Showing posts with label தேவாரம். Show all posts
Showing posts with label தேவாரம். Show all posts

Monday, June 03, 2024

ஆடல் வல்லான் - எம்மை ஆளவந்தான்!

எடுப்பு

டல் வல்லான் - எம்மை ஆளவந்தான்!

பாடல்பெற்றத் தலங்கள் பலவிருக்கையில்

ஆடல் வல்லான் - இங்கெம்மை ஆளவந்தான்!


தொடுப்பு

தேடிய இருவர் காணக் கிடைக்காகூத்தன்,

தேய்ந்த பிறை சூடிய பெருமான் நினைவில்

தேய்ந்த இடை இன்னமும் தேய்கையில் 

ஆடல் வல்லான் - இங்கெம்மை ஆளவந்தான்!


முடிப்பு

காவிரியின் இருகரை நெடுகிலும் 

கயற்கொடி பாண்டிய நாட்டிலும்

தொண்டை கொங்கு மலை நடுநாட்டிலும்

துளுவம் ஈழம் வடநாட்டிலும் பாடல் பெற்ற

ஆடல் வல்லான் - இங்கெம்மை ஆளவந்தான்!


------------

இன்று காலை எழுகையில் மனதில் நிலைத்த வரிகளை விரித்து எழுதியது.

------------

Friday, March 18, 2022

வட்டனை மதிசூடியை - அப்பர் தேவாரம்

திருவாவுக்கரசர் தேவாரம்

திரு அண்ணாமலைத் தலம்



வட்டனைம் மதி சூடியை வானவர்
சிட்டனைத் திரு வண்ணா மலையனை
இட்டனையிகழ்ந் தார்புர மூன்றையும்
அட்டனை யடி யேன் மறந் துய்வனோ.

வானனைம் மதி சூடிய மைந்தனைத்
தேனனைத் திரு வண்ணா மலையனை
ஏனனை யிகழ்ந் தார்புர மூன்றெய்த
ஆனனை யடி யேன்மறந் துய்வனோ.

மத்தனைம்மத யானை யுரித்தவெஞ்
சித்தனைத் திரு வண்ணா மலையனை
முத்தனைம் முனிந் தார்புர மூன்றெய்த
அத்தனை யடி யேன்மறந் துய்வனோ.

காற்றனைக் கலக்கும்வினை போயறத்
தேற்றனைத் திரு வண்ணா மலையனைக்
கூற்றனைக் கொடி யார்புர மூன்றெய்த
ஆற்றனையடி யேன்மறந் துய்வனோ.

மின்னனை வினை தீர்த்தெனை ஆட்கொண்ட
தென்னனைத் திரு வண்ணா மலையனை
என்னனை யிகழ்ந் தார்புர மூன்றெய்த
அன்னனை யடி யேன்மறந் துய்வனோ.

மன்றனைம் மதி யாதவன் வேள்விமேல்
சென்றனைத் திரு வண்ணா மலையனை
வென்றனை வெகுண் டார்புர மூன்றையுங்
கொன்றனைக் கொடி யேன்மறந் துய்வனோ.

வீரனை விட முண்டனை விண்ணவர்
தீரனைத் திரு வண்ணா மலையனை
ஊரனை யுண ரார் புர மூன்றெய்த
ஆரனையடி யேன்மறந் துய்வனோ. 

கருவினைக் கடல் வாய்விட முண்டவெம்
திருவினைத் திரு வண்ணா மலையனை
உருவினை யுண ரார்புர மூன்றெய்த
அருவினையடி யேன்மறந் துய்வனோ. 

அருத்தனை யரவைந்தலை நாகத்தைத்
திருத்தனைத் திரு வண்ணா மலையனைக்
கருத்தனைக் கடி யார்புர மூன்றெய்த
அருத்தனை யடி யேன்மறந் துய்வனோ. 

அரக்கனை யலற வ்விர லூன்றிய
திருத்தனைத் திரு வண்ணா மலையனை
இரக்கமா யென் உடலுறு நோய்களைத்
துரக்கனைத் தொண்ட னேன்மறந் துய்வனோ.

 

Friday, September 11, 2020

திருநெல்வாயில் அரத்துறை

பொன்னானவன் மணியானவன் முத்தானவன் 
சொன்னசொல்லானவன் பேச்சானவன் மூச்சானவன் 
ஒன்றானவன் ஒவ்வொன்றானவன் ஒவ்வொரு பொருளானவன் 
எனினும் தான்மட்டுமே தனக்கு நிகரானவன்.

தலம்: திருநெல்வாயில் அரத்துறை (திருவட்டத்துறை)
 
மூலவர்: தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்

அம்பாள்: ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
 
திருவட்டத்துறை என்று தற்போது வழங்கப்பட்டு வரும் திருநெல்வாயில் அரத்துறைத் தலம் தேவாரப் பாடல் பெற்ற தலம். விருத்தாசலத்தில் இருந்து திட்டக்குடி செல்லும் வழியில் உள்ளது.

ந்தாம் திருமுறையில் மூன்றாம் பதிகத்தில் நாவுக்கரசர் ஒவ்வொரு பாடலிலும் உலகியில் பொருட்களை ஒப்புமைக்கு எடுத்துகொண்டு சிவனைப் போற்றுகிறார். இப்பாடலில், பொன் போன்றவன், பொன்னின் சுடர் போன்ற மின்னல் போன்றவன், அன்னை போன்றவன் என்றெல்லாம் சொல்கிறார். இறுதியில், அவனுக்கு அவன் மட்டுமே ஒப்பானவன் என்கிறார். 
 
இது முரணாக உள்ளதோ என்றால், இல்லை. ஏனெனில் பொன்னின் குணத்தையும், மின்னலின் குணத்தையும், அன்னையின் குணத்தையும், ஏன் இன்னபிற எல்லாவற்றின் குணத்தையும் கொண்டவனாக அவன் இருக்கிறான். ஆகவே அவனது குணத்தை ஒவ்வொன்றாகச் சொல்லும் போது அந்த ஒரு குணத்துக்கு ஒப்பாக ஒன்றைச் சொல்ல இயலுமே தவிர, எல்லா குணங்களையும் கொண்ட ஒன்றாக இருக்கும் அவனுக்கு நிகர் அவன் மட்டுமே.
 
