித்து விட்டோம் என்பான்.
எத்தனை எத்தனை எதிர்ப்புகள் வரினும்
அத்தனையும் தகர்த்தெரிவான்;
ஆனை நடந்துவந்த வழியில்
அத்தனை வினைகளும் மடியுது பார், அது போல.

ஆனைமுகனின் பானை வயிறில்தான்
புவியும் அடக்கம் என்பர். அவன் செயல்
புவி ஈர்ப்பு விசைபோல்
அத்தனை அண்டங்களையும்
கட்டி இழுத்திடும் விசையாம்.
வழிமாறிப்போனவற்றை
சமன் செய்யும் விசையாம்.

கணபதியின் இளையவன், கதிர்வேலனோ,
அகிலமெல்லாம் அகண்டிருக்கும்
அணுத்துகள்களை இணைத்திருக்கும்
மின்காந்த சக்தி போலேயாம்.

அன்றாட நடப்பில் நம்முடன் நடப்பவன் கணபதி.
ஆழ்மனதில் அதன் சக்தியாய் உரைபவன் முருகன்.
முருகன் மாற்றங்களை விளைவிப்பவன்.
இச்சையில் தொடங்கி, அதை அடையும் செயலில் முடித்து,
ஞானமதை அடைந்திட கூர்வேலும் குறி சொல்லும்,
வள்ளிக்குச் சொன்னது போல.

மின்காந்த சக்திபோல மறைமுகமாய் இருந்தாலும்
அன்றாட நிகழ்வுகளில் ஒளியாகவும் சக்தியாகவும்
திகழ்கிறான் கார்த்திகேயன்.
கண்ணுக்குப் புலப்படா ஒளி அலைகளின்
வெளிச்சம் மட்டும் புலப்படும்.
அவன் அன்றாட நிகழ்வுகளில் புலப்படாவிட்டாலும்,
அவன் சக்தி புலப்படும்.

அன்றாட செயல்களில் அறமது தழைத்திட
அன்பது துளிர்த்திட அழகன் முருகனது சக்தி
முந்தி மேலேற்றட்டும் மூலக்கனலை.
வேலவன் வேலதுவும்
யாமிருக்க பயமேன் எனக் கேட்கும்.
துணையெனக் கொண்டு தூர்ந்திடும் அன்பொடு
குமரனும் குன்றேற்றிடுவான்.

இரண்டு சக்திகளைப் பார்த்தாதிற்று - இறுதியாய்
பார்க்கவிருப்பது, அணு சக்தி! - அவன்
சக்தியவளை இடமொருபாகமாய் கொண்டவன்.
எல்லாவற்றுக்கும் மேலானவன் - மகேஸ்வரன்.
அணுத்துகள்களை இணைப்பது மின்காந்த சக்தியென்றால்,
அணுவிற்குள் ஒளிந்திருப்பது அணுசக்தி.

கணபதி அசுத்த மாயைகளின் அதிபதி.
கந்தன் சுத்தாசுத்த மாயைகளின் அதிபதி.
சிவன் சுத்த மாயைகளின் அதிபதி.

அண்ட சராசரம் ஆடுவதெல்லாம் அவன் ஆட்டத்திற்கே.
பொன்னம்பலத்தில் பொதிந்த ஆட்டமதில்
அணுத்துகள்கள் அன்றாடம் 'உள்ளே, வெளியே' ஆடும்.
அணுத்துகள்களில் வெளியேற்றமும் உள்வாங்கலுமாய்
அனைத்து மாற்றங்களிலும் இருப்பது ஈசன்,
அணுத்துகள்களின் அணுசக்தியாய்!
அவையனைத்திலும் இருக்கும் சக்தி ஆட்டமே
அம்பலத்தரசனின் ஆனந்தத் தாண்டவம்.
ஆக்கமும், அழிதலும், மீள் ஆக்கமும் என பிரபஞ்சமதில்
ஆதி அந்தமில்லா வேதகம வினோதம்.

இவையெல்லாம்
அறிவியலா, அதற்கும் அப்பாலா, ஆரறிவார்!

