Showing posts with label திருமால். Show all posts
Showing posts with label திருமால். Show all posts

Sunday, May 26, 2019

நாராயண திவ்ய நாமம்

இராகம் : மோகனம்
இயற்றியவர்: பாபநாசம் சிவன்

எடுப்பு
நாராயண திவ்ய நாமம்
நான் மறை சொல்லும் நாயகன் திருநாமம்
நாவிற்கினிய நாராயண திவ்ய நாமம்

தொடுப்பு
ஆராவமுதாய் ஆறு வயதிலே அன்பு செய்
துருவன் உணர்ந்த மந்திரம்

முடிப்பு
நாரதாதி முனிவரும் சனகாதி யோகியரும் பிரக்லாதனும் எந்நாளும்
மனோலயமுற வாயாற பஜிக்கும் ஆனந்த நாமம் பேரானந்தம்
இருந்தாலும் கோர பவசாகரத்தில் ஆழ்ந்துழலும் நம்மை மிக
ப்ரேமையுடன் கைதூக்கி அபயமருள் வேத சார தாரக நாமம்
பூரணன் திருமகள் மணவாளன் பாற்கடலில் அரவணைதுயில் வரதன்
புனித கருட வாகனன் நீல முகில்போலும் மேனி அழகன் திருநாமம்
மாரஜனகன் கருணாலயன் அன்பர் துன்பம் அகல மங்களம் அருள்வோன்
வைகுண்டபதி பாவன நாமம் வணங்கும் ராமதாசன் கண்டுகொண்ட
(நாராயண திவ்ய நாமம்)

 நாராயண! நாராயண!

எம்.எஸ்:
 
சஞ்சய் சுப்ரமணியம்:






Friday, August 26, 2016

கொண்டல் வண்ணன்

10. கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய் 
உண்டவாயன் என் உள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணி அரங்கன் என் அமுதினை
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாதே!

திருபாணழ்வார் அருளிச் செய்தது. "அமலனாதி பிரான்" எனத் தொடங்கும் பத்து பாசுரங்களில் பத்தாவது ஆகும் இது. இதற்கு முந்தைய ஒன்பது பாசுரங்களும் ஆழ்வார் தனது ஞான திருஷ்டியில் அருளியதாகவும், பத்தாவது பாசுரமோ, திருவரங்கனை நேரடியாக தரிசித்தபின் அருளியதாக பெரியோர்கள் சொல்வார்கள். 

பாணர் குலத்தில் பிறந்த இவருக்கு இசை எனபது இயற்கை அன்றோ! பத்து பாசுரங்களில் பரந்தாமன் மேனி அழகை ஒவ்வொன்றாகப் பாடி இருப்பது அருமை!

1: திருவடி அழகு
அமலன், ஆதிபிரான், அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன், விண்ணவர்கோன், விரையார்பொழில் வேங்கடவன்
நிமலன், நின்மலன், நீதிவானவன், நீள்மதில் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே


உயர்ந்த மதில்கள் உடைய அரங்கநாதன் உறையும் திருவரங்கத்திலேயே தானும் இருந்தாலும் அரங்கனைத் தன் மனக்கண்ணால் மட்டுமே கண்டு வந்த ஆழவாரின் முதல் பாசுரம். வெளியில் இருந்தே பார்த்தாலோ என்னவோ, மதில்கள் சூழ்ந்ததே திருவரங்கத்தை விளிக்கும் பெயரடையாய்(adjective) வந்தது!

2: ஆடை அழகு
உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டமுற
நிவந்த நீள்முடியன், அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன், கடியார் பொழில் அரங்கத்தம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தையே

திருவடிக்கு அடுத்து அரைக்கு அசைத்த செவ்வாடையில் தன்சிந்தையைப் பறி கொடுத்தாராம் ஆழ்வார்.