பொன் ஒப்பானைப், பொன்னிற் சுடர் போல்வதோர்
மின் ஒப்பானை, விண்ணோரும் அறிகிலார்
அன்னை ஒப்பானை, அரத்துறை மேவிய
தன் ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே.
- திருநாவுக்கரசர் தேவாரம் (பதிகம் 5.3 பாடல் 8)

திருமணம் நடக்க இருந்த போது, சுந்தரரை வலிய வந்து இறவன் தடுத்தாட் கொண்டதையும், சுந்தரருக்காக இறைவனே தூது போனதையும் அறிவோம். ஆனால் அடுத்துப் பார்க்கப் போகும் பாடலில் தன் நண்பர் பாவனையை விட்டுவிட்டு பிழைத்துப்போக வழிதேடி தொடர்ந்து வந்ததாக இரங்குகிறார்!  

ஏழாம் திருமுறையில், இப்பதிகப் பாடலில், சுந்தரமூர்த்திப் பெருமான் - ஒருவன் பிறந்தான்; பின் இறந்தான் என்று காலப்போக்கில் வெறும் சொல்லாக வாழ்க்கை கடந்து விடாமல் - பிழைக்கும் வழி கிட்டிட உன்னைத் தொடர்ந்தேன் என்கிறார்.   அவருக்காக அருள் செய்யவே, அகிலும் மணிகளும் இயற்கையாகவே தள்ளிக்கொண்டு நதியின் கரையை அடைவதுபோல், இயற்கையாகவே, வெண்மதி சூடிய பெருமான் நெல்வாயிலெனும் ஊரில் அரத்துறையில் கோயில் கொண்டான்.

கல்வாய் அகிலும் கதிர்மாமணியுங்
    கலந்து உந்திவரும் நிவவின்கரைமேல்
நெல்வாயில் அரத்துறை நீடுறையுந்
    நிலவெண்மதிசூடிய நின்மலனே
நல்வாயில் செய்தார் நடந்தார் உடுத்தார்
    நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய்க் கழிகின்ற தறிந்தடியேன்
    தொடர்ந்தேன் உய்யப் போவதொர் சூழல்சொல்லே

- சுந்தரர் தேவாரம் (பதிகம் 7.3 பாடல் 1)

நிவவின் கரை - நிவா நதிக்கரை - தற்போது வடவெள்ளாறு. ஒரு சமயம் இந்த நிவா நதிக்கரையில் ஆதிசேஷன் சிவபெருமானை நோக்கி கடுந்தவம் புரிந்தார். அவரது தவத்தை மெச்சி பெருமானும் அன்னையுடன் காட்சி அளித்தார். அவ்விடம் அன்றுமுதல் அரவம்+துறை = அரத்துறை என்று வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

பாலகன் திருஞான சம்பந்தர் இந்தத் தலத்திற்கு வருவதற்கு முன்பாக, அவரது பாத தாமரை நோகமல் இருக்க, இறைவனே முத்துச் சிவிகையும், முத்துக் குடையும், முத்துச் சின்னங்களையும் அவருக்கு வழங்கி இந்த தலத்திற்கு அழைத்து வரப்பெறுகிறார் என்கிறது பெரிய புராணம். 

அந்த முத்துச்சிவிகையில் ஏறுவதற்கு முன்பாக, மாறன்படியில் தான் ஏறி வருவதற்கு சிவிகை அனுப்பி வைத்த திருநெல்வாயில் அறத்துறை நாதனை "எந்தை ஈசன்" எனத் துவங்கும் பதிகம் பாடுகிறார் சம்பந்தப் பெருமான்.

எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க் கல்லாற் சென்றுகை கூடுவதன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும்புன னிவாமல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே. 

- சம்பந்தர் தேவாரம் (பதிகம் 2.90 பாடல் 1)



இத்தலத்தின் கூகுள் மேப் இணைப்பு 





Sunday, June 21, 2020

கள்வரோ நீர்?

ன்னவெல்லாம் தோன்றும் எம்பெருமான் மேனியிலே என்றெடுத்துச் சொல்வார் திருநாவுக்கரசர் பெருமான் இந்த திருப்பூவணம் பதிகத்தின் முதல் பாடலில்:
வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்
வளர்சடை மேல் இளமதியம் தோன்றும் தோன்றும்
கடியேறு கமழ்கொன்றைக் கண்ணி தோன்றும்
காதில் வெண்குழைதோடு கலந்து தோன்றும்
இடியேறு களிற்றுரிவைப் போர்வை தோன்றும்
எழில்திகழும் திருமுடியும் இலங்கித் தோன்றும்
பொடியேறு திருமேனி பொலிந்து தோன்றும்
பொழில் திகழும் பூவணத்தெம் புனிதனார்க்கே
 		- வாசீகப் பெருமான் நாவுக்கரசர்

முழு பதிகத்தினையும் இங்கு பார்க்கலாம்.

சிவகாமியின் சபதம் நாவலில் கல்கி அவர்கள் இப்பாடலுக்கும் இன்னும் சில பாடல்களுக்கும் சிவகாமி நாட்டியம் ஆடுவதாகக் கதை அமைத்து, கதையோடு சேர்த்து கண்ணுதற் கடவுளைக் கருத்தில் நிறைத்திடும் கனிவான திருநாவுகவுக்கரசர் தேவாரப் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.