Tuesday, September 02, 2008

கணேச கானங்கள்



சில சமயங்களில், இறை அன்பை நம்மால் எளிதாக உணர முடிகிறது. இறை அருள் நம்முள் நிறைந்து, நம் உள்ளுணர்வை எழுப்பி, மனதை பக்தியால் நிரப்புகிறது. இறைவனை பக்தியுடன் தொழுது, அவன் புகழ் பாடச் செய்கிறது. வேறு சில சமயங்களிலோ, நம் மனம் வரண்டு போய், பல குழப்பங்களில் சிக்கி அலைக்கழிக்கப் படுகிறது. இறைவன் எங்கே இருக்கிறான், என கேள்விகளை எழுப்புகிறது. அதுபோன்ற சமயங்களில், எளிய, இனிய கணேச கானங்களை வாய் திறந்து பாடினால், கனமான மனதும், இளம்பனியாய் கரைந்துவிடும். மேலும் சக அன்பர்களோடு சேர்ந்து பஜனை கானங்கள் பாடும்போது, நம் மனது பல மடங்கு உறுதி பெறுகிறது. 'கணேச சரணம் கணேச சரணம்' என்று தொடர்ந்து பாடினால், வல்வினைகளும் தகர்ந்திடும், மனது அமைதி அடையும். அகம் ஆதாரமானவனின் அருளில் திளைக்கும். இந்த இடுகையும் ஒரு கணேச சத்சங்கம் தான்!

ஒரு சமயம் அன்பர் ஒருவர், ஒரு மகானைக் கேட்டார். நாம் கணேசரைத் துதித்து பாடும்போது, அவன் முகம் எப்படி இருக்கும்' என்று. அதற்கு அந்த மகான் சொல்கிறார்: "உங்கள் குழந்தை ஒரு படத்தையோ, ஓவியத்தையோ வரைந்து கொண்டுவந்து உங்கள் கண் முன் நீட்டினால் எப்படி உங்கள் முகம் மலரும், அப்படித்தான்!' என்று. :-) கணேசன் அணுகுவதற்கு எளியவன். உங்களுக்காக வாயிலிலேயே எப்போதும் இருப்பவன். வாயிற் காப்போன். மூலாதாரத்திற்கு கீழே உள்ள சக்கரங்களில் ஆன்ம சக்தி விரைந்தோடாமல், மேலே மேலே மட்டும் எழுப்பிட துணை நிற்பவன்.


கணேசனை, வாய் திறந்து அவனை பாடி அழைத்தால், முகமலர்ந்து உங்கள் தடைகளைத் தகர்ப்பான். பாடுவது அவனைத் துதிப்பதற்காக மட்டுமல்ல, அவனுக்கு நன்றி சொலவதற்காகவும்தான். ஸ்ரீ கணநாத, சிந்தூர வர்ணா என்று எளிதான கீதமானாலும், அருள் தருவான் ஆனைமுகன். இந்த சதுர்த்தி தினத்தில், சங்கர பாலனுக்கு பாடல்கள் பாடி, நன்றி செலுத்துவோம்.

பிள்ளையார் பட்டி ஹீரோ நீதாம்பா என்ற திரைப்பாடலானலும் சரி, கர்நாடக சங்கீதக் கச்சேரிப் பாடலானாலும் சரி, ஆனைமுகனுக்கு அங்கே முதன்மை இடம் இருக்கும்.

பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் துவங்கும் பழக்கம்போல், நமது பாராம்பரிய சங்கீதக் கச்சேரிகளில், முதல் கிருதியாக கணேசர் கிருதி பாடுதல் வழக்கம். இவற்றில் பல ஹம்சத்வனி ராகத்தில் அமைந்திருப்பதும் விசேஷம். இவற்றில் பிரதானமானது முத்துசாமி தீக்ஷிதரின் வாதாபி கணபதிம் கிருதி.
சுமார் மூன்று வருடங்களுக்கு முன் அட்லாண்டா கச்சேரி ஒன்றில் இந்த பாடலை மனமுருகி பாடி இருந்தார் கர்நாடக சங்கீதப் பாடகர் விஜய் சிவா. அது இன்னமும் மனதை அகலாமல் நிறைந்திருப்பதில் ஆச்சரியத்திற்கு இடமில்லை.