3. நாபிக்கமல அழகு
மந்திபாய் வடவேங்கட மாமலை வானவர்கள்
சந்திசெய்ய நின்றான், அரங்கத்(து) அரவின் அணையான்
அந்திபோல் நிறத்தாடையும், அதன்மேல் அயனைப் படைத்ததோர் எழில்
உந்தி மேலதன்றோ அடியேன் உள்ளத்(து) இன்னுயிரே

அரையைத் தாண்டி அயனைக் கமலத்தில் தாங்கி நிற்கும் எழிலான உந்தியில் தன்னுடைய உள்ளத்தைப் பதித்தாராம்.

4. அரை ஞாண் கயிறு
சதுரமாமதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்தும்
உதிரவோட்டி ஓர் வெங்கணை உய்த்தவன், ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட, மாமயிலாட, அரங்கத்தம்மான்
திருவயிற்று உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

அடுத்தாற்போல் அரங்கனின் அரையை அலங்கரித்த அரை ஞாண் கயிறானது அவரது மனத்தில் நிலைத்து உலாவியதெனச் சொல்கிறார்.

5. திருமார்பழகு
பாரமாய பழவினை பற்றறுத்து என்னைத்தன்
வாரமாக்கி வைத்தான் வைத்ததன்றி என்னுள் புகுந்தான்
கோரமாதவம் செய்தனன் கொல்? அறியேன் அரங்கத்தம்மான் திரு
ஆரமார்பதன்றோ அடியேனை ஆட்கொண்டதே

அடுத்து ஆழ்வார் சிந்தையுள் புகுந்தாட்கொண்டது அரங்கனின் அழகு மார்பு, திருவும் (இலக்குமியும்), முத்து மாலைகளும் அலங்கரிக்கும் மார்பினை "திருஆர"மார்பென்றார்!

6. திருக்கழுத்தழகு
துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன், அஞ்சிறைய
வண்டுவாழ் பொழில் சூழ் அரங்கநகர் மேய அப்பன்
அண்ட பகிரண்டத்து ஒருமாநிலம் எழுமால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உய்யக் கொண்டதே

தொடர்ந்து அரங்கன் அழகைப் பருகும் ஆழ்வார் அரங்கனின் கண்டமானது தான்  உய்ய ஒரு வழி வகுத்ததெனச் சொல்கிறார்.

7. திருவாயழகு
கையினார் சுரிசங்கு அனல் ஆழியார் நீள்வரை போல்
மெய்யனார், துளப விரையார், கமழ்நீள்முடி எம்
ஐயனார், அணிஅரங்கனார், அரவினணைமிசை மேய மாயனார்
செய்யவாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

கழுத்தைத் தாண்டி முகத்தை அடைந்த ஆழ்வார் அங்கு முதலிற் கண்டது அரங்கனின் செவ்வாயினை. அதுவே முதலில் அவரது சிந்தைக் கவர்ந்தது போலும்.

8. கண்ணழகு

பரியனாகி வந்த அவுணன் உடல்கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிபிரான் அரங்கத்தமலன் முகத்து
கரியவாகிப், புடைபரந்து, மிளிர்ந்து, செவ்வரியோடி நீண்ட அப்
பெரியவாய கண்கள் என்னைப் பேதமை செய்தனவே

திருமுகத்தில் அடுத்து பளிச்சிடும் கண்களைக் கண்டு அவை தன்னை பேதமை செய்ததாகச் சொல்கிறார்.


9.முழு மேனி எழில்
ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
ஞாலமேழும் உண்டான் அரங்கத்தரவின் அணையான்
கோலமா மணியாரமும் முத்துத் தாமமும் முடிவில்லதோர் எழில்
நீலமேனி ஐயோ! நிறை கொண்டது என் நெஞ்சினையே



இப்படியாக மேனி முழுதையும் தனது மனத்தில் நிறைத்து விட்டு, இனி அந்நெஞ்சில் வேறேதும் நுழைய இடமில்லாதபடி எல்லாமும் அரங்கனே என நிறைந்து விட்டதென நிறைவடைகிறார்! அதன் பின் மற்றொன்றினைக் காண எப்படி முடியும்!