இச்சில பாடல்களைப் படித்தாலே இன்னபிற இனிப்பினையும் தேடிப் படிப்பாரெனச் சொல்லவும் வேண்டுமோ!. இப்பாடல்கள் வரும் கல்கியின் சிவகாமியின் சபதம் நாவலுக்குள் செல்வோம்.

~~~~~~~~ முப்பத்தைந்தாம் அத்தியாயம் : கள்வரோ நீர்? ~~~~~~~~~~~~~

சிவகாமி மீண்டும் அரங்க மேடைக்கு வந்து அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள். திருநாவுக்கரசர் பெருமானின்,

"வடிவேறு திரிசூலம் தோன்றும் தோன்றும்

வளர்சடைமேல் இளமதியும் தோன்றும் தோன்றும்"

என்னும் பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடித்தபோது, சபையோர் சாக்ஷாத் சிவபெருமானையே நேருக்கு நேர் தரிசித்தவர்களைப் போல் ஆனந்த வாரிதியில் முழுகினார்கள்.

பின்னர், "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்" என்னும் திருப்பாடலுக்குச் சிவகாமி அபிநயம் பிடிப்பாள் என்று எல்லாரும் எதிர்பார்த்ததற்கு மாறாகச் சிவகாமி பின்வரும் பாடலைப் பாடி அபிநயம் பிடிக்கத் தொடங்கினாள்:

வெள்ளநீர்ச் சடையனார் தாம்

வினவுவார் போலவந்தென்

உள்ளமே புகுந்து நின்றார்க்கு

உறங்குநான் புடைகள் போந்து

கள்ளரோ புகுந்தீர் என்னக்

கலந்துதான் நோக்கிநக்கு

வெள்ளரோம் என்று நின்றார்

விளங்கிளம் பிறையனாரே!

ஓர் அறியாப் பெண்ணின் உள்ளமாகிய இல்லத்தினுள்ளே வெள்ள நீர்ச்சடையனாராகிய சிவபெருமான் ஏதோ விசாரிக்க வருகிறவர்போல வந்து பிரவேசிக்கிறார். தூங்கிக் கொண்டிருந்த பெண் திடுக்கிட்டு எழுந்திருக்கிறாள். கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறாள். யாரோ முன்பின் அறியாதவர் எதிரில் நிற்பதைக் கண்டு,

"ஐயோ! இப்படிச் சொல்லாமல் கொள்ளாமல் என் உள்ளத்திலே புகுந்த நீர் யார்? கள்ளரா?" என்று வினவுகிறாள்.

அப்போது வந்தவர் கண்ணோடு கண் கலங்கும்படி அந்தப் பெண்ணை உற்றுப் பார்க்கிறார். பார்த்துவிட்டு நகை செய்கிறார்;

அந்த நகைப்போடு கலந்து, "நானா கள்ளன்? கள்ளத் தனமென்பதே அறியாத வெள்ளை மனத்தவனாயிற்றே அதற்கு அறிகுறியாக என் மேலேயும் வெண்ணீறு பூசியிருக்கிறேன், தெரியவில்லையா?" என்கிறார்.

வானத்திலே விளங்கிய இளம் பிறையைத் திருடித் தம் சிரசிலே அணிந்து கொண்ட பெருமான்தான் இப்படி ஒன்றும் தெரியாதவர் போல நடித்தார்! ஆகா! அந்த இளம் பிறையின் அழகைச் சொல்வேனா? அவருடைய கள்ளத்தனத்தைச் சொல்வேனா? அல்லது கள்ள மற்றவர் போல அவர் நடித்த நடிப்பைச் சொல்வேனா?... மேற்கூறிய இவ்வளவு உள்ளப் பாடுகளும் வெளியாகும்படியாகச் சிவகாமி தன் முகபாவங்களினாலும், அங்கங்களின் சைகைகளினாலும் கைவிரல்களின் முத்திரையினாலும் உணர்ச்சியோடு கலந்து அற்புதமாக அபிநயம் பிடித்தாள்.

பாடலும் அபிநயமும் சபையோருக்கு எல்லையற்ற குதூகலத்தை அளித்துப் பல முறை 'ஆஹா'காரத்தை வருவித்தது. ஆனாலும் சபையோர்கள் திருப்தியடைந்தவர்களாகக் காணவில்லை. அவர்களில் ஒருவர் துணிந்து எழுந்து அரங்க மேடைக்குச் சென்று ஆயனர் காதோடு ஏதோ சொன்னார். அது சிவகாமியின் செவியிலும் விழுந்தது. சிவகாமி சிறிது தயக்கத்துடனேயே, "முன்னம் அவனுடைய நாமம் கேட்டாள்!" என்று பாடிக்கொண்டு அபிநயம் பிடிக்க ஆரம்பித்தாள். எவ்வளவோ திறமையுடனே, விதவிதமான உள்ளப்பாடுகள் அற்புதமாக வெளியாகும்படி அபிநயம் பிடித்தாள். பாட்டும் அபிநயமும் முடியும் தருவாயில் சபையிலே பலருக்கு ஆவேசம் வந்துவிட்டது!

ஒரு வயது சென்ற கிழவர் எழுந்து நின்று, "நடராஜா, நடராஜா! நர்த்தன சுந்தர நடராஜா!" என்று பாடிக் கொண்டே ஒரு காலைத் தூக்கிய வண்ணம் சபையிலே நடனமாடத் தொடங்கி விட்டார். "இம்மாதிரி உணர்ச்சி வாய்ந்த அபிநயத்தை இது வரையில் யாரும் பார்த்ததில்லை; இனிமேல் பார்க்கப் போவதும் இல்லை" என்று சபையோர் ஒருவருக்கொருவர் கூறி மகிழ்ந்தார்கள்.

Monday, June 15, 2009

Humility - தமிழில் என்னங்க?

Humility - ஆங்கிலத்தில் அழகானதொரு சொல்!

தமிழில் எப்படிச் சொல்வது?

அகராதியைப் புரட்டிப் பார்த்தால், அது சொல்வது:

தாழ்வு
பணிவு/பவ்யம்/தலைவணக்கம்
செருக்கின்மை

இவற்றைக் காட்டிலும், எனக்குப் பிடித்தது : விநயம்!

அட, விநயம், என்ன அழகான சொல்!

"வித்தைக்கு அழகு விநயம்" என்பார்கள்.

பல கற்று அறிந்து இருந்தாலும், அதனால் தலைக்கனம் இல்லாமல் இருப்பது விநயம்.
பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து.
என்பார் வள்ளுவப் பெருந்தகை.

ஆனால், பல சமயம் இதனை தாழ்வு மனப்பான்மை/கோழைத்தனம் எனச் சிலர் குழப்பிக் கொள்வதும் உண்டு.

