ஒன்றா இரண்டா, ஓராயிரம் விருத்தங்கள் பாடிக் கொண்டே இருக்கலாம். அதுவும், எழில்மலை வேங்கடவனை தீந்தமிழில் பாடிடுதல் என்பது, சொல்லில் அடங்கா சுகம் தருவது... சமீபத்துல, அரங்கனா, வேங்கடவனா, என்றெல்லாம் இங்கே கேட்டாங்க. வேங்கடரங்கன் அப்படீன்னும் சொன்னாங்க.
"அமலன் ஆதிப் பிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன், விண்ணவர் கோன், விரை யார் பொழில் "வேங்கடவன்", நிமலன் நிர்மலன் நீதி வானவன், நீள்மதில் "அரங்கத்து அம்மான்"
என திருப்பணாழ்வார் பாசுரத்தை எடுத்து விட்டு, அரங்கநாதனை பார்கையில், முதல்லே, வேங்கடவனும், அடுத்து, அரங்கனும் தெரியறாங்கன்னு சொன்னாங்க. ஒருவேளே, எழுந்து நின்றால் முழுதும், எழில் பொழில் நிறை மலையான், ஏழுமலையானாய்த் தெரிவானோ! வேங்கடவன், அவன் அலர்மேல் மங்கை மனாளன், அம்புஜ நாபன், தயா கரன், மலைமேல் உறைபவன், பாற்கடல் மேல் துயில்பவன்! ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ மன்னன் குலசேகரன் 8ஆம் நூற்றாண்டில், சேர நாட்டு மன்னன். வேங்கடவன் மீதும், அரங்கன் மீதும் அளவிலா அன்பு கொண்டவர். குலசேகரப்பெருமாள் என ஆழ்வார்களில் ஒருவனானவர். 'இராகவனே தாலேலோ', என தாலாட்டுப் பாடல்களை பாடியவர். திவ்யப் பிரபந்தத்தில், இவரது, 105 பாசுரங்களுக்கு, 'பெருமாள் திருமொழி' எனப்பெயர். அவற்றுள், 11 பாசுரங்கள், வேங்கடாசலன் மீது இயற்றப்பட்டவை. அவற்றில் மூன்றினை இங்கே பார்ப்போம். ~~~~~~~~~~~~~~~~~~~~~~ ஜெயா டி.வி மார்கழி மகா உற்சவத்தில், ரஞ்சனி&காயத்ரி அவர்கள் இப்படித் தான் அழகான ஆழ்வார் பாசுரங்களைப் பாடி நம் மனதை உருக்கினர். இங்கே நீங்களும் கேளுங்கள்:
குலசேகரப் பெருமாள் திருமொழி (நாலயிர திவ்யப் பிரபந்தம்)
பி.கு: பாசுர விருத்தம் முடிந்த பின், 'ஸ்ரீநிவாச திருவேங்கட முடையான்...' எனும் பாபநாசம் சிவன் பாடல் தொடங்குகிறது. அப்பாடலை, இன்னொரு சமயம் பார்ப்போம்.
பி.கு: இந்தப் பாடலை, அமரர் கல்கி அவர்கள், மிகவும் பொருத்தமாக பொன்னியின் செல்வனின் பயன்படுத்தி இருப்பார். தன்னைப் பார்த்து, பரிகாசம் செய்யும், ஆழ்வார்க்கடியனிடம், பூங்குழலி "மண்ணரசு வேண்டேன்" எனச் சொல்ல, உடனே "ஆகா, நல்ல தீர்மானம் செய்தீர்கள்" எனச் சொல்லி, இந்தப் பாசுரத்தை பாடிக் காட்டுவார், ஆழ்வார்க்கடியான்!
பாசுரம் 2: இராகம் : மோகனம்
கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன் எம்பெருமான் ஈசன் எழில்வேங் கடமலைமேல் தம்பகமாய் நிற்கும் தவமுடையே னாவேனே.
எளிதான இப்பாசுரங்களுக்கு பொருள் சொல்ல வேண்டியிருக்காது. எனினும் இனிதானதை எத்தனை முறை வேண்டுமென்றாலும் படிக்கலாம் அல்லவா. கூடலார் குமரன் பதிவில் படித்து மகிழவும்!
மேலே ரஞ்சனி&காயத்ரி பாடுவது தான் உருக்கம் என்றால், இங்கு அருணா சாய்ராம் அவர்கள் பாடுவதை என்னவென்று சொல்வது? சொல்ல வார்த்தைகள் இல்லை. சே, இந்த பதிவு எழுதறதை விட, 'சும்மா' இருக்கலாம்! விருத்தம் பாடி முடித்தபின்: மீனாய்ப் பிறந்தாலும், படியாய்க் கிடந்தாலும், குலசேகரன் படியாய் உன் பவள வாயை எப்போதும் பார்த்துக் கொண்டிருந்தாலும் எல்லாமும் ஒன்றுதான் - மீனாய்ப் பிறந்தாலும், படியாய் கிடந்தாலும், குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா...' அடுத்த கிருதியினை தொடங்கிய விதமும் அருமை!