Monday, December 12, 2011

ஹரியும் ஹரனும்

ஹரி என்பாருண்டு. ஹரன் என்பாருண்டு.
ஹரியே ஹரன், ஹரனே ஹரி என்பாருண்டு.
ஹரிஹரன் என்பாருண்டு.

சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் அரியையும் அரனையும் அன்பர்கள் தத்தம் நெஞ்சிலேற்றி, அதில் விஞ்சிய அன்பினை, அமுத கானங்களாக நமக்கு தந்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.
நிலாத்துண்டு சூடும் பெம்மானாகட்டும், அரவின் அணை அம்மானாகட்டும் - இருவருமே மெய்யன்பர்களின் பாட்டுடைத் தலைவனாய் பரிமளிக்கும் பாங்குதான் என்னே!  சில சமயம் இருவரையும் ஒரே பாடலிலே கூட பாடப் பெற்றுள்ளார்கள். அப்படிப்பட்ட சில பாடல்களை இங்கு பார்ப்போம்.

பாபநாசம் சிவன் அவர்கள் இயற்றிய "மா ரமணன் உமா ரமணன்" ஹிந்தோள இராகப் பாடல்.

எடுப்பு
மா ரமணன்
உமா ரமணன்
மலரடி பணி மனமே- தினமே

தொடுப்பு
மாற ஜனகன்
குமார ஜனகன்,
மலைமேல் உறைபவன்- பாற்கடல்
அலைமேல் உறைபவன்- பாவன

முடிப்பு
ஆயிரம் பெயரால் உரைத்திடும்
ஆயிரம் உருமாறினும்
உயர் தாயின் மிகு தயாபரன்- பதம்
தஞ்சம் என்பவரை அஞ்சல் என்றருளும்

உன்னிகிருஷ்ணன் அவர்கள் பாடிட கேட்கலாம்:


அடுத்த பாடலில், நீலகண்ட சிவன் அவர்கள் கண்டேஸ்வரனையும், பத்மநாபனையும் இணைத்துப் பாடியுள்ளார்கள்.

இயற்றியவர்: நீலகண்ட சிவன்
பண்: காந்தார பஞ்சமம்
இராகம்: கேதாரகௌளை
தாளம்: மிஸ்ரசாபு

எடுப்பு
ஸ்ரீகண்டேஸ்வரனை ஸ்ரீ பத்மநாபனைத்
தரிசனம் செய்வோமே

தொடுப்பு
நாகம் தரித்தோரவர் நாகம் மேல் படுத்தோரவர்
ஏகமாய் இருவரிப் வைபவம் சேவித்து

முடிப்பு 
அன்னபூர்ணேஸ்வர் மனையாளிவருக்குண்டு
அஷ்டலக்ஷ்மி மனையாட்டி யவருக்குண்டு
பொன்னும் கிரியும் வெள்ளி மலையுமிவரிக்குண்டு
பொங்கும் பாற்கடல் நவமணிகளிவர்க்குண்டு
உன்னத இடப வாகனமிவர்க்குண்டு
உயர்ந்த பறக்கும் கருடன் அவர்க்குமுண்டு
தன்னிய பாணன் முதல் தாசர்களிவர்க்குண்டு
சாது பிரகலாதன் முதலானோர் அவர்க்குமுண்டு

இப்பாடல் கோபாலகிருஷ்ண பாரதியாரின் "தில்லையம்பலத்தானை" பாடலை நினைவு படுத்துகிறதல்லவா! இதோ அந்த பாடலும்:

இயற்றியவர்: கோபாலகிருஷ்ண பாரதி
ராகம் : சஹானா
தாளம்: மிஸ்ரசாபு

எடுப்பு
தில்லையம் பலத்தானை கோவிந்தராஜனை
தரிசித்துக் கொண்டேனே

தொடுப்பு
தொல்லுலகமும் படியளந்து மனதுக்கேற்கும்
தொண்டர் கலி தீரக் கருணை பொழியுமெங்கள்