எப்படி இதனில் வேற்றுமை அறிவது?
விநயம் உண்டெனில், அங்கு தாழ்வில்லை. ஒருவர் தன் பெருமையை விட்டுவிடுவதில்லை. ஆனால், அப்பெருமை தரும் கர்வமோ, அகங்காரமோ அவரிடம் இருப்பதில்லை. மாற்றாக, அவரிடம் தன்நம்பிக்கை சுடர் விடும்.
நிறைய சாதித்தவர் பெற்றிருக்கும் நிறைவு, அவரது விநயத்தினால் வெளிப்படும்.

இருவரிடையே வாக்குவாதம் ஏற்படும்போது, கோபத்தினால் ஏற்படும் இறுமாப்பு, அவர்களின் வாக்குவாதத்தினையே வளர்க்கிறது. பெரும்பாலும், இதனால், வேறுப்பும், வேதனையுமே மிஞ்சுகிறது. அதற்கு பதிலாக, அவர்கள் விநயத்துடம் அணுகினால், அங்கே நன்மையே பயக்கும்.

எந்த அளவிற்கு அன்பு அதிகமாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு, அவர்களிடம் விநயம் அதிகமாக வெளிப்படும். ஏனெனில், அகங்காரம் குறைய, ஈகோவின் வெளிப்பாடுகள் குறைய, விநயம் அங்கே அதிகம்.

நமது சமுதாயத்தில், மற்றவர் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தும் பொறுப்பில் இருப்பவர்களான பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது தலைவர்கள் போன்றவர்கள், விநயத்தோடு செயல்படுவது அவசியம். ஏனெனில், சமுதாயத்தில் இவர்களின் பணி, இறைவனின் பணிக்கு ஒப்பானது. தங்களுடைய அதிகாரத்தினைப் பயன்படுத்தும் அதே சமயம், அவர்கள் விநயத்தின் அவசியத்தினை அறிந்திருப்பார்களா? உண்மையான அன்பிருந்தால், அறிந்திருப்பார்கள். அன்பு, இறைவனின் பணிக்கு ஒப்பானதொரு செயலினை ஆற்றிடும் பொறுப்பினை அவர்களுக்குத் தந்திடும். அன்பு வார்த்திடும் விநயமானது மனிதனை இறைவனுக்கு ஒப்பானதொரு நிலைக்கு கொண்டு செல்லக் கூடியது.

இறைவனுக்கு ஒப்பானதொரு நிலைக்கு மட்டுமல்ல, இறைவனை உணரவும், இறைவனை அடையவும், வழி வகுக்கிறது.

நாயினுங் கடைப்பட் டேனை நன்னெறி காட்டி ஆண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த வமுதனே யமுத மொத்து
நீயுமென் நெஞ்சி னுள்ளே நிலாவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகி னோக்கிநீ யருள்செய் வாயே.
- திருநாவுக்கரசர் தேவாரம், நான்காம் திருமுறை.

"நாயினும் கீழ்ப்பட்ட அடியேனை நல்ல நெறியைக் காண்பித்து அடிமையாகக் கொண்டுள்ளாய். நீயும் அடியேன் உள்ளத்தில் அமுதத்தைப் போல வந்து தங்கி விட்டாய்."
என நாவுக்கரசர் நவில்வது இவ் விநயத்தினால்தான்.

Wednesday, May 07, 2008

தேறுவது எப்போ நெஞ்சே?

தமிழிசை தழைத்திட தமிழ்ப்பாடல்களை இயற்றித் தொண்டு செய்தவர்களில் குறிப்பிடத்தக்க ஒருவர் திரு.நீலகண்ட சிவன் (1839-1900). 2000 க்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார் இவர். தமிழ் மூவர் இயற்றிய பாடல்களை படித்து வளர்ந்த கன்னியாகுமரிக்காரரான இவர், சிவ-பார்வதி தரிசனம் கிடைக்கப் பேறு பெற்றவர். இவருடைய மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர் பாபநாசம் சிவன் அவர்கள்!

நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய "தேறுவதெப்போ நெஞ்சே..." பாடலை இங்கு பார்க்கலாம். நீந்திக் கரை ஏற இயலாத பெருங்கடலென பிறவியினைச் சொல்வார்கள் பெரியோர்கள். பிறந்த முதலே, புலன்கள் சொல்லித்தரும் ஈர்ப்புகளில் நம்மை இழந்து விடுகிறோம். இந்த உலகில் சேர்க்கும் செல்வத்தோடும், சொந்த பந்தங்களுடனும், இன்ன பிற விருப்பங்களுடனும் இருக்கமானதொரு இணைப்பினை ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்த இணைப்பில் தவறேதும் இல்லை. ஆனால் அவையெல்லாம் நிலையில்லாதவை என்பதினை நாம் நமது சுயலாபத்திற்காக எளிதாக மறந்து விடுகிறோம். நிலையில்லா உலகில் நிலைப்பதெப்போ? நீந்திக் கரை ஏறுவதெப்போ? எல்லா இணைப்புகளையும் அறிந்திடும் அதே புத்தியில் ஒரு ஓரத்திலாவது, நிலையான நீலகண்டனின் நினைப்பிருந்தாலே போதுமே. அகந்தை அழிந்திட, சித்தினை அறிந்திடும் புத்தியினை நெஞ்சில் வார்க்கும் அவன் கருணையைத் தேடிட, கடைத்தேறாதோ பிறவி?
வேதம் நான்கும் சொல்லிடும் நாதன் நாமமே மெய்ப்பொருளாக இருக்கையில், வேறேன்ன வேண்டும்?

காதலாகி கசிந்துருகி கண்ணீர் மல்கி

ஓதுவார் தமை நல்நெறிக்கு உய்ப்பது

வேதநான் கினும் மெய்பொருள் ஆவது

நாதன் நாமம் நமச்சிவாயமே.

(மூன்றாம் திருமுறை - திருஞான சம்பந்தர் தேவாரம்).

இப்போது திரு.நீலகண்ட சிவனின் பாடலைப் பார்ப்போம்:
------------------------------------------------------------------------------------------