வாதாபி கணபதிம் - இங்கே எம்.எஸ் அம்மா பாடிடக் கேட்கலாம்:

பாடல் வரிகள் மற்றும் ஸ்வர நோட்ஸ்கள் திரு.சிவ்குமார் கல்யாணராமன் அவர்களின் தளத்தில் PDF வடிவில் கிடைக்கிறது. இம்மின்நூலை தரவிறக்கிக் கொண்டு நீங்களும் பாடிப் பழகலாமே!

இந்தப் பாடலில், தீக்ஷிதர் சுவாமிகள், 'ஹம்சத்வனி ஹே பூஷித...', அதாவது ஹம்சத்வனி ராகத்தால் பாடப்படுபவனே என்றவாறே கணேசரை துதிக்கிறார்!. எத்தனை சிறப்பு பாருங்கள் இந்த இராகத்திற்கு. எனவேதான், பல கணபதி கிருதிகள், ஹம்சத்வனி இராகத்தில் அமைந்திருக்கின்றன.

தமிழில், பாபநாசன் சிவன் அவர்கள் இயற்றிய கருணை செய்வாய் கஜராஜ முக என்று பல்லவியுடன் துவங்கும் பாடலும் ஹம்சத்வனி ராகத்தில் அமைந்த கணபதி துதிப் பாடலாகும்.

பத்மஸ்ரீ திருமதி. சுதா ரகுநாதன் அவர்கள் பாடிட, இந்த பாடலை இங்கு கேட்கலாம்:

கருணை செய்வாய்...


ஹம்சத்வனி ராகம், கல்யாணி ராகத்தைப்போலவே, மெலடித் தன்மை கொண்ட ராகம். இந்த ராகத்தில் அமைந்த கிருதிகளில் அட்டவணையை இங்கே பார்க்கலாம். இவற்றில் பல கணேச கானங்கள் தான்!

கணீர் குரலில் பாடி தமிழ் நெஞ்சங்களில் கொள்ளை கொண்ட, டாக்டர் சீர்காழி கோவிந்தராஜன் அவர்களின் குரலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானதொரு பாடல்: ஒரு மணிக்கொரு மணி எதிர் எதிர் ஒலித்திட ஓம்காரம் - இந்தப் பாடலும் ஹம்சத்வனி ராகம் தான்.

ஒருமணிக்கொருமணி...


அடுத்தாக இந்த ஸ்ரீரஞ்சனி இராகக் கீர்த்தனை - எனக்கு மிகவும் பிடித்த பாடல் -
பத்ம பூஷன் திரு.ஜேசுதாஸ் பாடியுள்ள - "கஜவதனா கருணா சதனா..." பாடல்.
இதுவும் பாபநாசம் சிவன் அவர்களால் இயற்றப்பட்ட பாடல்:

எடுப்பு
கஜவதனா கருணா சதனா
சங்கரபாலா லம்போதர சுந்தர

தொடுப்பு
அகனமரேந்திரனும் முனிவரும் பணி
பங்கஜ சரணம் சரணம் சரணம்

முடிப்பு
நீயே மூவுலகிற்கு ஆதாரம்
நீயே சிவாகம மந்திர சாரம்
நீயே வாழ்வின் என் ஜீவாதாரம்
நீயருள்வாய் ஓம்காராப் பொருளே!

கஜவதனா கருணா சதனா


தும்பிக்கையானை நம்பிக்கையோடு துதியுங்கள், துயரனைத்தும் அகன்று, அகம் துலங்கிடும், இகமதில் பரம்பெருள் பேரின்பமதைத் தரும்.

Friday, September 14, 2007

இலக்கியத்தில் ஆனைமுகன் துதி




இலக்கியத்தில் ஆனைமுகனை, வினைகள் அகற்றும் விக்னேஸ்வரனை துதித்து போற்றியவர் பலர்!
பாலும், தெளிதேனும், பாகும், பருப்பும் கொடுத்து, அதற்கு பதிலாக சங்கத் தமிழ் மூன்று மட்டும் போதும் எனக் கேட்டு கணபதியுடன் 'வணிகம்' செய்த ஔவையைப் பற்றி நமக்கெல்லாம் நன்கு தெரியும். ஏனைய பலரும் கணேசனை துதித்து செய்யுள்களை இயற்றி உள்ளனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில உங்களுக்காக இங்கே:


திருமந்திரம் - திருமூலர்


ஐந்து கரத்தினை ஆனை முகத்தினை

இந்து இளம்பிறை போலும் எயிற்றினை

நந்தி மகன் தனை ஞானக் கொழுந்்தினை

புத்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.