முடிப்பு
தும்பைப்பூ மாலைகள் தொடுத்துக் கொடுப்பதிங்கே
துளசிக்கொழுந்தெடுத்துக் தொட்டுக் கொடுப்பதங்கே
அம்பல ரகசியம் அறிந்து கொள்வதிங்கே
அஷ்டாக்ஷ்ரம் என்று அன்பு செய்வதுமங்கே
தேவாரம் திருவாசகம் படிப்பதிங்கே
திருவாய்மொழியோதி சேவிப்பதங்கே
அருமறைப் பொருளுக்கெட்டா வடிவமிங்கே
அறிதுயில் அணையானை ஆதரிப்பதங்கே

இப்பாடலை சஞ்சய் சுப்ரமணியம் அவர்கள் பாடிட இங்கு கேட்கலாம்:

Saturday, January 16, 2010

நாராயணீயம்

குருவாயூரப்பனே அப்பன் என, திருமதி. அம்புஜம் கிருஷ்ணா அவர்கள் இயற்றிய பாடலை முன்பொரு பதிவில் பார்த்தோம் அல்லவா, இந்தப்பதிவில், ஸ்ரீகிருஷ்ணன் புகழ் பாடும் நாராயணீயம் பற்றிப் பார்ப்போம். ஸ்ரீமத் பாகவதத்தின் சாரத்தினைப் பொழியும் நாரயணீயமதில் அத்வைத பக்தியில் ஆழ்ந்து திளைத்திடலாம். நாராயண பட்டாத்ரி என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் வடமொழியில் இயற்றப்பட்டவை இப்பாடல்கள். தன் உடலைத் தானே சுமந்து அதன் உபாதைச் சுமைகளால் மனம் நொந்து, துயர் தீர வழி யாதெனத் தேடலின் விளைவுகள் இப்பாடல்கள். இப்பாடல்களை பாடியபின் பட்டாத்ரி அவர்களின் துயர் தீர்ந்தது. இப்பாடல்களைப் படிப்போருக்கும் அதுபோல துயரெலாம் களைய குருவாயூரப்பன் துணையிருப்பானாக. 

குரு-வாயு இருவரால் இங்கே வந்திறங்கி குருவாயூர் தலமதில் கோவில் கொண்டு கலியுகத் துயர்தீர கருணைகொண்டான் கண்ணன்! மணிகள் முழங்கட்டும், மங்களம் பெருகட்டும், கலியுக வரதன் கார்மேக வண்ணன் கமலக் கண்ணன் புகழெங்கும் ஓங்குகவே! 

ஸ்ரீமந் நாரயணீயம் சுலோகத் தொகுதிகளை இங்கே படிக்கலாம். அவற்றில் இருந்து முதல் தசகத்தினை இங்கே தமிழில் படித்துப் பார்க்கலாமா? 