இராகம் : கமாஸ்
தாளம் : ஆதி

எடுப்பு
தேறுவதெப்போ நெஞ்சே தெளிந்து கரை
ஏறுவதெப்போ நெஞ்சே

தொடுப்பு
கூறும் வேதத்தின் உண்மை குறியாமலே அஞ்ஞான
காரிருளில் கவிழ்ந்து கலங்கி மயங்கி நின்றால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

முடிப்பு
மண்ணே பொருளே யெந்தன் மனைவி மக்களேசொந்த
கண்ணே நீங்களே அல்லால் கதியில்லை என்றிருந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

உடலை நிலையென் றெண்ணி உலகவாழ்விதை நம்பி
மடமை பெருக நின்று வனமிருகம் போல் அலைந்தால்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

அண்டம் அளந்த மாலும்அயனும் அளவா நீல
கண்டம் கருணைதேடும் கருத்துணராராகில் ஜன்மம்
(தேறுவதெப்போ நெஞ்சே...)

சங்கீத கலாநிதி திருமதி. டி.கே.பட்டம்மாள் அவர்கள் பாடிட, இந்தப் பாடலை கேட்கலாம்:

தேறுவதெப்போ நேஞ்சே?

-------------------------------------------------------------------
நீலகண்ட சிவன் இயற்றிய பாடல்களில் இதர புகழ் பெற்ற பாடல்கள்:
சம்போ மகாதேவா,
உமைக்குரிய திருமைந்தா,
ஆனந்த நடம் ஆடுவார் தில்லை

Thursday, May 01, 2008

மாதர்பிறை கண்ணியானை : கண்டறியாதன கண்டேன்!

திருக்கைலாயத்தை தேடிச்சென்ற திருநாவுக்கரசர், பூலோக கைலாயமென பெரியவர் ஒருவர் குறிப்பிட திருவையாறு தலத்தை அடைகிறார். அங்கே அவர் தான் கண்ட காட்சியாக பாடுகிறார்:

இதோ, வீதியில் செல்லும் அவர்கள் அழகான பிறைமதியை தன் தலையணியாக அணிந்த சிவபெருமான் மற்றும் உமாதேவியை பாடிச் செல்கிறார்கள். அவர்கள் புதியதாக பறிக்கப்பட்ட பூவோடு நீரையும் எடுத்துக் கொண்டும் துதித்துக் கொண்டும் போகிறார்கள்.

அவர்கள் பின்னாலேயே போனால் நானும் கோயிலைச் சென்றடைவேனே.

கால்கள் சிறிதும் நிலத்தின் மேல் படாமல் திருவையாறு தலத்தை அடைந்தேனே. (திருக்கயிலாயம் செல்ல எடுத்துக்கொண்ட முயற்சியினால் என் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழிவுகள் எல்லாம் சுவடே இல்லாமல் மறைந்து போனதுவே, திருவையாற்றினை அடைந்ததுமே!)

அங்கே ஆண்யானையும், பெண்யானையும் ஜோடியாக காதல் களிப்புடன் வரக் கண்டு,
அக் காட்சியில் சிவபெருமானின் திருவடிகளைக் கண்டு தரிசித்தேன். (அன்பே சிவம்!)

இதுவரை கண்டு அறியாத காட்சிகளை (திருப்பாதம், சிவானந்தம்) எல்லாம் கண்டேன் என்று பாடுகிறார் அப்பர் பெருமான்.

(இந்தப் பாடலில் யானைகள் ஜோடியாக வருவதைக் குறிக்கும் அவர், இந்தப் பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு விலங்கு அல்லது பறவை தன் துணையுடம் வருவதாக குறிக்கிறார்.)
--------------------------------------------------
பதிகத்தின் முதல் பாடல்: (நான்காம் திருமுறை, திருநாவுக்கரசர் தேவாரம் பதிகம் 3)

மாதர்பிறை கண்ணியானை மலையான் மகளொடும் பாடி

போதொடு நீர்சுமந்தேத்தி, புகுவார் அவர்பின் புகுவேன்

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்றபோது

காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்.

கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்.

---------------------------------------------------------------------
மாதர்பிறை - அழகியபிறை
கண்ணி - நெற்றி/தலையில் சூடும் அணிகலன்
போதொடு நீர் - வழிபாட்டிற்குரிய நீர்
பிடி - பெண் யானை; களிறு - ஆண் யானை
---------------------------------------------------------------------
இந்தப் பாடலை பொன்னியின் செல்வனில், சேந்தன் அமுதனாகிய மதுராந்தகத் தேவர் பாடிக்காட்டுவதாக வரும். சேந்தன் அமுதன் பாடி முடித்தபின், அருகிலிருந்த குந்தவை, செம்பியன் மாதேவியிடம், இந்தப் பதிகம் பிறந்த வரலாற்றைக் கேட்பார். அந்த முதிய பிராட்டி சொன்ன வரலாற்றை, கல்கியின் வரிகளில் இங்கே அப்படியே தருகிறேன். நீங்கள் மெய்மறந்து கேட்டிட:

அப்பர் சுவாமி பிராயம் முதிர்ந்து உடல் தளர்ச்சியுற்றிருந்த சமயத்தில் கைலையங்கிரிக்குச் சென்று இறைவனைத் தரிசிக்க விரும்பினார். நெடுதூரம் வடதிசை நோக்கிப் பிரயாணம் செய்தார். மேலே நடக்க முடியாமல் களைத்து விழுந்தார். அச்சமயம் ஒரு பெரியவர் அங்கே தோன்றி, "அப்பரே! கைலையைத் தேடி நீ எங்கே செல்கிறீர்? பொன்னி நதிக் கரையிலுள்ள திருவையாற்றுக்குச் செல்லுங்கள்! பூலோக கைலாசம் அதுதான்" என்று அருளிச் செய்து மறைந்தார். அது இறைவன் வாக்கு என்று அறிந்த அப்பர் திரும்பித் திருவையாறு வந்தார். அந்த ஸ்தலத்தை நெருங்கி வந்த போதே அவருடைய உள்ளம் பரவசம் அடைந்தது. பல அடியார்கள் கையில் பூங்குடலையும் கெண்டியில் காவேரி நீரும் ஏந்தி ஐயாறப்பனைத் தரிசிப்பதற்காகச் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தார். அவர்கள் இறைவனுடைய புகழைப் பாடிக்கொண்டு சென்றார்கள். அவர்கள் பின்னால் அப்பரும் சென்றார். அப்போது திருவையாறு நகர்ப்புறத்தில் ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் வந்தன. அந்தக் களிறும் பிடியும் சிவமும் சக்தியுமாக அப்பருக்குக் காட்சி அளித்தன. ஆலயத்தை அடைவதற்குள் இவ்வாறு பல விலங்குகளையும் பறவைகளையும் ஆண் பெண் வடிவத்தில் அப்பர் பார்த்தார். கோழி பெடையோடு கூடிக் குலாவி வந்தது; ஆண் மயில் பெண் மயிலோடு ஆடிப் பிணைந்து வந்தது; அருகிலிருந்த சோலையில் ஆண் குயிலோடு பெண் குயில் பாடிக் களித்துக் கொண்டிருந்தது; இடி முழக்கக் குரலில் முழங்கிக் கொண்டு ஏனம் ஒன்று அதன் பெண் இனத்தோடு சென்றது; நாரையும் அதன் நற்றுணையும் சேர்ந்து பறந்து சென்றன; பைங்கிளியும் அதன் பேடையும் பசுமரக்கிளைகளில் மழலை பேசிக் கொண்டிருந்தன; காளையும் பசுவும் கம்பீரமாக அசைந்து நடந்து சென்றன. இவ்வாறு ஆணும் பெண்ணுமாக அப்பர் சுவாமிகளின் முன்னால் தோன்றியவையெல்லாம் சிவமும் சக்தியுமாக அவருடைய அகக்கண்ணுக்கு புலனாயின. உலகமெல்லாம் சக்தியும் சிவமுமாக விளங்குவதைக் கண்டார். "இந்த உலகமே கைலாசம்; தனியாக வேறு கைலாசமில்லை" என்று உணர்ந்தார். இத்தகைய மெய்ஞான உணர்ச்சியோடு மேலே சென்றபோது, ஐயாறப்பரும், அறம் வளர்த்த நாயகியும் கைலாச வாகனத்தில் எழுந்தருளி வீதி வலம் வருவதையும் பார்த்தார். தாம் அன்று புறக்கண்ணாலும் அகக்கண்ணாலும் பார்த்து அனுபவித்ததையெல்லாம் ஒவ்வொன்றாக இனிய தமிழில் இசைத்துப் பாடி அருளினார். இத்தனை காலமும் தாம் கண்ணால் கண்டும் கருத்தினால் அறியாமலிருந்தவற்றை இன்று திருவையாற்றில் கண்டு அறிந்து கொண்டதாக ஒவ்வொரு பாடலின் முடிவிலும் "கண்டறியாதன கண்டேன்!" என்று திரும்பத் திரும்ப வியந்து கூறினார்.

---------------------------------------------------------------
பாடல் : மாதர்பிறை கண்ணியானை

இயற்றிவர் : திருநாவுக்கரசு நாயன்மார்

தலம் : திருவையாறு

இராகம்: செஞ்சுருட்டி

பாடுபவர் : விஜய் சிவா

Monday, April 28, 2008

இறைவனின் திருவருளைப் பெறாதவர் யார்?

சென்ற பதிவில் ரஞ்சனி&காயத்ரி அவர்கள் பன்னிரெண்டாம் திருமுறையான பெரிய புராணத்தின் வாழ்த்துப் பாடலுடன் விருத்தத்தினைப் பாடத் துவங்குவதை பார்த்தோம்.
தொடர்ந்து, அவர்கள், இன்னொரு பாடலையும் பாடினார்கள்.
அந்தப் பாடல், ஆறாம் திருமுறையான திருநாவுக்கரசர் தேவரத்திலிருந்து ஒரு பாடல்.

திருநாமம் அஞ்செழுத்தும் செப்பா ராகில்
தீவண்ணர் திறமொருகால் பேசா ராகில்
ஒருகாலுந் திருக்கோயில் சூழா ராகில்
உண்பதன்முன் மலர்பறித்திட் டுண்ணா ராகில்
அருநோய்கள் கெடவெண்ணீ றணியா ராகில்
அளியற்றார் பிறந்தவா றேதோ வென்னில்
பெருநோய்கள் மிகநலியப் பெயர்த்துஞ் செத்தும்
பிறப்பதற்கே தொழிலாகி இறக்கின் றாரே.

இறைவனின் திருவருளைப் பெறாதவர் யார்?

'நமசிவாய' எனும் அஞ்செழுத்து திருநாமத்தினை ஒருகாலும் செப்பாதவர்.

தீவண்ணம் உடைய சிவனின் இயல்பை ஒருகாலும் பேசாதவர்.

ஒருகாலும் திருக்கோயிலினை வலம் வாராதவர்.

உண்பதற்குமுன் மலரைப் பறித்து அவற்றை இறைவனுக்கு இட்டுப்பின் உண்ணாதாவர்.

கொடுநோய்கள் தீர வெண்ணீற்றை அணியாதவர்.

இவ்வாறு செய்யாதாரெல்லாம் இறைவனது திருவருளை இழந்தவர் ஆவர்.
இப்படிப்பட்டவருக்கு, தீராத கொடுநோய்கள் மிகத் துன்புறுத்தச் செய்து,
வரும் பிறப்பிலும் பயனின்றி இறந்து மீண்டும் மீண்டும்
பிறப்பதற்கு அவர் செய்த ஊழ் வினைகளே தொழிலாகி இறக்கின்றார், என்கிறார் திருநாவுக்கரசு நாயன்மார்.
---------------------------------------------------------------
தீராத நோயெல்லாம் தீர்த்து வைக்கும் திருநீறினையும்,
பிறவிச் சுழலில் சிக்கித் தவிப்பவருக்கும் அபயம் தந்திடும்
நமசிவாய மந்திரத்தின் மாண்பினையும் இவ்வாறாய் எடுத்துரைக்கிறார் அப்பர் பெருமான்.
உம்மையில் தொடர்ந்த வினைகள், இம்மையில் அவன் பாதம் பற்றி அகற்றா வினைகள்,
எல்லாம் சேர்ந்து, மறுமையினைத் தொடர்வதற்கு தொழிலாகவே மாறி விடுகின்றனவாம்.
'ஒருகாலும்' என்ற சொல்லாடலை கவனிக்கவும். ஒருமுறையேனும், மேற்சொன்னவற்றைச்
செய்தாலும், அந்த நற்செயலின் பயனே, நாதனின் அருளைத் தந்திடாதோ.