திருக்கடைக்காப்பு - திருஞான சம்பந்தர்


பிடியதனுருவுமை கௌமிகு கரியது

வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்

கடி கணபதிவர அருளினன் முகுகொடை

வடிவினர் பயில் வலி வலமுறை இறையே.


இரட்டை மணி மாலை - கபிலர்


திருவாக்கும் செய்கருமமும் கைகூட்டும் செஞ்சொல்

பொருவாக்கும் பீடும் பெருக்கும் உருவாக்கும்

ஆதலால், வானோரும் ஆனைமுகத்தானைக்

காதலால் கூப்புவர் தம்கை.



விநாயகர் அகவல் - நக்கீரர்


வெண்ணீ றணியும் விமலன் புதலவர்

பெண்ணா முமையாள் பெற்றிடுந் தேவே

அரிதிரு மருகா அறுமுகன் துணைவா

கரிமுக வாரணக் கணபதி சரணம்

குருவே சரணம் குருவே சரணம்

பெருவயிற் றோனே பொற்றாள் சரணம்

கண்ணே மணியே கதியே சரணம்

விண்ணே யொளி வேந்தே சரணம்


பெருந்தேவனார்

ஓதவினை அகலும்; ஓங்கு புகழ் பெருகும்

காதற் பொருள் அனைத்தும் கைகூடும் - சீதப்

பனிக்கோட்டு மால்வரை மேல் பாரதப்போர் தீட்டும்

தனிக் கோட்டு வாரணத்தின் தாள்!


நம்பி ஆண்டார் நம்பி

என்னை நினைத்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்

தன்னை நினையத் தருகின்றான் - புன்னை

விரசு மகிழ் சோலை, வியன் நாரையூர் முக்கண்

விரசு மகிழ் அத்தி முகத்தான்.


குமர குருபரர்

சீர்கொண்ட காசிநகர் சேர்துண்டி ராஜனெனும்

பேர்கொண்ட வைங்கரற்குப் பேசுபுகழ்த் - தார்கோண்ட

நற்றிருப்பாட் டீரைந்த்தும் ஞாலமிசைத் தொண்டரெலாங்

கற்றிருப்பார் மேலாங் கதி.


கந்தபுராணம்

மண்ணுலகத்தினிற் பிறவிமாசற

எண்ணிய பொருள் எல்லாம் எளிதின் முற்றுறக்

கண்ணுதல் உடையோர் களிற்றுமாமுகப்

பண்ணவன் மலரடி பணிந்து போற்றுவோம்.

திருஅருட்பா - இராமலிங்க அடிகளார்

முன்னவனே யானைமுகத்தவனே முத்தி் நலம்

சொன்னவனே தூய்மைச் சுகத்தவனே - மன்னவனே

சிற்பரனே, ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே

தற்பரனே நின் தாள் சரண்.


திருப்பல்லாண்டு - சேந்தனார்

குழலொலி யாழொலி கூத்தொலி ஏத்தொலி எங்கும் குழாம்பெருகி

விழவொலி விண்ணளவும் சென்று விம்மி மிகுதிரு ஆருரின்

மழவிடை யாற்கு வழிவழி யாளாய் மணஞ்செய் குடிப்பிறந்த

பழஅடி யாரொடுங் கூடி எம்மானுக்கே பல்லாண்டு கூறுதுமே.


உமாபதி சிவச்சாரியர்

வானுலகும் மண்ணுலகும் வாழ் மறைவாழப்

பான்மை தருசெய்ய தமிழ் பார்மிசை விளங்க

ஞானமத, ஐங்கர மூன்றுவிழி, நால்வாய்

ஆனைமுகனை பரவி அஞ்சலி செய்கிற்போம்