தசகம் 1: சுலோகம் 1 எல்லா இடத்திலும் நிறைந்தது, காலம் மற்றும் இடத்தினில் குறுகாதது, மெய்யான, எல்லையில்லா ஆனந்தம், தூய மெய்ஞானம் பரப்பிரம்மம்! கணக்கிலா மறைகள் உரைசெய்திட்டினும், கண்டு தெளிந்திட கடினமானதும், தெளிந்திட உன்னதக் குறிக்கோளான வீடுபேறாகவே விளைந்தது! அதுவே, இதோ, நம்கண் முன்னே குருவாயூரினில் திகழ்வது, ஆகா, என்ன அற்புதம்! இஃதே மனிதரின் பாக்கியமன்றோ! ~~~~ கேட்டதைக் கொடுப்பவனாம் கீதையின் நாயகன் குருவாயூர் கண்ணனை பரப்பிரம்மம் என இப்பாடல் சொல்கிறது. பிரம்மமானது உருவம் என்ற வரையறைக்கு உட்பட்டதா என்கிற கேள்வி எழலாம். பிரம்மம், அதாவது குணங்கள் இல்லாத நிர்குண பிரம்மம், எப்படி நம் கண்முன்னே திகழ முடியும்? மேலே எப்படி என்கிற கேள்வியினை சற்றே மாற்றிக் கேட்டுப் பார்ப்போம். கண் முதலான புலன்களால் துயத்திடும் பொருளனுபவம், எப்போதும் வரையறைக்கு உட்பட்ட பொருட்களையே துய்த்திட இயலும். இவை சாதாரண, நிலையிலா இன்பத்தினையே தந்திட இயலும். அப்பொருள் இல்லையேல் அவ்வின்பம் இல்லை. நிலையான பேரின்பத்தினைத் தருவது பரப்பிரம்மமாக மட்டுமே இருக்க இயலும். அப்படிப்பட்ட பிரம்மம் குருவாயூரினில் திகழ்ந்திட, அப்பேரின்பத்தினைக் கண்டு களித்திட இவ்விரு கண்களால் மட்டுமே இயன்றிடுமா? உபநிடதமும் சொல்லும்:
குருவின் துணையுடன் மனதால் மட்டுமே காணக்கூடியது பிரம்மம். அதில் வேற்றுமை என்பதே இல்லை. - பிரஹதாரண்யக உபநிடதம் 4.4.19
~~~~ தசகம் 1: சுலோகம் 2 பிரம்மம், மானிடப்பிறப்பு, பக்தியோகம் மற்றும் ஸ்ரீமத் பாகவதமென, கிடைத்தற்கரிய பொருட்கள் நான்கிருப்பினும் நெய்யிருக்க வெண்ணையைத் தேடி அலைபவர் ஆயிரம்! தந்திரங்களையும் மந்திரங்களையும் தரிசனங்களையும் நம்பித் தம்பொழுதை வீணாக்கியவரே அவரெல்லாம்! நாமெல்லாம் இங்கே திடமாய் மனதில் முழுதாய் குருவாயூரப்பனையே நாடிடுவோம்! - அவனே, எல்லாப் பொருட்களிலும் உறைபவன், எல்லாக் குறைகளையும் களைபவன். ~~~~ இப்படியாகச் சொல்லி, அடுத்த வரும் சுலோகம் குருவாயூரப்பனின் திருஉருவத்தினை எடுத்தியம்புகிறது. ~~~~ 

தசகம் 1: சுலோகம் 3 சாத்வ குணத்தின் தூய வெளிப்பாடே நின் திருவுருவமென வேதவியாசரின் சொற்களும் பலமுறை ஒலித்திடுமே. சச்சிதானந்தப் பேரொளியில் திகழும் பரமன் செவிக்கும் மனதுக்கும் இன் அமுதமேயாம். கைக்கொள்ள எளிதாய் கிடைத்ததென்றே அருள்பெற்ற அடியார் யாரும் உரைப்பரே. ~~~~ ஒப்பிலா பிரம்மத்தினைப் பெருங்கடலுக்கு ஒப்பிட்டுப் பார்க்கிறது, அடுத்த சுலோகம்! இரண்டுக்கும் பொதுவானதை, அழகாகப் பட்டியலிடுகிறது: 

தசகம் 1: சுலோகம் 4 பிரம்மம் எனும் ஆழமான பெருங்கடல் செயலற்றதாம், எப்போதும் 'நிறை'ந்தாம், ஆனந்தம் தரும் அமுதினைக் கொண்டதாம், எண்ணிடலடங்கா விடுபெற்ற ஆன்மாக்களை தன்னிடத்தே முத்துக்களாய் கொண்டதாம், தூய சாத்வகுணமே வெள்ளை அலைகளாய் வீச, எல்லையிலாமல் எல்லாமுமாய் ஆனவனே தனித்தனியென இல்லாமல் முழுமையாய் இருப்பதென்னே! ~~~~ 