நற்பயன்களின் தொடர்ச்சியால், வினைப்பயன்கள் வெந்து மடியாதோ.
---------------------------------------------------------------
சென்ற பதிவில் கேட்ட பாடலை இங்கும் கேட்கலாம்: ('உலகெலாம் உணர்ந்து...'தனை தொடர்ந்து கேட்கவும்)

பாடுபவர் : ரஞ்சனி & காயத்ரி
வயலின் : சாருமதி ரகுராமன்
மிருதங்கம் : அருண் பிரகாஷ்
கடம் : குருபிரசாத்
ராகம் : சுத்த தன்யாசி

Ulagellam unarndu....


பி.கு:
விருத்தம் முடிந்தபின், அடுத்த பாடலாக, நீலகண்ட சிவன் அவர்கள் இயற்றிய 'தேறுவதெப்போ நெஞ்சே...' என்ற பாடல் துவங்குகிறது. அந்தப் பாடலை, இன்னொரு சமயம் பார்ப்போம்.

Wednesday, March 05, 2008

திருவெண்காட்டில் தேவாரம் பாடுவோம் வாங்க!

திருவெண்காடு - இத்திருத்தலம் சீர்காழி மற்றும் மயிலாடுதுறைக்கு இடையே உள்ளது.
சுவாமி - சுவேதாரண்யேஸ்வரர், அம்பாள் - பிரம்மவித்யாநாயகி
திருவெண்காட்டீசனை திருஞான சம்பந்தர் இரண்டாம் திருமுறையான தேவாரப் பதிகத்தில் பாடும் செய்யுள்களை இங்கு பார்க்கலாம். இந்தப் பத்துப் பாடல்களையும் அவற்றின் பொருளையும் பார்ப்பதோடு, பாடலைக் கேட்டுப் பாடுவோம்.
பண் : சீகாமரம்; பாடுபவர் : திருமதி. விஜயலக்ஷ்மி ராஜாராம்
1.
கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
நெற்றியில் இமைக்கும் கண் பொருந்தியவன்,
எரிகனலை கையில் காட்டுபவன்,
தன்னில் பாதியைப் பெண்ணுருவாய் காட்டுபவன்,
விரிசடையில் பிறைச்சந்திரனைக் கொண்டவன்,
பாடல்களின் பண் வடிவான இசைப்பிரியன்,
பயிர்களின் உயிரான மழை மேகமாய் இருப்பவன்,
நந்தியினை கொடியில் காட்டுபவன்,

இப்படியெல்லாம் இருப்பவன் திருவெண்காட்டில் உறையும் ஈசன்.

2.
பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினை
வாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்
வேயனதோள் உமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்
தோய்வினையாரவர் தம்மைத் தோயாவாந் தீவினையே.
திருவெண்காட்டின் முக்குள நீரில் மூழ்கி எழுந்தால், பேயெனச் சொல்லப்படும் தீயவை எல்லாம் மடியும். பிள்ளைச்செல்லவம் இல்லாதவர்க்கு அந்தப் பேறு கிட்டும். மனதால் நினைத்த வேறு யாவும் உமை ஒரு பாகமாய் கொண்டவனின் அருளால் கிட்டும்.
இந்தப் பாடலே, குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு ஈசனின் அருள் நிறைந்த அருளாளரான மெய்கண்ட தேவர் குழந்தையாய் பிறக்கும் அருள் பாலித்ததாக வரலாறும் உண்டு.

3.
மண்ணொடு நீரனல் காலோடாகாய மதியிரவி
எண்ணில் வருமியமானந் இகபரமும் எண்டிசையும்
பெண்ணினொடு ஆண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்
விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
எம்பிரான் ஈசன் எப்படி எல்லாமுமாய் இருக்கிறான் - மண்ணாய், நீராய், நெருப்பாய், காற்றாய், ஆகாயாமாய், நிலவாய், கதிரவனாய் இருக்கிறான். இப்பிறப்பாகவும், இதற்கு அடுத்த பிறப்பாகவும், எண் திசையாகவும், ஆணாகவும், பெண்ணாகவும், பெரியனவற்றுள் பெருமையாகவும், சிறியனவற்றுள் சிறுமையாகவும் இருக்கிற சிவபெருமான், விண்ணவர் தலைவன் இந்திரன் வழிபட திருவெண்காட்டினை உறைவிடமாய் கொண்டானே.

4.
விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் றண்புறவின்
மடல்விண்ட முடத்தாழை மலர் நிழலைக் குருகென்று
தடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்
கடல்விண்ட கதிர்முத்தம் நகைகாட்டுங் காட்சியதே.
நஞ்சினை உண்ட அண்ணல் உறையும் வெண்காட்டின் அருகே உள்ள குளிர்ந்த முல்லை நிலத்தில் உள்ள நீர் நிலையில் மலர்ந்த கடல் தாழைகள் வளைந்து இருக்க, தாழை மலரின் பிம்பம் நீரில் தெரிய, அது தம்மை உண்ணக் காத்திருக்கும் குருகு(பறவை) தானோ என நீர்நிலையில் இருக்கும் கெண்டை மீன்கள் ஐயுற்று, தாமரை மலரின் அடியில் மறைந்து கொள்ளவும், இதைப் பார்த்து நீர்நிலையில் இருந்த வெண்முத்துக்கள் நகைத்தனவாம்.
இந்தச் செய்யுளில் தற்குறிப்பேற்றம் தனை கவனிக்கவும். இது நாம் செய்யும் செயலுக்கெல்லாம் தானே காரணம் என அறியாமையினால் கொள்ளும் கலக்கத்தை ஒத்தது. அந்த கெண்டை மீன்கள் போல தாமரையிடம் - அனகதத்தில் அவனிடன் சரணடவதே கலக்கத்தை கலைக்க வழி.

5.
வேலைமலி தண்கானல் வெண்காட்டான் றிருவடிக்கீழ்
மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்
மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன் றூதர்
ஆலமிடற் றானடியா ரென்றடர வஞ்சுவரே.