தசகம் 1: சுலோகம் 5 ஆதி அந்தமில்லாதவனே, செயலற்றதாய், பிரம்மமாய் இருப்பினும், மாயைதனை எம்மேல் வீசும் தொழில்கொண்டதேனோ வைகுந்தனே! தூய அறிவால் இடரேதும் இலாது, சத்வகுணமே நிறைந்திட, தூய தெளி தேனே! ~~~~~~~~~~~~ செயலே இலாமால் மாயைதனை எப்படி விளைவிக்க இயலும்? காந்தம் போலவோ? தன்னிடம் எந்த அசைவும் இல்லாமல், தன் வசம் இரும்பை இழுப்பதுபோலவோ! உபநிடதமும் சொல்லும்:
பிரகிருதி அல்லது இயற்கையினை மாயை அல்லது தோற்றமயக்கம் எனப் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், அதனை நடத்தி வைக்கும் மாயாவி பரம்பொருளேயாம். - ஸ்வேதஷ்வதார உபநிடதம் 4/10.
எனினும் இந்த மாயையினால் பரமனுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. ஏனெனில் அவன் சத்வ குணத்தினால் நிறைந்தவன். அவனிடம் 'நான், எனது' எனும் எண்ணங்கள் தோன்றுவதில்லை. அவனிடத்தில் இருந்து பிரம்ம சைதன்யம் மறைவுபடாமல் திகழ்கிறது. ~~~~~~~~~~~~~ நாம் தியானிப்பதற்காக குருவாயூரப்பனின் வடிவழகை எடுத்தியம்புகிறது அடுத்த வரும் சுலோகங்கள்: 

தசகம் 1: சுலோகம் 6 புதிய மழை மேகங்கள் போலும் புதிதாய் பூத்த காசாம்பூ மலர்கள் போலும் அழகாய்த் திகழும் குருவாயூரப்பனே, நல்லவைகளின் முழுவடிவமாம், இலக்குமியின் இருப்பிடமாம். அழிபொழியாய் இதயமதில் அருள்பொழிபவனே, நின்னுருவை எப்போதும் தியானித்திடுவோமே. 

தசகம் 1: சுலோகம் 7 மாயைகளைத் தாண்டிய மாயவனே, முன்னம் நினைத்தேன் புரியாத புதிர் உன் செயலென்று. மாந்தர் மாயையில் சிக்க துயர் பல ஏன்பட வேண்டும்? மானிடராய் பிறப்பதன் பயன் இப்போது அறிந்தேன். இல்லாமல் எப்படி எல்லையில்லா இன்பத்தைப் பருகிப்பின் அவ்வின்பத்தினை வெளிப்படுத்ததான் இயலும்? இத்தலத்தில் இவ்வடிவில் அந்த பிரம்மானந்தம் இருப்பது, இனி எல்லாம் இன்பமயமன்றோ! 

தசகம் 1: சுலோகம் 8 உன்னை வணங்கியவருக்கு உன் வடிவினைக் காட்டுபவன் நீ. கேட்காமலே வாழ்வின் குறிக்கோளினை அடையக் கொடுப்பவன். இந்திரலோக சுகங்களை ஏங்கும் வீணர்கள் அறியார் எல்லோருக்கும் எளிதாய்க் கிடைக்கும் பாரிஜாதம் எம்தலைவன் ஹரியென்று. கணக்கிலா பரிசுகளைத் தருபவன் நீயன்றோ. 

தசகம் 1: சுலோகம் 9 கருணையை மட்டும் தரும் தெய்வங்கள் இருக்க, தன்னையே தருபவன் தனித்துவமான குருவாயூரப்பன்! உன்னருகே எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் தன்னொளியில் திளைப்பவர் கொடுத்து வைத்தவரே! நின்னொளியில் திளைப்பது நீயுமல்லவோ! கணக்கிலா நன்னெறிகளின் இருப்பிடமே, சுரசேனையின் தலைவனே, உனக்கு வணக்கங்கள்! 

தசகம் 1: சுலோகம் 10 உயர்தலைவா, முரனை வதம் செய்தவனே, சங்கரன் முதல் எல்லா தெய்வங்களையும் ஆள்பவனே, எல்லா வலிமைகளையும் விட வலிவானவான் நீ. குறையற்ற நின்புகழை துறந்தோரும் பாடுவர். திருமகளை எப்போதும் நின்திருமார்பில் கொண்டவனே, எல்லாம் அறிந்தவனே, பற்றுகளற்ற குருவாயூரப்பனே, பகவன் என்ற போற்றுதலுக்கு உரிய முதல்வன் நீ மட்டுமே.