நீர்நிலைகள் சூழ்ந்த குளுமையான வெண்காட்டீசன் திருவடிகளை மாலைகள் மற்றும் சந்தனத்தாலும் வழிபட்ட சுவேதகேதுவின் உயிரைக் கவரவந்த காலனை சிவன் காலால் மிதித்ததை அந்த எமதூததர்கள் அறிவார்கள். அதனால் சிவபிரான் அடியவர் என்றாலே அவர்கள் அஞ்சுவர்.

6.
தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்
ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்
பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளை
வெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
தன் சடையில் ஒரே சமயத்தில் குளுமையான மதியையும், வெம்மையான பாம்பினையும் தாங்குபவன். ஒளி வீசும் பிறைச்சந்திரன் போன்ற நெற்றியை உடைய உமையன்னையை ஒருபாகமாய்க் கொண்டவன். அப்படிப்பட்ட ஈசன் உறையும் வெண்காட்டுக்கோயிலில், இசைமொழியில் அவன் திருப்பெயர்கள் பலவும் ஓதக்கேட்ட பச்சை நிறக் கிளிகள், அவற்றை திருப்பி ஓதியவாறு, வெள்ளைநிற மேகங்களைத் தொட்டிடும் அளவற்கு உயர்ந்து வளர்ந்த பனை மரங்களில் வீற்றிருக்குமாம்.
அந்தக் கிளிகளுக்குத்தான் என்னப்பேறு, வானத்தை எட்டிட வைத்தது யாரு?

7.
சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்
அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிராவதம்பணிய
மிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்
முக்குளநன் குடையானு முக்கணுடை யிறையவனே.
திருமாலுக்குச் சக்கராயுதம் ஈந்தவனும், சலந்தராசுரனைப் பிளந்தவனும், இடையில் எலும்புமாலை அணிந்துள்ளவனும், தன்னை அடைந்து ஐராவதம் (வெண் யானை - வெண்ஆனைக்காடு - திருவெண்காடு) பணிய அதற்கு மிகுதியான அருளைச் சுரப்பவனும், தீவினைகளைப் போக்கும் முக்குளங்களை உடையவனும் திருவெண்காட்டில் எழுந்தருளிய முக்கண்ணனாகிய என் இறையவனே.

8.
பண்மொய்த்த வின்மொழியாள் பயமெய்த மலையெடுத்த
உன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்
கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல் முழங்க
விண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
இசையின் பண் கூடிய இனிய மொழியினளாகிய உமையன்னையே அஞ்சுமாறு கயிலை மலையைப் பெயர்த்தெடுத்தான் - பித்தனாகிய இராவணன். அவன் மார்பை நெரித்துப்பின் அருள் செய்த சிவனுறையும் கோயில் இங்கு. அவ்விடம், தம் தோகையில் அழகிய கண்கள் பொருந்திய நீலமயில்கள் நடனமாடவும், கடல் முழங்கவும், வரிவண்டுகள் இசை ஒலியும் கேட்கும் திருவெண்காடெனும் திருத்தலம்.

9.
கள்ளார் செங்கமலத்தான் கடற்கிடந்தான் என இவர்கள்
ஒள்ளாண்மை கொளற்கோடி யுயர்ந்தாழ்ந்து முணர்வரியான்
வெள்ளானை தவஞ்செய்யு மேதகுவெண் காட்டானென்று
உள்ளாடி யுருகாதார் உணர்வுடைமை யுணரோமே.
தேன் நிறைந்த செந்தாமரையில் எழுந்தருளிய நான்முகன் மற்றும் கடலிடைத் துயிலும் திருமால் ஆகியோர் தன்முனைப்பு நீங்கிச் சிறந்த அடியவர் ஆதற் பொருட்டு மிக உயர்ந்தும் ஆழ்ந்தும் அவனைத் தேடினார்கள். ஆனால் அவர்கள் உணர்தற்கு அரியவனாகிய சிவபெருமான் வெள்ளானையும் தவஞ் செய்து வழிபடும் சிறந்த திருவெண்காட்டில் எழுந்தருளியுள்ளான் என்று உருகாதவரும் உண்டோ?

10.
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்
பேதையர்க ளவர்பிறிமின் அறிவுடையீ ரிதுகேண்மின்
வேதியர்கள் விரும்பியசீர் வியன்றிருவெண் காட்டானென்று
ஓதியவர் யாதுமொரு தீதிலர் என்றுணருமினே.
புத்த மதத்தவர்களும், சமணர்களும் வலிந்து கூறும் உரைகளைப் பொருட்படுத்தாமல், அவர்களை பேதையர்களாகக் கொண்டு, அவர்களைப் பிரிவீர்களாக.
அறிவுடையவர்களே, இதனைக் கேளுங்கள்.
வேதியர்கள் விரும்பும் புகழுடைய பெரிய திருவெண்காட்டில் உறையும் ஈசன் திருப்பெயர்களை
ஓதியவர்களுக்கு யாதொரு தீங்கும் வாராது என உணர்வீர்களாக.

11.
தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்
விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறைவெண்காட்டைப்
பண்பொலிசெந் தமிழ்மாலை பாடிய பத்திவை வல்லார்
மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான் பொலியப் புகுவாரே.
குளிர் சோலைகளால் சூழப்பட்ட சண்பை(சீர்காழி) நகர்த் தலைவனாகிய தமிழ்ஞானசம்பந்தனாகிய யான், விண்ணில் பொலியும் வெண்பிறை சேர்ந்த தலையினை உடைய சிவன் உறையும் திருவெண்காட்டைப் பண் மீட்டிய ஒலிப் பாட்டு பத்தினையும் பாடிடுபவர், மண்ணில் சிறப்புற வாழ்வதோடு வான் சென்ற பின்னும் சிறப்போடு வாழ்வர்.

திருசிற்றம்பலம்.